gragavan
10-08-2006, 06:48 AM
தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்று கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான்.
ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன். தாரம் தாயாகவே முடியாது. ஆகவும் கூடாது. அவரவர் பொறுப்பு அவரவர்க்கு. இப்பொழுது இது உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் என்னுடைய கதையைக் கேட்டால் கண்டிப்பாகப் புரியலாம்.
நானும் மணமானவள்தான். மனைவியாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியவள்தான். இனிய இல்லறம் எனக்கும் தெரியும். கூட்டிப் பெருக்கவும் ஆக்கிப் போடவும் இரவில் படுக்கையைத் தட்டிப் போடவும் தெரிந்தவள்தான். நல்ல வளமான குடும்பமும் கூட. வியாபாரக் குடும்பம். வெளிநாடு போனார் ஒரு முறை. பொருள் சேர்க்க எங்கள் குடும்பத்தில் ஆண்கள் செல்லும் பயணம்தான். எனது தந்தையார் சென்றிருக்கின்றார். அண்ணன் சென்றிருக்கின்றார். என்னுடைய மாமனாரும் சென்றிருக்கின்றார். அந்த வழியில் எனது கணவரும் பல முறை திரைகடலோடியவர்தான்.
ஒவ்வொரு முறையும் திரும்ப வந்து என்னைக் கண்டவர், கைகளில் அள்ளிக் கொண்டவர் ஒரு முறை காணாமல் போனார். வாடிப் போனேன். வதங்கிப் போனேன். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின. கண்ணீர் ஒன்றுதான் விதியென்று ஆனேன். அந்த விதியைக் காணச் சகிக்காத சுற்றத்தார்களும் நாடு நாடாகப் போய்த் தேடினர்.
கிழக்குக் கடலையும் மேற்குக் கடலையும் கடைந்து தேடினாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை. என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருந்த எனக்கு அந்த நல்ல செய்தியும் வந்தது. ஆம். வெளிநாடுகளிலெல்லாம் தேடியவர்கள் பக்கத்தில் தேடாமல் விட்டார்கள்.
மதுரையிலே அவர் இருக்கின்றார் என்று நம்பகமான செய்தி வந்தது. வேறு தகவல் எதுவுமில்லை. வீட்டில் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அவர் என்ன நிலையில் இருக்கின்றாரோ என்று வருந்திதான். ஏதேனும் குற்றங் குறை வந்து மனமும் குணமும் வாடிக் கிடந்தால் என்ன செய்வது? என்ன குழப்பத்தில் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாரோ? எல்லாரும் சென்றால்தான் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வரமுடியுமென்று முடிவு கட்டிச் சென்றோம்.
சென்ற பிறகுதான் ஏன் சென்றோம் என்று தோன்றியது. ஆம். ஊருக்குள் நுழைந்ததும் கிடைத்த செய்தி அப்படி. மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா? சத்திரத்தில் தங்கிக்கொண்டு அவரை வரவழைத்தோம். வந்தார். மனைவி மக்களோடு. அந்தக் காட்சியைக் கண்ட பொழுதே உலகத்தின் மீதிருந்த பாதிப்பற்று போய் விட்டது.
வந்தவர் என்னைப் பார்த்ததும் இரண்டு கைகளையும் வணங்கிக் கும்பிட்டார். அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள். பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர். என்னைப் பார்த்துச் சொன்னார். "அம்மா" என்று.
அது கணவனின் குரலாகக் கேட்கவில்லை. அந்த அழைப்பில் குழந்தையின் பாசத்தை மட்டுமே கண்டேன். பெண்கள் கணவனை ஐயா என்று அழைப்பதற்கும் ஆண்கள் மனைவியை அம்மா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. கணவன் அப்பாவாக முடியாது. ஆகையால்தான் ஐயா என்று அழைப்பார்கள். ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.
