PDA

View Full Version : மின்சார (ரயில்) தேவதை



ஷீ-நிசி
20-02-2007, 04:44 AM
மின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல
இரு பை நிறைய உடைகளோடு!

பரிச்சயமான முகமென
மூளை எண்ணியது!

பேசச் சொல்லி
மனசு உறுத்தியது!

திட்டிவிட்டால்
பயம் உறுத்தியது!

பரவாயில்லை,
தேவதைதானே!

பயத்தின் உறுத்தலை விட
மனதின் உறுத்தல் அதிக நாள்
நீடிக்கும் என்பதால்
தேவதையிடம் பேசிவிட்டேன்...

நீங்க அந்த ஸ்கூல்லதான
படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்! ஆமாம் என்றாள்;

நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்! அது பெண்கள் பள்ளி!

எப்படியோ சமாளித்துவிட்டேன்..

ஏதேதோ பேசினோம்!
அவ்வப்போது சிரித்தோம்!

பிரியும்போது
கேட்டதனால், கூறினாள்!
அவளது அலுவலக எண்னை!

மறு நாள்!
மிகவும் பயத்துடன்
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;

என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!

எதிர்முனையில் ஆண்குரல்!

நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்
ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...

அடுத்து வந்த
இரண்டு தினங்களும்
விடுமுறை!

அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை;
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது..

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!

வாரத்தின் முதல் நாள்!

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;

கூடவே பதற்றத்துடன்...

மீட்டினால்தானே வரும்
வீனையின் ஒலி;
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!

ஆம்! தேவதையின் குரல்!!

பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!

உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்
எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்திருந்திருக்கும்!

இன்றும்
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!!

நாட்கள் கடந்தன!

வெளியில்
சந்திக்க மட்டும்
மறுத்தாள்!

மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!

மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!

இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!

தேவதை இணங்கினாள்
வெளியில் வர
சம்மதித்தாள்!

கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!

என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுது!

அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன;
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!

அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்,

என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!

சமயமும் காலமும்
வாய்க்காதலால் என் காதலை
வெளிப்படுத்தவில்லை..

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!

எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர!

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

ஒரு மெல்லிய
மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

நான் ஏற்கெனவே
நிச்சயமானவள் என்றாள்!

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! இதை
மட்டும் ஏனடி மறைத்தாய்?!

வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!

நீயும் நிராகரிப்பில் சுகம் கானும்
சாதா ரகப் பெண்தானா?!

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!

மனோஜ்
20-02-2007, 06:30 AM
அருமையான கவிதை வரிகள் ஷீ நிசி


மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!

இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!
உன்மையிலும் உன்மை

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!
சரியான முடிவு நன்றி ஷீ நிசி

sham
20-02-2007, 06:33 AM
உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்
எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்திருந்திருக்கும்!


மிக நன்றாகவுள்ளது. வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமா?உணர்ச்சியுடன் கவிதையை வடித்துள்ளீர்கள்.

ஷீ-நிசி
20-02-2007, 08:18 AM
நன்றி மனோ, நன்றி ஷாம்....

ஆதவா
20-02-2007, 09:15 AM
இன்றிரவு நேரம் ஒதுக்கி படிக்கிறேன் நண்பரே!!!

ஷீ-நிசி
20-02-2007, 09:29 AM
இருக்கட்டும் ஆதவா... பொருமையாக... படித்து பின்னூட்டமிடுங்கள்..

ஆதவா
21-02-2007, 05:14 PM
அருமையாக இருக்கிறது ஷீ!.. வாழ்வியல் நிகழ்வுகளாய் தொகுத்ததுபோலத்தான் இருக்கிறது.. மின்சார தேவதை என்றதும் நினைவுகள் எங்கோ சென்றது... கவனிக்க தலைப்பில் பிழை இருக்கிறது... புள்ளி வைக்கவில்லை. இனி என் கருத்துக்கள் (மட்டுமே)

மின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல
இரு பை நிறைய உடைகளோடு!

