PDA

View Full Version : பிளாட்ஃபாரம் - நடைபாதை



ஷீ-நிசி
26-02-2007, 05:00 AM
பூமிக்குள்ளே இயங்கிடும்
இது ஒரு தனி உலகம்!

இப்படியும் வாழ முடியுமென்று
வாழ்வியல் முறையையே
மாற்றிக் காட்டியவர்கள்!

இன்னமும் வறுமையின்
'மை' யிலேயே நின்றுக் கொண்டிருக்கும்
பூமியின் கடைசி செல்வந்தர்கள்!

எங்களுக்கெல்லாம் இது வீதி!
உங்களுக்கோ வீடு!

சில பருவக்காலங்களில்
மழை பொய்த்துப்போவதும்
இவர்கள் மேலுள்ள
கருணையில்தானோ!?

உறக்கத்தைக் கூட
கிறக்கத்தோடு பார்த்திடும்
சில ஓநாய்கள்!

அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!

தவறாமல் காணலாம்
இவைகளிரண்டும்!

ஒன்று
கண்ணீர் அஞ்சலி பலகை!
மற்றொன்று
ரசிகர் மன்ற பலகை!

சாதம் விற்று
சாதம் உண்ணும் -மிகச்
சாதாரண ஜீவன்கள்!

பல கல்யாணங்கள்
காதலில் நடந்தேறிடும்!

சில! பக்கத்து நடைபாதையினரோடு
மோதலில் நடந்தேறிடும்!

இவர்களின் அதிகபட்ச கனவே
அடுத்த வேளை சாப்பாடுதான்!

வரிஏய்ப்பு, நிலமோசடி
என்றெல்லாம்
பத்திரிக்கையில் அடிபடாதவர்கள்!

அவ்வப்போது
அடிக்கடி லாரி ஏறியது என்று
ப(டு)த்திருக்கையில் அடிபட்டவர்கள்!!

1000 சதுர அடியிலும்
திருப்தியடையாதவனே!

இங்கே கொஞ்சம் பார்!

10 சதுர அடியில்
ஒரு பட்டாளமே இயங்குகிறது!

வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்!

aren
26-02-2007, 05:05 AM
வாவ்!! அருமையான வரிகள்.

இவர்களை நடைபாதையிலிருந்து அகற்றி ஒரு இடத்தில் குடியேற்றினால் அங்கேயே தங்குவார்களா? மறுபடியும் நடைபாதையை நோக்கியே பயணம் செய்வார்கள். இதனால்தானோ என்னவோ அரசாங்கமும் இதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை என்று நினைக்கத்தோன்றுகிறது.

ஷீ-நிசி
26-02-2007, 05:09 AM
நன்றி ஆரென்... குறைந்தபட்சம் அரசாங்கம் அம்மாதிரி முயற்சி எடுத்திருந்திருக்குமா என்று தெரியவில்லை....

pradeepkt
26-02-2007, 05:47 AM
அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் சில சுயநலக் காரணங்களுக்காகவாவது அவ்வப்போது முயல்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடப்பதில்லை என்பதே நிதர்சனம்.

ஒட்டுமொத்தமாகச் சாலையோர வாழ்க்கையைத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள் ஷீ நிசி. ஒரு சின்ன விஷயம். இன்னும் கவிதைப் படுத்தியிருந்தால் இக்கவிதையின் கனத்திற்கு ஒரு சிறு காவியமாகும் வாய்ப்பு இருக்கிறது.

ஷீ-நிசி
26-02-2007, 06:00 AM
அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் சில சுயநலக் காரணங்களுக்காகவாவது அவ்வப்போது முயல்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடப்பதில்லை என்பதே நிதர்சனம்.

ஒட்டுமொத்தமாகச் சாலையோர வாழ்க்கையைத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள் ஷீ நிசி. ஒரு சின்ன விஷயம். இன்னும் கவிதைப் படுத்தியிருந்தால் இக்கவிதையின் கனத்திற்கு ஒரு சிறு காவியமாகும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி பிரதீப்.. சில கவிதைகளுக்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் அந்த வடிவங்கள் மாறுவதில்லை.. இந்தக் கவிதையை கடந்த 2 வாரங்களாக எழுதியுள்ளேன்.. இந்தக் கவிக்குள் பல அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது.. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று அறிகிறேன்...

ஆதவா
26-02-2007, 04:00 PM
நாளை கவனிக்கிறேன் ஷீ! இன்று இரவு வேலை.. மன்றம் வரவே முடியவில்லை..

அறிஞர்
26-02-2007, 04:09 PM
பூமிக்குள்ளே இயங்கிடும்
இது ஒரு தனி உலகம்!

இப்படியும் வாழ முடியுமென்று
வாழ்வியல் முறையையே
மாற்றிக் காட்டியவர்கள்!

இன்னமும் வறுமையின்
'மை' யிலேயே நின்றுக் கொண்டிருக்கும்
பூமியின் கடைசி செல்வந்தர்கள்!

