PDA

View Full Version : பங்குச் சந்தை: நல்ல நிறுவனத்தின் குணங்கள்



இராசகுமாரன்
29-01-2007, 06:54 AM
நண்பர்களே..!

பங்கு வர்த்தகம் பற்றி வலைப்பூவில் கிடைத்த இந்த அரிய பதிப்புகளை உங்கள் பார்வைக்கு இங்கு மறுபதிப்பு செய்கிறேன். இவை உங்களுக்கு உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - -

பங்குசந்தை: நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 1

பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளையே வாங்க வேண்டும் என்ற கருத்தை என் முந்தையப் பலப் பதிவுகளில் முன்வைத்துள்ளேன். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?

நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?

"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,
Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை
போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.

அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "பல்ராம்பூர் சினி" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?

சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் என்று என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன். அது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை
தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான். பஜாஜ் நிறுவனத்தைப் பற்றி உதாரணமாக கூறியிருந்தேன். பஜாஜ் பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தி, அந்த
மாடல் அனைவரையும் கவர்ந்து விற்பனைப் பெருகிய பொழுது, பஜாஜ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்று கூறியிருந்தேன். ஏனெனில் அதிக அளவில் அந்த பைக்குகள் விற்பதால் பஜாஜின் உற்பத்திப் பெருகி,
லாபமும் அதிகரித்து, பங்குகளின் விலையையும் எகிறச் செய்யும். அந்தக் கதையின் இன்னெரு பக்கமும் உள்ளது.

ஹிந்துஸ்தான் லீவர் என்ற நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடையில் கிடைக்கும் சோப்பு, டூத்பேஸ்ட் என்று அனைத்துப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் தான்
தயாரிக்கப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் ரூ25,000 பங்குகளில் முதலீடு செய்வதென முடிவு செய்தார். பலவாறு யோசித்து ஹிந்துஸ்தான் லீவரே சிறந்த நிறுவனம் என முடிவு செய்து, அந்தப் பங்குகளில் முதலீடு
செய்தார். அவர் முதலீடு செய்த பொழுது பங்குகளின் விலை 250 ரூபாய். இந்த வருடம், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு விலைச் சரிந்து பங்குகளின் விலை 125ரூபாயாகி விட்டது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளில் உபயோகிக்கப்படும் பலப் பொருட்கள் இந் நிறுவனத்திற்குச் சொந்தமானவை தான். பின் ஏன் பங்குகள் சரிவடைந்தன. அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்திருந்தால்
தெரிந்திருக்கும்.

பஜாஜ் கதைக்கு வருவோம். பல்சர் அறிமுகம் செய்தாகி விட்டது. பல்சரும் பெருகி விட்டது. பஜாஜ் பங்குகள் விலையும் எகிறி விட்டது. இன்றும் கூட பல்சர் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டு தானே இருக்கிறது.
பாஜாஜின் பங்குகளை தற்பொழுது வாங்கலாமா? இங்கு தான், நம்முடைய விற்பனை ஆய்வை, ஆண்டறிக்கையுடன் பொருத்திப் பார்க்கும் ஆய்வு
தேவைப்படுகிறது. பஜாஜின் மொத்த உற்பத்தியில் பல்சரின் உற்பத்திச் சதவீதம் என்ன ? பிற மாடல்களின் உற்பத்திச் சதவீதம் என்ன ? சென்ற ஆண்டு பல்சர் எந்தளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு
எந்தளவுக்குச் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா ? பைக் சந்தையில் பஜாஜின் பங்கு எவ்வளவு (Market Share). Market Share அதிகரித்துள்ளதா ? குறைந்துள்ளதா ? போட்டி நிறுவனங்களுடன்
ஒப்பிடும் பொழுது பஜாஜின் விற்பனை எப்படியுள்ளது ? இப்படியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வின் முடிவு நமக்கு எதைச் சொல்லும் ?

