PDA

View Full Version : உடனடிச்செய்திகள்



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12

nambi
08-12-2010, 12:43 PM
சென்னை: சினிமா பாடலில் அரங்கநாத சுவாமியையும், வரலட்சுமி தேவியையும் கேவலப்படுத்தி எழுதியுள்ளார் கமல் என கண்டனக் குரல் எழுந்துள்ளது.

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் மிகவும் அறுவறுக்கத்தக்கதாகவும் ஆபாசமாகவும் உள்ளதாகவும், இதில் அரங்கநாதர் மற்றும் வரலட்சும் ஆகிய தெய்வங்களை தேவையின்றி இழிவுபடுத்துவதாகவம் கூறி, இந்து மக்கள் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, இயக்குனர் ரவிக்குமார், ஹீரோ கமல்ஹாஸன், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்குஇந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணன்.

அந்த நோட்டீஸில் இப்படிக் குறிப்பிட்டுள்ளனர்:

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடல், இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையச் செய்துள்ளது.

நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டப்போரைச் சந்திக்க வேண்டி வரும்", என்று கூறியுள்ளார்.
...தட்ஸ்தமிழ் 08.12.2010

பாலகன்
08-12-2010, 01:20 PM
உடனடி செய்திகளை தொகுத்தளிக்கும் நண்பர் நம்பிக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தொடருங்கள் நம்பி

ஆன்டனி ஜானி
08-12-2010, 01:58 PM
ஒரு செய்தியாக இருக்கும் என்று நினைத்து வந்தால்
நிறைய செய்தியை தந்து கலக்கிட்டீய

வாழ்த்துக்கள்........

nambi
09-12-2010, 01:30 AM
சென்னை, டிச.9-

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்த சென்னை ஐகோர்ட்டு, அவரை சரண் அடையும்படி உத்தரவிட்டது.

கொலை வழக்கில் இலங்கை மந்திரி

ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, தற்போது இலங்கையில் மந்திரி பதவி வகித்து வருகிறார். இவர் முன்பு `இ.பி.ஆர்.எல்.எப்' என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார்.

கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமறைவு குற்றவாளிகள்

இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேரும் பின்னர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக செசன்சு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து டக்ளஸ் தேவானந்தா உட்பட அனைவரையும் தலைமறைவு குற்றவாளிகளாக 30.4.94 அன்று அறிவித்தது.

இந்த நிலையில், சமீபத்தில் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு இலங்கை மந்திரி என்ற தகுதியில் வந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தொடர்ந்து நீடிக்கும் அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டுமென்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

இதைத்தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தன்னை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக கோர்ட்டு பிறப்பித்த அறிக்கை, செய்தியாகத்தான் பத்திரிகையில் வெளிவந்ததே தவிர, முறையான விளம்பரமாக வெளியாகவில்லை என்றும், எனவே செசன்சு கோர்ட்டின் அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

கொலை வழக்கை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இவர்களை தலைமறைவு குற்றவாளிகள் என்றுதான் செசன்சு கோர்ட்டு அறிவித்துள்ளதே தவிர பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என்று கோர்ட்டு அறிவிக்கவில்லை.

ரத்து இல்லை

தலைமறைவு குற்றவாளிகள் அனவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று 30.4.94 அன்று செசன்சு கோர்ட்டு வெளியிட்ட அறிவிப்பு செல்லத்தக்கதுதான். பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பது, இதற்கு அடுத்த நிலையில்தான். அதற்கான இறுதி உத்தரவுகளை செசன்சு கோர்ட்டு பிறப்பிக்கவில்லை.

கொலை வழக்கு விசாரணையில் இருந்தபோது, ஆஜராகாததால் இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே டக்ளஸ் தேவானந்தா இப்போது ஜாமீனில் இல்லை. அதனால் தலைமறைவுக் குற்றவாளியாக செசன்சு கோர்ட்டு அறிவித்ததை ரத்து செய்ய தேவையில்லை.

ஆஜராக வேண்டும்

இந்த நிலையில் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்யலாம். மேலும், 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் அவர் ஆஜராகி (சரண் அடைந்து) தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு உள்ள பிடிவாரண்டை திரும்பப் பெற வேண்டும்.

அப்போது இவ்வளவு காலம் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதற்கான தகுந்த காரணங்களை எழுத்து பூர்வமாக அவர் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தை செசன்சு கோர்ட்டு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

...தினத்தந்தி 09.12.2010, வெப்துனியா, தினகரன், தினமணி....


"தேடப்படும் குற்றவாளி அல்ல தேவானந்தா"


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

..பிபிசி...தமிழோசை 08.12.2010

nambi
09-12-2010, 01:47 AM
மும்பை, டிச.9-

காசி குண்டுவெடிப்பை நடத்தியதில் மும்பை தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் தயாள் கூறினார்.

காசி குண்டுவெடிப்பு

உலக பிரசித்தி பெற்ற புனிததலமான காசி என்று அழைக்கப்படுகிற வாரணாசியில் நேற்று முன்தினம் மாலையில் குண்டு வெடித்தது. கங்கை நதிக்கரையில் நடந்த `கங்கா ஆரத்தி' என்ற பூஜையின் போது நடந்த இந்த குண்டு வெடிப்பில் 1 1/2 வயது பெண் குழந்தை ஒன்று பலியானது.

6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 37 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

`இந்தியன் முஜாகிதீன்' பொறுப்பு

இந்த குண்டு வெடிப்புக்கு நாங்கள்தான் காரணம் என்று `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. குண்டு வெடித்த சில நிமிடங்களிலேயே, இது தொடர்பான இமெயிலை அந்த அமைப்பு நவிமும்பையில் இருந்து பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் டி.வி. சானல்களுக்கு அனுப்பியது. 5 பக்கங்களில் இருந்த இந்த இ மெயில் கடிதம் 6-ந் தேதியிட்டு அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் தயாள், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிரவாதிகள் அனுப்பிய இ-மெயில், அதில் உள்ள கையெழுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவை இதற்கு முன்பு நடந்த குண்டுவெடிப்புகளின்போது, அனுப்பப்பட்டதை ஒத்துள்ளது. இமெயில் அனுப்பியது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் என்பதை ஆரம்ப கட்ட விசாரணை உறுதிப்படுத்தி உள்ளது. தற்போது இந்த மெயில் நவிமும்பை வாஷி 17-வது செக்டர் மான்சரோவர் கட்டிடத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் சகோதரர்களான நிகில், அகில் ஆகியோருடையதாகும். விசாரணையில் இவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தெரியவந்துள்ளது. இவர்களது ஏர்டெல் இன்டர்நெட் பிராட்பேண்டை தவறாக பயன்படுத்தி, தீவிரவாதிகளால் இந்த இமெயில் அனுப்பப்பட்டுள்ளது.



மும்பை தீவிரவாதிகள்

இருப்பினும் காசி குண்டுவெடிப்புக்கான சதித்திட்டத்தை தீட்டிய தளகர்த்தர்கள் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து கொண்டுதான் இங்கு ஆட்டுவிக்கிறார்கள். அவர்கள் யார் என்று கேட்டால், அவர்கள் இந்தியன் முஜாகிதின் தீவிரவாத இயக்கத்தை தொடங்கிய ரியாஸ் பட்கல் மற்றும் அவரது சகோதரர் இக்பால் பட்கல் ஆகியோர் ஆவர்,

இவர்கள் இருவரும் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர்கள் மும்பை குர்லா பகுதியில் தோல் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது சிமி இயக்கத்தில் இருந்தவர்கள், அந்த இயக்கத்தை மராட்டிய மாநில அரசு தடை செய்த பிறகு தலைமறைவாகி விட்டனர். இவர்கள் 2 பேரும் இந்தியாவில் கலவரம் உண்டு பண்ணுதல், தேசதுரோக வேலையை செய்து வந்தனர். இதுவரை இந்தியன் முஜாகிதின் அமைப்பினர் 2005-ல் இருந்து 11 இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்புகளும், 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களும் ஒரே பாணியில் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இமெயில் அனுப்பியது யார்?

இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாக உள்ளனர்.

தற்போது இ மெயிலை அனுப்பியவர்கள் இப்படி தலைமறைவாக உள்ளவர்களா அல்லது புதியவர்களா என்பது குறித்து இனிதான் விசாரிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம் குற்றசாட்டு

இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், காசியில் குண்டு வெடித்த இடத்தை நேற்று பார்வையிட்டார். காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், ``தற்போது குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் குண்டு வெடிக்கலாம் என்று கடந்த பிப்ரவரி மாதமே உத்தரபிரதேச மாநில அரசுக்கு மத்திய உள்துறை இலாகா எச்சரிக்கை அனுப்பி இருந்தது. மேலும் மும்பை தாக்குதல் நடந்த 2-வது நினைவு நாளையொட்டியும், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டியும் இதேபோல எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. ஆனால் மாயாவதி அரசு அவற்றை புறக்கணித்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டது'' என்று குற்றம் சாட்டினார்.

.....தினத்தந்தி 09.12.2010

nambi
09-12-2010, 01:55 AM
http://dinamani.com/Images/article/2010/12/8/film.jpg

சென்னை, டிச. 7: எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ், பிலிம் சேம்பர் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகிறது.

மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதம் நடைபெறுகிறது.

அனைத்துப் படங்களையும் பார்ப்பதற்கு சிறப்பு நுழைவுச் சீட்டு 500 விலையில், பிலிம் சேம்பரில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
...தினமணி 09.12.2010

nambi
09-12-2010, 10:35 AM
இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல் -4 வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல் -4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப்பிரியாவின்(27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசைப்பிரியாவின் உடலை வேறு கோணத்தில் காட்டும் புகைப்படம் இடம்பெற்றது. இந்த விடியோவில் இசைப்பிரியாவின் தோழியும் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவருமான கல்பனாவின் பேட்டியும் உள்ளது.

விடியோவில் இடம்பெற்றது இசைப்பிரியாவின் உடல்தான் என அவர் அடையாளம் காட்டியிருக்கிறார்.

....தினமணி 09.12.2010

nambi
10-12-2010, 05:47 AM
சென்னை, டிச.10-

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமானை சிறையில் அடைத்து சென்னை காவல் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆர்ப்பாட்டம்

சினிமா இயக்குனரான சீமான், நாம் தமிழர் இயக்க தலைவராக இருக்கிறார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10-ந் தேதி இவரது தலைமையில் இந்த இயக்கத்தினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கை மீனவர்களுக்கு எதிரான சில கருத்துகளை சீமான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12-ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை காவல் துறை ஆணையராக பொறுப்பு வகித்த கூடுதல் காவல் ஆணையர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16-ந் தேதி உத்தரவிட்டார்.

ஆட் கொணர்வு மனு

இந்த நிலையில் அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த அரசு உத்தரவை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீண்டநாட்களாக நிலுவையில் இருந்தது.

இந்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வழக்குரைஞர் சந்திரசேகரன் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும்படி வாதிட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

வாதம்

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. காவல் ஆணையர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் அரசுத் தலைமை வழக்குரைஞர்(அட்வகேட் ஜெனரல்) பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், `சென்னை காவல் ஆணையர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் காவல் ஆணையர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது' என்று வாதிட்டார்.

உத்தரவு ரத்து

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

காவல் ஆணையரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் காவல் ஆணையர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் காவல் ஆணையர் செயல்பட முடியாது. எனவே அந்த சட்டத்தின் கீழ் கூடுதல் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

...தினத்தந்தி 10.12.2010

nambi
10-12-2010, 05:50 AM
வாஷிங்டன், டிச.10: இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு மிசிசிபி விமானநிலையத்தில் நேர்ந்த அவமரியாதை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில உள்ள மிசிசிபி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவர் சேலை அணிந்து சென்றிருந்தார்.

அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகாரிகள், கைகளால் தடவி சோதனையிட்டனர். இதன் பின்னரே அவரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதையும் கண்டறிய முயற்சித்து வருவதாக கிளின்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

...தினமணி 10.12.2010

nambi
10-12-2010, 05:54 AM
புதுதில்லி, டிச. 9: ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை

(Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது.

இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான விடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.

மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.

ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசினார்.

கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும் என்றார் அவர்.

ஊழலற்ற நடைமுறை, பொது வாழ்வில் ஒழுக்கம் போன்ற தார்மிக நெறிகள் குறித்த கல்வி பள்ளிகளில் பாடமாகச் சேர்க்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசினார். மற்றொரு மத்திய கண்காணிப்பு ஆணையர் ஸ்ரீகுமாரும் இந்த கருத்தரங்கில் பேசினார்.

மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல் "விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.
..தினமணி .09.12.2010

nambi
13-12-2010, 01:22 AM
கொழும்பு, டிச. 12: இலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை தேசிய கீதம் இதுவரை சிங்களத்திலும், தமிழிலும் பாடப்பட்டு வந்தது. இந் நிலையில் தமிழில் பாடும் முறை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பொது நிர்வாகவியல் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிபர் ராஜபட்ச தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

"எந்தவொரு நாட்டிலும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவில்லை. நாட்டின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே வெளிநடப்பு செய்துள்ளார். இலங்கை ஒருங்கிணைந்த நாடு. இதில் ஒரு மொழியில்தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்' என்று அதிபர் ராஜபட்ச கூறினார்.

அவரது கருத்துக்கு அமைச்சர் விமல் வீரவம்ச ஆதரவு தெரிவித்தார். அவர் பேசும்போது, நமது அண்டைநாடான இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் ஹிந்தியில்தான் தேசியகீதம் பாடப்படுகிறது என்றார்.

அதிபரின் கருத்துக்கு மாறாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தேசியமொழிகள், சமூக ஒற்றுமை துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவும், மற்றொரு அமைச்சர் ராஜிதா சேனரத்னாவும் வலியுறுத்தினர்.

எனினும், பெரும்பான்மை அமைச்சர்களின் ஆதரவுடன் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
...தினமணி 13.12.2010

nambi
13-12-2010, 01:25 AM
//அண்டைநாடான இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் ஹிந்தியில்தான் தேசியகீதம் பாடப்படுகிறது என்றார்.//


இந்தியாவில் தேசிய கீதம் வங்காள மொழியில் இயற்றப்பட்டது...அந்த மொழியில் தான் பாடப்படுகிறது....அப்படித்தான் இணையதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..பாடப்புத்தகத்திலும் அப்படித்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது...இது என்ன புதுக்கதை....?:confused:

nambi
13-12-2010, 01:32 AM
புதுடெல்லி, டிச.13-

டெல்லியில் தமிழர்களுக்கு குறிப்பிட்ட பங்கு உண்டு என்று முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

தமிழ் 2010 கருத்தரங்கம்

டெல்லி தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் 2010 கருத்தரங்கம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தலைமை வகித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் டெல்லி தமிழ் சங்கத்திற்கு வருவது இது 5-வது தடவை என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் இங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்தபோது தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியும் வந்திருந்தார்.

எனக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என் மருமகளே தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர்தான். எனக்கும், என் கணவருக்கும் தமிழ் நண்பர்கள் ஏராளம்.

தமிழகத்தில் எண்ணற்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள். அவரது எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நான் படித்து மிகவும் உத்வேகம் அடைந்திருக்கிறேன்.

தமிழர்களுக்கு குறிப்பிட்ட பங்கு

மனிதகுல சமத்துவத்திற்காகவும், பெண்கள் விடுதலைக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும், அவர் ஏராளமான இயக்கங்களை நடத்தி இருக்கிறார். இந்தியாவிலேயே சமூக புரட்சியை ஆரம்பத்திலேயே கொண்டு வந்தவர் தந்தை பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். அத்தகைய சமூக சீர்திருத்தவாதிகள் எண்ணற்றோரை தந்தது தமிழகம்.

டெல்லி மாநகரத்தில் பல்வேறு மொழி பேசுவோர் வாழ்கிறோம். இதில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு. டெல்லி தமிழ்ச்சங்கம் நடத்துகிற 2010 கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல்-மந்திரி ஷீலா தீட்சித் பேசினார்.

தமிழநாடு அரசின் சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், கனடா லிண்ட்சர் பல்கலைக்கழக பேராசிரியர் கவிஞர் சேரன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தலைவர் கி.நாச்சிமுத்து, டெல்லி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் அ.மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பி.குருமூர்த்தி நன்றி கூறினார்.
....தினத்தந்தி 13.12.2010

nambi
13-12-2010, 01:44 AM
புதுடெல்லி: ‘இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க 2ல் ஒருவர் லஞ்சம் கொடுத்திருக்கிறார்’ என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் லஞ்ச, ஊழல் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் பற்றி ஆண்டுதோறும் விரிவான ஆய்வு நடத்தி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிடுகிறது. ஜெர்மனியை சேர்ந்த அரசு சாரா சமூக நல அமைப்பான அது, ‘சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை’ முன்னிட்டு கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 4ல் ஒருவர் லஞ்சம் கொடுத்துதான் தனது வேலையை முடித்துள்ளார். ஆனால், இந்தியர்களில் இரண்டில் ஒருவர் தங்கள் வேலையை முடிக்க லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் இது 54 சதவீதம். கடந்த 3 ஆண்டுகளில் லஞ்ச, ஊழல் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதாக 10ல் 6 பேர் கருத்து தெரிவித்தனர்.ஒவ்வொரு 9 நிறுவனங்கள், அரசு துறைகளில் ஏதாவது ஒரு சேவையை பெற நான்கில் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளது ஆய்வில் தெரிய வந்தது. இது சுகாதாரம் முதல் வரி வசூலிப்பு துறை வரை நீண்டது. லஞ்சம் பெற்ற துறைகளில் போலீஸ் முதலிடத்தில் உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 29 சதவீதத்தினர் போலீசுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்தனர்.அதிகளவில் லஞ்சம் தாண்டவமாடும் நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், கம்போடியா, கேமரூன், இந்தியா, ஈராக், லைபீரியா, நைஜீரியா, பாலஸ்தீனம், செனகல், சியாரா லியோன், உகா ண்டா ஆகிய நாடுகளில் ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் கடந்த ஆண்டில் வேலையை முடிக்க ஏதாவது ஒரு துறையினருக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்தனர்.

லஞ்சம் கொடுத்து வேலையை சமாளித்த இந்தியர்களில் பாதி பேர் பிரச்னைகள், பின்விளைவுகளை சந்திப்பதை தவிர்க்க அதை செய்ததாக கூறினர். மீதி பேர் வேலையை விரைவாக முடித்துக் கொள்ள லஞ்சம் அளித்ததாக தெரிவித்தனர். 2006ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் போலீசுக்கு லஞ்சம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. நீதித் துறை, பதிவு மற்றும் உரிமம் ஆகிய துறைகளிலும் லஞ்சம் கடந்த 5 ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. இவ்வாறு டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆய்வு தெரிவிக்கிறது.

லஞ்சம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் ஐ.நா. சார்பில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

....தினகரன் 11.12.2010

nambi
13-12-2010, 02:05 AM
உச்சநீதிமன்றத்தில் நடுவன் அரசு தகவல்


புதுடெல்லி, டிச.13-

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கறுப்பு பணம் பற்றிய விவரங்களை அளிக்க சுவிட்சர்லாந்து உள்பட 10 நாடுகள் சம்மதித்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் நடுவன் அரசு கூறியுள்ளது.

விசாரணை தொடங்கியது

சுவிட்சர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் ரகசிய வங்கி கணக்குகளை தொடங்கி, அவற்றில் தாங்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த (கறுப்பு) பணத்தை போட்டு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

அதன்படி, இந்தியர்களின் வெளிநாட்டு ரகசிய வங்கி கணக்குகள் குறித்த விசாரணையை மத்திய நிதி அமைச்சகம் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக, 100 இந்தியர்களின் ரகசிய வங்கி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

ரூ.70 லட்சம் கோடி

இந்நிலையில், முன்னாள் சட்ட மந்திரி ராம்ஜெத்மலானி, பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

வெளிநாட்டு ரகசிய வங்கி கணக்குகளில் இந்தியர்களின் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. அதை இந்தியாவுக்கு கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் இலவசமாக கொடுக்கலாம். அந்தப் பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு பதில்

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளிநாடுகளில் ரகசிய வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு `இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்' பாதுகாப்பு அளிக்கிறது. அதன்படி, ரகசிய வங்கி கணக்கு குறித்த தகவல்களை, வெளிநாட்டு வங்கிகள் யாருக்கும் தெரிவிக்க வேண்டியது இல்லை.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை திருத்தும் வகையில், கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி, சுவிட்சர்லாந்து அரசு அமைப்புகளுடன் ஒரு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், ரகசிய வங்கி கணக்கு குறித்த தகவல்களை இந்தியா பெறலாம். சுவிட்சர்லாந்து மற்றும் 9 நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும், 22 நாடுகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

ஒத்திவைப்பு

நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அடுத்தகட்ட விசாரணையை, ஜனவரி 14-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.

....தினத்தந்தி 13.12.2010

nambi
13-12-2010, 05:55 AM
கல்விக் கடனுக்காக வங்கிகளுக்கு மாணவர்கள் செல்லும்போது அவர்களை வங்கி மேலாளர்கள் நடத்தும் விதத்தால் அவர்கள் அடையும் மன வேதனை அளவிட முடியாது. இதெல்லாம் அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால், இப்போது மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையால் கல்விக் கடன் பெறும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு, கல்விக் கடன் மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாணவர்கள், வங்கி மேலாளர்களால் நடத்தப்படும் முறை மிகவும் மோசமாகிவிட்டது.

சிலர் இந்த கேவலங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு தொடர்ந்து வங்கியில் காத்துக் கிடந்து, குறைந்தது ஒன்றிரண்டு மாதத்துக்குப் பிறகே கடன் பெறுகின்றனர். அதுவும் கேட்கப்பட்ட மொத்த கடன் தொகையில் ஒரு பகுதி தொகையாவது குறைத்துக் கொடுக்காவிட்டால் வங்கி மேலாளர்களுக்கு திருப்தியே ஏற்படுவதில்லை.

அதுவும் "நீங்க படிக்கிறதுக்கு கொஞ்சமாவது நீங்கள் செலவழிக்க வேண்டாமா? எல்லாவற்றையும் வங்கியே கொடுக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க?' என்று வங்கி மேலாளரால் வசவு வாங்காத மாணவர்கள் இருப்பார்கள் எனில் அது அதிசயம்.

வங்கியில் கல்விக் கடன் பெற்ற மாணவர் கல்லூரியில் விடுப்பெடுத்துக் கொண்டு, அடுத்தடுத்த பருவத்துக்கான கடன் தொகையை அனுமதிக்கக் கோரி வங்கிக்குச் செல்லும் போதெல்லாம் குறைந்தது ஓரிரு வாரத்துக்காவது அலைக்கழிக்கப்படுகின்றனர்.

பல கல்லூரி நிர்வாகங்கள், வரப் போகும் பருவத்துக்கான சிறப்புக் கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசித் தேதியை நிகழும் பருவ இறுதித் தேர்வின்போதே அறிவித்துவிடும். இதனால் மாணவர்கள் படும் துயரம் சொல்லிமாளாது.

எனக்குத் தெரிந்த நண்பர் தஞ்சையில் ஒரு பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்து வருகிறார். அவர் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்த வங்கியில் அவர் கேட்ட கடன் தொகையைவிட |11 ஆயிரம் குறைத்து வழங்க ஒப்புக் கொண்டு, கடன் விண்ணப்பம் ஏற்றுக் கொண்டபோதிலும் இன்றுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.

நண்பரும் அவருடைய தந்தையும் வங்கிக்குச் சென்று, வரும் பருவத்துக்கான கல்வி கட்டணத்துக்கான கடன் தொகையை அனுமதிக்கக் கோரியபோது வங்கி மேலாளர், நண்பரின் தந்தையின் பெயரிலுள்ள பத்தாயிரம் பயிர்க் கடன் பாக்கியை பிடித்துக் கொண்டுதான் மீதியைத் தருவேன் என்றிருக்கிறார்.

ஒரு சில மாணவர்கள் இந்த அநியாயங்களை எதிர்த்து நீதிமன்றம் சென்று நீதி ஆணைப் பெற்று கல்விக் கடன் பெறுகின்றனர். பல மாணவர்கள் வங்கியால் அலைக்கழிக்கப்படுவதிலேயே வெறுத்துப் போய் வெளிநபர்களிடம் கடன் வாங்கி படிக்கின்றனர். இதில் படிப்பு பாதியிலேயே தடைபட்டவர்களும் உண்டு.

மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களின் உரிமைகளைத் தெரிந்து கொள்வதே இல்லை. வங்கியால் மாணவர்கள் அலைக்கழிக்கப்படும்போது ரிசர்வ் வங்கியின் கல்விக் கடனுக்கான ஆம்புட்ஸ்மன் பகுதிக்கு புகார் செய்யலாம். இதில் ஒரு மாதத்துக்குள்ளாக தக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் கல்விக் கடன் மறுக்கப்படும்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் பயன் பெறலாம்.

மாணவர்கள் அவர்களின் அரசியல் உரிமையை அறியாதபோதும், அறிந்தும் அதனைப் பெறுவதற்கு கற்ற கல்வியின் துணைக்கொண்டு முற்படாதபோதும் அரசால், வங்கியால், அரசு அலுவலர்களால், தாங்கள் நடத்தப்படும் விதம் மாறாதென்பதை உணர வேண்டும்.
...தினமணி..13.12.2010

nambi
13-12-2010, 06:31 AM
அதிகமான ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல், தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் இப்போது திரையிடப்பட்டிருக்கிறது "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' தமிழ்த் திரைப்படம். பிரபல நடிகர் மம்முட்டி நடித்து 1998 இல் தயாரிக்கப்பட்டு 2000 இல் வெளியான இந்தத் திரைப்படத்தின் தமிழ் வடிவம் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இப்போதுதான் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் நுழைந்திருக்கிறது.

இத்தனைக்கும் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம். ஏனிந்த தாமதம்? என்று தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் டி.இராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.

""1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் அது பெற்றது. இந்தப் படம் 2002 ஆம் ஆண்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

தமிழ் உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்தப் படத்தின் வெளியிடும் உரிமையைப் பத்தாண்டுகளுக்குப் பெற்றது மும்பையில் உள்ள பாக்கியஸ்ரீ பிக்சர்ஸ் நிறுவனம்.

