PDA

View Full Version : என்னோடு போகட்டும்..........



ஆதவா
20-03-2007, 09:27 AM
என்னோடு போகட்டும் துளிகளும் துயரமும்

காதலாய் வருடிய
உன் அதே கைகள்
காற்றைக் கிழித்துக்கொண்டு
இடுகிறது
மூன்று கோடுகள்.

என் கேசத்தின் சுருளில்
மயங்கி விழுந்த காலம் போய்
இன்று சுருட்டி எடுக்கிறாய்
துவைக்கும் துணியைப் போல.
உதிரும் பூக்களின் அழுகையைக்
காணாமல் மிதிக்கிறாய்
வாசனை போக..

தெம்பில்லாத உயிராய்
உன் முன்னே நிற்கையிலே
ஆண்மையை நிலை நாட்டுவாய்
செந்நிறக் கண்களோடு.
ஒளியின் வேகத்தை மிஞ்சும்
ஒலிபடைத்த மனதோடு...

எதிரே கனவில் மிதக்கும்
இவளுக்குத் தெரியப்போகிறது
என் துளிகளின் அவமானமும்
உன் வெறியின் அட்டகாசமும்.
மெல்ல கனவைக் கொன்று எழுந்து
உன்னையும் என்னையும் பார்க்கிறாள்.
அரைவிழிகள் திறக்க..

கேசத்தைச் சுருட்டிய நிலையில்
உன் கைகளையும்
கண்களை உருட்டிய நிலையில்
என் கைகளையும் காணும்போது
என்ன செய்வாள்
நம் இன்பத்திற்கு பிறந்தவள்?

உன் கீறல்களுக்குச் சுவராய்
இருந்தது என்னோடு போகட்டும்
இப்பிஞ்சுக்குத் தெரிய வைக்காதே!

poo
20-03-2007, 09:56 AM
நாயகியின் வேதனைகளை அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.. பாராட்டுக்கள்..

"நம் இன்பத்திற்கு பிறந்தவள்" - இந்த வரிகளில் பலமுனை அர்த்தங்கள் புலப்படுவது அழகு.

கனவைக் கொன்று நிஜம்கண்டு அச்சம் கொண்ட பல பிஞ்சுகள் நானறிவேன்... அந்த நிகழ்வுக்குபின் அவர்கள் படுக்கிறார்களே.. அப்போது உண்மையில் உறக்கம் வருமா... அவர்களின் உள்ளே என்னென்ன ஓடும்.. என அடிக்கடி யோசித்திருக்கிறேன்.. நான் எழுத மறந்ததையெண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.. இல்லாவிடில் இத்தனை எளிமையாய் வலிமையாய் ஆதவனிடமிருந்து கிட்டியிருக்காதே!.

ஷீ-நிசி
20-03-2007, 10:08 AM
எனக்கு புரிந்துகொள்ள மிக கடினமாயிருக்கிறது ஆதவா..

ஒரு பிஞ்சுக்குழந்தையை மையமாய் வைத்து எழுதியுள்ளது போல் உள்ளது..

அமரன்
20-03-2007, 10:11 AM
என் அறிவுக்கு கவிதை எல்லாம் எழுத வராது. ஆனால் படிக்க விருப்பம். நல்ல கவிதை ஆதவா.

பென்ஸ்
20-03-2007, 12:16 PM
என்னோடு போகட்டும் துளிகளும் துயரமும்

காதலாய் வருடிய
உன் அதே கைகள்
.....................................
...................................
..................

உன் கீறல்களுக்குச் சுவராய்
இருந்தது என்னோடு போகட்டும்
இப்பிஞ்சுக்குத் தெரிய வைக்காதே!
ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் முடிந்து நிஜத்தின் வாயிலை கடக்கும் போது நிறைய நெருடல்கள்...

ஒரு கெட்டபழக்கத்தில் துவங்கி
அதன் காரணமாய் ஒவ்வொன்றாய் இழக்கும் போது வரும் ஏமாற்றமோ,
இல்லை தன் இயலாமைகளை வெளிப்படுத்த பயன்படுத்தி கொள்ளும் கைபாவையோ...
எல்லாமாக இவள் மாறிவிடும்போது...
ஐயோ பாவம் என்று பரிதாபபட முடிகிறது...

குடிகாரகணவன் வீட்டில் வந்து ஊரில் ஒருவனிடம் அடிவாங்கிய கோபத்தை காட்ட கிடைத்த ஒரு சுவரா இவள்..??
தன் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாத இயலாமையை வெளிப்படுத்த கிடைத்த சுவரா இவள்???

