PDA

View Full Version : தீபாவளியும் தீபாவலியும்



gragavan
28-10-2005, 10:56 AM
தீபாவளியும் தீபாவலியும்

தீபாவளி வந்தாச்சு. என்னென்னவோ கொண்டாட்டங்கள். குதூகலங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொன்னு மாறிக்கிட்டே வருது. தீபாவளி கொண்டாடும் முறையும்தான். இந்த ஆண்டு தீபாவளிக்கு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பரிசு world space radio. ஆபீஸ்ல ஒரு ஆஃபர் சேல்ஸ் போட்டிருந்தான் ஆர்டர் கொடுத்துட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து இன்ஸ்டால் பண்ணீருவாங்க.

இத்தன தீபாவளி கொண்டாடிருக்கமே...எத்தன தீபாவளி நெனவிருக்குன்னு பாத்தா.....கணிசமா கொஞ்ச தீபாவளிகள் தனியா வரிசைல வந்து நிக்குதுங்க.

தீபாவளிக்கும் எனக்கும் உறவு ரொம்ப நல்லவே இருந்ததுன்னு பொய் சொல்ல விரும்பல. ஏன்னா....எனக்கு ஆன விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்கோ அல்லது தீபாவளியை ஒட்டியோதான் ஆயிருக்கு.

விளாத்திகுளம் பக்கத்துல புதூர். அதுதான் எங்க மூதாதையார் ஊர். இப்பவும் அந்தூர்ல எங்க சித்தப்பா குடும்பமும் மத்த சொந்த பந்தங்களும் இருக்காங்க.

தீபாவளி வந்துச்சுன்னா.....சொந்தக்கார சாதிக்கார பொம்பளைங்களெல்லாம் வெரதம் இருந்து பூஜை செய்வாங்க. இந்த வெரதத்துல பலவிதம் இருக்கு. அத இன்னோரு சமயம் பாப்போம்.

தீபாவளி இரவில் அருப்புக்கோட்டை ரோட்டுல உள்ள ஜின்னிங் பாக்டரி வாசல்ல இருக்குற வில்வ மரத்தடியில பூஜை பண்ணுவாங்க. மரத்தடியில செலை எதுவும் இருக்காது. களிமண் கொண்டாந்து அதப் பெசைஞ்சி சுத்துச் சுவரு மூணு அடுக்கு வெச்சி (எல்லாம் தோராயந்தான்) நடுவுல உருண்டை பிடிச்சி வெப்பாங்க. அதுக்குக் குங்குமமும் மஞ்சளும் வெச்சா சாமி தயார்.

பூஜைக்குள்ள ஏற்பாடுகள் வீட்டுல நடக்கும் பாருங்க...அப்பபா......விரதம் இருக்குற ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தட்டு. அதுல 21 அதிரசம், 21 வாழப்பழம், 21 வெல்லக்கட்டி (மண்ட வெல்லம் கெடையாது. வெல்லக்கட்டின்னு சின்னதா இருக்கும்.), 21 முடி போட்ட நோம்புக் கயிறு, 21 வெத்தல, 21 பாக்கு, காதோலை கருகமணின்னு நெறைய அடுக்கி வெச்சிருப்பாங்க.

காதோலை கருகமணின்னா தெரியுமா? அடிக்கிற மிட்டாய் ரோஸ் கலர்ல ஓலையைச் சுருட்டி அதை ஒரு சின்ன கருப்பு வளையல்ல செருகீருப்பாங்க. அதுதான் காதோலை கருகமணி. (இதப்பத்தியும் ஒரு தனி பதிவு போடனும்.)

அப்புறம் பூவு, சூடம், வெளக்கு, மாவெளக்குன்னு எடுத்துக்கிட்டு போவாங்க. கொழுக்கட்ட வெளக்கு வைக்கிறவங்களும் உண்டு. பெரிய சுமங்கலிப் பெண் (அநேகமா ஒரு பெரிய பாட்டி) வந்து பூஜையைத் துவக்குவாங்க.

மந்திரமும் தெரியாது. ஆகமும் தெரியாது. ஆனா ஆத்மார்த்த பூஜை நடக்கும். தமிழில் அச்சடிச்ச ஒரு கதை புத்தகம் இருக்கும். அதைப் படிப்பாங்க. அதுக்கப்புறம் அம்மனோட போற்றி இருக்கும். அதைச் சொல்லுவாங்க. அப்புறம் சூடம் காமிச்சி, பூஜை முடியும். அந்நேரம் ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்குற சீதாராமு டாக்கிசில் படமும் முடிஞ்சிருக்கும்.