மின்சார ரயில்... தமிழும் ஆங்கிலமும் கலந்த வார்த்தை. எங்காவது நாம் ரயில் பயணங்கள் செய்கின்ற வேளைகளில் எதிரே எப்படியும் தேவதை அமர்ந்து இருப்பதைக் கண்கூடாக காணலாம். எனக்கும் அந்த அனுபவமுண்டு.. சில பேருக்கு மட்டும் நீங்கள் சொன்னவர்கள் தேவையான தேவதையாக மனது நினைக்கலாம்.
இரு பை நிறைய உடைகளொடு என்றால் உங்கள் அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்ட வரிகளாகத் தோணுகிறது............


பரிச்சயமான முகமென
மூளை எண்ணியது!
பேசச் சொல்லி
மனசு உறுத்தியது!
திட்டிவிட்டால்
பயம் உறுத்தியது!
பரவயில்லை,
தேவதைதானே!

நம் மூளை என்றுமே இப்படித்தானுங்க... மனதின் சாவி மூளை.. ஏதாவது திருவிக்கொண்டேதான் இருக்கும். அதிலும் காணும் பெண்களை எங்காவது பார்த்த பெண் என்று சொல்ல வைக்கும்.. வயதும் அப்படித்தான்...
மனது இரு பாகம் உடையது. ஒன்று மறுக்கும் ஒன்று ஏற்கும்... பரவாயில்லை அது ஒரு அழகிய தேவதைதானே என்றால் மறுத்த மனமும் மண்டியிட்டுப் போகும்...

பயத்தின் உறுத்தலை விட
மனதின் உறுத்தல் அதிக நாள்
நீடிக்கும் என்பதால்
தேவதையிடம் பேசிவிட்டேன்...

பயம் மனதிடம் என்றுமே ஜெயிக்க முடியாது. அதேசமயம் சில நேரங்களில் மனதின் கோணங்கள் பயத்தைவிட மோசமானவை... முன்னம் சொன்னது போல ஏற்கும் மனது சொன்னது போலவே செய்வதுதான் இயல்பான மனிதம்...

நீங்க அந்த ஸ்கூல்லதான
படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்! ஆமாம் என்றாள்;
நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்! அது பெண்கள் பள்ளி!
எப்படியோ சமாளித்துவிட்டேன்..

இந்த சமாளிப்புப் பொய்கள் அந்தந்த வயதில் ஏராளமாய் தங்கும் நண்பரே! உரையாடல் ஆரம்பம் அங்கே அருமையாக ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது... உங்களின் வரிகள் அதை நிரூபிக்கிறது.. நல்லவேளை அந்த பள்ளி பெண்கள் பள்ளீ என்ற விபரம் தெரிந்தது. இல்லையென்றால் மாட்டிக்கொண்டிருப்பீர்கள்

நான் ஒரு முறை ஒருத்தியின் பெயரைக் கேட்பதற்காக இந்த உத்தியைக் கையாண்டேன். அவளிடம் போய் "நீங்க காவ்யா தானே? " என்றேன். அவளோ "இல்லை நான் ரஞ்சனி" என்றால்... நம் கேள்வி சந்தேகமாக்த்தான் இருக்கும்.. பதில் கிட்டத்தட்ட நமக்கு சாதகமாகவே இருக்கும்...


ஏதேதோ பேசினோம்!
அவ்வப்போது சிரித்தோம்!
பிரியும்போது
கேட்டதனால், கூறினாள்!
அவளது அலுவலக எண்னை!

அதான் ஆரம்பமே கலைகட்டியாச்சே!! பிறகென்ன? தூள் கிளப்ப வேண்டியதுதான்.. அலுவலக எண் என்றால் அவளிடம் கைப் பேசி இல்லை.. ஆக நடந்த இந்த விபத்து தற்சமயமில்லை என்று தெரிகிறது... ஆறேழு வருடங்களுக்கு முன் நடந்த விஷயம்போலத் தெரிகீறது...

மறு நாள்
மிகவும் பயத்துடன்
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;

அதான் அவ்வளவு பேசினீங்கள்ல... பிறகென்ன பயம்?

என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!

ரிசீவரில் படும் மூச்சுக்காற்று வேகமாவது இதயத்தின் அழுத்தத்தினால்... நல்ல வரிகள்

எதிர்முனையில் ஆண்குரல்!

அய்யய்யோ!! (உடனே மனது நினைக்குமே! பாவி ஏமாற்றிவிட்டாளே என்று!)

நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்
ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...

அடுத்து வந்த
இரண்டு தினங்களும்
விடுமுறை!