எங்களுக்கெல்லாம் இது வீதி!
உங்களுக்கோ வீடு!
!
அழகான சிந்தனை....
இப்படி வாழ்க்கையை வாழலாம்.... என உலகிற்கு காட்டுகிறார்கள்.

அடுத்த வேளை சாப்பாடே இலட்சியம் என்றிருக்கும் இவர்கள்.. கடுமையாக உழைத்தால் முன்னேற இயலுமே...



1000 சதுர அடியிலும்
திருப்தியடையாதவனே!

இங்கே கொஞ்சம் பார்!

10 சதுர அடியில்
ஒரு பட்டாளமே இயங்குகிறது!

வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்!
அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் முன்னேறாமல்
அப்படியே இருக்கும் நிலையை ஆராய்ந்தால்....
அவர்கள் சோம்பேறிகளோ என எண்ணத் தோன்றுகிறது.

மன்மதன்
26-02-2007, 05:32 PM
இந்தக் கவிக்குள் பல அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது.. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று அறிகிறேன்...



உறக்கத்தைக் கூட
கிறக்கத்தோடு பார்த்திடும்
சில ஓநாய்கள்!

அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!

தவறாமல் காணலாம்
இவைகளிரண்டும்!

ஒன்று
கண்ணீர் அஞ்சலி பலகை!
மற்றொன்று
ரசிகர் மன்ற பலகை!



கவிதை நடைபாதை மாறாமல் பயணிக்கிறது.. அர்த்தம் பொதிந்திருப்பதை என்னாலேயே கண்டுகொள்ள முடிகிறது..


அந்த அமாவாசை உறவு , உறக்கம் ..அடடா...

ஆதவா நீண்ட ஒரு விமர்சனம் கொடுப்பார் என் எதிர்பார்க்கிறேன்..

ஷீ-நிசி
27-02-2007, 03:01 AM
நாளை கவனிக்கிறேன் ஷீ! இன்று இரவு வேலை.. மன்றம் வரவே முடியவில்லை..

ஆதவா, நீங்கள் என்றென்றைக்குமே பொருமையாகவே விமர்சியுங்கள்.. அதைதான் நானும் எதிர்பார்க்கிறேன்.

ஷீ-நிசி
27-02-2007, 03:03 AM
அழகான சிந்தனை....
இப்படி வாழ்க்கையை வாழலாம்.... என உலகிற்கு காட்டுகிறார்கள்.

அடுத்த வேளை சாப்பாடே இலட்சியம் என்றிருக்கும் இவர்கள்.. கடுமையாக உழைத்தால் முன்னேற இயலுமே...


அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் முன்னேறாமல்
அப்படியே இருக்கும் நிலையை ஆராய்ந்தால்....
அவர்கள் சோம்பேறிகளோ என எண்ணத் தோன்றுகிறது.

நன்றி அறிஞரேஎ, உங்களின் விரிவான விமர்சனங்களுக்கு...

வாழ்க்கையில் சலிப்புற்றவர்களுக்கு அவர்கள் பாடங்கள்.... அவர்களும் முன்னேறிடவேண்டும் என்பதே என்னுடைய அவாவும்... இதற்கு காலங்கள் தான் பதில் சொல்லிட வேண்டும்... ஆனால் அவர்கள் சோம்பேறிகள் அல்ல அறிஞரே....

ஷீ-நிசி
27-02-2007, 03:05 AM
கவிதை நடைபாதை மாறாமல் பயணிக்கிறது.. அர்த்தம் பொதிந்திருப்பதை என்னாலேயே கண்டுகொள்ள முடிகிறது..


அந்த அமாவாசை உறவு , உறக்கம் ..அடடா...

ஆதவா நீண்ட ஒரு விமர்சனம் கொடுப்பார் என் எதிர்பார்க்கிறேன்..

நன்றி... மன்மதன் அவர்களே! புரிந்துகொண்டீர்கள்...

உங்களின் விமர்சனங்கள் என்னை உற்சாகபடுத்துகிறது..

pradeepkt
27-02-2007, 05:11 AM
கவிதை நடைபாதை மாறாமல் பயணிக்கிறது.. அர்த்தம் பொதிந்திருப்பதை என்னாலேயே கண்டுகொள்ள முடிகிறது..


அந்த அமாவாசை உறவு , உறக்கம் ..அடடா...

