பாரதி
26-03-2007, 06:55 PM
தேதியில்லா குறிப்புகள்
குளிர்காலம்
பலப்பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது. பெரியப்பா மகன் கணேசன் சொல்லுவான் - "ஆங்கில வருடங்களைப் போல அன்றி, தமிழ் வருடங்கள் ஒருவருடைய சராசரி வயதை ஒத்து கணக்கிடப்பட்டு
முன்னோர்களால் கணிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மறுபடி வர அறுபது வருடங்களுக்கு மேலாகும். அப்போது அந்த வருடத்தில் என்ன விதமான காலச்சூழலலோ அதுதான் அறுபது வருடங்களுக்குப் பின்னர் வரும் போதும் நிகழும் என்று". அதெல்லாம் உண்மையா என்று யோசித்ததேயில்லை. இப்போதும் உணர்வதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.
அப்போதெல்லாம் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது. பெரும்பாலும் படுக்கையில் இருந்து எழுப்பும் போதே, சூடான கருப்பட்டிக்காப்பியின் மணம் நாசியை துளாவும். கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிப்பதும் தனி சுகம்தான்!
அப்படிக்குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும். மீறி எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான். அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை ஃபூ..ஃபூ என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.
வீட்டு முற்றத்திலும், வெளியிலும் வந்தால் பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவது வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்ற பாவனைகளை சிறுவர்கள் காட்டுவது எல்லாம் சகஜமான ஒன்றுதான்.
குளிர் அதிகமான நாட்களில், சிறுவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு வைக்கோல்போரை அள்ளிக்கொண்டு வரவேண்டும். எல்லோரும் விளையாடும் இடத்தில் ஒன்று கூடி, வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்வதையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை சரசரவென்று தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் வழக்கம். அப்படிக் குளிர்காயும் போது, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எரியும் தனலில் இடுவது வழக்கம். வைக்கோல் எல்லாம் தீர்ந்து, எரிந்து முடிந்த பின்னர், பொறுக்க முடியாத சூட்டுடன் இருக்கும் கற்களை எடுத்து, இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே, அருகில் இருக்கும்
சாக்கடையில் போடுவதும் வழக்கமே..! சுர்..என்று சத்தத்துடன் கற்கள் நீரில் குளிர்வதை காண்போம். யாருடைய கல் அதிக நேரம் சத்தம் தருகிறதோ அவனுடைய முகத்தின் மகிழ்ச்சியை எல்லாம் அளவிட முடியாது.
பெரும்பாலும் குளிர்காலங்களில் தோட்டங்களிலும், வயல்களிலும் செடிகளுக்கு மேலாக மெல்லிய புகை போல காட்சியளிக்கும். தூரத்தில் மரக்காமலையும், கொடைக்கானல் மலையில் இருக்கும் கண்ணாடி கோபுரமும் காண்பதும், மறைவதுமாக கனவுக்காட்சிகளில் வரும் சொர்க்கம் போல காட்சியளிக்கும்.
பிள்ளையார் படித்துறைக்கு செல்லும் வழியில் அடர்ந்த புளியமரங்கள், விளவ மரங்கள், கருவேல மரங்கள், மாமரங்கள் நிறைந்த தோப்பிருக்கும். சாலையில் செல்லும் போதே, மயில்கள் அகவும் ..உவாங்... என்பதை ஒத்த ஒலிகள் கேட்கும். குளிர்காலத்திற்கே உரிய, வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத ஒருவித மணமும் ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். மயில்களும் மனிதர்களுக்கு அருகில் பயப்படாமல் உலாவும். மயில்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாவிட்டாலும் அந்த வட்டாரத்திலேயே அறிவிக்கப்படாத புகலிடமாக, மயில்கள் சரணாலயமாக எங்கள் கிராமம் திகழ்ந்தது என்றால் மிகையில்லை. சிட்டுக்குருவிகள்,கிளிகள்,மைனாக்கள்,குயில்கள் இன்னும் பெயர் தெரியாத பல வண்ணப்பறவைகளுமாய் நந்தவனம் போலத்தான் காட்சி அளிக்கும்.