பஜாஜ் நிறுவனத்தின் உற்பத்தி, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்றால் பஜாஜ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தானே பொருள். ஒரு நிறுவனம் வளரும் பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளும் உயரும். வளர்ச்சி குறையும் பொழுது அதற்கேற்றாற்ப் போல் பங்குகள் விலையும் சரியும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது பங்குகளின் விலையும் அதை பிரதிபலிக்கும். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் சரிந்தது இந்த விதிகளின் படி தான்.
போட்டி நிறுவனங்கள் பெருகி விட்டதால் அந்த நிறுவனத்தின் பொருட்கள், கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் சந்தையில் குறைவாகவே விற்பனையாகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் அந் நிறுவனத்தின் விற்பனை மிக மோசமாகவே இருந்தது. அதன் எதிரொலி சந்தையிலும் இருக்கத் தானே செய்யும். நல்ல வளர்ச்சியடைந்த பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட, வளரும் நிறுவனங்களில்
முதலீடு செய்வதே சிறந்தது. இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனமான பார்தி நிறுவனப் பங்குகள் தான் அதிக லாபமடைந்தன. ஏன் இந்த வளர்ச்சி ? "நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே ஏர்டெல் கிடைத்தப் பொழுதே" உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ஏர்டெல் வளருகிறது. இந்த எண்ணம் தோன்றியவுடன் அந்தப் பங்குகளையும் வாங்கியிருந்தால், ஏர்டெல்லுடன் நாமும் வளர்ந்திருப்போம்.

கடந்த ஒரு வருடத்தில் பார்திப் பங்குகள் சுமார் 100% வளர்ச்சிப் பெற்றிருந்தன. நீங்கள் 2003 டிசம்பரில் ரூ10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 20,000 ரூபாய். அது போலவே வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனம் எந்தளவுக்கு வளரும் என்பது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடும் பொழுதே, நமக்குப் புரியும். மக்கள் தொகையில் ஏர்டெல்லுக்கு மிக அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் தான் வளர்ச்சியில் தேக்கமடைந்த பெரிய நிறுவனப் பங்குகள் அதிக லாபம் தருவதில்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தான் லாபம் அதிகம் தரும். 2004ம் ஆண்டு கூட நடுத்தர நிறுவனப் பங்குகளான
மிட்கேப் (Midcap) பங்குகள் தான் அதிக லாபம் தந்தன.

அடுத்து வரும் பதிவுகளிலும் நிறுவனங்களை எப்படி ஆய்வு செய்வது என்பதைத் தொடர்ந்துப் பார்ப்போம்.


படைப்பாளி: தமிழ் சசி, நியூ ஜெர்சி, அமெரிக்கா.
நன்றி: தமிழ்ஸ்டாக்.ப்ளாக்ஸ்பாட்.காம்

இராசகுமாரன்
29-01-2007, 07:03 AM
பங்குசந்தை: நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2

ஒரு நிறுவனத்தின் பங்கு எப்பொழுது உயரும் ? அந்த நிறுவனம் வளர்ச்சியடைந்தால் தான் அதன் பங்குகளும் உயர்வடையும் ? வளர்ச்சியின் அளவுகோள்கள் என்ன ? உற்பத்தி, விற்பனை, வருமானம், நிகர லாபம் இவையெல்லாம் தான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும். நாம் நம் பணத்தை முதலீடு செய்யும் பொழுது நம் பணம் பெருக வேண்டும் என்ற ஆசையில் தான் முதலீடு செய்கிறோம். ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் வளர்ச்சியடைந்தால் மட்டுமே நம் பணம் பெருக முடியும்.

ஒரு நிறுவனத்தின் தற்கால லாபத்தை மட்டுமே கொண்டு முதலீடு செய்யக் கூடாது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது, வரும் ஆண்டில் எந்தளவுக்கு உயரும் என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டும். கடந்த ஆண்டு 10% வளர்ந்த ஒரு நிறுவனம், இந்த ஆண்டு 12% மாக உயர்ந்தால் தான் அது வளர்ச்சி. ஒரு நிறுவனம் உயர்ந்தால் தான் நாம் வாங்கும் பங்குகளும் உயரும். அந்த உயர்வும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றாற் போலவே இருக்கும். 10% மாக இருந்த வளர்ச்சி அதே அளவுக்கு இருந்தால், நாம் வாங்கும் பங்குகளும் அதே விலையில் தான் இருக்கும். லாபத்தில் சரிவு இருந்தால், நம்முடைய சேமிப்பின் மதிப்பும் கரைந்து போய் விடும்.

எனவே நாம் பங்குகளை வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி கணித்தப் பிறகே வாங்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு இருக்கக் கூடிய வர்த்தக வாய்ப்பு, அந்தத் துறைக்கு இருக்க கூடிய வாய்ப்புகள், போட்டி நிறுவனங்கள் இதைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும்.

வளரும் நிறுவனங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.