கொடுமைதான் ஷீ!

அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

உண்மைதான்... நல்ல கற்பனை/

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை;
இவர்களின் உண்ர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது..

மனது இருக்கிறதே! அது ஒரு மாயை... நம் கண்களுக்குத் தெரியாமல் புதைக்கப் பட்ட பிணம்.. எப்போதும் நோண்டிக்கொண்டேதான் இருக்கும். இங்கே இவர்களினுக்கு பதில் இவைகள் என்று போட்டிருக்கலாம்..

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!
வாரத்தின் முதல் நாள்!

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;

மீண்டுமொருமுறை முயற்சி செய்ய எப்போதும் மனம், இந்த மாதிரி விஷ்யங்களுக்குத் தூண்டும்... அவ்வகையில் இந்த நடவடிக்கை...

கூடவே பதற்றத்துடன்...

மீட்டினால்தானே வரும்
வீனையின் ஒலி;
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!

ஆம்! தேவதையின் குரல்!!

வொண்டர்.. நல்ல கற்பனை. இதைவிட நான் என்ன சொல்லவேண்டியிருக்கிறது?

பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!

உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்
எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்திருந்திருக்கும்!

நிஜமான உண்மை... உம் என்ற வார்த்தை காதலர்களுக்கும் கடலை போடுபவர்களுக்கும் கெட்ட வார்த்தை... சிந்தனை உடையவர்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்க்ள்.. ஆனால் காதலில் சிந்தனைச் சிதைவு ஏற்பட்டு விடும்... உங்கள் வரிகளில் அனுபவமே மேலோங்கி நிற்கிறது..

இன்றும்
பல தொலபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!!

உண்மைதான்.... அனுபவம் மாமே அனுபவம்....

நாட்கள் கடந்தன!

வெளியில்
சந்திக்க மட்டும்
மறுத்தாள்!

மீண்டும் மீண்டும்
முயற்ச்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!

முதலில் அப்படித்தான் சொல்லுவார்கள்.... பிறகு அவர்களே கூப்பிடுவார்கள்.. சில பெண்கள் இப்படித்தான்...

மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!
இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!

எங்கோ இருந்து வரிகளை அள்ளி எடுத்த மாதிரி இருக்கிறது... இயற்கை விதியான இது இல்லையென்றால் காதல் ஏது? வாழ்கை ஏது? அருமை///

தேவதை இணங்கினாள்
வெளியில் வர
சம்மதித்தாள்!

கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!

நிச்சயமாக் இது அனுபவம் மாதிரி தெரிகிறது... கவிதைகளில் இம்மாதிரி இருப்பது தான் ஆரோக்கியம். கூட்டம் அதிகமுள்ள இடங்களில்தான் நாம் என்ன பேசுகிறோம் என்று கவனிக்கமாட்டார்கள்... அதுபோக தனியாக அமர்ந்து பேசினால் அது பிரச்சனையும் கூட..

என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுது!

அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன;
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!

அங்கங்கே உங்கள் மலர்களைத் தூவி விடுகிறீர்கள். கால் பட்ட இடங்கள் புனிதங்கள்... அற்புதம்..

அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்ச்சித்தேன்,

என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!

நண்பரே நிச்சயம் அது அவளுக்குத் தெரியும்... அவன் பேசுவது காதல்தான் என்று தெரிந்தும் தெரியாமல் அவனை நோகடிப்பவர்கள் நிறையபேர்.... (எனக்கு அந்த அனுபவம் நடந்து கொண்டிருக்கிறது...) காதல் வார்த்தைகளை தெரியாதது போல எடுத்துக்கொண்டு விளையாடும் பெண்களை கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கீறேன்.. செயல் காதலை வெளிப்படுத்துகிறதா... என்ன சீண்டலா ஷீ?

சமயமும் காலமும்
வாய்க்காதலால் என் காதலை
வெளிப்படவில்லை..

அந்த தவறு எப்போதும் நடக்கக்கூடாதுங்க... நான் புதிதாக ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதை நிச்சயம் படியுங்க... இந்த வரிகளின் ஆழம் உங்கள் கதாநாயகனுக்குப் புரியும்

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!
எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர!

உங்களை வெறும் நண்பனாகவே பார்த்திருக்கிறாள்...