ஆதவா நீண்ட ஒரு விமர்சனம் கொடுப்பார் என் எதிர்பார்க்கிறேன்..
கொஞ்ச நாளைக்கு முன்னால் ஏதோ ஒரு பத்திரிகையில் இவர்கள் வாழ்க்கை பற்றிய தொகுப்பு வந்திருந்தது.
அதில் இந்த அமாவாசை உறவு பற்றிச் சொல்லி இருந்தார்கள். ஹ்ம்ம்.. வாழ்க்கை இவர்களைப் புரட்டுகிறதா, இல்லை வாழ்க்கையை இவர்கள் கட்டுப் படுத்துகிறார்களா என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஷீ-நிசி
27-02-2007, 05:27 AM
கொஞ்ச நாளைக்கு முன்னால் ஏதோ ஒரு பத்திரிகையில் இவர்கள் வாழ்க்கை பற்றிய தொகுப்பு வந்திருந்தது.
அதில் இந்த அமாவாசை உறவு பற்றிச் சொல்லி இருந்தார்கள். ஹ்ம்ம்.. வாழ்க்கை இவர்களைப் புரட்டுகிறதா, இல்லை வாழ்க்கையை இவர்கள் கட்டுப் படுத்துகிறார்களா என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆச்சரியம்தான்.. நான் ஒருநாள் பிராட்வே பஸ் நிலையம் சென்றபோது, யாருக்காகவோ அன்று காத்துக்கொண்டிருந்தேன்... அப்போதுதான் அந்த நடைபாதை ஜீவன்களை கவனித்தேன்.. அங்கே பெரிய கட்டிடம் இல்லை.. கார் இல்லை.. ஆனால் ஒவொருவரின் முகத்திலும் சந்தோஷங்கள் இருக்கிறது.. இருப்பதில் திருப்திகானும் மக்கள்..

அந்த உந்துதலில் உண்டானதே இக்கவி..

மனோஜ்
27-02-2007, 06:20 AM
அருமையான கவிதை ஷி நிசி தாங்கள் அவர்களை நன்றாக கவனித்திருக்கிறீர்கள் அவர்கள் வாழ்க்கை முறையை அப்படியே வெளிகாட்டபட்டுள்ளது ஆனால் அவர்கள் பல பேர் இதுதையே தொழிலாக வைத்துள்ளார்கள் அதனால் அவர்கள் வாழ்கையில் உயர்வது என்பது நடக்காது அவர்கள் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் மாற்றுவது கடினமே

ஷீ-நிசி
27-02-2007, 06:27 AM
நன்றி மனோஜ்.. விலைவாசி, வீடு, படிப்பு எல்லாம் நடுத்தரகுடும்பங்களே நாக்கு தொங்கிடும் நிலையில் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் காலத்தில் இவர்களின் உயர்வு என்பது ஒரு மாஜிக் போல் ஏதாகிலும் நடந்திட்டால்தான் உண்டு.

இளசு
27-02-2007, 07:17 AM
பாராட்டுகள் ஷீ-நிசி.

கவிஞனாய் நின்று உங்கள் பார்வையில்
அவர்கள் வாழ்வைப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

'விளக்கு வச்ச கார் வந்தால்
விலகிப் படுக்கும் நிலைதானே'

- எனக் கலைஞர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது..

பார்வையைப் பதிவு செய்வது முதல் கட்டம்..
தீர்வு சொல்வது, காண்பது - அடுத்த கட்டம்.

அவர்கள், அரசு - இரு கை ஓசை எழுந்தால் மட்டும்....!

ஷீ-நிசி
27-02-2007, 07:52 AM
நன்றி இளசு அவர்களே! கலைஞரின் கவிதை வரிகள் மிக அற்புதம்....

ஆதவா
27-02-2007, 03:09 PM
பூமிக்குள்ளே இயங்கிடும்
இது ஒரு தனி உலகம்!

இப்படியும் வாழ முடியுமென்று
வாழ்வியல் முறையையே
மாற்றிக் காட்டியவர்கள்!

இன்னமும் வறுமையின்
'மை' யிலேயே நின்றுக் கொண்டிருக்கும்
பூமியின் கடைசி செல்வந்தர்கள்!

எங்களுக்கெல்லாம் இது வீதி!
உங்களுக்கோ வீடு!

சில பருவக்காலங்களில்
மழை பொய்த்துப்போவதும்
இவர்கள் மேலுள்ள
கருணையில்தானோ!?

உறக்கத்தைக் கூட
கிறக்கத்தோடு பார்த்திடும்
சில ஓநாய்கள்!

அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!

தவறாமல் காணலாம்
இவைகளிரண்டும்!

ஒன்று
கண்ணீர் அஞ்சலி பலகை!
மற்றொன்று
ரசிகர் மன்ற பலகை!

சாதம் விற்று
சாதம் உண்ணும் -மிகச்
சாதாரண ஜீவன்கள்!

பல கல்யாணங்கள்
காதலில் நடந்தேறிடும்!

சில! பக்கத்து நடைபாதையினரோடு
மோதலில் நடந்தேறிடும்!

இவர்களின் அதிகபட்ச கனவே
அடுத்த வேளை சாப்பாடுதான்!

வரிஏய்ப்பு, நிலமோசடி
என்றெல்லாம்
பத்திரிக்கையில் அடிபடாதவர்கள்!

அவ்வப்போது
அடிக்கடி லாரி ஏறியது என்று
ப(டு)த்திருக்கையில் அடிபட்டவர்கள்!!

1000 சதுர அடியிலும்
திருப்தியடையாதவனே!

இங்கே கொஞ்சம் பார்!

10 சதுர அடியில்
ஒரு பட்டாளமே இயங்குகிறது!

வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்


கைகொடுங்க ஷீ!!!
மிக அருமை. ஒரு சாலை ஓரத்தில் பிளாட்பாரத்தில் ஒரு கவிதை சென்று அழுகிறது. கவிதைக்கு உணர்ச்சிகள் ஏற்படுத்தும் தன்மை உண்டு.. உண்மையில் நான் பல நிகழ்ச்சிகளை இதன் மூலம் நினைத்துப் பார்த்ததுண்டு. வாழ்க்கையில் நாம் நடந்த இப்பாதைகளில் கண்ட மனிதர்கள் பலர். பெரும்பாலும் குளிக்கவோ சாப்பிடவோ உறங்கவோ உடைகளை நிவர்த்திசெய்யவோ இயலாமல் இருப்பது வேதனை. அரசாங்கத்தின் நெஞ்சில் ஊறும் மண்புழுக்கள் இவர்கள்.. கண்டு கொள்ளாமல் விடுவது மிகவும் தவறு.
உங்கள் கவிதை வரிகளை எப்படி கையாள்வது?. ஒரு வைரத்தைக் கொடுத்து அதைப் பிரிக்கச் சொன்னால் எப்படி?. முதலிரண்டு வார்த்தைகள்.. உலகம் பல வகையில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் மேன்மையாக வாழும் ஒரு உலகம், மேன்மை என்று நினைத்து வாழும் ஒரு உலகம், அசிங்கமான உலகம், இவையிரண்டிலும் சேராத ஒரு உலகம், இவற்றை மீறி நடைபாதை உலகம் தனி.. எங்கள் ஊரில் நிறையபேரை இம்மாதிரி பார்க்கலாம். நான் உண்மையில் ஏக்கமடைந்தது கிடையாது.. இவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்று நினைத்தது கிடையாது. அவர்களும் நமக்கு இவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கவும் மாட்டார்கள்.. சில அசிங்க செயல்கள் மட்டுமே என்னை முகம் சுழிக்க வைக்கிறது..
இவர்களின் வறுமை ... மையிலேயே நிற்கிறதா?. சபாஷ். அருமை.. நுனியில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இதைவிட எப்படி தெளிவாக சொல்லமுடியும்? ஒரு கடை வறுமைக் காரனை கடைசி செல்வந்தர் என்று சொல்லி மதிப்பை இழக்கச் செய்யாமல் வடிக்கப் பட்டு இருக்கிறது வார்த்தைகள்.
முகத்தில் மகிழ்ச்சி என்ற பவுடர் பூசிக்கொண்டு போகும் மானிடர்களுக்கு இது வீதிதான்.. ஆனால் அவர்கள் உலகத்தில் நாம் நுழைவது உங்கள் வரிகளில் தெளிவாக சொல்கிறீர்கள்.. இரண்டு வரிகள் என்றாலும் மிகப் பெரிய அர்த்தம் பொதிந்த வரிகள்.
ஒரு விஷயத்தை பாதகமாக சொல்லாமல் அதை அப்படியே சாதகமாக மாற்றும் திறமை உங்களுக்கு நிறையவே உண்டு. அதில் ஒன்றுதான் கடைசி செல்வந்தர் என்பதுவும் பொய்த்துப் போன மழையும்.
மனிதர்கள் சிலர் இம்மாதிரிதான் ஷீ!!! நான் முன்னம் சொன்னதுமாதிரி. திறந்து கிடக்கும் ஒரு வீட்டில் எட்டிப் பார்க்கும் நாய்கள். அவர்களின் வாழ்க்கையை எட்டிப் பார்க்காத மனிதர்கள் கந்தல்களையும் களைந்தல்களையும் ஏக்கமாய் பார்வையிடுவார்கள்... உங்கள் திறம் நன்றாக ஒலிக்கிறது... அதேசமயம் அவர்களில் சிலர் நடந்துகொள்ளும் விதமும் நல்லவனுக்கும் முகச்சுழிப்பு அல்லவா?
அடுத்து... வரிகளின் நேர்த்தி அதன் வார்த்தைகளில் உள்ளது.. ஒரு செயலை மறைமுகமாக சொல்லி அதைப் புரியவைப்பது சிரமம்.. இங்கே பொய்த்துப் போய் நிற்கிறது.. அமாவாசை இருட்டு,.. சரியான நேரம் என்று சொல்வதைவிட ஓநாய்களின் கண்கள் பாராத நேரம் என்று சொல்லலாமா?.. வார்த்தைகளின் கையாடல் மிக அருமை.
தவறாமல் காணலாம் இரண்டு.... மேற்சொன்னவைகளும் அதற்கு அடுத்து சொல்பவைகளும்... இரண்டுக்கும் பொருத்தமான பாலமாக இருக்கிறது வரிகள்...
நீங்கள் எங்காவது அங்கே தங்கினீர்களா?.. சந்தேகமாகத்தான் இருக்கிறது. சாதம் முதல் காதல் வரை மோதல் முதல் தாபம் வரை தெளிவாக சொல்லியிருக்கிறீர்களே! இங்கே நான் கண்டவரை கூடை பின்னுகிறார்கள். மரத்தில் ஆன மேஜை நாற்காலி மற்றும் போர்வைகள் விற்கும் மார்வாடிகள் ஏராளம்.. சைக்கிள் ரிப்பேர் செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். பூட்டு ரிப்பேர் மற்றும் சின்ன சின்ன படங்கள் விற்கும் தொழிலாளிகள்.. ஆனால் எல்லாமே வறுமை தின்றுவிடும்....