குறைவாக வளரும் நிறுவனங்கள்
சராசரியாக வளரும் நிறுவனங்கள்
வேகமாக வளரும் நிறுவனங்கள்

குறைவாக வளரும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்காது. தற்போதையச் சூழலில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தை உதாரணமாகச் சொல்லலாம். FMCG நிறுவனங்கள் என்று சொல்லப்படும், இத்தகைய நிறுவனங்கள் ஒரு காலத்தில் வேகமாக வளர்ந்தன. கோடிக்கணக்கான இல்லங்களை இவர்களின் தயாரிப்புகள் எட்டியது. ஆனால் தற்பொழுது உள்ள சுழலில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. புதியதாக மக்களை கவரும் எந்தப் பொருட்களையும் தயாரிக்காமல், இருக்கின்ற சந்தையை தக்க வைத்துக் கொள்ளவே இந்த நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கிறது. தற்போதைய சூழலில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பணம் பெருகாது.

சராசரியாக வளரும் நிறுவனங்கள் என்று இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களை சொல்லலாம். ஆட்டோ நிறுவனங்களை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஹீரோ ஹோண்டா, பஜாஜ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேகமாக வளரும் நிறுவனங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10% - 15% லாபத்தை இந்தப் பங்குகள் கொடுக்கும். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது ஓரளவிற்கு பாதுகாப்பானது என்று சொல்லாம். பெரும்பாலும் பெரிய நிறுவனங்களான ரிலயன்ஸ் போன்றவை இனி அதிக வளர்ச்சி பெறக்கூடியவை அல்ல. ஆனால் சராசரியாக 20% அளவுக்கு லாபம் தரக்கூடியவை.

வேகமாக வளரும் நிறுவனங்களாக மென்பொருள் நிறுவனங்களைச் சொல்லலாம். பல நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் 50% லாபம் தந்தது. விப்ரோ 30% கொடுத்தது. Outsourcing மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகள், மென்பொருள் நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கின்றன. இதைத் தவிர நடுத்தரமான நிறுவனங்கள் வேகமாக வளரக் கூடியவை. மிட்கேப் என்று சொல்லப்படும் இந்த நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத் தளங்களைப் பெருக்கிக் கொண்டு வேகமாக வளரக் கூடியவை. இத்தகைய நிறுவனங்களில் மிக அதிக லாபம் கிடைக்கும். ஆனால் தங்களுடைய வர்த்தகத் தளங்களை அதிகப்படுத்த இந்த நிறுவனங்கள் முயற்சிக்கும் பொழுது சில நேரங்களில் சறுக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சறுக்கும் பொழுது பங்குகளும் கடுமையாகச் சரியும். எனவே வேகமாக வளர்ந்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகளையும், சாதகமான மற்றும் பாதகமான சூழல்களையும் ஆராய்ந்தப் பிறகே முதலிடு செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம் எப்படி ஆராய்வது ? ஆண்டறிக்கையை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தெரியவரும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு காலாண்டிலும் அந்த காலாண்டிற்கான அறிக்கையைத் தாக்கல் செய்யும். அந்த அறிக்கைகளைக் கொண்டு எந்தளவுக்கு ஒரு நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அறிக்கைகளை எப்படி ஆராய்வது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

இராசகுமாரன்
29-01-2007, 07:05 AM
நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது, நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, நாம் அந்தப் பங்குக்கு கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை (Fundamental Analysis) என்று சொல்வார்கள்.

பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள். அடிப்படை ஆய்வு(Fundamental Analysis), டெக்னிக்கல் ஆய்வு (Technical Analysis). இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, டிசைன் நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.

இதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.

நாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.

பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.

உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.

நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள்சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.

இந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம். பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/ERatio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.

ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).

ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம்.

P/E = Market Price / EPS

Market Price = பங்குகளின் சந்தை விலை
EPS = ஒரு பங்குடைய லாபம்

EPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் - Earnings per share.

EPS = Net Profit / No. of outstanding shares

அதாவது நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வருவது தான் EPS

ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்

EPS = 35,000 / 10,000 = 3.5

இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.

சரி...இப்பொழுது P/E க்கு வருவோம்.

P/E = Market Price / EPS

பங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்
ஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5

P/E = 35/3.5 = 10

இந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது ?

P/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.

மேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.

நாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.

மொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)

நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).

இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.

இதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் ?
P/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்) ?