தொலைக்காட்சியில் வெளியிடும் உரிமையையும் அது பெற்றது. சில இடங்களில் இந்தப் படத்தின் இந்தி, ஆங்கில மொழிப் படங்கள் மட்டும் வெளியிடப்பட்டன.

தமிழ்ப் படம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் விஸ்வாஸ் புரடக்ஷன் என்ற நிறுவனம் தமிழில் வெளியிடும் உரிமையை 2006 இல் அவர்களிடம் பெற்றது. இருந்தும் அதுவும் படத்தை வெளியிடாமல் தாமதித்து வந்தது. பாக்கியஸ்ரீபிக்சர்ஸ் பெற்ற வெளியிடும் உரிமை 2010 இல் முடிவுக்கு வந்ததை அடுத்து அம்பேத்கர் திரைப்படத்தின் வெளியிடும் உரிமை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு வந்தது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமே திரை அரங்கு உரிமையாளர்களிடம் பேசி நேரடியாக அம்பேத்கர் படத்தை வெளியிட முன் வந்தது. திரை அரங்குகள் கிடைக்காமல் தாமதமான வேளையில் எடிட்டர் லெனின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் திரைப்படம் வெளிவருவதில் ஆர்வம் காட்டினார்கள். படத்தை வெளியிடத் திரையரங்குகள் கிடைக்காததால் இப்போது சென்னையில் மட்டும் 10 திரையரங்குகளில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் திரைப்படத்தை நேரடியாக வெளியிடும் முடிவை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஏன் எடுத்ததென்றால், அம்பேத்கர் தேசியத் தலைவர்; அவருடைய வாழ்க்கை வரலாறு மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் நேரடியாக வெளியிட முடிவு செய்தோம்'' என்றார் இராமகிருஷ்ணன்.

அம்பேத்கர் திரைப்படம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ.குமரேசனிடம் பேசினோம்.

""அம்பேத்கர் திரைப்படம் வெளியிடுவதில் தாமதமாகிறது என்று எடிட்டர் லெனின் எங்களிடம் கவலையுடன் தெரிவித்தவுடன், அந்தத் திரைப்படம் வெளியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இந்தத் திரைப்படம் தமிழ்நாடு முழுக்க ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக நாங்களும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் சேர்ந்து முயற்சி செய்தோம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் டி.இராமகிருஷ்ணனிடமும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதாகக் கூறினோம். ஒருவேளை அவர்களால் வெளியிட முடியவில்லை என்றால் அதை வெளியிடும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறினோம். எனினும் அவர்களே வெளியிடப் போவதாகக் கூறி விட்டார்கள்.

நாங்கள் நினைத்தபடி இந்தத் திரைப்படம் தமிழ்நாடு முழுக்க ஒரே நேரத்தில் திரையிடப்படவில்லை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பெரிய திரையரங்கு உரிமையாளர்கள் இந்தப் படத்தினால் அதிக வருமானம் கிடைக்காது என்று தயங்கியிருக்கிறார்கள். அதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் சிறு நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களில் சிலர் கூட எதற்குத் தயங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது பெரும்பாலும் காலைக் காட்சிகளாகத்தான் திரையிடப்பட்டிருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றுதான்.

எங்களைப் பொறுத்த அளவில் கலை, இலக்கியங்கள் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதேசமயத்தில் அவற்றின் கலையம்சங்களிலும் குறைவு இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்.

அம்பேத்கர் சமூகநீதிக்காகப் போராடிய தலைவர். தலித் மக்கள் ஒடுக்கப்பட்டதற்கான காரணத்தை வரலாற்றுரீதியாக ஆராய்ந்து அவர்களின் விடுதலைக்காகச் சிந்தித்து தீர்வுகளை அவர் முன்வைத்தார். அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படம் சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிற்கு உதவும் நல்ல கருத்துகளைச் சொல்கிறது. அதே சமயம் ஒரு விவரணப்படம் போல இல்லாமல், இத்தனை வருடத்திற்குப் பின்பும் மிகுந்த கலைநேர்த்தியுடன் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினோம்.

இந்தப் படத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்த போதிலும் திரையரங்கு உரிமையாளர்களில் சிலர் முழுக்கட்டணத்தை வசூலிப்பதாகத் தெரிய வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். இந்தத் திரைப்படத்தை அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் பார்ப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார் குமரேசன்.
...தினமணி 12.12.2010

nambi
14-12-2010, 12:17 AM
புதுடெல்லி, டிச.14-

அமெரிக்க விமான நிலையத்தில் மீண்டும் ஒரு இந்திய தூதர் அவமதிக்கப்பட்டார். ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹர்தீப் புரியின் உடம்பை அதிகாரிகள் சோதனை போட்டனர்.

இந்திய பெண் தூதர்

அமெரிக்காவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் மீரா சங்கருக்கு மிசிசிபி விமான நிலையத்தில் கடந்த 4-ந் தேதி அன்று அவமரியாதை ஏற்பட்டது. தான் இந்திய தூதர் என்று மீரா கூறியபோதும் அவருடைய உடம்பு முழுவதையும் பெண் பாதுகாவலர் ஒருவரைக் கொண்டு தடவி சோதனை போட்டனர்.

சேலை அணிந்து வந்ததால் மீரா தனியாக தெரிந்ததாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை சோதனை செய்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா வருத்தம் தெரிவித்தது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுவதாகவும் உறுதியளித்தது.

சீக்கிய தலைப்பாகை

இந்த நிலையில், மற்றொரு இந்திய தூதருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை ஏற்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. ஐ.நா. சபையில் இந்தியா சார்பிலான நிரந்த பிரதிநிதியாக (தூதர்) இருப்பவர் ஹர்தீப் புரி. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் விமான நிலையத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன் அவர் சென்றிருந்தார்.

அப்போது, அவருடைய தலையில் அணிந்திருந்த டர்பனை (சீக்கிய தலைப்பாகை) கழற்றுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர் மறுத்தார். மேலும், `இந்தியாவின் ஐ.நா. பிரதிநிதி' என்று கூறியபோதிலும் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்கவில்லை. தனி அறையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கச் செய்தனர்.

இந்தியா கடும் கண்டனம்

அதன் பிறகு, ஹர்தீப் புரியின் உடல் முழுவதையும் கைகளால் தடவி பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை போட்டனர். அமெரிக்காவில் உள்ள தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அமெரிக்காவிடம் தனது கடும் கண்டனத்தை இந்தியா தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அலுவலக ரீதியிலான கண்டன அறிக்கையை இந்தியா அளித்தது.

....தினத்தந்தி 14.12.2010

nambi
14-12-2010, 12:19 AM
கொழும்பு, டிச.14-

இலங்கையில், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து, அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது பற்றிய உத்தரவு எல்லா துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதற்கு தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் மறு சீரமைப்பு பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை விவகார மந்திரி ஜான் சேனவிரத்னே விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார். இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதில் மாற்றம் செய்வது குறித்து மந்திரிசபை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட உரிமையை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறி உள்ளார்.
....தினத்தந்தி 14.12.2010

nambi
14-12-2010, 12:26 AM
மும்பை, டிச.13: பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) சமூக இணையதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதற்கென பிரத்யேக சாஃப்ட்வேரை "செபி' நிறுவியுள்ளது.

பங்கு பரிவர்த்தனை தொடர்பாக இந்த இணையதளங்களில் நிகழ்த்தப்படும் தகவல் பரிமாற்றங்களும் இனி கண்காணிப்புக்குள்ளாகும்.

சமீப காலமாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் பங்கு பரிவர்த்தனை தொடர்பான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பங்குகளை வாங்குவது, விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய இணையதளங்களை சில தீய சக்திகள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இவற்றைக் கண்காணிக்க செபி முடிவு செய்துள்ளது.

இப்போது நிறுவப்பட்டுள்ள புதிய சாஃப்ட்வேருடன், தொலைபேசி உரையாடல் பதிவு, நிதி பரிவர்த்தனை ஆவணங்கள், உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக செபி-யின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

..தினமணி 14.12.2010

ஆன்டனி ஜானி
14-12-2010, 03:32 AM
ஒவ்வொரு நாளும் நல்ல,நல்ல
சுட,சுட செய்திகளை காப்பி அடித்து
நமது தமிழ் மன்ற உறவுகளுக்கு தொகுத்து
வளங்கும் நமது ஆருயிர் நண்பன்

நண்பி அவர்களுக்கு

பாராட்டுக்கள் .........

கீதம்
14-12-2010, 04:26 AM
ஒவ்வொரு நாளும் நல்ல,நல்ல
சுட,சுட செய்திகளை காப்பி அடித்து
நமது தமிழ் மன்ற உறவுகளுக்கு தொகுத்து
வளங்கும் நமது ஆருயிர் நண்பன்

நண்பி அவர்களுக்கு

பாராட்டுக்கள் .........

நாட்டு நடப்புகளை நாமே தயாரிக்க இயலாது நண்பரே!:)

சுடச்சுட எங்கிருந்தாவது சுட்டுதான் பதிக்கமுடியும்!:lachen001:

சளைக்காது தகவல்களைத் தொகுத்து வழங்கும் நம்பி அவர்களுக்கு நன்றி.:icon_b:

nambi
15-12-2010, 01:36 AM
டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் இதுவரை 8 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி, டிச.15-

கடந்த ஜுன் மாதம், பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.

மீண்டும் உயர்வு

அதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அப்படி நிர்ணயிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இந்நிலையில், நேற்று இரவு 6-வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 96 காசுகள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.

மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவையும் இதே அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. இவற்றின் விலை உயர்வு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) நள்ளிரவு அமலுக்கு வருகிறது.

இத்துடன், இந்த ஆண்டில் மட்டும் 8-வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நஷ்டம்

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, கச்சா எண்ணெய் விலை 73 டாலராக இருந்தது. ஆனால், தற்போது 90 டாலராக உயர்ந்து விட்டது. இருப்பினும், நாங்கள் 5 தடவை மட்டுமே விலையை உயர்த்தி உள்ளோம்.

இப்போதும், பெட்ரோலை லிட்டருக்கு ரூ.4.17-ம், டீசலை லிட்டருக்கு ரூ.5.40-ம், சமையல் கியாஸ் சிலிண்டரை ரூ.272.19-ம், மண்எண்ணெயை லிட்டருக்கு ரூ.17.72-ம் நஷ்டத்தில் விற்று வருகிறோம்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்தவுடனே, பெட்ரோல் விலையை உயர்த்தி இருப்போம். அதற்கு பெட்ரோலிய அமைச்சகமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஓரிரு நாட்கள் பொறுத்திருக்குமாறு கடைசி நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விலையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் நேற்று மீண்டும் அனுமதி அளித்தது. இதனால் விலையை உயர்த்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்திய அரசே தன் கைவசம் வைத்திருக்கிறது. அதனால், தொடர்ந்து 4-வது தடவையாக, பெட்ரோல் விலை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

இருப்பினும், டீசல் விலையை உயர்த்துவது குறித்த முடிவை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையிலான மந்திரிகள் குழுவிடம் பெட்ரோலிய அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இந்த மந்திரிகள் குழு, வருகிற 22-ந் தேதி கூடுகிறது. அப்போது, டீசல் விலை உயர்த்தப்படுமா? இல்லையா? என்று தெரியவரும்.

ரூ.2 உயர்த்த சிபாரிசு

டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது. அதுபற்றி மந்திரிகள் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும். டீசல் விலையை உயர்த்தினால், சரக்கு கட்டணம் உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

எனவே, டீசல் விலையை உயர்த்தாத பட்சத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிக்கட்ட அவற்றுக்கு துணை பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்குமாறு பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்த பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா திட்டமிட்டுள்ளார்.

------

ஒரே ஆண்டில் ரூ.12 உயர்ந்தது

புதுடெல்லி, டிச.15-

இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 8-வது தடவையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ந் தேதி 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல் 1-ந் தேதி 54 காசுகளும், ஜுன் 26-ந் தேதி 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8-ந் தேதி 10 காசுகளும், செப்டம்பர் 29-ந் தேதி 29 காசுகளும், அக்டோபர் 15-ந் தேதி 78 காசுகளும், நவம்பர் 8-ந் தேதி 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.

எனவே, இந்த ஆண்டில், 8 தவணைகளாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
....தினத்தந்தி 15.12.2010

nambi
15-12-2010, 01:40 AM
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதியளித்தது மிகப்பெரியத் தவறு...

முன்பெல்லாம் பயந்து பயந்து பல போராட்டங்களுக்குப் பிறகு பெட்ரோல் விலையை ஏற்றியவர்கள் இப்பொழுது கணக்கு வழக்கு இல்லாமல் ஒரே வருடத்தில் ஏற்றுகிறார்கள். இது ஒரு மோசடி.

இந்த விலையேற்றம் தான் அனைத்து தரப்பினரையும், அனைத்து விலைவாசிகளுக்கும் காரணம் என்பதை எப்படி மறந்தார்கள்? இது நிச்சயம் தேர்தலில் பிரதிபலிக்கும்.

nambi
15-12-2010, 01:45 AM
சென்னை, டிச. 14: விடுதலைப் புலிகள் மீதான தடையை உறுதி செய்து மத்திய தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.05.2010 அன்று உத்தரவு பிறப்பித்தது.

அதன் பின்னர், தடை விதிக்கப்பட்டதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தி விடுதலைப் புலிகள் இயக்கம் மீது மத்திய அரசு தடை விதித்தது சரியானது தான் என்று கடந்த 12.11.2010-ல் தேதி உத்தரவு பிறப்பித்தது.

தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ கூறியது:

தீர்ப்பாய உத்தரவில் ம.தி.மு.க., விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தீர்ப்பாயத்தின் உத்தரவால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர், அனுதாபி என்ற அடிப்படையில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம். ரவீந்திரன் கூறுவது போல், தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசிடம் மனு செய்யலாம் என்பதை சரியான நிவாரணமாக கருத முடியாது.

எனவே, தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்
...தினமணி 15.12.2010

nambi
15-12-2010, 01:53 AM
சென்னை, டிச. 14: மருத்துவப் படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற முடிவை தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் இனி அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பான்மையாக உள்ள கிராமப்புற மாணவர்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு 3 ஆண்டுகளுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவக் கல்வியில் மாநிலத்துக்கு உள்ள உரிமையைப் பறிக்கும் வகையில், அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற முடிவை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தமிழகத்தின் மீது கட்டாயமாகத் திணிக்கிறது.

இந்தக் கட்டாயக் கொள்கைத் திணிப்பின் காரணமாக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பயனளிக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த முடியாத ஆபத்து ஏற்படப் போகிறது.

சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டு சலுகைக்கும், பெரும்பான்மை மக்களின் நலனுக்கும் எதிரான இந்தக் கொள்கைத் திணிப்பை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

இப்பிரச்னை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். எனினும், இப்போது உச்ச நீதிமன்ற அனுமதியோடு, ஆபத்து ஏற்பட உள்ளது.

எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து, தடையாணை பெற வேண்டும்.

மேலும், பிரதமர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, பொது நுழைவுத் தேர்வு முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும்.

இந்த ஆபத்தைத் தடுக்க தமிழக அரசும், முதல்வர் கருணாநிதியும் தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
....தினமணி 14.12.2010

nambi
15-12-2010, 01:56 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் இணையதளம். தற்போது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஜூலியன் அசாஞ்சே சிறையில் இருக்கிறார். இன்வெஸ்டிகேடிவ் ஜார்னலிசம் என்ற பெயரில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். தற்போது விக்கிலீக்ஸுக்கு போட்டியாக டேனியல் டோஸ்சிட் ரகசியங்களை தெரிவிக்கிறார். ஓபன்லீக்ஸ் என தனது இணையத்துக்கு பெயரிட்டுள்ளார். மேலும் 2011ல் இச்சேவை தொடங்கும் என தகவல் தெரியவந்துள்ளது.
...தினகரன் 14.12.2010

nambi
15-12-2010, 02:11 AM
இணையதளத்தில் பதிவு செய்யும் முறை விரைவில் அமல்
கூடுதல் ஆணையர் தகவல்


திண்டுக்கல்,டிச.15-

தொழிலாளர் காப்பீட்டு (இ.எஸ்.ஐ.) அலுவலகங் களில் இணையதளத்தில் பதிவு செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது என்று கூடுதல் ஆணையர் எஸ்.எம்.மொய்தீன் கூறினார்.

கருத்தரங்கம்

நாடு முழுவதும் இருக்கும் தொ.கா கிளை அலுவலகங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் திட்ட அலுவலகங்கள் ஆகியவை கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தொ.நலக் காப்பீட்டு கழகம் இணையதளத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் முறை குறித்து விளக்க கருத்தரங்கம் திண்டுக்கல் மகாலிங்க நாடார் மகாலில் நேற்று நடந்தது.

கருத்தரங்கில் மதுரைதொ.கா துணை மண்டல அலுவலக கூடுதல் ஆணையர் மற்றும் இயக்குனர் எஸ்.எம்.மொய்தீன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொ.கா. கிளை அலுவலகங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவை இணையதளத்தின் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது. இணையதளத்துடன் கூடிய போன் வசதி அனைத்து தொ.கா அலுவலகங்களிலும் ஏற்படுத்தப்பட இருக் கிறது. தொழிலாளர்களுக்கு பணம் செலுத்தும் முன் இணையதளத்தில், அவர் களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் 17-இலக்க எண்ணை பதிவு செய்யவேண்டும். இதற் காக தொ.கா. கிளை அலுவலகங்களில் சேவை மையம் அமைக்கப்படுகிறது.

மருத்துவ வசதி

இவையில்லாமல் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் இணையதளத்தில் பதிவு செய்யும் போது தெரிந்து கொள்ளலாம். அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளவேண்டும். பின்னர் வங்கியில் பணத்தை செலுத்த வேண்டும். இந்த புதிய முறையின் மூலம் தொழிலாளர்கள் செலுத்தும் பணம் உடனே தொ.கா. கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சிறப்பு மருத்துவ வசதி உள்பட பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் உடனே கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் காலதாமதம் ஏற்படாமல் மருத்துவ வசதி மேற்கொள்ள பயன் உள்ளதாக இருக்கும்.

1 லட்சத்து 30 ஆயிரம்

புதிய ஹைடெக் அடையாள அட்டைகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த அடையாள அட்டையின் மூலம் அனைத்து தொ.கா மருத்துவமனைகள், மருந்தகங்களில் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று கொள்ளலாம். இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இவ்வாறு கூடுதல் ஆணையர் மற்றும் இயக்குனர் எஸ்.எம்.மொய்தீன் கூறினார்.

இந்த கருத்தரங்கில் உதவி இயக்குனர் ஆர்.மீனாட்சிசுந்தரம், திண்டுக்கல் கிளை மேலாளர் பி.பைரவமூர்த்தி, தொ.கா அலுவலர்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை அலுவலர்கள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

....தினத்தந்தி 15.12.2010

nambi
15-12-2010, 03:58 AM
பத்தனம்திட்டை, டிச.15-

சபரிமலை கோவிலில் கன்னட திரைப்பட நடிகை ஜெயமாலா புகுந்ததாக கூறப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று பத்தனம்திட்டை கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தேவ பிரசன்னம் நிகழ்ச்சி

சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம், தேவ பிரசன்னம் என்ற ஜோதிடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில், சபரிமலை கோவிலில் பெண் நுழைந்துள்ளதாக தேவ பிரசன்னம் பார்த்த ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணி கிருஷ்ண பணிக்கர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, தான் முன்பு, சபரிமலை கோவிலுக்குள் புகுந்து சுவாமி சிலையை தொட்டு வணங்கியதாக கன்னட திரைப்பட நடிகை ஜெயமாலா தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். இது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிரச்சினை விவாதம் ஆனது.

குற்றப்பிரிவு விசாரணை

இது குறித்து குற்றப்பிரிவு விசாரணை நடத்துமாறு கேரள அரசு உத்தரவிட்டது.அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நடிகை ஜெயமாலா, ஜோதிடர் உண்ணி கிருஷ்ண பணிக்கருக்கு உதவுவதற்காக அவ்வாறு தவறான கருத்தை தெரிவித்ததாக, பின்னர் குற்றப்பிரிவு விசாரணையில் தெரிய வந்தது. நடிகை ஜெயமாலா தொட்டு வணங்கியது சபரிமலை கோவில் கருவறையில் உள்ள சுவாமி சிலையாக இருக்க வாய்ப்பு இல்லை என, குற்றப்பிரிவு போலீசார் விளக்கிய பின்பும், அவர் தொட்டு வணங்கியது சுவாமி அய்யப்பன் சிலைதான் என பல முறை திரும்பத் திரும்ப கூறி வந்தார். அவர் சுவாமி சிலையை தொட்டு வணங்கியதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பேசியதை தொடர்ந்து, மத உணர்வுகளை அவர் புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடிகை ஜெயமாலா 3-வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த நிலையில், நடிகை ஜெயமாலா சபரிமலை சுவாமி சிலையை தொட்டதாக கூறப்பட்ட விவாதத்துடன் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் பத்தனம்திட்டை ரான்னி முதல் வகுப்பு ஜ×டிசியல் கோர்ட்டில் நேற்று குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் நடிகை ஜெயமாலா 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணி கிருஷ்ண பணிக்கர் முதல் குற்றவாளியாக உள்ளார். அவருடைய உதவியாளர் ரகுபதி 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
.....தினத்தந்தி 15.12.2010

nambi
16-12-2010, 12:48 AM
சென்னை, டிச. 15: பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உளவுத் துறையிடம் இருந்து இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் புதன்கிழமை கூறியதாவது:

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக உளவுத் துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட அனைத்து மிக முக்கியப் பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மனித வெடிகுண்டுக்கு 1991-ல் பலியானார். எனவே, இந்த எச்சரிக்கையை பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

இந்திய அறிவியல் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரது வருகையையொட்டி உச்சபட்ச பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
,,,,தினமணி 15.12.2010

nambi
16-12-2010, 01:14 AM
புதுடெல்லி, டிச.16-

3 நாட்கள் பயணமாக, சீன பிரதமர் வென் ஜியாபோ இந்தியா வந்தார். அவர் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

டெல்லி வந்தார்

சீன பிரதமர் வென் ஜியாபோ, 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில், மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் ஆகியோர் வரவேற்றனர். வென் ஜியாபோவுடன், மூத்த மந்திரிகள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 400 பேர் கொண்ட குழுவும் வந்துள்ளது.

டெல்லிக்கு வந்தவுடனே, வென் ஜியாபோ தனது நிகழ்ச்சிகளை தொடங்கி விட்டார். அவர், மவுர்யா ஷெரட்டன் ஓட்டலில் தொழில் அதிபர்களிடையே பேசினார். அதைத் தொடர்ந்து, டெல்லி வசந்தவிகார் பகுதியில் உள்ள தாகூர் இன்டர்நேஷனல் பள்ளிக்குச் சென்றார். அங்கு சீன மொழி பயின்று வரும் குழந்தைகளுடன் உரையாடினார். சீன-இந்திய நட்புறவு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இறுதியாக, பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்டார்.

பிரதமருடன் பேச்சுவார்த்தை

சீன பிரதமர் வென் ஜியாபோவுக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். 10.35 மணிக்கு தாஜ் பேலஸ் ஓட்டலில் அவரை மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்துப் பேசுகிறார்.

காலை 11.30 மணிக்கு டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை வென் ஜியாபோ சந்தித்துப் பேசுகிறார். இது பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆகும். அப்போது, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.

சோனியா

பிற்பகல் 3.30 மணிக்கு உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் இந்திய-சீன நட்புறவு குறித்து வென் ஜியாபோ உரையாற்றுகிறார். மாலை 4.30 மணிக்கு துணை ஜனாதிபதி அமீது அன்சாரியை சந்தித்துப் பேசுகிறார்.

5.05 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுகிறார். மாலை 6.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்துப் பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு, ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இந்திய-சீன தூதரக உறவின் 60-ம் ஆண்டு விழாவிலும், சீன திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

நாளை (வெள்ளிக்கிழமை) வென் ஜியாபோவுக்கு ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டுமே உள்ளது. காலை 10 மணிக்கு அவரை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேசுகிறார். அதன்பிறகு, காலை 11 மணியளவில், இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு வென் ஜியாபோ பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்கிறார்.

ஒப்பந்தங்கள்

பிரதமர் மன்மோகன்சிங்குடனான பேச்சுவார்த்தையின்போது, கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் கூட்டு நிதிச்சேவை தொடர்பான ஒப்பந்தம் முக்கியமானது ஆகும். சீன வங்கிகள், இந்தியாவில் இயங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 10 இந்திய வங்கிகள், ஏற்கனவே சீனாவில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வென் ஜியாபோவுடனான பேச்சுவார்த்தையின்போது, இந்திய-சீன எல்லை பிரச்சினை, காஷ்மீர் மற்றும் அருணாசல பிரதேச மக்களுக்கு சீனா தனி விசா வழங்கும் பிரச்சினை, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் செயல்பாடுகள், வர்த்தக உறவில் நிலவும் சமச்சீரற்ற தன்மை ஆகிய பிரச்சினைகளை இந்தியா எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தனி விசா பிரச்சினையில் இந்தியாவின் கவலை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற சீனாவின் ஆதரவை இந்தியா கோரும் என்றும் தெரிகிறது.

2 ஆயிரம் ஆண்டு உறவு

டெல்லிக்கு வந்தவுடன், சீன பிரதமர் வென் ஜியாபோ ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியாவும், சீனாவும் மலைகளாலும், நதிகளாலும் பிணைக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பாரம்பரிய நட்புறவு உள்ளது. இது, இரு நாட்டு தூதரக உறவின் 60-ம் ஆண்டாகும். இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவும், ஒத்துழைப்பும் வேகமான முன்னேற்றத்தை கண்டுள்ளன.