சிறிய தூறல் வந்து விட்டாலும் போதும். மரங்களின் வேர்களுக்கு குடை பிடிக்க காளான்கள் கிளம்பி விடும்.ஊரில் தானாக விளையும் காளான்களில் பெரும்பாலானவை உணவிற்கு மிகவும் உகந்தவை. ஆயிரங்கால் பூச்சி(!)களும் தங்கள் இருப்பை அங்கிங்கெண்ணாதபடி எல்லா இடங்களையும் வியாபித்துக் கொண்டிருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய பட்டுப்பூச்சிகளும் இங்குமங்குமாய் ஓடும். வெல்வெட் துணியை யாரும் தைக்காமலே அணிந்து கொண்டு உலாவும் பூச்சிகளை தடவிக்கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியைத்தரும்.
தும்பிகளும், பட்டாம்பூச்சிகளும் செடிகளை ஆராய்வது போல மாறி மாறி செல்வதுமாய், இயற்கை விடும் பட்டங்களோ இவை என்று எண்ண வைக்கும். இவ்வளவு வண்ணங்களில், அளவுகளில் மனங்கவரும் விதமாய் பட்டாம்பூச்சிகள் எவ்விதம் வந்தன என்று வியக்காத நாட்களே கிடையாது.
ஆங்காங்கே ஈசல்களை பிடிக்கவென்று சிலர் தரையில் துளையிடுவதும், அதன் அருகில் சென்று "ஈச்சப்பொந்துல பாம்பிருக்கு.. குன்னாங்குன்னாங் ஹோய்.." என்று சத்தமிடுவதையும் காணலாம். இவர்களின் அபாய எச்சரிக்கையை அறிந்தோ என்னவோ (!) ஈசல்கள் கூட்டம் கூட்டமாய் வெளிக்கிளம்ப அதை அப்படியே குடுவைகளில் அடைத்துக்கொள்வார்கள். பாவம் அந்த ஈசல்கள்...!?
காலையில் ஆற்றிலும், வாய்காலிலும் சூடு கிளம்புவதைப் போல மெல்லிய புகை எழுந்துகொண்டிருக்கும். குளிர் காலத்தில் காலையில் ஆற்றில் நீராடப்போவது அவ்வளவாகப்பிடிக்காத ஒன்று. வேப்பங்குச்சிகளை ஒடித்து, பல் துளக்கிக்கொண்டு படித்துறையில் நின்று கொண்டு குளிப்போமா, வேண்டாமா என்ற சிந்தனை வராத நாட்கள்
மிகக்குறைவு. ஆனால் என்ன.. ஒரு முறை தலை நனையும்படி நீரில் மூழ்கி எழுந்து விட்டால் குளிர் தூர ஓடிவிட்டது போன்று தோன்றும் - ஆனந்தமாய் குளித்து முடித்து உடம்பை சிவப்புநிற கதர் துண்டால் துவட்டிக்கொள்ளும் வரை. பின்னர் மெலிதாக காற்றடித்தால் போதும் -பற்கள் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விடும்!
மார்கழி மாதங்களில் பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் விதவிதமான கோலங்கள் - வண்ணப்பொடிகளின் தூவலின் நடுவே, சாணி உருண்டைகளில் பூசணிப்பூ சொருகப்பட்டு அலங்காரமாய் இருக்கும். "மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளாய் - நீராடப்போகுவீர் போகுமினோ நேரிழையீர்" என்று இளம்பெண்கள் பயபக்தியுடன் திருப்பாவை, திருவெம்பாவையை புத்தகங்களைப் பார்த்து, சத்தமிட்டு பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள். நான்கு, ஐந்து பேர் கொண்ட ஒரு சிறு பஜனைக்குழு "வெங்கட்ராமா கோயிந்தா.." என்று பாடிக்கொண்டு தெருக்களை வலம் வரும்.
