PDA

View Full Version : சாமி!!!



poo
17-05-2003, 10:13 AM
அ முதல் ஃ வரை..
அனைத்துள்ளங்களுக்கும்
ஆறுதல் தரும் ஆற்றல்..
ஆயிரமாயிரம்
அவதாரங்களில் வலம்வரும்
அபூர்வம்..
பக்தர்களை பரவசப்படுத்தும்
படையல்..
மனதை நிம்மதியாக்கும்
மந்திரம்..
உள்ளத்தை உறங்கவைக்கும்
உன்னத சக்தி..
எல்லாம் இருந்தும்.....
பக்தர் கூட்டமில்லா
கூடாரத்துக்குள்
குறுகிப்போகின்றன
பலரின் கவிதைகள்!!...

karikaalan
17-05-2003, 10:43 AM
ரசிப்பவரில்லையேல், கலைஞனுக்கு ஆர்வமேது; கை தட்டவேண்டாம். கல்லடியாவது கொடுக்கலாமில்லையா!

உண்மையான சொற்கள் பூ ஜி! என்ன செய்வது, படைப்புக்கள் பல தாங்கள் சொல்வது போல்தான் .... கேட்பாரின்றி....

===கரிகாலன்

Nanban
17-05-2003, 02:50 PM
எல்லோரது எண்ணங்களும் இவ்வாறிருக்க, நாமே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வாசித்து விடுவது என்றும், இனி இத்த்னை நாட்களுக்கு இத்தனை கவிதைகள் தான் என்று வரையறுத்துக் கொள்வதும் தான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.....

poo
18-05-2003, 03:23 PM
எல்லோரது எண்ணங்களும் இவ்வாறிருக்க, நாமே ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு எல்லாவற்றையும் வாசித்து விடுவது என்றும், இனி இத்த்னை நாட்களுக்கு இத்தனை கவிதைகள் தான் என்று வரையறுத்துக் கொள்வதும் தான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.....

காற்றுக்கு வேலி?!!.....

நண்பரே,,, நீங்கள் சொல்வது வாரப்பத்திரிக்கைக்கு கவிதை அனுப்புவதுபோல..

ஆளுக்கால் தலைவன் ஆசை.... நானும் ஒரு கட்சி ஆரம்பிக்கிறேன்.. இப்படியும் எண்ணலாமோ?!!

யாருமே பாராட்டவில்லை.. நாமாவது பாராட்டிக்கொள்வோமே... இது சரியாகப்படுகிறது?!!

இங்கே அளவு கடந்த கவிதைகள்.. அதனால்தான் படிக்கவில்லை என்று எவரேனும் சொன்னால் ஏற்புடையதாய் உள்ளதா?!!..

இரசிப்புத்தன்மை தானே வரட்டுமே.......

மன்னிக்கவும். அப்படியொரு கூட்டணி அமைத்தால் நான் வெளியே நின்று ஆதரவு தரக்கூட யோசிப்பேன்!!

இங்கே நாம் கற்பனைகளை.. அல்லது ஆழ்மனது எண்ணங்களை... இப்படி ஏதேனும் ஒன்றை நம் திருப்திக்காகத்தான் படைக்கிறோம்..விருப்பமுள்ளவர் படிக்கட்டும்.... விமர்சணம் எழுதட்டும்..

நான்... கவிதைகளை உட்கார்ந்து எழுதி கோப்புகளில் சேர்த்து பின் அதை அனுப்புவதில்லை... அந்த நேரம் என்ன யோசிக்கிறோமோ அதை அப்படியே எழுதிடுவேன்.. ஆதலால் என் கற்பனைக்களுக்கு என்னால் கட்டுப்பாடு விதிக்க முடியாது.. கவிதைகளுக்கும்தான்..

karikaalan
18-05-2003, 04:31 PM
படைப்பாளிக்கு விலங்கு போடுவதா? என்ன அக்கிரமம்? அவனுக்கு எப்போது என்ன தோன்றுகிறதோ, இரவோ, பகலோ, அப்போதைக்கப்போது படைக்கவேண்டும். அதுதான் சரி. நாமென்ன கம்யூனிஸ்ட் நாட்டிலா இருக்கிறோம்? இதற்கெல்லாம் கட்டுப்பாடு என்று பேசுவதற்கு?

193 அங்கத்தினர்கள் இருக்கிறோமே..... எவ்வளவு பேர் இங்கு வாரத்திற்கு இரு முறையாவது வருகிறார்கள்? வந்தாலும் எத்தனை பேர் எழுதுகிறார்கள்? எத்தனை பேர் வெறுமனே மேய்கிறார்கள்?

இந்த ஆதங்கத்தில் உதித்ததுதான் பூஜியின் கவிதை.

===கரிகாலன்

Nanban
19-05-2003, 09:37 AM
அரசியல் கூட்டணியைப் பற்றியும் நான் பேச நினைக்கவில்லை. தடை விதிப்பதைப் பற்றியும் நான் யோசிக்கவில்லை. நான் கூறிய யோசனை, இந்த மன்றத்தில், கவிதை எழுதுபவர்களாது கூடி என்று தான். சங்க காலத்திலும் உள்ள நியமம் தான் இது. கவிதை படைப்பதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்ட அதே சமயத்தில், சங்கத்தில் கூடிய கவிஞர்கள் முன்னாடி அரங்கேற்றுவது போலத் தான்.... இங்கும் எல்லோரும் வருகின்றனர்... சங்கம் போன்ற அமைப்பு தானே இது.... இத்தகைய கூட்டணியைத் தான் சொன்னேன்....

சுய கட்டுப்பாடு என்று கூறியதைத் தான் தடை என்று எண்ணி விட்டீர்கள் போலிருக்கிறது..... எத்தனை பேர் வருகிறார்கள், வாசிக்கிறார்கள் என்ற ஆதங்கம் தான் எனக்கும் உண்டு.

இதையே தான் Moderators பார்வைக்கு என்பதிலும் எழுதியிருந்தேன். முயற்சிப்பதாக தலைவரும் கூறியிருந்தார்..... மேலும், எழுதி வைத்து எடிட் செய்து பிரசவிக்கும் வழக்கம் எனக்கும் இல்லை. தோன்றிய போது, தோன்றியதைத் தான் எழுதுகிறேன். சில சமயங்களில், எழுதியவற்றைத் திருப்பி வாசிக்கும் பொழுது இன்னுமும் கூட நன்றாக எழுதியிருக்கலாமோ என்று கூடத் தோன்றும். ஆனாலும் எழுதியவற்றைப் பலரும் படித்து, கருத்து கூறி விட்ட பட்சத்தில், மீண்டும் எடிட் செய்வது ஏற்கனவே படித்து முடித்தவர்களை ஏமாற்றுவது போலாகும் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன்.....

நீங்கள் பதில் எழுதிய வேகத்தில், கோபம் தெரிகிறது. அதுவல்ல எனது நோக்கம். மன்னிக்கவும்.....

அறிஞர்
19-05-2003, 10:23 AM
பூ.. நீர் சொல்வது சரியே...

எம்மால் இயன்ற அளவு.. படைப்புகளை.. பாராட்டுகிறோம்....

முத்து
19-05-2003, 05:08 PM
முதலில் பூவின் எண்ணக்குமுறலைக் கவிதையாய் அழகாய்ச் சமைத்ததற்கு அவருக்குப் பாராட்டுக்கள்... மேலும்...ஆம் !உண்மையான படைப்பாளியின் ஆதங்கம் இதுதான்...

வைரமுத்து கொஞ்ச நாட்களுக்குமுன் அளித்த பேட்டி நினைவுக்கு வருகிறது,.....நல்ல தரமான பாடலாக சினிமாவில் எழுத ஆசையாக இருக்கிறது.....ஆனால் வாய்ப்புத்தான் யாரும் தருவதில்லை... யாராவது தரமான பாடலைச் சினிமாவுக்குக் கேட்டால் இனிமேல் அவர்களிடம் பணம் வாங்கப்போவதில்லை....

.....என்னால் பல்லாயிரம் பேருக்கு அறுசுவை உணவு படைக்கமுடியும்..ஆனால் என்ன செய்வது.. உண்பதற்கு யாரும் தயாராக இல்லையே....

இராமலிங்க அடிகளின் ஒரு பாட்டும்கூட இங்கு நினைவுகூறத்தக்கது.... கடை விரித்தேன்,கொள்வாரில்லை....

gankrish
20-05-2003, 09:23 AM
பக்தர்களின் கூட்டம் இல்லாவிட்டாலும் ... சாமிக்கு பவர் உண்டு.. மவுசு உண்டு. அதே போல் ... கவிதை எழுதுபவர்களுக்கும் நிச்சயம் மவுசு உண்டு. நீ எழுது பூவே.... நாங்கள் இருக்கோம் உன்னை ஆராதிப்பதற்க்கு. ரோஜா செடியில் முட்கள் உள்ளது போல் .. சில பேர் படித்தாலும் விமர்சனம் எழுதுவதில்லை. கவலைப்படாதே.

பூமகள்
26-07-2008, 02:43 PM
பெரியண்ணாவின் இப்பதிவு சொல்லும் கருத்தை எல்லோரும் பின் பற்றினால்..

நல்லதைக் கண்டு ரசித்துவிட்டு - ஒன்றும்
சொல்லாமல் போவது பாவம்!

நல்ல நண்பர் நம் மன்றத்தில் எனக்கு
சொல்லித் தந்த பாடம்!
சரியான நேரத்தில் சரியான நபருக்கு தகுந்த உற்சாகம் கொடுத்தாலே போதும்..!

நான் பின்பற்றும் சில நடைமுறைகளில் இதுவே தலையாய ஒன்று..

வல்லவர்களுக்கு நாம் செய்வது வெறும் உற்சாகமே..! - ஆனால்
அவை ஆயிரம் சாதனைகளுக்கு அடிக்கோடாக இருக்கும்..!

நல்லவைகளை ஊக்குவிக்க ஏன் தயக்கம்??!!

பூ அண்ணா உங்களின் படைப்புச் சாமியைக் கும்பிட நாங்கள் பக்தியோடு வந்துவிட்டோம்...!!

எப்போது வருவீர்கள் பூ சாமி??!!

இளசு
26-07-2008, 02:52 PM
பூவின் உணர்ச்சிமய மனவாசம் முழுதாய் வீசும் கவிதை..

நண்பனும் '' வெட்கங்கெட்ட தாய்'' என இதே கருத்தில் கவிதை தந்தார்..

பூமகளுக்கு சிறப்பு நன்றிகள் - மூலவரை உற்சவத்தில் அமர்த்தியமைக்கு..


------------------



ரசிப்பவரில்லையேல், கலைஞனுக்கு ஆர்வமேது; கை தட்டவேண்டாம். கல்லடியாவது கொடுக்கலாமில்லையா!

உண்மையான சொற்கள் பூ ஜி! என்ன செய்வது, படைப்புக்கள் பல தாங்கள் சொல்வது போல்தான் .... கேட்பாரின்றி....

===கரிகாலன்


அண்ணலின் ஆதங்கத்தை வழிமொழிகிறேன்..

பாராட்டு, அங்கீகாரம் எத்தனை இன்றிமையாதவை என அறிய
கீழ்க்கண்ட திரியின் 3 -வது பதிவைப் பாருங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16811

ஓவியன்
23-04-2015, 07:03 AM
பூ அண்ணனின் திஸ்கியிலிருந்து யுனிகோட்டிற்கு மாறிய கவிதை...

இன்றும் இளமையாகவே..!!

ஆதவா
27-04-2015, 06:00 AM
சூப்பர்....
எந்த காலத்துக்கும் ஏற்ற கவிதை படைப்பவனைத்தான் முழுமையான கவிஞன் என்று சொல்லமுடியும். இந்த கவிதை எந்த காலத்துக்கும் உரியது.
இந்த கவிதையில் கவிதைகள் என்பது ஒரு குறியீடு. அதற்கு ஈடாக இன்னும் பல பொருள்களை உள்நுழைக்க முடியும். உதாரணத்திற்கு “பரத நடனம்”.

ஒரு கவிஞனுக்குத் தேவை, தன் படைப்பின் மீதான நம்பிக்கை, மிக அழுத்தமான நம்பிக்கை. கவிதை அதை மிகத் தெளிவாகச் சொல்லுகிறது. ஒவ்வொரு வரியையும் கவனிக்கும் போது,

அனைத்துள்ளங்களுக்கும்
ஆறுதல் தரும் ஆற்றல்..
ஆயிரமாயிரம்
அவதாரங்களில் வலம்வரும்
அபூர்வம்..
பக்தர்களை பரவசப்படுத்தும்
படையல்..
மனதை நிம்மதியாக்கும்
மந்திரம்..
உள்ளத்தை உறங்கவைக்கும்
உன்னத சக்தி..

இது, நன்கு சமைத்த கவிதை!!

ஒரு சமயத்தில் இங்கே தரமான படைப்புகள் நிறைய எழுதப்பட்டன. அதற்கு விமர்சிக்க நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நானும், என்னைப் போல பலரும் அந்த விமர்சக நண்பர்களுக்காக (பலசமயம் குட்டு வாங்கியும் சந்தோசப்பட்டிருக்கிறோம்) அவர்களின் விமர்சனத்திற்காகவே எழுதியிருக்கிறோம். கவிதைகளில் மந்திரமோ, உன்னத சக்தியோ இருந்ந்தோ இல்லாமலோ இருக்கலாம். ஆனால் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருந்தது. மீண்டும் அப்படியொரு நிலையைத்தான் எதிர்பார்த்திருக்கிறோம்,.