பூஜையெல்லாம் முடிஞ்சதும் எல்லாரும் மரத்தைச் சுத்துவாங்க. அந்த மரம் ரொம்பவே பழைய மரம். ஆகையால ஊர்ப் பொம்பளைகளுக்கு அந்த மரம்னா ஒரு செண்ட்டிமெண்ட்டு.

நானும் சின்னப்பய, எல்லோரோடையும் சேந்து மரத்தச் சுத்துனேன். ரெண்டு மூணு மரம் ஒன்னாச் சேந்து வளந்த மரம் அது. வேணுக்குமுன்னே ரெண்டு மரத்துக்குள்ள நசுங்கி நெளிச்சி போனேன்.
எல்லாரும் ஒழுங்கா மரத்தச் சுத்திக்கிட்டு இருந்தாங்க. நடுராத்திரி. திடீருன்னு நான் அம்மான்னு கத்துறேன். எல்லாரும் ஓடி வந்து பாத்தாங்க. ஒரு பெரிய பாட்டில் துண்டு பாதத்தைக் கிழிச்சிக்கிட்டு ஆழமாப் போயிருக்கு. ரத்தம் சொளுசொளுன்னு ஊத்துது.

என்னையத் தூக்கிக்கிட்டு அங்க இருக்குற ஆஸ்பித்திரிக்கு ஓடுறாங்க. அந்த டாக்டர் எனக்கு அக்கா முறை வேணும். ஊசீல மருந்து ஏத்துறாங்க.....எனக்கு ஊசீன்னா பயம்.....வலி வேற. மூனு பேரு என்னைய அழுத்திப் பிடிச்சிக்கிட்டதும் ஊசி மருந்தோட ஏறுச்சு. ஓஓஓஓஓஒன்னு கத்துனது இன்னும் நல்லா நெனவிருக்கு. பக்கத்துல இருந்த சோடா பாக்டரிக்காரரு தூக்கத்துல எந்திரிச்சி வந்துட்டாரு.

இப்படிப் போச்சு அந்தத் தீபாவளி. அடுத்த வருசம் என்னாச்சு தெரியுமா? ஒன்னும் ஆகலை. தீபாவளி நல்லபடியாப் போச்சு. தீபாவளிக்குப் பின்னாடியே கார்த்திகை வரும். தூத்துக்குடி புதுக்கிராமத்தில் எல்லா வீட்டுலயும் வெளக்கு ஏத்தி வெச்சிருப்பாங்க. ரொம்ப அழகா இருக்கும்.

எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்தவங்க தூத்துக்குடி காமராஜ் காலேஜ் ஃபுரபசர் குடும்பம். அவங்களுக்கு ஊருல இருந்து வெடிகள் நெறைய வரும். அந்த வீட்டுப் பையன் என்னோட நண்பன். அன்னைக்கும் வீட்டுல நெறைய அகல் வெளக்குகள ஏத்தி வெச்சிட்டு காத்துல அணையாம வாசல்ல உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.
அப்ப பக்கத்து வீட்டுலயும் வெளக்கு வெச்சிருந்தாங்க. அங்க போய்ப் பாக்கலாமுன்னு வேகமா வெளிய ஓடி பக்கத்து வீட்டுக்குள்ள வேகமா நொழஞ்சேன். ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிக்கிட்டே கீழ விழுந்தேன்.

பின்னே...என்னோட ஒரு தொடையே வெந்துருச்சே. என்னோட நண்பன்னு சொன்னேனே அவன் பென்சில் பிடிச்சிக்கிட்டு இருந்தான். அவன் வாசல்ல நின்னத நான் பாக்கல. நான் வேகமா வந்தத அவன் எதிர்பாக்கல. சர்ருன்னு தொடைல பட்டு தொடை வெந்துருச்சு.
அப்ப ஸ்டெச்சிலான் கால்சட்டை ரொம்ப பேமஸ். கலர்கலரா இருக்கும். அதுதான் போட்டிருந்தேன். அது தீயில உருகி தோலில் ஒட்டிக்கிச்சு வேற.