1 என்று இருக்கும் பங்குகளில் தானே ? பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.

அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.

நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிகவளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.

புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் - ICICI உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் - வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? (Offcourse ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். ICICI வங்கியின் வளர்ச்சி 20 - 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.

ஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா ? அடுத்தப் பதிவில் P/E பற்றி பார்ப்போம்.

மனோஜ்
29-01-2007, 07:38 AM
பங்கு சந்தையை அறிந்து கொள்ள அறுமையான தகவல்
பங்குசந்தை என்றால் குழப்பம் என்று இருந்தேன் நல்ல விளக்கம்
நன்றி நிர்வாகி அவர்களே..

அறிஞர்
31-01-2007, 03:32 PM
எங்களை போன்ற புதியவர்களுக்கு இந்த பாடங்கள்.. நன்கு உதவும்....

கிடைக்கும் தகவல்களை தொடர்ந்து கொடுங்கள்..

ஆதவா
31-01-2007, 05:24 PM
குறிப்பு எடுத்துக்கொள்கிறேன்.......... நிச்சயம் எனக்கு உதவும்..

pradeepkt
01-02-2007, 05:01 AM
நல்ல தகவல்கள் இராசகுமாரன். நன்றி

அரசன்
03-04-2007, 07:15 PM
பங்குச் சந்தை எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. தற்போது ஓரளவு தேறிவிட்டேன். மிக்க நன்றி.

இளசு
04-04-2007, 10:35 PM
தலைவருக்கு

நன்றி இந்த முக்கியமான பதிவுகளுக்கு

இதற்கு முந்தைய, பிந்திய பதிவுகளும் கிடைத்தால் கொடுங்கள்..


தமிழ் இதழ்களில் இப்பணியை நாணயம் விகடன் நல்லபடி செய்வதாக
என் எண்ணம்.. நம் நண்பர்களின் கருத்தறிய ஆவல்..


மேலும் அண்ணல் கரிகாலனின் கூடுதல் பங்களிப்பும் இத்திரிக்கு
அவசியம் தேவை!

மதிவாணன்
11-04-2007, 06:18 AM
மிக மிக பயனுள்ள பதிவுகள்..

தற்காலத்தில் பணம் செய்வது மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டதால் பல வழிகளிலும் முயற்சி செய்வது அவசியமாகிவிட்டது. அதற்கு தங்களின் பதிப்புக்கள் துணை செய்யும் என்பதில் சந்தேகமில்லை..

கலைநேசன்
11-04-2007, 05:27 PM
உண்மையிலேயே பங்குச்சந்தை,பங்கு என்பதெல்லாம் இன்றுவரை குழப்பமாகத்தான் இருந்தது.அதை எளிமையாக புரியவைத்ததாற்கு நன்றிகள்.என்னும் பல விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்

srimariselvam
12-04-2007, 04:48 PM
மிகவும் சிறப்பான பதிவு.
பங்குச்சந்தையில் முதலில் நுழைபவர்களுக்கு பலனுள்ள தகவல்கள் தொகுப்பு. அடுத்தடுத்த பாகங்களையும் இங்கேயே தாருங்கள் தலைவா!

hemalathaa
24-09-2007, 08:38 PM
அற்புதமானப்பாடம். மிகத் தெளிவாக உள்ளது. ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர் பார்க்கிறேன்.

அறிஞர்
24-09-2007, 08:43 PM
அற்புதமானப்பாடம். மிகத் தெளிவாக உள்ளது. ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர் பார்க்கிறேன்.

அன்பரே.. தங்களை பற்றி.. அறிமுகப்பகுதியில் கொடுக்கலாமே..

என்னவன் விஜய்
24-09-2007, 08:55 PM
தரமான தகவல்கள், பங்குச்சந்தை பக்கம் போய்பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது......
நன்றி

நேசம்
30-09-2007, 08:30 AM
உங்கள் கட்டுரை எனக்கு பங்கு சந்தையை பற்றி அடிப்படை அறிவையை தந்தது. நண்பரே நாம் முழுமையான அறிவு பங்கு சந்தையை பற்றி இல்லாமல் இருக்கும் பொது நாம் நேரடியாக வாங்குமால் ஏதாவது நிறுவனத்தின் மூலம் வாங்குவது சிறந்ததாக இருக்கும் இல்லையா?

saguni
16-12-2007, 07:41 AM
அன்பு நண்பர் ஜெகா தமிழில் தட்டச்சு செய்ய பழகிக்கொள்ளுங்கள். நம் முல்லை மன்றத்தின் தமிழ் எழுத்துரு உதவி பகுதியிலும் மற்ற சுட்டிகளிலும் உலாவி அறிந்து கொள்ளுங்கள். ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காமல் கேட்கவும் உதவ ஆவலாய் இருக்கிறோம்

lenram80
18-12-2008, 12:58 PM
நல்ல தகவல்கள் இராசகுமாரன். வாழ்த்துக்கள். மீதியையும் எதிர்ப்பார்க்கிறோம்.