நினைத்து எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம் என்பது போல இருக்கிறது. ஹூம்.... இப்போது எல்லாம் மயில்கள்,குயில்கள்,கிளிகள் எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு புத்தகங்களைப் பார்த்து சொல்லித்தர வேண்டியதிருக்கிறது. மயில்கள் ஏதோ ஒரு வியாதிக்கு மருந்து என்று வேட்டையாடப்பட்டு, கண்ணாடிக்குடுவைகளில் எலும்பாக மாறி காலம் பல ஆகிவிட்டது. குருவிகளையும் காகங்களையும் கூட மிக அரிதாகத்தான் காண முடிகிறது.
பலவிதமான செடிகளை, மரங்களை எங்கேயும் காண முடியவில்லை. சாலைகளுக்கும் நிழல் தந்து கொண்டிருந்த பல புளியமரங்களின் சுவடுகள் கூட இப்போது இல்லை. செருப்பு அணியாமலே அக்கம்பக்க ஊர்களுக்கு கால் நடையாகவே சென்ற காலம் எல்லாம் கதைகளில் மட்டுமே இடம்பெறுபவை என ஆகி விட்டன. சாலை விரிவாக்கம் என்றும், விறகுக்கு என்றும், வயதாகி விட்டது(!),பட்டுப்போய் விட்டது என்றும் மரங்களை அழிக்கும் பணி இன்னும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நூற்றாண்டுகளை கண்ட மரங்கள் எல்லாம் சில நொடிகளில் மாய்க்கப்படுவதைக் கண்டால் மிக மிகக் கவலையாக இருக்கிறது.
பாசனத்திற்காக பயன்பட்ட வாய்க்கால்கள் இப்போது வெறும் கழிவுநீர் சாக்கடைகளாக மாறி விட்டன. ஆலைக்கழிவுகளும் ஆனந்தமாய் அதிலேதான் கலக்கின்றன. வாய்க்காலின் கரையோரங்களை அழகு பார்த்த கோரைப்புல், தொட்டாச்சிணுங்கி, நன்னாரிவேர் போன்ற பலவிதமான இயற்கை மருந்தாவரங்களை காணவே முடியவில்லை.
கால ஓட்டத்தில் வீட்டிலேயே வெந்நீர் குளியல் என்பதுதான் நாகரீகமாகி விட்டது. வருடத்தின் எல்லா நாட்களிலும் ஆற்றில் நீராடப்போவது எல்லாம் வெறும் கனவாக மாறிப் போய் விட்டது. ஆற்றிலும், வாய்க்காலிலும் நீரோடுவதை வித்தியாசமான நிகழ்வாக குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டியதிருக்கிறது. அணைப்பிரச்சினை என்று அரசுகள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. அடுத்த உலகப்போர் நீருக்காக மூளும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. எல்லாம் அழிந்த பிறகு வரும் தீர்வினால் என்ன பயன்..??
சில வருடங்களாகவே வயல்கள், தோட்டங்கள் எல்லாம் பயிர்களைப் பற்றி கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கின்றன. களிமண்ணை செம்மண்ணால் மூடி, குடில்களை கட்டுவதில், பணத்தை உண்டாக்குவதில் மனிதர்களுக்கு இருக்கும் அவசரத்தில் இயற்கை யார் கண்களில்தான் படப்போகிறது?
எதைக்குறித்தும் கவலைப்படாமல் கிராமத்து அத்தியாயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து, அழிப்பதில் மனிதர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை 'தொலைக்காட்சிகளும், திரையரங்குகளும் மட்டுமே நிஜம்' என்ற மாயையில் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்கால சந்ததிகளை உண்டாக்குவதில் வெற்றி பெறுபவர்கள், உருவாக்குவதில் கிஞ்சித்தும் அக்கறையின்றி, நிகழ்காலத்து பிரம்மையில் மூழ்கி விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையை மீண்டும் கண்டெடுக்க முடியாத அளவிற்கு நாமும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை காலக்கண்ணாடி கண் முன்னே காட்டிக்கொண்டிருக்கிறது.
