PDA

View Full Version : அவசர உதவி தேடும் அவசர உதவி மையம்



gragavan
21-07-2006, 11:20 AM
ஒரு பிரபலமான துணி வியாபாரி, சொத்துகள் நிறைய இருந்தும் அன்பான மனைவி மக்கள் இருந்தும் இறக்கும் பொழுது போர்த்திக் கொள்ளத் துணியின்றி இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? இந்தக் கொடுமையான நிகழ்ச்சியையும் அதன் விளைவாக நடந்த நல்ல நிகழ்ச்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பெங்களூரில் வசிக்கும் ஹேமலதாவின் தந்தை என்.எஸ்.எஸ்.முருகேசன் அவர்களுக்குச் சொந்த ஊர் சின்னாளப்பட்டி. கடின உழைப்பும் இறைநம்பிக்கையும் கொண்டு சிறப்பாக முன்னுக்கு வந்தவர் அவர். பின்னாளில் பெங்களூரில் குடும்பத்தோடு தங்கி விட்டார். நிலக்கோட்டைக்கு ஒரு நண்பரைச் சந்திக்க வந்திருந்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. நெஞ்சுவலிதான். அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வசதிகள் இருக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரும் பக்கத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். அதாவது மதுரைக்கு. ஆனால் அவரது நிலையின் தீவிரத்தை உணராத நண்பர் காலம் கடத்தி விட்டார். அந்தக் காலதாமதம்தான் எமனாகியிருக்கிறது.

மதுரையிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக பெங்களூரில் இருந்தவர்களுக்குத் தகவல் போயிருக்கிறது. குடும்பத்தினர் பதறிப் போனார்கள். ஹேமலதாவும் அவரது தம்பியும் உடனியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கிறார். ஆனாலும் வழியிலேயே அவர்கள் தந்தை இறந்த செய்தி கிடைத்துத் துடித்துப் போயிருக்கிறார்கள்.

ஆனாலும் பாருங்கள். மதுரையின் அத்தனை பெரிய மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததற்குச் சரியான விளக்கம் கூடத் தரவில்லையாம். நெஞ்சு வலி வந்து நான்கு மணி நேரம் கழித்துதான் மருத்துவமனைக்கே சென்றிருக்கிறார். அதுவும் அவரே நடந்து சென்றிருக்கிறார். அதுவும் இரவு பதினோரு மணியளவில். அந்த அளவிற்கு தன்னுடைய நினைவில் இருந்த ஒருவர் எப்படி இறந்தார் என்று கூட ஒரு மருத்துவமனையால் சொல்லமுடியவில்லை என்றால் எப்படி?

இவர்கள் சென்று சேர்ந்த பொழுதுதான் போர்த்திக் கொள்ளக் கூடத் துணியின்றிக் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். பதறிக் கதறியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு துயரம். துயரம். துயரம். இந்த இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை மட்டுமல்ல ஹேமலதா அவர்களின் உள்ளத்தில் ஒரு புது வேகத்தையும் உண்டாக்கி விட்டது. தனக்கு நேர்ந்த இழப்பு இன்னும் பலருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான் அது.

கல்வி என்பது அழியாச் சொத்து. அந்தச் சொத்தை தந்தையார் அளித்துச் சென்றதால்தான் இன்று நல்ல பதவியில் பெங்களூரில் இருக்கிறோம் என்று நம்பும் ஹேமா, அந்தச் சொத்தின் பலனை ஒரு மருத்துவமனை வடிவில் அவரது சொந்த ஊருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதுவும் கிட்டத்தட்ட 20 முதல் 25 ஆண்டுகள் வரை சின்னாளப்பட்டியின் பக்கமே சென்றிராதவர் ஹேமா. இந்த மருத்துவமனை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் பலமுறைகள் சென்று அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார்.

இப்படி ஒரு அவசர சிகிச்சை மருத்துவமனை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் ஹேமா தொடர்பு கொண்டது பெங்களூரில் பிரபலமான நாராயண் ஹிருதயாலயா என்னும் மிகப் பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தேவி ஷெட்டி அவர்களைத்தான். நிறைய நேரம் அவருடன் பேசி ஆலோசனை பெற்று ஒரு இதய நோய் கவனிப்பு மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் இந்த Telemedicine பற்றி எடுத்துக் கூறி அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினார். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவெடுப்பதற்கே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.

அதற்குப் பிறகு சின்னாளப்பட்டியில் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இருக்கும் கஸ்தூரிபா மருத்துவமனையிலிருந்து டாக்டர் மனோன்மணியும் மூன்று அனுபவமிக்க செவிலியர்களும் பெங்களூரில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். வீடியோ கான்பிரன்சிங் முறையில் பெங்களூர் நாராயண் ஹிருதயாலயாவின் உதவியோடு டெலிமெடிசின் மூலம் சிகிச்சை அளிக்கும் மையமும் ஜூன் 2, 2006 அன்று தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெங்களூரில் இருக்கும் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும். காலதாமதமும் இதனால் குறையும். சிறப்பான சிகிச்சையும் உடனடியாக வழங்கப்படும்.

சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேறிய இந்தக் கனவு முயற்சியில் உறுதுணையாக நின்ற தனது தாயார் ருக்மணி முருகேசன், சகோதரர் சுதாகர், டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் விஜய் சிங், டாக்டர் பொம்மையா மற்றும் அனைத்து நண்பர்களையும் நன்றியோடு ஹேமா நினைவுகூர்கிறார்.

நாம் செய்யும் உதவியும் பணியும் எவ்வளவு பெரிது என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணமும் தனது தந்தை கடைசி நேரத்தில் என்ன துன்பம் அனுபவித்திருப்பாரோ என்ற மனவேதனையுமே இப்படி ஒரு மருத்துவ உதவி மையம் எழுப்ப ஊக்கம் கொடுத்ததாகக் கருதுகிறார் ஹேமா.

ஆனால் இந்தப் பணி இன்னும் முடிவடைந்து விடவில்லை. ஏன்? இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொடுக்க பெங்களூர் நாராயண் ஹிருதயலயாவின் டாக்டர் தேவி ஷெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இங்கிருந்து பெங்களூர் சென்று வரக் கூட வசதியில்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு நாள் சோற்றுக்குச் சம்பாதிக்கும் இவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது? சிகிச்சை பெறுகிறவரும் அவருக்குத் துணையாக ஒருவரும் பெங்களூர் சென்று அங்கு ஒரு வாரகாலம் மருத்துவமனையில் தங்கியிருக்கவும் சிகிச்சை முடிந்த பிறகு திரும்பி வரவும் சொறபத் தொகையே தேவைப்படும். ஆனால் அந்தத் தொகை தேவைப்படுகிறவர்கள் நிறைய. அதற்காக ஒரு நிதி திரட்டி அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. எதெற்கெதற்கோ செலவிடுகிறோம். இந்தப் புனிதப் பணிக்காகவும் ஒரு தொகையை நாம் மனமுவந்து கொடுத்தலே சிறப்பு. அப்படிச் செய்ய வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஊர் கூடித்தான் தேரிழுக்க வேண்டும். நண்பர்களே தேரிழுக்க வாருங்கள். பல உயிர்களைக் காத்திடுங்கள்.
இந்த மருத்துவமனையைப் பற்றி இந்து நாளிதழில் வெளி வந்த செய்தி இங்கே. (http://www.hindu.com/2006/06/03/stories/2006060309280300.htm)

ஜூலை 15, 2006 அன்று ஒரு மருத்துவ மையத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு சுற்றியிருக்கும் பட்டிக்காடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பேர் வந்திருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் ஆண்களுமாய் வந்தவர்களில் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் பெரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் சின்னக் குழந்தைகளும் இருக்கிறார்கள். உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்தப் பிஞ்சுகள் பிஞ்சிலேயே நஞ்சு போய்விடும். நூற்றுக் கணக்கில் அல்ல. ஆயிரக் கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் நிதியுதவி தேவைப்படுகிறது. ஒருவரால் முடிகிறதல்ல இது. உங்களால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். பல ஏழைக் குழந்தைகள் பிழைக்க உதவி செய்யுங்கள். பல தமிழ்க் குடும்பங்களை ஒரு வேளையாவது சாப்பிட வைத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவனையும் தலைவியையும் காப்பாற்றுங்கள். உங்களால் நாளை காப்பாற்றப் படப் போகும் பலருக்காக இன்று உங்களிடம் கையேந்திக் கேட்கிறோம்! மனவுவந்து பெருநிதி தாருங்கள்.
(உதவிகள் செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி zeushema@yahoo.com )

நன்றியுடன்,
கோ.இராகவன்

karikaalan
29-07-2006, 05:40 PM
உணர்ச்சிகள் பொங்க பதிக்கப்ப்ட்டுள்ள பதிவு. பாராட்டுக்கள் இராகவன்ஜி. தொடர்பு கொண்டு இயன்றதைச் செய்கிறேன்.

===கரிகாலன்

aren
29-07-2006, 08:27 PM
நிச்சயம் நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். வெளிநாட்டிலிருந்து எப்படி பணம் அனுப்புவது என்று எடுத்துக்கூறினால் எல்லோரும் உதவிட வழி வகுக்கும்.

உங்கள் முயற்ச்சிக்கு நன்றி ராகவன் அவர்களே.

இளசு
29-07-2006, 09:50 PM
இந்த தொலை மருத்துவ நிகழ்ச்சி பற்றி என் நண்பர் சொல்லக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.பின்னணியைச் சொன்ன ராகவனுக்கு நன்றி.

இதய வால்வுகள் அடைபட்டு வாழ்க்கையை இழந்த இளம்பிஞ்சுகள் எத்தனையோ கண்டு வெம்பியவன் நான். இன்று சிலருக்கு இதனால் வழி பிறக்கும் என்றால், இயன்றதை நாம் செய்வதே நம் கடமை.

நண்பர் மூலம் உடன் செய்வேன். நன்றி ராகவன்.

gragavan
31-07-2006, 08:34 AM
பதிவினைப் படித்து உதவி செய்ய முன் வந்த அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.