அமீனுதீன்
19-12-2009, 05:57 PM
விழுகிறதா துபாய்....?

வடிவேல் காமெடியில் வருவது போல இன்றைய நிலையில் துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து என எங்கெங்கும் வியாபித்திருப்பது துபாயின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் தான். சமீபத்தி்ல் துபாயில் புயலைக் கிளப்பிய பொருளாதாரப் பிரச்சினையை துபாய் கடன் குமிழ் (Dubai Debt Bubble) என வர்ணிக்கின்றன மீடியாக்கள்.


சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா ஆரம்பித்து வைத்த பொருளாதார வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்பார்த்ததைப் போல இன்றைக்கு துபாயிலும் ஒரு பெரும் பிரச்சினையின் வால் தென்பட்டிருக்கிறது. கடன் பிரச்சினை.. அங்கே லேமென் பிரதர்ஸ் வங்கி என்றால் இங்கே துபாய் வேர்ல்டு நிறுவனம். துபாய் முழுக்க அலுவலகக் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், டூரிஸ்டுகளைக் குறி வைக்கும் பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட வளாகங்களைக் கட்டித் தள்ளியது அந்நிறுவனம். ஏன்? துபாயின் புதிய அடையாளமாகத் தென்படும் கடலில் மிதக்கும் பனைமரத்தீவையும் கட்டியது இந்த நிறுவனம் தான். அதற்குத்தான் இந்தக் கடன் பிரச்சினை எழுந்திருக்கிறது.

என்னதான் நடந்தது அப்படி?

கடந்த நவம்பர் 26ம் தேதி, துபாய் வேர்ல்டு நிறுவனம் தனக்கு 59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5900 கோடி ரூபாய்) கடன் இருப்பதாகவும், தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அதைத் திருப்பிக் கட்ட அடுத்த வருடம் மே மாதம் வரை கெடு கேட்டது. பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிக பட்சமாக கடன் வழங்கியுள்ளது. துபாய் வேர்ல்டு நிறுவனத்திற்கு மட்டும் சுமார் 9 பில்லியன் (900 கோடி) ரூபாய் அளவு உள்ளது கடன்.

மறுநாளே உலகம் முழுக்க அனைத்து பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை மட்டும் 390 புள்ளிகளை இழந்தது. இத்தனைக்கும் அன்றுதான் இந்திய, மத்திய புள்ளியியல் நிறுவனம், இந்தியாவின் ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 புள்ளிகள் வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக அறிவித்தது. துபாய் பிரச்சினை கிளப்பப் படாமல் இருந்திருந்தால் அன்றைய வர்த்தகம் ஒரு நல்ல வளச்சியைக் கண்டிருக்கும்.

ஆனால் இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். பார்க்கலாம். ஆனால் துபாயின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இந்தியர்கள், அங்கே வேலை செய்பவர்கள். இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில் ஒய்2கே பிரச்சினை முடிந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்திய கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் திருப்பி அனுப்பப் பட்டது போல இவர்களும் திருப்பி அனுப்பப் படலாம்.

துபாயின் மொத்த மக்கள் தொகை 2.26 மில்லியன் (அதாவது சுமார் 22இலட்சத்து அறுபதாயிரம் பேர்) அதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்து இலட்சம். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 42 சதவீதம் ஆகும். கிட்டத்தட்ட பாதி. அப்புறம் இது இந்தியாவை பாதிக்காமல் என்ன செய்யும்? நேரடியாக இல்லாவிட்டால் மறைமுகமாகவாவது பாதிக்கும் அல்லவா?.

மறைமுகமாக என்றால் எப்படி?