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
குளிர்காலம்
பலப்பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது. பெரியப்பா மகன் கணேசன் சொல்லுவான் - "ஆங்கில வருடங்களைப் போல அன்றி, தமிழ் வருடங்கள் ஒருவருடைய சராசரி வயதை ஒத்து கணக்கிடப்பட்டு
முன்னோர்களால் கணிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மறுபடி வர அறுபது வருடங்களுக்கு மேலாகும். அப்போது அந்த வருடத்தில் என்ன விதமான காலச்சூழலலோ அதுதான் அறுபது வருடங்களுக்குப் பின்னர் வரும் போதும் நிகழும் என்று". அதெல்லாம் உண்மையா என்று யோசித்ததேயில்லை. இப்போதும் உணர்வதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.
அப்போதெல்லாம் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது. பெரும்பாலும் படுக்கையில் இருந்து எழுப்பும் போதே, சூடான கருப்பட்டிக்காப்பியின் மணம் நாசியை துளாவும். கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிப்பதும் தனி சுகம்தான்!
அப்படிக்குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும். மீறி எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான். அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை ஃபூ..ஃபூ என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.
வீட்டு முற்றத்திலும், வெளியிலும் வந்தால் பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவது வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்ற பாவனைகளை சிறுவர்கள் காட்டுவது எல்லாம் சகஜமான ஒன்றுதான்.
குளிர் அதிகமான நாட்களில், சிறுவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு வைக்கோல்போரை அள்ளிக்கொண்டு வரவேண்டும். எல்லோரும் விளையாடும் இடத்தில் ஒன்று கூடி, வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்வதையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை சரசரவென்று தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் வழக்கம். அப்படிக் குளிர்காயும் போது, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எரியும் தனலில் இடுவது வழக்கம். வைக்கோல் எல்லாம் தீர்ந்து, எரிந்து முடிந்த பின்னர், பொறுக்க முடியாத சூட்டுடன் இருக்கும் கற்களை எடுத்து, இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே, அருகில் இருக்கும்
சாக்கடையில் போடுவதும் வழக்கமே..! சுர்..என்று சத்தத்துடன் கற்கள் நீரில் குளிர்வதை காண்போம். யாருடைய கல் அதிக நேரம் சத்தம் தருகிறதோ அவனுடைய முகத்தின் மகிழ்ச்சியை எல்லாம் அளவிட முடியாது.
பெரும்பாலும் குளிர்காலங்களில் தோட்டங்களிலும், வயல்களிலும் செடிகளுக்கு மேலாக மெல்லிய புகை போல காட்சியளிக்கும். தூரத்தில் மரக்காமலையும், கொடைக்கானல் மலையில் இருக்கும் கண்ணாடி கோபுரமும் காண்பதும், மறைவதுமாக கனவுக்காட்சிகளில் வரும் சொர்க்கம் போல காட்சியளிக்கும்.
பிள்ளையார் படித்துறைக்கு செல்லும் வழியில் அடர்ந்த புளியமரங்கள், விளவ மரங்கள், கருவேல மரங்கள், மாமரங்கள் நிறைந்த தோப்பிருக்கும். சாலையில் செல்லும் போதே, மயில்கள் அகவும் ..உவாங்... என்பதை ஒத்த ஒலிகள் கேட்கும். குளிர்காலத்திற்கே உரிய, வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத ஒருவித மணமும் ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். மயில்களும் மனிதர்களுக்கு அருகில் பயப்படாமல் உலாவும். மயில்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாவிட்டாலும் அந்த வட்டாரத்திலேயே அறிவிக்கப்படாத புகலிடமாக, மயில்கள் சரணாலயமாக எங்கள் கிராமம் திகழ்ந்தது என்றால் மிகையில்லை. சிட்டுக்குருவிகள்,கிளிகள்,மைனாக்கள்,குயில்கள் இன்னும் பெயர் தெரியாத பல வண்ணப்பறவைகளுமாய் நந்தவனம் போலத்தான் காட்சி அளிக்கும்.