ஆனால் இன்றைக்கு அவர் அம்மா என்று அழைத்த பொழுது அந்தத் தூய சொல்லுக்கான உண்மையான பொருளைத்தான் நானும் கண்டேன். என்னோடு வந்தவர்களும் கண்டார்கள். அந்த அதிர்ச்சியில்தான் வந்தவர்கள் அவரை அதட்டிக் காரணம் கேட்டார்கள். அவரும் சொன்னார்.
"அன்றொரு நாள் பகலுணவிற்காக நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன். ஆனால் புனிதவதியாரோ நான் உணவுக்கு வருமுன்னமே ஒரு கனியைச் சிவனடியாருக்குப் படைத்து விட்டார். களைப்பில் உணவிற்கு வந்த எனக்குக் கிட்டியது ஒரு மாம்பழம். நானும் அதை உண்டு ருசித்து மற்றொன்றையும் கேட்ட பொழுது என்னுடைய மனம் மகிழ இறைவனை வேண்டி இன்னொரு கனியைக் கொண்டு தந்தார் புனிதவதியார். அது சுவையிலும் மணத்திலும் குணத்திலும் மேலோங்கி இருக்கக் கண்டு......வியந்த பொழுது...கனி கிடைத்த கதை சொன்னார் புனிதவதியார். பொய்யோ மெய்யோ எனச் சோதிக்க இன்னொன்றையும் அப்படி வேண்டிக் கொண்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். உடனே வேண்டினார். கனியும் கிடைத்தது. பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் முன்னே மறைந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். ஆண்டவனை எப்பொழுதும் அருகில் இருக்கக் கொள்ளும் ஞானப் பெருமகளே புனிதவதி என்றுணர்ந்தேன் நான்.
அந்தப் பெருமகளை என் குலமகளாக் கொண்டு இல்லறம் செய்வது எங்ஙனம்? இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா! உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா! இல்லறம் சிறப்பது கட்டிலில் தானே. அங்கே தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான். ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன். இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா?"
இப்படி எல்லாம் அவர் சொன்னது எல்லாருக்கும்...ஏன்...என்னுடைய பெற்றோருக்கும் சரியெனவே பட்டது. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன? அதனால்தான் சொல்கிறேன். தாய் வேறு. தாரம் வேறு. இரண்டும் ஒன்றாகவே முடியாது. தாயைப் பாசத்தில் நினைக்கத்தான் முடியும். ஆனால் தாரத்தை நேசத்தில் அணைக்கவும் முடியும். ம்ம்ம்...எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று. போகட்டும். கணவன் வாயில் கனமாகக் கேட்ட பிறகு உடல் பற்றுப் போயிற்று. போகட்டும். அகப்பற்றும் புறப்பற்றும் போயிற்று. போகட்டும். எல்லாம் இறையருள். நான் தாயாகவும் இல்லை. இப்பொழுது தாரமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கும் பந்தங்களுக்கும் எனக்கு வெகுதூரம். தாயாகவும் இல்லாமல் தாரமாகவும் இல்லாமல் மண்ணுக்குப் பாரமாக இருக்கவா!
ஆனால் ஒன்று. என்னைத் தாயென்றவரை மகனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எப்படி ஒப்பும்? பிறந்த மேனியாய்த் தொட்டிலில் கண்டவரை மகன் எனலாம். கட்டிலில் கண்டவரை? கட்டிக் கொண்டவரை? அவராலும் நான் இன்னும் தாயாகவில்லை. என்னிடத்தில் தாயை உருவாக்க வேண்டியவரோ பாயை மடித்து வைத்து விட்டார். பிறப்பால் மகளானேன். பெற்றோரை மகிழ வைத்தேன். திருமணத்தால் மனைவியானேன். கணவனை மகிழ வைத்தேன். ஆனால் இப்பொழுது தாயென்று பெயர் மட்டும் உண்டு. ஆனால் அந்தப் பதவி?