இந்த நட்புறவை மேம்படுத்தவும், ஒத்துழைப்பை விஸ்தரிக்கவும், பரஸ்பர நலன்கள் மற்றும் பொது மேம்பாட்டுக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கவுமே நான் இந்தியா வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

....தினத்தந்தி 16.12.2010

nambi
16-12-2010, 01:18 AM
சென்னை, டிச.16-

பெட்ரோல்-டீசல் விலையை தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டதில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.12 உயர்ந்துள்ளது. இந்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலோடு இவ்வாறு விலை உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களில் இந்திய அரசே பெட்ரோல் விலை வரையறைகளைத் தீர்மானித்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக, அந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அளித்து விட்டதனால், அந்நிறுவனங்களே விலை உயர்வைத் தீர்மானித்து, அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கு பெட்ரோலிய அமைச்சகத்தின் அனுமதி பெற்று அறிவிக்கும் ஒரு ஏற்பாட்டை வைத்துள்ளனர்.

விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கும் இந்திய அரசின் இத்தகைய கொள்கை முடிவு வெகுமக்களுக்கு எதிரான முடிவேயாகும்.

ஏழை மக்கள் பாதிப்பு

இந்திய அரசின் இந்த முடிவால், ஏழை- எளிய உழைக்கும் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு இம்முடிவை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலையை எட்டாவது முறையாக தற்போது உயர்த்தியுள்ள முடிவையும் உடனே திரும்பப் பெற இந்திய அரசு ஆணையிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் அரசால் மட்டுமே குடிமக்களைப் பொருளாதாரச் சுமைகளிலிருந்தும் வறுமைக் கொடுமைகளிலிருந்தும் ஓரளவேனும் பாதுகாத்திட இயலும்.

எனவே, பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் இந்திய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுடன், அவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.

....தினத்தந்தி 16.12.2010

nambi
16-12-2010, 01:26 AM
சென்னை, டிச. 15: மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விரைவில் மருந்துக் கொள்கை அறிவிக்கப்படும் என்று மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

சென்னையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் மருந்துத் துறையில் அறிவுசார் சொத்துரிமை குறித்த கருத்தரங்கத்தை அமைச்சர் மு.க.அழகிரி புதன்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இந்தியாவின் மொத்த மருந்து உற்பத்தியில் 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மருந்து உற்பத்தியில் உலக அளவில் 3-வது இடத்திலும், தர அடிப்படையில் 13-வது இடத்திலும் இந்தியா உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மருத்துவத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பொது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

இதற்காக புதிய மருந்துக் கொள்கை விரைவில் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் புதிய மருந்துக் கொள்கை மூலம் மருந்து நிறுவனங்களின் பிரச்னையும் தீர்க்கப்படும் என்றார் அமைச்சர் அழகிரி.

முன்னதாக, சி.ஐ.ஐ. துணைத் தலைவர் அசோக் வரவேற்றார். "ஆர்க்கிட்' மருந்து நிறுவனத் தலைவரும், கருத்தரங்கின் தலைவருமான ராகவேந்திரா ராவ் நோக்கம் குறித்து விளக்கினார். இந்தக் கருத்தரங்கில் மத்திய மருந்து தொழில் துறைச் செயலர் முகில் ஜோஷி, தமிழக தொழில் துறைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
...தினமணி 16.12.2010

nambi
16-12-2010, 01:48 AM
http://www.dinakaran.com/image/tamil-daily-news-1407.jpg

பதான் (உ.பி.) : உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடந்தன. பதான் மாவட்டம் ஷஹாவர் ஷா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த தேர்தலில் ஒரு புதுமை செய்துள்ளனர். அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி வெறுப்படைந்த மக்கள், இம்முறை கட்சி சார்பற்ற ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். அவர் தினமும் தங்களை சந்திக்க வேண்டும் என்றும் விரும்பினர்.

இதற்காக, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அவர்கள் தேர்வு செய்தது ஒரு பிச்சைக்காரரை. 70 வயதான நாராயண் நாட் என்ற பிச்சைக்காரரை கிராம தலைவர் பதவிக்கு மக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் அந்த கிராமத்தில் 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். இது குறித்து நாராயண் நாட் கூறுகையில், ‘கிராம தலைவராவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன். அரசின் நிதியுதவியை கிராமத்தின் முன்னேற்றத்துக்கு முழுமையாக பயன்படுத்துவேன்’ என்றார்.

என்னதான், கிராம தலைவரானாலும், பிச்சை எடுப்பதை நிறுத்த மாட்டேன் என்றும் அதன் மூலம் கிராம மக்களை தினமும் சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்க முயலுவேன் என்றும் சூளுரைத்தபடி கையில் பிச்சை பாத்திரத்துடன் வேகமாக கிராமத்தை சுற்றுகிறார் நாராயண் நாட்

...தினகரன் 16.12.2010

nambi
16-12-2010, 01:58 AM
ராஞ்சி: ‘நாட்டில் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க பாலிதீன் ரூபாய் தாள் அறிமுகம் செய்வது பற்றி தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சேமவங்கி ஆளுநர் சுப்பா ராவ் தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்திய சேம வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சுப்பாராவ் பேசியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை கள்ளநோட்டு புழக்கம் பெரிதும் பாதிக்கிறது. எனவே கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த பாலிதீன் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்துவது பற்றி கவனமாக பரிசீலித்து வருகிறோம். அவற்றின் நீண்ட நாள் அழியாதன்மைக்கும் இது உதவும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் பாலிதீன் ரூபாய் (பிளாஸ்டிக் கரன்சி) தாள்களை பயன்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக அந்த நாடுகளின் ஆலோசனைகளும் கேட்கப்படும்.

கள்ள ரூபாய் தாள்களால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதை கண்காணிக்க ஆர்பிஐ கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. துரித பணச் சேவைகளிலும் (ஏடிஎம்களிலும்) கள்ள நோட்டுகள் புழங்குவதாக புகார்கள் வருகின்றன. இதை தடுக்க கடுமையான நெறிமுறைகள் விரைவில் அமலாக்கப்படும். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் கிராமமும் இணையும் போது சீனாவின் வளர்ச்சியை மிஞ்சுவோம்.

இவ்வாறு சுப்பா ராவ் பேசினார்.

...தினகரன் 16.12.2010

nambi
16-12-2010, 02:03 AM
திருவனந்தபுரம், டிச.16-

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை.

கேரளாவில் கடும் எதிர்ப்பு

எண்ணெய் கம்பெனிகள் உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எண்ணெய் கம்பெனிகளின் இந்த விலை உயர்வுக்கு கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே உயர்ந்து இருக்கும் விலை வாசிகள் இந்த விலை உயர்வினால் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு எந்த காரணமும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனால் மக்கள் அவதிப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொழிற்சங்கங்கள் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வை அதிகரிக்க வேண்டும், மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மோட்டார் தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.ï., ஏ.ஐ.டி.யு.சி., பி.எம்.எஸ். மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற போராட்ட அமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்கு மட்டும் இந்த போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

ஆட்டோ-டாக்சி ஓடவில்லை

இதனை ஏற்று கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மற்றும் புறநகர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஆட்டோ டாக்சிகள் ஓடவில்லை.

கேரளா முழுவதும் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து முக்கிய இடங்களில் போராட்டம் நடந்தது. பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய பெட்ரோல் மந்திரி முரளிதியோரா ஆகியோரின் உருவபொம்மைகளும் ஆங்காங்கே தீவைத்து எரிக்கப்பட்டன.

தொடர் வேலை நிறுத்தம்

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் வருகிற 29-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்க அமைப்பினர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
...தினத்தந்தி 16.12.2010

nambi
17-12-2010, 04:20 AM
புதுடெல்லி, டிச.17-

தமிழக அரசு நிர்ணயம் செய்த பள்ளிக்கூடங்களுக்கான கல்விக்கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கல்விக்கட்டணம் நிர்ணயம்

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக்கூடங்கள் வசூலிக்க வேண்டிய கல்விக்கட்டணம் எவ்வளவு என்பதை நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயம் செய்து அறிவித்தது. இந்த கட்டணத்தை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த குழு அறிவித்தது.

இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னை உய்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, நீதிபதி கோவிந்தராஜன் குழுவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இடைக்கால தடை ரத்து

இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வில்சன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். பெற்றோர் தரப்பிலும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் இந்த அப்பீல் மனுக்களை விசாரித்தனர். நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்தும், புதிய கல்வி கட்டணத்தை நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்தும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களும் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் கல்விக்கட்டண சீரமைப்பை எதிர்த்தும், கல்விக்கட்டணத்தை இந்த ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தங்களது மேல்முறையீட்டை அவசரகால மனுவாக கருதி விசாரிக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதை அவசரகால மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

வக்கீல்கள் வாதம்

நேற்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ``புதிய கல்விக்கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, பழைய கல்விக்கட்டணத்தையே வசூலிக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வாதிட்டனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் வில்சன், ``7.5.10-ந் தேதி நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு செலுத்தி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளும் அதை ஏற்றுக்கொண்டு வசூலித்து வருகின்றன. ஆனால், பல பள்ளிகள் மாணவர்களை நிர்பந்தம் செய்து அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஆகவே, நீதிபதி கோவிந்தராஜனின் கல்வி கட்டண சீரமைப்பு கமிட்டி நிர்ணயம் செய்த புதிய கல்விக்கட்டணத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்த உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்.

கல்விக்கட்டணம் செல்லும்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புதிய கல்விக்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பாக தனியார் பள்ளிகள் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ஏப்ரல் மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

......தினத்தந்தி 17.12.2010

nambi
17-12-2010, 04:30 AM
சென்னை, டிச.17-

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டி.என்.பி.சி) அறிவித்துள்ளது. தற்போது கூடுதலாக 831 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

வி.ஏ.ஓ. தேர்வு

தமிழக அரசின் வருவாய் துறையில் 2,653 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. 10-ம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்பட சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

பொதுவாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் தேர்வு தேதியையும் அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பில் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் தேர்வு தேதி பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

பிப்ரவரி 27-ல் தேர்வு

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், புதிதாக 831 காலி இடங்களும் சேர்க்கப்பட்டு மொத்த பணி இடங்களின் எண்ணிக்கை 3,484 ஆக உயர்ந்தது.

காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28-ந் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் . அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


......தினத்தந்தி 17.12.2010

பாலகன்
17-12-2010, 05:07 AM
பஞ்சாயத்து தலைவராக தேர்வானவருக்கு பாராட்டுக்கள்.

வீஏஓ தேர்வுகளை பற்றிய தகவல்களை சேகரித்து தந்த நம்பீக்கு வாழ்த்துக்கள்

ஆன்டனி ஜானி
17-12-2010, 07:26 AM
பஞ்சாயத்து தலைவர் பிச்சக்காரனா
நம்பவே முடியலடா சாமி ..............

ஓக்கே,ஓக்கே தொடரட்டும் அவரது பணி ........

வாழ்த்துக்கள் ...

nambi
18-12-2010, 06:01 AM
புதுடெல்லி : பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க நிர்வாகத்துக்கும் இடையே நடந்த ரகசிய தகவல் பரிமாற்றங்களை ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் வெளியிட்டு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் கடந்த ஆண்டு, ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்தின்போது பேசியதாக கூறப்படும் ரகசிய தகவலும் இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

‘2009, ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் அளித்த மதிய விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தியிடம், ‘இந்தியாவில் லஷ்கர் இ தய்பா தீவிரவாத அமைப்பின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ என்று கேட்டதற்கு, ‘உள்நாட்டில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள், லஷ்கர் அமைப்புக்கு உதவிகள் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனினும், இந்து தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று திமோதி ரோமரிடம் ராகுல் கூறியதாக ‘விக்கிலீக்ஸ்’ தகவல் வெளியிட்டுள்ளது.

ராகுலின் இந்த கருத்துக்கு பா.ஜ தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டியில், ‘‘ராகுல் கருத்தின் மூலம் பாகிஸ்தானில் உள்ள எல்லா தீவிரவாத அமைப்புகளுக்கும், பாகிஸ்தான் அரசின் ஒரு சில அமைப்புகளுக்கும் ஒரே முயற்சியில் மிகப்பெரிய உற்சாகத்தை ராகுல் கொடுத்துள்ளார். இந்தியாவை பற்றியும், அதன் பிரச்னைகளை பற்றியும் அவருக்குள்ள அறியாமையை காட்டுகிறது’’ என்றார்.

ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘. இந்தியாவில் எதிர்காலத்தில் மிகப்பெரிய பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நபர், இந்தியாவின் சர்வதேச பிரச்னையை வெளிநாட்டு தூதரிடம் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது’’ என்றார்.

காங்கிரஸ் விளக்கம்

அமெரிக்க தூதரிடம் ராகுல் காந்தி கூறியதாக கூறப்படும் தகவல் பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி வெளியிட்ட அறிக்கையில், ‘எல்லா மதவாதமும், தீவிரவாதமும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. தீவிரவாதத்தை யார் செய்தாலும், அவர்களுக்கு எதிராக நாம் உஷாராக இருக்க வேண்டும் என்றுதான் ராகுல் காந்தி கூறி இருக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

...தினகரன் 18.12.2010

nambi
18-12-2010, 08:06 AM
புது தில்லி, டிச.17: மிரட்டி காரியம் சாதிப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க தூதரகம் தெரிவித்த கருத்துகளை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது. அதில் பிரகாஷ் காரத் குறித்து தில்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்த கருத்து இடம்பெற்றுள்ளது. மிரட்டி காரியத்தைச் சாதிப்பவர் காரத் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரகாஷ் காரத் வெள்ளிக்கிழமை கூறியதாவது: விக்கிலீக்ஸ் இணையதளத்தில் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டதன்மூலம் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது தெள்ளத் தெளிவாகிவிட்டது.

நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அழிக்கவும், பலத்தைக் குறைக்கவும் இதுபோன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபடுகிறது என்றார் அவர்.

....தினமணி 18.12.2010

nambi
18-12-2010, 08:07 AM
புதுடெல்லி: அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில் சோனியா காந்தி திறமையான தலைவியாக செயல்பட தவறி விட்டதாக அமெரிக்கா கூறியுள்ள கருத்து, விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் மிரட்டிக் காரியம் சாதிப்பவர் என்பதை அம்பலப்படுத்தவும் சோனியா தவறி விட்டார். இந்நிலையில் பா.ஜ.க., செல்வாக்கு பெறுவதை தடுக்கவே சோனியா அரசியலில் குதித்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது-.

...தினகரன் 18.12.2010

nambi
18-12-2010, 08:14 AM
லண்டன் : “ரகசியங்களை அம்பலப்படுத்தும் எனது பணி தொடரும் என நம்புகிறேன்Ó என்று விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை திரட்டி, தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்ச். இவரது செயலால் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அசாஞ்ச்சின் செயலை கட்டுப்படுத்த அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்வீடனில் தன்னுடன் நெருங்கி பழகிய இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவரை கைது செய்ய ஸ்வீடன் அரசு வாரன்ட் பிறப்பித்தது. அசாஞ்ச், கடந்த 7ம் தேதி லண்டனில் இங்கிலாந்து போலீசாரிடம் சரணடைந்தார். உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். லண்டனில் நியோ கோதிக் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த அசாஞ்ச் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். இதையடுத்து, அவரை நிபந்தனை ஜாமீனில் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை விடுதலை செய்தது. ஸி1.50 கோடி ரொக்க ஜாமீனில் அசாஞ்சை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி டன்கன் ஆஸ்லே உத்தரவிட்டார்.

விசாரணை நீதிமன்றம் விதித்த சில கடுமையான நிபந்தனைகளையும் தளர்த்தினார். அசாஞ்ச் லண்டனைவிட்டு வெளியே எங்கும் செல்லக் கூடாது என்றும், தினமும் போலீஸ் நிலையத்தில் வந்து கையெழுத்து போட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசாஞ்ச்சின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அவருக்கு மின்னணு அடையாள அட்டை (எலக்ட்ரானிக் டேக்) தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவரது இணையதளத்தை பயன்படுத்த எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை

ஜாமீனில் விடுதலையான பின்னர் அசாஞ்ச், தனது ஆதரவாளர்கள் மற்றும் நிருபர்களிடம் பேசுகையில், “ரகசியங்களை அம்பலப்படுத்தும் எனது பணி தொடரும் என நம்புகிறேன்Ó என்றார். நிருபர்கள் உரக்க கேட்ட பல கேள்விகளுக்கு அசாஞ்ச் பதிலளிக்கவில்லை. விக்கிலீக்ஸ் இணையதளம் தன்னிடம் 2,50,000க்கும் அதிகான ரகசிய தகவல்கள் இருப்பதாக அறிவித்திருந்தது. அதில் இதுவரையில் 1,621 ரகசியங்களை மட்டும் அம்பலப்படுத்தியது. இவை யே உலகை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

....தினகரன் 18.12.2010

nambi
18-12-2010, 11:00 AM
தமிழர்களுக்கு எதிரான போர் நடந்துக்கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடும் கருணா, டக்ளஸ் குழுக்களை “தடுக்க வேண்டாம்” என்று சிறிலங்க இராணுவத்திற்கு அந்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரம் வாஷிங்டனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரம் அனுப்பிவைத்த அந்த அறிக்கையை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

“அமெரிக்க குடியுரிமைப் பெற்றவரும், இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (டக்ளஸ்), கருணா குழு ஆகியன தமிழ் வணிகர்களிடம் பணம் பெறுவதற்கு அனுமதியளித்துள்ளார். டக்ளஸ், கருணா குழுக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த அனுமதியே அங்கு (யாழ்ப்பாணத்தில்) சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு, குறிப்பாக மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல் ஆகியவற்றிற்கு வழிவகுத்துள்ளது. இவ்விரு குழுக்களும் தமிழர்களைக் கொண்டது என்றாலும், இவர்களின் குற்றச்செயல்கள் யாவும் தமிழர்களுக்கு எதிராகவே இருக்கின்றன” என்று அமெரிக்கத் தூதரக அறிக்கை கூறுகிறது.

“சிறிலங்க படைகள் செய்ய முடியாத சில செயல்களை இந்தக் குழுக்களால் மட்டுமே செய்ய முடியும், எனவே அவர்களைத் தடுக்காதீர்கள்” என்று கூறியே சிறிலங்க இராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்துள்ளார் கோத்பய ராஜபக்ச.

“போரினால் உள்நாட்டிலேயே அகதிகளாகி, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களை கருணா குழுவினர் கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். சிங்கள இராணுவ சிப்பாய்களுக்கு அவர்களை விருந்தாக்குகின்றனர். இப்படிப்பட்ட வற்புறுத்தலிற்கு உள்ளாகும் பெண்களுக்கு வேறு வழியில்லாததால் இதற்கெல்லாம் இணங்கிவருகின்றனர்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டில் (அப்போது போர் நடக்கவில்லை) கருணா, டக்ளஸ் குழுக்கள் செய்த குற்றச்செயல்களை சிறிலங்க அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததை பல்வேறு தலைப்புகளில் அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

1. தமிழர் ஒட்டுக்குழுக்களை (டக்ளஸ், கருணா குழுக்கள்) அவசியமானதாக ஏன் சிறிலங்க அரசு கருதுகிறது?

2. இக்குழுக்கள் செய்யும் குற்றச்செயல்களை தாங்கள் செய்யவில்லை என்று மறுப்பதற்கான ஒரு வாய்ப்பு சிறிலங்க அரசிற்கு கிடைக்கிறது.

3. இப்படிப்பட்ட ஒட்டுக்குழுக்களுக்கு சிறிலங்க அரசே தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறது.

4. இவ்விரு குழுக்களில் கருணா குழுவே இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பெரிய குழுவாக உள்ளது.

5. கருணா குழு செய்த கொலைகளும், கடத்தல்களும்

6. கருணா குழுவில் உள்ள சிறுவர் போராளிகள்

7. கருணா குழு நடத்திவரும் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் விபச்சார வளையங்கள்

8. கருணாவை அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாக்குவது

9. சிறிலங்க இராணுவத்துடன் இணைந்து டக்ளஸ் குழு செய்த படுகொலைகள்

என்று தலைப்பு இட்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கொழும்புவிற்கு வெளியே நடந்த சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கடத்தல்கள், சிறுவர்கள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், விபச்சாரம் ஆகிய அனைத்து மனித உரிமை மீறல்களையும் கருணா, டக்ளஸ் குழுக்களே செய்கின்றன. இவர்களுக்கு நிதியுதவி செய்வது சந்திரிகா குமாரதுங்கா காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. அந்த நிதியுதவியை நேரடியாகச் செய்வதை ராஜபக்ச அதிபரானது நிறுத்தினார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சிறிலங்க அரசுடன் இணைந்து ஒட்டுக்குழுக்கள் செய்த குற்றச்செயல்களை தங்களுடைய உயிரை பணயம் வைத்து தூதர ஆட்கள் அறிந்து கூறியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தமிழர்களுக்கு எதிராக எப்படியெல்லாம் ‘சிந்தித்து’ சிறிலங்க அரசும், அதன் ஒட்டுக்குழுக்களும் செயல்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
...வெப்துனியா 17.12.2010

பிரபாகரனுடன் ஏற்பட்ட மோதலால் தமிழ்நாட்டில் 2004 முதல் 2006 வரை கருணா தங்கியிருந்தார்...இலங்கை அதிபர் சந்திரிகா உத்தரவுப்படி

கருணா, டக்ளஸ் தேவானந்தா இரண்டு பேரின் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ளவேண்டாம்....கோத்தபய ராஜபக்சே உத்தரவு

தமிழ் பெண்களை கடத்தி இலங்கை ராணுவ வீரர்களுக்கு தந்தார் டக்ளஸ்.

விக்கி லீக் இணையதள ஆதாரத்தை வைத்து லண்டன் பத்திரிகை தகவல்....

.....சன்நியுஸ் 18.12.2010

nambi
19-12-2010, 01:20 PM
திருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் திருச்சியில் காலமானார்.

விடுதலைப் போராட்டம், மற்றும் தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை சிறு வயது முதலே இணைத்துக் கொண்டவர் பாப்பா உமாநாத்.

இவரது அயாரத உழைப்பின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். இதன் உச்ச கட்டமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இந்த நிலையில், இவர் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

மருத்துவமனையிலிருந்து, பாப்பா உமாநாத்தின் உடல் கட்சியின் திருச்சி மாவட்டக்குழு அலுவலகமான வெண்மணி இல்லத்திற்கு கொண்டு சென்று அங்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அங்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
...தட்ஸ்தமிழ் 19.12.2010

nambi
19-12-2010, 01:23 PM
சென்னை: இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் நம்முடைய பேராசிரியர் அன்பழகன் என்று அவருடைய 89வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்துகொள்ள அண்ணா வந்திருந்தார். அண்ணாவின் பேச்சினைக் கேட்பதற்காக இளைஞனாக இருந்த நானும் சென்றிருந்தேன்.

விழாவில் மற்றவர்கள் பேசிய பிறகு, இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா எழுந்து, "நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார்'' என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார். அந்த இளைஞர் தான் இன்று 89வது பிறந்த நாள் காணும் பேராசிரியர் அன்பழகனார்! முதன்முதலாக அங்கேதான் நான் அவரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன்.

நான் 18 வயது இளைஞனாக "மாணவ நேசன்'' என்ற பெயரில் கையெழுத்து ஏடு ஒன்றினை நடத்திக் கொண்டிருந்தபோது கதர் சட்டை அணிந்த கண்ணாடிக்காரர் ஒருவர் திருவாரூரில் என்னைச் சந்தித்து "மாணவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தி சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்துக் குரலெழுப்ப முன்வரவேண்டும். அதற்குப் பாசறையாக "மாணவர் சம்மேளனம்'' என ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர் பள்ளியில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

அப்படி வந்தவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பது எனக்கு அப்போது தெரியாது. சுதந்திரம் - சமாதானம் - சமத்துவம் என்ற வார்த்தைகள் என் உள்ளத்தில் பல உணர்ச்சிகளை ஏற்படுத்தியதால், மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளனாக நான் ஆனேன். அதிலே 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் சம்மேளனத்தின் கோஷமாக "தமிழ் வாழ்க! இந்தி வளர்க'' என்று வலியுறுத்தப்பட்டபோது நான் அதற்கு மறுத்து விட்டேன்.

உறுப்பினர்களிடமிருந்து பெற்றிருந்த 100 ரூபாயை திருப்பிக் கொடுக்க முனைந்தேன். ஒரு சிலர் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். பெரும்பாலோர் சம்மேளனத்தைக் கலைத்து விடலாம், கட்டணம் உன்னிடமே இருக்கட்டும் என்றனர். அன்று மாலையே "தமிழ் மாணவர் மன்றம்'' என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, ஏற்கனவே கட்டணத்தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளாதவர்களையெல்லாம் தமிழ் மாணவர் மன்றத்தின் உறுப்பினராக ஆக்கினேன். அந்த மன்றத்தின் ஆண்டு விழா 1942ல் திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை.

அவர்கள் எல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து, அவர்களை வரவேற்க திருவாரூர் புகைவண்டி நிலையத்திலே காத்திருந்தபோது, அவர்களில் பலர் வரவில்லை என்று தெரிந்து கண்களிலே நீர் பெருக கலங்கி நான் நின்று கொண்டிருந்த போதுதான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த - இன்றைய பேராசிரியர், அன்றைய மாணவர் அன்பழகனும், மதியழகனும் அங்கு வந்து எனக்கு ஆறுதல் வழங்கினார்கள்.

எனக்குத் துணையாக 1942-ல் அங்கே பேராசிரியர் வந்தபோது என்னுடைய வயது 18. அப்போது என் துணைக்கு வந்த பேராசிரியர், தற்போது எனக்கு 87 வயது நடக்கின்ற நிலையிலும், அவர் இன்று 89வது வயதில் அடியெடுத்து வைக்கின்ற நிலையிலும் எனக்குத் துணையாக இருக்கின்றார் என்பதை எண்ணும்போது இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் - கழகத்திலே உயர்வு தாழ்வுகள் - ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு - ஆட்சியை இழந்து சோதனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு - அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல் அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் அன்பழக உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். நமது கழகத்திற்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப்பற்றி சிறிதும் கலங்காமல் கழக வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் நம்முடைய பேராசிரியர்.

மணவழகர் ஈன்றெடுத்த செல்வன் - மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை எனக்கூறி மாத்தமிழ் காக்கும் அரிமா - பெரியாரின் பெரும் தொண்டர் - அண்ணாவின் அன்புத்தம்பி - எனது உயிரனைய உடன்பிறப்புதான் இனமானப் பேராசிரியர்.

இந்த வயதிலும் நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிதானமான போக்கு, நேர்மையான சிந்தனை, தன் மனதில்பட்ட கருத்தை மறைக்காது எடுத்துரைக்கும் திறந்த நெஞ்சம், ஆபத்து தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம், எதிர்த்தரப்பினரை சுழற்றி அடிக்கும் வாள் வீச்சென வாயிலிருந்து பிறக்கும் "சுளீர்! சுளீர்!'' என்ற வார்த்தைகள் பேராசிரியருக்கே சொந்தமானவை! உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாதவர் பேராசிரியர். சாதி மத பேதங்களில் சிக்கித்தவித்த இந்தச் சமுதாயத்தை தலைநிமிரச் செய்ய வேண்டுமென்பதற்காக அவரது பேச்சும், எழுத்தும் பயன்பட்டது என்றால் அது மிகையல்ல.

ஈழத் தமிழர்களுக்காக என்னுடன் சேர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார் என்பதற்காக இவருடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவியே அ.தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட வரலாற்றுக்கு இவர் சொந்தக்காரர்.

ஒரு பெரும் இயக்கத்திற்குப் பொதுச் செயலாளர் - தமிழகத்தின் நிதி அமைச்சர் என்றெல்லாம் பாராது எளிமையான பொது வாழ்வினை இன்றளவும் நடத்தி வருபவர்.

"நன்றாண்ட மூவேந்தர் நாகரிக மேமாற்றி வென்றாண்ட ஆரியத்தை வென்றாளத் தோன்றியவர் குன்றா மறவக் குரிசிலார் அன்பழகர் என்றோழர் என்னல் எனக்குப் பெருமையதே'' என்று பாவேந்தர் பாரதிதாசனாரும், "சாதி சமய வேற்றுமைகளைக் களைந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குலத்தாராக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோள் பேராசிரியர் அன்பழகனாரின் இளமைப் பருவத்திலேயே நன்கு வேரூன்றியிருந்தது'' என்று பேராசிரியர் க.வெள்ளை வாரணனாரும்'', "உலகக் கடல்களெல்லாம் ஓரிடஞ் சேர்ந்தாலும் ஒப்பாகா என்று சொல்லக்கூடிய அத்துணைத் தமிழன்பு மிக்கவர் அன்பழகனார்'' என்று முனைவர் வ.சுப.மாணிக்கனார், "மாணவப் பருவத்தில் விரும்பி ஏற்றுக்கொண்ட பகுத்தறிவுப் போக்கினை சமத்துவச் சிந்தனையை, தமிழ்ப் பற்றினை இன்றும் சிறிதும் நழுவவிடாமல் அரும்பாடுபட்டு வரும் சிலரில் பேராசிரியர் அன்பழகனாரும் ஒருவர்'' என்று நெ.து.சுந்தரவடிவேலுவும் பேராசிரியரை மனமாரப் பாராட்டியிருக்கிறார்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைக் கண்டு, தமிழர் நலம் காக்கப் பாடுபட்டு உழைத்த திராவிட இயக்க முன்னோடிகளாம் பெரியார், அண்ணா, டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், தியாகராயர், பனகல் அரசர் போன்ற கொள்கைத் தங்கங்களை இன்றைக்கும் மேடைகளிலே நினைவுபடுத்திப் பேசிக் கொண்டிருக்கும் கொள்கைக் கோமான் தான் நம்முடைய பேராசிரியர். பேராசிரியருக்கும் கோபம் வரும். உதாரணமாக சாதியைப் பற்றி பேசப்பட்டபோது, "நாமெல்லாம் திராவிடர்கள், நாமெல்லாம் தமிழர்கள் என்று திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறோம் என்றால், நம்மிலே ஏற்றத்தாழ்வு கிடையாது. இருப்பதாகச் சொல்லுபவன் ஏமாற்றுவதற்காகச் சொல்பவன். நால்வகைச் சாதி என்று சொன்னவன் பித்தலாட்டக்காரன்'' என்று கடுமையாகக் கூறினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றே பேராசிரியர் அன்பழகன். அவருடைய கருத்தழகும், கனிவான சொல்லழகும், தமிழ்க் கட்டழகும் மேடையில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம் பலமுறை. பேராசிரியரைப் பற்றி ஒருமுறை நான் கூறும்போது, "நான் மக்களுக்காக எழுதுகிறேன், பேராசிரியர் அன்பழகனோ என் போன்றோருக்காக எழுதுகிறார்'' என்று சொன்னேன். அத்தகைய அறிவும் ஆற்றலும் அனுபவமும் உள்ளவர் பேராசிரியர்.

பேராசிரியர் அன்பழகனார் தற்போது இந்தக் கழகத்தைக் கட்டிக்காக்கின்ற பெருந்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவருடைய 89-வது பிறந்த நாள் தமிழுக்கு முடி சூட்டுகின்ற நாள் - தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள் - திராவிட இனப் பெருங்குடி மக்கள் மட்டுமல்ல - உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவோம் என்று சூளுரைக்கின்ற நாள் இந்த நாள் என்று கூறி - மேலும் பல்லாண்டுகள் பேராசிரியப் பெருந்தகை நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து கழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் மேன்மைக்கும் தொடர்ந்து பாடுபட வேண்டுமென்று வாழ்த்துகின்றேன், போற்றுகின்றேன். வயதில் ஈராண்டு இளையோன்; அதனால் வணங்குகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
...தட்ஸ்தமிழ் 19.12.2010

nambi
19-12-2010, 01:28 PM
திருநெல்வேலி : தமிழகத்தை சேர்ந்த நான்குபேர் உள்பட 5 பேர் ஓமன் நாட்டில் தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வெள்ளங்குழி கிராமத்தை சேர்ந்த இசக்கி மகன் சுப்பிரமணியன்(35). இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவியும் இரண்டரை வயதில் பிரியதர்சினி, ஒன்றரை வயதில் இஷாந்திகா என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு மணிகண்டன் ஓமன் நாட்டில் எலக்ட்ரிஷியன் வேலைக்கு சென்றிருந்தார். பைசியா என்ற நகரில் நண்பர்கள் 5 பேருடன் ஒரே அறையில்தங்கியிருந்தார். இவருடன் நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(32) என்பவரும் தங்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி தங்கம் என்ற மனைவியும் சக்திமாரி(2) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தபாலச்சந்திரன்(45), ஜானி(45), கேரள மாநிலத்தை சேர்ந்த அனீஷ்(26) ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால் இரவில் பெட்ரோமாக்ஸ் விளக்கு பற்ற வைத்துவிட்டு தூங்கிவிட்டனர்.நள்ளிரவு 1.40 மணிக்கு லைட் கவிழ்ந்து எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்துபேருமே கருகி உருத்தெரியாமல் இறந்துவிட்டனர். வீட்டில் இருந்து கரும்புகை தொடர்ந்துவெளியே வந்துகொண்டிருந்தது. சம்பவம் குறித்து ராயல்ஓமன் போலீசார் விசாரித்தனர்.நெல்லையை சேர்ந்த மணிகண்டன், சுப்பிரமணியன் ஆகியோர் இறந்த சம்பவம் அவர்களது வீடுகளுக்கு ஓமன் நாட்டில் பணியாற்றும் நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது.இருப்பினும் அவர்கள் பணியாற்றும் நிறுவனமோ, ஓமன் அரசோ இதுவரை முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. புளியங்குடி மணிகண்டன். மனைவி 7 மா கர்ப்பிணியாக இருக்கும்போது ஓமனுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தற்போது அவரது மகளுக்கு 2 வயதாகிவிட்டது. இதுவரையிலும் மகளை பார்க்கவரவில்லை. அடுத்தமாதம் சொந்த ஊர் வருவதாக இருந்தது. இதே போல சுப்பிரமணியன் வீட்டிலும் அவரை நம்பித்தான் வாழ்க்கை நகர்ந்தது. அவர்களதுஉடல் எப்போது வரும் என்பதே கூட இன்னமும் தெரியாமல் பெற்றோர்கள், உறவினர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
....தினமலர் 19.12.2010

ஆன்டனி ஜானி
19-12-2010, 01:46 PM
ஒவ்வொரு நாளும் செய்திகளை தொகுத்து வழங்கும்
நமது நம்பி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

தொடருங்கள் .......

nambi
21-12-2010, 10:25 AM
புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் பிரச்னை தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிபர் நீரா ராடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பெயர் குறிப்பிடாத நபர்கள் சிலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்தப் பிரச்னை தொடர்பான வழக்கு கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் சிபிஐ எடுத்த நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. இதன் பின்னர் விரைந்து செயல்பட்ட சிபிஐ, பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தியது. இதை தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நீரா ராடியாவுக்கு நேற்று சம்மன் அனுப்பியது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு டெல்லி சத்தர்பூரில் உள்ள நீரா ராடியாவின் பண்ணை வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஒரு சில நிறுவனங்களுக்கு முறைகேடாக அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அவரது பங்கு குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடைபெற்ற இந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுவாக பெண்களை விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்துக்கு அழைப்பதில்லை. இதன் காரணமாக நீரா ராடியாவின் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

....தினகரன் 21.12.2010

nambi
21-12-2010, 10:33 AM
சித்தூர்: சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று தாசில்தார் அலுவலகங்களை முற்றுகையிட்டதால், பணிகள் ஸ்தம்பித்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து, உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு தொடர்வதால், பதற்றம் மேலும் பரவத் தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த 17ம் தேதி ஐதராபாத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதி அருகே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இப்போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட், அதிமுக, லோக்சத்தா, பிரஜா ராஜ்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாய நல சங்க அமைப்பினர், மகளிர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினர் சாலை மறியல், உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உடல் நலம் குன்றியதால் நேற்று அதிகாலை 4 மணியளவில் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து சந்திரபாபு நாயுடுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை கைது செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஸ்ட்ரெச்சரிலிருந்து சந்திரபாபு நாயுடு தவறி கீழே விழுந்தார். இதை தடுக்க முயன்ற சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பெறாமல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாயுடுவை கைது செய்ததை கண்டித்து நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திராவில் ஒரு நாள் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், கடைகள் போன்றவை மூடப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து திருப்பதி மற்றும் ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ரத்து செய்யப்பட்டன. பந்த்தையொட்டி மாநிலம் முழுவதும் 21 அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நலகொண்டா மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகம் சூறையாடப்பட்டது. இதேபோல் கர்னூல் மாவட்டம் நந்தி கோடூரு தாசில்தாரின் ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாசில்தார், மண்டல அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் பூட்டு போட்டனர். மாநிலம் முழுவதும் போராட்டக்காரர்கள் 2,143 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக தொடர்ந்து 3 நாள் போராட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.

முதல் நாளான இன்று தாசில்தார் அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மாநிலம் முழுவதும் அரசு பணிகள் ஸ்தம்பித்தன. நாளை கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடவும், நாளை மறுநாள் பஸ் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதுஒருபுறமிருக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆரின் மகனும், முன்னாள் கடப்பா எம்பியுமான ஜெகன்மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். இச்சம்பவங்களால் ஆந்திராவில் பதற்றம் மேலும் பரவி வருகிறது.
....தினகரன் 21.12.2010

nambi
21-12-2010, 10:41 AM
டெல்லி: சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 50 வரை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன.

அதே நேரத்தில் டீசல் மற்றும் கேஸ் விலையை சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள அனுமதி தரப்படவில்லை. இந் நிலையில் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையும் உயர்ந்துவிட்டதால், இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளன.

விலையை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 வரை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தமிழகம் , மேற்கு வங்கம், கேரளாவில் அடுத்த 5 மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளதால் விலையை ரூ. 50 மட்டும் உயர்த்த மத்திய அரசு அனுமதி்க்கும் என்று தெரிகிறது.

இந்த விலை உயர்வு விரைவிலேயே அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

...தட்ஸ்தமிழ் 21.12.2010

nambi
21-12-2010, 10:44 AM
புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் வெங்காயத்தின் விலை கடந்த சில தினங்களாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த கடும் மழையினால் வெங்காய சாகுடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் அம் மாநிலங் களிலேயே தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் சீராக ஏறத்தொடங்கிய வெங்காயவிலை கடந்த நவம்பர் மாதம் அதிகரிக்கத் துவங்கியது. இதனால் டில்லி நகர சந்தைக்கு தேவைப்படும் 500 டன் வெங்காயத்தின் வரவில் பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து வியாபாரிகள் கூறும் போது இது போன்ற சூழ்நிலை நீடித்தால் கிலோ ரூ 100 வரையிலும் செல்லக்கூடும் என தெரிவித்தனர்.இதே வெங்காய விலை உயர்வு டில்லி யூனியன் பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
...தினமலர் 21.12.2010

nambi
21-12-2010, 10:46 AM
மன்மதன் அம்பு : கமல், திரிஷா நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் 'கண்ணோடு கண்ணை கலந்தாளேன்றால்' என்ற பாடல் வரிகள் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. இந்த பாடல் வரிகளை நீக்கவேண்டும். இல்லையென்றால் இப் படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர், மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று ஆணித்தரமாக கூறியிருந்தார். ஆனால் இப்போது அந்தபாடலை நீக்க கமல் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

....தினகரன் 21.12.2010

nambi
21-12-2010, 10:49 AM
மன்மதன் அம்பு விட்டு புண் பட்டுவிட்டதா?....புகை விட்டு....ஆற்றிகொள்ளட்டுமே...?:D

nambi
21-12-2010, 11:04 AM
கனமழையால் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தேனாம்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், தியாகராயர்நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சில்லைறை விற்பனை கடைகளில் கடந்த வாரம் வரை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய வெங்காயம் தற்போது 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள போதிலும் விலை குறைவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கிருந்து சென்னைக்கு வரும் காய்கறி வரத்து பாதியாக குறைந்துள்ளது.

இதனால் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் தக்காளி விலை கிலோவுக்கு 5 ரூபாய் அதிகரித்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கத்திரிக்காய் விலையும் கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் காய்கறி வாங்குவதை பாதியாக குறைத்துக் கொண்டுள்ளதாக குடும்பத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், ஒரு முருங்கைக்காய் விலை 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்த காய்களையும் வாங்க முடியவில்லை என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
...வெப்துனியா 21.12.2010

nambi
22-12-2010, 02:09 AM
சென்னை : கோயம்பேடு மார்க்கெட் மற்றும் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யும்போது, அரசின் சார்பில் நடத்தப்படும் காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் (டியுசிஎஸ்) வெங்காயம் கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் கடந்த வாரம் வரை வெங்காயம் கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மும்பை மற்றும் ஆந்திராவில் பெய்த மழை காரணமாக, தமிழகத்துக்கு தினமும் வரவேண்டிய வெங்காயத்தின் அளவு குறைந்தது. இதையடுத்து, வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 80க்கு விற்கப்பட்டது. நேற்று அது ரூ. 100ஆக உயர்ந்தது. சில்லரை கடைகளில் ரூ. 120, 130 என இஷ்டத்துக்கு விற்கப்படுகிறது. இதனால் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்துபவர்கள், பார்த்து பார்த்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிலோ கணக்கில் வாங்குபவர்கள்கூட 100 கிராம், 200 கிராம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கோயம்பேடு மற்றும் தனியார் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், பெரியார் நகர், செனாய் நகர், பெசன்ட் நகர் பகுதிகளில் உள்ள காமதேனு கூட்டுறவு பண்டகசாலை (டியுசிஎஸ்) சூப்பர் மார்க்கெட்டில் கிலோ வெங்காயம் நேற்று ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது. மேற்கண்ட கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 40க்கு கிடைக்கும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது.

இதைப்பார்த்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெங்காயம் வாங்கிச் சென்றனர். சாதாரண நாட்களில் இந்த கடைகளில் கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால் நேற்று முன்தினமும், நேற்றும் வரிசையில் நின்று காய்கறி வாங்கிச் சென்றனர். வெங்காயம் தவிர கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 10 வகையான காய்கறிகளும், தனியார் கடைகளை விட பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, டியுசிஎஸ் தனி அதிகாரி சக்தி சரவணன் கூறியதாவது: வழக்கமாக மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து வெங்காயம் வாங்கி விற்பனை செய்து வந்தோம். தற்போது, அங்கு வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூரில் இருந்து நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறோம். அதேபோல், மற்ற காய்கறியும் ஒசூர் அருகே உள்ள பேரிகை என்ற இடத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறோம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கடை திறந்திருக்கும். ஆனால், இரண்டு நாட்களாக மதியம் கடையை மூடக்கூட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் வருவதால் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு சக்தி சரவணன் கூறினார். முருங்கைக்காயும் கிலோ 100 ரூபாய்

அண்ணா நகர் : முருங்கைக்காய் வரத்து குறைந்திருப்பதால், கோயம்பேடு மார்க்கெட் டில் ஒரு கிலோ ரூ. 100க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருகிறது. ஒட்டன்சத்திரம், தாராபுரம், தேனி, பெரியகுளம் மற்றும் குஜராத் மாநிலத்தில் இருந்தும் முருங்கைக்காய் வருவது வழக்கம். தினசரி 15 லாரிகளில் வரும் முருங்கைக்காய், தற்போது 2 லாரிகளில் மட்டுமே வருகிறது. கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விலை கடைகளில் தற்போது முருங்கைக்காய் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது.

மற்ற காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்):
கத்தரிக்காய் ரூ.32
முட்டைகோஸ் ரூ.15
உருளைக்கிழங்கு ரூ.17
பீட்ருட் ரூ. 13
கேரட் ரூ. 38
சவ்சவ் ரூ. 15
முள்ளங்கி ரூ. 15
பீன்ஸ் ரூ. 30
அவரைக்காய் ரூ. 40
சின்ன வெங்காயம் ரூ.55
தக்காளி &ampரூ.38
வெண்டைக்காய் ரூ.30
புடலங்காய் ரூ. 35
பாகற்காய் ரூ.30
சேனைக்கிழங்கு ரூ.22
சேப்பங்கிழங்கு ரூ. 20
பச்சை மிளகாய் ரூ.16
பூசணிக்காய் ரூ.15

....தினகரன் 22.12.2010

nambi
27-12-2010, 01:00 PM
ராமேஸ்வரம்: கீழக்கரை அருகே 13 பேரை பலி கொண்ட படகு விபத்துக்கு, சுழலில் படகு சிக்கியதும், அதிக ஆட்களுடன் சென்றதுமே காரணம் என்று விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.


இவர்கள் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்துக் கூறுகையில்,

எங்களது படகில் பெண்கள், குழந்தைகள் என 38 பேர் இருந்தோம். படகில் சமையலுக்கு தேவையான பொருட்களுடன், ஒரு ஆடும் ஏற்றப்பட்டு இருந்தது. கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் பெரிய அலை சீறி எழுந்தது.

அலையின் சுழலில் சிக்கிய படகு தள்ளாடியது. இதில் நாங்கள் அங்கும், இங்குமாக ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்தது. பொருட்களும், ஆட்களும் அதிகமாக இருந்ததாலேயே கடலுக்குள் படகு கவிழ்ந்தது.

இதனால் அனைவரும் தண்ணீரில் மூழ்கினோம்.

விபத்தில் சிக்கி கடலில் மூழ்கிய சிலரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட பகுதி சகதி நிறைந்ததாக உள்ளதால் உடல்கள் அதில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் தீவுப் பகுதிகளில் சில நாட்களில் உடல்கள் கரை ஒதுங்கலாம் எனத் தெரிகிறது.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கிக் காணப்படுகிறது.

....தட்ஸ் தமிழ் 27.12.2010

nambi
27-12-2010, 01:02 PM
சென்னை, டிச. 26: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இதுபற்றி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:

கடந்த மக்களவைத் தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் பா.ம.க. இருந்த அணிகள்தான் வெற்றி பெற்றுள்ளன. இனி வரவிருக்கும் தேர்தல்களில் பா.ம.க. இருக்கும் அணிதான் வெற்றி பெறும்.

பா.ம.க.வின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை பொங்கலுக்குப் பிறகு பா.ம.க. முடிவு செய்யும்.

அதேபோல இந்தத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு ஏதும் கிடையாது என்று ராமதாஸ் கூறினார்.
...தினமணி 26.12.2010

nambi
27-12-2010, 01:07 PM
ஹைதரபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகளை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி தொடங்கினால், உடனடியாக எனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை கலைத்து விடத் தயார் என்று கூறியுள்ளார் கட்சித் தலைவரான கே.சந்திரசேகர ராவ்.

ஹைதராபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் சந்திரசேகர ராவ் பேசுகையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகளை சோனியா காந்தி தொடங்கட்டும். அதன் பின்னர் எனது கட்சியை உடனடியாக கலைத்து விடத் தயார்.

வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இதுதொடர்பாக கட்சிக்கு நெருக்குதல் தர வேண்டும். மேலும் ஆந்திர சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை காங்கிரஸ் எம்.பிக்களும் புறக்கணிக்க வேண்டும்.

சோனியா காந்தி மட்டும் தெலுங்கானா மாநிலத்தை அமைக்க முன்வந்தால், அவரை தெலுங்கானா மக்கள் மதித்து வழிபடுவார்கள். ஆனால் தற்போது தெலுங்கானாவில் தேவையில்லாமல் கூடுதல் படையினரை குவித்து வைத்து வருகிறார்கள். இது ஏன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

1969ல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் வெடித்து விடக் கூடாது என்று விரும்புகிறேன். ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை எப்படி இருந்தாலும் சரி, நாங்கள் தெலுங்கானாவை அமைக்காமல் ஓய மாட்டோம். தேவைப்பட்டால் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதிக்கவும் நான தயங்க மாட்டேன் என்றார் ராவ்.

....தட்ஸ்தமிழ் 27.12.2010

nambi
27-12-2010, 04:17 PM
http://www.dailythanthi.com/images/news/20101226/cbe2.jpg
தொண்டாமுத்தூர், டிச.26-

கோவையில் சர்ச்சைக்குரிய தீண்டாமை சுவர் நேற்று இடித்து அகற்றப்பட்டது.

கோவையில் தீண்டாமை சுவர்

கோவையை அடுத்த தெற்கு தாலுகா வேடபட்டி கிராமம் நாகராஜபுரத்தில் சுமார் 500 வீடுகள் உள்ளன. இந்த பகுதியையொட்டி சுமார் 350 அடி நீளம் 6 அடி உயரத்துக்கு சுவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் அந்த சுவரின் இரண்டு புறமும் விடப்பட்டிருந்த இடை வெளி வழியாக இதுநாள் வரை நாகராஜபுரம் பகுதி மக்கள் தொண்டாமுத்தூர் பிரதான சாலைக்கு வந்து சென்றனர். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் கோவை, தொண்டாமுத்தூர் பகுதிக்கு செல்பவர்கள் அந்த சுவரின் இடைவெளி வழியே வந்து சென்றனர்.

இந்த நிலையில் நாகராஜபுரம் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 50 அடி தூரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டது. இதனால் நாகராஜபுரம் பகுதி மக்கள் பிரதான சாலைக்கு வர முடியாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாகராஜபுரம் பகுதியில் சில குறிப்பிட்ட சமூகத்தினர் வசித்து வருவதாலும், அவர்கள் கடந்த 2 மாதம் முன்பு வரை பயன்படுத்தி வந்த பகுதி அடைக்கப்பட்டதாலும் தற்போது அவர்கள் பிரதான சாலையை அடைய அதிக தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதாலும் அந்த பகுதி மக்கள் இதனை தீண்டாமை சுவர் என்று கருதினார்கள்.

அதிகாரிகள் விசாரணை

இதுபற்றிய தகவல் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு கொண்டு சென்றது. இதை தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் உத்தரவின் பேரில் தெற்கு தாசில்தார் லட்சுமி நாராயணன், வடக்கு தாசில்தார் சுந்தர்ராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி நிலத்தை அளந்தனர்.

வீரகேரளம் பகுதியில் அமைந்துள்ள பட்டா நிலத்தின் உரிமையாளர் அவரது பட்டா நிலத்தில் சுவர் எழுப்பியிருந்தாலும் அந்த பட்டா இடம் தற்போது மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது வருவாய்த்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. தனியாருக்கு சொந்தமான லே-அவுட்டில் பூங்கா அமைக்கப்படும் இடமும் நாகராஜபுரம் பகுதிக்கு அருகில் உள்ளது.

சுவர் இடித்து தள்ளப்பட்டது

எனவே அந்த பூங்கா பகுதி வீரகேரளம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்படுவதால் தீண்டாமை சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று சுவர் இரண்டு இடங்களில் இடிக்கப்பட்டது. பூங்கா அமைய உள்ள இடத்தில் 30 அடி அகலத்துக்கும், தனியார் வீட்டுமனை பகுதியிலிருந்து நாகராஜபுரம் செல்லும் பகுதிக்கு உள்ள பஞ்சாயத்து சாலைக்கு எதிரில் சுமார் 23 அடி அகலத்துக்கும் சுவர் இடித்து அகற்றப்பட்டது. வடக்கு தாசில்தார் சுந்தர்ராஜ், வீரகேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் துரைமணி, வடவள்ளி இன்ஸ்பெக்டர் மரியமுத்து ஆகியோர் முன்னிலையில் சுவர் இடிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக அந்த பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதின் மூலம் நாகராஜபுரம் பகுதி மக்கள் வீரகேரளம் பேரூராட்சிக்கு சொந்தமான பஞ்சாயத்து சாலை வழியாகவும், பூங்கா வழியாகவும் தொண்டாமுத்தூர் பிரதான சாலையை அடையலாம். தீண்டாமை சுவரை இடித்ததில் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தாலும் சுவர் முழுவதையுமே இடிக்க வேண்டும் என்று நாகராஜபுரம் பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

.....தினத்தந்தி 26.12.2010

nambi
28-12-2010, 03:46 PM
நியூயார்க் : நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நடக்கும். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள் குடியரசுக் கட்சி நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று, பிளாட்டஸ் மாகாணத் தலைநகர் ஜாஸ் நகரில் கலவரம் வெடித்தது. நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 38 பேர் பலியாகினர். இதற்கிடையில், ஐ.நா.,பொதுச் செயலர் பான்- கி -மூன் விடுத்துள்ள அறிக்கையில்,"" பண்டிகையைக் கொண்டாடும் நேரத்தில், இதுபோன்ற வன்முறைகள் நிகழ்ந்தது கண்டனத்திற்குரியது. வன்முறையாளர்களும், அவர்களுக்குத் துணை போன அரசு அதிகாரிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
....தினமலர் 28.12.2010

nambi
29-12-2010, 05:14 AM
நட்சத்திர ஓட்டல்களில் விருந்து- நடன நிகழ்ச்சிக்கு நள்ளிரவு 1.30 மணி வரை அனுமதி



சென்னை, டிச.29-

சென்னையில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் விருது மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு நள்ளிரவு 1.30 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நட்சத்திர ஓட்டல் விருந்து

சென்னை நகரில் புத்தாண்டு விழாவை பொதுமக்கள் சந்தோஷமாக கொண்டாட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள்.

நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது என்பது குறித்து நட்சத்திர ஓட்டல் அதிகாரிகளோடு கலந்து பேசினேன். 100 நட்சத்திர ஓட்டல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 1.30 மணி வரை

நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சிகள் நள்ளிரவு 1.30 மணி வரை அனுமதிக்கப்படும். நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல்குளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும். ஓட்டல்களில் தனி மேடை அமைக்க விரும்பினால் அந்த பகுதி துணை ஆணையர்களிடையே முன்கூட்டியே சொல்லி அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதுபோல நடன நிகழ்ச்சிகள் நடத்தினால் அதுபற்றியும் முன்கூட்டியே துணை ஆணையர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மது வகைகளை பார்களில் மட்டுமே அருந்த அனுமதிக்க வேண்டும். விருந்து நடக்கும் இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

ஆபாசம் கூடாது

நடன நிகழ்ச்சிகளில் ஆபாசம் தலைதூக்க அனுமதிக்க கூடாது. பெண்களை எக்காரணம் கொண்டும் யாரும் ஈவ்டீசிங் செய்யக்கூடாது. புத்தாண்டு விருந்து நடக்கும்போது ஓட்டல் வளாகத்தில் பட்டாசு போன்ற வெடிபொருட்களை வெடிக்கக்கூடாது. விருந்து நிகழ்ச்சியில் பிரச்சினை ஏற்பட்டால் உடனே அதுபற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

ஓட்டல் ஊழியர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படக்கூடாது. ஓட்டலுக்குள் வரும் வாகனங்களை சோதனை செய்தபிறகே அனுமதிக்க வேண்டும். விருந்து நிகழ்ச்சிகளில் வெளிநாட்டினர் யாராவது கலந்து கொண்டார். அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்கள் சரியாக வைத்துள்ளார்களா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். விசா, கடவுச்சீட்டு சரியாக இல்லாத வெளிநாட்டினர் யாராவது விருந்து நிகழ்ச்சிக்கு வந்தால் அவர்களை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

போதையில் வாகனம்

கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை போன்ற சென்னை நகரின் முக்கிய சாலைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். மதுஅருந்திவிட்டு போதையில் வேகமாக வாகனம் ஓட்டிச்செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட அறிவுரைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் நடத்தலாம்.

பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் அவர்களுடைய வீடுகளில் விழா கொண்டாட எந்தவித அனுமதியும் தேவையில்லை. வெளி ஆட்களுக்கு வாடகைக்கு விடும்போது கண்டிப்பாக போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். யாருக்கும் பிரச்சினை இல்லாமல் சட்டத்திட்டத்துக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு பொதுமக்கள் புத்தாண்டு விழாவை சந்தோஷமாக கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

பேட்டியின்போது, கூடுதல் ஆணையர்கள் சஞ்சய் அரோரா, ஷகில் அக்தர், இணை ஆணையர் சக்திவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

-----

ஆபாச நடனம் ஆடும் அழகிகள் கைது

நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனம் ஆடும் அழகிகள் மீது என்ன? நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிருபர்கள், காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த அவர், ஆபாச நடன நிகழ்ச்சிகள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும், சென்னை புரசைவாக்கத்தில் கெல்லீஸ் பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் ஆபாச நடனமாடியதாக 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். அதே பகுதியில் ஒரு ஓட்டலில் சூதாட்டம் நடத்திய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஆணையர் ஆலோசனை கூட்டத்துக்கு வந்திருந்த நட்சத்திர ஓட்டல் அதிகாரிகள், நிருபர்களிடம் கூறும்போது, `புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகள் இரவு 8.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணியோடு முடித்துக்கொள்ளப்படும் என்றும், ஆபாச நடன நிகழ்ச்சியை அனுமதிக்கமாட்டோம் என்றும், ஜோடி சேர்ந்து வருபவர்கள் மட்டுமே நடனமாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள். அதோடு விருந்து நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமானபேர் அனுமதிக்கப்படமாட்டார்கள்' என்றும் அவர்கள் தெரிவித்தனர். சென்னையில் 65 நட்சத்திர ஓட்டல்களுக்கு புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகள் நடத்த இதுவரை காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
....தினத்தந்தி 29.12.2010

nambi
29-12-2010, 10:43 PM
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கை: முதல்வர் கருணாநிதி 2006ல் பொறுப்பேற்ற பிறகுதான் “தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடை சட்டம்’’ நீக்கம் செய்யப்பட்டது என்ற ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’’ 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

இதுகுறித்து நானும் பல முறை தெளிவுபடுத்தியுள்ளேன். நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசர சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசர சட்டத்துக்கு சட்டமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசர சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும்; மீண்டும் உயிர் பெறாது.  சட்டமன்றத்துக்கு கொண்டு வந்தால்தான் ரத்தாகும் என்றில்லை. இது 1985ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கை வாயிலாகவும், 2006 சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் தெரிவித்துள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
.....தினகரன் 30.12.2010

nambi
29-12-2010, 10:53 PM
இந்த ஜனநாயக விரோத சட்டத்தை கொண்டுவந்ததும் ஆதிமுக ஆட்சியில் தானே! (செல்வி ஜெயலலிதா).....நம்மவா! சங்கராச்சாரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கொண்டு வந்தது தானே (செய்தி)...விவசாயிகள் இலவச மின்சாரத்தை ரத்து செய்தது கூட அதிமுக ஆட்சியில் தான். போராட்டத்திற்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது.

கிராம மக்களின் நம்பிக்கையான....கோயில்களில் விலங்குகளை பலியிட தடை என சட்டம் கொண்டுவந்ததும் அதிமுக ஆட்சியில் தானே!

nambi
29-12-2010, 11:21 PM
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சீடர்களுடன் நித்யானந்தா பூஜையில் கலந்து கொண்டார். இதை கண்டித்து பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருந்ததாக வெளியான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது, உலகம் முழுவதும் உள்ள நித்யானந்தாவின் சீடர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நித்யானந்தா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வந்த நித்யானந்தா பெங்களூரில் உள்ள பிடதி ஆஸ்ரமத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான திருவண்ணாமலையில் ஜன்ம நட்சத்திரத்தையொட்டி நடைபெறும் சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் வந்தார். கிரிவலப்பாதையில் உள்ள அவரது தியான பீடத்தில் தங்கினார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சீடர்களும் வந்தனர். நேற்று அதிகாலை நித்யானந்தா, அண்ணாமலையார் கோயிலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதால், போலீசார் அதிகாலை 3 மணிக்கே கோயிலை சுற்றிலும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ஏற்கனவே, நித்யானந்தா வருகையை கண்டித்து நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்த பல்வேறு அமைப்பினர் ‘நித்யானந்தாவை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கக்கூடாது’ என கோஷமிட்டு கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையும் மீறி, அதிகாலை 5 மணிக்கு தனது பெண் சீடர்களுடன் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நித்யானந்தா சென்றார். கோயிலில் நடந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டார். பின்னர், கோயிலில் உள்ள அருணகிரியோகி மண்டபத்தில் பூஜை நடத்தினார்.கோயிலுக்கு வெளியே நித்யானந்தாவை கண்டித்து பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர் காலை 7.40 மணி வரை கோயிலை விட்டு வெளியில் வராமல் இருந்தார்.

பின்னர், தெற்கு கோபுரம் வழியாக வெளியேறினார். அங்கு தயாராக காத்திருந்த காரில் ஏறி ஓட்டம் பிடித்தார். செங்கம் சாலையில் அவரது காரை மறித்து மறியல் செய்ய பலரும் காத்திருந்ததால், பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டு கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்துக்கு சென்றார். நித்யானந்தா வருகையால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புனிதம் கெட்டுவிட்டது: மலையே சிவனாக காட்சியளிக்கும் தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி மற்றும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து 14 கி.மீ. கிரிவலம் செல்கின்றனர். இப்படிப்பட்ட புனித தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு, செக்ஸ் புகாரில் சிக்கிய நித்யானந்தா பெண் சீடர்களுடன் நுழைய அனுமதிக்கலாமா? இதனால் கோயிலின் புனிதமே கெட்டுவிட்டது. இதற்காக கோயிலை சுத்தப்படுத்தி உரிய பரிகாரங்கள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

நடிகை ரஞ்சிதா எங்கே?

கோர்ட் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, முதல் முறையாக திருவண்ணாமலை வந்துள்ள நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதாவும் வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதாவும் வந்திருக்கிறாரா என கோயிலுக்கு வந்த பொதுமக்கள் தேடினர். போலீசாரும் நடிகை ரஞ்சிதா வந்திருக்கிறாரா, எங்கே தங்கியிருக்கிறார் என தீவிரமாக விசாரித்தனர். ஆனால், ரஞ்சிதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

திருவண்ணாமலை வருகை குறித்து நித்யானந்தாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது, அவர் பதில் கூற மறுத்துவிட்டார். நித்யானந்தா பெண் சீடர்களுடன் இருப்பது போன்ற படங்களை எடுக்கக் கூடாது என கூறி பத்திரிகையாளர்களுடன் சில சீடர்கள் மோதலில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

....தினகரன் 30.12.2010

nambi
30-12-2010, 04:15 AM
மாப்பிள்ளை தேடியபோது குட்டு வெளியானது:

அக்காள் சாவு; தங்கை உயிர் ஊசல்


மதுரை, டிச.30-

மதுரையில் ரகசிய திருமணம் செய்து கொண்ட சகோதரிகள் ஒரே நேரத்தில் விஷம் குடித்தனர். இதில் அக்காள் உயிரிழந்தார். தங்கைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சகோதரிகள்

மதுரை புதுஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. தனியார் வாகன காப்பக காவலாளியான இவரது மனைவி தேவகி. இவர்களது மகள்கள் கோகிலவாணி (வயது 22), தாமரைச்செல்வி (20). தாமரைச்செல்வி திருச்சியை சேர்ந்த நந்தா என்ற வாலிபரையும், கோகிலவாணி கரிமேடு பகுதியை சேர்ந்த குமார் என்பவரையும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தங்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்புமோ என்று பயந்த இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்களது காதலர்களை ரகசிய திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும் அவர்கள் தங்கள் திருமணத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் பெற்றோருடனே வசித்து வந்தனர். அவ்வப்போது செல்போன் மூலம் தங்கள் காதல் கணவருடன் பேசி வந்தனர்.

மாப்பிள்ளை பார்த்தனர்

இதுபற்றி அறியாத ராஜா, கோகிலவாணிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தார். அதன்படி மாப்பிள்ளையின் உறவினர்கள் கோகிலவாணியை, பெண் பார்க்க வந்தனர். அப்போது கோகிலவாணி, தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தனது தந்தையிடம் தெரிவித்தார்.

இந்த விஷயம் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கும் தெரிந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கோகிலவாணிக்கு பார்த்த மாப்பிள்ளையை மற்றொரு மகளான தாமரைச்செல்விக்கு திருமணம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். இதற்கு உறவினர்களும் ஒப்புக்கொண்டனர்.

மீண்டும் அதிர்ச்சி

இது பற்றி தாமரைச்செல்வியிடம் பெற்றோர் கூறினர். அப்போது அவரும் அதிர்ச்சியான தகவலை தந்தையிடம் கூறினார். அக்காளுக்கு முன்பே தான் திருச்சியை சேர்ந்த காதலன் நந்தா என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார்.

இதை கேட்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்த ராஜாவும், அவரது மனைவி தேவகியும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதனர்.

விஷம் குடித்தனர்

இதனால் மனம் உடைந்த சகோதரிகள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர். மதுரை ரெயில் நிலையம் அருகே அவர்கள் விஷம் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று மயங்கி கிடந்தனர். இதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்கள் இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோகிலவாணி உயிரிழந்தார். தாமரைச் செல்விக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
...தினத்தந்தி 30.12.2010

nambi
30-12-2010, 04:32 AM
மும்பை, டிச.29: சிட்டி வங்கியின் குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி நிகழ்ந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய மோசடி நிகழ்ந்துள்ளதே அதிர்ஷ்டவசமாகத்தான் தெரியவந்துள்ளது. சிக்கிக் கொள்பவர்களுக்கு துரதிருஷ்டமாக இருக்கக்கூடும்.

வங்கியின் ஆசிய பசிபிக் பிராந்திய பேரிடர் நிர்வாகக் குழுவினர் குர்காவ்ன் கிளையில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கி, இது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இத்தகைய மோசடியை யார் செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்கும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலீடு தொடர்பான பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் நபர்கள்தான் இத்தகைய மோசடியை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று வங்கித் துறை குறித்த நன்கு பரிச்சயமுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாக குறிப்பிட்ட முதலீடுகளை வாங்குமாறு வாடிக்கையாளரிடம் தெரிவிக்கும் வங்கி ஊழியர்கள், அத்தகைய முதலீடுகளை வாங்கியபிறகு அதற்குரிய தொகையை வங்கிக் கணக்கில் சேர்க்காமல் அதை தங்களது சொந்தக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டிருக்கலாம். இதன் மூலம் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி அதிக முதலீடு செய்யும் தனிநபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அளிக்கப்படும் சேவை குறித்த விவரங்களை வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதுவரை 40 வாடிக்கையாளர்களிடம் இது போன்ற விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சந்தேகத்துக்கு இடமுள்ள வங்கிக் கணக்குகள், ஊழியர்கள் மோசடி செய்திருக்கும் வாய்ப்புள்ள பங்கு பரிவர்த்தனை உள்ளிட்டவையும் ஆராயப்படுகிறது. இதுபோன்ற சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து பங்குச் சந்தைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டதாக சிட்டி வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக குர்காவ்ன் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.

வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர், சிட்டி வங்கி அளித்த பங்கு மூலம் தனக்கு அதிக லாபம் கிடைத்ததாக வங்கி அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் தெரிவித்ததைப் போல எவ்வித பங்கையும் வங்கி விற்பனை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியதில் மிகப் பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து அனைத்து வங்கிக் கிளைகளிலும் தணிக்கை செய்யுமாறு சிட்டி வங்கி தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வங்கி ஊழியர் ஒருவர் தினசரி தனது வழக்கறிஞருடன்தான் வங்கிக்கு பணிக்கு வருகிறார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் வங்கி கடுமையான பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மிரட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிறுவனங்கள் உதவியோடுதான் இந்த மோசடி நடந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. பங்குகளை விற்பனை செய்யும் வங்கி ஊழியர்கள், குறிப்பிட்ட பங்குகள் வங்கியின் அதிகாரபூர்வ ஒப்புதல் பெற்றவை என்று நிரூபிப்பதற்காக வங்கியின் லோகோ, கடிதம் ஆகியவற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

குர்காவ்ன் கிளையின் மூத்த தொடர்பு மேலாளர் சிவராஜ் பூரி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் 40 வாடிக்கையாளர்கள் (இதில் சில நிறுவனங்கள்) பாதிக்கப்படுவர் என்று தெரிகிறது.

...தினமணி 30.12.2010

nambi
30-12-2010, 04:34 AM
அம்பத்தூர் உள்பட 9 நகரசபைகளை
சென்னை மாநகராட்சியோடு இணைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்
அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


சென்னை, டிச.30-

அம்பத்தூர் உள்பட 9 நகரசபைகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாரணையை திரும்பப் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இது தொடர்பாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அடிப்படைக் கொள்கைக்கு முரணாக

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள 9 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிப் பகுதிகளையும் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சென்னை மாநகராட்சியின் ஒப்புதலைப் பெற இப்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளையும், இதர கட்டமைப்பு வசதிகளையும் நிறைவு செய்வதில் வெற்றி பெற முடியும் என்று ஒருபுறம் பேசி வருகிறோம். இன்னொரு புறம், இதற்கு மாறாக பரவலாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி மன்றங்களை கலைத்து விட்டு, சென்னை மாநகராட்சியோடு இணைத்து ஒரு அதிகார குவியலை ஏற்படுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது. இது அதிகார பரவல் என்ற அடிப்படைக் கொள்கைக்கு முரணானது.

அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்

சென்னை பெருநகர மாநகராட்சியோடு இணைக்கப்பட இருக்கும் பகுதிகளில் 9 நகர் மன்றத் தலைவர்களும், 200க்கு மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200-க்கும் மேற்பட்ட பேரூராட்சி கவுன்சிலர்களும், 25 ஊராட்சி மன்றத் தலைவர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் இப்போது அந்தப் பகுதிகளின் மக்களின் தேவையை உணர்ந்து நிறை வேற்றி வைப்பதில் அக்கறையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்து வரும் பணியினை இனி மாநகராட்சியுடன் இணைப்பதன் மூலம் வெறும் 93 மாநகராட்சி கவுன்சிலர்களால் நிறைவு செய்ய முடியுமா? என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.

விரிவாக்கத்தால் வேலைப்பளு கூடும்

ஏற்கெனவே வேலைப்பளுவால் சென்னை மாநகராட்சியில் வேலைகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. வீட்டு வரி, சொத்து வரி வசூலில் என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு குளறுபடிகள் நடைபெற்று மக்கள் வட்ட அலுவலகங்களுக்கும், மண்டல அலுவலகங்களுக்கும், மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்குமாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டின் பிரச்சினை தீர்ப்பதற்கு பல மாதங்கள் ஆகின்றன.

இந்த நிலையில் மாநகராட்சியை மேலும் விரிவாக்குவதால் வேலைப்பளு அதிகரிக்கும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இன்னும் காலதாமதமாகும்.

முதலில் செய்யவேண்டியது...

தரமான சாலை வசதிகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய கட்டமைப்பு வசதிகளை மாநகருக்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலும் வழங்க இந்த விரிவாக்கம் அவசியமாகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது உண்மையானால் தற்போதைய மாநகராட்சிப் பகுதிகளில் இந்த கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, சென்னை மாநகராட்சி இதில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது என்று அறிவிக்க முடியுமா?

சென்னை மாநகரின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டோம்; இனி மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையை எப்போது அடைகிறதோ? அன்றைக்கு நகருக்கு அருகாமையில் உள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலும் இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கு மாநகராட்சி பகுதியோடு இணைத்தால் அதனை வரவேற்கலாம்.

பெருநகர தரவரிசைப் பட்டியலில் 3-வது அல்லது 4-வது இடத்தையோ சென்னை மாநகரம் பெற வேண்டும் என்பதற்காக பக்கத்தில் உள்ள பகுதிகளையெல்லாம் சேர்த்து மக்கள் தொகை கணக்கை அதிகப்படுத்துவதில் என்ன பெருமை இருக்கிறது? மக்களின் அடிப்படை வசதிகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்று முதலிடத்தைப்பிடித்தால் அதில் தான் பெருமை இருக்கிறது. இத்தகைய பெருமையைப் பெற நகர விரிவாக்கம் எந்த வகையிலும் உதவாது.

அரசாணையை திரும்பப்பெறவேண்டும்

எனவே சென்னை மாநகரோடு அம்பத்தூர் உள்ளிட்ட 9 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிகளையும் இணைக்கும் அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும்.

அதற்குப் பதிலாக, ஏற்கெனவே ஆலோசனை செய்தபடி அம்பத்தூர்- சென்னை, திருவொற்றிïர் - சென்னை, தாம்பரம் - சென்னை என 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்கி, அவற்றில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களையும், நகராட்சிப் பகுதிகளையும் இணைத்து சென்னையோடு போட்டி போட்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.


.....தினத்தந்தி 30.12.2010

nambi
30-12-2010, 07:07 AM
புதுடெல்லி: கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டிற்கு நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திராவிற்கு 1001 டிஎம்சி நீர் வழங்க நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் கர்நாடகாவிற்கு 911 டிஎம்சி யும், மராட்டியத்திற்கு 666 டிஎம்சி நீரும் வழங்க உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில் 3 மாநிலங்களிடையே 43 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்தது. இதற்காக 2004 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றத்தை நியமித்தது.

கர்நாடக வரவேற்பு:

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டிற்கு நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு கர்நாடகம் வரவேற்பு அளித்துள்ளது.

...தினகரன் 30.12.2010

nambi
03-01-2011, 02:44 AM
உச்சநீதிமன்றம் ஒப்புதல்


புதுடெல்லி, ஜன.3-

இந்தியாவில் கடந்த 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அடிப்படை மனித உரிமைகளை உச்சநீதிமன்றமே மீறியதாக உச்சநீதிமன்றம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.

கொலை வழக்கு

அசாம் மாநிலத்தை சேர்ந்த சவுகான் என்பவர் பபானி சரண்தாஸ் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில் சவுகானுக்கு கவுகாத்தி செசன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் கவுகாத்தி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தன.

ஆனால், 1992-ம் ஆண்டு கொலை சம்பவம் நடந்தபோது சவுகானுக்கு 16 வயது. எனவே, `சிறுவர் சட்ட விதிகளின்படி மரண தண்டனை விதிக்க முடியாது' என்ற காரணத்தை காட்டி ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு அசாம் ஆளுநருக்கு தேசிய மனித உரிமை கமிஷன் கடிதம் எழுதியது. அதை தொடர்ந்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மறு ஆய்வு மனு

அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கங்குலி, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய அமர்வு(பெஞ்சு), தீர்ப்பை உறுதி செய்ததுடன் தேசிய மனித உரிமை கமிஷனையும் நீதித் துறையில் தலையிட உரிமையில்லை என கடுமையாக சாடியது. அதன் பிறகு, மீண்டும் மறு ஆய்வு மனுவை சவுகான் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கங்குலி, அப்தாப் அகமது ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு (பெஞ்சு) விசாரித்தது.

அப்போது, சவுகான் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மனித உரிமை கமிஷன் போன்ற அமைப்புகளுக்கு மனித உரிமையை முன்னெடுப்பதில் போதுமான அவசியம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முந்தைய தீர்ப்புக்கு முரணான இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கங்குலி, `நெருக்கடி நிலை காலத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளிலேயே மனித உரிமைகள் மீறப்பட்டன` என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

மனித உரிமை மீறல்

நெருக்கடி நிலை காலத்தின்போது 1976-ம் ஆண்டில் ஜபல்புர் கூடுதல் கலெக்டர் சிவகாந்த் சுக்லா வழக்கில் மனித உரிமைகளை சஸ்பெண்டு செய்து உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு (பெஞ்சு) தீர்ப்பளித்தது. இது மிகவும் தவறானது ஆகும். இந்த நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்டு) பெரும்பாலான தீர்ப்புகள், அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகவே அமைந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படவே இல்லை என உறுதியாக கூற முடியாது. 1975-ம் ஆண்டு ஜுன் 27-ந் தேதி அன்று ஜனாதிபதி பிறப்பித்த `மிசா' உத்தரவின்படி, எந்தவொரு நபரும் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மற்றும் பொதுநல (ரிட்) மனு போன்றவற்றை தாக்கல் செய்யவே முடியாது. `மிசா' சட்டத்தின் மூலமாக தனி நபர் சுதந்திரம் அடியோடு மறுக்கப்பட்டது.

....தினத்தந்தி 03.01.2011

nambi
04-01-2011, 12:31 AM
இஸ்லாமாபாத், ஜன.4-

பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்குடும்பங்களில் 100-க்கும் மேற்பட்டவை இந்தியாவில் குடியேற விருப்பம் தெரிவித்து உள்ளன.

ஆட் கடத்தல் அதிகரிப்பு

பாகிஸ்தானில் தீவிரவாதம் பரவியதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள பலுசிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் நிம்மதி தொலைந்து விட்டது. பணத்துக்காக ஆட்களை கடத்துவது, இந்துக்களை மிரட்டி பணம் பறிப்பது ஆகியவை அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டு மட்டும் 291 இந்துக்கள் பணத்துக்காக கடத்தப்பட்டனர்.

இதனால் பீதியில் மூழ்கி உள்ள இந்துக்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

அடைக்கலம்

பலுசிஸ்தான் மாநிலம் மஸ்டங் மாவட்டத்தில் வசித்த 5 இந்து குடும்பங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு குடிபெயர்ந்து விட்டன. மேலும் 6 இந்து குடும்பங்கள் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு உள்ளனர்.

இதற்கிடையில் அந்த நகரை சேர்ந்தவரும், அங்கு மருந்து கடை வைத்திருப்பவருமான 33 வயது விஜயகுமார் கூறுகையில், கடத்தல், பணம் கேட்டு மிரட்டுவது போன்ற சம்பவங்கள் காரணமாக பீதியில் தள்ளப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் இந்தியாவுக்கு குடிபெயர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

வசிக்க முடியாது

மஸ்துங்க் நகரில் மளிகை கடை நடத்தி வரும் சுரேஷ் குமார் கூறுகையில், எங்கள் குடும்பம் பலுசிஸ்தானில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இனிமேல் இங்கு இந்துக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் நாங்கள் இந்தியாவுக்கு குடிபெயர விரும்புகிறோம் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால் இங்கு வசிக்கும் மற்ற இந்துக்களும், இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கோ குடிபெயர விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பலுசிஸ்தான் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மந்திரி பசந்த் லால் குல்ஷன் கூறுகையில், சமீபத்தில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

....தினத்தந்தி 04.1.11

nambi
04-01-2011, 12:34 AM
கொழும்பு, ஜன.3- இலங்கையில் தலைமை நீதிபதி அசோகா டி சில்வா ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், ஆனால் அதிபர் ராஜபட்ச அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ராஜபட்சவை தலைமை நீதிபதி சந்தித்தபோது, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து அசோகா டி சில்வா தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், அவரது ராஜிநாமாவை ஏற்க அதிபர் ராஜபட்ச மறுத்துள்ளார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபரும் தலைமை நீதிபதியும் சந்தித்தபோது, நீதித்துறையில் அரசியல் குறுக்கீடு இருக்கக்கூடாது என்று ராஜபட்சவிடம் தலைமை நீதிபதி எடுத்துக் கூறியதாகவும், அப்போது நீதிபதிகளுக்கு தனது ஆட்சியில் செய்து கொடுத்கப்பட்டுள்ள வசதிகளை ராஜபட்ச ஆவேசமாக எடுத்துக் கூறியதாகவும் இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.
..தினமணி 03.1.11

nambi
04-01-2011, 12:38 AM
கொழும்பு, ஜன.3- இலங்கை அதிபர் ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்சவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சட்டக்கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டக்கல்லூரியில் பயின்றுவரும் ராஜபட்ச மகன் நாமல் ராஜபட்சவுக்கு தேர்வு தினத்துக்கு முன்னதாகவே வினாத்தாள் வழங்கப்பட்டதாக இறுதியாண்டு மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தற்போது அவருக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகளில் அந்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல்கள் வருவதாக சம்பந்தப்பட்ட மாணவர் புகார் கூறியுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே, தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒலிப்பதிவு செய்யுமாறு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு அந்த மாணவர் விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...தினமணி 03.1.11

nambi
04-01-2011, 12:41 AM
முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவிப்பு

ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கிடைக்கும்


தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.277 கோடி செலவில் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் வரை பொங்கல் போனஸ் கிடைக்கும்.

சென்னை, ஜன.4-

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொங்கல் பரிசு ரூ.500

2009-2010-ம் ஆண்டிற்கு `சி' மற்றும் `டி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.3 ஆயிரம் உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கிடவும், `ஏ மற்றும் பி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் கிராம அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 இந்த ஆண்டு முதல் வழங்கிடவும் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

சிறப்பு மிகை ஊதியம்

ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணி புரிந்த சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், குறு அங்கன் வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் பணி புரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.277 கோடி செலவு

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு, இந்திய வோளாண் ஆராய்ச்சி கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.277 கோடி செலவாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
...தினத்தந்தி 04.1.11

nambi
04-01-2011, 12:46 AM
திண்டிவனம், ஜன. 2: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 36-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமை தாங்கினார்.

பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியது:

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 36-க்கும் மேற்பட்ட இடங்களில் பாமக வெற்றி பெறுவது உறுதி. நாம் அணி மாறுவதாக நம் மீது குற்றச்சாட்டு உள்ளது. 25 ஆண்டுகளாக எந்தக் கட்சியும் தனியாக நின்று போட்டியிட்டதில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கருணாநிதி ஆட்சி வரை கூட்டணிகளை மாற்றி தான் தேர்தலை சந்தித்துள்ளனர்.

1967-ல் ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி அமைத்தார். தனியாக செயல்படுபவர்கள் ஓர் ஆண்டுகூட கூட்டணியில் நிலைக்க மாட்டார்கள்.

வரும் தேர்தலில் தென் மாவட்டங்களில் தொகுதி கேட்டு பெற உள்ளோம். பொங்கலுக்கு பிறகு மதுரை சென்று கட்சியின் பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளேன் என்றார்.
...தினமணி 4.1.11

nambi
04-01-2011, 12:51 AM
டெக்ரான், ஜன.4-

ஈரானில் 7 பேர் 5 கிலோ முதல் 100 கிலோ வரையான போதைபொருள்களை கடத்தியதற்காக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அந்த நாட்டு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அதன்படி அவர்கள் 7 பேரும் கெர்மான்ஷா நகர சிறைக்குள் நேற்று காலை தூக்கிலிடப்பட்டனர்.

இதற்கு மனித உரிமைக்குழு கண்டனம் தெரிவித்து உள்ளது. உலகிலேயே ஈரானில் தான் அதிகம் பேர் தூக்கிலிடப்படுவதாக அது குற்றஞ்சாட்டி உள்ளது. ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் இஸ்லாமிய சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி கொலை, கள்ளக்காதல், கற்பழிப்பு, கொள்ளையடித்தல், போதைபொருள் கடத்தல், மதத்துவேஷம் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

....தினத்தந்தி 4.1.11

nambi
04-01-2011, 01:22 AM
இணையப்பூங்கா (http://inayapoonga.com/)


http://inayapoonga.com/

இணையப்பூங்கா என்னும் பெயரில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அறிவுக் கருவூலங்களை வெளிப்படுத்தும் இணைதயளம் 2011 சனவரி 2 ஆம் நாள் பொன்மாலைப் பொழுதிலிருந்து செயல்பட உள்ளது.

இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் திரைப்பாடல்கள் வழியாகவும், படைப்பு நூல்கள் வழியாகவும், மேடைப்பேச்சுகள் வழியாகவும் தமிழுக்குச் சிறப்பு சேர்த்தவர் கவிப்பேரரசர் வைரமுத்து ஆவார். இவரின் பன்முகப் பணிகளை இனி உலகத் தமிழர்கள் தடையில்லாமல் இணையம் வழியாக அறிந்து மகிழலாம்.

கவிப்பேரரசர் அவர்கள் தமிழகம் முழுவதும் இணையதளச் சிறப்புகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட உள்ளார்கள். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தமிழ் இணைய அறிமுகத் தேவையை வலியுறுத்தி இனிப் பேசவும் எழுதவும் உள்ளார்கள்.

தமிழ் இணையத்துறையில் ஆக்கப்பணிகளுக்கு உதவ முன்வந்துள்ள கவிப்பேரரசர் அவர்களை வணங்கி வரவேற்பதுடன், அவர்கள் புகழ்பரப்பும் இணையதளம் உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தமிழ்மணம் பரப்பவேண்டும் என்ற வேட்கையையும் வெளிப்படுத்துகின்றேன்.

இணையப் பூங்கா இணையதளம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ' ஆயிரம் பாடல்கள் ' புத்தக வெளியீட்டு விழா(02.01.2011,சென்னை) நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்போடு தன் பணியினைத் தொடங்குகின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆயிரம்பாடல்கள் நூலினை வெளியிட திரு.ரஜினிகாந்த், திரு.கமல்ஹாசன் இருவரும் முதல் படியினைப் பெற்றுக்கொள்கின்றனர். தமிழ்த்திரையுலகமே கலந்து கொள்ளும் திரை இலக்கியத் திருவிழாவாகச் சென்னையில் இது நடைபெற உள்ளது. உலகத் தமிழர்களின் இல்லங்களுக்கு இணையப்பூங்கா நேரலையாக நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

இணையப்பூங்காவின் மற்ற உட்பிரிவுகளான கவிஞரின் பக்கம், கண்மணிப்பூங்கா, திரைப்பூங்கா, (வெள்ளித்திரை-சின்னத்திரை), இசைப்பூங்கா, அரசியல் பூங்கா, இலக்கியப்பூங்கா, கவிதைப் பூங்கா, அங்காடிப் பூங்கா, கட்டுரைப் பூங்கா,சமுதாயப் பூங்கா, போன்றவை தைத் திருநாளிலிருந்து செயல்படும்.
..தட்ஸ் தமிழ் 29.12.2010

nambi
04-01-2011, 05:33 AM
புதுடெல்லி : நீலகிரி மாவட்டம் கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், காமராஜர் நகர் மக்கள் பல ஆண்டுகளாக சென்று வந்த பாதையை கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் அடைத்தது. இதை எதிர்த்து கோடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சர்மா, அனில்தவே ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, ‘’கோடநாடு எஸ்டேட் பங்களாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குகிறார். இதனால் எஸ்டேட் நுழைவு வாயிலை எஸ்டேட் நிர்வாகம் அடைத்து வைத்துள்ளது,

இதனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி இந்த பாதையை திறந்த விட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை நிர்வாகம் அமல்படுத்த மறுத்துள்ளது, எனவே பொதுமக்கள் எஸ்டேட் அமைந்துள்ள பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அதை கேட்ட நீதிபதிகள், ‘‘பொதுமக்கள் எஸ்டேட் நுழைவு வாயிலை பயன்படுத்த ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது, இதை தற்போது உறுதி செய்கிறோம், பொதுமக்கள் தொடர்ந்து இந்த பாதையை பயன்படுத்தலாம், இதற்கு நிர்வாகம் தடை செய்யக் கூடாது, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் மாதம் தள்ளிவைக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.
....தினகரன் 04.1.11

nambi
06-01-2011, 03:37 AM
கொலையாளிகள் 2 பேர் கைது: எஸ்.ஐ. மகன் உள்பட 3 பேரிடம் விசாரணை


கோவை, ஜன.6-

வாலிபரை கடத்தி கொன்று புதைத்த வழக்கில் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் மாயம்

கோவையை அடுத்த பி.என்.புதூர் ராஜேந்திர பிரசாத் 2-வது வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 19). இவர் கோவை கணபதியில் ஒரு தனியார் கார் கம்பெனியில் கார் டிங்கரிங், மற்றும் பாலீஷ் போடும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி பி.என்.புதூர் பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சதீஷ்குமார் நண்பர்களுடன் கலந்து கொண்டார்.

பின்னர் மறுநாள் (1-ந்தேதி) காலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சதீஷ்குமாரின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சதீஷ்குமார் காணாமல் போனதிலிருந்து அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அவருடைய செல்போன் எண்களுக்கு யார்-யார் தொடர்பு கொண்டார்கள் என்று போலீசார் விசாரித்தனர். சுமார் 200 செல்போன் எண்களை ஆய்வு செய்து சதீஷ்குமார் யார்-யாருடன் பேசினார் என்ற விவரங்களை சேகரித்தனர்.

புத்தாண்டு தகராறில் கொலை

அதன்பேரில் கார்த்திகேயன் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டு மருதமலை ரோட்டில் உள்ள பி.என்.புதூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. உடலை புதைத்த இடத்தையும் கார்த்திகேயன் அடையாளம் காட்டினார்.

இதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டது குறித்து கார்த்திகேயன் போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-

கோவை பி.என்.புதூர் பகுதியில் வடவள்ளி செல்லும் சாலைக்கு ஒரு புறத்தில் சீரநாயக்கன்பாளையம் பகுதியும், மற்றொரு புறத்தில் கோகுலம் காலனியும் உள்ளது. கடந்த 31-ந் தேதி இரவு சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள பஸ் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினோம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ்குமார் மீது எனது நண்பர் இளம்பரிதி வீசிய கேக் பட்டது. இதை சதீஷ்குமார் தட்டி கேட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்து சென்ற அவர், சிறிது நேரத்தில் அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்களை அழைத்து வந்தார். இதில் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக போலீஸ் ஜீப் வந்ததால் நாங்கள் கலைந்து சென்று விட்டோம்.

பழி வாங்க திட்டம்

இதற்கு பழி வாங்குவதற்காக இளம்பரிதி தலைமையில் நாங்கள் திட்டம் போட்டோம். பிரச்சினைக்கு காரணமான சதீஷ்குமார் மீது எங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் முதல் நாள் இரவில் நடந்த தகராறு பற்றி மறுநாள் 1-ந் தேதி காலை இரண்டு பகுதியை சேர்ந்தவர்களும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் போட்டு பேசினார்கள்.

இந்த நிலையில் சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் கோகுலம் காலனிக்குள் தனியாக வந்தார். அப்போது நான், இளம்பரிதி, ஹக்கீம், செந்தில்குமார், விக்னேஷ்வரன் ஆகியோர் சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து தகராறு செய்தோம். இதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். உடனே நாங்கள் `எங்கள் மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் திருடி விட்டார். அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்து செல்கிறோம் என்று கூறினோம். அதை பொதுமக்களும் உண்மை என்று நம்பி விட்டனர்.

சயனைடு கொடுத்து கொலை

உடனே சதீஷ்குமாரை நாங்கள் செந்தில்குமாருக்கு சொந்தமான காரில் தூக்கிப் போட்டு அங்கிருந்து கடத்தினோம். செல்லும் போதே நாங்கள் கணேசமூர்த்திக்கு தகவல் கொடுத்து அவரை சயனைடு எடுத்து வருமாறு கூறினோம். நாங்கள் காரில் வைத்து சதீஷ்குமாரை தாக்கினோம். பின்னர் காரை ஒரு இடத்தில் நிறுத்தி கணேசமூர்த்தி கொண்டு வந்த சயனைடை தண்ணீரில் கலந்து வலுக்கட்டாயமாக சதீஷ்குமாரின் வாயில் ஊற்றினோம். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். அதன் பின்னர் சதீஷ்குமாரின் பிணத்தை காரில் வைத்துக் கொண்டு 3 மணி நேரம் சுற்றினோம்.

சதீஷ்குமாரின் உடலை என்ன செய்வது என்று யோசித்தோம். பின்னர் பி.என்.புதூர் சுடுகாட்டில் புதைக்கலாம் என்று தீர்மானித்து அங்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த வெட்டியானை மது வாங்கி தருகிறோம் என்று கூறி வெளியே அழைத்து வந்தோம்.

அவருக்கு மது கொடுத்து திரும்ப அழைத்து வருவதற்குள் மற்றவர்கள் சுடுகாட்டுக்குள் உள்ளே புகுந்து 21/2 அடி ஆழத்துக்கு குழி தோண்டி சதீஷ்குமார் உடலை புதைத்தோம். புதைப்பதற்கு முன்பாக அவருடைய ஆடைகளை கழற்றி விட்டோம். அதன் பின்னர் நாங்கள் அனைவரும் தப்பி சென்று விட்டோம். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு கார்த்திகேயன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கார்த்திகேயன் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளிகள் ஹக்கீம் (21), விக்னேஷ்வரன் (23) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இளம் பரிதி (25), கணேசமூர்த்தி (24), செந்தில்குமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளம் பரிதி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஆவார். இளம்பரிதி தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இளம்பரிதியை (25) போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். அவரை ரகசியஇடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


....தினத்தந்தி 06.1.11

nambi
06-01-2011, 11:15 AM
புதுடெல்லி: ஆந்திராவை பிரிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை, டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. தனி தெலங்கானா உருவாக்கலாம் என்பது உள்பட பல பரிந்துரைகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்தை அறிந்து அறிக்கை தர ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிட்டியின் அறிக்கை கடந்த 30 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து கட்சிகளுடன் 6ம் தேதி ஆலோசனை நடத்தி அறிக்கை வெளியிடப்படும் என சிதம்பரம் அறிவித்தார். ஆனால், அவரது அழைப்பை டிஆர்எஸ், பா.ஜ., தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கவில்லை.

இந்நிலையில், டெல்லியில் இன்று ஆந்திர மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டார். பின்னர் பேசிய சிதம்பரம், "அறிக்கையை அரசியல் கட்சிகள் முழுமையாக படித்து, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன்பிறகு இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் வருமாறு:

1.ஆந்திர மாநிலத்தை பிரிக்காமல் தற்போதுள்ள நிலையை தொடர்வது வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

2. தெலங்கானா பகுதிக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கலாம்.

3.ஐதராபாத்தை தலைநகராக கொண்டு தனி தெலங்கானா மாநிலம் உருவாக்கலாம்.

4.தெலங்கானா பகுதியை தனி மாநிலமாகவும், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமஆந்திராவை தனி மாநிலமாகவும் பிரிக்கலாம்.

5. ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்கலாம்.

6.பிரிக்கப்படும் மாநிலங்களுக்கு புதிதாக தலைநகர் உருவாக்கலாம்.
தெலங்கானாவையும் ராயலசீமாவையும் ஒன்றாக சேர்த்து ராயல தெலங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கலாம். அப்படி செய்தால் ஐதராபாத்தை ராயலதெலங்கானாவுடன் இணைக்கலாம்.

ஆகிய 6 பரிந்துரைகளை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அளித்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை வெளியாவதைத் தொடர்ந்து ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உஸ்மானியா பல்கலைக்கழகம், ஆந்திர சட்டசபை வளாகம், தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎப் வீரர்கள் 18 கம்பெனியினர் ஐதராபாத் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.


...தினகரன் 6.1.11

nambi
06-01-2011, 11:44 AM
ஐதராபாத் : ஆந்திர தாதா சூரியை அவரது கூட்டாளி ஒருவரே நிலத்தகராறில் சுட்டுக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆந்திராவில் மத்தெலசெருவு பகுதியில் பிரபல தாதாவாக இருந்தவர் சூரி என்ற சூரிய நாராயண ரெட்டி(39). காங்கிரசை சேர்ந்த இவர், நேற்று முன் தினம் மாலை காரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் வந்து கொண்டிருக்கும் போது, சுட்டுக் கொல்லப்பட்டார்.

சூரிக்கும், தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதாலா ரவி என்பவருக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்தது. பரிதாலாவும் அப்பகுதியில் தாதாவாக திகழ்ந்தவர். பரிதாலாவை கொல்வதற்காக கடந்த 1997ம் ஆண்டில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் குண்டு வைத்து வெடிக்கச் செய்தார் சூரி. இந்த சம்பவத்தில் பரிதாலா தப்பி விட்டார். ஆனால், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் சூரி சிறைக்கு சென்றார்.

சிறையில் அவர் இருந்த போது 2005ல் அவரது ஆட்கள், பரிதாலாவை கொலை செய்தனர். 13 ஆண்டு சிறைவாசத்திற்கு பின், 2009ல்தான் சூரி வெளியே வந்தார். இந்த இரு தாதாக்களின் மோதல்களை வைத்து, நடிகர்கள் விவேக் ஓபராய், சூர்யா ஆகியோர் நடிக்க ரத்தசரித்திரம் என்ற சினிமாவே எடுக்கப்பட்டது. பிரபல தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா இதை தயாரித்தார். இந்நிலையில், சூரியை பரிதாலாவின் ஆட்களே கொன்றிருக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், சூரியின் கூட்டாளியான பானுகிரண் அவருடன் காரில் வந்திருக்கிறார். அவர்தான் சத்தம் வராத துப்பாக்கியால் சூரியை சுட்டுக் கொன்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். காரை ஓட்டி வந்த டிரைவர் மது என்ற மதுமோகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சூரிக்கும், பானுகிரணுக்கும் இடையே விஜயவாடாவில் உள்ள ஒரு நிலத்தை பிரிப்பதில் தகராறு இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவர்தான் சூரியை கொன்றிக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளாக தாதாவாக சுற்றி வந்த சூரி கொல்லப்பட்டதால் ஆந்திரவில் பரபரப்பு நிலவுகிறது.

சூர்யா, ஓபராய் அதிர்ச்சி ‘ரத்த சரித்திரம்’ படத்தில் பரிதாலா ரவி வேடத்தில் விவேக் ஓபராயும், சூரி வேடத்தில் சூர்யாவும் நடித்திருந்தனர். சூரி கொலை குறித்து சூர்யாவிடம் தெலுங்கு பத்திரிகை கருத்து கேட்ட போது, ‘இது எதிர்பாராத சம்பவம். அதிர்ச்சியாக உள்ளது. இது பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை’ என்றார். நடிகர் விவேக் ஓபராய் கூறுகையில், ‘இச்சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது’ என்றார்.
...தினகரன் 5.1.11

nambi
07-01-2011, 06:08 AM
சென்னை, ஜன.6: ஏழை எளியவர்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள இருதய இயல் துறை, இருதய உள் ஊடுருவி ஆய்வகம், ஊடுகதிர் கருவி, உணவுக் குழாய், இரைப்பை நோய்கள் மேம்படுத்தப்பட்ட சிறப்பு மையத்தினை மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இருதய இயல் துறைக்கு, ரூ. 3 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் “இருதய உள் ஊடுருவி ஆய்வகம்”, எனப்படும் கேத் லேப் என்ற நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அதேபோல், ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில், “பர்னார்டு கதிரியக்க நிலையத்தின் டிஜிட்டல் ஊடுகதிர்” மற்றும் “உணவுக் குழாய் இரைப்பை நோய்களுக்கான மேம்படுத்தப்பட்ட சிறப்பு மையம்” ஆகியவையும், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

1664-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட, சென்னை அரசுப் பொது மருத்துவமனை இன்று இந்தியாவிலேயே மிகப்பெரியதாக, மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நம்பிக்கையோடு வரும் மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஆரம்பக் காலத்தில் இந்த மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இம்மருத்துவமனை தற்போதுள்ள இந்த இடத்திற்கு மாற்றப்பட்டது.

மருத்துவத் துறையிலும் அறுவை சிகிச்சைத் துறையிலும், அனைத்துச் சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகளிலும் பயிற்சியளித்து, இக்கல்லூரி சிறந்து விளங்கும் மையமாக வளர்ந்துள்ளது. தற்போது, இம்மருத்துவக் கல்லூரி, மருத்துவ இளங்கலைப் பட்டப்படிப்பு, மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் மருந்தியியல், மருந்தாக்கியியல், செவிலிப் பணியியல் ஆகியவற்றில் அதிசிறப்பு மருத்துவப் படிப்புகளைக் கொண்டு, நாட்டிலேயே முதன்மை வாய்ந்த கல்லூரியாக திகழ்கிறது. சென்னை அரசு பொது மருத்துவனையில், இதயம் மற்றும் மார்புக்கூடு அறுவை சிகிச்சை, நரம்பியல் மற்றும் நரம்பு தொடர்பான அறுவை சிகிச்சை, மூளை மற்றும் தண்டுவடத்தில் ஏற்படுகிற பிரச்சனைகளை சரிசெய்வதற்கான சிறப்பு சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை போன்ற பல்வேறு உயர் தொழில் நுட்பம் அடங்கிய சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

எனக்கும் இந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மிசா காலத்தில் நான் ஓராண்டு காலம் இதன் அருகில் இருந்த மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது எனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்போடு என்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இப்போதும் பாதுகாப்பிற்கு காவல்துறை அலுவலர்கள் வருகிறார்கள். மிசாவின் போது ஏற்பட்ட வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர். ரங்கபாஷ்யம் உங்களுக்கு அப்பன்டீஸ் நோய் தாக்கியுள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று குறிப்பிட்டார். ஆனால் அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகளோ, முறையான அனுமதியை பெற்றுத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தடுத்தார்கள். ஆனால் டாக்டர். ரங்கபாஷ்யம் அனுமதியெல்லாம் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள் இவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று கூறி, எனக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்று வலியை சரி செய்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் சுகாதாரத்துறை மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், இந்தியாவிலேயே, ஏன் உலகளவில் போட்டிப்போடக் கூடிய அளவில், சுகாதாரத்துறையில் ஏழை எளியவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

...தினமணி, தினத்தந்தி, தினகரன்...06.1.11

nambi
07-01-2011, 06:19 AM
கொலைவெறிபிடித்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை


திருச்சி, ஜன.7-

திருச்சியில் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி-மகளை படுகொலை செய்த கணவன் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 38). கொத்தனார். இவருக்கும், திருச்சி உறைïர் புதுகாலனியை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வைஷ்ணவி(10), ராஜ்குமார்(8), ஜெயஸ்ரீ(5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

ஆறுமுகம் உறைïர் பாண்டமங்கலத்தில் உள்ள நாடாமில்லில் குடிசை போட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார். சில நாட்களாக மனைவி ராஜேஸ்வரியின் நடத்தை மீது ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

மனைவி மீது சந்தேகம்

நேற்று முன்தினம் மாலையில் ஆறுமுகம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது, ராஜேஸ்வரி ஒருவரிடம் கோவில் பிரசாதம் வாங்கி வந்தார். அதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பிரசாதத்தை யாரிடம் வாங்கினாய்? என்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

தாய், தந்தை இடையே சண்டை நடந்ததை கண்ட குழந்தைகள் ஓடிச்சென்று பாட்டியிடம் சொல்லி உள்ளனர். இதையடுத்து ராஜேஸ்வரியின் தாய் சாவித்திரி அங்கு சென்று இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு, குழந்தைகள் ராஜ்குமார், ஜெயஸ்ரீ ஆகியோரை தன்னுடன் படுக்க அழைத்து சென்றுவிட்டார்.

அம்மிகல்லை போட்டு கொலை

மகள் வைஷ்ணவி மட்டும் தாயுடன் படுத்து இருந்தார். வைஷ்ணவி 5-ம் வகுப்பு படித்து வந்தார். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுமுகம் உச்சகட்ட ஆத்திரம் அடைந்து உள்ளார்.

அப்போது மனைவி ராஜேஸ்வரியிடம் நாம் 3 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி உள்ளார். இதற்கு ராஜேஸ்வரி சம்மதிக்கவில்லை. இதனால் ஆறுமுகம் திடீரென அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் போட்டார். இதில் ராஜேஸ்வரி அதே இடத்தில் அலறி துடித்து இறந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

தாயின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த வைஷ்ணவி எழ முயன்றாள். அப்போது மகள் என்றும் பாராமல் ஆறுமுகம் வைஷ்ணவியின் தலையிலும் அதே அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் அந்த இடத்திலேயே மகள் வைஷ்ணவியும் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.

மனைவி-மகள் ரத்தவெள்ளத்தில் பிணமாகி கிடந்ததை கண்ட ஆறுமுகம் மனமுடைந்தார். உடனே வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை வரை பக்கத்து வீட்டுக்காரர்கள் யாருக்கும் 3 பேர் பலியான விஷயம் தெரியாது.

மகன் அதிர்ச்சி

பாட்டி வீட்டில் தூங்கிய ஆறுமுகத்தின் மகன் ராஜ்குமார் தனது தாயை பார்க்க நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டுக்கு வந்தான். அங்கே தாய் தந்தை மற்றும் அக்கா ஆகிய 3 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனடியாக இதுபற்றி பாட்டியிடம் சொல்ல ஓடினான். அதற்குள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொலை நடந்த வீட்டின் முன்பு திரண்டனர்.

போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-

நோட்டில் எழுதிய கடிதம் சிக்கியது (பாக்ஸ்)

கொலை நடந்த ஆறுமுகத்தின் வீட்டில் இருந்து போலீசார் ஒரு நோட்டை எடுத்து உள்ளனர். அது அவர்களுடைய மகள் வைஷ்ணவியின் பள்ளிக்கூட நோட்டு. அதில், "நான், எனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளோம். இப்படிக்கு ஆறுமுகம்'' என்று எழுதப்பட்டு இருந்தது.

-

பாட்டி வீட்டுக்கு சென்றதால் உயிர் தப்பிய அண்ணன் -தங்கை (பாக்ஸ்)

கொலை செய்யப்பட்ட வைஷ்ணவி எப்போதும் தாயை விட்டு பிரியாமல் இருப்பார். எங்கு சென்றாலும் தாயுடன் தான் சென்று வருவார். ஆனால் ராஜ்குமார் அவன் தங்கை ஜெயஸ்ரீ ஆகியோர் பாட்டியுடன் தூங்க சென்றதால் தந்தையின் கொலை வெறியில் இருந்து உயிர் தப்பினார்கள். ஆறுமுகத்தின் குடிப்பழக்கமும், சந்தேகமும் மனைவி-மகளை கொன்றது மட்டுமில்லாமல், மற்ற 2 குழந்தைகளையும் அனாதையாக்கிவிட்டது.

...தினத்தந்தி 07.1.11

nambi
07-01-2011, 10:24 PM
லட்சக்கணக்கான பணம் தப்பியது


சென்னை, ஜன.8-

சென்னை திருவல்லிக்கேணியில் வங்கி ஏ.டி.எம். மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதில், லட்சக்கணக்கான பணம் தப்பியது.

ஏ.டி.எம். மிஷின் உடைப்பு

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போலீஸ் நிலையத்துக்கு எதிரே சற்று தூரத்தில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இரவு காவலாளி இல்லை. ஆனால், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியளவில் இந்த ஏ.டி.எம். மையத்துக்கு பொதுமக்கள் பணம் எடுக்க வந்தபோது பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஏ.டி.எம். மையத்தின் கம்ப்ïட்டர் மிஷின் உடைக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தது. உடனே இதுபற்றி பொதுமக்கள் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக உதவி கமிஷனர் தமிழ்செல்வன் மேற்பார்வையில், போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பணம் தப்பியது

கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து ஏ.டி.எம். மிஷினை கடப்பாரையால் உடைத்துள்ளனர். பின்னர் வெல்டிங் மூலம் மிஷினை உடைத்து பணப்பெட்டியையும் திறக்க முயற்சி செய்துள்ளனர். எவ்வளவோ முயற்சித்தும் கொள்ளையர்களால் பணப்பெட்டியை திறக்க முடியவில்லை. அதன்பிறகு கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். பணப்பெட்டியை திறந்திருந்தால் பல லட்சம் பணம் கொள்ளை போயிருக்கும்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகியுள்ளது. அதை வைத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக வங்கி ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகளை காவல் பணிக்கு நியமிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஏற்கனவே பலமுறை அறிவுரை வழங்கியுள்ளார். போலீசாரின் அறிவுரைப்படி இந்த ஏ.டி.எம். மையத்துக்கு காவலாளிகள் நியமிக்கப்படாதது துரதிருஷ்டவசமானது.

ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று திறந்து கிடந்ததாகவும், நல்லவேளையாக அதில் பணம் கொள்ளை போகவில்லை என்பதும் ஆறுதலான செய்தியாகும்.

வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்றும், காவல் பணியில் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும் போலீசார் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

....தினத்தந்தி 08.1.11

nambi
09-01-2011, 12:06 AM
சென்னை, ஜன. 8: பொங்கல் பண்டிகையை ஒட்டி, கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என அந்த மாநில முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

"கேரளத்தில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி, பத்தனம்திட்டா, வயனாடு உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டும் வகையில் ஆண்டுதோறும் அந்தப் பண்டிகையன்று குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என பாலக்காட்டில் உள்ள கேரள மாநில தமிழ் பாதுகாப்புக் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகையை ஒட்டி, அந்த மாநில மக்கள் அதிகம் வாழும் நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய தமிழக மாவட்டங்களில் ஆண்டுதோறும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று, கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என தமிழ் பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்தவர்களின் கோரிக்கையை பரிசீலித்து சாதகமான முடிவை அறிவிக்க வேண்டும்' என்று தனது கடிதத்தில் முதல்வர் கருணாநிதி அச்சுதானந்தனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
....தினமணி 9.1.11

nambi
10-01-2011, 04:00 AM
கொழும்பு, ஜன.10-

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசுக்கும், தமிழர் கட்சிக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சிறப்பு குழுக்கள்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவரவர் வீடுகளில் குடியமர்த்தும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக, அதிபர் ராஜபக்சேவுடன் முக்கிய தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடந்த ஆண்டு இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், மேற்கொண்டு பேச்சு நடத்த இருதரப்பிலும் சிறப்பு குழுக்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இலங்கை அரசுத் தரப்பில், வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ், நல்லாட்சி மற்றும் உள்கட்டமைப்பு மந்திரி ரத்னஸ்ரீ விக்ரமநாயகே, நீர்ப்பாசனம் மற்றும் நீர் நிர்வாகத்துறை மந்திரி நிமல் சிறீபாலா டி சில்வா ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டணி தரப்பில், அதன் தலைவர் சம்பந்தன், எம்.பி.க்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கனக ஈஸ்வரன் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இன்று பேச்சுவார்த்தை

இந்நிலையில், இலங்கை அரசு-தமிழ் தேசிய கூட்டணி சிறப்பு குழுக்களுக்கு இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் பற்றி ஆராயப்படுகிறது.

இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணி செய்தித்தொடர்பாளர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியதாவது:-

இந்த ஆண்டில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், வருங்கால பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளம் அமைக்க விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


...தினத்தந்தி 10.1.11

nambi
11-01-2011, 01:11 AM
ஹூஸ்டன்: இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டான கபடி விளையாட்டினை அமெரிக்க மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி அதனை பிரபலபடுத்தி வருகிறார் இந்தியர் ஒருவர். அஜெய்குமார் நாயார் என்ற ஆசிரியர் தென்ஆப்ரிக்காவில் ஆன்டிரியோடிக் நகரில் ஆங்கில இலக்கிய பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது அவரிடம் படித்து வரும் அமெரிக்க மாணவர்களுக்கு கபடி விளையாட்டினை கற்று கொடுத்து வந்தார். தென்ஆப்ரிக்காவி்ல் ஜோஹன்ஸ் நகரில் உள்ள மத்திய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆர்வமுடன் கபடியினை கற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க சென்ற இவர் அங்கும் கபடி விளையாட்டு மட்டுமின்றி, உணவு கலாச்சார பற்றியும் மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், தென்ஆப்பிரிக்காவில் அமெரிக்க மாணவர்களிடம் கபடி கற்று கொடுத்தது நல்ல அனுபவமாக இருந்தது. அமெரிக்காவில் ஜனவரி 28-ம் தேதி வரை இருப்பேன், பிறகு இந்தியா திரும்புகிறேன். *கெவின்கான்னூர் என்பவர் தான் எனது குரு என்றும், இந்திய பண்பாடு மற்றும் உணவு வகைகள் எனக்கு ஆச்சர்யத்தினை தருகி்ன்றன. இவ்வாறு அவர் கூறினார்.

.....தினமலர் 11.1.11

nambi
11-01-2011, 01:15 AM
மோசமான வானிலையால் விபத்து


டெக்ரான், ஜன.11-

ஈரான் நாட்டில் 105 பயணிகளுடன் சென்ற விமானம் தரையில் விழுந்ததில் 77 பேர் பலியானார்கள். 26 பேர் காயம் அடைந்தனர். 2 பேரை காணவில்லை.

கிராமத்தில் விழுந்தது

ஈரான் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று 94 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகள் என மொத்தம் 105 பேருடன் டெக்ரான் நகரில் இருந்து புறப்பட்டது. வடக்கு அஜர்பைஜான் மாநிலத்தில் உள்ள உருமியா நகருக்கு செல்வதற்காக இந்த விமானம் கிளம்பியது. இது குறித்த நேரத்தில் புறப்படாமல் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இரவு 7.45 மணிக்கு உருமியா நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் விமானம் விழுந்தது.

இந்த விமானம் 3 துண்டுகளாக உடைந்து கிடந்ததை டெலிவிஷன் படங்கள் காட்டின. விமானத்தின் 3 துண்டுகளின் மீதும் பனி படர்ந்து மூடி இருந்தது.

77 பேர் பலி

இதில் 77 பேர் பலியானார்கள். 26 பேர் காயம் அடைந்தனர். 2 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகிறார்கள். காயம் அடைந்த 26 பேரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

பலியான 70 பேரின் உடல்களையும் கிராமவாசிகளும் மீட்புக்குழுவினரும் மீட்டனர். அவை உருமியா நகரில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரி சவக்கிடங்குகளில் வைக்கப்பட்டு உள்ளன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து அந்த மாநில கவர்னர் ஜெனரல் வாஹித் ஜலால்சதா கூறியதாவது:-

தொடர்பு துண்டிப்பு

விமானநிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ராடரில் இருந்து விமானம் மறைவதற்கு முன்பு அந்த விமானத்தின் விமானிக்கு விமானநிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பிறகுதான் அது ஒரு கிராமத்தில் விழுந்தது. விமானத்தில் பயணம் செய்த சிலர் விமானத்தில் இருந்து எழுந்து தாங்களாக எழுந்து வந்தனர். பல பயணிகளை கிராமவாசிகள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு கவர்னர் ஜெனரல் கூறினார்.

தரை இறக்க முடியவில்லை

இந்த விபத்து பற்றி போக்குவரத்து அமைச்சரக அதிகாரி மஜீத் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக உருமியா விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க முடியவில்லை. அதனால் விமானி விமானத்தை டெக்ரான் நகருக்கு திருப்ப தீர்மானித்தார் என்று தெரிவித்தார்.

விமானத்தில் இருந்த 2 கறுப்பு பெட்டிகளில் ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. அதை வைத்து விபத்து நடந்தது எப்படி என்பதை கண்டுபிடித்து விடமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
...தினத்தந்தி 11.1.11

nambi
11-01-2011, 01:17 AM
சென்னை, ஜன. 10: சென்னை கோட்டூர்புரத்தில் திரைப்பட துணை நடிகை ஷோபனா (32) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த விவரம்: கோட்டூர்புரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம். இவரது மகள் ஷோபனா.

இவர் "சில்லுன்னு ஒரு காதல்', "நகரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள "இளைஞன்' படத்திலும் ஷோபனா நடித்துள்ளார்.

இதுதவிர தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை தொடர்களிலும் இவர் நடித்து வந்தார்.

உடல்நல பாதிப்பு காரணமாக சில நாள்களாக படப்பிடிப்புக்கு செல்லாமல் இவர் வீட்டில் ஓய்வு எடுத்துவந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை ஷோபனாவை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவரது தாயார் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.

சிறிது நேரத்தில் திரும்பிவந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் ஷோபனா இறந்து கிடந்தாராம்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த கோட்டூர்புரம் போலீஸôர், ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
..தினமணி 11.1.11

nambi
11-01-2011, 01:22 AM
வாரப்பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளருக்கு கோர்ட்டு சம்மன்


சென்னை, ஜன.11-

முதல்-அமைச்சர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழங்கில் வாரப்பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளருக்கு சம்மன் அனுப்ப சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முதல்-அமைச்சர் கருணாநிதி சார்பில் சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல் ஷாஜகான் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சந்தேகம்

கடந்த 21.7.10 அன்று வெளிவந்த ஜுனியர் விகடன் பத்திரிகையில், `உடைந்தது தண்டவாளம், உடைகிறதா வண்டவாளம்?' என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.

`ஈழப் பிரச்சினையால் கோவை செம்மொழி மாநாட்டுக்கு எதிராக எழுந்த ஆவேசத்தை அடக்குவதற்காக, விழுப்புரம் அருகே சித்தணியில் ரெயில் தண்டவாளம் திட்டமிட்டு தகர்க்கப்பட்டதா? என்ற கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்காதது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது' என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

நல்லெண்ணம் மாற்றம்

இது, முதல்-அமைச்சர் கருணாநிதி மீது மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் செய்தியாகும். அரசியல், பொதுவாழ்க்கையில் அவருக்கு இருக்கும் நற்பெயரை இந்த செய்தி கெடுத்துவிட்டது. அவர் மீது பற்று வைத்திருந்த பலர், இந்த செய்தியை படித்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி மீதான நல்லெண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

எனவே உண்மைக்கு புறம்பாகவும், அடிப்படை ஆதாரம் இல்லாமலும் வெளியிடப்பட்ட அந்த செய்தியால் எனக்கு அவதூறு ஏற்பட்டு இருப்பதால், அந்த செய்தியை எழுதிய இரா.சரவணன், ஆசிரியர் கே.அசோகன், வெளியீட்டாளர் பி.சீனிவாசன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 499, 500, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆஜராக சம்மன்

சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பி.தேவதாஸ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

....தினத்தந்தி 11.1.11

nambi
12-01-2011, 01:45 AM
புதுதில்லி, ஜன. 11: காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்க உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதி நீர் நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தில்லியில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சிரஞ்சீவி கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள், தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த பால் நாகாரெட்டி, பிரசன்ன குமார் ஆகியோர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே கன மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர விவசாயிகளை கிருஷ்ணா நதி நீர் நடுவர்மன்றமும் தண்டித்துவிட்டது என்று குற்றம்சாட்டி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஜெகன் மோகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரதத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் மனைவி லட்சுமி பார்வதியும் கலந்துகொண்டார்.

÷உண்ணாவிரத்தின்போது செய்தியாளர்களுக்கு ஜெகன்மோகன் பேட்டியளித்து கூறியதாவது:

எனது ஆதரவாளர்களை ராஜிநாமா செய்யச் சொன்னால் ஆந்திரத்தில் காங்கிரஸ் அரசு உடனே கவிழ்ந்துவிடும். ஆனால் அதைச் செய்ய விரும்பவில்லை. காங்கிரஸ் அரசுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறேன், நெருக்கடி கொடுக்க நான் விரும்பவில்லை என்றார் அவர்.

காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க நினைத்தால் அதை நான் என்றோ செய்திருப்பேன். நான் ஜென்டில்மேன். அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதே செய்து கொண்டிருக்கிறேன் என்றார் அவர்.

காங்கிரஸிலேயே தொடர்ந்து இருக்குமாறு எனது ஆதரவாளர்களை நான்தான் கேட்டுக்கொண்டேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் நினைத்தால் உடனே செய்யட்டும் என்றார் ஜெகன். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எனது ஆதரவாளர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டனர். அவர்கள் தொடர்ந்து காங்கிரஸில் இருப்பதற்கு ஒரே காரணம், நான் கேட்டுக்கொண்டேன் என்பதற்காகத்தான் என்றார் அவர்.

வரும் 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் எனது கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடமாட்டார்கள் என்றார்.

யாரையும் விமர்சனம் செய்வதற்காக நான் இங்கு உண்ணாவிரதம் இருக்கவில்லை.

கிருஷ்ணா நதி நீர் நடுவர்மன்றம் கர்நாடகத்துக்குச் சாதகமாக உள்ளது. மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தீர்ப்பும் கர்நாடகத்துக்கு சாதகமாக உள்ளது. இந்த தீர்ப்பால் ஆந்திர விவசாயிகளின் உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சியினர் சொல்வதுபோல் பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்கக் கோரி கடந்த மாதம் விஜயவாடாவில் 48 நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் ஜெகன்.

இதற்கிடையே, ஜெகன் மோகன் சொல்வதைப் போல் ஆந்திர பிரதேச அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார். ஜெகன்மோகன் தயவால்தான் ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சி நீடித்திருக்கிறது என்று கூறுவது அவரது கற்பனை என்றார் திவாரி. ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார்.

....தினமணி 12.1.11

nambi
12-01-2011, 01:58 AM
கொழும்பு: இலங்கையின் சுற்றுலா தொழில் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளில் இந்தியர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அந்நாட்டு வருமானத்தின் பெரும் பங்கை சுற்றுலா துறையே வழங்கி வந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழர் பிரச்னையால் இருந்துவந்த சூழ்நிலை இந்தத் துறையை தொய்வு அடையச் செய்திருந்தது. 2009-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப்போர் முடிவுக்குவந்த பின் இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். சுற்றுலா வர்த்தகத்திலிருந்து இலங்கைக்கு கிட்டும் வருமானத்தின் பெரும்பகுதி இந்தியப் பயணிகளிடமிருந்தே வருகிறது. 2010-ம் ஆண்டு இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6,54,476. இதில், 1,26,882 பேர் இந்தியர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். இதில் 83,634 பேர் இந்தியர்கள்; 81,594 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். 2009-ம் ஆண்டைவிட 2010-ம் ஆண்டு 46.1 சதவீதம் அதிக பயணிகள் இலங்கை வந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரவு சுற்றுலா துறையின் தேவைகள் அதிகரித்துள்ளதால் அறை வாடகை, உணவு விடுதிகளில் விலை முதலியவையும் அதிகரித்துள்ளன.
....தினமலர் 12.1.11

nambi
12-01-2011, 11:44 AM
சென்னை, ஜன.13: பொங்கலுக்கு கேரளத்தின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்குமாறு கேரளத்தை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, கேரள அரசு பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.
.......தினமணி 12.1.11

nambi
12-01-2011, 03:57 PM
மதுரை : மதுரையில் பெண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இருவரின் தற்கொலை போலீஸ் துறையை மட்டுமல்லாது, அனைத்து துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க, பெண் போலீசாருக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து பாதிக்கப்பட்டோரின் மனநலத்தை காப்பது போலீஸ் துறை முக்கிய கடமை.

மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 - 40 வயது பெண்கள் தீக்குளித்தல், தூக்கு, விஷம் சாப்பிட்டு தற்கொலை முடிவை அதிகமாக தேடியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 354 பேர். 2009ம் ஆண்டு 399 பேர். இதில் செல்லூரில் மட்டும் 68 பேர். 2010ல் செல்லூரில் 46 பெண்கள் தற்கொலை முடிவை தேடியுள்ளனர். விவாகரத்து, கணவருடன் தகராறு, பொருளாதார பின்னடைவு, குடும்ப பிரச்னைகளால் தான் பெரும்பாலும் பெண்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர். இப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாவர்கள் படிக்காதவர்கவே அதிகம் இருந்தனர். ஆனால் சமீபத்தில் படித்த, பட்டம் பெற்ற, அரசு வேலைகளில் இருக்கும் பெண்களும் இந்த விபரீத முடிவை தேடுவது அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.

மேலூர் எஸ்.ஐ., எஸ்தர் ராணி(33) மதுரை புதூர் மண்மலை மேட்டிலுள்ள வீட்டில் டிச. 23ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். நாகமலைப்புதுக்கோட்டை எஸ்.ஐ., ரங்கநாயகி, மதுரை வைகை வடகரையில் அப்பார்ட்மென்ட் வீட்டில் ஜன., 5ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இந்த இரு சம்பவங்களும் மதுரை மாவட்ட போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களில் ஆண் போலீசாருக்கு சமமாக பெண் போலீசாருக்கும் பணிகள் வழங்கப்படுகின்றன. ஆண்களே தனியாக செல்ல தயங்கும் பாதுகாப்பற்ற இடங்களிலும் பெண் போலீசார் இரவில் தனியாக செல்லும் சூழல், இடைவெளியின்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுதல், ஓய்வின்மை, அதிகாரிகளின் நெருக்கடி இதனால் ஏற்படும் மனச்சோர்வு, மனஅழுத்தம், தாழ்வுமனப்பான்மை போன்ற பல காரணங்களும் குடும்ப பிரச்னைகளும் தான் பெண் போலீசாருக்கு தற்கொலை முடிவை தேடும் நிலையை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், மனநல டாக்டரிடம் கருத்து கேட்டோம்:

சமுதாயத்திலும் பிரச்னை: தென் மண்டல ஐ.ஜி.,கிருஷ்ணமூர்த்தி: பெண்களிடம் விழிப்புணர்வு தேவை. மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றினால் அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். சிலர் பல ஆண்டுகள் ஆண்களுடன் தொடர்பு வைத்துவிட்டு, பின் திருமணம் என வரும் போது யாரையாவது ஒருவரை தேர்வு செய்கின்றனர். அவர்கள் தங்களுடன் ஒத்துப்போகவில்லை என தகராறுகளில் ஈடுபடுவதும், பிரச்னைகளில் நேரத்தை செலவு செய்வதும், முடிவில் விவாகரத்து என செல்கிறது. சமுதாயம் குறித்த விழிப்புணர்வை அனைத்து நிலையிலும் ஏற்படுத்த வேண்டும். பெண் போலீசாருக்கு இது போன்ற பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் ஆரம்பிப்பது புதிது அல்ல. தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்கு போலீஸ் துறையில் பணி நெருக்கடி இல்லை. தென் மண்டலத்தில் அனைத்து போலீசாருக்கும் விரைவில் சிறந்த மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு பயிற்சி நடத்தப்படும்.

பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்: மனோகர், மதுரை, எஸ்.பி., :பெண் போலீசாருக்கு ஏற்படும் பிரச்னை குறித்து அவர்கள் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு என்ன பிரச்னை இருந்தாலும் என்னிடம் நேரில் தெரிவிக்க வாரந்தோறும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட, குடும்ப, பணி தொடர்பான எந்த பிரச்னைகளானாலும் தெரிவிக்கலாம். தைரியமாக தங்கள் புகார்களை தெரிவித்து பலர் பிரச்னைகளில் இருந்து விடுபட்டுள்ளனர். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பெண் போலீசாரின் வீடுகள் அருகே ஸ்டேஷன்கள், பாதுகாப்பு பணியில் கூட பெண் போலீசார் தனிமைப்பட்டு விடக்கூடாது என ஒரு குழுவாகவே நியமிக்கப்படுகின்றனர். மனதில் வைக்காமல் பிரச்னைகளை தைரியமாக எடுத்துக்கூறி நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை முடிவு எல்லாம் கோழைத்தனமானது.

வாரத்தோறும் பயிற்சி: போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியம் (மதுரை): மதுரை நகர் பகுதியில் பெண் போலீசார் யாரும் இது போன்ற அபத்தமான முடிவை எடுக்கவில்லை. இந்த சம்பவங்கள் போலீஸ் துறையின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. மதுரை நகர் போலீசாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அணிவகுப்பின் போது, இனி மனநலம் குறித்த சிறப்பு பயிற்சி கூடுதலாக ஒரு மணிநேரம் நடத்தப்படும். சிறந்த நிபுணர்களை கொண்டு தொடர் பயிற்சி மற்றும் யோகா போன்ற வகுப்புகள் மூலம் இது போன்ற அனைத்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்கப்படும்.

மன அழுத்தமே காரணம்: மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு பேராசிரியர் ராமானுஜம்: போலீஸ் துறை பெண்களுக்கு புதிதான விஷயம். பணி செய்யும் எல்லாப் பெண்களுக்குமே வீட்டுவேலை, அலுவலக வேலை பளுவின் காரணமாக மனஅழுத்தம் ஏற்படும். குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாவிட்டால் கூட, மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவர். போலீஸ் துறையில், கூடுதல் பணிச்சுமை இருக்கும். இதை தாக்குபிடிக்க முடியாமல் இருக்கலாம். அல்லது உயரதிகாரியின் கட்டளைக்கு பணிந்து போகமுடியாத நிலையில் இருக்கலாம். மன அழுத்தம் அதிகரித்து, தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்கின்றனர். மனச்சோர்வாக, எதையும் விரக்தியாக பேசுவதை வைத்து, அவர்களை இனம் காண முடியும். உரிய நேரத்தில் "கவுன்சிலிங்' செய்தால், தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கமுடியும். மதுரை அரசு மருத்துவமனையில், "தற்கொலை தடுப்பு கிளினிக்' செயல்படுகிறது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருப்பவர்களை, சரியான விதத்தில் "கவுன்சிலிங்' கொடுக்கிறோம் என்றார்.

காத்திருக்கும் "புதுயுகம்' : மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று மாதங்களுக்கு முன் "புதுயுகம்' அமைப்பு துவக்கப்பட்டது. செல்லூர் மகப்பேறு மருத்துவமனையில் இது செயல்படுகிறது. தினமும் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை இங்கு தற்கொலை எண்ணத்துடன் அவதிப்படும் நபர்களுக்குகவுன்சிலிங் வழங்கப்படுகிறது. செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் மூலம் பல பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. புதுயுகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சிவரஞ்சனி, "" தற்கொலை முடிவை தேர்வு செய்த பலரை கவுன்சிலிங் மூலம் காப்பாற்றியுள்ளோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்தால், அந்த எண்ணம் மற்றவர்களுக்கும் வந்துவிடும். அதனால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்த குடும்பத்தினரின் வீடுகளுக்கும் சென்று கவுன்சிலிங் கொடுக்கிறோம்.24 மணி நேரமும் இலவச அழைப்பு எண் மூலம் 0452- 258 0011 ல் தொடர்பு கொள்ளலாம். தொழில் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை முடிவை யாராவது எடுத்தால், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் கிடைக்க வழிகாட்டியாகவும் இம்மையம் செயல்படும்'', என்றார்.
....தினமலர் 6.1.11

nambi
12-01-2011, 04:00 PM
பின்னலாடை உற்பத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் திருப்பூர் நகரம், தற்கொலை செய்வோர்கள் அதிகம் கொண்ட நகரமாக மாறி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பூர் மற்றும் அத்னைச் சுற்றி சுமார் 25,000 பின்னலாடை உற்பத்தி ஆலைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலை முதலாளிகளுக்கு கோடி கோடியாக வருவாயை ஈட்டிக் கொடுத்து, இந்திய ஆடை உற்பத்தி துறையின் மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கையும் ஈட்டிக் கொடுக்கும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு வருமானம் 2009 ஆம் ஆண்டிலேயே 120 பில்லியன் ரூபாயை எட்டியிருந்தது.கடந்த ஆண்டு இது இன்னும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த அளவுக்கு வருவாயை ஈட்டித்தரும் இந்த திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ, வறுமையின் கோரப்பிடியில்!

