http://i194.photobucket.com/albums/z...g/b01e7117.jpg
இந்தப் படத்துக்கு கவிதை எழுதுங்கள். நம் மண்ணின் மைந்தனுக்காய் சில வரிகள்....மாயும் ஆதி தொழிலுக்கு நம் ஆத்ம சம்ர்ப்பணமாய் சில வரிகள்...உழவுக்கு வந்தனம் செய்ய சில வரிகள்.......!!!
Printable View
http://i194.photobucket.com/albums/z...g/b01e7117.jpg
இந்தப் படத்துக்கு கவிதை எழுதுங்கள். நம் மண்ணின் மைந்தனுக்காய் சில வரிகள்....மாயும் ஆதி தொழிலுக்கு நம் ஆத்ம சம்ர்ப்பணமாய் சில வரிகள்...உழவுக்கு வந்தனம் செய்ய சில வரிகள்.......!!!
மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.
வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.
வக்கத்த போக்கு பாத்து
நான்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.
கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.
சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.
மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.
*******
படத்தைப் பார்த்து கவிதை எழுதுவதற்குள் மனசுக்குள் பெரும்பாரம் அழுத்திஎடுத்துவிட்டது. படமே ஆயிரம் கவிதைகளுக்குச் சமம். உங்களுடைய இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் அண்ணா.
தலையிலே முண்டாசு ; கையிலே இல்லை காசு
முகத்திலே வெள்ளைமீசை ; வாழ்வதற்கு இல்லை ஆசை
நெஞ்சிலே இருக்கு உரம்; வயலுக்கு இல்லை உரம்
இடையிலே கோமணம்; அடகுக்கடையில் ஆவணம்
சேற்றிலே உழைக்கும் கால்கள்;செருப்பையே அணிந்ததில்லை.
ஆற்றிலே ஓடும் நீரை; அணைகட்டித் தடுத்து விட்டார்
காற்றையே உணவாய்க் கொண்டு காலத்தைத் தள்ளுகிறார்
கூற்றுவனே! உன்கணக்கில் கூடுமடா அந்தஉயிர்!!
கவிதை எனக்கு புரியாத ஒன்று.
காலையில் படத்தை பார்த்ததும் எப்படிப்பட்ட கவிதைகள் வரும் என்று மனதில் ஒரு ஆர்வம்.
சகோதரி கீதம் அவர்களின் கவிதை அற்புதம். அதிலும்
இந்த வரிகள் மனதில் இனம் புரியாத வலியை ஏற்படுத்தின.Quote:
மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே காத்திருக்கேன்.
பாராட்டுக்கள் சகோதரி.
நண்பர் M.Jagadeesan அவர்களின் கவிதையும் நன்றாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்.
கீதம் அக்கா, நீங்க சொன்ன மாதிரி இந்த புகைப்படமே ஆயிரம் கவிதைக்கு சமம். உங்களின் ஒவ்வொரு வரியும் கண்களில் நீரை வரவைக்கிறது. நெஞ்சை அழுத்தும் வரிகள் அக்கா.
ஐயா அவர்களின் வரிகள் சுருக்கமாய் சுருக்கென தைக்கிறது.
சிவா அண்ணா, நெஞ்சில் வார்த்தைகளுக்கு பதில் வலி தான் வருகிறது.
மனம் நெகிழ்த்திய வரிகள். ஒரு ஓவிய வர்ணனை போலே உயிர்ப்பான வரிகளுக்குப் பாராட்டுகள் ஐயா.
தங்களுடைய ஊக்கமிகுப் பாராட்டுக்கு மிகவும் நன்றி இராஜேஸ்வரன்.
உண்மைதான் மீரா. இன்று உழவையே நம்பியிருப்பவர்களின் நிலை இதுதான். ஊக்கமிகுப் பாராட்டுக்கு நன்றி மீரா.
அன்னையின் நெஞ்சில்
ஆழத் துளையிட்டு
இதயத்திலிருந்து
ஈரத்தையெல்லாம்
உறிஞ்சி எடுத்து
ஊருணி வறண்டது.
எளியவர் வாழ்விலும் கிணற்றிலும்
ஏற்றமும் இற்றது..
ஐந்தும் ஒடுங்கி
ஒட்டிக் கொண்டிருக்கும் ஆவி
ஓடாமல் இருக்கிறது
ஒளருவதவம்
தங்கை கீதத்தின் கவிதை...ஏற்கனவே படம் பார்த்ததால் கனமான மனதை இன்னும் பாரமாக்கியது. அற்புதமான கவிதைக்கு ஆயிரம் பொற்காசுகள்.
மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள் தங்கையே.
ஜெகதீசன் ஐயாவின் கவிதை நெஞ்சை உலுக்கிவிட்டது. ஆயிரம் பொற்காசுகள் இந்தக் கவிதைக்கு.
மிக்க வாழ்த்துக்கள் ஐயா.
தாமரையின் கவிதை...எத்தனையோ சொல்கிறது....ஏனிந்த இடர்பாடுகள்....உணவைக்கொடுக்கும் உழவனுக்கு என்றுதான் வரும் நல்ல நாள் என ஏங்க வைத்தக் கவிதை.
ஆயிரம் பொற்காசுகள் இந்தக் கவிஞருக்கு.
எரி எண்ணெய்யைக் கொடுத்ததும் இந்த மண்தான்
என் உணவைக் கொடுத்ததும் இந்த மண்தான்
எரி எண்ணையை எடுத்தவனுக்கு கொடுக்கும் மதிப்பை
ஏன் என் எரிவயிறுக்கு உணவு கொடுத்தவனுக்கு இங்கில்லை....
உலகை உய்விப்பது உணவுதான்
உலகுக்கு உணவுழழ்பவன் நல்வாழ்வு கனவுதான்
ஏனிந்த இழிநிலை....
என்னவாகும் இந்த உழவன் நிலை...???
இந்தக் கிழ உழவனின் ஏக்கம்
எந்த நிலவுலகம் போக்கும் ...??
ஏர் பிடித்து வாழ்ந்தவனின் ஏற்றம்
சீரழிந்து போனதேன்?
வேர் பிடிக்குமா உழவன் வாழ்வு
நேர் செய்யுமா இப் பாழும் உலகு...!!
எந்நாளும் எல்லோருக்கும் உணவளித்த உழவன்
வரும் நாளில் நல் உணவு உண்பானா.....
வெறும் வாழ்வைத் தொடர்ந்தே வாழ்வானா
வரும் காலம் சொல்லட்டும்....விருப்பான செய்தியை...!!!
நெஞ்சைக் கசக்கும் வண்ணத்தில் குழைந்த ஓவியம்.. எண்ணத்தை குழைத்துக் கவிதை செய்ய வைக்கும் நிச்சயம். இந்தக் கொடி நீண்டு போகட்டும்..
நன்றி பாஸ்..