PDA

View Full Version : யக்கா...யக்கா - செப்டம்பர் மாத நிழற்படம் - I


gragavan
04-11-2004, 05:59 AM
வணக்கம் நண்பர்களே. இது செப்டம்பர் மாதத்திற்கான நிழற்படத்தின் முதல் பகுதி. சற்று மாறுபாட்டு இருக்கட்டும் என்று இந்த முயற்சி. முயற்சி திருவினையாக்கும் என நம்புகிறேன்.



யக்கா...யக்கா - செப்டம்பர் மாத நிழற்படம் - முதல் பகுதி



மந்தையில் போரடித்துக்கொண்டிருக்கிறார் மாரியக்காவும் காளியக்காவும். உச்சி வந்துவிட்டது. சாப்பாட்டு வேளை. வேப்பமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். நம் மன்றத்தில் நடந்த விஷயங்கள்தான் அவர்கள் வெஞ்சனம். என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்போமா!



"ஏ மாரி. இந்த மாசம் புதுசா சேந்தவுக யாரு? நெனவிருக்கா?"



"அது இல்லாமயக்கா! நல்ல இருக்கே. யக்கா....அப்பிடியே அந்தத் தூக்குவாளிய இங்குட்டு நகட்டுங்க. பாலை ஷாங்குறவது ஆகஸ்டு பதுனாறுல சேந்தாரு. அப்பிடியே செப்டம்பர் முப்பதுல நமக்கெல்லாம் வணக்கம் போட்டு வந்தாரு. அப்புறம் நம்ம மாப்பிள்லையூரணி மாப்பிள அறிமுகப்படுத்துன திருமுருகன். அவரு ஒம்பதாந்தேதி வந்தாரு. மைதிலி இருக்காகளே அவுக மன்றத்துல ஏதோ கோளாறுன்னு சொல்லீட்டு ஒரு பத்துப் பதினஞ்சு நாளைக்கு வரல."



"மன்றத்துல கோளாறா? மன்றத்துக்கு வர்ரதுல கோளாறா? நீ என்னங்க?"



"காளியக்கா, அந்தப் பொல்லாப்பு நமக்கெதுக்கு. அவுக சென்னைக்கு போயிருந்தாலும் போயிருப்பாக. வந்தப்புறம் வந்துட்டேன்னு சொன்னாகள்ள. அத்தோட விடுவம். அப்புறம் வந்தாருல்ல அந்த மலேசியாக்காரரு. மனிதனாம்ல பேரு. செப்டம்பர் இருவத்து ரெண்டுல வந்து வணக்கம் போட்டாரு."



"ஆகக்கூடி புதுசா மூணு பேருல்லா! ஆமா என்னவோ எல்லாருங் கூடி ஆண்டு வெழா கொண்டாடுதாங்களாமே! திட்டம் பெரிய திட்டமாப் போடுறாக. தெரியுமா மாரி ஒனக்கு?"



"ஏதோ கேள்விப்பட்டேன். கொஞ்சம் வெவரமாத்தேஞ் சொல்லுங்களேன்"



"எல்லா இந்த மாப்பிள்ளயூரணி மாப்புள வேலதான். என்னவோ தாயாப்புள்ளயா மாமனும் மச்சானப் பழகிப்பிட்டம். ஒரு வாட்டி ஆசைக்கு மூஞ்சியப் பாத்துகிறலாமேன்னு அவனுக்கு ஆச. அத மன்றத்துல சொல்லீட்டான். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு லீவு விடுவாகள்ள...அந்த மே மாசமா வெச்சிக்கிறலாம்னு நெனக்காக. எல்லாருஞ் சரின்னு சொல்லீருக்காக. பாப்பம். என்ன நடக்குன்னு. நடந்தா நல்லாத்தான இருக்கும்."



"காளியக்கா! நல்லாச் சொன்னீக! இவுக எல்லாரும் ஒன்னு கூடி என்ன கோயில்ல பொங்க வெக்கப் போறாகளா! இல்ல காவடி தூக்குதாகளா! மொத்தமா உக்காந்து தண்ணியடிப்பாகக்கா! நம்ப முடியாது."



"அந்தப் பொருப்பத்தாந் தல தலைல கெட்டீட்டாகள்ள........" சிரிப்புத் தாளமாட்டாமல் குலுங்கிச் சிரித்தாள் காளியக்கா. பருக்கை புரையேறியது.



"யக்கா, இந்தாங்க சொம்பு. கொஞ்சோல தண்ணி குடிங்க. ஓட்டெடுப்பும் நடந்துச்சுல்ல. ஆனால் எல்லோரும் ஓட்டுப் போடமாட்டேங்காக. படிச்சவுகளே இப்பிடித்தான். மாமா கூப்புட்டு கூப்புட்டு கேட்டிச்சி. ஏதோ கொஞ்சப் பேரு போட்டிருக்காக."



"மாமாவா? அது யாருல மாமா?" காளியக்காவுக்குச் சந்தேகம்.



"மாப்பிள்ளயூரணி மாப்புளயத்தாங்கச் சுருக்கி மாமான்னேன். நீங்க வேற. எடக்கு மொடக்காச் சொல்ல. அந்த வீட்டக்கா அடிக்க வந்துருவாக."



"அதான. நீ பாட்டுக்கு கூருகெட்டமானிக்கிச் சொல்தயேன்னு பாத்தேன். அப்புறம் எளந்தமிழுச்செல்வன் போட்ட அவசரக் கோலம் பெரமாதமுல்ல. நாலு வீதிக்கு தேரும் ஆனையுமா கோலம் போட்டாக்குல பெரமாதப் படுத்தீட்டாமுல." காளியக்கா விட்ட இடத்தில் தொடர்ந்தார் மாரியக்கா. "ஆனாலு நண்பர் சொன்னத நெனச்சாத்தான் எனக்கு திக்கு திக்குங்கு! நெழல்படத்துல வெமருசனஞ் செய்யாம சும்மா கதையடிக்காகன்னு சொல்லிப்புட்டாரே! நம்ம கத என்ன ஆகப் போகுதோன்னு நெனைக்கைல ஈரக்கொல நடுங்குது. எல்லாருஞ் சமாதானஞ் சொல்லீருக்காக. பாப்பம். அவரு ஒரு குத்தமுஞ் சொல்லலைன்னா ஐயனாருக்குப் பொங்க வெக்கிறேன்." ஒரு ரூவாய் நாணயத்தை சேலைத் தலைப்பில் நினைவிற்காக முடிந்து கொள்கிறாள் மாரியக்கா.



"இந்தால மாரி, ஒனக்கு ஏங் கொல நடுங்குது? அவரு அப்பிடிச் சொல்லலாமா? வெமருசனந்தான் ஒடனே ஒடனே போட்டுர்றாகளே! அப்புறம் எத்தன வாட்டி வெமருசனஞ் செய்ய. இங்க நடந்ததத்தான் பேசனும். எல்லாஞ் சரித்தான். சரி வா. கூப்புடுறாக. கையக் கழுவீட்டு வா. இதுவரைக்கும் முல்லைய மட்டுந்தான பாத்துருக்கோம். டீக்காரன் வரும் போது மல்லியப் பாப்பம். வாத்தா போவம்." காளியக்காவும் மாரியக்காவும் போரடிக்கப் போகிறார்கள்.



சற்று நேரங் கழித்து டீக்காரன் வருகிறான். எல்லாரும் டீக்குடிக்கப் போகிறார்கள். பித்தம் என்பதால் மாரியும் காளியும் டீ குடிக்காமல் மல்லி மன்றத்தைப் பற்றி பேசுகிறார்கள்.



"காளியக்கா! பூவ மோந்து பாக்கக் கூடாதாமுல. ராகவஞ் சொல்றாரு. அது நம்முள திருப்பி மோந்து பாத்துச்சுன்னா என்னாகுறது! ஒரே நாத்தம். இவரெல்லாங் கவித எழுத வந்துட்டாரு. ராம்பலு இருக்காரே...அவரு என்னமா எழுதிருக்காரு. மூனு நாலு வரில அருமையா எழுதிருக்காரு. கேட்டா எதிரு பாராம தட்டுப்பட்டுச்சாம். அப்பவே இப்பிடீன்னா, பாத்து தட்டுப்படும் போது எப்பிடி இருக்கும்."