அதிக பட்ச கனவு.... கைப்பேசி, ஊர் சுற்ற வண்டி நண்பர்கள் கூட்டம், நல்ல சாப்பாடு, கைநிறைய பணம், யாருடன் கடலை போட்டு பேலன்ஸ் தீர்க்கலாம் என்ற எண்ணம் ஆகியவற்றை மீறி நாம் காணும் கனவுகள் பேத்தலானவை.. வெட்கவேண்டும் நாம்.
அடிப்பட்டவர்கள், அடிபடாதவர்கள்... மிக அருமையான எடுத்துக்காட்டுகள்... பிராக்கெட்டில் இட்ட ஒரு எழுத்துகூட பேசுகிறது திறமையாக.
1000 சதுர அடியில் திருப்தியா?... இங்கே யாருங்க இருக்காங்க,,,, பூமியே சொந்தமானாலும் நிலவில் வீடு கட்ட நினைப்பார்கள்.. சொந்தமில்லாத 10 அடிக்கு மேல் இவர்கள் யோசிப்பார்களா என்றால் சந்தேகமே!!
இவர்களின் மூலம் பாடம் காண்பது என்பது சரியான ஒன்றுதான்... அதேசமயம்//
இவர்களின் இந்நிலைக்கு அரசு ஒரு காரணமாக இருந்தாலும் பல வகையில் அவர்களும் ஒரு காரணம்.. முதலில் சுத்தமில்லாத வாழ்க்கை.. இது உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் தான்.. நான் நேரில் கண்டவை. அனுபவப் பட்டவை. நீங்கள் என்னதான் சுத்தப் படுத்தி வீடு கட்டிக் கொடுத்தாலும் மீண்டும் அதே நடைபாதைதான்.. எல்லாரும் இப்படி இருக்கமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.. எங்கள் ஊரில் இம்மாதிரி வாழுபவர்களை போலிஸ் துலாவி ஒரு மண்டபத்தில் நிறுத்தி பல அறிவுரைகள் நடத்தி, மண்டபத்தை வாடகைக்கு எடுத்து சில நாட்கள் இங்கே தங்கியிருக்குமாறு சொன்னார்கள். பின் வீடு கட்டி கொடுப்பதாகவும் , தகுந்த வேலை வாங்கித் தருவதாகவும் சில தொண்டு நிறுவனங்களும் முன்னே வந்தன... அடுத்த நாள் கிட்டத்தட்ட 90 சதம்பேரைக் காணவில்லை.... இந்த எடுத்துக்காட்டு போதுமா?. இவர்களின் நிலைக்கு... இவ்வாழ்க்கை அவர்களுக்கு பழகிவிட்டது. நாம் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தாலும் அதை புரிந்து கொள்ளமாட்டார்கள்...
அடுத்து மானம்.... மானம் பற்றி இவர்கள் கவலை கொள்கிறார்களா என்றால் இல்லை.... இன்றைக்கும் நீங்கள் எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்ட் வந்துபாருங்கள் நடக்கும் கூத்தை... அதை தட்டிக் கேட்பதற்கும் ஆளில்லாமல் இருக்கிறார்கள். (என்னையும் சேர்த்து.) இவர்களுக்கு மிக மிக அருகே போலிஸ் ஸ்டேசன் வேறு.. (நான் மாட்டிய அதே ஸ்டேசன்.) நான் மன்றத்தில் எழுதுவதற்கே கேவலமாகும் செயல்கள் பகலில் நடந்தது. மானம் பற்றி என்ன கவலை கொள்கிறார்கள் இவர்கள்?.. அரசு ஓட்டை மட்டுந்தான் பார்க்கிறதா? ஒருவேளை இவர்களுக்கு ஓட்டு இருந்தால் கவனிக்கப் படுவார்களோ?...
சுயவேலை செய்பவர்கள் பலரை இங்கே கண்டிருக்கிறேன்.. மேலே என்ன என்ன வேலை செய்கிறார்கள் என்பதை பட்டியலிட்டேன்.. அவை எங்கள் ஊரில் நான் கண்டவை.. சென்னையில் நான் கண்டது இன்னும் பல.... வியாசர்பாடி செல்லும் வழியில் ஒரு மேம்பாலம் இருக்கிறது.. அதன் வழி சென்றால் இடது ஓரம் ரயில் பாதை.. அங்கும் உள்ளார்கள். வலது ஓரம் பிளாட்பாரம் மாதிரி இருக்கிறது.. அங்கே சில நாட்கள் சுற்றித் திரிந்துள்ளேன்.. மனிதர்கள் பலரை கண்டிருக்கீறேன்.. சென்ரலுக்கு அருகே கூவம் பக்கத்தில் ரோட்டோரக் கடைகளுக்கும் சென்ரலுக்கும் மத்தியில் சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.. இன்னும் நிறைய இடத்தில் இருக்கிறார்கள்...முக்கியமாக சுரங்கப் பாதைகளில் இருப்பார்கள். இல்லையா ஷீ!//// சென்னையில் இவர்களின் தொகை அதிகமாக இருக்கும்.. சிங்காரச் சென்னை என்று அங்கங்கே போஸ்டர் வேறு..
இருப்பினும் வாழ்கையில் சலிப்புறாமல் குடும்பத்தை நிர்வகிக்கும் பலர் உள்ளனர்... பிச்சை பெறாமல் உண்ணூம் வாழ்க்கை வாழ நினைக்கும் நல்லவர்களும் உள்ளார்கள்...
அவர்களுக்காக ஒரு கவிதை மிக அருமையாக பின்னப் பட்டு மாலை சூடப்பட்டிருக்கிறது.. குறிப்பாக உங்களுக்கே உரிய வார்த்தைக் கையாடல் பல இடங்களில் அருமையாக தெளிக்கப் பட்டிருக்கீறது..
வாழ்த்துக்கள்...
ஆதவன்

