gragavan
02-12-2005, 03:40 AM
திருச்செந்தூரின் கடலோரத்தில்
இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. கடற்கரைக் காற்று குளுகுளுவென வீசியது. உப்புக் காற்றாய் இருந்தாலும் சுகமாக இருந்தது. தொலைவில் ஒரு வட்ட நிலா கடலைத் தொட்ட நிலாவாகக் கரைந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் ஆங்காங்கே ஆட்கள். சிலர் கடலில் காலை நனைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடாக நாய்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. சில படுத்துக் கொண்டிருந்தன.
சுக்குத்தண்ணி விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். கருப்பட்டி போட்ட சுக்குத்தண்ணி. தம்ளர் மூன்று ரூபாய். ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கண்ணாடித் தம்ளர்களை ஊறப் போட்டிருந்தான். பிளாஸ்டிக் தம்ளர்களும் அவனிடம் இருந்தன. ஆளைப் பார்த்து தம்ளரைத் தேர்ந்தெடுப்பான் போல. குளிர்காற்றிற்கும் கடற்கரை மணலிற்கும் அந்தச் சுக்குக் தண்ணி சிலருக்குத் தொண்டையில் இதமாக இறங்கியது. வாயைத் திறந்து பாராட்ட விரும்பாமல் தலையை ஆட்டி தங்களுக்குள் சுக்குத்தண்ணியை பாராட்டினார்கள். அவர்கள் குடிப்பதையே ஒரு நாய் பார்த்துக் கொண்டிருந்தது. நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.
நாழிக்கிணற்றிற்குப் போகும் பாதை மலைப் பாம்பு போல இருட்டில் தெரிந்தது. அதன் ஓரத்திலேயே சில சிமிண்ட் பெஞ்சுகள். கடற்கரை மணலில் உட்காரச் சங்கோசப் பட்ட சிலர் அதில் உட்கார்ந்திருந்தார்கள். பனங்கிழங்கைப் பிய்த்து மென்று கொண்டிருந்தார்கள். இந்த வேளையிலா?
கோயிலுக்கும் கடற்கரைக்கும் நடுவில் ஒரு போலீஸ் காவல் வைக்கப்பட்டிருந்தது. சுனாமி வந்ததிலிருந்து இப்படித்தான். அருகில் பளிச்சென்று மூன்று சோடியம் வேப்பர் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செயற்கைப் பகலாக இருந்தது கடற்கரை.
கடற்கரையிலிருந்து கோயிலைப் பார்த்தேன். நிலவொளியைப் பூசிக் கொண்டு மினுமினுப்பாகத் தெரிந்தது. வலப்பக்கத்தில் தருமபுரி ஆதீன மண்டபம் கடலை ஒட்டி இருந்தது. பெரிய மண்டபம். இடப்பக்கம் கடைகள் வரிசையாக இருந்தன. நான் இடப்பக்கம் திரும்பினேன். மூடப்பட்டிருந்த கடைகளின் ஓரமாக நடந்து சென்றேன். ஒரு வளைவில் திரும்பினால் கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது.
அப்படியே திரும்பி கோயிலின் முன்பக்கத்திற்கு வந்தேன். அதே சுக்குத்தண்ணி விற்பவன். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. சரியாக விற்கவில்லை. அவனிடம் சுக்குத்தண்ணி வாங்கிக் குடிக்க முடிவு செய்தேன். "சுக்குத்தண்ணி குடுங்க." என்னைப் பார்த்தான். வாளியிலிருந்து தம்ளர் எடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் சுக்குத்தண்ணியை ஊற்றிக் கொடுத்தான்.
வெறும் வியாபாரமாக இல்லாமல் இரண்டொரு வார்த்தை பேசினேன். "கருப்பட்டி போட்டிருக்கீங்க போல! வாட ஜம்முன்னு இருக்கு!"
"ஆமாங்க. நயங்கருப்பட்டி. வெல வேற கூடிப்போச்சு. இருந்தாலும் மொத்தமா வாங்குனா கொஞ்சம் கொறைக்காங்க."
நான் வாங்கிக் குடிக்கத் தொடங்கியதும் சிலர் வந்தார்கள். கார் டிரைவர்கள். ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்கள். அங்கே வந்து பேச்சுத் துணைக்குப் பழகிக் கொள்வது. ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பேர் வந்து சுக்குத்தண்ணி குடித்தார்கள். விற்பவன் முகத்தில் மலர்ச்சி வந்தது. நான் மூன்று ரூபாய் சில்லரையை அவன் கையில் கொடுத்து விட்டு நடந்தேன்.
கோயிலைச் சுற்றி சின்னப்பாத் தேவர் கட்டிய மண்டபம். அந்தப் பிரகாரத்தில் நடந்தேன். அது கோயிலைச் சுற்றி வரும். மறுபடியும் கடல் கண்ணில் பட்டது. பிரகாரத்திலேயே மேலும் நடக்க தருமபுரி ஆதீன மண்டபம் மறுபடியும் கண்ணில் பட்டது. மண்டபம் மட்டுமா! அங்கு நடந்ததும் கூடத்தான். வெளியூராள் அங்கே படுத்துக் கொண்டிருக்க, போலீஸ் அவனை அங்கிருந்து நகட்டுவதிலேயே குறியாக இருந்தது.
"ஏய்! எந்தி! இங்க படுக்கக் கூடாதுல்லா. நகருவேய்." லத்திக் கம்பை மண்டபத் தரையில் தட்டினார் போலீஸ். படுத்திருந்தவனுக்கு அது கவுரவக் குறைச்சலாகப் பட்டிருக்க வேண்டும். முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான். அவன் எழுந்து நடந்ததும் போலீஸ் வேறு பக்கம் ரோந்து நடக்கத் தொடங்கியது.
கோபத்தில் குமைந்து கொண்டிருந்தான் எழுப்பப் பட்ட ஆள். "எய்யா முருகா! பாத்தியால அக்குரமம். இவனுகள என்னங்க! இதெல்லாம் கேக்காம இருக்குயே. செவுட்டுல விழலையா. அப்படியே கடலு பொங்கி மொத்தத்தையும் கொண்டு போயிரய்யா. அப்பத்தான் இவனுக அட்டூழியம் ஒழியும். எம்முருகன் கோயில்ல படுக்க விட மாட்டேங்குதானுகளே. கேப்பாரில்லாமப் போச்சு. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சும்மாருக்கியே. நா என்ன ஓட்டல்லயா தங்க? ஒங்கோயிலுக்கு வந்தேன். இங்கன தங்க விடமாட்டேங்கானுகளே. அக்குரமம் பிடிச்சவனுக"
சத்தமாகவே பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. அந்த ஆள் "முருகா முருகா" என்று புலம்பிக் கொண்டிருந்தான். நான் அருகில் போய்க் கேட்டேன். "என்னாச்சு?"
"இங்க கெடந்து தூங்க விடமாட்டேங்குதானுக. குச்சியக் கொண்டு தட்டி எழுப்புதானுக. கோயிலுக்கு எதுக்கு வர்ரோம். சாமியப் பாக்கத்தான. பாக்க விடாம இவனுக தடுக்கானுக. ரெண்டு அப்பு அப்பீருப்பேன். முருகங் கோயிலாச்சேன்னு விட்டேன். ஓட்டல்லயா நாம் படுத்துத் தங்க. அங்கன ரெண்டு நாயி படுத்துக் கெடக்கு. அதப் பத்த மாட்டேங்கானுக. எம்மேல பாயுதானுக."
அவருக்கு விளக்கம் சொன்னேன். "அவங்க அங்க படுக்கக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? எல்லாம் பாதுகாப்புக்காகத்தான். இருட்டு வேளை. கடலோரம் வேற. அதுனாலதான். சுனாமி வந்ததுன்னு சொல்றாங்களே. அதுனாலதான் இந்தப் பாதுகாப்பு."
"இப்படி வெளக்கமாச் சொன்னாத்தானே தம்பி. லொட்டு லொட்டுன்னு தட்டுதானுகளே. எந்தி எந்தீன்னு பத்துதானுகளே. முருகங் கோயில்ல இப்படி நடக்கானுகளேன்னு எனக்கு வருத்தம். அவ்வளவுதான் தம்பி. ஏந்தம்பி, சுனாமியா! இது திருச்செந்தூரு. இங்க கடலு உள்ள வந்துருமா? என்ன தம்பி பேசுறீங்க! அத்தன ஊருல வெள்ளம் அடிச்சப்ப இங்க மட்டும் கடலு உள்ள போச்சு. தெரியுமுல்ல. பேப்பருல எல்லாம் போட்டுருந்துச்சுல்லா!"
அவருடைய நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பினால்தானே கடவுள்.
அவருடைய புலம்பல் தொடர்ந்தது. "இங்க படுக்கவிடாம தடுத்துட்டானுக. எங்க போய்ப் படுக்க? ஓட்டலுக்குக் குடுக்கக் கொட்டியா கெடக்கு? நானே கைக்காசு சேத்து உவரீல இருந்து வந்துருக்கேன். புள்ளக நல்லாப் படிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டுப் போக வந்தேன். எல்லாரும் வரச் செலவுக்கு ஆத்த மாட்டமத்தான் நா மட்டும் வந்தேன்."
"ஒங்க நம்பிக்க வீண் போகாது. ஒங்க பிள்ளைங்க நல்லா படிச்சு முன்னுக்கு வந்து ஒங்களக் காப்பாதுவாங்க. நீங்க நம்புற முருகன் கைவிட மாட்டான்."
"ரொம்ப நல்லது தம்பி. படிச்சவக சொல்றீங்க. எல்லாம் பலிக்கட்டும். நமக்கென்ன. பிள்ளைக நல்லாருந்தாச் சரிதான். கடைசி பஸ்சுக்கு வந்தேன். காலைல கும்புட்டுட்டு அப்படியே பொறப்பட்டு போலாமுன்னு பாத்தேன். இந்தப் பயலுக தூங்க விடல. இப்ப ராத்திரி முழுக்க இப்பிடியே நடக்கவா?"
"தேவையில்ல. கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா ஆறுமுக ஆசாரி கலையரங்கம் வரும். அங்க படுத்துக்கலாம். பாதுகாப்பா இருக்கும். அங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. காலைல சீக்கிரமா எந்திரிச்சு சாமியப் பாத்துருங்க. அப்புறம் கூட்டம் வந்துரும்."
"ஆகட்டும் தம்பி. இப்படித் தெளிவாச் சொன்னாதான தெரியுது எங்களுக்கு. இதுக்குதான் படிக்கனுங்கறது. இனிமே நமக்கு எங்க? ஆமா. ஒங்க பேரு என்ன தம்பி?"
"எம்பேரு முருகன்."
பேருக்கும் ஊருக்கும் இருக்கும் தொடர்பை உணர்ந்து சொன்னார். "சந்தோசம் தம்பி. சாமி பேரு. அதான் இம்புட்டுப் பேசுறீக. அந்த முருகன் ஒங்கள நல்லா வெச்சிக்கிறட்டும். வர்ரேன் தம்பி!" சொல்லி விட்டு அந்த ஆள் கலையரங்கத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். கள்ளமில்லாத மனது.
திரும்பி நடந்தேன். காலையில் சீக்கிரமாக இவரை எழுப்பி விட வேண்டும். பின்னே. மெனக்கெட்டு என்னைப் பார்ப்பதற்கு உவரியிலிருந்து வந்திருக்கின்றாரே. கூட்டம் வருவதற்கு முன்னால் என்னைப் பார்த்து விட்டால் அவன் என்னிடம் கூடக் கொஞ்சம் பேசுவான் அல்லவா!
அன்புடன்,
கோ.இராகவன்
இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. கடற்கரைக் காற்று குளுகுளுவென வீசியது. உப்புக் காற்றாய் இருந்தாலும் சுகமாக இருந்தது. தொலைவில் ஒரு வட்ட நிலா கடலைத் தொட்ட நிலாவாகக் கரைந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் ஆங்காங்கே ஆட்கள். சிலர் கடலில் காலை நனைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடாக நாய்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. சில படுத்துக் கொண்டிருந்தன.
சுக்குத்தண்ணி விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். கருப்பட்டி போட்ட சுக்குத்தண்ணி. தம்ளர் மூன்று ரூபாய். ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கண்ணாடித் தம்ளர்களை ஊறப் போட்டிருந்தான். பிளாஸ்டிக் தம்ளர்களும் அவனிடம் இருந்தன. ஆளைப் பார்த்து தம்ளரைத் தேர்ந்தெடுப்பான் போல. குளிர்காற்றிற்கும் கடற்கரை மணலிற்கும் அந்தச் சுக்குக் தண்ணி சிலருக்குத் தொண்டையில் இதமாக இறங்கியது. வாயைத் திறந்து பாராட்ட விரும்பாமல் தலையை ஆட்டி தங்களுக்குள் சுக்குத்தண்ணியை பாராட்டினார்கள். அவர்கள் குடிப்பதையே ஒரு நாய் பார்த்துக் கொண்டிருந்தது. நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.
நாழிக்கிணற்றிற்குப் போகும் பாதை மலைப் பாம்பு போல இருட்டில் தெரிந்தது. அதன் ஓரத்திலேயே சில சிமிண்ட் பெஞ்சுகள். கடற்கரை மணலில் உட்காரச் சங்கோசப் பட்ட சிலர் அதில் உட்கார்ந்திருந்தார்கள். பனங்கிழங்கைப் பிய்த்து மென்று கொண்டிருந்தார்கள். இந்த வேளையிலா?
கோயிலுக்கும் கடற்கரைக்கும் நடுவில் ஒரு போலீஸ் காவல் வைக்கப்பட்டிருந்தது. சுனாமி வந்ததிலிருந்து இப்படித்தான். அருகில் பளிச்சென்று மூன்று சோடியம் வேப்பர் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செயற்கைப் பகலாக இருந்தது கடற்கரை.
கடற்கரையிலிருந்து கோயிலைப் பார்த்தேன். நிலவொளியைப் பூசிக் கொண்டு மினுமினுப்பாகத் தெரிந்தது. வலப்பக்கத்தில் தருமபுரி ஆதீன மண்டபம் கடலை ஒட்டி இருந்தது. பெரிய மண்டபம். இடப்பக்கம் கடைகள் வரிசையாக இருந்தன. நான் இடப்பக்கம் திரும்பினேன். மூடப்பட்டிருந்த கடைகளின் ஓரமாக நடந்து சென்றேன். ஒரு வளைவில் திரும்பினால் கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது.
அப்படியே திரும்பி கோயிலின் முன்பக்கத்திற்கு வந்தேன். அதே சுக்குத்தண்ணி விற்பவன். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. சரியாக விற்கவில்லை. அவனிடம் சுக்குத்தண்ணி வாங்கிக் குடிக்க முடிவு செய்தேன். "சுக்குத்தண்ணி குடுங்க." என்னைப் பார்த்தான். வாளியிலிருந்து தம்ளர் எடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் சுக்குத்தண்ணியை ஊற்றிக் கொடுத்தான்.
வெறும் வியாபாரமாக இல்லாமல் இரண்டொரு வார்த்தை பேசினேன். "கருப்பட்டி போட்டிருக்கீங்க போல! வாட ஜம்முன்னு இருக்கு!"
"ஆமாங்க. நயங்கருப்பட்டி. வெல வேற கூடிப்போச்சு. இருந்தாலும் மொத்தமா வாங்குனா கொஞ்சம் கொறைக்காங்க."
நான் வாங்கிக் குடிக்கத் தொடங்கியதும் சிலர் வந்தார்கள். கார் டிரைவர்கள். ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்கள். அங்கே வந்து பேச்சுத் துணைக்குப் பழகிக் கொள்வது. ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பேர் வந்து சுக்குத்தண்ணி குடித்தார்கள். விற்பவன் முகத்தில் மலர்ச்சி வந்தது. நான் மூன்று ரூபாய் சில்லரையை அவன் கையில் கொடுத்து விட்டு நடந்தேன்.
கோயிலைச் சுற்றி சின்னப்பாத் தேவர் கட்டிய மண்டபம். அந்தப் பிரகாரத்தில் நடந்தேன். அது கோயிலைச் சுற்றி வரும். மறுபடியும் கடல் கண்ணில் பட்டது. பிரகாரத்திலேயே மேலும் நடக்க தருமபுரி ஆதீன மண்டபம் மறுபடியும் கண்ணில் பட்டது. மண்டபம் மட்டுமா! அங்கு நடந்ததும் கூடத்தான். வெளியூராள் அங்கே படுத்துக் கொண்டிருக்க, போலீஸ் அவனை அங்கிருந்து நகட்டுவதிலேயே குறியாக இருந்தது.
"ஏய்! எந்தி! இங்க படுக்கக் கூடாதுல்லா. நகருவேய்." லத்திக் கம்பை மண்டபத் தரையில் தட்டினார் போலீஸ். படுத்திருந்தவனுக்கு அது கவுரவக் குறைச்சலாகப் பட்டிருக்க வேண்டும். முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான். அவன் எழுந்து நடந்ததும் போலீஸ் வேறு பக்கம் ரோந்து நடக்கத் தொடங்கியது.
கோபத்தில் குமைந்து கொண்டிருந்தான் எழுப்பப் பட்ட ஆள். "எய்யா முருகா! பாத்தியால அக்குரமம். இவனுகள என்னங்க! இதெல்லாம் கேக்காம இருக்குயே. செவுட்டுல விழலையா. அப்படியே கடலு பொங்கி மொத்தத்தையும் கொண்டு போயிரய்யா. அப்பத்தான் இவனுக அட்டூழியம் ஒழியும். எம்முருகன் கோயில்ல படுக்க விட மாட்டேங்குதானுகளே. கேப்பாரில்லாமப் போச்சு. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சும்மாருக்கியே. நா என்ன ஓட்டல்லயா தங்க? ஒங்கோயிலுக்கு வந்தேன். இங்கன தங்க விடமாட்டேங்கானுகளே. அக்குரமம் பிடிச்சவனுக"
சத்தமாகவே பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. அந்த ஆள் "முருகா முருகா" என்று புலம்பிக் கொண்டிருந்தான். நான் அருகில் போய்க் கேட்டேன். "என்னாச்சு?"
"இங்க கெடந்து தூங்க விடமாட்டேங்குதானுக. குச்சியக் கொண்டு தட்டி எழுப்புதானுக. கோயிலுக்கு எதுக்கு வர்ரோம். சாமியப் பாக்கத்தான. பாக்க விடாம இவனுக தடுக்கானுக. ரெண்டு அப்பு அப்பீருப்பேன். முருகங் கோயிலாச்சேன்னு விட்டேன். ஓட்டல்லயா நாம் படுத்துத் தங்க. அங்கன ரெண்டு நாயி படுத்துக் கெடக்கு. அதப் பத்த மாட்டேங்கானுக. எம்மேல பாயுதானுக."
அவருக்கு விளக்கம் சொன்னேன். "அவங்க அங்க படுக்கக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? எல்லாம் பாதுகாப்புக்காகத்தான். இருட்டு வேளை. கடலோரம் வேற. அதுனாலதான். சுனாமி வந்ததுன்னு சொல்றாங்களே. அதுனாலதான் இந்தப் பாதுகாப்பு."