எல்லாம்
"கேடு கெட்ட கழுதை என்ன செய்தாலும் எங்கே போயிட போறா..?
அடித்தாலும் பிடைத்தாலும் எங்கே போயிடுவா, இங்க தானே இருக்கனும்"
என்ற இறுமாப்பு எண்ணம்...

தன்னை நம்பி குடும்பம் நடத்த வந்தவளை இப்படியா நடத்துவது???
இவளை நம்பி எதாவது இருந்திருந்தால் இவன் இப்படி நடப்பானா???
இவள் தனக்கேன ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்வாள் என்றால் இப்படி ஒரு நடப்பானா????

இந்த பெண்கள் இப்படிபட்டவர்களை எல்லாம் தாண்க்கி கொள்வது முதல் முட்டாள்தனம்...
இவர்கள் இப்படி இருந்து விட்டாள் இவள் மகளுக்கும் நாளை இதே கதிதானே...!!???

ஆதவா....


கேசத்தைச் சுருட்டிய நிலையில்
உன் கைகளையும்
கண்களை உருட்டிய நிலையில்
என் கைகளையும் காணும்போது
என்ன செய்வாள்
நம் இன்பத்திற்கு பிறந்தவள்?

கண்களை கசக்கும் கண்கள் ஒருமுறை கண்னத்தையும் பதம் பார்த்துவிட்டால் இனி அவன் அப்படி செய்வானா...
நம்ம மன்றத்து பாரதி சொன்னது போல
"வலி மனசு சம்பந்தப்பட்டது , உடல் சம்பந்த பட்டது அல்ல",
உடலால் வலிக்கவில்லை என்றாலும் அவனுக்கும் மனதால் வலிக்கனும்...
இந்த நிலமை மாறனும்,....

ஆதவா
20-03-2007, 05:43 PM
நன்றிகள் கோடி அனைவருக்கும்.....

பூ விட்ட கவிதையை நான் எழுதியதில் எனக்கு பெருமையே!

ஷி! மீண்டுமொருமுறை கவிதை படியுங்கள் ஒரு மனைவியின் நோக்கில்

நக்கீரன்! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.. பிறக்கும்போதே கவசத்துடன் பிறக்க நாமொன்றும் கர்னனில்லை.

பெஞ்சமின்.... உங்கள் கருத்துக்கள் பிரமாதம். அடுத்தக் கவிதைக்கான கரு தயாராகிவிட்டது... நன்றி........

மீண்டும்... நன்றீகள் கோடி.....

மயூ
20-03-2007, 06:04 PM
ஆதவா பாணியில் கவிதை...
கவிதைகள் வாசித்தால் அவ்வளவாக விளங்குவதில்லை... ஆனால் இதைப் புரிந்துகொண்டேன்... பென்ஸூ அண்ணாவின் விமர்சனமும், பூவின் விமர்சனமும் விளக்கத்தைக் கூட்டின! நன்றி ஆதவா!

இளசு
20-03-2007, 11:14 PM
மிக முக்கிய பிரசினையை எடுத்தாண்ட கவிதை..

ஆதங்கத்தில் பங்கு கொள்கிறேன் ஆதவா!

கண்முன் பல குடும்பங்களில் கண்டவன்...கேள்விப்பட்டவன் என்ற முறையில் ..இக்கவிதை நெஞ்சில் கத்தி பாய்ச்சுகிறது..

(பூவுக்கு நீங்கள் தரும் அங்கீகாரம் பெருமிதப்படவைக்கிறது -
உங்கள் இருவரை எண்ணி..)

திலகவதி தீராநதியில் தம் அம்மா மீதான அப்பாவின் வன்முறையை
இளவயதில் கண்ட காயங்கள் இன்னும் ஆறாத ரணமாய் இருப்பதைப்
படித்த வேதனை..
மீண்டும் இக்கவிதை வாசித்ததும்..

பென்ஸின் உள்ளம் அலசும் விமர்சனம் அருமை!

இப்படி போதைக்கு அடிமையாகி
எதிர்க்க இயலா மனைவியை அடிப்பது
ஒரு நோய்...

இந்த நோயில்லா சமுதாயம் என்று அமையும்?

கொடுமையே - மேலை நாடுகளிலும் இந்நோய்
இன்றும் இருப்பதுதான்...