"இருக்குமாத்தா இருக்கும். எனக்கென்னமோ அவரு மூஞ்சிலடிச்சாப்புல சொல்லிப்புட்டாரோன்னு தோணுது. தப்புக் கண்டுபிடிச்சிக்கிட்டேயிருந்தா ஆகுமா? நல்ல வார்த்தையா ரெண்டு சொன்னா கொஞ்ச எதமா இருக்குமில்ல. தாமர கூட சோகத்தச் சொகமா சொல்லீருக்காகளே! எப்பய்யா மனுசனாவோம்னு கேக்கைல என்னவோ பண்ணுதுல்ல. அந்தக்கா லெங்கைலருந்து வெளிநாட்டுக்கு போச்சாம். பட்ட பாட்டெல்லாம் பாட்டாப் படிச்சிருக்கு."



"காளியக்கா! அவுக ஊருவிட்டு ஊரு போனவுக. அந்தச் சோகந் தீருமா. நம்ம இங்கயா பொறந்து வளந்து தின்னுக்கிட்டிருக்கோம். நாலு எடம் போனால்ல கஷ்டந் தெரியும். லெங்கைல நடக்குறதுதாந் தெரியுமே. சொந்த ஊருப்பாசம். அதான் அக்கர இக்கரன்னு தவிக்காக. என்னவோ! எல்லாரும் நல்லாருந்தாச் சரித்தான். இன்னோன்னு பாருங்க. பூன்னு பேரு வெச்சிக்கிட்டு பொயலப் போல பாட்டெழுதிருக்காக. எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சி." பழைய நினைவில் கண்ணைத் துடைக்கிறாள். "அத்தோட ஒரு போட்டோ போட்டிருந்தாகளே! இருக்கங்குடித் தாயே! ரெண்டு நாளைக்குச் சோறு தண்ணி தொண்டைல எறங்கல. வீட்டுல அவுகளும் என்னன்னு கேட்டாக. நான் ஒன்னுமில்லைன்னு சொல்லிப்புட்டேன்."



"சரியாத்தா அழாத. என்ன செய்ய. அத விடு. மம்முதங் கவிதையப் படிச்சியா? இந்தப் பய என்ன போடு போடுறாம் பாரேன். ஒழுங்கா கெணத்துல கோமணங் கெட்டி குளிக்கத் தெரியாது. கவிதய எழுதித் தள்ளுறான். படிக்கைலயும் முடிக்கைலயும் லேசாச் சந்தோசமா இருந்திச்சி. ஆனா நண்பரு முற்பகலு பிற்பகலுன்னு சொல்லீட்டு தீவிரவாதத்தப் பத்தி எழுதுனாரே! யப்பா! நெஞ்சுல கல்ல வெச்சாப்புல. நறுக்குத் தெரிச்சாப்புல இவ்வளவு கொடுமையாவாச் சொல்லுவாக. கவிதைல எதையுஞ் சொல்லாம் போல இருக்கு."



"சொல்லுவாரு. சொல்லுவாரு. இந்த மாரி எதுக்கிருக்கேன். கேக்க மாட்டேன். தீவிரவாதத்தப் பத்தி பேசீட்டு அப்பிடியே மூட்டப்பூச்சி மேல பாஞ்சிருக்காரு. வீட்டுல நெறயா மூட்டப்பூச்சி போல." மாரியக்கா சிரித்த சிரிப்பில் மந்தையே குலுங்கியது. அதை ஆமோதிப்பது போல காளியக்காவும் கூடச் சிரித்தார்.