ஷீ-நிசி
27-02-2007, 03:41 PM
மிக அருமை ஆதவா விமர்சனம்...

இவர்களின் வறுமை ... மையிலேயே நிற்கிறதா?. சபாஷ். அருமை.. நுனியில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை இதைவிட எப்படி தெளிவாக சொல்லமுடியும்? ஒரு கடை வறுமைக் காரனை கடைசி செல்வந்தர் என்று சொல்லி மதிப்பை இழக்கச் செய்யாமல் வடிக்கப் பட்டு இருக்கிறது வார்த்தைகள்.

நான் எதிர்பார்த்த வரிகளை அர்த்தம் மாறிடாமல் என் எண்ணங்களின் படியே தொட்டுச்சென்றுள்ளாய்... அருமை நண்பா...


மானம் பற்றி இவர்கள் கவலை கொள்கிறார்களா என்றால் இல்லை.... இன்றைக்கும் நீங்கள் எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்ட் வந்துபாருங்கள் நடக்கும் கூத்தை... அதை தட்டிக் கேட்பதற்கும் ஆளில்லாமல் இருக்கிறார்கள். (என்னையும் சேர்த்து.) இவர்களுக்கு மிக மிக அருகே போலிஸ் ஸ்டேசன் வேறு.. (நான் மாட்டிய அதே ஸ்டேசன்.) நான் மன்றத்தில் எழுதுவதற்கே கேவலமாகும் செயல்கள் பகலில் நடந்தது. மானம் பற்றி என்ன கவலை கொள்கிறார்கள் இவர்கள்?.. அரசு ஓட்டை மட்டுந்தான் பார்க்கிறதா? ஒருவேளை இவர்களுக்கு ஓட்டு இருந்தால் கவனிக்கப் படுவார்களோ?...

அவர்களின் செய்கைகளை நான் நியாயபடுத்தவில்லை..
படிக்காத அவர்களின் மத்தியான செய்கைகளையும், படித்த காதலர்கள்கள் மத்தியான வெய்யிலில் மெரீனா பீச்சில் செய்யும் செய்கைகளையும் நான் நியாயப்படுத்தவில்லை....

வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்

வாழும் பாடம் இவர்கள்... அடுத்தவேளை உணவென்பது நிச்சயமில்லாதபோதும், அடுத்தவேளையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறானே, அந்த பாடத்தை மட்டும் நாம் கற்றுக்கொள்வொம், கடன் பிரச்சனையில் குடும்பமே தூக்கிலிட்டுக்கொண்டனர், விஷம் அருந்தினர் என்று வாழ்க்கையை எதிர்கொள்ள திராணியற்றவர்கள், எதுவுமே இல்லாத நிலையிலும் வாழ்வை எதிர்கொள்ளும், வாழ்க்கையை வாழ விரும்பிடும் ஆசையை மட்டும் கற்றுக்கொள்வோம் என்றே எண்ணி எழுதியுள்ளேன் அவ்வரிகளை...

மனோஜ்
27-02-2007, 06:38 PM
ஆதவா விமர்சனம் மிக அருமை பாராட்டுகள்

poo
28-02-2007, 08:35 AM
இதுபோன்ற வாழ்வியல் நிகழ்வுகளை படம்பிடிக்கவும் தெரியுமென நிருபிப்பவனே என்னைப் பொறுத்தவரை உண்மைக் கவிஞன்....

உண்மைக்கவிஞனே உற்சாகமாய் தொடரட்டும் உன் படைப்புகள்..

இவர்கள் வாழ்க்கை ..மையிலேயே நிற்கிறது.. தேர்தல் நேரத்தில் மட்டும் விரலில் மை ஒட்டும்வரை இவர்கள் கொஞ்சம் கொடுத்துவைத்தவர்கள்.....