ஆலவாயண்ணலைத் தொழுது உலகம் சுற்றினேன். அழகெலாம் துறந்து வற்றினேன். ஆயினும் தீந்தமிழைச் சிவன் காலடியில் ஊற்றினேன். துன்பம் என்று வந்தவர்களை எல்லாம் தேற்றினேன். நடந்தேன். நடந்தேன். நடந்து கொண்டேயிருந்தேன். நோக்குமிடமிங்கும் நீக்கமின்றி நிறைந்தவனை வணங்கிக் கயிலையைச் சேர்ந்தேன். அந்த மலையே சிவலிங்கமாக நின்றது. இதில் எப்படி காலால் ஏறுவது என்று தலையால் ஏறினேன்.
வற்றிப் போய் உடலெல்லாம் நாறிய என்னை.....உடையெல்லாம் விழுந்து உடலெல்லாம் தெரிந்தாலும் கால் படாது தலையாலே கயிலையை ஏறிய என்னை....அம்மையே என்று அழைத்தார் செஞ்சடையர். அன்று மதுரையில் கேட்ட சொல்லல்ல இது. தாந்தோன்றியே அம்மையே என்று அழைத்த சொல்லல்லவா! தன்னைத்தான் தோன்றி, அதிலிருந்து உலகம் தோன்றி, உலகத்தில் உயிர் தோன்றி, அந்த உயிர்களுக்கெல்லாம் அருள் தோன்றிய அற்புதக் கனியானது என்னை அம்மையே என்று அழைத்த அழைப்பில் நான் யார் என்று தெரிந்து போனது. ஆம். நான் தாய். நான் தாய்தான். தாயேதான்.
அம்மையே அப்பா என்று உலகம் அழைக்கும் பெருந்தேவனின் தாயன்பு எனக்குத் தாய் அன்பை உணர்த்திய அந்தப் பொழுதினிலேயே எல்லாம் மறந்தும் போனது. மறைந்தும் போனது. தான் போய் ஊன் போய் நான் போய் என்னிலிருந்து ஒவ்வொன்றாகப் போய் பிறப்பும் இறப்பும் போய் எல்லாம் ஓங்காரச் சிவவொலியாகி எங்கும் நிறைந்து பரவசமானது. சிவ! சிவ! சிவ!
அன்புடன்,
கோ.இராகவன்
ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன். தாரம் தாயாகவே முடியாது. ஆகவும் கூடாது. அவரவர் பொறுப்பு அவரவர்க்கு. இப்பொழுது இது உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் என்னுடைய கதையைக் கேட்டால் கண்டிப்பாகப் புரியலாம்.
நானும் மணமானவள்தான். மனைவியாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியவள்தான். இனிய இல்லறம் எனக்கும் தெரியும். கூட்டிப் பெருக்கவும் ஆக்கிப் போடவும் இரவில் படுக்கையைத் தட்டிப் போடவும் தெரிந்தவள்தான். நல்ல வளமான குடும்பமும் கூட. வியாபாரக் குடும்பம். வெளிநாடு போனார் ஒரு முறை. பொருள் சேர்க்க எங்கள் குடும்பத்தில் ஆண்கள் செல்லும் பயணம்தான். எனது தந்தையார் சென்றிருக்கின்றார். அண்ணன் சென்றிருக்கின்றார். என்னுடைய மாமனாரும் சென்றிருக்கின்றார். அந்த வழியில் எனது கணவரும் பல முறை திரைகடலோடியவர்தான்.
ஒவ்வொரு முறையும் திரும்ப வந்து என்னைக் கண்டவர், கைகளில் அள்ளிக் கொண்டவர் ஒரு முறை காணாமல் போனார். வாடிப் போனேன். வதங்கிப் போனேன். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின. கண்ணீர் ஒன்றுதான் விதியென்று ஆனேன். அந்த விதியைக் காணச் சகிக்காத சுற்றத்தார்களும் நாடு நாடாகப் போய்த் தேடினர்.
கிழக்குக் கடலையும் மேற்குக் கடலையும் கடைந்து தேடினாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை. என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருந்த எனக்கு அந்த நல்ல செய்தியும் வந்தது. ஆம். வெளிநாடுகளிலெல்லாம் தேடியவர்கள் பக்கத்தில் தேடாமல் விட்டார்கள்.
