-
கனவுலகம்...
கனவுலகம்...
இது என் உலகம்..
நானே பிரம்மன்..
நானே சிவன்..
எழுதுகோல் கலப்பை
கொண்டு
பிரபஞ்ச நிலத்தை உழுவேன்..
உழுத நிலத்தில்
தமிழை விதைத்து
கவிதை அறுவடை செய்வேன்..
சில நேரங்களில்
நட்சத்திரப் பட்டுப் பூச்சியில்
இருந்தும் தமிழ் நூலெடுப்பேன்..
எடுத்த நூல் கொண்டு
கவிதை சேலையும்
நெய்வேன்..
சர்ரியலிஸ சாயமும்
பூசுவேன்...
காதலையும் புட்டாவாய் தைப்பேன்..
கோபச்சூரியனை
குளிர வைத்து
நிலாப் பந்தாக்குவேன்..
மேகக் குழந்தைகளுக்கு
உருட்டி விளையாட
நிலாப்பந்தையும் கொடுப்பேன்..
கடம் இடி வாசிக்க
மின்னல் பெண்ணை பரதமும்
ஆட வைப்பேன்..
அவள் ஆடலின் வேகத்தில்
தெறித்து சிதறி ஓடும் சலங்கை மணிகளுக்கு
நட்சத்திரம் என்றும் பெயர் வைப்பேன்..
வானக் காகிதத்தில்
சிகப்பு வண்ணம் பூசி
அந்தி என்றும் சொல்வேன்..
நிலா முற்றத்தில்
அமர்ந்து
நட்சத்திர மீனும் பிடிப்பேன்..
பிடித்த மீனை சுட்டுப் பொறித்து
வால் நட்சத்திரம் என்ற பெயரும் வைத்து
தூக்கி எறிவேன்...
இது என் உலகம்..
எதை வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் மாற்றுவேன்..
ஏனெனில்
நானே பிரம்மன்..
நானே சிவன்..
-
ராம்.. உன் கனவுலகம் எங்களுக்கு புரிந்த ஒன்றுதான்..
பாராட்டுக்கள்... கனவுலகம் பரந்து விரிந்திட..
-
நம்பிக்கை தான் வாழ்க்கை....
விஷ்ணு
-
உங்கள் கனவுலகம் அருமையாக உள்ளது. எதையும் செய்யமுடியும் என்று மேற்கோள்காட்டியுள்ளது அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
-
கவிஞனின் உச்சகட்ட மனவோட்டம்
ராமுக்கு என் மனம் நிறைந்த பாராட்டு.