குருவிகளுடன் பறக்கலானது மனது...
கண்கள் குளிர்ந்தன...
கண்ணாடியூடே தெரிந்த
பரந்து விரிந்த இளமஞ்சள் வானம்,
பச்சைச்செடியில் தீக்கங்குகளாய்
அடர்சிவப்பு செம்பருத்திப்பூக்கள்.....
செம்பருத்தியைக் கொத்தியவாறு
சிட்டுக் குருவிக் கூட்டம் ஒன்று...
ஏதோ வாகனம் எழுப்பிய இரைச்சலில்
எழும்பிப் பறந்தன அச்சமுற்ற
சிட்டுக்குருவிகள் வேலியின்றும் வேகமாய்...
கவிதை எழுத சரியான தருணம்
சொன்னது மனம்...
பேப்பரும் பேனாவும் எடுத்த நிமிடம்
கவிதைக்குச் சிக்காமல்
தப்பிப் பறந்திருந்தன குருவிகள்...
எல்லாவற்றையும் வளைத்துப் பிடித்து
வார்த்தையில் அடைத்தல் சாத்தியமா?
எழுதுவதை நிறுத்தி விட்டு
குருவிகளுடன் பறக்கலானது மனது...
குருவிகள் பறக்கட்டும்
கவிதையில் சிறைப்பட வேண்டாம்...
குருவியின் பின்னால்
மிதந்து செல்லும் மனதே...
நீயும் தப்ப முயற்சி செய்...
என் கவிதையிடமிருந்து...