PDA

View Full Version : தொடர்கதையாய்..



poo
03-03-2007, 08:38 AM
பேருந்து பயணங்களில்
அருகாமை தவிர்த்து
என் அவஸ்தைகளை
முகம் சுழித்து
கேலிசெய்வதில்
எத்தனை சுகமுனக்கு...


ஏமாற்றங்களை
விழுங்கிக் கொண்டு...
சுகப்படுத்துதலில்
சுகமாகிக் கொள்வது
வழக்கான ஒன்றுதானே
காதல் வழக்கில்!


எதிர் இருக்கையில் நீ
இருக்கையில்
உனக்குப்பின்னே
நுனியமர்ந்து முன் சாய்ந்திருப்பேன் -
எஜமானியின் கட்டளைக்காய்
காத்திருப்பவனைப்போல..


உன் காதோரம் சுருண்டிருக்கும்
கேசங்கள்
என் சுவாசத்தை
எதிரொலித்துக் கொண்டிருக்கும்...
மெல்லிதாய்
எனை விடுவித்து
வெளியேறும் மூச்சுக்காற்றில்
மந்திரமாய் உன் நாமமிருப்பதை
நம்மைவிடவும் அதிகம்
அறிந்திருக்கும்.. அங்கே
உலவும் ஊர் வம்புகள்..


சற்றே தலை திருப்புவாய்
செல்களுக்கெல்லாம் செருக்கேறும்..
உன்
சிப்பிகள் ஆசுவாசமாகும்
முத்துக்கள் மின்னலொன்றை
வீசும்... பின்
வழக்கிற்கு வேறாய்
வெளிவிழும் வரிகள்
சாரல்போல -
இடி மட்டுமிடிக்கும் என்னுள்
வழமை மாறாமல்..


உன் இதழ்
பிரசவித்தவைகளை
உள்வாங்கி கொஞ்சிக்குலாவி
பாடாய்ப்படுவேன்...
அதுயுனை படுத்தும்
பரவசத்தினை புசிப்பேன்..


என்பாடு
பரவாயில்லை...
காற்றில் சிதறும்
வரிகளை பாடுபட்டு
பிடித்துவிடுவேன்..

நீயோ...
என் வார்த்தைகளை..
எதிர்க்காற்றில்
எனக்கும்பின்னே ஓடத்துடிக்கும்
உனைத்தாங்கிய வார்த்தைகளை
பிடுங்கி யிழுத்து
சிரித்துக் கொள்வாயே...
அவ்வேளை எனைக் கொல்வாய்..யே...

தினம்
தொடரும் அவஸ்தைகள்..
உன்னைவிடவும் நிறைய
ரசிப்பேன் நான்....
உன்வழியும் இம்மொழி
வருகிறதே..
இனியென் செய்ய
நாம்!!...

பென்ஸ்
03-03-2007, 10:36 AM
பூவிடம் இருந்து ஒரு காதல் கவிதை...
காதல் சொல்வதை விட காதல் ரணங்களை சொல்லுவதால் இன்னும் வேதனை...

பூ வழக்கம் போல் காதல் அவஸ்தையில் இருப்பவன் நிலையில் இறங்கிவந்து அவனாகவே இருந்து ஒரு கவிதை...

ஆனால் பூ, இந்த உணர்வுகளை ஆராய்ந்து சொல்லும் நாம் அதன் மருந்துகளை சொல்லாமல் விட்டு விடுவது ஏன்???

இங்கு காதலில் ஏற்று கொள்ளபாடாமை முதல் பிரச்சினை....
தோல்வியில் "the feeling of getting dumped"

நான் தோற்றுவிட்டேன், நான் அங்கிகரிக்கபட்வில்லை என்ற எண்ணக்கள் காதலை விட அதிகமாக மேலோங்க இருக்கிறதா பூ???

காதலில் ஒரு சிம்பதி உருவாக்கி தன் வெற்றியை அடைய இது வழியா???

இந்த கேள்விகள் எல்லாம் புரியாத புதிர்களாய்....


பேருந்து பயணங்களில்
அருகாமை தவிர்த்து
என் அவஸ்தைகளை
முகம் சுழித்து
கேலிசெய்வதில்
எத்தனை சுகமுனக்கு...


இது எத்துனை வலி(மை)யான வரிகள்...
இவனுக்கு வேதனை...
அவளுக்கு சுகமா இல்லை வலியா.... தெரியலையே பூ...
கவிதா இதே போல் ஒரு விவாததில் ஒரு தமிழ் பாடலை குறியிட்டு காட்டி இருந்தார்...
"ஏன் பெண்ணென்று பிறந்தாய்..
ஏன் என் வாழ்வில் புகுந்தாய்"

நம் குறைகளுக்கும் அடுத்தவர்களை சாடியே பழகி போனோமோ???

மனோஜ்
03-03-2007, 02:33 PM
கவிதை அருமை பூ அவர்களே

இளசு
11-03-2007, 10:08 PM
பேசாமல் பேசிக்கொள்ளும் காலங்கள்..
சொல்லாத சொல்லுக்கும் பொழிப்புரைகள்..

காதல் வனத்தில் மட்டும் வளரும் விசேஷ மரங்கள் இவை..
வாழ்வின் கோடையில் சோலைநிழல் மரங்கள்..

இளைப்பாறிய கணங்களை நினைத்தாலும் இனிக்கும்..

தொடர்க பூ.. பாராட்டுகள்!

poo
14-03-2007, 04:28 AM
நன்றி அண்ணா... உங்களின் முழு பங்களிப்புதான் சமீபகாலமாய் என்னை மன்றத்தை சுற்றிவர வைக்கிறது!