மதுரையிலே அவர் இருக்கின்றார் என்று நம்பகமான செய்தி வந்தது. வேறு தகவல் எதுவுமில்லை. வீட்டில் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அவர் என்ன நிலையில் இருக்கின்றாரோ என்று வருந்திதான். ஏதேனும் குற்றங் குறை வந்து மனமும் குணமும் வாடிக் கிடந்தால் என்ன செய்வது? என்ன குழப்பத்தில் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாரோ? எல்லாரும் சென்றால்தான் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வரமுடியுமென்று முடிவு கட்டிச் சென்றோம்.
சென்ற பிறகுதான் ஏன் சென்றோம் என்று தோன்றியது. ஆம். ஊருக்குள் நுழைந்ததும் கிடைத்த செய்தி அப்படி. மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா? சத்திரத்தில் தங்கிக்கொண்டு அவரை வரவழைத்தோம். வந்தார். மனைவி மக்களோடு. அந்தக் காட்சியைக் கண்ட பொழுதே உலகத்தின் மீதிருந்த பாதிப்பற்று போய் விட்டது.
வந்தவர் என்னைப் பார்த்ததும் இரண்டு கைகளையும் வணங்கிக் கும்பிட்டார். அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள். பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர். என்னைப் பார்த்துச் சொன்னார். "அம்மா" என்று.
அது கணவனின் குரலாகக் கேட்கவில்லை. அந்த அழைப்பில் குழந்தையின் பாசத்தை மட்டுமே கண்டேன். பெண்கள் கணவனை ஐயா என்று அழைப்பதற்கும் ஆண்கள் மனைவியை அம்மா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. கணவன் அப்பாவாக முடியாது. ஆகையால்தான் ஐயா என்று அழைப்பார்கள். ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.
ஆனால் இன்றைக்கு அவர் அம்மா என்று அழைத்த பொழுது அந்தத் தூய சொல்லுக்கான உண்மையான பொருளைத்தான் நானும் கண்டேன். என்னோடு வந்தவர்களும் கண்டார்கள். அந்த அதிர்ச்சியில்தான் வந்தவர்கள் அவரை அதட்டிக் காரணம் கேட்டார்கள். அவரும் சொன்னார்.
"அன்றொரு நாள் பகலுணவிற்காக நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன். ஆனால் புனிதவதியாரோ நான் உணவுக்கு வருமுன்னமே ஒரு கனியைச் சிவனடியாருக்குப் படைத்து விட்டார். களைப்பில் உணவிற்கு வந்த எனக்குக் கிட்டியது ஒரு மாம்பழம். நானும் அதை உண்டு ருசித்து மற்றொன்றையும் கேட்ட பொழுது என்னுடைய மனம் மகிழ இறைவனை வேண்டி இன்னொரு கனியைக் கொண்டு தந்தார் புனிதவதியார். அது சுவையிலும் மணத்திலும் குணத்திலும் மேலோங்கி இருக்கக் கண்டு......வியந்த பொழுது...கனி கிடைத்த கதை சொன்னார் புனிதவதியார். பொய்யோ மெய்யோ எனச் சோதிக்க இன்னொன்றையும் அப்படி வேண்டிக் கொண்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். உடனே வேண்டினார். கனியும் கிடைத்தது. பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் முன்னே மறைந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். ஆண்டவனை எப்பொழுதும் அருகில் இருக்கக் கொள்ளும் ஞானப் பெருமகளே புனிதவதி என்றுணர்ந்தேன் நான்.
அந்தப் பெருமகளை என் குலமகளாக் கொண்டு இல்லறம் செய்வது எங்ஙனம்? இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா! உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா! இல்லறம் சிறப்பது கட்டிலில் தானே. அங்கே தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான். ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன். இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா?"
