PDA

View Full Version : தருமனும் தருமமும்



gragavan
26-09-2005, 06:32 AM
தருமனும் தருமமும்

அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் பெருமிதம்.

பின்னே. ஐந்து தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்கம் புக வந்து, தனியொருவனாகப் போகிறான் அல்லவா. முதலில் திரவுபதி வீழ்ந்தாள். அடுத்து சகாதேவன். கொஞ்ச நேரத்திலேயே நகுலன். அந்தோ! அழகிய அருச்சுனனும் மாண்டான். பலசாலி பீமன் கூட பாவம். வீழ்ந்தான். மிஞ்சியன் தருமனே. அவனை, தன் மகனை உடலோடும் உயிரோடும் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான் தருமதேவதை. ஆகையால்தான் இருவர் முகத்திலும் பெருமிதம்.

தருமதேவன் சொர்க்கத்திலேயே தங்க முடியாது. அவனுடைய உலகத்திற்குச் சென்று காலம் தவறாமல் காலன் பணியைச் செய்ய வேண்டும். ஆகையால் மகனைச் சொர்க்கம் ஏற்றி விட்டு அவனும் உடனே விலக வேண்டும். கடமை தவறினால் சர்வேசுவரன் விட மாட்டான்.

தருமனுக்கும் மகிழ்ச்சிதான். "சொர்க்கத்தில் தம்பியரைச் சந்திக்கலாம். திரவுபதையைச் சந்திக்கலாம். பெரிய பாட்டனார் பீஷ்மரையும், ஆசான் துரோணரையும், குலகுரு கிருபாச்சாரியரையும் சந்திக்கலாம். தாயார் குந்தியையும் கூடவே சிற்றன்னை மாதிரியையும் சந்திக்கலாம். என்னதான் இருந்தாலும் பெரியப்பா திருதுராட்டினரையும் பெரியம்மா காந்தாரியையும் கண்டிப்பாக வணங்க வேண்டும். பீமன் என்று நினைத்து இரும்புத் தூணை நொறுக்கினாரே பெரியப்பா. அது போல தன்னையும் நொறுக்கி விடாமல் இருக்க பேசாமல் அவர் காலில் விழுந்து வணங்குவதே நல்லது." இன்னும் உயிராசை தருமனை விடவில்லை.

ஆசைகளும்தான். "பேசாமல் தம்பியரையும் தாயாரையும் திரவுபதையையும் கூட்டிக் கொண்டு ஒருபுறமாக சென்று ஒதுங்கி வாழ வேண்டும். பின்னே! மற்ற உறவினர்களைச் சந்திக்கையில் தேவையில்லாமல் போர் நினைவுகளும் அதில் நடந்த கொலைகளும் அக்கிரமங்களும் வரும். நம்முடைய பொய்யால்தான் துரோணரும் வீழ்ந்தார். அவர் நம்மை மன்னிக்க மாட்டார். அவரிடமிருந்தும் தள்ளியிருப்பதே நல்லது. துரியோதனாதிகள் நூறுவரும் நிச்சயம் நரகத்தில் இருப்பார்கள். ஆகையால் அவர்களால் பிரச்சனையில்லை. கர்ணர் எங்கிருப்பார்? நமது அண்ணன் ஆகையால் சொர்கத்தில்தான் இருக்க வேண்டும்." புதிதாக இந்த அண்ணன் பாசம் வேறு.

"அவர் நம்மோடு வருவாரா? ஒருவேளை துரியோதனனோடு இருக்க அவரும் நரகத்திற்குப் போயிருந்தால்?" தருமனின் மூளை கணக்குப் போட்டது. முடிவும் கண்டது. "சரி. அம்மாவிடம் சொல்லிக் கூப்பிடலாம். அம்மாவின் மீது அண்ணனுக்குப் பாசமுண்டு. இல்லையென்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்ற வரமும் வாங்கி, போர்க்களத்தில் தான் வீழ்ந்தால் தன்னை மடியில் தூக்கி வைத்துக் கதற வேண்டும் என்று கேட்டிருப்பாரா? அம்மாவை வைத்துத்தான் அண்ணனை வளைக்க வேண்டும். அட! இதென்ன நறுமணம். மனதை மயக்குகிறதே. சொர்கம் வந்து விட்டதா?"

ஆம். உண்மையிலேயே சொர்கம் வந்து விட்டது. புட்பக விமானமும் நின்றது. மகனை இறங்கச் சொன்னான் தருமதேவதை. "மகனே. உடலோடு சொர்கம் புகுந்தான் என் மகன் என்ற பெருமை எனக்கு. இனியும் உன்னோடு நான் வரலாகாது. தரும விதிகளின் படி உன்னை இங்கு அழைத்து வரத்தான் கடமை. அதற்கு மேல் நான் என் கடமையைச் செய்யச் செல்ல வேண்டும். நீ இப்படியே சென்றால் உனக்கு வேண்டியவர்களையெல்லாம் காண்பாய். நான் வருகிறேன்."

தருமதேவதை புட்பக விமானத்தில் புறப்பட்டதும் வந்தடைந்த இடத்தை நன்றாகக் கவனித்தான். பச்சைப் பசேலென்று எங்கும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். கொடிகள். அவைகளில் மலர்கள் பூத்து நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கடும் வெயிலும் இல்லை. நடுக்கும் குளிரும் இல்லை. இதமான தட்பவெட்பம் சுகமாக இருந்தது. ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடினாலும் கரையைத் தாண்டவில்லை. சொர்கமல்லவா! வெள்ளம் வராது.

ஆற்றில் எல்லா உயிர்களும் ஒன்றாகவே தண்ணீர் குடித்தன. புலியும் பசுவும் கூடிக் குடித்தன. புலியும் பசுவைத் துறத்தவில்லை. பசுவும் மருளவில்லை. வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களின் ஓரமாகச் சென்ற பாதையில் நடந்தான் தருமன். சொர்கத்தின் விந்தைகளை வியப்பாக பார்த்துக் கொண்டு சென்றான். என்ன இருந்தாலும் ஊருக்குப் புதிதுதானே.

"இதென்ன சொர்கம். மயன் நமக்குக் கட்டிக் கொடுத்த மாளிகையையும் தோட்டத்தையும் விட அருமையாக இருக்கிறதே. இங்கே ஒரு ஆனந்த அமைதி நிலவுகிறதே. எப்படி? ஒரெ விலங்குகளும் பறவைகளுமாகத் தெரிகின்றனவே. மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? தேவர்கள் எங்கே இருப்பார்கள்? நான் வருகிறேன் என்று யாருக்கும் சொல்லவில்லையா? கிருஷ்ணர் கூட வந்து வரவேற்கவில்லையே. ஒவ்வொருவராக எங்கு போய்த் தேடுவது?"

கொஞ்ச தூரம் செல்லச் செல்ல பொன் மாளிகைகள் தொலைவில் தென்பட்டன. அங்குதான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எண்ணி நடந்தான் தருமன். "பெரிய ஊர் போலத் தெரிகிறது. இவ்வளவு பெரிய அழகான மாளிகைகள் தெரிகின்றன. நமக்கு வேண்டியவர்கள் எல்லாம் இங்குதான் இருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் போய்ப் பார்க்கலாம். முதலில் யாரைப் பார்ப்பது? திரவுபதியைப் பார்த்து நாளாயிற்று. அவளோடு கூடிக் களிக்க வேண்டும். தாயாரை முதலில் பார்த்தாலும் நல்லதே. ஆசி வாங்கலாம். இவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று ஊருக்குள் போய் கேட்கலாம்."

இப்படி நினைத்துக் கொண்டு நடக்கையில் எதிரே ஓடி வந்தான் சகுனி. "தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்." பாசம் மிகுந்த குரலில் அழைத்தான் சகுனி.

"அடடா! முதலில் போயும் போயும் சகுனி முகத்திலா விழிக்க வேண்டும். இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!"

"என்ன தருமா யோசனை?" சகுனி இடைமறித்தார்.

"இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்கந்தானா?" கொஞ்சம் ஐயத்தோடே கேட்டான் தருமன்.

சிரித்து விட்டான் சகுனி. "மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்கந்தான் மருமகனே."

இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. தருமன் நினைத்ததைச் சகுனி புரிந்து கொண்டான். "மருமகனே! ஏதடா இவ்வளவு அடாது செய்த மாமன் சொர்கத்திலும் விடாது தொடர்ந்து வருகிறானே என்று பார்க்கிறாயா? நான் செய்த காரியங்கள் அனைத்தையும் இறைவன் பெயரால் செய்ததால் சொர்கம் எனக்கு கதவு திறந்தது. காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். ஆனாலும் இறைவனை விடாது தொழுது, அவன் பெயரிலேயே அனைத்தையும் செய்ததால் இறைவன் அருளிய பரிசு இது."

தருமனக்கு இன்னொரு ஐயம் வந்தது. "அப்படியென்றால் தாங்கள் காந்தார தேசத்துச் சொர்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இங்கு என்ன செய்கின்றீர்கள்? காந்தாரி பெரியம்மா இருப்பதால் இங்கும் வந்து விட்டீர்களா?"

சிரித்து விட்டான் சகுனி. தருமனுக்குப் பதமாகச் சொன்னான் ஒரு மறுமொழி. "சொர்கம் என்பது தேசங்களுக்கல்ல. நேசங்களுக்கு. இங்கு அன்பின் வழியதுதான் அனைவரின் நிலை. மாண்டாரை அன்றி உயிரோடு மீண்டார் சொர்கத்தின் மகத்துவத்தை அறியார் என்பது உண்மைதான் போலும். மேலும் நீ உன் காந்தாரி பெரியம்மாவைப் பற்றிச் சொன்னாய். மருமகனே. நானும் ஒரு அண்ணன். எனக்கும் சகோதரி மேல் கொஞ்சம் பாசம் உண்டு. இங்கு வந்த பிறகு அது பல்கிப் பெருகி விட்டது. மேலும் காந்திரியைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அதே பாசம் உனது தாய் குந்தியைப் பார்த்தாலும் இப்பொழுது வருகிறது. சொர்க்கத்திற்கு நன்றி."

"என்ன அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்தீர்களா?" ஆவல் பொங்கக் கேட்டான் தருமன்.

"ஆம் தருமா! உன்னுடைய தாயும் நலம். பெரியம்மாவும் நலம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இங்கு உனது பெரியம்மா கண்களைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் சொர்கத்தில் குருடர்கள் இல்லை. உன்னுடைய பெரியப்பா அனைத்தையும் பார்க்கலாம். ஆகையால் கண்ணைக் கட்டிக் கொள்ளாத உனது பெரியம்மாவைப் பார்க்க உனக்கே புதுமையாக இருக்கும். சரி. வா. போய்ப் பார்க்கலாம்."

யுதிஷ்டிரன் வியப்பின் உச்சிக்கே போனான். சரி பெரியம்மாவையும் பெரியப்பாவையும் சந்தித்து ஆசி பெற எண்ணி சகுனியுடன் சென்றான்.

சற்று முன்னே நடந்திருப்பார்கள். யாரோ ஒரு பெண் சிரித்துக்கொண்டே சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடினாள். அவள் சரக்கென்று கடந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. பின்னால் ஒரு ஆண்மகனும் ஓடினான். அட! அது கர்ணன். தருமனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வந்தது. "அண்ணா என்று அழைத்தான்."

கர்ணனும் திரும்பிப் பார்த்தான். முகத்தில் வியப்பும் அன்பும் தெரிந்தன. கொடுத்துப் பழக்கப் பட்ட கர்ணனிடத்தில் கொடுக்க அன்பும் நிறைய இருந்தது. "தம்பி, நலமா? உன்னை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." தருமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

தருமனுக்குக் கண்ணில் தண்ணீர் வழிந்தது. "அண்ணா என்று உங்களை வாய் நிறைய பூமியில் கூப்பிட முடியாமல் போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. நீங்கள் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய அரியணையை நட்புக்காக துரியோதனனுக்குக் கொடுக்க போர் புரிந்தீர்களே. ஐயோ! உங்களுக்கு உரிய அந்த ஆட்சியை நான் அபகரித்தேனே. அண்ணா! எனக்கு மன்னிப்பே கிடையாது. இந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாதே!"

அழுத தம்பியைத் தேற்றினான் கர்ணன். "தம்பி யுதிஷ்டிரா, அழாதே. வா! நாம் முதலில் அன்னையைக் காணலாம். பிறகு தம்பியர்களைக் காணலாம்." தருமனின் கண்ணைத் துடைத்து அழைத்துச் சென்றான் கர்ணன். சகுனியும் உடன் சென்றான்.

சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். இருமருங்கிலும் புத்தம்புது வீடுகள். மாட மாளிகைகள். கூட கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் செந்தாமரையும் வெண்டாமரையும் பூத்துக் குலுங்கின. அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.

சூரியன் கண்ணில் தென்படவேயில்லை. ஆனாலும் வெளிச்சம் பரவியிருந்தது. அந்த வெளிச்சமும் கண்ணை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. என்னவோ ஒரு மென்மையான ஒளி பரவியிருந்தது போல சுகமாக இருந்தது.

பெரியம்மாவையும் பெரியப்பாவையும் பார்க்க அவர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராஷ்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பொன்னிறது மரத்தில் வெள்ளி இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. பார்த்த கண்ணை தருமனால் எடுக்க முடியவில்லை. மூவரின் கையிலும் கோப்பைகள் இருந்தன. ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். "மதிப்பிற்குரிய பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்."

கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.

"மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்கத்தில் காண மகிழ்ச்சியே. நீ வருவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாகச் சேர்வதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனன் மிகவும் மகிழ்வான்."

திருதுராஷ்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.

"தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூறுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?" கவுரவர்கள் நூறுவரும் சொர்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் வகையில் குந்தி சொன்னாள்.

"யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். மற்றவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்."

gragavan
26-09-2005, 06:33 AM
தொடர்ச்சி............

தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் இங்கே வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்க ஆசை கொண்டான்.


"அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?"


"நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்"


குந்தியை இடைமறித்தார் திருதிராஷ்டிரர். "குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்."


லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் சேர்த்துச் சமைத்தது. சுட்ட இறைச்சி. செந்நெற் சோறு. கிண்ணம் நிறைய நெய். பழவகைகள் என்று இருந்தது. அமர்ந்து உண்டான். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.


உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். கர்ணனைப் பார்த்து கேட்டான். "அண்ணா! சொர்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள் அண்ணா! மண்ணுலகிற்கும் இந்த விண்ணுலகிற்கும் என்ன வேறுபாடு?"


"தம்பி, சொர்கம் என்பது இன்பபுரி. இங்கு இறைவனின் அன்புக்குப் பாத்திரமானர்கள் வாழும் ஊர். இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாகாதவர்களும் இறைவனை வணங்காதவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று சொல்கிறார்கள். நரகத்தில் நெருப்பில் உழல்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்ததில்லை.


இந்தச் சொர்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். உடலும் ஒத்துளைக்கும். இங்கு ஊனம் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியிருக்கும் பருவநிலை. மழையை விரும்பினால் விரும்பியவருக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் மற்றவருக்கு அதே இடம் நிலாக் காயலாம். இல்லை வெயிலும் அடிக்கலாம். எல்லாம் நமது மனத்தையும் ஆசையையும் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய உணவும் பானங்களும் கிடைக்கும். இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு கூடிக் களிப்புறலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்."


தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.


தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. "எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான். அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?"


பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிர்ஷ்டனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. "பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் வேகத்தை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உரித்தாயே! உன் தோலைப் போர்க்களத்தில் உரித்தது மறந்து போனதா? ஆனால்.........பாஞ்சாலியும் உன்னோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!"


தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.

தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. "குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!" பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.


தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். "திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!"


இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராஷ்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். "மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன். ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்கத்தில் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..


சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். அது ஆடவருக்கு ஆண்டவன் அளிக்கும் பரிசு. இறைவனை நம்பி வணங்கி வரும் ஆடவர்களுக்கு என்றென்றும் இன்பம் தருவதே சொர்கம். இங்கே இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்."


உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. "இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?" எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.


திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். "பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைக் காப்பதுதானே பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் என்ன நினைத்தால் உங்களுக்கு என்ன வந்தது?"


தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். "திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கு விளக்கம் சொன்னால் எப்படி?"


சிரித்து விட்டாள் பாஞ்சாலி. "ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!


எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். உங்கள் சகோதரர் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை பல காலம் கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.


அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அவன் விலகலாம் என்று கணக்குப் போட முடியாது.


இதை சொர்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது அங்குள்ள நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்."


இப்பொழுது திருதுராஷ்டிரன் வாயைத் திறந்தான். "யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவிற்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்திற்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்."


தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராஷ்டிரன் விட்ட இடத்தில் கர்ணன் தொடர்ந்தான். "தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை."


முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். "இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்திற்கு வருவதற்கான ஒரு சோதனையா! உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்." கதறினான் தருமன்.


கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. "மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.

நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் உனக்காக எங்கும் இருப்பவர் இங்கும் தெரிவார்."


"இல்லை. இல்லை. என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை."


சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனேயே கை விட்டார்கள். சொர்கத்தினர் அவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு சிந்தனைகள் சிலந்தை வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடினான். தடக்கென்று காலை ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான். ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென அவன் உடல் இமயத்தில் இடித்தது விழுந்தது. அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.


அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
26-09-2005, 06:35 AM
அண்ணா, சேமித்து விட்டேன், படித்து பதில் சொல்கிறேன், சில சந்தேகங்கள் உண்டு.

gragavan
26-09-2005, 06:38 AM
படித்து விட்டு கேள். இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையே. ஆனாலும் உன்னுடைய ஐயங்களைக் கேள்.

pradeepkt
26-09-2005, 06:41 AM
நானும் முழுசா ஒரு ரெண்டு தடவைப் படிச்சிட்டு நீங்க என்ன சொல்ல வந்தீங்கங்கறதைக் கேக்குறேன்

mukilan
26-09-2005, 06:41 AM
ஆஹா! நிறைய விசயங்கள் புதிதாக இருக்கிறதே! தர்மன் சொன்ன பொய் என்ன? இது இதிகாசத்தை தழுவி எழுதப் பட்டாலும் புதிய சிந்தனையோடு கற்பனை கலந்து எழுதியிருப்பதால் மிகச் சிறப்பாக இருக்கிறது. இன்னமும் தொடர்வீர்கள் தானே?

gragavan
26-09-2005, 06:58 AM
இல்லை முகிலன். இந்தக் கதை முடிந்து விட்டது. இதுவே பெரிதாக அமைந்து விட்டது.

mukilan
26-09-2005, 07:07 AM
இல்லை முகிலன். இந்தக் கதை முடிந்து விட்டது. இதுவே பெரிதாக அமைந்து விட்டது.

நான் முதல் பகுதியை மட்டும் படித்து விட்டு கேட்டது! நான் பதிந்து விட்டுப் பார்த்தால் இரண்டாம் பகுதியும் இருந்தது.

பரஞ்சோதி
26-09-2005, 07:22 AM
நானும் முழுசா ஒரு ரெண்டு தடவைப் படிச்சிட்டு நீங்க என்ன சொல்ல வந்தீங்கங்கறதைக் கேக்குறேன்

அண்ணா, வழக்கம் போல் புதுமையை புகுத்தியிருக்கிறார்.

அட்டகாசமான வர்ணனை, கற்பனை, கருத்துகள். பாராட்டுகள்.

மன்மதன்
26-09-2005, 07:29 AM
அண்ணா, வழக்கம் போல் புதுமையை புகுத்தியிருக்கிறார்.

அட்டகாசமான வர்ணனை, கற்பனை, கருத்துகள். பாராட்டுகள்.

அதே.. அட்டகாசமான வர்ணனை, கற்பனை.. எழுத்து வடிவம் அபாரம்.. ஒரே மூச்சில் படித்தேன்... இதை சரியாக விமர்சனம் யாராவது பண்ணுவார்கள் என காத்திருக்கிறேன்..;)

gragavan
26-09-2005, 08:00 AM
உண்மை மன்மதன். சரியான விமர்சனத்திற்குதான் காத்திருக்கிறேன். நீ கூட உன்னுடைய கருத்தைச் சொல்லலாமே. எதிலும் சரி அல்லது தவறு என்று இல்லை. ஒவ்வொன்றூம் இருக்கும் இடத்தைப் பொருத்து சரியாகவும் தவறாகவும் இருக்கிறது. ஆகையால் உன் மனதில் என்ன இருக்கிறது என்று நீ தாராளமாகப் போடலாம்.

பிரியன்
26-09-2005, 08:34 AM
ராகவன் இந்த கதையைப் பற்றி விமர்சனம் செய்யத்தான் ஆசை. ஆனால் மகாபாரத சம்பவங்கள் பற்றி தெரியாமல் விமர்சிப்பது அர்த்தமுள்ளதாக இருக்காது.. ஏனெனில் அந்தக் கதை தெரியும் போதுதான் நீங்கள் எப்படி வித்தியாசப்படுத்தி இருக்கிறீர்கள்... உங்கள் பார்வை என்ன என்பது புலனடையும். எனினும் தொடர்ந்து வாசிக்கிறேன். ஏதாவது தோன்றினால் பதிலிடுகிறேன்....

ஆனாலும் தமிழ் மேல் இம்ம்புட்டு ஆர்வம் இருக்கக்கூடாதய்யா.....
எப்படி உமக்கு நேரங்கள் கிடைக்கிறது.. படிப்பதற்கு... வாசிப்பதற்கு.....

gragavan
26-09-2005, 09:06 AM
ராகவன் இந்த கதையைப் பற்றி விமர்சனம் செய்யத்தான் ஆசை. ஆனால் மகாபாரத சம்பவங்கள் பற்றி தெரியாமல் விமர்சிப்பது அர்த்தமுள்ளதாக இருக்காது.. ஏனெனில் அந்தக் கதை தெரியும் போதுதான் நீங்கள் எப்படி வித்தியாசப்படுத்தி இருக்கிறீர்கள்... உங்கள் பார்வை என்ன என்பது புலனடையும். எனினும் தொடர்ந்து வாசிக்கிறேன். ஏதாவது தோன்றினால் பதிலிடுகிறேன்....

ஆனாலும் தமிழ் மேல் இம்ம்புட்டு ஆர்வம் இருக்கக்கூடாதய்யா.....
எப்படி உமக்கு நேரங்கள் கிடைக்கிறது.. படிப்பதற்கு... வாசிப்பதற்கு.....பிரியன் மகாபாரதத்திற்கும் இந்தக் கதைக்கும் உள்ள தொடர்பு, கதைக்களமும் கதாபாத்திரங்களும். அவ்வளவே.

நேரம் கிடைக்கும் பொழுது செய்து கொள்ள வேண்டியதுதான் பிரியன். சோப்பு கிடைக்கும் பொழுது வாங்கி வைத்துக் கொண்டு தண்ணீர் கிடைக்கும் பொழுது துவைப்பது போல.

pradeepkt
26-09-2005, 10:06 AM
மண்ணுலகில் உள்ள பெண்ணியம் மேல் இருக்கும் க(கா)ட்டுப்பாடுகளை உடைத்தெறிந்திருப்பது சொர்க்கம் என்கிறீர்கள்.
இன்னொரு விதத்தில் பெண்மையை மதித்து ஓரிறையைக் காணும் இடமென உங்கள் சொர்க்கத்தை வடிவமைத்திருக்கிறீர்கள். இங்கு உலகில் சொர்க்கம் வர வேண்டுமென்றால் அங்கிருக்கும் வசதிகள் மட்டும் அல்ல, மனதில் உண்டாகும் மாற்றங்களும் அவசியம் என்கிறீர்கள்.

இவை என் கண்களில் பட்டவை. மீண்டும் படித்து இன்னும் கருத்துகள் தோன்றின் சொல்லுகிறேன்.

gragavan
26-09-2005, 11:12 AM
பிரதீப், நீங்கள் ஓரளவு சரியாகவே யோசித்திருக்கின்றீர்கள்.

பெண்களை எதன் பெயரில் எல்லாம் அடிமைகளாக்குகின்றார்கள் என்று ஓரு சின்ன சாடல். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் பெண்களே. புரிந்து கொண்டால் அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள்.

பாரதி
26-09-2005, 04:03 PM
முதலில் மன்னிக்கவும். கண்ணில் பட்ட பிழைகள்:

தருமதேவதை என்று ஆரம்பித்தது பின்னர் தருமதேவனாக மாறி மீண்டும் தேவதையாக இருக்கிறது. கவனிக்கவும்.

தர்மனிடம் அவனது தம்பிகளைப் பற்றி சொல்லும் போது "உனது தம்பிகள் நூற்றுநால்வரும்" - என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன். சரியா..?

பின்னர் பசியுமில்லை,பட்டினியுமில்லை என்ற நிலையில் பசி வரக்காரணமில்லை. பசிக்காமல் அமுதரசம் பருகவோ உணவருந்தவோ வேண்டிய அவசியமும் இருக்காது அல்லவா.?

ஆரம்பத்தில் தருமதேவன் சர்வேஸ்வரன் விடமாட்டான் என்று நினைப்பதாகவும், பின்னர் கதையின் இறுதியில் கிருஷ்ணனும், ருத்ரனும் ஒன்றே என்ற விளக்கம் தருவதாகவும் வருகிறது. பொதுவான பெயர்சொல்லைக் குறிப்பிடுவது சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது கதையை பற்றி:

என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை! மகாபாரதத்தின் தொடர்ச்சியாக எழுந்த ஒரு கற்பனை இராகவனின் கண்ணோட்டத்தில் கதையாய் இப்போது நம் முன்னே.

மகாபாரத்திலேயே குந்தியின் பிள்ளைகளுக்கு தகப்பன் யார் என்பதும் தெரியும்தானே..! அதே போல ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்த நிலையில் ஐவருக்கு ஒரு மனைவியாக திரெளபதியும் இருந்தாளே..! ஆக நடைமுறையில் இல்லாத, சிந்திக்கவும் முடியாத விசயங்களை ஏற்றுக்கொண்டதாக மகாபாரதத்திலேயே இருக்கின்றன.

மானுட உடலுடன் சென்ற தருமனின் மனவோட்டமும், மரணமுற்று சொர்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மனவோட்டமும் தெளிவாக வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தனை பேர் சரியான விளக்கம் கொடுத்தும் புரியாத தருமன் தருமனா..? பூமியில் வாழும் போது குளத்தில் நீரருந்த சென்ற சகோதரர்களை மீட்க, பூதம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தருமனா அவன்..? அவ்வளவு புத்திசாலியாக இருந்தும் ஏன் அவனுக்கு சொர்கத்தின் நடைமுறை புரியவில்லை என்பது சற்று ஆச்சரியத்திற்கு உரிய விசயமே.

காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை தாக்க முயற்சிப்பது தெரிகிறது. இப்போது பெண்களின் உடை பற்றி எழுத்துள்ள பிரச்சினைகளையும் கதையில் புகுத்தியுள்ளது நன்றாகவே தெரிகிறது. பெண்களுக்கான உரிமை என்ன என்பதையும் அவர்கள் கையில்தான் அவர்களது விடுதலை என்பதையும் சொல்ல முயற்சித்திருப்பதில் ஓரளவுக்கு வெற்றிதான்.

வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதும், அதை எழுத்தில் கொண்டு வரும் திறமையும் சபாஷ் போட வைக்கின்றன. பாராட்டுக்கள் இராகவன்.

gragavan
27-09-2005, 07:03 AM
முதலில் மன்னிக்கவும். கண்ணில் பட்ட பிழைகள்:

தருமதேவதை என்று ஆரம்பித்தது பின்னர் தருமதேவனாக மாறி மீண்டும் தேவதையாக இருக்கிறது. கவனிக்கவும்.
ஆமாம். எப்படியோ அந்தப் பிழை நேர்ந்து விட்டது. அது நேரக் கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தேன். இருந்தும் நேர்ந்து விட்டது.



தர்மனிடம் அவனது தம்பிகளைப் பற்றி சொல்லும் போது "உனது தம்பிகள் நூற்றுநால்வரும்" - என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன். சரியா..? ஒரு விதத்தில் சரிதான். உனது சகோதரர்கள் நூற்று ஐவரும் என்று சொல்ல வந்து, தம்பிகள் என்று எழுதிவிட்டேன்.



பின்னர் பசியுமில்லை,பட்டினியுமில்லை என்ற நிலையில் பசி வரக்காரணமில்லை. பசிக்காமல் அமுதரசம் பருகவோ உணவருந்தவோ வேண்டிய அவசியமும் இருக்காது அல்லவா.?
நிச்சயமாக. ஆனால் சொர்கம் மனதால் ஆளப்படுவது. அங்கே அருந்த வேண்டும் என்று மனம் விரும்பினால் அருந்தக் கிடைக்கும். உடலும் ஒத்துளைக்கும். உடலால் மனம் ஆள்வதை விட, மனதால் உடல் ஆளப்படும். அந்த மனதிற்கு வேண்டிய அறிவும் இருக்கும்.



ஆரம்பத்தில் தருமதேவன் சர்வேஸ்வரன் விடமாட்டான் என்று நினைப்பதாகவும், பின்னர் கதையின் இறுதியில் கிருஷ்ணனும், ருத்ரனும் ஒன்றே என்ற விளக்கம் தருவதாகவும் வருகிறது. பொதுவான பெயர்சொல்லைக் குறிப்பிடுவது சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
சர்வேசுவரன் என்ற சொல்லுக்கு அனைத்துக்கும் ஈசுவரன் என்று பொருள். ஆண்டவன் என்ற சொல்லுக்கு இணையானது. அல்லா என்று இஸ்லாமியர்கள் சொல்வதும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.



இப்போது கதையை பற்றி:

என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை! மகாபாரதத்தின் தொடர்ச்சியாக எழுந்த ஒரு கற்பனை இராகவனின் கண்ணோட்டத்தில் கதையாய் இப்போது நம் முன்னே.

மகாபாரத்திலேயே குந்தியின் பிள்ளைகளுக்கு தகப்பன் யார் என்பதும் தெரியும்தானே..! அதே போல ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்த நிலையில் ஐவருக்கு ஒரு மனைவியாக திரெளபதியும் இருந்தாளே..! ஆக நடைமுறையில் இல்லாத, சிந்திக்கவும் முடியாத விசயங்களை ஏற்றுக்கொண்டதாக மகாபாரதத்திலேயே இருக்கின்றன.

மானுட உடலுடன் சென்ற தருமனின் மனவோட்டமும், மரணமுற்று சொர்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மனவோட்டமும் தெளிவாக வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தனை பேர் சரியான விளக்கம் கொடுத்தும் புரியாத தருமன் தருமனா..? பூமியில் வாழும் போது குளத்தில் நீரருந்த சென்ற சகோதரர்களை மீட்க, பூதம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தருமனா அவன்..? அவ்வளவு புத்திசாலியாக இருந்தும் ஏன் அவனுக்கு சொர்கத்தின் நடைமுறை புரியவில்லை என்பது சற்று ஆச்சரியத்திற்கு உரிய விசயமே.

காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை தாக்க முயற்சிப்பது தெரிகிறது. இப்போது பெண்களின் உடை பற்றி எழுத்துள்ள பிரச்சினைகளையும் கதையில் புகுத்தியுள்ளது நன்றாகவே தெரிகிறது. பெண்களுக்கான உரிமை என்ன என்பதையும் அவர்கள் கையில்தான் அவர்களது விடுதலை என்பதையும் சொல்ல முயற்சித்திருப்பதில் ஓரளவுக்கு வெற்றிதான்.

வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதும், அதை எழுத்தில் கொண்டு வரும் திறமையும் சபாஷ் போட வைக்கின்றன. பாராட்டுக்கள் இராகவன்.
உண்மையிலேயே நன்றி அண்ணா. நீங்கள் நான் சொல்ல வந்ததைச் சரியாகப் பிடித்துக் கொண்டீர்கள். அப்பாடி! இந்தக் கதையை எழுதிய பலன் கிடைத்து விட்டது. :)

kavitha
29-09-2005, 10:56 AM
பெண்களை எதன் பெயரில் எல்லாம் அடிமைகளாக்குகின்றார்கள் என்று ஓரு சின்ன சாடல். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் பெண்களே. புரிந்து கொண்டால் அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள் தவறு. சமூகத்திலிருந்து தூக்கி எறியப்படுவார்கள்.
கதையைப்பற்றி மேலும்...

rethinavelu
29-09-2005, 12:18 PM
பாப்பா பாப்பா கதை கேளு

thempavani
07-10-2005, 01:19 AM
ராகவன் அண்ணா இன்றுதான் இந்த பதிவைப் படிக்க நேரம் கிடைத்தது.நல்ல முயற்சி..பாராட்டுகள்...மனதில் எவ்வளவோ தோன்றுகிறது..இன்று நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்..விரைவில் பதிக்கிறேன் எனது கருத்தை...

thempavani
07-10-2005, 01:20 AM
அண்ணா இந்தக் கதையை படித்ததும் தங்கள் மீதான மரியாதைதான் மேலும் ஒருபடி கூடுகிறது...பாராட்டுகள்..

gragavan
07-10-2005, 05:21 AM
நன்றி தேம்பா. படித்து விட்டு உனது கருத்தைச் சொல். காத்திருக்கிறேன்.

thempavani
07-10-2005, 07:04 AM
ராகவன் அண்ணா குஷ்புவின் அறிக்கைகள் இணையங்களிலும் தமிழ் மண்ணிலும் சூடு பறந்துகொண்டிருக்கும்போது தங்களின் இப்பதிவு தங்களின் துணிவையும் நேர்மைதனையும்தான் காட்டுகிறது...உங்கள் நேர்மைக்கு என் வணக்கங்கள்..

தங்கள் கதையில் தருமன் அப்படியே மனித இயல்புகளை வெளிப்படுத்துகிறான்..அதற்கு அவன் இறக்குமுன்னே வானுலகம் சென்றதுதான் காரணமா என்ற விவாதம் வேண்டாம்..ஆனால் நல்லவனாக, ஒருவகையில் தெய்வ அவதாரமாகக் கருதப்படும் தருமன் மனதிலும் தனக்கு துன்பம் விளைவித்தவர்களை, தனக்கு தீங்கு செய்தவர்களை மரணத்திற்குப் பிறகும் ஏற்க இயலா மனம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உங்கள் நேர்மை அழகு...



இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!"

"என்ன தருமா யோசனை?" சகுனி இடைமறித்தார்.

"இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்கந்தானா?" கொஞ்சம் ஐயத்தோடே கேட்டான் தருமன்.

சிரித்து விட்டான் சகுனி. "மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்கந்தான் மருமகனே."

இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மன்னிக்கும் மனமுடைய மனிதனே மனிதருள் மாணிக்கம் என்பது எனது கொள்கை..அதனால் பெரும்பாலான நேரங்களில் பிறர் செய்வதை பொருட்படுத்துவதே இல்லை..இதற்கு கண்டுகொள்ளாமல் போகிறாய்..தலைக்கனம் என்ற பெயர்கள் கூட பெற்றிருக்கிறேன்.ஆனால் ஒன்றில் மட்டும் எனக்கு இன்றுவரை ஐயம் கிளம்பியது இல்லை..."நான் செய்வதற்கு நாந்தான் கணக்கு கொடுக்கவேண்டும்.." அதிகமாக எனது செயல்களுக்கு நான் மேல்வரிச்சட்டமாகக் கொள்வது இதுதான்..இந்த எண்ணம் எனக்கு மன்னிக்கும் மனம்தனை, பிறரை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குதனைத் தந்திருப்பதாகக் கருதுகிறேன்...தற்போது தாங்கள் சுட்டும் கதை மாந்தரும் அதே எண்ணத்தை உறுதிப்படுத்துகிறார்...



தம்பி, சொர்கம் என்பது இன்பபுரி. இங்கு இறைவனின் அன்புக்குப் பாத்திரமானர்கள் வாழும் ஊர்.


உண்மையான வார்த்தைகள் அண்ணா.. அன்பு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்...இறைவனும் அன்பு உருவானவனே...அன்பு கொண்டு வாழும் மனிதர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் எந்த இனத்தை நாட்டைச் சார்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் இறைவனின் பிள்ளைகள்..இறைவனால் இரட்சிக்கப்பட்டவர்கள்..

---இன்னும் தொடர்வேன்..

gragavan
07-10-2005, 07:14 AM
அருமை தேம்பா. நல்ல விளக்கங்கள். கதை கற்பனை என்றாலும் சொல்ல வந்த கருத்தைப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்பது தெரிகிறது. தொடர்ந்து சொல்.

thempavani
07-10-2005, 07:23 AM
வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?"


இங்குதான் பெரும்பாலான ஆண்மக்களின் மனநிலைதனை தாங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்...பெண்களைத் தங்களுக்கு உரிமையானவர்கள் என்ற எண்ணம்... அந்த எண்ணத்தில் சிறு தடை இடையூறு ஏற்படும்போது ஏற்படும் இயல்பான(?) கோபம்..ஆத்திரம்.ஏனெனில் நம் சமுதாயம் அவர்களுக்கு கற்றுத்தந்தது இது..நம் சமுதாயத்தில்..தன் தாத்தா...தன் தந்தையிடம்..அண்டை அயலவர்களிடம் அவர்கள் பார்த்து வளர்ந்தது இது..அண்ணா நான் இங்கு "ஆணிணம்" என்ற பதத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை..ஏனெனில் யாரையும் குற்றப்படுத்துவது நல்ல விமர்சனம் ஆகாது...நான் நமது சமுதாய வளர்ப்பைப் பார்க்கிறேன்..எங்கள் வீட்டிலெல்லாம் சின்னத்தம்பி என் அக்காவைக் கட்டுப்படுத்துவது உண்டு...அப்போதெல்லாம் என் தந்தை ஒன்றும் சொல்லவில்லையானாலும்(அவள் மூத்த பிள்ளையல்லவா..) என் அம்மா ஆம்பிள்ளை பிள்ளை சொன்னால் கேட்கவேண்டும் என்பார்கள்..அதுவரை அமைதியாக இருக்கும் பெண்கள் நால்வரும் அதன்பின் சண்டை போடுவோம்...ஏனெனில் நமது சமுதாயம்... நம்மைப் பெற்றவர்கள்..இப்படியே வளர்ந்து விட்டார்கள் நம்மை வளர்த்தும் விட்டார்கள்..அப்படி இல்லாது கொஞ்சம் கேள்வி கேட்குமாறு வளர்த்தால் உடனே குறை சொல்ல..இடித்துக் காட்ட என்று ஆயிரம் பேர்..இதனாலே எனக்கு எங்கள் அத்தைகளைப் பிடிக்காமல் போனது..

இப்படியாக வளரும் ஆண்மகன் தனக்கென..தனக்கே உரிமை (இங்கே திரெளபதி ஐவருக்கு உரிமை என்பது வேறு விடயம்) என்று சமுதாயம் போதித்த மனைவியின் தோளில் பிற ஆண்மகன்(அது துச்சாதனன் என்பது முக்கிய விடயமல்ல..ஏனெனில் தொலைவில் இருவரும் வரும்போதே தருமனுக்கு கோபம் வருகிறது..) கைவைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறான்..இங்கேதான் நான் நமது சமுதாய சூழவமைவை சுட்டிக்காட்டுகிறேன்..இது அவனது மனப்பாங்கு...மனதில் பதிந்துவிட்ட ஒன்று..காலம்காலமாய் வள்ர்த்தெடுத்த/ வளந்துவிட்ட இப்பண்பை மாற்ற முடியுமா..இதுதான் தங்கள் கதை நம்முன் நிறுத்தும் கேள்வி என்பது எனது கருத்து..

தொடரும்..

thempavani
07-10-2005, 07:31 AM
இந்தக் கருத்தை மாற்றியமைக்கப் படுமா என கேள்வி எழலாம்..நிச்சயம் முடியும்..ஆனால் நாட்கள் எடுக்கும்...ஏனெனில் நமது சமுதாயம் ஆதியிலிருந்தே ஆண்வழிச்சமூகமாக அறியப்பட்டது கிடையாது...இனத்தை வளர்த்தெடுக்கும் சக்தி படைத்த பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்து வளர்ந்த தாய்வழிச்சமூகம் ஒன்று முன்பு இருந்திருக்கிறது..பெண்ணால் உருவாக்கப்பட்டு..பெண்ணிற்கு முன்னுரிமை அளிக்கபபட்ட சமூகம் அது.. ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்துவது தாய்மை ஒன்றுதான் (உடல் அமைப்பைத் தள்ளுங்கள்) என்பதால் அதுதான் சிறந்த சமுதாயமாகவும்..மேன்மை பொருந்திய சமுதாயமாகவும் வரலாற்று ஏடுகளிலும்..அறிஞர்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது..இங்கே ஒரு கருத்தை எடுத்து வைத்திருக்கிறேன்...கிடைக்கும் பதில்களைப் பொறுத்து என் பதிவு தொடரும்..

gragavan
07-10-2005, 07:59 AM
சகோதரி தேம்பா. அந்தக் கனவுச் சமுதாயம் நிச்சயம் உருவாகும். அதை உருவாக்கும் வல்லமை பெண்களிடத்தில்தான் உள்ளது. அதிகம் அடக்கப் பட்டால்தான் அழுத்தம் அதிகரிக்கும். அந்த அழுத்தம் வெடிக்கும் போது புது வெள்ளம் பொங்கிப் பெருகும் போது பழம் பஞ்சாங்கங்கள் காணாமல் போகும். ஒரு நல்ல சமுதாயம் உருவாகம். இந்த நம்பிக்கை ஒன்றே இன்று நன்று.

thempavani
07-10-2005, 08:14 AM
அந்த சமுதாயம் நிச்சயம் அமையும் என்பதில் எனக்கும் சந்தேகமே கிடையாது ராகவன் அண்ணா..ஆனால் எப்போது...பெண்கள் கல்வியறிவில் மேம்படும்போது...பொருளாதார தன்னிறைவு பெறும்போது..ஆனால் எங்கே மேம்படுவது..முன்பு கல்வி கற்கத்தடை..தற்போது கல்வி கற்று பொருளாதார வலிமை பெறத் தடை..இங்கே குறுக்கே வருவதுதான் ஆண்மக்களுக்கு நம் சமுதாயம் போதித்திருக்கும் கருத்தோட்டங்கள்...

இப்போதேல்லாம்..திருமணச் சந்தையில் நன்கு படித்தவர்கள் கூட..படித்த பெண் வேண்டும்..ஆனால் அவள் வேலைக்கு செல்லவேண்டிய தேவை இல்லை என்றுதானே அதிகம் கூறுகிறார்கள்..எனக்கு தெரிந்து தமிழகத்தின் முக்கிய கல்லூரி ஒன்று MCA படிப்பில் பெண்களுக்கு இடம் ஒதுக்கவே யோசிக்கும்..அதற்கு அவர்கள் சொல்லும் ஒரு காரணம்...எத்தனை பெண்கள் இந்தப்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்கிறாள்..ஆண்டொன்றுக்கு 20 இடங்கள் இப்படி வீணாவதைவிட நாங்கள் 10 பையன்களுக்கு இடம் கொடுத்தால் அவனாவது படித்து நாட்டுக்கு நல்லது செய்வான் என்பான்...அவர்கள் சொல்வதிலும் பகுதி உண்மை உள்ள்து என்னவோ உண்மைதான் என்னோடு 60 பெண்கள் MCA முடித்ததில் பணி புரிவது என்றால் தற்போது ஏதோ 20தான்..பலருக்கு கணணியே மறந்துவிட்டது என்கிறார்கள்...

gragavan
07-10-2005, 11:02 AM
நன்றாக நினைத்துப் பாருங்கள் தேம்பா. அந்தப் பெண்கள் வேலைக்குப் போகாததிற்கு அந்தப் பெண்களா காரணம். படித்து முடித்ததுமே ஒருத்தனைப் பிடித்துக் கொடுத்திருப்பார்கள். அவன் இருக்கும் ஊருக்கு இந்தப் பெண் தனது கொட்டாரத்தைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். ஆக பெண் படித்தால் வீண் என்று சொல்லவும் ஒரு சாக்கை இந்த உலகம் உண்டாக்கி வைத்திருக்கிறது. அலர்மேல் வள்ளி போன்ற வெகு சில பெண்களே சாதித்திருக்கின்றார்கள். இப்படிச் சாதித்த முகம் தெரியாத பெண்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

இளசு
08-10-2005, 10:22 PM
அன்பு இராகவன்,
சொக்கும் தமிழ் நடை உங்களுக்குச் சொந்தமானது.
விழித்தெழ வைக்கும் கருத்துகளை, பாரதக்கதை பின்புலன் கொண்டு அழகாய் சொன்ன விதம் அருமை.
பாரதியின் துல்லிய பார்வையும், தேம்பாவின் நேர்ப்பார்வையும் நல் விமர்சன முத்துகள்..
ஈடன் தோட்டம் போன்ற சொர்க்கத்தின் வர்ணனைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை...

நோயில்ல, செயலூக்க அவயங்கள்..
எண்ணிய எண்ணியாங்கு கிடைக்கும் நிலை..
சொர்க்கத்தை எண்ணி ஏங்க வைத்து விட்டீர்கள்...

கர்ணன் சாலையைக் கடக்கும்ப்போது சிரித்தபடி ஓடுபவள் திரவுபதியா என்று எண்ணி வருவதற்குள்..
துச்சாதனுடன் வரவைத்து.. தருமனிடம் தர்க்கம் பேசவைத்து.....

பரிமாறும் கருத்தை நல்ல பாண்டத்தில் வைத்து தந்த வன்மைக்குப் பாராட்டுகள்...

வந்த விமர்சனங்கள்.. உங்கள் பதில்கள்...இன்னும் முழுமை தருகின்றன...

gragavan
10-10-2005, 10:45 AM
நன்றி இளசு. சொர்கம் என்பது நாம் இப்பொழுது இருக்குமிடமே. அதை சொர்கமாக்குவதும் நரகமாக்குவதும் நமது கையில் இருக்கிறது. பாரதப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணச்சித்திரங்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவைகளை வைத்து நமது கருத்துகளைச் சொல்ல முடிகின்றது.

Nanban
17-10-2005, 05:55 PM
கதையின் அடிப்படையிலேயே கோளாறு.

யோனியின் திருப்தியே பெண்ணுரிமை என்று எண்ணத்தில் எழுதப்பட்ட தர்க்கரீதியான செல்லுபடியாகாத வாதங்கள்....

பெண்ணின் சுயமரியாதையை அடியோடு தகர்த்து புரிதலற்ற உறவுமுறைகளை தூக்கிப் பிடிக்கும் ஆபாசம்...!!!

திரௌபதிக்கு உரிமை என பேசப்படுபவை - காந்தாரிக்கும் குந்திதேவிக்கும் மாதுரிக்கும் பொருந்துமா?

கன்னிமையின் பாதுகாப்பே கற்பு என்று இன்று பூலோகத்திலே யாருமே நினைக்கவில்லை. ஆனால் அதைத் தான் ஆண்கள் இன்னமும் கற்பென நினைக்கிறார்கள் என இட்டுக்கட்டி ஆண்கள் மீது பழி போடுவதென்பது - அடிப்படை கோளாறே அன்றி வேறல்ல.

பெண்ணியம் பேச இன்னும் புரிதல்கள் அவசியம் - அது உடலுறவு சுதந்திரம் அல்ல. அது சுயமரியாதை சார்ந்தது. The women need to be empowered to have their self-esteem respected at all levels of their life.

உங்கள் கதையின் கரு 100 % தவறானது. விஷயம் புரியாமல் எழுதப்பட்ட கருத்துகளும் தவறானவையே.

யாரும் மனம் புண்பட்டுவிடக்கூடாதே என்பதால் மேலும் விரிவாக எழுத விரும்பவில்லை.

நன்றி.

gragavan
18-10-2005, 05:48 AM
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பன்.

pradeepkt
18-10-2005, 09:13 AM
திண்ணையில் வாசந்தி
http://www.thinnai.com/pl1014054.html

பிரியன்
18-10-2005, 09:18 AM
ஆண்களை காழ்ப்புணர்வோடு திட்டுவதை மட்டுமே பெண்ணுரிமை என்றும் பெண் சுதந்திரம் என்றும் நினைத்து கொண்டிருப்பவர் வாஸந்தி... மேல் தட்டு சித்தாந்தமே அவருடையது..

வாஸந்தியின் கட்டுரையிலிருந்து......

தமிழ் நாட்டு அரசியலில் இன்று காண நேர்ந்திருக்கும் சகிப்புத்தன்மையற்ற பாஸிஸ போக்கின் நிதர்சன அடையாளமும்தான். இதற்குப் பின்னணியில் இருப்பது கொள்கையுமில்லை புண்ணாக்குமில்லை.தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். பயங்கர விளைவுகளைக் கொண்ட கற்பிதம். அதைக் கையில் ஏந்தி அவர்கள் அடிக்காத இடமில்லை. சமகால பெண்கவிஞர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று ஆபாசமான குற்றச்சாட்டு. சினிமாவின் தலைப்பு தமிழில் இல்லை என்று வன்முறை தாக்குதல். செக்ஸைப் பற்றி நீ சொன்ன கருத்து உன் சொந்தக் கருத்தாக ஏற்கமுடியாது-- ஏனென்றால் அதைப் பேசப் பெண்ணான உனக்கு உரிமை யில்லை.


xxxxxxxxxxxxxxxxxxxxx

இதைத்தான் சொல்ல வந்திருக்கிறார் தன் கட்டுரையில்.....

gragavan
18-10-2005, 09:31 AM
ஆண்களை காழ்ப்புணர்வோடு திட்டுவதை மட்டுமே பெண்ணுரிமை என்றும் பெண் சுதந்திரம் என்றும் நினைத்து கொண்டிருப்பவர் வாஸந்தி... மேல் தட்டு சித்தாந்தமே அவருடையது..

வாஸந்தியின் கட்டுரையிலிருந்து......

தமிழ் நாட்டு அரசியலில் இன்று காண நேர்ந்திருக்கும் சகிப்புத்தன்மையற்ற பாஸிஸ போக்கின் நிதர்சன அடையாளமும்தான். இதற்குப் பின்னணியில் இருப்பது கொள்கையுமில்லை புண்ணாக்குமில்லை.தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். பயங்கர விளைவுகளைக் கொண்ட கற்பிதம். அதைக் கையில் ஏந்தி அவர்கள் அடிக்காத இடமில்லை. சமகால பெண்கவிஞர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று ஆபாசமான குற்றச்சாட்டு. சினிமாவின் தலைப்பு தமிழில் இல்லை என்று வன்முறை தாக்குதல். செக்ஸைப் பற்றி நீ சொன்ன கருத்து உன் சொந்தக் கருத்தாக ஏற்கமுடியாது-- ஏனென்றால் அதைப் பேசப் பெண்ணான உனக்கு உரிமை யில்லை.


xxxxxxxxxxxxxxxxxxxxx

இதைத்தான் சொல்ல வந்திருக்கிறார் தன் கட்டுரையில்.....ஆகக்கூடி ஒன்று புரிகிறது எனக்கு. எதைச் சொன்னாலும் இவர்கள் சொல்கின்ற படி நினைக்கின்ற படி சொல்கின்ற பெண்களே பெண்ணியவாதிகள். வேறு பெண்கள் ஏதேனும் சொன்னால் அவருடைய வேறொரு கருத்தையோ பக்கத்தையோ முன்வைத்துத் தாக்குவது. நல்ல நியாயம்.

இனிமேல் ஆண்கள் விரும்புகிற வகையில், நினைக்கின்ற வகையில், மனதைப் புண்படுத்தாத வகையில், பேசுகின்றவர்களே பெண்ணியவாதிகள். அவர்களே புதுமைப் பெண்கள். இதற்கு மாறாக எந்தப் பெண்ணும் பேசினால் அவர் தவறானவர். அவருடைய கருத்துகள் வறட்டுத் தனமானவை.

பிரியன்
18-10-2005, 09:41 AM
ஆகக்கூடி ஒன்று புரிகிறது எனக்கு. எதைச் சொன்னாலும் இவர்கள் சொல்கின்ற படி நினைக்கின்ற படி சொல்கின்ற பெண்களே பெண்ணியவாதிகள். வேறு பெண்கள் ஏதேனும் சொன்னால் அவருடைய வேறொரு கருத்தையோ பக்கத்தையோ முன்வைத்துத் தாக்குவது. நல்ல நியாயம்.

இனிமேல் ஆண்கள் விரும்புகிற வகையில், நினைக்கின்ற வகையில், மனதைப் புண்படுத்தாத வகையில், பேசுகின்றவர்களே பெண்ணியவாதிகள். அவர்களே புதுமைப் பெண்கள். இதற்கு மாறாக எந்தப் பெண்ணும் பேசினால் அவர் தவறானவர். அவருடைய கருத்துகள் வறட்டுத் தனமானவை.

நீங்கள் தவறாக அர்த்தப்படுத்தி கொள்கிறீர்கள் ராகவன்...

பெரியார் சொன்ன வார்த்தையை திரித்து பொருள் கூறியிருக்காரே என்ன வகையான நேர்மை அவரிடத்தில் இருக்கிறது.
பெண்ணியவாதி வாஸந்தியின் பார்வையில்

மேட்டுகுடி பெண்கள் மட்டுமே பெண்கள். அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் மட்டும்தான் அனைத்து பெண்களுக்கும் இருக்கிறது. எனவே அவர்களுக்கான சுதந்திரமே அனைவருக்குமான சுதந்திரம்.....

இதை ஆமாம் என்று சொல்பவர்களுக்கெல்லாம் ஒரே பதில் -

நான்( நாங்கள் ) கட்டுப்பெட்டியானவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்..

இவர்களின் பட்டம் ஒன்றும் தேவையில்லை.....

gragavan
18-10-2005, 10:16 AM
நீங்கள் தவறாக அர்த்தப்படுத்தி கொள்கிறீர்கள் ராகவன்...

பெரியார் சொன்ன வார்த்தையை திரித்து பொருள் கூறியிருக்காரே என்ன வகையான நேர்மை அவரிடத்தில் இருக்கிறது.
பெண்ணியவாதி வாஸந்தியின் பார்வையில்

மேட்டுகுடி பெண்கள் மட்டுமே பெண்கள். அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் மட்டும்தான் அனைத்து பெண்களுக்கும் இருக்கிறது. எனவே அவர்களுக்கான சுதந்திரமே அனைவருக்குமான சுதந்திரம்.....

இதை ஆமாம் என்று சொல்பவர்களுக்கெல்லாம் ஒரே பதில் -

நான்( நாங்கள் ) கட்டுப்பெட்டியானவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்..

இவர்களின் பட்டம் ஒன்றும் தேவையில்லை.....
இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். நீங்கள் கட்டுப் பெட்டிகளாய் இருங்கள். என்னவாயும் இருங்கள். அப்படி இல்லாதவர்கள் மேல் பாயாதீர்கள் என்றுதான் நான் சொல்கிறேன். அவரவர் வழியில் அவரவர் செல்லட்டும் அடுத்தவரை மதித்து. என்றைக்கு அடுத்தவரை இனத்தால் மதத்தால் பழக்க வழக்கங்களால் இழிவாக நினைக்கத் தொடங்குகின்றோமோ அன்றைக்கே நாம் அந்த நிலையை அடைகிறோம்.

பிரியன்
18-10-2005, 10:19 AM
நான் சொன்ன கருவிற்கே நீங்கள் வரவில்லை ராகவன்......

gragavan
18-10-2005, 11:23 AM
நான் சொன்ன கருவிற்கே நீங்கள் வரவில்லை ராகவன்......என்ன கரு? இவருடைய பிரச்சனை மேட்டுக்குடிப் பிரச்சனை என்று சொன்னீர்களே அதுவா? மேட்டுக்குடியில் பிறந்தால் இவர்கள் பெண்கள் இல்லையென்று சொல்கின்றீர்களா? அப்படி இருந்தாலும் சொல்லக்கூடாதா?

எந்தக் குடியில் இருந்தாலும் பிரச்சனை பிரச்சனைதான். மேட்டுக்குடிப் பெண்கள்தான் கொஞ்சமேனும் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள். மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஊமையாக இருப்பதால் ஒருவர் அமைதியாக இருப்பதில்லை.

அப்படிப் பேசும் மேட்டுக்குடிப் பெண்களையும் (உங்கள் பேச்சின்படி) யார் விட்டு வைத்தார்கள். அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதுதானே நடக்கிறது.

Nanban
18-10-2005, 03:49 PM
திரும்ப திரும்ப - ஒழுக்ககேட்டை உரிமைக் குரலாக நினைக்கும் அவலட்சணம்.

வாஸந்தியின் குரலையெல்லாம் துணைக்கழைத்து உங்கள் கருத்தை நியாயப்படுத்த நினைக்கிறீர்கள்.

இருக்கட்டும். வாஸந்தியைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

உங்கள் கதையில் என்ன சொல்ல வருகிறீர்கள் - என்ன புதுமை இருக்கிறது.?

ஒரு சொர்க்கத்தை நிர்ணயிக்கிறீர்கள். அதில் பசியில்லை. பட்டினியில்லை. தாகமில்லை. ஆனாலும் இந்த தேவைகளை நிறைவேற்ற கருவிகள் இருக்கின்றன. ஆனால் காமம் இல்லை என்று நீங்கள் சொல்லவேயில்லை. அதை நிறைவேற்ற கருவிகள் இருக்கின்றன என்று மட்டும் சொல்கிறீர்கள்?

ஏன் உங்கள் பார்வையில் காமம் அத்தனை பாபமானதா? கதையைப் படியுங்கள் - காமம் இல்லை என்று எங்கும் நீங்கள் சொல்லவேயில்லை. ஒரு மீனைப் பிடிக்க ஒரு புழுவை தியாகம் செய்தே ஆக வேண்டும், அது போல் மதங்கள் - காமம் கிடைக்கும் சொர்க்கத்தில் என்று பிரச்சாரம் செய்தே சொர்க்கத்தை வடிவமைக்கின்றன. ஆனால் அவர்கள் (மதங்கள் ) நிர்ணயித்த சொர்க்கத்தில் இன்றைய உலகின் மனைவிமார்களே அங்கேயும் கிடைப்பார்கள் - மீண்ட இளமையுடன் என்று காமத்தை ஒரு புழுவாக வைக்கின்றார்கள். ஆனால் அந்த நேர்மையுடன் உங்கள் சொர்க்கம் பேசப்படவில்லை. காமம் இல்லாத ஆனால் ஒவ்வொரு உறவிற்குப் பின்னும் மீண்ட கன்னிமையுடன் பெண்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள் - இது தான் உங்கள் தத்துவம் - இங்கு பெண்கள் இழிவு படுத்தப்படுகிறார்களா அல்லது மேன்மைப் படுத்தப்படுகிறார்களா? திரௌபதியை கர்ணன் துரத்துவான் - பின்னர் துச்சாதனன் துரத்துவான் - பின்னர் - ஏன் சுவர்க்கம் நுழைந்த அத்தனை ஆண்களும் துரத்துவர் - இது தான் பெண்ணிற்குரிய சுதந்திரம். கேவலமாக இல்லை? பெண்ணிற்குரிய சுயமரியாதை என்னவாயிற்று? எத்தனை ஆண்கள் துரத்தினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குப் பேர் - சொர்க்கம். இதைத் தட்டிக் கேட்கும் நாங்கள் கட்டுப் பெட்டிகளா? புணர்வதற்கு தாய் தங்கை தாரம் என்று வித்தியாசம் அற்ற ஒரு பிரபஞ்சத்தைப் படைத்து விட்டு - அதை உத்தமம் என்று கொண்டாடுவதும் அதைத் தவறு என்று சொல்லும் பொழுது அதை எள்ளி நகையாடுவதும் - இந்த மன்றம் போகும் திசை வெகு தவறானது என்று ஆணித்தரமாக உணர்த்துகிறது. இந்த வடிவில் அல்லது இன்னொரு வடிவில் என்று சகல வடிவத்திலும் பெண்மையைக் கேவலப்படுத்தும் விதமாக தொடர்ந்து எழுதுவதும் தங்களை முற்போக்குவாதிகள் என கூறிக் கொள்வதும் பிறரை பிற்போக்குவாதிகள் என தொடர்ந்து சீண்டிக் கொண்டிருப்பதும் - சில நண்பர்கள் ஆரோக்கியமான விவாதம் என்பதை விட்டுவிட்டு - உள்நோக்குடன் தாங்கள் விரும்பும் ஆபாசத்தை அனுமதிக்கும் தளமாக இந்த மன்றத்தை மாற்ற விரும்பும் பொழுது - அதற்குத் தடையாக இந்த நண்பன் இருக்கிறான் என்ற ஆவேஷம் - புரிகிறது.

இத்தகைய கீழ்க்கருத்துகளை தொடர்ந்து பேசுவதும், பதில் சொல்ல முனைந்தால் அது தங்கள் மனதை புண்படுவதாக தடுத்து நிறுத்துவதும் என செயல்படும் ஒரு தளத்தில் தொடர்ந்து இயங்குவதா என தீவிர சிந்தனைகளுக்குப் பிறகு இன்று எடுத்த முடிவு - மனவருத்தத்துடன் விலகுவதை விட - மனம் புண்படும் முன்னே விலகிக் கொள்வதே நன்று என நினைக்கிறேன்.

ஆதலால் - விடை பெறுகிறேன்.

இது வரையிலும் தமிழ் மன்றத்தில் மட்டுமே எழுதிவிட்டு பிறகு மற்ற இடத்திற்கு அவற்றை அனுப்புவது என்று ஒரு எழுதாத கொள்கை இருந்தது. இனி அதிலிருந்தும் என்னை விடுவித்து கொள்கிறேன். இனி எல்லா முதல் பதிவுகளும் என் வலைப்பூவில் மட்டுமே. பின்னரே அது மற்ற இடங்களுக்கும் பயணிக்கும்

இத்தனை வருடங்கள் -

முதல் கவிதையை பதினைந்து வருடங்கள் கழித்து மன்றத்தில் எழுதினேன் - கல்லூரி வாழ்க்கைக்கப்புறம். அன்று எழுதுவது என்னவென்றால் என்று அறியாது இருந்தேன். இன்று வெளியே போகும் பொழுது ஒரு முதுகலை மாணவனாக என்னை உணர்கிறேன். மன்றத்திற்குத் தான் அத்தனை பெருமையும். ஆங்கிலத்தில் மட்டுமே வாசித்துப் பழகியிருந்த என்னை - தமிழ் வாசிக்க வைத்தப் பெருமை மன்றத்தையே சாரும்.

அதைவிட பல இனிய நண்பர்களை இங்கு தான் சந்தித்தேன். வாழ்வின் அந்தி வரை தொடரப் போகும் நட்புகள். கிட்டத்தட்ட கல்லூரி முடிந்தபின் எந்த ஒரு நட்புமே என்னை ஈர்க்கவில்லை.

சில நட்புகள் குடித்து மகிழ -
சில நட்புகள் புகைத்து மகிழ -
சில நட்புகள் உண்டு மகிழ -
சில நட்புகள் தொழில் ரீதியாக

இப்படி ஒரு நிலையற்ற நட்புகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில் தான் புதிதாக இலக்கிய நட்புகள் கிடைத்தது. இளசு, பாரதி, இசாக், அசன், பிரியன் மன்மதன், என நிறைய.

இவற்றிற்கெல்லாம் நன்றி....

நன்றி

வணக்கம்......

அறிஞர்
18-10-2005, 04:52 PM
நண்பன் அவர்களே... தங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்... சில சமயம் தற்காலத்திற்கு ஏற்ற வாதங்கள் வருவதும் தங்களுக்கு தெரிந்ததே....

இதற்காக தாங்கள் செல்வது என முடிவு எடுப்பது.... எங்களை வருத்தத்தில் ஆழ்த்துக்கிறது. மீண்டும் பரிசீலியுங்கள்

poo
21-10-2005, 10:09 AM
நண்பன் அவர்களின் பதிவை (வாழ்த்துக்கள் பகுதி) படித்து அதைத் தொடர்ந்து ராகவன் அவர்கள் எழுதிய பதிலையும் வால்பிடித்து வந்து படித்தேன்...

இப்போது என் கருத்தை சொன்னால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமென தெரியவில்லை..

நாகரீகம் என்ற பெயருக்கு அகராதியில் ஒரு நிலையான சரியான அர்த்தமில்லைபோலும்....

நண்பன் சொன்ன கருத்தில் முதல்வரிதான் கதையின் முழுக்கரு என்ற தோற்றம் வெகு இயல்பாக மனதில் எழுகிறது...

சொர்க்கம் முதலில் மனதை நெகிழ்ச்சிப்பட வைக்கிறது....
போகப்போக அருவருப்பு அடையவைக்கிறது.. காமம் அருவருப்பல்ல.. அவை கையாளப்படும்விதத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது!

அந்த சொர்க்கம் இங்கே வந்தால் முதலில் நாண்டுகொண்டு சாகிறவர்கள் சொர்க்கத்தை விரும்பியவர்களாகத்தான் இருப்பர்..

அந்த சொர்க்கத்து இறைவனுக்கு கூடுதலாக அட்டவனைபோடும் பணியினையும் சேர்த்து வேண்டுமானால் தரலாம்.. அப்போதுதான் அடித்துக்கொண்டு சாகமாட்டார்கள்!!

இராகவன் தனிப்பட்டமுறையில் உங்களை சாடும் நோக்கம் எனக்கில்லை.. படிக்க ஆரம்பிக்கும்முன் இப்படி கருத்து சொல்வோமென நினைக்கவும் இல்லல..
மனம் நோகவேண்டாம்!!

(கற்பனையை இன்னும் சிறப்பாக (வேறு கோணத்தில்) உபயோகப்படுத்தியிருக்கலாம்..என்று சொல்லக்கூட பயமாக இருக்கிறது!!)

gragavan
21-10-2005, 11:21 AM
உங்கள் கருத்திற்கு நன்றி பூ.

gayathri.jagannathan
19-12-2006, 09:28 AM
ராகவன்... தங்களின் படைப்பு அருமை... ஆனால்... அடிப்படையில் சில முரண்பாடுகள் உள்ளன...
1.அங்கே பெண்கள் அனைவரும் நித்திய கன்னிகள் என்றால் யாரும் யாரோடு வேண்டுமானாலும் சேரலாம் என்றால் அங்கே அண்ணன் தம்பி,தாய் தந்தை என்ற உறவுக்கே அர்த்தமில்லையே....பிறகு எந்த அடிப்படையில் குந்தி தருமனை மகனே என்றும், கர்ணன் தம்பி என்றும் அழைக்க முடியும்?
2. சகுனி சுவர்கத்துக்கு வந்தது எப்படி என்று விளக்கிநீர்கள்.... ஆனால் துச்சாதனன் அங்கு எப்படி வர முடியும்?

விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்...

என் அறிவுக்கு எட்டிய ஒரு விஷயம்.... நிஜத்தில் கற்பு என்னும் நெறி, தனி மனித ஒழுக்கதிற்காகவும், நமது சமுதாய கலாசாரத்திற்காகவும் ஆண் பெண் இரண்டு பெருக்குமே ஏற்படுத்தப்பட்டது......கற்பு உடல் சம்பந்தப்பட்டது அல்ல அது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது...

தாமரை
19-12-2006, 10:40 AM
ராகவன்
சொர்க்கத்துக்கு போன பின் சிந்திப்பதை மறந்து விடுங்கள்.. சிந்தனைதான் தொல்லைகளுக்குக் காரணம்..

ஆன்மா தன் சட்டையை உரித்த பிறகும் (கிருஷ்ணரின் பகவத் கீதை) ஆண் பெண் என்ற பேதம் பாராட்டுவது ஏன்? பேதம் எழுந்தது உடலிலா மனதிலா?

கிருஷ்ணனுக்கும் ருத்ரனுக்கும் இல்லாப் பேதம் த்ரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் எப்படி வந்தது?

காட்சி பேதங்களும் மனப் பிறழ்வுகளும், இன்பம் துன்பம் என்னும் மாயைகளும் இருப்பது சொர்க்கமா? இல்லாதது சொர்க்கமா?

பென்ஸ்
19-12-2006, 11:36 AM
ராகவன்....
நான் இந்த திரி இதற்க்கு முன் வாசித்ததே.... நல்ல படைப்பு என்றாலும், நம் மனதுக்கு அடியில் ஊறி போனா சில நேறிகளை குத்துவதால் ஒரு நேருடல்... அதனால் பதிலளிக்கவில்லை.

நண்பர்கள் இந்த திரியை வாசிக்கடும்.. எடுத்து கொள்ளுபவர்கள் எடுத்து கொள்ளும் விததில் எடுத்து கொள்ளட்டும்....

ஆனால்...இன்னும் இன்னும் விவாதித்து புண்படவோ, படுத்தவோ வேண்டாமே....

மயூ
20-12-2006, 02:28 AM
அருமையான கற்பனை அத்துடன் அருமையான நடை.. இராகவன் அண்ணாவின் நடை... வேறு யாருக்கும் வராது.. இதற்கு விமர்சனம் எழுத யம்மாடி என்னால முடியாது..

gragavan
20-12-2006, 03:00 AM
ராகவன்....
நான் இந்த திரி இதற்க்கு முன் வாசித்ததே.... நல்ல படைப்பு என்றாலும், நம் மனதுக்கு அடியில் ஊறி போனா சில நேறிகளை குத்துவதால் ஒரு நேருடல்... அதனால் பதிலளிக்கவில்லை.

நண்பர்கள் இந்த திரியை வாசிக்கடும்.. எடுத்து கொள்ளுபவர்கள் எடுத்து கொள்ளும் விததில் எடுத்து கொள்ளட்டும்....

ஆனால்...இன்னும் இன்னும் விவாதித்து புண்படவோ, படுத்தவோ வேண்டாமே....
அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன் பெஞ்சமின். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை. கதை கற்பனைதான். சொல்ல வந்த கருத்தைச் சொல்வதற்குப் பயன்படுத்திக் கொண்ட பாத்திரங்கள் பாரதப் பாத்திரங்கள். அவ்வளவே. ஆனால் சொல்ல வந்ததை விட சொன்ன விதம் வீச்சு கொண்டதாயிற்று. இத்தனை நாட்களுக்குப் பின்னால் இது மேலே வந்திருப்பது.....ம்ம்ம்ம்...அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.

pradeepkt
20-12-2006, 04:35 AM
முதல்ல ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் :)

ஆமாய்யா... கொஞ்சம் கையக் கால வச்சுக்கிட்டு சும்மா இருங்க... முடிஞ்சா இந்தத் திரிய மூடிருங்க... ஒரு பத்து வருசத்துக்கப்புறம் பாத்துக்கலாம்.

அதுக்குள்ள மயூரேசன் மகனே "பண்பட்ட பயல்" ஆயிருவான் ..

மயூ
20-12-2006, 06:20 AM
முதல்ல ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன் :)

ஆமாய்யா... கொஞ்சம் கையக் கால வச்சுக்கிட்டு சும்மா இருங்க... முடிஞ்சா இந்தத் திரிய மூடிருங்க... ஒரு பத்து வருசத்துக்கப்புறம் பாத்துக்கலாம்.

அதுக்குள்ள மயூரேசன் மகனே "பண்பட்ட பயல்" ஆயிருவான் ..
இப்பவே நானூ பண்ணபட்ட பயலுதானே!
வயசு 18 தாண்டிட்டா யாரும் எதுவும் பேச ஐயாகிட்ட பேச முடியாது!:D :D :D :D ~!

SathishVijayaraghavan
22-12-2006, 12:40 PM
ராகவன் இன்றுதான் இந்த பதிவைப் படிக்க நேரம் கிடைத்தது. பாராட்டுகள்... மனதில் தோன்றுவதை, எனது கருத்தை நேரம் கிடைக்கும் நாழியில் பதிக்கிறேன்...

நல்ல முயற்சி...

leomohan
22-12-2006, 01:21 PM
தருமனும் தருமமும்



வித்தியாசமான கதைக்களம். அதீத கற்பனை. வாழ்த்துக்கள்.