ஷீ-நிசி
28-02-2007, 08:38 AM
இதுபோன்ற வாழ்வியல் நிகழ்வுகளை படம்பிடிக்கவும் தெரியுமென நிருபிப்பவனே என்னைப் பொறுத்தவரை உண்மைக் கவிஞன்....

உண்மைக்கவிஞனே உற்சாகமாய் தொடரட்டும் உன் படைப்புகள்..

இவர்கள் வாழ்க்கை ..மையிலேயே நிற்கிறது.. தேர்தல் நேரத்தில் மட்டும் விரலில் மை ஒட்டும்வரை இவர்கள் கொஞ்சம் கொடுத்துவைத்தவர்கள்.....

நன்றி பூ அவர்களே!
உங்களின் உள்மன பாராட்டுக்கள் என்னுள் கவிதைகளை இன்னும் ஊறச் செய்திடும்...

மன்மதன்
28-02-2007, 04:34 PM
ஆதவன் விமர்சனம் நன்றாக இருந்தது.. அவர்கள் இல்லாமல் சிங்காரசென்னை ஏது??

ஷீ-நிசி
02-03-2007, 10:07 AM
ஆதவன் விமர்சனம் நன்றாக இருந்தது.. அவர்கள் இல்லாமல் சிங்காரசென்னை ஏது??

என்ன சொல்ல வருகிறீர்கள் மன்மதா... அவர்கள் இல்லாமல் சிங்கார சென்னை ஏது என்றால்?? அவர்கள் இருந்தால் எப்படி சிங்காரச் சென்னை?:confused:

அமரன்
02-03-2007, 10:53 AM
எங்களுக்கெல்லாம் இது வீதி!
உங்களுக்கோ வீடு!


அவலம் கூட அழகாகக் நம்பிக்கையுடன் கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் நடைபாதையாகத் தெரிவது சிலருக்கு வீடாக இருக்கின்றது. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு உள்ளத்தில்.

:mad: ஒன்றுமைல்லைங்க வாழ்த்துக்கள் சொன்னேங்க.வார்த்தைகள் வரலை. அதனால்தான் இப்படி

பிச்சி
02-03-2007, 11:51 AM
சில விசயங்களை இலைமறை காயாக சொல்லிவிட்டீர்கள் சமூக கருத்துள்ள கவிதை எப்போதுமே தெவிட்டாத தேன். நன்றாக இருக்கிறது அண்ணா! மேன்மேலும் எழுதுங்கள்.

பென்ஸ்
02-03-2007, 02:45 PM
சமுதாய கவிதைகள் எழுதி அதில் உண்மையை புகுத்தி அந்த
ஈட்டியால் பொய்யான நம் இதயத்தை குத்துவதில் "பூ" கைதேர்ந்தவர்....
இன்று வெகு நாட்களுக்கு பின் மனம் நின்று வீட்டினுள் இருந்தே
சமுதாயத்தை ஒரு முறை சுற்றி வந்த அனுபவம்...

இந்த வகை கவிதைகள் எழுத கவியாற்றல் இருந்தால் மட்டும் போதாது...
சமுதாயத்தை ஒரு கணம் அவர்கள் நிலையில் இறங்கி பார்க்கும் நல்ல மனமும் வேண்டும்...
"அவர்களோடு தங்கி இருந்தீர்களா???" என்று கேட்டு அவர்களின் அதே செயல்களை விளக்கும் ஆதவனையும் (ஏதோ இவரும் தங்கி இருந்தது போல) ஒத்து நானும்....
.
ஷீ...
இது ஒரு வைர கவிதை.....
உம் கவி கிரீடத்தில் பதித்து கொள்ளும்...

கவிதைகளின் அழகு விமர்சிக்கபடுவதில் இன்னும் இன்னும் அழகாகி விடுகிறது...அதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளையும் ஆராய்ந்து விமர்சிக்கும் போது எழுதுபவனின் உள்ளத்தில் கிடைக்கும் சந்தோசத்திற்க்கு அளவில்லை....
நண்பா ஆதவா... இது உன் திறனில் சிறப்பானது... உன் கவிதைகள் கூட சில வாசிக்காமல் விட்டு இருப்பேன்.. ஆனால் உன் விமர்சனங்களை நான் தவறியதில்லை....

இதே போல் சில கவிதைகளை மன்றத்தில் "பூ"வும் கொடுத்து இருந்தார்.... ஒன்றுமில்லை!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951)

பிச்சைகாரியாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5908) ... நானும்

ஷீ-நிசி
02-03-2007, 02:53 PM
நன்றி நக்கீரன் மற்றும் பிச்சி....

ஷீ-நிசி
02-03-2007, 02:55 PM
சமுதாய கவிதைகள் எழுதி அதில் உண்மையை புகுத்தி அந்த
ஏட்டியால் பொய்யான நம் இதயத்தி குத்துவதில் "பூ" கைதேர்ந்தவர்....
இன்று வெகு நாட்களுக்கு பின் மனம் நின்று வீட்டினுள் இருந்தே
சமுதாயத்தை ஒரு முறை சுற்றி வந்த அனுபவம்...