இப்படி எல்லாம் அவர் சொன்னது எல்லாருக்கும்...ஏன்...என்னுடைய பெற்றோருக்கும் சரியெனவே பட்டது. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன? அதனால்தான் சொல்கிறேன். தாய் வேறு. தாரம் வேறு. இரண்டும் ஒன்றாகவே முடியாது. தாயைப் பாசத்தில் நினைக்கத்தான் முடியும். ஆனால் தாரத்தை நேசத்தில் அணைக்கவும் முடியும். ம்ம்ம்...எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று. போகட்டும். கணவன் வாயில் கனமாகக் கேட்ட பிறகு உடல் பற்றுப் போயிற்று. போகட்டும். அகப்பற்றும் புறப்பற்றும் போயிற்று. போகட்டும். எல்லாம் இறையருள். நான் தாயாகவும் இல்லை. இப்பொழுது தாரமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கும் பந்தங்களுக்கும் எனக்கு வெகுதூரம். தாயாகவும் இல்லாமல் தாரமாகவும் இல்லாமல் மண்ணுக்குப் பாரமாக இருக்கவா!
ஆனால் ஒன்று. என்னைத் தாயென்றவரை மகனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எப்படி ஒப்பும்? பிறந்த மேனியாய்த் தொட்டிலில் கண்டவரை மகன் எனலாம். கட்டிலில் கண்டவரை? கட்டிக் கொண்டவரை? அவராலும் நான் இன்னும் தாயாகவில்லை. என்னிடத்தில் தாயை உருவாக்க வேண்டியவரோ பாயை மடித்து வைத்து விட்டார். பிறப்பால் மகளானேன். பெற்றோரை மகிழ வைத்தேன். திருமணத்தால் மனைவியானேன். கணவனை மகிழ வைத்தேன். ஆனால் இப்பொழுது தாயென்று பெயர் மட்டும் உண்டு. ஆனால் அந்தப் பதவி?
ஆலவாயண்ணலைத் தொழுது உலகம் சுற்றினேன். அழகெலாம் துறந்து வற்றினேன். ஆயினும் தீந்தமிழைச் சிவன் காலடியில் ஊற்றினேன். துன்பம் என்று வந்தவர்களை எல்லாம் தேற்றினேன். நடந்தேன். நடந்தேன். நடந்து கொண்டேயிருந்தேன். நோக்குமிடமிங்கும் நீக்கமின்றி நிறைந்தவனை வணங்கிக் கயிலையைச் சேர்ந்தேன். அந்த மலையே சிவலிங்கமாக நின்றது. இதில் எப்படி காலால் ஏறுவது என்று தலையால் ஏறினேன்.
வற்றிப் போய் உடலெல்லாம் நாறிய என்னை.....உடையெல்லாம் விழுந்து உடலெல்லாம் தெரிந்தாலும் கால் படாது தலையாலே கயிலையை ஏறிய என்னை....அம்மையே என்று அழைத்தார் செஞ்சடையர். அன்று மதுரையில் கேட்ட சொல்லல்ல இது. தாந்தோன்றியே அம்மையே என்று அழைத்த சொல்லல்லவா! தன்னைத்தான் தோன்றி, அதிலிருந்து உலகம் தோன்றி, உலகத்தில் உயிர் தோன்றி, அந்த உயிர்களுக்கெல்லாம் அருள் தோன்றிய அற்புதக் கனியானது என்னை அம்மையே என்று அழைத்த அழைப்பில் நான் யார் என்று தெரிந்து போனது. ஆம். நான் தாய். நான் தாய்தான். தாயேதான்.
அம்மையே அப்பா என்று உலகம் அழைக்கும் பெருந்தேவனின் தாயன்பு எனக்குத் தாய் அன்பை உணர்த்திய அந்தப் பொழுதினிலேயே எல்லாம் மறந்தும் போனது. மறைந்தும் போனது. தான் போய் ஊன் போய் நான் போய் என்னிலிருந்து ஒவ்வொன்றாகப் போய் பிறப்பும் இறப்பும் போய் எல்லாம் ஓங்காரச் சிவவொலியாகி எங்கும் நிறைந்து பரவசமானது. சிவ! சிவ! சிவ!
அன்புடன்,
கோ.இராகவன்