அதப் பாத்ததும் எங்கத்தைக்கு மயக்கம் வந்துருச்சு. கிறுகிறுன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பக்கத்து வீட்டு ஃபுரபசர்தான் என்னை சைக்கிள்ள தூக்கீட்டுப் போயி டாக்டர் கிட்ட காட்டுனாரு.
அந்த டாக்டரும் ஒரு ஊசில மருந்த ஏத்தி சினிமா டாக்டரு மாதிரி மேல பாத்து அமுக்குனாரு. அந்த வலியிலயும் நான் கதறுனேன். ஊசிய புண்ணப் பாத்துக் கொண்டு வந்தாரு. "ஐயோ டாக்டர். வேண்டாம். புண்ணுல ஊசி போடாதீங்க வலிக்கும்"....நாந்தான் கதறுனது.

ஆனா அவரு புண்ணுல ஊசி போடல. அந்த மருந்த புண்ணுல பீச்சி அடிச்சாரு. அப்புறமா தொடச்சு மருந்து போட்டு கட்டு கட்டினாரு.
ரொம்ப நாள் நான் கஷ்டப்பட்டு (மூனாவது படிச்சப்ப) நடந்தேன். உக்கார முடியாது. ஓட முடியாது. தூக்கத்துல தொடை மேல் அடுத்த கால் பட்டுட்டா எரியும். அப்புறம் ஒடனே தூக்கம் வராது. இன்னும் நெறைய.

இன்னும் நெறைய தீபாவளிகள் இருக்கு. இப்ப இவ்வளவு போதும். இதுனால நான் சொல்ல வர்ரது என்னன்னா....
1. அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
2. வெடி வெடிக்கும் போது பாத்துப் பத்திரமா வெடிங்க.
அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
28-10-2005, 11:06 AM
நல்ல பதிவு ராகவன்...

ஆனால் எனக்கும் தீபாவளிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமே....

எனக்கு இந்த பட்டாசு சத்தமே கொஞ்சம் அலர்ஜி. காது செவிடாகிவிடுமோ என்ற பயம். இன்னொன்னு ஆரவாரமில்லாமல் அமைதியாக கொண்டாடும் விழாக்களையே மிகம் அதிகம் நேசித்து வந்திருக்கிறேன். வருகிறேன். ஏனோ அமைதியின் மீது அப்படி ஒரு காதல். அதனாலேயே மவுனமாக இருப்பது எனக்கு பிடிக்கும். 8 அல்லது 9 வருடங்களுக்கு முன் பட்டாசு வெடித்த போது நடந்து விபத்து. தொடர்சியாக எனக்கு தங்கைக்கு அப்பாவுக்கு என்றூ மூன்று பேர் வைத்த புஸ்வானமும் வெடித்து காயம். அப்பாவுக்குத்தான் கையில் அதிகம் காயம். அப்பாவின் கைகளுக்குள் தங்கையின் கைகள் இருந்ததால் லேசான காயமே... எனக்கும் அதே போலத்தான். அப்பா அப்போது அனுபவித்த வேதனையை பார்த்த பின்பு பட்டாசை தொடுவதற்கு மனம் விரும்புவதே இல்லை..

gragavan
28-10-2005, 11:10 AM
அமைதியாகவும் கொண்டாடலாம். ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடலாம். தீபாவளியை நான் பொதுவாகவே கொண்டாடுவதில்லை. அதாவது புதுத்துணி எடுப்பதில்லை. ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவது பொங்கலை. பெங்களூர் வரும் முன்பெல்லாம் வீட்டு வாயிலில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம். இதற்காகவே ஒரு வெங்கலப் பானையை அம்மா வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பட்டாசு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை. மிகமிக. காரணம் வெறும் தீப்புண்ணை விட இது காந்தும். ஏனென்றால் அதிலிருக்கும் வெடி மருந்து. ஆகையால் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும்.

பென்ஸ்
28-10-2005, 11:28 AM
அது என்னதோ தீபாவளிக்கு 1 மாதம் முன்னமே நானும் என் உடன் பிறப்புகளும் (படிக்கும் நேரத்தில் மட்டும்) என்ன என்ன பட்டாசு வாங்க வேன்டும் என்று திட்டமிடுவது தான் எனக்கு நியாபகம் வரும்....அக்காவின் பட்டாசை திருடுவது என்றால் தனி சுகம்... தீபாவளி முடிந்தால் கிறித்துமஸ் பற்றி திட்டமிட தொடம்குவோம்.... ஆனால் தீபாவளி, கிறிஸ்துமஸ் கொண்டாடியே 5 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன...

பட்டாசால் சிறு தழும்பு கிடைத்தால் எதோ வீர தழும்புன்னு ரெம்ப பெரியதாக பிதற்றலாம் :-)..... எனவே, கலாய்க்குங்க...;-)
ஆனால் பாதுகாப்பு மிக மிக முக்கியம் ....

ராகவன்... அது என்ன "21 அதிரசம், 21 வாழப்பழம், 21 வெல்லக்கட்டி...."
.......எதற்க்காக 21 எண்ணங்கள்..

gragavan
28-10-2005, 11:39 AM
ராகவன்... அது என்ன "21 அதிரசம், 21 வாழப்பழம், 21 வெல்லக்கட்டி...."
.......எதற்க்காக 21 எண்ணங்கள்..அது விரதக் கணக்கு பெஞ்சமின். இந்தப் பூஜை முடிந்து அந்தப் பெண்கள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அதிரசமும் வெல்லக்கட்டியும் சாப்பிடுவார்கள். வாழைப்பழம் தாங்காது. விரைவில் அழுகிவிடும். அதனால் அதற்கு விதிவிலக்கு. எல்லாருக்கும் கொடுத்து விடுவார்கள்.

பாரதி
28-10-2005, 02:50 PM
சுவாரஸ்யமான பதிவு இராகவன். நான் தீபாவளி என்றதும் அதைப்பற்றி சொல்வீர்கள் என்று நினைத்தால்... புதிய விசயங்கள்! ம்ம்... இன்னும் உங்களிடமிருந்து பல சுவாரஸ்யமான சம்பவங்கள் வரவிருக்கின்றன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இளசு
28-10-2005, 09:48 PM
அருமை இராகவன்.
தோளில் கைபோட்டு மதகுப்பக்கம் பள்ளித்தோழனுடன்
பழைய கதை பேசிய சுகம் - இந்தப்பதிவு படித்து.
சிநேகமான எழுத்துகள் அமைவது வரம் - உங்கள் பலம்.

வில்வமரம் - படித்தே எத்தனை காலமாகிவிட்ட சொல்!
சிவனுக்கு உகந்த மரம்!!

தீப வலி நினைவுகளை யதார்த்தமாய் தந்து நல்ல அறிவுரையுடன்
முடித்த விதத்துக்கு தனி பாராட்டு.

(என் தீபாவளிகள் அந்தக்காலம் முழுமைக்கும் சிவாஜி படம் முதல் காட்சியில்தான்.
புதுச்சட்டை அன்றே கிழிந்த கதையும் உண்டு.
பல வெடி(விபத்துக்) கதைகளும் கைவசம் இருக்கு.
சிவாஜி படம் தீபாவளிக்கு வருவது நின்றதும்
என் தீபாவளி எதிர்பார்ப்புகள் வற்றியதும்,
தற்செயலே!)

gragavan
09-11-2005, 11:49 AM
நன்றி பாரதி அண்ணா. இன்னும் நிறைய இருக்கு. ஆனா இப்ப இல்ல. கொஞ்ச நாள் கழிச்சி.

இளசு அண்ணா, அப்படியே ஒங்க கதைகள எடுத்து விடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிர்ரோம்.

sarcharan
06-03-2006, 09:01 AM
நாங்கள் பதினோராம் வகுப்பு படிக்கும் சமயம்....
எல்லோரும் பள்ளிக்கு தீபாவளி உடுப்புகளை அணிந்து வருவோம்..
நண்பன் பிரதீப்பின் வாழ்வில் நடந்த சோகம்.
தீபாவளி உடுப்புகளை துவைத்து வெளியே உலர்த்தியிருக்கிறார்கள்.
பாவம் ராவோடு ராவாக எவனோ கப்ளீகரம் செய்து விட்டான்...