வீட்டுக்குள் வன்முறை - ஒரு உள்மறை புரை நோய்..

மறையாவிட்டாலும் பரவாயில்லை!
குறையவாவது செய்யட்டும்...!!

இதுபோன்ற படைப்புகள் அதற்கு உதவட்டும்..!!!

poo
21-03-2007, 06:46 AM
ஆதவன்... ஏன் என்னை (சுகமான)சங்கடத்தில் அடிக்கடி ஆழ்த்துகிறீர்கள்!!?.

பென்ஸின் சாடல்... கவிதையின் சாயல் - அருமை.

ஆதவனின் அடுத்த கவிப்பிரசவத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்..

ஆதவா
21-03-2007, 09:16 AM
நன்றி இளசு பூ மற்றும் மயூரேசன் அவர்களுக்கு..........

பென்ஸின் உள்ளம் தொடும் விமர்சனங்கள் பல படிப்பினைகள்.

இளசு அண்ணாவின் வெட்டு விமர்சனங்கள் என்றுமே அருமை... கூடவே பூ அண்ணாவும்//////

ஏம்ப்ப மயூரேசா! மந்திரம் சொல்றத உட்டுட்டு என்னப்பா இங்க வேலை./? :D (கவி படித்ததற்கு நன்றி......)

அறிஞர்
21-03-2007, 04:48 PM
அருமையான கவிதை ஆதவா...
பெஞ்சமின், இளசு, பூவின் தெளிவான கருத்துக்கள் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.

sham
22-03-2007, 07:06 AM
தெம்பில்லாத உயிராய்
உன் முன்னே நிற்கையிலே
ஆண்மையை நிலை நாட்டுவாய்
செந்நிறக் கண்களோடு.
ஒளியின் வேகத்தை மிஞ்சும்
ஒலிபடைத்த மனதோடு...


அப்படிப்பட்ட ஆண்களை அடித்தே கொல்ல வேண்டும். பெண்களோடு அன்பு செலுத்துவதில் போட்டியிட்டு வெல்பவனும் ஆண்களோடு வீரத்துக்காக போட்டியிட்டு வெல்பவனே உண்மையான ஆண்மகன்.
அது சரி ஆதவா!தாங்களும் தங்கள் பொண்டாட்டியை அப்படித்தான் கொடுமைப்படுத்துவீர்களா?


இன்னும் நீங்கள் மணம் முடிக்கவில்லை என்ற நம்பிக்கையில் தட்டச்சுசெய்கிறேன். மணம் முடித்திருந்தால் மன்னிக்கவும்.

ஆதவா
22-03-2007, 07:45 AM
தெம்பில்லாத உயிராய்
உன் முன்னே நிற்கையிலே
ஆண்மையை நிலை நாட்டுவாய்
செந்நிறக் கண்களோடு.
ஒளியின் வேகத்தை மிஞ்சும்
ஒலிபடைத்த மனதோடு...


அப்படிப்பட்ட ஆண்களை அடித்தே கொல்ல வேண்டும். பெண்களோடு அன்பு செலுத்துவதில் போட்டியிட்டு வெல்பவனும் ஆண்களோடு வீரத்துக்காக போட்டியிட்டு வெல்பவனே உண்மையான ஆண்மகன்.
அது சரி ஆதவா!தாங்களும் தங்கள் பொண்டாட்டியை அப்படித்தான் கொடுமைப்படுத்துவீர்களா?


இன்னும் நீங்கள் மணம் முடிக்கவில்லை என்ற நம்பிக்கையில் தட்டச்சுசெய்கிறேன். மணம் முடித்திருந்தால் மன்னிக்கவும்.

நன்றி நண்பரே!!! உங்கள் வரிகளில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிகிறது................

நான் இன்னும் மணம் முடிக்க ஐந்தாறு வருடங்கள் இருக்கிறது... அதுவரை பிரச்சனையில்லை..

முடித்தபின்......... நிறைய கொடுமை படுத்துவேன்............... புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.........

ஷீ-நிசி
22-03-2007, 09:06 AM
பிரம்மாண்டம்....

மனைவியின் பார்வையில் படியுங்கள் என்றபோதுதான் கவிதை எனக்கு விளங்கியது...

படித்துக்கொண்டிருந்தபோதே என் அம்மாவை என் அப்பா அடித்த, நான் மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத அந்த நிகழ்ச்சி என் கண்முன் விரிந்தது..

காற்றை கிழித்துக்கொண்டு பதியும் மூன்று கோடுகள்.. மறைமுக வரிகளில் அர்த்தம் அத்தனை அழகாயுள்ளது.. அருமை ஆதவா...


குழந்தை தூங்கிக்கொண்டிருக்கிறது..

குடித்துவிட்டு வரும் இவன் அடிக்க விரும்பியே தகராறு செய்வான் மனைவியிடம், அடிவாங்கியே நொந்துபோனவள் தகராறு வேண்டாமென எண்ணி ஏதும் பேசாமலிருந்தாலும், இவன் விடுவதில்லை.. இலகுவில் மாட்டுவது பெண்ணின் கேசம்தானே.. உயிர்போகும் வலியில் இவள் துடித்தாலும், போதையில் இருப்பவனின் காதுகளுக்கு கேட்கவா போகிறது.. முரட்டு கரத்திலிருந்து புறப்படும் அடிகள் ஒவ்வொன்றும் ரணவேதனையாய் இருந்திடும் நேரத்தில் மெல்ல கண்விழிக்கிறாள் இவர்களுக்கு பிறந்த குழந்தை.. தந்தையின் கோபமும், தாயின் அழுகையும் இவளுக்கு புரியாமல் கண்கள் மிரள விழிக்க....

உன் கீறல்களுக்குச் சுவராய்
இருந்தது என்னோடு போகட்டும்
இப்பிஞ்சுக்குத் தெரிய வைக்காதே!

அவள் சொல்வதாய் முடிகிறது கவிதை... நிஜம் இன்றைக்கும் பல குடும்பங்களில் நடக்கின்ற முடிவில்லாத நிஜங்கள்.

ஆதவா
22-03-2007, 09:11 AM
மிகவும் நன்றி ஷீ!! குடும்பங்களில் நாம் கண்டது கேட்பதுவும்தான் அனுபவமாக இங்கே!! உங்கள் விமர்சனம் என்னை உயர்த்துகிறது... உயரத்தில் இருப்பவர்கள் எப்போதுமே உயர்த்திவிடத்தான் பார்க்கிறார்கள்..

உங்கள் கவிதையைப் புசித்து நீண்ட நாட்கள் ஆகிறது............. எப்போது பசியடக்கம்?

poo
22-03-2007, 09:21 AM
உங்கள் கவிதையைப் புசித்து நீண்ட நாட்கள் ஆகிறது............. எப்போது பசியடக்கம்?

ஆம்.. அடக்கமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... இதெல்லாம் நியாயமா நண்பரே!!

ஷீ-நிசி
22-03-2007, 09:25 AM
மிகவும் நன்றி ஷீ!! குடும்பங்களில் நாம் கண்டது கேட்பதுவும்தான் அனுபவமாக இங்கே!! உங்கள் விமர்சனம் என்னை உயர்த்துகிறது... உயரத்தில் இருப்பவர்கள் எப்போதுமே உயர்த்திவிடத்தான் பார்க்கிறார்கள்..

உங்கள் கவிதையைப் புசித்து நீண்ட நாட்கள் ஆகிறது............. எப்போது பசியடக்கம்?

பிள்ளைப்பேறுக்குப் பின் யோசிக்கிறேன்.. அதற்குள் நீங்கள் உங்கள் மதகை திறந்துவிட்டிருக்கிறீர்கள் போலும்...வெள்ளபிரவாகமாய் கவிதை வந்துக்கொண்டேயிருக்கிறது.. ஒவ்வொன்றாய் ரசித்துக்கொடிருக்கிறேன்.

ஆதவா, பூ உங்களின் கவிதைகள் படித்து அதற்கு விமரித்துக்கொண்டிருப்பதற்கே மனதுக்கு அமைதியாக இருந்துக்கொண்டிருக்கிறது.

ஆதவா
22-03-2007, 09:38 AM
ஆம்.. அடக்கமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... இதெல்லாம் நியாயமா நண்பரே!!

ஆமாமாம்.... நியாமில்லைதான்... ஷீ!! சீக்கிரம் கொடுங்கள்... :weihnachten031:

ஷீ-நிசி
22-03-2007, 09:43 AM
எனக்கு நேரம் அதிகம் பிடிக்கும் ஒரு கவிதை எழுதிட... ரொம்ப யோசிப்பேன்.. விரைவில் தருகிறேன் எனது அருமை நண்பர்களே!

kavitha
26-03-2007, 05:49 AM
அருமை