சிறிய தூறல் வந்து விட்டாலும் போதும். மரங்களின் வேர்களுக்கு குடை பிடிக்க காளான்கள் கிளம்பி விடும்.ஊரில் தானாக விளையும் காளான்களில் பெரும்பாலானவை உணவிற்கு மிகவும் உகந்தவை. ஆயிரங்கால் பூச்சி(!)களும் தங்கள் இருப்பை அங்கிங்கெண்ணாதபடி எல்லா இடங்களையும் வியாபித்துக் கொண்டிருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய பட்டுப்பூச்சிகளும் இங்குமங்குமாய் ஓடும். வெல்வெட் துணியை யாரும் தைக்காமலே அணிந்து கொண்டு உலாவும் பூச்சிகளை தடவிக்கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியைத்தரும்.
தும்பிகளும், பட்டாம்பூச்சிகளும் செடிகளை ஆராய்வது போல மாறி மாறி செல்வதுமாய், இயற்கை விடும் பட்டங்களோ இவை என்று எண்ண வைக்கும். இவ்வளவு வண்ணங்களில், அளவுகளில் மனங்கவரும் விதமாய் பட்டாம்பூச்சிகள் எவ்விதம் வந்தன என்று வியக்காத நாட்களே கிடையாது.
ஆங்காங்கே ஈசல்களை பிடிக்கவென்று சிலர் தரையில் துளையிடுவதும், அதன் அருகில் சென்று "ஈச்சப்பொந்துல பாம்பிருக்கு.. குன்னாங்குன்னாங் ஹோய்.." என்று சத்தமிடுவதையும் காணலாம். இவர்களின் அபாய எச்சரிக்கையை அறிந்தோ என்னவோ (!) ஈசல்கள் கூட்டம் கூட்டமாய் வெளிக்கிளம்ப அதை அப்படியே குடுவைகளில் அடைத்துக்கொள்வார்கள். பாவம் அந்த ஈசல்கள்...!?
காலையில் ஆற்றிலும், வாய்காலிலும் சூடு கிளம்புவதைப் போல மெல்லிய புகை எழுந்துகொண்டிருக்கும். குளிர் காலத்தில் காலையில் ஆற்றில் நீராடப்போவது அவ்வளவாகப்பிடிக்காத ஒன்று. வேப்பங்குச்சிகளை ஒடித்து, பல் துளக்கிக்கொண்டு படித்துறையில் நின்று கொண்டு குளிப்போமா, வேண்டாமா என்ற சிந்தனை வராத நாட்கள்
மிகக்குறைவு. ஆனால் என்ன.. ஒரு முறை தலை நனையும்படி நீரில் மூழ்கி எழுந்து விட்டால் குளிர் தூர ஓடிவிட்டது போன்று தோன்றும் - ஆனந்தமாய் குளித்து முடித்து உடம்பை சிவப்புநிற கதர் துண்டால் துவட்டிக்கொள்ளும் வரை. பின்னர் மெலிதாக காற்றடித்தால் போதும் -பற்கள் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விடும்!
மார்கழி மாதங்களில் பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் விதவிதமான கோலங்கள் - வண்ணப்பொடிகளின் தூவலின் நடுவே, சாணி உருண்டைகளில் பூசணிப்பூ சொருகப்பட்டு அலங்காரமாய் இருக்கும். "மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளாய் - நீராடப்போகுவீர் போகுமினோ நேரிழையீர்" என்று இளம்பெண்கள் பயபக்தியுடன் திருப்பாவை, திருவெம்பாவையை புத்தகங்களைப் பார்த்து, சத்தமிட்டு பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள். நான்கு, ஐந்து பேர் கொண்ட ஒரு சிறு பஜனைக்குழு "வெங்கட்ராமா கோயிந்தா.." என்று பாடிக்கொண்டு தெருக்களை வலம் வரும்.