"இப்படி வெளக்கமாச் சொன்னாத்தானே தம்பி. லொட்டு லொட்டுன்னு தட்டுதானுகளே. எந்தி எந்தீன்னு பத்துதானுகளே. முருகங் கோயில்ல இப்படி நடக்கானுகளேன்னு எனக்கு வருத்தம். அவ்வளவுதான் தம்பி. ஏந்தம்பி, சுனாமியா! இது திருச்செந்தூரு. இங்க கடலு உள்ள வந்துருமா? என்ன தம்பி பேசுறீங்க! அத்தன ஊருல வெள்ளம் அடிச்சப்ப இங்க மட்டும் கடலு உள்ள போச்சு. தெரியுமுல்ல. பேப்பருல எல்லாம் போட்டுருந்துச்சுல்லா!"
அவருடைய நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பினால்தானே கடவுள்.
அவருடைய புலம்பல் தொடர்ந்தது. "இங்க படுக்கவிடாம தடுத்துட்டானுக. எங்க போய்ப் படுக்க? ஓட்டலுக்குக் குடுக்கக் கொட்டியா கெடக்கு? நானே கைக்காசு சேத்து உவரீல இருந்து வந்துருக்கேன். புள்ளக நல்லாப் படிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டுப் போக வந்தேன். எல்லாரும் வரச் செலவுக்கு ஆத்த மாட்டமத்தான் நா மட்டும் வந்தேன்."
"ஒங்க நம்பிக்க வீண் போகாது. ஒங்க பிள்ளைங்க நல்லா படிச்சு முன்னுக்கு வந்து ஒங்களக் காப்பாதுவாங்க. நீங்க நம்புற முருகன் கைவிட மாட்டான்."
"ரொம்ப நல்லது தம்பி. படிச்சவக சொல்றீங்க. எல்லாம் பலிக்கட்டும். நமக்கென்ன. பிள்ளைக நல்லாருந்தாச் சரிதான். கடைசி பஸ்சுக்கு வந்தேன். காலைல கும்புட்டுட்டு அப்படியே பொறப்பட்டு போலாமுன்னு பாத்தேன். இந்தப் பயலுக தூங்க விடல. இப்ப ராத்திரி முழுக்க இப்பிடியே நடக்கவா?"
"தேவையில்ல. கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா ஆறுமுக ஆசாரி கலையரங்கம் வரும். அங்க படுத்துக்கலாம். பாதுகாப்பா இருக்கும். அங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. காலைல சீக்கிரமா எந்திரிச்சு சாமியப் பாத்துருங்க. அப்புறம் கூட்டம் வந்துரும்."
"ஆகட்டும் தம்பி. இப்படித் தெளிவாச் சொன்னாதான தெரியுது எங்களுக்கு. இதுக்குதான் படிக்கனுங்கறது. இனிமே நமக்கு எங்க? ஆமா. ஒங்க பேரு என்ன தம்பி?"
"எம்பேரு முருகன்."
பேருக்கும் ஊருக்கும் இருக்கும் தொடர்பை உணர்ந்து சொன்னார். "சந்தோசம் தம்பி. சாமி பேரு. அதான் இம்புட்டுப் பேசுறீக. அந்த முருகன் ஒங்கள நல்லா வெச்சிக்கிறட்டும். வர்ரேன் தம்பி!" சொல்லி விட்டு அந்த ஆள் கலையரங்கத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். கள்ளமில்லாத மனது.
திரும்பி நடந்தேன். காலையில் சீக்கிரமாக இவரை எழுப்பி விட வேண்டும். பின்னே. மெனக்கெட்டு என்னைப் பார்ப்பதற்கு உவரியிலிருந்து வந்திருக்கின்றாரே. கூட்டம் வருவதற்கு முன்னால் என்னைப் பார்த்து விட்டால் அவன் என்னிடம் கூடக் கொஞ்சம் பேசுவான் அல்லவா!
அன்புடன்,
கோ.இராகவன்