ஷீ-நிசி
14-03-2007, 09:18 AM
தினமும் காதலோடு, விடை தெரியாமல் அவளை பின்தொடரும் காதலனின் நிலை.. தினமும் அவன் பார்ப்பது அவளுக்கு தெரிந்தாலும் அவள் அவனை கண்டுகொள்ளாத நிலை.. ஆனால் அது அவனுக்கு பழகிப்போன ஒன்று.. அவளுக்கு பின் இருக்கையில் அவன் அமர்ந்துக்கொண்டிருக்கும் நிலை அழகாக உள்ளது...
அவளின் கூந்தல் அருகே பின் இருக்கையில் நுனியில் அவன் அமர்ந்து இருக்கிறான்.. அவன் விடும் அந்த மூச்சுக்காற்று பட்டு அவளின் கேசங்கள் அசைவதை கவிஞர் மிக இயல்பாய் கூறியிருக்கிறார்..

உன் காதோரம் சுருண்டிருக்கும்
கேசங்கள்
என் சுவாசத்தை
எதிரொலித்துக் கொண்டிருக்கும்...

நான் மிக ரசித்த வரிகள்.. பூ...

ஜெயாஸ்தா
16-03-2007, 04:23 PM
என் பழைய ஞாபங்களை இந்த கவிதையின் மூலம் கிளறிவிட்டுவிட்டீர்களே.... பூ

அமரன்
26-07-2007, 05:13 PM
அடடா..பூ அண்ணனில் காதல் கவிதை. வர்ணனைகள் இல்லாத, காதலுக்கு ஏங்கும் வலிகளை அழகாகச்சொல்லியுள்ளார். புரியாத சில வரிகள் பென்சண்ணாவின் பின்னூட்டத்தில் புரிந்தது. காதல் கவிதையையும் வித்தியாசமாக எழுதலாம் என எனக்கு கற்பித்த கவிதை. நன்றி அண்ணா.

இனியவள்
26-07-2007, 05:26 PM
அழகிய கவிதை வாழ்த்துக்கள் பூ அண்ணா

அழகிய சொல்நடை இலகுவாய்
புரிந்து கொள்ள முடிந்ததது

(இத் திரியை மேலெழுப்பி விட்ட அமருக்கு நன்றி)

ஆதவா
26-07-2007, 06:37 PM
சில கவிதைகள் பாடங்கள்.... நான் கைவைக்காமல் கண் வைத்த பாடங்கள்... அவற்றுள் இதுவும்.. இந்த கவிதை எழுதிய காலத்தில் பூ எனக்கு நெருங்கிய பழக்கமானார்... தனிமடலில் பல சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டேன்.. (அதனாலேயே கவிதை விமர்சனம் இடவில்லை.)

பூ விரைவில் மன்றம் வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்... அவரின் வருகைக்கு காத்திருக்கிறேன்..

பழைய கவிதைகள் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்ப்பது மனமகிழ்ச்சி தருகிறது...

ஓவியன்
27-07-2007, 07:08 PM
அடடே என்னே ஒரு கவிதை...........
மீள மேலே கொண்டு வந்த அமருக்கு நன்றிகள்!

நானும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் பூ அண்ணனின் மீள் வருகையையும் அவரது 7000 ஆவது பதிவையும்.

விகடன்
27-07-2007, 07:21 PM
பூவின் அழகிய கவிதை. அதிலும் வருமோரிரு சொல்லையும் நுகர அங்கலாய்க்கும் தருணம் சிறப்புடன் சித்தரித்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்

பூமகள்
13-10-2007, 05:29 PM
பேருந்து பயணங்களில்
அருகாமை தவிர்த்து
என் அவஸ்தைகளை
முகம் சுழித்து
கேலிசெய்வதில்
எத்தனை சுகமுனக்கு...


உன் காதோரம் சுருண்டிருக்கும்
கேசங்கள்
என் சுவாசத்தை
எதிரொலித்துக் கொண்டிருக்கும்...

மீண்டும் பூ அண்ணாவின் முத்திரை கவிதை...!!
நான் மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை..!!
மீண்டும் மணம் வீச மன்றம் வாங்கள் பூ அண்ணா.

யவனிகா
13-10-2007, 06:17 PM
காதல் கவிதைகள் பெரிய அளவில் என்னை ஈர்ப்பது இல்லாவிடினும்...மலரின் வரிகளும் கற்பனையும் பாராட்டப்பட வேண்டியவை.

பத்து வருடங்கள் கழித்து...
முன்னாள் காதலர்கள்
இந்நாள் தம்பதியர்...இப்போது அந்தப் பெண்ணின் பார்வையில்,

ஒட்டி உரசித்தான்
உன் அருகில் அமர்கிறேன் நான்...
என்ன இது
நாலு பேர் முன்னிலையில்
நாகரீகம் இல்லாமல் − விலகுகிறாய் நீ!

இன்றும் என் குழற்கற்றைகளை
காற்று சிதறடிக்கிறது
தலையை சரியாக் கட்டத்தெரியாம
என்ன பொண்ணு நீ −சலிப்படைகிறாய் நீ!

ஜன்னலோர எதிர்க்காற்றையும் மீறி
பேச முயல்கிறேன் நான்
விரித்து வைத்த புத்தகத்தில்
முகம் பதித்து என்னைத்− தவிர்க்கிறாய் நீ!


பத்தாண்டுகள் முன் நடந்தவைகளுக்கு
பழிக்குப் பழியா?