நினைத்து எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம் என்பது போல இருக்கிறது. ஹூம்.... இப்போது எல்லாம் மயில்கள்,குயில்கள்,கிளிகள் எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு புத்தகங்களைப் பார்த்து சொல்லித்தர வேண்டியதிருக்கிறது. மயில்கள் ஏதோ ஒரு வியாதிக்கு மருந்து என்று வேட்டையாடப்பட்டு, கண்ணாடிக்குடுவைகளில் எலும்பாக மாறி காலம் பல ஆகிவிட்டது. குருவிகளையும் காகங்களையும் கூட மிக அரிதாகத்தான் காண முடிகிறது.
பலவிதமான செடிகளை, மரங்களை எங்கேயும் காண முடியவில்லை. சாலைகளுக்கும் நிழல் தந்து கொண்டிருந்த பல புளியமரங்களின் சுவடுகள் கூட இப்போது இல்லை. செருப்பு அணியாமலே அக்கம்பக்க ஊர்களுக்கு கால் நடையாகவே சென்ற காலம் எல்லாம் கதைகளில் மட்டுமே இடம்பெறுபவை என ஆகி விட்டன. சாலை விரிவாக்கம் என்றும், விறகுக்கு என்றும், வயதாகி விட்டது(!),பட்டுப்போய் விட்டது என்றும் மரங்களை அழிக்கும் பணி இன்னும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நூற்றாண்டுகளை கண்ட மரங்கள் எல்லாம் சில நொடிகளில் மாய்க்கப்படுவதைக் கண்டால் மிக மிகக் கவலையாக இருக்கிறது.
பாசனத்திற்காக பயன்பட்ட வாய்க்கால்கள் இப்போது வெறும் கழிவுநீர் சாக்கடைகளாக மாறி விட்டன. ஆலைக்கழிவுகளும் ஆனந்தமாய் அதிலேதான் கலக்கின்றன. வாய்க்காலின் கரையோரங்களை அழகு பார்த்த கோரைப்புல், தொட்டாச்சிணுங்கி, நன்னாரிவேர் போன்ற பலவிதமான இயற்கை மருந்தாவரங்களை காணவே முடியவில்லை.
கால ஓட்டத்தில் வீட்டிலேயே வெந்நீர் குளியல் என்பதுதான் நாகரீகமாகி விட்டது. வருடத்தின் எல்லா நாட்களிலும் ஆற்றில் நீராடப்போவது எல்லாம் வெறும் கனவாக மாறிப் போய் விட்டது. ஆற்றிலும், வாய்க்காலிலும் நீரோடுவதை வித்தியாசமான நிகழ்வாக குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டியதிருக்கிறது. அணைப்பிரச்சினை என்று அரசுகள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. அடுத்த உலகப்போர் நீருக்காக மூளும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. எல்லாம் அழிந்த பிறகு வரும் தீர்வினால் என்ன பயன்..??
சில வருடங்களாகவே வயல்கள், தோட்டங்கள் எல்லாம் பயிர்களைப் பற்றி கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கின்றன. களிமண்ணை செம்மண்ணால் மூடி, குடில்களை கட்டுவதில், பணத்தை உண்டாக்குவதில் மனிதர்களுக்கு இருக்கும் அவசரத்தில் இயற்கை யார் கண்களில்தான் படப்போகிறது?
எதைக்குறித்தும் கவலைப்படாமல் கிராமத்து அத்தியாயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து, அழிப்பதில் மனிதர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை 'தொலைக்காட்சிகளும், திரையரங்குகளும் மட்டுமே நிஜம்' என்ற மாயையில் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்கால சந்ததிகளை உண்டாக்குவதில் வெற்றி பெறுபவர்கள், உருவாக்குவதில் கிஞ்சித்தும் அக்கறையின்றி, நிகழ்காலத்து பிரம்மையில் மூழ்கி விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையை மீண்டும் கண்டெடுக்க முடியாத அளவிற்கு நாமும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை காலக்கண்ணாடி கண் முன்னே காட்டிக்கொண்டிருக்கிறது.
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை