PDA

View Full Version : எங்கே கடவுள் ?...



anithanhitler
27-08-2005, 07:24 AM
( இந்த கவிதை கண்ணாடி மாதிரி... அதில் உன் மனம் படிக்க முடிந்தால் வெற்றி எனக்கு.. வீசி எறிந்தால் இழப்பு உனக்கு... )


மனங்களை
அமைதிப்படுத்த வந்த
மதங்களுக்கு
இன்று மதம் பிடித்துவிட்டது...

மழழை
குரல் தனில்
பிழை இருக்கலாம்.
அதற்காக
அதன் குரல்வலையையா
நெரிக்க முடியும்.
மனிதன் போற்றும்
மதங்களிலும் பிழை இருக்கலாம்.
அதற்காக
கடவுளையா தூற்ற முடியும்...

மதங்களை பணங்களோடு
முடிச்சுட்ட
மதவாதிகளும், அரசியல்வாதிகளும்
அல்லவா மரணிக்க வேன்டியவர்கள்..
மாத்திரமல்லாமல்
தான் இந்த மதம் என
தலையில் வைத்து ஆடும்
மாக்களாகிப்போன
மக்களும் அல்லவா
மரணிக்க வேண்டியவர்கள்..

எந்த இறைவனும்
எனக்காக எவரையும்
பகைத்துவிட்ட வா
என பறைசாற்றவில்லை...

நாளுக்கு நாலு தடவை
மசூதிகளில் மண்டியிடுவதாலோ
மணிக்கணக்காய்
விவிலியத்தை புரட்டுவதாலோ,
வாரமிரண்டுமுறை
விரதமிருப்பதிலோ
மாத்திரம்
நீங்கள் இறைவனின்
விரல் நகத்தைக் கூட
காண முடியாது...

இறைவனை
ஏழை, அனாதை, வறியவர்
இவர்களுக்கு செய்யும் சேவையில்
காண்பதை விட்டுவிட்டு
மசூதி,
தேவாலய சுவர்களிலும்
கோயில் சிற்பங்களிலும்
தேடி அலையும்
குருட்டு மானிடர்களே,
நீங்கள் இறைவனை
வ்ழிபாட்டில் மட்டுமே தேடுவது
நுரையீரலை கழற்றி வைத்துவிட்டு
காற்று வாங்க
கடற்கரைக்குச் செல்லும்
ஆஸ்துமா நோயாளியைப்போல் உள்ளது.

குரான், விவிலியம்
புரட்டும் நேரத்தில்
வறியவரை தேடிச்சென்று உதவுங்கள்.
இறைவன்
வீட்டு வாசலில்
உங்களைக் காண தவமிருப்பார்.

தெப்பக்குளங்களைச் சுற்றி
மந்திரம் சொல்லும் நேரத்தில்
அனாதைச் சிறுவர்களுக்கு
ஆறுதல் கூறுங்கள்.
இறைவன் உங்கள் மொழி கேட்க
ஆவலாய் வருவார்...

இறைவனை
பிற இதயங்களில்
காண்பதை விட்டுவிட்டு
இடிந்துபோகும் சுவர்களுக்குள்
அல்லவா தேடிக்கொண்டிருக்கிறோம்...

கடவுளின் நாமத்தை
மெய்மறந்து உச்சரிப்பதையும்
வேத புத்தகங்களை
வாசிப்பதையும் விட்டுவிட்டு
பிற உள்ளங்களை
நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


கடவுள்
தன் அன்பு மகனை, மகளை
தேட வைப்பதில்லை...
தேடிவருவார் புரிந்துகொள்ளுங்கள்....

pradeepkt
27-08-2005, 02:15 PM
பெரியார் கவிதை மாதிரி இருக்கு அனிதன்.
மதத்தை விட மனிதம் பெரிதென்று நம்புவோரில் நானும் ஒருவன்.
வாழ்த்துகள்.