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

ஒரு மெல்லிய
மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

சொல்லீட்டீங்களா? காதல் வலி, பெற்றெடுப்பு.... அருமையான உவமைகள்..

நான் ஏற்கெனவே
நிச்சயமானவள் என்றாள்!
துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!
அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

இருவரிகளில் அர்த்தம் பொதிய எழுதும் பாங்கு நிறையவே உங்களிடம் இருக்கிறது.. அழுத இதயம், துடித்த கண்கள்.. அந்த ரகம்..

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! இதை
மட்டும் ஏனடி மறைத்தாய்?!

பெண்களே இதற்கு பதில் வைத்திருப்பார்கள்.

வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!

மென்மையானவனோ?.. காதலன் என்றுமே மென்மையானவன் தானுங்க.. நிராகரிப்பில் அவர்கள் நிலைகுலைந்து போவது இன்று நேற்றா நடக்கிறது?..இதயம் வலிப்பது தோல்வியுற்றவனுக்கே தெரியும். இந்த மாதிரி பெண்களுக்குத் தெரியாது. (எல்லா பெண்களையும் சொல்லவில்லை..)

நீயும் நிராகரிப்பில் சுகம் கானும்
சாதா ரகப் பெண்தானா?!

இருக்கலாம்.. அவள் ஒருமுறையேனும் உங்களிடம் காதலாய் பேசினாளா?.. அப்படிப்பட்ட வரிகளும் இங்கில்லை. இதில் ஆணின் தவறே அதிகம் உள்ளது. நீங்களாகவே காதல் என்று ஏன் எடுத்துக்கொண்டீர்கள்...?

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல

கடைசி வரிகளில் சின்ன ஏமாற்றம்.. அந்த பெண்ணிடம் காதல் என்ற வார்த்தை வெளிவரவே இல்லை. நாமாகவே நினைத்துக்கொண்டு,, அதை காதல் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் அந்த பெண் என்ன செய்யும் பாவம்?..
என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

இப்படி மறைத்ததற்கே நாம் அர்த்தம் புரிந்து கொண்டிருக்கவேண்டியல்லாமல் காதல் என்று நினைப்பது அர்த்தமற்றதுதானே!



இறுதியாக, வரிகளில் சில நேரங்களீல் அரிய அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. நல்ல கற்பனைக் கதை.. நிஜமாக நடந்ததா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது.. சுட்டி இருக்கிறேன். சரி செய்யவும்... மற்றபடி ஒரு எளிமையான (காட்சிகள் அடங்கிய) கவிதை.. பாராட்டுக்கள்...

அறிஞர்
21-02-2007, 09:38 PM
தேவதை பற்றிய கவிதை அருமை...

நிச்சயம் செய்யப்பட்டவளின் கண்களின் நீங்கள் நண்பர்...
உங்கள் கண்களில் அவள் காதலி...

கனவுக் காதலியாக இருந்துவிட்டு போகட்டும்..

ஷீ-நிசி
22-02-2007, 02:42 AM
இறுதியாக, வரிகளில் சில நேரங்களீல் அரிய அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. நல்ல கற்பனைக் கதை.. நிஜமாக நடந்ததா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது.. சுட்டி இருக்கிறேன். சரி செய்யவும்... மற்றபடி ஒரு எளிமையான (காட்சிகள் அடங்கிய) கவிதை.. பாராட்டுக்கள்...

பல்வேறு காதல் அனுபவங்களில் இதுவும் ஒரு வகை....

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!
எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர!

இதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.... அவன் அவளை காதலித்திட... அவள் அவனை காதல் செய்ய தூண்டிட.....

எழுத்துப்பிழைகள் இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன். இத்தனை பிழைகளா என்று என்னை நானே கடிந்துக்கொண்டேன்....

ஷீ-நிசி
22-02-2007, 02:44 AM
தேவதை பற்றிய கவிதை அருமை...

நிச்சயம் செய்யப்பட்டவளின் கண்களின் நீங்கள் நண்பர்...
உங்கள் கண்களில் அவள் காதலி...

கனவுக் காதலியாக இருந்துவிட்டு போகட்டும்..


கலக்கறீங்க அறிஞரே! கனவுக்காதலி கவிதையின் தலைப்பு போல் உள்ளது
..