சிரிப்பை நிறுத்திய மாரி பேச்சைத் தொடர்ந்தாள். "யக்கா! மூட்டப்பூச்சி மேல பாஞ்சிட்டு அப்பிடியே புனுகுப் பூன மேலயும் மான்குட்டி மேலயும் கரிசனத்தக் காட்டிருக்காரு. ஒரு வேள இவரு மரக்கறி திங்குறவறோ! அத்தோட விட்டாரா மனம் போன வாக்குல கனவுக்கன்னின்னு ஒரு பாட்டு வேற. என்னவோ பெரிய பொலவரு கணக்கா எழுதிருக்காரு. பள்ளிக்கூடத்துல வாத்தியாரு பாடம் எடுத்த கணக்கா இருக்கு."



"இருக்கும்டி இருக்கும். பிரியனோட கவிதைகளப் படிச்சியா. நாலு கவிதை எழுதிருக்காரு. அப்பாவோட சட்டையப் பத்தி பெரமாதமா எழுதிருக்காரு. எங்கப்பாரு ஒரு சட்டதான் வெச்சிருந்தாரு. பொங்கலுக்குத்தேன்னு வெச்சிருந்து போடுவாரு. அந்தச் சட்டயத்தான் வெள்ளாவிக்குப் போடையில வண்ணாத்தி கருக்கித் தொளச்சுப்புட்டா. அதப் பத்துரமா எங்காத்தா இன்னும் வெச்சிருக்கு. அப்பிடியே கவித எழுத முடியாததக் கூட கவிதையாச் சொல்லீருக்காரே. இப்பிடி எழுதுறவரு வாழ்க்கையில என்ன கொழப்பமோ! ஏனிந்தப் பயணம்னு கேக்குறாரே! என்னவோ போத்தா! புரியலைன்னாலுங் காத்திருப்பேன்னு சொல்றாரே. அந்த மட்டுக்குச் சரிதான்."



ஏதோ சந்தேகம் வந்தவளாக மாரியக்கா கேட்டாள். "யக்கா இன்னமு நெம்ப இருக்கே. எப்பப் பேச?"



"இருக்கட்டுமே. நாம இம்புட்டுதாம் பேச முடியும். வேணுமின்னா படிச்ச பெரியவுக பேசிக்கிறட்டும். நகரு. கூப்புடுதாகள்ள!" மாரியக்காவும் காளியக்காவும் சொளகுகளைத் தூக்கிக் கொண்டு வேலையைத் தொடரச் சென்றனர்..



நிழல்படங்கள் செப்டம்பர் முதல் பாகம் முடிந்தது.

இளசு
04-11-2004, 06:16 AM
ஒவ்வொரு பூவில் ஒவ்வொரு வாசம்!



ஒவ்வொருவர் நிழற்படமும் ஒவ்வொரு விதம்!



இது மிகப்புதுவிதம்.. இதம்..பதம்.!



அதுவும் இரு அக்காக்கள் அலசுவதால்

பூப்போல் காயமே படாமல் மெல்ல வீசும் இதம்..



இரு மன்றங்களை அலசிய விதம்

அக்காக்களுக்கு ஜே போட வைக்கிறது..



இந்த முழுநிழற்பட அலசலுக்கும், பின்

மற்ற வகைகளிலும் அக்காக்கள் பரவலாக உலாவ வேண்டும்.



இராகவனிம் மகாதிறமைக்கு மற்றொரு சான்று..

நிழற்படங்களில் புத்தம்புது கோணம்..



பாராட்டுகள் இராகவன்..



(செப்டம்பர் மாதம் விடுபட்டுப்போய்விடுமோ என்ற ஏமாற்றத்தைத் தீர்த்ததற்கு

உங்களுக்கும் அறிஞருக்கும் சிறப்பு நன்றிகள்..)

பரம்ஸ்
04-11-2004, 06:57 AM
இராகவன் அண்ணா,



அருமையான நிழற்படம், அடுத்த பாகம் எப்போ வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். நம்ம ஊரு பாசையில் கலக்கியிருக்கீங்க. மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் எழுத்து நடை.



ஆமா, யாரு அவுக, அதான் மாப்பிள்ளையூரணி மாப்புள்ள?

pradeepkt
04-11-2004, 09:19 AM
அடேயப்பா!

ராகவனுக்குச் சும்மாவே நம்ம பக்கத்துப் பேச்செல்லாம் அல்வா திங்கிறது மாதிரி...

இதில அவரே கிண்டி, திண்டு, அது செரிச்சும் போச்சேய்யா..

எங்களுக்குத்தான் சிரிச்சி சிரிச்சி செரிமானம் இல்லாம போச்சு.

யக்காக்களுக்கு அடுத்து வரப்போறவுக அய்யாக்களோ, ஆத்தாக்களோ... தெரியலியே!!!

அடுத்தத சீக்கிரம் எழுதுங்க சாமீ...



எதிர்பார்த்து,

பிரதீப்

gragavan
04-11-2004, 12:20 PM
இந்த முழுநிழற்பட அலசலுக்கும், பின்

மற்ற வகைகளிலும் அக்காக்கள் பரவலாக உலாவ வேண்டும்.



இராகவனிம் மகாதிறமைக்கு மற்றொரு சான்று..

நிழற்படங்களில் புத்தம்புது கோணம்..



பாராட்டுகள் இராகவன்..



பாராட்டுகளுக்கு நன்றி இளசு. கண்டிப்பாக காளியக்காவும் மாரியக்காவும் அடிக்கடி வருவார்கள்.



அன்புடன்,

கோ.இராகவன்

gragavan
04-11-2004, 01:18 PM
இராகவன் அண்ணா,

அருமையான நிழற்படம், அடுத்த பாகம் எப்போ வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். நம்ம ஊரு பாசையில் கலக்கியிருக்கீங்க. மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் எழுத்து நடை.

ஆமா, யாரு அவுக, அதான் மாப்பிள்ளையூரணி மாப்புள்ள?மாப்பிள்ளயூரணி மாப்புள யாரா? பொண்ணெடுத்தாத்தான் மாப்புளயா? நம்மூருப்பக்கம் மாமம் மச்சான் மக்கா மாப்புளன்னு கூப்புடறதில்லையா! இருந்தாலும் மாரியக்கா மாமான்னு கூப்பிட்டிருக்க வேண்டாம். :-)

அன்புடன்,

கோ.இராகவன்

பாரதி
04-11-2004, 02:20 PM
மன்ற நண்பர்களின் திறமை உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. தூண்டுகோலாக எது இருந்தாலும், நின்று பிரகாசிக்கக்கூடிய திறமை நமது மன்ற நண்பர்கள் பலருக்கும் இருப்பது கண்டும்... மேன்மேலும் வளர்வது கண்டும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.



அக்காக்கள் அளவளாவட்டும்....அளவில்லா ஆனந்தம் அனைவருக்கும் கிடைக்கட்டும். என் மனமார்ந்த பாராட்டுக்கள் இராகவன்.

மன்மதன்
04-11-2004, 08:29 PM
அண்ணாத்தே.. கல்கிட்டேப்பா.. கொய்ஞ்ச வார்த்தகதான் புர்லே.. அத்வும் கலர் அடிக்காம, கொடுத்திட்டியேன்ற வருத்தம் .. படிக்கும் போவே என்ன டைட்டில்ல எழ்தியுருக்காங்கோன்னு தெர்ஞ்சிக்க வோணாமா???



ரொம்பவும் வித்தியாசமாக இந்த மாத நிழற்படம்.. கலக்கல்ஸ்..



அன்புடன்

மன்மதன்

அறிஞர்
05-11-2004, 04:10 AM
வாழ்த்துக்கள் இராகவன்...



குறுகிய காலத்தில் கலக்கி விட்டீர்கள்...



ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு திறமை........



உங்கள் திறமை வியக்க வைக்கிறது....



வித்தியாசங்களின் கலவையாக.. நிழற்படம் மாறிவருகிறது... வாழ்த்துக்கள்

பிரியன்
06-11-2004, 01:58 PM
அடங்கொப்புறானே......யக்காக்கள் படு கெட்டி & சுட்டி......

இயல்பான பார்வையில் கருத்துகள்....

வயக்காட்டு பேச்சுகள் நிறைய எதிர்பார்க்கிறோம்.......

தொடருங்கள் அன்பரே....



அன்புடன்

பிரியன்..

gragavan
08-11-2004, 05:10 AM
அக்காக்கள் அளவளாவட்டும்....அளவில்லா ஆனந்தம் அனைவருக்கும் கிடைக்கட்டும். என் மனமார்ந்த பாராட்டுக்கள் இராகவன்.பாராட்டுகளுக்கு நன்றி பாரதி. அக்காக்கள் உங்களை மகிழ்வித்தார்கள் என்றால் மகிழ்ச்சி எனக்கு.



அன்புடன்,

கோ.இராகவன்

gragavan
08-11-2004, 05:13 AM
அண்ணாத்தே.. கல்கிட்டேப்பா.. கொய்ஞ்ச வார்த்தகதான் புர்லே.. அத்வும் கலர் அடிக்காம, கொடுத்திட்டியேன்ற வருத்தம் .. படிக்கும் போவே என்ன டைட்டில்ல எழ்தியுருக்காங்கோன்னு தெர்ஞ்சிக்க வோணாமா???

ரொம்பவும் வித்தியாசமாக இந்த மாத நிழற்படம்.. கலக்கல்ஸ்..

அன்புடன்

மன்மதன்

என்ன மம்முதா! ஒனக்குப் புரியலையா! அனேகமா ஏகப்பட்ட பேருக்கு அதெல்லாம் புரியாமப் போயிருக்கலாம். சரி. எதெது புரியலைன்னு சொல்லு. விளக்குறேன்.
கலரெல்லாம் எதுக்குப்பா! என்னுடடைய எல்லா எழுத்தும் ஒன்றே. மேலும் அதெல்லாம் இல்லாமலே மக்கள் புரிஞ்சி படிக்கனும். அதுதான் நல்ல எழுத்துக்கு அடையாளம். பொலிவற்ற முகத்துக்குத்தானே அலங்காரம் தேவை!

அன்புடன்,

கோ.இராகவன்

gragavan
08-11-2004, 05:15 AM
வாழ்த்துக்கள் இராகவன்...



குறுகிய காலத்தில் கலக்கி விட்டீர்கள்...



ஒவ்வொருத்தருக்கும்.. ஒவ்வொரு திறமை........



உங்கள் திறமை வியக்க வைக்கிறது....



வித்தியாசங்களின் கலவையாக.. நிழற்படம் மாறிவருகிறது... வாழ்த்துக்கள்நன்றி அறிஞரே! ஆனால் இந்த நிழற்படத் தயாரிப்பில் தாங்கள் செய்த உதவியைத்தான் என்னால் மறக்க முடியாது. காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது.



அன்புடன்,

கோ.இராகவன்

gragavan
08-11-2004, 05:19 AM
அடங்கொப்புறானே......யக்காக்கள் படு கெட்டி & சுட்டி......

இயல்பான பார்வையில் கருத்துகள்....

வயக்காட்டு பேச்சுகள் நிறைய எதிர்பார்க்கிறோம்.......

தொடருங்கள் அன்பரே....



அன்புடன்

பிரியன்..நன்றி பிரியன். கண்டிப்பாக இன்னும் நிறையத் தருவார்கள் அக்காக்கள்.



அன்புடன்,

கோ.இராகவன்

Nanban
08-11-2004, 07:01 PM
நண்பரே, பொங்கல் வைக்கலாம்.

உங்களின் கேள்விக்கு அதே பதிவில் பதில் இருக்கிறது. முழுதாகப் படிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

(அப்புறம் பொங்கல் வச்சதுக்கு சாட்சியா, அதை கொஞ்சம் பொட்டலம் கட்டி, அருகே இருக்கும் மன்ற நண்பர்கள் யாருடைய வீட்டுக்காவது போய்க் கொடுத்துட்டு வாங்க - இல்லன்ன, பெப்ரவரி மாதம், பெங்களூர்ல வீட்டுக்கே வந்து கொடுத்துட்டுப் போகலாம்....)

அன்புடன்,

gragavan
09-11-2004, 05:15 AM
நண்பரே, பொங்கல் வைக்கலாம்.



உங்களின் கேள்விக்கு அதே பதிவில் பதில் இருக்கிறது. முழுதாகப் படிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.



(அப்புறம் பொங்கல் வச்சதுக்கு சாட்சியா, அதை கொஞ்சம் பொட்டலம் கட்டி, அருகே இருக்கும் மன்ற நண்பர்கள் யாருடைய வீட்டுக்காவது போய்க் கொடுத்துட்டு வாங்க - இல்லன்ன, பெப்ரவரி மாதம், பெங்களூர்ல வீட்டுக்கே வந்து கொடுத்துட்டுப் போகலாம்....)





அன்புடன்,நண்பரே! அந்த வரிகள் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. மனம் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள். எல்லா விஷயங்களையும் சொல்ல முடியாது என்பதால் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இருந்தும் மூன்று பாகங்கள் வரும் போலத் தெரிகிறது.



பொங்கல கொடுக்க பக்கத்துல மன்ற நண்பர்கள் யாருமில்லையே! பிப்ரவரில பெங்களூர் வாரீங்களா! வாங்க வாங்க! நேருல ஒங்களுக்கே பொங்க வெச்சிருவோம். :-) வர்ரதுக்கு முன்னால ஒரு மெயில தட்டீட்டு வாங்க.



அன்புடன்,

கோ.இராகவன்

mania
09-11-2004, 10:23 AM
வித்தியாசமான முயற்சி.........பாராட்டுக்கள் ராகவன்.... ரசிக்கும் (சிரிக்கும்) படியாகவும் இருக்கிறது.....

அன்புடன்

மணியா.....

gragavan
10-11-2004, 04:47 AM
பாராட்டுகளுக்கு நன்றி மணியா. இரண்டாம் பாகம் நாளை வருகிறது. புது வடிவில்.



அன்புடன்,

கோ.இராகவன்

சேரன்கயல்
11-11-2004, 03:52 AM
ராகவன்ஜி...எப்போதும் போல் கலகலப்பான நடையில் இந்த நிழற்படத்தை உருவாக்கி(க்கொண்டிருக்கிறீர்கள் ) யிருக்கீங்க...

வாழ்த்துக்கள் உங்களுக்கு...

(அங்கே இங்கே கொஞ்சம் கலர் கிலர் அடிச்சு கில்மாஸா செஞ்சிருந்தா அம்சலேகாவா இருக்கும் ராகவன்ஜி...)

gragavan
11-11-2004, 04:06 AM
நன்றி சேரன்கயல். கலரடித்து லிங்க் குடுத்தால் நன்றாக இருக்கும்தான். ஆனால் முதல்முறை என்பதால் செய்து விட்டேன். அடுத்து எப்பொழுதாவது செய்தால் கண்டிப்பாகச் செய்கிறேன்.



அன்புடன்,

கோ.இராகவன்

இக்பால்
11-11-2004, 10:03 AM
இராகவன்...



நீங்கள் வந்த நேரம் ... நான் இங்கு இல்லை என்று பாடலாம்.



இரண்டாவதாக உங்கள் எழுத்துகளை நிழற்படத்தில் பார்க்கிறேன்.

நன்றாக வந்திருக்கிறது.



இரண்டாவது பாகத்தை படித்துக் கருத்துப் பதிக்கச் செய்கிறேன்.



உங்கள் மற்ற பதிவுகளை சென்று பார்க்கச் செய்கிறேன்.



உற்சாகமாக தொடருங்கள்.



-அன்புடன் இக்பால்.

gragavan
11-11-2004, 12:04 PM
நன்றி இக்பால். நேரம் கிடைக்கையில் படித்து கருத்து சொல்லுங்கள்.



அன்புடன்,

கோ.இராகவன்

baranee
12-11-2004, 08:47 AM
புதுமையான முறையில் அசத்தி இருக்கிறீர்கள் ராகவன்... வாழ்த்துக்கள்.