pradeepkt
06-03-2006, 09:54 AM
நாங்கள் பதினோராம் வகுப்பு படிக்கும் சமயம்....
எல்லோரும் பள்ளிக்கு தீபாவளி உடுப்புகளை அணிந்து வருவோம்..
நண்பன் பிரதீப்பின் வாழ்வில் நடந்த சோகம்.
தீபாவளி உடுப்புகளை துவைத்து வெளியே உலர்த்தியிருக்கிறார்கள்.
பாவம் ராவோடு ராவாக எவனோ கப்ளீகரம் செய்து விட்டான்...
அடப்பாவி, அதை இன்னும் நினைவு வச்சிருக்கியா???
அழகு பெத்த சட்டை எங்க அத்தை எடுத்துக் குடுத்த சட்டை...
நீலக்கலரு சட்டை அதில கோலம் போட்ட சட்டை...
எடுத்த பய ஒரு வாழ மட்டை. (சும்மா டி ஆர் மாதிரி முயற்சி பண்ணிப் பாத்தேன் :D)

gragavan
07-03-2006, 04:23 AM
அடப்பாவி, அதை இன்னும் நினைவு வச்சிருக்கியா???
அழகு பெத்த சட்டை எங்க அத்தை எடுத்துக் குடுத்த சட்டை...
நீலக்கலரு சட்டை அதில கோலம் போட்ட சட்டை...
எடுத்த பய ஒரு வாழ மட்டை. (சும்மா டி ஆர் மாதிரி முயற்சி பண்ணிப் பாத்தேன் :D)அடடே!!!!!!!!!! துணியா! அதுவும் புதுத்துணியா! அடடே! போச்சா! எல்லாஆஆஆம் போச்சா! அடடே! சொல்லவேயில்லையே!

(இத எப்படிப் படிக்கனுமுன்னு பிரதீப்புக்குத் தெரியும்.) :D :D :D

pradeepkt
07-03-2006, 05:35 AM
அடடே...
திருப்தியா...
அடடே.... :D

gragavan
07-03-2006, 05:41 AM
அடடே...
திருப்தியா...
அடடே.... :Dதிருடிதி...சீச்சீ திருப்தி.

jose007
04-06-2006, 02:53 PM
நானும் என் தங்கையும்.... பட்டாசு வாங்கபோனால்.... நான் எனக்கு பட்டாசு வாங்காமல்... அந்த காசை அப்பாவிடமிருந்து வாங்கிவிடுவேன்.... அப்புரம்...திபாவளிக்கு... நான் பட்டாசு இல்லாமல் நிற்க்க.... தங்கையின் பட்டாசு (எல்லாம்.. மத்தாப்புதான்..) வாங்கி வெடிப்பேன்... அப்புறம்.... 6-7ஆவது படிக்கும் பொழுது.... சிவகாசியில் சிறுவர்கள் குழந்தைதொழிலாளர்களாக வேலை செய்து பட்டாசு செய்கிரார்கள்.... பட்டாசுகளை புறக்கணியுங்கள். என ஒரு கவிதை படித்த்து.... பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டேன்......

தாமரை
05-06-2006, 05:17 AM
அது விரதக் கணக்கு பெஞ்சமின். இந்தப் பூஜை முடிந்து அந்தப் பெண்கள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அதிரசமும் வெல்லக்கட்டியும் சாப்பிடுவார்கள். வாழைப்பழம் தாங்காது. விரைவில் அழுகிவிடும். அதனால் அதற்கு விதிவிலக்கு. எல்லாருக்கும் கொடுத்து விடுவார்கள்.
முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி - 3 பிறவிகள் .. ஏழு உலகங்கள்..

மொத்தம் 21...

மயூ
05-06-2006, 05:32 AM
அடப்பாவி, அதை இன்னும் நினைவு வச்சிருக்கியா???
அழகு பெத்த சட்டை எங்க அத்தை எடுத்துக் குடுத்த சட்டை...
நீலக்கலரு சட்டை அதில கோலம் போட்ட சட்டை...
எடுத்த பய ஒரு வாழ மட்டை. (சும்மா டி ஆர் மாதிரி முயற்சி பண்ணிப் பாத்தேன் :D)
சும்மா ஒரு சட்டையை எடுத்ததற்கு இத்தைனை திட்டா.... சரியான காளமேகமா இருப்பீங்க போல...... :D :D

மயூ
05-06-2006, 05:35 AM
நானும் என் தங்கையும்.... பட்டாசு வாங்கபோனால்.... நான் எனக்கு பட்டாசு வாங்காமல்... அந்த காசை அப்பாவிடமிருந்து வாங்கிவிடுவேன்.... அப்புரம்...திபாவளிக்கு... நான் பட்டாசு இல்லாமல் நிற்க்க.... தங்கையின் பட்டாசு (எல்லாம்.. மத்தாப்புதான்..) வாங்கி வெடிப்பேன்
தங்கையோட வெடியைப்போட்டீங்களா... நிச்சயமா நீங்க அரசியல் வாதியாக வரவேண்டியவர் சரியா???????