இந்த வகை கவிதைகள் எழுத கவியாற்றல் இருந்தால் மட்டும் போதாது...
சமுதாயத்தை ஒரு கணம் அவர்கள் நிலையில் இறங்கி பார்க்கும் நல்ல மனமும் வேண்டும்...
"அவர்களோடு தங்கி இருந்தீர்களா???" என்று கேட்டு அவர்களின் அதே செயல்களை விளக்கும் ஆதவனையும் (ஏதோ இவரும் தங்கி இருந்தது போல) ஒத்து நானும்....
.
ஷீ...
இது ஒரு வைர கவிதை.....
உம் கவி கிரீடத்தில் பதித்து கொள்ளும்...

கவிதைகளின் அழகு விமர்சிக்கபடுவதில் இன்னும் இன்னும் அழகாகி விடுகிறது...அதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளையும் ஆராய்ந்து விமர்சிக்கும் போது எழுதுபவனின் உள்ளத்தில் கிடைக்கும் சந்தோசத்திற்க்கு அளவில்லை....
நண்பா ஆதவா... இது உன் திறனில் சிறப்பானது... உன் கவிதைகள் கூட சில வாசிக்காமல் விட்டு இருப்பேன்.. ஆனால் உன் விமர்சனங்களை நான் தவறியதில்லை....

இதே போல் சில கவிதைகளை மன்றத்தில் "பூ"வும் கொடுத்து இருந்தார்.... ஒன்றுமில்லை!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951)

பிச்சைகாரியாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5908) ... நானும்

நண்பர் பெஞ்சமின்,... மிக ஆழ்ந்து விமர்சித்துள்ளீர்கள்.. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் என் இதயத்தை களிப்பில் ஆழ்த்துகிறது.. இயல்பாகவே ஒருவித ஆதங்கம் நம் சமூகத்தின் பேரில்... அதனால் என் கவிதைகள் காதல் தவிர்த்து பெரும்பாலும் சமூகத்தை சுற்றுபவையாகவே இருந்திடும்... உங்கள் விமர்சனங்கள் என்னை ஊக்கபடுத்துகின்றன.. நன்றிகள் பல தோழரே!

மன்மதன்
02-03-2007, 06:36 PM
என்ன சொல்ல வருகிறீர்கள் மன்மதா... அவர்கள் இல்லாமல் சிங்கார சென்னை ஏது என்றால்?? அவர்கள் இருந்தால் எப்படி சிங்காரச் சென்னை?:confused:

அதாவது அவர்களை ஒண்ணும் பண்ணமுடியாது என்று சொன்னேன்.. சென்னையில் அவர்கள் இருப்பார்கள்..எப்பவும்.. அது சிங்காரமாகட்டும்.. ஒய்யாரமாகட்டும்..

ஷீ-நிசி
03-03-2007, 03:41 AM
அதாவது அவர்களை ஒண்ணும் பண்ணமுடியாது என்று சொன்னேன்.. சென்னையில் அவர்கள் இருப்பார்கள்..எப்பவும்.. அது சிங்காரமாகட்டும்.. ஒய்யாரமாகட்டும்..

உண்மைதான்..... வழிமொழிகிறேன்..

poo
03-03-2007, 09:04 AM
அவர்களை ஒண்ணுமே பண்ண வேண்டாம் மன்மதன்...
குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்த பாடலை அவர்கள் பாட வேண்டாமே!!

மன்மதன்
04-03-2007, 12:48 PM
தினந்தோறும்
நிலாச்சோறு சாப்பிடும்
நடைபாதைக் குழந்தை
தாயிடம் கேட்டது
எப்போம்மா நாம
வீட்டில் சாப்பிடறது?

(கு.வின்செண்ட். நன்றி:குமுதம்)

ஷீ-நிசி
04-03-2007, 03:54 PM
தினந்தோறும்
நிலாச்சோறு சாப்பிடும்
நடைபாதைக் குழந்தை
தாயிடம் கேட்டது
எப்போம்மா நாம
வீட்டில் சாப்பிடறது?

(கு.வின்செண்ட். நன்றி:குமுதம்)

மிக அருமையான கவிதை...

ஓவியா
05-04-2007, 12:48 AM
இவர்களின் அதிகபட்ச கனவே
அடுத்த வேளை சாப்பாடுதான்!

இந்த வரிகளை என்னை கண்ணீரில் மூழ்கடித்து விட்டன!!!!
இந்தோனேசியாவில் நான் கண்ட காட்சி...அபப்பா.....ரணம்


கவிஞரே,
கவிதை மிகவும் அருமை. சிறப்பன சமூக கவிதை.
மனதில் கல் வைக்கா குறையாய் சோகம் சொட்டுகிறது.

பாராட்டுக்கள்

ஷீ-நிசி
05-04-2007, 04:29 AM
மிக்க நன்றி ஓவியா....