ஆதவா
22-02-2007, 02:46 AM
இறுதியாக, வரிகளில் சில நேரங்களீல் அரிய அர்த்தம் பொதிந்து கிடக்கிறது. நல்ல கற்பனைக் கதை.. நிஜமாக நடந்ததா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். சில இடங்களில் எழுத்துப்பிழை இருக்கிறது.. சுட்டி இருக்கிறேன். சரி செய்யவும்... மற்றபடி ஒரு எளிமையான (காட்சிகள் அடங்கிய) கவிதை.. பாராட்டுக்கள்...

எனக்கு ஏற்பட்ட பல்வேறு காதல் அனுபவங்களில் இதுவும் ஒரு வகை....

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!
எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர!

இதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.... நான் அவளை காதலித்திட... அவள் என்னை காதல் செய்ய தூண்டிட.....

எழுத்துப்பிழைகள் இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன். இத்தனை பிழைகளா என்று என்னை நானே கடிந்துக்கொண்டேன்....

காதல் செய்யத் தூண்டியது என்பதே நம்மவர்களின் தப்புக் கணக்குதானே!

மயூ
22-02-2007, 06:27 AM
கடைசியில் ஒரே டச்சிங்கா முடிச்சிட்டீங்களே...!!!

அமரன்
22-02-2007, 11:29 AM
ஒவ்வொருவரும் படித்துச் சுவைக்க வேண்டிய கவிதை. எல்லா வரியுமே சிறப்பு.

lenram80
24-02-2007, 12:02 AM
திட்டிவிட்டால்
பயம் உறுத்தியது!
பரவாயில்லை,
தேவதைதானே!

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன;
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!

நான் மிகவும் லயித்த கவிதை ஷி-நிஷி. அருமை!!!

ஷீ-நிசி
24-02-2007, 01:25 PM
நன்றி மயூரேசன், நக்கீரன் & லெனின்

இளசு
26-02-2007, 06:44 AM
இயல்பான நடையில்
யதார்த்தமான அனுபவத்தை
இனிமையான வரிகளில்
அழகாய்ச் சொன்ன கவிதை..

தவிக்கவிட்டு சுகம் காணுகிறார்களோ என நிராகரிக்கப்பட்ட நெஞ்சங்கள்
நினைப்பது தவிர்க்க முடியாதது.

காலம் தாழ்த்தியாவது சொல்லி, 'விடை' பெற்றுக்கொள்வது
சொல்லாமலே குமைந்து விலகுவதைவிட சாலச்சிறந்தது.

பாராட்டுகள் ஷீ-நிசி.

ஆதவாவின் விமர்சனம் அழகு, ஆழம்.
தற்போது அவர் வாழ்விலும் இப்படி ஒன்று நிகழ்கிறதாமே?
(அப்போ இன்னொரு கவிதை நிச்சயம் உண்டுதானே ஆதவா?)

ஷீ-நிசி
26-02-2007, 06:57 AM
இயல்பான நடையில்
யதார்த்தமான அனுபவத்தை
இனிமையான வரிகளில்
அழகாய்ச் சொன்ன கவிதை..

தவிக்கவிட்டு சுகம் காணுகிறார்களோ என நிராகரிக்கப்பட்ட நெஞ்சங்கள்
நினைப்பது தவிர்க்க முடியாதது.

காலம் தாழ்த்தியாவது சொல்லி, 'விடை' பெற்றுக்கொள்வது
சொல்லாமலே குமைந்து விலகுவதைவிட சாலச்சிறந்தது.

பாராட்டுகள் ஷீ-நிசி.

ஆதவாவின் விமர்சனம் அழகு, ஆழம்.
தற்போது அவர் வாழ்விலும் இப்படி ஒன்று நிகழ்கிறதாமே?
(அப்போ இன்னொரு கவிதை நிச்சயம் உண்டுதானே ஆதவா?)

மிக்க நன்றி இளசு.... அருமையாய் சொல்லியுள்ளீர்கள்....

poo
28-02-2007, 07:59 AM
அந்த இறுதிவரியில் அவள்மீது பழி போடாமலிருந்தாள் அவன் இறந்திருப்பான்... இப்படியே ஒருதலைக் காதல்கள் பலவும் முடிவெடுத்தால் நன்றே...
தாழ்வுநிலை கொள்ளல் வேண்டாம் என்ற மொழி இம்மாதிரியான காதலில் வேதம்!!