துபாய் தொழிலாளர்கள் வேலையிழந்து இந்தியாவிற்கு திரும்பி வந்தால் இங்கே அவர்களுக்கு வேலை? இங்கே அவர்களுக்கு வேலை கிடைத்தால் இங்கிருப்பவர்களுக்கு போட்டி வருமல்லவா? ஆக... போட்டி அதிகமாகும் போது தொழில் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் ஆட்களை எடுக்க முயற்சி செய்யும். ஊதியம் குறைவாகக் கிடைக்கும் பட்சத்தில் செலவும் குறைவாகத்தான் செய்ய முடியும். பணப்புழக்கமும், மக்களின் வாங்கும் சக்தியும் குறையும்.

வாங்க முடியாத பொருட்கள் விற்பனையாகாமல் இருந்தால் பொருட்களின் உற்பத்தி குறையும், உற்பத்தி குறைந்தால் உற்பத்தித் துறையில் வேலையிழப்பு நடக்கும். உற்பத்தித் துறையைத் தொடர்ந்து சேவைத்துறை. இப்படியே செயின் இழுத்து, கேயாஸ் தியரி ரேஞ்சுக்கு யோசித்துப் பாருங்கள். என்ன நடக்கும்? மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் செலவு செய்யப் படாமல் வங்கிகளில் முடங்கும். பணப் புழக்கம் இல்லாவிட்டால் இந்தியப் பொருளாதாரம் தடுமாறும். (இதெல்லாம் நடக்கும் என்று சொல்லவில்லை ஐயா, பயப் படாதீர்கள், நடக்க வாய்ப்புண்டு என்றுதான் சொல்கிறேன். அப்படி நடக்கும் பட்சத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.)

உலகப் பொருளாதாரத்தின் தாக்கம் துபாயின் சுற்றுலாத்துறையை பலமாகவே பாதித்துள்ளது. கையில் காசு இருந்தால் தானே அய்யா ஜாலியாக ஊர் சுற்ற முடியும்? கையில் காசு இல்லை, கிரெடிட் கார்டு தேய்க்கவும் லிமிட் கொடுத்தாயிற்று. அப்புறம் எப்படி டூரிஸ்ட் வருவார்கள்? காசு வரும்? துபாயின் பொருளாதாரம் முக்கியமாக சுற்றுலாத்துறையை நம்பியே உள்ளது.

அங்கே தற்போது ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நிலங்களையும் கட்டிடங்களையும், கிட்டத்தட்ட பாதி விலைக்குக் கூவிக் கூவி விற்கிறார்கள். இதன் தாக்கம் துபாயில் செயல்பட்டு வரும் இந்தியக் கட்டுமான நிறுவனங்களின் இலாபத்திற்கு கடும் வீழ்ச்சியைத் தரும். அதே போல் பழைய விலைகளில் வாங்கியுள்ள அல்லது வாங்குவதாக அக்ரிமெண்ட் போட்டுள்ள நிறுவனங்கள் தலையில் துண்டைப்போட்டுத்தான் போக வேண்டும். அப்படி வாங்கும் பட்சத்தில் அவர்களது இலாபத்தில் ஒரு பெரும் இழப்பு உண்டு.

ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானம் குறித்த வேலைகள் செய்து தர அங்கே சென்றுள்ள நிறுவனங்களுக்கும் அடி. பாதிப்பு. பேமெண்ட் பேசியபடி பேசிய அளவு பேசிய நேரத்தில் வராது. அதனால் அவர்களது பாட்டம் லைன் எனப்படும் அசல் வரம்பு பாதிக்கப் படும். இதனாலேயே அங்கே பெரிய பெரிய புராஜக்டுகள் கேன்சல் செய்யப் பட்டு வருகின்றன. இவற்றில் இந்தியாவின் நாகார்ஜூனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ ஓமேக்ஸ் மற்றும் பி.எஸ்.ஈ.எல் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

துபாய் வேர்ல்டின் தற்போதைய அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு எதையும் உடனடியாக ஏற்படுத்தாது என்றும் இதனால் அதிர்ச்சி ஏதும் அடைய வேண்டாம் என்றும் இதனால் அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு உடனடி வேலையிழப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் திரு. வேணு ராஜாமணி (India's consul-general in Dubai) கூறியுள்ளார். (அப்படி என்றால் என்ன அர்த்தம். உடனடியாக இல்லை. மெள்ள மெள்ள ஏற்படும் என்றா?)