எக்கணமும் அவள் இலக்கணம்மீறி,, (காதலுக்காய் பொதுவான இலக்கணமொன்று வரையறுக்க இயலுமோ...?) காதலிப்பதாய் சொல்லாத காரணத்தால் ஒருதலைதானே?!

ஆதவனின் விரிவான விமர்சனம் கண்டேன், இன்னமும் படிக்கவில்லை.. முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு பிறகு படிப்பதுதான் நல்லது என மனம் நினைக்கிறது.. இல்லையேல் நம் ஓட்டங்களும் அதுபோன்ற விமர்சனக் கருத்தினூடே பயணிக்க ஆரம்பித்துவிடும்!!

வாழ்த்துக்கள் ஷீ-நிசி. விரிவான கதையை அழகான கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.. நீளத்தை மறக்கடித்து ஆழத்திற்கு அழைத்துச் செல்வதே கவிஞனின் வெற்றி.. அவ்வகையில் மாபெரும் வெற்றியாளன் நீவிர்!!

poo
28-02-2007, 08:04 AM
நிஜங்களின் பரிமாற்றத்தின் அடுத்த பரிமாணம் காதலென நினைத்து ஏமாற்றிக் கொள்ளும் இளைய சமூகம் இன்னமும் இருக்கிறது என்செய்ய...!

ஷீ-நிசி
28-02-2007, 08:05 AM
அந்த இறுதிவரியில் அவள்மீது பழி போடாமலிருந்தாள் அவன் இறந்திருப்பான்... இப்படியே ஒருதலைக் காதல்கள் பலவும் முடிவெடுத்தால் நன்றே...
தாழ்வுநிலை கொள்ளல் வேண்டாம் என்ற மொழி இம்மாதிரியான காதலில் வேதம்!!

எக்கணமும் அவள் இலக்கணம்மீறி,, (காதலுக்காய் பொதுவான இலக்கணமொன்று வரையறுக்க இயலுமோ...?) காதலிப்பதாய் சொல்லாத காரணத்தால் ஒருதலைதானே?!

ஆதவனின் விரிவான விமர்சனம் கண்டேன், இன்னமும் படிக்கவில்லை.. முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு பிறகு படிப்பதுதான் நல்லது என மனம் நினைக்கிறது.. இல்லையேல் நம் ஓட்டங்களும் அதுபோன்ற விமர்சனக் கருத்தினூடே பயணிக்க ஆரம்பித்துவிடும்!!

வாழ்த்துக்கள் ஷீ-நிசி. விரிவான கதையை அழகான கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.. நீளத்தை மறக்கடித்து ஆழத்திற்கு அழைத்துச் செல்வதே கவிஞனின் வெற்றி.. அவ்வகையில் மாபெரும் வெற்றியாளன் நீவிர்!!

இவ்வளவு அழகாய் பின்னூட்டமிடுகிறீர்கள்... உங்கள் பின்னூட்டங்களை நான் அதிகம் கண்டதில்லை.. தொடர்ந்து கவிதை பக்கம் வந்திடுங்கள் தோழரே!

puppy
29-08-2007, 05:00 PM
ரயில் வண்டி தொடரை போல நீளமான கவிதை......அவளோ பதிவு செய்து ஏறியவள்...இவனோ பார்த்தவுடன் பதிவு செய்ய துடிக்கிறவன்...நான் நினைப்பதே அவளும் நினைக்க வேண்டும் என்கிற காதல் வயது....

அருமையான கவிதை......பாராட்டுக்கள்........

அன்புடன்
பப்பி

puppy
29-08-2007, 05:08 PM
நீயும் நிராகரிப்பில் சுகம் கானும்
சாதா ரகப் பெண்தானா?!

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!


இந்த* ப*குதி ம*ட்டூமே என*க்கு ச*ற்று வருத்த*மே......"Love should be and always unconditional"

மனம் வலித்தது....
இருந்தும் அவள்
என் க*ண்க*ளுக்கு எப்போதும்
தேவ*தையே−ன்னு முடிச்சு இருக்க*லாம்.....