இதில் மற்றொரு ஹைலைட்டாக மும்பை படவுலகம் (ஏன் தமிழ், தெலுங்கு உள்ளிட்டவையும் தான்) கூட இதனால் பாதிக்கப் பட்டுள்ளன. திரைப்படங்களைப் பொறுத்த வரை, அவை தமிழ், தெலுங்கு, இந்தி என எதுவாக இருக்கட்டும், அவற்றிற்கு துபாய் முக்கியமானதொரு வர்த்தகக் கேந்திரம். இந்திப் படங்களுக்கான வெளிநாட்டு வியாபாரத்தில் சுமார் 50 சதவீதம் துபாயில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

இப்போது எழுந்துள்ள பொருளாதாரப் பிரச்சினையால் அங்கே மந்தமான நிலை நீடிக்கிறது. யாரும் சினிமா பார்க்க விரும்பவில்லை. சமீபத்தில் துபாயில் வெளியாக வேண்டிய ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் வழங்கும் அமிதாப்பின் பா திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போக பல கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

முதலீடு என்று பார்த்தாலும் பாலிவுட் பட்டையைக் கிளப்புகிறது. துபாயில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் ஷாருக் கானுக்கு 5000 சதுர அடி வீடு ஒன்று உள்ளது. இது தவிர இன்னும் சில முதலீடுகளும் வைத்துள்ளாராம் ஷாருக். ஹ்ரித்திக் ரோஷன், கரீனா கபூர் சுனில் ஷெட்டி போன்றோர் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். இது போக அபியும் ஐஸூம் சேன்க்சுவரி ஃபால்ஸ் என்ற இடத்தில் ரிஸார்ட் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்களாம்.

regards...
Ameen

அன்புரசிகன்
19-12-2009, 10:52 PM
நீங்க் சொல்லீட்டீங்க.. அவுங்க விலையை மலித்து விற்றதும் வாடகையை குறைத்ததும் கிரீன்ஸ் பக்கமும் டிஸ்கவரி காடின் பக்கமும் தான். பேர்துபாய் பகுதி இன்னமும் உச்சத்தில் தான் விலை எல்லாம் உள்ளது. பணப்புழக்கம் குறைந்தமாதிரி தெரியவில்லை. மந்த நிலை தோன்றியது உண்மை தான். இதனால் பாதிக்கப்பட்ட பாரிய தொழில் கட்டுமானத்தொழில் தான்.

பேர்துபாய் மன்கூல் போன்ற பகுதியில் 140 150 ஆயிரங்கள் ஒருவருடத்திற்கான வாடகை. அதுவும் திருமணமாகாதவர்களுக்கு வாடகை விலைக்கு மேலதிகமாக வேறு போட்டுக்கொடுக்கணுமாம்.

நானிருந்த வீட்டின் நிலமை நம் மன்ற உறவுகள் பாரதி மற்றும் சிவா அண்ணன்களுக்கு தெரியும். 2 அறையில் 8 பேர் தங்கியிருந்தோம். சொல்லப்போனால் சட்டவிரோதம் தான். காரணம் அங்கு திருமணமாகாதவர்களுக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அப்பப்பா... அங்கு வசிக்கும் போது பட்ட பாடுங்கள்.

மோல் ஒப் எமிரேட்ஸ் போய் பாருங்கள். துபாய் மோல் போய் பாருங்கள். ஜூமைரா கடற்கரை... அனைத்தும் வழமைபோல் தான் உள்ளது... ஆனால் ரோட்டில் வாகனப்புழக்கம் குறைந்தது உண்மை. காரணம் Dubai water front மூடப்பட்டுவிட்டது... அதுக்கு பொருளாதார வீழ்ச்சி மற்றும் தேவையற்ற கிம்பளங்கள் முறைகள் தான் காரணம்....


-நொந்த நெஞசம். :D

தாமரை
20-12-2009, 12:57 AM
தொலைபேசி எண்ணை நீக்கி விடவும்.. யாருக்காவது தொலைபேசி எண்ணைத் தருவதென்றால் தனிமடலில் தரவும்..

மன்ற நிர்வாகிகள் கவனித்து தக்க ஆலோசனைகளை தனிமடலில் அனுப்பி வைக்கவும்

k.k.mani
21-08-2010, 11:47 AM
very useful

அனுராகவன்
18-09-2010, 07:07 PM
very useful
உங்களை அறிமுக படுத்தி பின் இந்த பகுதியே ரசிக்கலாமே..

k.k.mani
26-09-2010, 02:23 PM
very useful.simplysuprb.thank you for your hardwork