என்னுடைய* ஆசை அதுவே....த*வ*று இருப்பின் ம*ன்னிக்க*வும்

ஷீ-நிசி
09-09-2007, 01:46 AM
இந்த* ப*குதி ம*ட்டூமே என*க்கு ச*ற்று வருத்த*மே......"Love should be and always unconditional"

மனம் வலித்தது....
இருந்தும் அவள்
என் க*ண்க*ளுக்கு எப்போதும்
தேவ*தையே−ன்னு முடிச்சு இருக்க*லாம்.....

என்னுடைய* ஆசை அதுவே....த*வ*று இருப்பின் ம*ன்னிக்க*வும்

தவறாக எப்பொழுதுமே நினைக்கமாட்டேன்.. எதிர் கருத்துக்களை தான் அதிகமாய் விரும்புபவன். காரணம் அவைகள் தான் என்னை இன்னும் செதுக்கும்.


நான் ஏற்கெனவே
நிச்சயமானவள் என்றாள்!

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! இதை
மட்டும் ஏனடி மறைத்தாய்?!


காதலை வெளிப்படுத்திய தருணத்தில், என்னால் முடியாது, எனக்கு நிச்சயமாகிடுச்சி அப்படின்னு சொல்வாங்க, அதுவரைக்கும் அந்த காதலனோடு பேசியும், பல விஷயங்களை பரிமாறியவள், இந்த விஷயத்தையும் பரிமாறியிருக்கலாம் அல்லவா... அப்படியான பெண்களை வைத்துதான் எழுதப்பட்ட கவிதை..

நன்றி பப்பி அவர்களே! தொடர்ந்து விமர்சனமிடுங்கள்!

ஓவியன்
09-09-2007, 02:04 AM
ஆகா ஷீ!
உங்க தேவதை நீளமாக இருந்தாலும் ஜொலிக்கிறாங்க − பாராட்டுக்கள்!.

ஆதவன் இப்படி ஆழமாக விமர்சித்துள்ளாரே.........
அசத்தல் ஆதவா..........! :)

ஷீ-நிசி
09-09-2007, 02:16 AM
ஆமாம்.... ஒவியன்... ஆதவா மிக நீளமாக விமர்சனம் செய்வார் முன்பெல்லாம்.. அதெல்லாம் போன வருஷம்....

jpl
09-09-2007, 02:33 AM
ஒரு மெல்லிய
மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

நல்ல வளமான கற்பனை ஷீ−நிசி..

ஷீ-நிசி
09-09-2007, 03:09 AM
நன்றி சகோ!

சிவா.ஜி
09-09-2007, 04:50 AM
மிக அழகாக உணர்வுகளை தூவி எழுதப்பட்ட கவிதை ஷீ−நிசி. காதலைப்பெற்றெடுத்த தருணம் மிகப் பிரமாதமான வரிகள்.துடித்த இதயம் அழுதது,அழுத கண்கள் துடித்தது...அசத்தல்...வரிக்கு வரி பின்னூட்டமிட்ட ஆதவாவின் விமர்சனம்,மற்றும்,இளசு,பூ,பப்பி அனைவரின் பின்னூட்டமும் உறுதி செய்கிறது இந்த கவிதையின் சிறப்பை.வாழ்த்துக்கள் ஷீ.

பூமகள்
09-09-2007, 06:51 AM
ஆகா... என்னே கொடுத்து வைத்தவள் இந்த தேவதை...
அவளுக்காய் இத்தனை வரிகளா???? எதைக் குறிப்பிடுவதென்றே தெரியவில்லை.. என் அருமைத் தம்பி ஆதவா அழகான பின்னூட்டம் இட்டு என்னை மகிழ்வித்து விட்டதால் நான் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..!!
அசத்திவிட்டீர்கள் ஷீ-நிசி...!


இதயத்தை அமைதிபடுத்தினேன்.....
உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!

அழகு வரிகள்... நிதர்சனம்... நெஞ்சைத்தொட்டது இந்த வரிகள்..!
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!

தொடர்ந்து கலக்குங்கண்ணோவ்.....!!!

ஷீ-நிசி
09-09-2007, 07:22 AM
நன்றி பூமகள்

அக்னி
10-09-2007, 09:43 PM
ஒரு புள்ளியைச் சுற்றிய கோலமாய்,
ஷீ-நிசியின் கவிதை...
அந்தக் கோலத்தைச் சுற்றி அலங்கரிக்கும் பூக்களாய்,
அழகிய பின்னூட்டங்கள்...

தெறித்த மின்னல்,
நொடிப் பிரகாசமாய்,
ஒளிர்ந்து மறைந்தது...
உன்னால் வந்த,
மனத்தாக்கமும்..,
மறைந்தும் மங்கலான,
பிரகாச மின்னல்
போன்று...

பாராட்டுக்கள் ஷீ-நிசி...

ஷீ-நிசி
11-09-2007, 07:45 AM
நன்றி அக்னி

aren
12-09-2007, 11:29 AM
அருமை ஷீ. ஆயுதஎழுத்தில் இந்த மாதிரி நிச்சயமானப் பெண்னை காதலிப்பதுமாதிரி இருக்கும்.

கவிதை வரிகள் பிரமாதம். பாராட்டுக்கள்.

பென்ஸ்
12-09-2007, 01:17 PM
அருமையான காதல் காவியம்...
தன் காதல் துவங்கிய முதல் துவன்டதுவரை அழகாக காட்டியுள்ளீர்கள்...
எத்துனை அழகான வரிகள்...
ரசனையான மனவேண்டும் உங்களை போல எனக்கும்...
வாழ்த்துகள் ஷீ...

மின்சார தேவதை
கண்ணுக்கு தெரியாமல் வந்து
தொட்டதும் ஒரு நொடி உலுக்கி போனவள்...

ஆனாலும் நாம் எப்போதும் பெண்ணை சாடியே பழகி போனோம்...
நம் தோல்விகளுக்கு அடுத்தவர்களை குறை கூறியே பழகி போனோம்...
ஷீ, உங்கள் நாயகனும் அப்படி ஒரு சராசரி மனிதனா..???

இன்று எமோசினல் உறவுகள் மிகுந்த அளவில் பெருகியுள்ளன... வீடு விட்டு தூர தேசங்களில் செல்லும் பெண்கள் குறிப்பாக அந்த இடத்தில் தன்னை எமோசினலாக உதவி செய்ய ஆண்களை நாடுவது இன்று அதிகமாகி வருகிறது... பலர் அதை நட்பாகவும், சிலர் சகோதர உறவாகவும் மற்றும் சிலர் எல்லை மீறி பிரச்சினைகளுக்குள்ளும் விழுகின்றனர். இதே போன்ற பெண்களிடம் , நட்பை மட்டும் கொடுக்க வருபவர்களிடம் காதலை எதிர்பார்த்து தன்னை தானே ஏமாற்றும் ஆண்கள், இவர்களை பழிப்பது நியாயமா... (இது குறித்து ஒரு உளயியல் கட்டுரை எழுத ஆசை உண்டு, நேரம் வரும்போது செய்கிறேன்)

நம் கதையின் நாயகியிடம் வருவோம்..
நம்மாளே அவளிடம் போவாரம்
பழகுவாராம்...
சிரிக்க வைப்பாராம்
பகிர்ந்து கொள்ளுவாராம்
தன் காதலை ஏற்று கொள்ளவில்லை என்று பழிப்பாராம்....

காதலை ஏன் சொல்லவில்லை, நிராகரிக்க படும் என்று தானே, அதே போல் தானே அவளும் தன்னக்கு கிடைக்கு கவணிப்பு குறைந்து விடாதபடி தன் தனி வாழ்க்கையை மறைத்திருக்கலாம்... இருவரும் சுயநலவாதிகள்தாம்... ஆனால் நம்ம ஹீரோ தன்னை மட்டும் நியாயபடுத்துவது ஒரு சிறிய உறுத்துதல் எனக்கு...

ஒரு தனிமனிதனின் நிலையை அவன் இடத்தில் இருந்து சொல்லுவது அழ்கு.. பாராட்டுகிறேன், ஆனால் அடுத்த பக்கத்தை பார்க்காமல் இன்னும் எல்லோரும் சென்று கொண்டிருக்கிறோமோ என்பது என் கருத்து....

ஷீ-நிசி
12-09-2007, 02:51 PM
நன்றி! ஆரென் .. ஆயுத எழுத்து படம் பார்க்கவேண்டும் :)

பென்ஸ் மிக தெளிவான அழகான விளக்கம் + விமர்சனம்.. நாயகியின் பார்வையில் இந்தக் கவிதை எப்படி இருக்கும் என்று எழுத முயற்சிக்கிறேன்...

நன்றி பென்ஸ் .. .