இந்த தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் சுமார் 3 லட்சம் பேர் பிழைப்புக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, குறிப்பாக தென்மாவட்டங்களிலிருந்தும், பீகார், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்தும் வந்து குடியேறியவர்கள்தான்!

ஆனால் வறுமை, வேலைப் பளு, நிரந்தரமற்ற வேலை, கழுத்தை நெரிக்கும் கடன்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் பைனான்சியர்கள் மற்றும் அவர்களது அடியாட்களின் துன்புறுத்தல்கள் என நாலாபுறமிருந்தும் நெருக்கும் பிரச்சனைகளால், இந்த தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி அதிர வைக்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் கழகம்!
...வெப்துனியா 12.1.11

nambi
12-01-2011, 04:07 PM
திண்டுக்கல்: சமீப காலமாக அதிகரித்துவரும் குடும்ப பிரச்சனைதகள் மற்றும் காதல் தோல்விகளால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை சம்பவங்களில் திண்டுக்கல் மாவட்ட்த்தில் மட்டும் ஒரே ஆண்டில் சுமார் 775 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு, காதல் தோல்வி, கடன் பிரச்சனை, தீராத நோய் போன்ற பலவிதமான காரணங்களுக்காக கடந்த 2010ஆம் ஆண்டில் 775 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 35 முதல் 55 வயதுடையவர்கள் அதிகமாக தற்கொலையில் ஈடுபட்டுள்ளனர்.

பரீட்ச்சையில் தோல்வி, கடன் பிரச்சனைக்காக 6.5 சதவீதமும், குடும்பப் பிரச்னைக்காக 60 சதவீதம் பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம் ஆகியவற்றால் 28 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற 2009ஆம் ஆண்டில் இதே போன்ற காரணங்களுக்காக 701 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர். பொன்.சிவானந்தம், “தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் அதிகமாக தற்கொலை செய்துகொள்வோர் குடும்பப் பிரச்னையில்தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். கணவன், மனைவி இடையே பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல், புரிந்துணர்வு இல்லாமை போன்றவையே முக்கிய காரணங்களாகும். இதற்கு தற்கொலை தீர்வு ஆகாது.

இதுபோன்ற தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.
...இந்நேரம்.காம்..12.1.11

ஜனகன்
12-01-2011, 07:12 PM
நம்பி, இந்த தகவல்களை தரும் உங்களுக்கு பாராட்டுக்கள் சொல்வதைவிட நன்றி சொன்னால் பொருத்தமாக இருக்கும். நன்றி நன்றி நன்றி

nambi
13-01-2011, 01:31 AM
சென்னை, ஜன. 12: விலைவாசியைக் குறைக்க வழிகள் இருந்தால் அரசுக்கு கம்யூனிஸ்டுகள் கூறலாம் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் கூறினார்.

விலைவாசி மட்டும் உயரவில்லை, மக்களின் வருமானமும் உயர்ந்துள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறினார்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:

பாலபாரதி (மார்க்சிஸ்ட்): பேரவையில் உள்ள உறுப்பினர்கள் நிமிர்ந்து மேலே பார்த்தால் விலைவாசி விண்ணில் பறந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். பஞ்சபூதங்களைத்தான் நாம் இதுவரை கேள்விபட்டுள்ளோம். இப்போது 6-வது பூதமாக விலைவாசி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு பொருளையும் மேலே வீசினால் கீழே வர வேண்டும். ஆனால், ஏறிய விலைவாசி ஒருபோதும் இறங்குவதில்லை. நியூட்டனின் புவியீர்ப்பு விதியை விலைவாசி உயர்வு வீழ்த்திவிட்டது.

கிலோ கணக்கில் காய்கறிகள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு தக்காளி ரூ. 3-க்கும், ஒரு முருங்கைக்காய் ரூ. 15-க்கும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பறக்குது பாமாயில் விலை, துரத்துகிறது துவரம் பருப்பு விலை என்று கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் கூறவில்லை. எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

நிதி அமைச்சர் க. அன்பழகன்: விலைவாசி உயர்வு குறித்து எனது ஆழ்ந்த வேதனையை நானும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விலை உயர்வுக்குக் காரணமான பதுக்கல் முதலாளிகள் யார், வெங்காய வியாபாரிகள் யார் என்பதை மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சொன்னால் நடவடிக்கை எடுத்து விலைவாசியைக் குறைப்பதற்கு வசதியாக இருக்கும். வெளிநாடுகளில் இருக்கும் சட்டங்கள் காரணமாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பூகம்பம், கடும் மழை, பெரும் வறட்சி ஏற்பட்டால் யாரை குறை சொல்ல முடியும்; அதுபோலதான் விலைவாசி உயர்வும். இதற்காக யாரைக் கண்டிப்பது, விலைவாசியைக் குறைக்க வழிகள் இருந்தால் கம்யூனிஸ்ட்டுகள் அரசுக்குக் கூறலாம்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்): நிதி அமைச்சர் அன்பழகன் மிகுந்த அனுபவம் உள்ளவர். அவருக்குத் தெரியாதது எதுவும் இல்லை. விவசாய உற்பத்திப் பொருள்கள் "ஆன்-லைன்' வர்த்தகம் மற்றும் யூக வணிகத்தில் விற்கப்படுவதால் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதித்ததும் விலை உயர்வுக்குக் காரணம்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): நேற்று (ஜன. 11) வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஏற்றுமதிக்கு தடை விதித்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், ஏற்றுமதிக்கு அனுமதித்தால் விலைவாசி உயர்ந்து விட்டது என்றும் கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் நடத்துவது வழக்கம்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறினால் வசதியாக இருக்கும்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்): உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி உழைக்கும் மக்களை பீட்டர் அல்போன்ஸ் கொச்சைப்படுத்துகிறார். விலைவாசி உயர்வுக்குக் காரணமான பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது யார்? பதுக்கல்காரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? விலை உயர்வைந்க் கட்டுப்படுத்த மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது தொடர்பாக ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உணவு அமைச்சர் எ.வ. வேலு: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. துவரம் பருப்பு வெளிமார்க்கெட்டில் ரூ. 85-க்கு விற்றபோது ரேஷனில் ரூ. 40-க்கு வழங்கப்பட்டது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. கொத்தனாருக்கு முன்பு என்ன சம்பளம்? இப்போது என்ன சம்பளம்?

பாலபாரதி (மார்க்சிஸ்ட்): ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசு கொடுக்கிறீர்கள். ஆனால், வெளிமார்க்கெட்டில் விற்கும் விலையை உணவு அமைச்சரால் ஏன் குறைக்க முடியவில்லை?

அமைச்சர் எ.வ. வேலு: விலைவாசியால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவவசியப் பொருள்களை மலிவு விலையில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கும் பணக்காரர்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள். ஏழைகளுக்காக அல்ல.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்): என்ன செய்வது நீங்கள் மத்திய அரசிடம் சரண்டர் ஆகி விட்டீர்கள்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): விலை உயர்ந்து கொண்டே செல்வதை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இது கண்ணுக்கு தெரிந்த உண்மை. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன? மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே விலைவாசி உயர்வுக்குக் காரணம். கூட்டணியில் இருப்பதால் திமுக அரசு அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அமைச்சர் பொன்முடி: விலைவாசி மட்டும் உயரவில்லை. மக்களின் வருமானமும் உயர்ந்துள்ளது. ஏழைகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகத்தான் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்காகத்தான் மலிவு விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முந்தையை ஆட்சியில் நடந்ததுபோல, எலிக்கறி சாப்பிடும் நிலை இப்போது இல்லை.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): சீனாவில் பட்டினிச் சாவு, ராணுவ வீரர்கள் துணையுடன் இலங்கையில் வெங்காயம் விற்பனை, ரஷ்யா, அமெரிக்காவில் வறுமை, விலை உயர்வு என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. விலை உ.யர்வு என்பது இங்கு மட்டுமல்ல.

விலைவாசி உயர்வை கம்யூனிஸ்ட்டுகள் அரசியலாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
...தினமணி 13.1.11

nambi
13-01-2011, 01:38 AM
பேர்ன், ஜன.13-

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியது மற்றும் பலவித குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தொடர்பாக நேற்று 10 விடுதலைப்புலிகளை சுவிட்சர்லாந்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். சுவிட்சர்லாந்தின் விடுதலைப்புலி பிரதிநிதிகளாக இவர்கள் செயல்பட்டு வந்ததும், விடுதலைப்புலிகளை தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்ட பிறகும் அவர்களுக்கு வேண்டிய நிதியை அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இலங்கையில் போர் நடைபெற்றபோது பல மில்லியன் சுவிஸ் பணம் விடுதலைப்புலிகளுக்கு கை மாறியதும் தெரியவந்தது.

....தினத்தந்தி 13.1.11

nambi
13-01-2011, 01:40 AM
கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்



ஆற்காடு, ஜன.13-

2 பச்சிளம் குழந்தைகளை கடத்திச்சென்று கிணற்றில் வீசி கொன்று விட்டு நாடகமாடிய கொடூரமனம் படைத்த தந்தை கைது செய்யப்பட்டார்.

மாயமானார்கள்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஜமீலாபாத் 3-வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆஜிராபேகம் இவர்களுக்கு தானியா தாஷிகா (வயது 3), காஜியா நாஷிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகளும், 3 மாத முகமது தாஹா என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு முகமது அலியின் மகள்களான தானியா தாஷிகா, காஜியா நாஷிகா ஆகிய இரண்டு குழந்தைகளையும் திடீரென காணவில்லை.

கிணற்றில் பிணமாக மிதந்தனர்

நேற்று முன்தினம் மாலை மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் பாழடைந்த கிணற்றில் இரண்டு குழந்தைகள் பிணம் மிதப்பதாக அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை வெளியே எடுத்து பார்த்த போது காணாமல் போன தானியா தாஷிகா, காஜியா நாஷிகா ஆகியோர்கள் தான் என்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார் இச்சம்பவம் குறித்து தனி போலீஸ் படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தனது வீட்டிலிருந்த முகமது அலியை போலீசார் ஆற்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர், தானே குழந்தைகளை கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் நாடகமாடிய திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

திருமணம் செய்து வைப்பது கஷ்டம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், ஆஜிரா பேகத்திற்கும் திருமணம் ஆன போது 35 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தனர். நான் தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் மாத வருமானம் 7 ஆயிரத்து 500 ரூபாய். இதில் எனது குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்தது.

எதிர்காலத்தில் இரண்டு குழந்தைகளையும் எவ்வாறு படிக்கவைத்து திருமணம் செய்து வைப்பது என்ற மன உளைச்சலில் இருந்தேன். இந்த நிலையில், அதே பகுதியில் ஆசிரியராக வேலை பார்க்கும் எனது தம்பி அஷ்ரப் அலியிடம், அவனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் காலை வாங்கினேன்.

அவனிடம் சொந்த வேலை இருப்பதாக தெரிவித்துவிட்டு அவன் பள்ளிக்கு சென்றதும், வீட்டில் யாரும் பார்க்காத நேரத்தில் எனது இரண்டு பெண் குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசினேன். பின்னர் மோட்டார் சைக்கிளை எனது தம்பியிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

இவ்வாறு கொலைக்கான காரணம் குறித்து முகமது அலி வாக்கு மூலத்தில் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக முகமது அலியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

....தினத்தந்தி 13.1.11

M.Jagadeesan
13-01-2011, 02:38 AM
நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி. இதற்கு அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம்.

nambi
14-01-2011, 03:01 AM
`சிறுத்தை' திரைப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு
நாடார் மக்கள் கட்சி தொடர்ந்தது


சென்னை, ஜன.14-

நாடார் மக்கள் கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவின் பெயரை, சிறுத்தை படத்தில் `பிக்பாக்கெட்' அடிப்பவனின் பெயராக வைத்திருப்பதால் அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கும்படி நாடார் மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

நாடார் குரல்

சென்னை மடிப்பாக்கம், குபேரன்நகரைச் சேர்ந்த எச்.ஸ்டீபன், 3-வது சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் திருநெல்வேலி. நான் நாடார் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறேன். `நாடார் குரல்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் நான் இருக்கிறேன். இந்த கட்சியின் தலைவர் ராக்கெட் ஜெ.ராஜா. நாங்கள், எங்கள் இன மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறோம்.

மிகுந்த செல்வாக்கு

நடிகர் கார்த்தி நடித்த `சிறுத்தை' என்ற சினிமா படம் 14-ந் தேதி (இன்று) திரையிடப்பட உள்ளது. அந்த படத்தில் `பிக்பாக்கெட்' அடிப்பவனாக ஒரு கதாபாத்திரம் வருகிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கு ராக்கெட் ராஜா என்று எங்கள் கட்சித் தலைவரின் பெயரை வைத்துள்ளனர்.

ராக்கெட் ராஜாவின் பின்னால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளனர். தென்மாவட்டங்களில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. அவரை கேவலப்படுத்தும் நோக்கத்தில் இப்படி பிக்பாக்கெட் கதாபாத்திரத்துக்கு அவரது பெயரை வைத்துள்ளனர்.

தடை விதிக்க வேண்டும்

இந்த படம் வெளியே வந்தால் தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனது சமுதாய இளைஞர்கள் பலர் கொதித்துப்போய் உள்ளனர். ஏற்கனவே இதை எதிர்த்து சென்னையில் தர்ணா போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட உள்ளது. இந்த நிலையில் `சிறுத்தை' படம் வெளியே வந்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும். இந்த விவகாரத்தில் குற்ற முகாந்திரம் இருப்பதால் `சிறுத்தை' படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் இயக்குனர் சிவா ஆகியோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நோட்டீசு

மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.ஜோயல் ஆஜரானார். இந்த மனுவுக்கான பதில்மனு தாக்கல் செய்யும்படி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீசு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு 18-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

,,,,தினத்தந்தி 14.1.11

nambi
14-01-2011, 03:04 AM
சென்னை, ஜன. 13: தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை தந்தி அனுப்பியுள்ளார்.

ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன் புதன்கிழமை நடுக்கடலில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமருக்கு முதல்வர் தந்தி அனுப்பியுள்ளார்.

தந்தியில் கூறியுள்ளதாவது:

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாண்டியனும் மேலும் மூவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். ஜனவரி 12-ம் தேதி இலங்கை கடற்படையினர் சுட்டதில் வீரபாண்டியன் இறந்துள்ளார்.

இந்திய அரசும், இலங்கை அரசும் திரும்பத் திரும்ப உறுதி மொழிகள் தந்துள்ள போதிலும், இலங்கை ராணுவத்தின் இதுபோன்ற கொடுமைகள் நிற்காமல் இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளன.

வீரபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசிடம் எடுத்துக் கூற வேண்டும்.

இதுபோன்ற கொலைகளைத் தடுத்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு உங்களுடைய தனிப்பட்ட தலையீடு தேவைப்படுகிறது என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

,,,,தினமணி 14.1.11

nambi
14-01-2011, 03:28 AM
சென்னை : மட்டில்லா மகிழ்ச்சியோடு தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். <br>அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’ எனும் அரிய தமிழ் பண்பாடு போற்றி அறுவடை திருநாளாக தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் 1921ம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட தமிழ் சான்றோர் கூடி மேற்கொண்ட முடிவினை ஏற்று, “தைத்திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தொடங்கும் நாள்’’ என 2008ம் ஆண்டில் இந்த அரசு சட்டம் இயற்றியது.

அதனை தொடர்ந்து, “தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள்’’ எழுச்சியோடும், ஏற்றத்தோடும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டில் வரும் 15.1.2011 அன்று, தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளை, முந்தைய ஆண்டுகளைவிட மேலும் சிறப்பாக கொண்டாடிட வேண்டுமென எனது தமிழக மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ப் புத்தாண்டு நாளாகிய பொங்கல் திருநாளில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும், வாயில்கள் தோறும் வண்ணக் கோலங்களிடுவீர். வீடுகளிலும், வீதிகளிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டிடுவீர். பொது இடங்களில் வண்ணத் தோரணங்கள் மின்னட்டும். தென்னை, வாழை, கமுகு, ஈச்ச மரங்களின் குலைகள் குலுங்கட்டும். தோகை விரிந்த கரும்புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள் இன்னபிற எல்லாம் சேர்ந்து எழில் கூட்டட்டும்.

அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, முந்திரி, ஏலம், திராட்சை சேர்த்து ஆடவர், மகளிர், அருமைச் சிறார், குடும்பத்தார் நண்பர்கள் கூடிப் பொங்கலிட்டுக் கொண்டாடிக் களித்திடுவீர். குடியிருப்புகள்தோறும் கோலப் போட்டிகள், வீரவிளையாட்டுகள், கிராமப்புற நடனங்கள், கும்மி கோலாட்டங்கள் இதர கலைநிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்திடுவீர். விருதுகளும் பரிசுகளும் வழங்கி ஊக்கமளித்து மகிழ்ந்திடுவீர். வீடுகளின் முகப்புகளில் மாலையில் வரிசைவரிசையாய் விளக்குகள் ஏற்றி, வீதியெங்கும் ஒளிக்கதிர் பாய்ச்சிடுவீர்.

அதுமட்டுமல்லாமல், அரசுக் கட்டிடங்கள், பூங்காக்கள், பாலங்கள் போன்ற பொதுவிடங்கள் அனைத்தும் பொலிவுபெற வண்ண வண்ணமாய் சரவிளக்குகள் அமைத்து அணி செய்திடுவீர். உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் வாழ்த்துகள் பரிமாறி தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளை தமிழகமெங்கும் மட்டிலா மகிழ்ச்சியோடும் மனம் பொங்கும் எழுச்சியோடும் கொண்டாடுவீர்.

அரசியல், சாதி, மத, இன வேறுபாடுகளின்றி உழைப்பை போற்றி எல்லோரும் இணைந்து கொண்டாடும் இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளை ஆங்காங்கேயுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், அரசுசார் நிறுவனங்களின் அலுவலர்கள், நல்லுள்ளம் கொண்ட சான்றோர்கள், தமிழ் நெஞ்சங்கள், பொதுமக்கள் என யாவரும் ஒருங்கிணைந்து இந்த எனது வேண்டுகோளை நிறைவேற்றி தந்திடுவீர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
....தினகரன் 14.1.11

nambi
15-01-2011, 12:50 AM
சென்னை : சபரிமலை ஐயப்பன் மகர ஜோதி தரிசனத்துக்குப் பின் நேற்று இரவு பஸ் விபத்து மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 100 பக்தர்கள் பலியாயினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சபரி மலையில் மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். மகர ஜோதியை பார்த்த பின்பு பக்தர்கள் தங்கள் வாகனங்களில் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகில் உப்புப்பாறை வழியாக ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் திரும்பி கொண்டிருந்தனர். அப்பகுதி வனப்பகுதி என்பதோடு பள்ளத்தாக்கு மிகுந்த பகுதி. நெரிசலை தவிர்க்க வாகனங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. மேலும் பக்தர்களும் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோட்டில் தறிகெட்டு சென்றது. இதனால் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தால் பின்னால் வந்த வாகனங்கள் வெகு தூரத்துக்கு நின்று கொண்டிருந்தது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்த தகவல் நீண்ட நேரம் யாருக்கும் தெரியவில்லை. இந்த விபத்தை தொடர்ந்து பக்தர்களிடையே பீதி ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடத் தொடங்கினர். இந்த நெரிசலில் சிக்கியும் சிலர் இறந்ததாக கூறப்படுகிறது. இதையும் சேர்த்து 100 பேருக்கு மேல் பலியாகியிருக்கலாம். நள்ளிரவில் நடந்ததாலும் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததாலும் பலியானவர்கள் குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை. 55 உடல்கள் மீட்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
...தினகரன் 15.1.11

nambi
15-01-2011, 12:55 AM
மாவோயிஸ்டு தலைவர் என்கவுண்ட்டர் வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து


புதுடெல்லி, ஜன.15-

``நமது மக்களை நாமே சுட்டுக்கொல்வதை அனுமதிக்க முடியாது'' என்று மாவோயிஸ்டு தலைவர் என்கவுன்ட்டர் வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

மாவோயிஸ்டு தலைவர் தற்காப்பு தாக்குதல்(என்கவுன்ட்டர்)

ஆந்திராவை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் செருகுரி ராஜ்குமார் என்ற ஆசாத். 58 வயதான இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவர். அவரது தலைக்கு ரூ. 12 லட்சம் ரொக்கப்பரிசை ஆந்திர அரசு அறிவித்து இருந்தது. அவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்திய கமிட்டியின் மூத்த உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

அவரும், ஆந்திராவை சேர்ந்த பத்திரிகையாளர் ஹேமச்சந்திரன் பாண்டேயும் (32) கடந்த ஆண்டு ஜுலை மாதம் 1-ந் தேதி இரவு ஆந்திர போலீசாரால், ஆந்திரா-மராட்டிய எல்லைப்பகுதியில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் தற்காப்பு தாக்குதலில் (என்கவுன்ட்டரில்) சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், பாண்டேயின் மனைவி பபிதா மற்றும் சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர், அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

``ஆசாத்தும், பாண்டேயும் போலீசாரால் போலி தற்காப்பு தாக்குதலில் (என்கவுன்ட்டரில்) சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிக அருகில் வைத்து சுடப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிப்பட்டு இருக்கிறது. இது மனித உரிமை இயக்கம், ஜனநாயக உரிமை இயக்கம் ஆகியவை நடத்திய விசாரணையில் உறுதிப்பட்டு இருக்கிறது.

நீதிவிசாரணை

இதுபற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த மனுவை நீதிபதிகள் அப்தாப் அலாம், ஆர்.எம்.லோதா ஆகியோர் விசாரித்தனர்.

சொந்த மக்களை சுடுவதா?


இந்த வழக்கின் விசாரணையின் போது, "நமது மக்களை நாமே சுட்டுக்கொல்வதா? இதை அனுமதிக்க முடியாது'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், மத்திய மற்றும் ஆந்திர அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நோட்டீசில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் 6 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

....தினத்தந்தி 15.1.11

nambi
15-01-2011, 12:59 AM
கருணாநிதி உத்தரவு
விலைவாசியை கட்டுப்படுத்த 9 அம்ச நடவடிக்கை


தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 9 அம்ச நடவடிக்கைகளை எடுக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

சென்னை, ஜன.15-

சென்னையில் உள்ள புதிய தலைமை செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், இனிவரும் காலங்களில் விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மு.க.ஸ்டாலின்

இக்கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் க.அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவுத் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரன் சிங், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பா.ராம மோகனராவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யதீந்திரநாத் ஸ்வெயின், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் கா.பாலச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மா.வீரசண்முகமணி, தோட்டக்கலைத் துறை ஆணையர் பி.சந்திரமோகன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறையும் என எதிர்பார்ப்பு

சென்ற ஆண்டு இதே சமயத்தில் நிலவிய விலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அரிசி, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லரை விலைகள் குறைந்துள்ளன. எண்ணெய் வித்துக்களைப் பொறுத்தவரையில், நல்லெண்ணெய் தவிர, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் விலை சிறிதளவு உயர்ந்துள்ளது. எனினும், சர்வதேச சந்தையில் தற்போது சமையல் எண்ணெயின் விலை குறையத் தொடங்கியுள்ளதால், வருங்காலத்தில் உள்ளூரிலும் சமையல் எண்ணெயின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காய்கறி விலையைப் பொறுத்தவரையில், உருளைக்கிழங்கின் விலை குறைந்திருந்தாலும், பிற காய்கறிகளின் விலை பருவ மழையினால் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் வரத்து ஓரிரு வாரங்களில் அதிகமாக வாய்ப்பிருப்பதால், இவற்றின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9 அம்ச நடவடிக்கை

எனினும், உடனடி நடவடிக்கையாகவும், நீண்டகால நடவடிக்கைகளாகவும், உணவுப் பண்டங்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்த பின்வரும் 9 அம்ச நடவடிக்கைகளை எடுக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது இயங்கும் 154 உழவர் சந்தைகளை வலுப்படுத்தவும், கூடுதலாக 25 இடங்களில் உழவர் சந்தைகளைப் புதிதாகத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காய்கறி விற்பனை

சென்னையில் தற்போது கூட்டுறவு அமைப்புகள் மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 20 டன் காய்கறிகள் நியாய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் பிற மாநகராட்சிப் பகுதிகளில் கணிசமான அளவு காய்கறி விற்பனை மையங்களை உடனடியாகத் தொடங்கி, காய்கறி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து நேரடியாகக் காய்கறிகளை வாங்கி பொது மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நியாய விலைக்கடைகள் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் மற்றும் மளிகைப் பொருட்கள் போதிய அளவு இருப்பு வைத்து, எந்த தட்டுப்பாடுமின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்பேர வர்த்தகம்

மத்திய அரசு இதுவரை சர்க்கரையினை முன்பேர வர்த்தகத்திலிருந்து நீக்கம் செய்திருந்ததை மீண்டும் முன்பேர வர்த்தகத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சர்க்கரை விலையைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்க, முன்பேர வர்த்தகத்திலிருந்து சர்க்கரையைத் தவிர்க்க மத்திய நிதியமைச்சருக்கு உடனடியாகக் கடிதம் அனுப்பப்படவேண்டும்.

நீண்டகாலத் திட்டமாக பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்க சிறப்புத் திட்டங்களைத் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சாகுபடியை அதிகரிக்க...

நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலும், உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளிலும் காய்கறிகளைப் பயிரிட வாய்ப்புள்ள கிராமங்களைக் கண்டறிந்து, தரமான விதைகளை வழங்குதல் மற்றும் பல்வேறு வேளாண் யுக்திகளை விவசாயிகளிடம் பரப்பி, காய்கறி சாகுபடி பரப்பளவையும், உற்பத்தியையும் பெருக்கிட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வரும்காலங்களில் விவசாயப் பொருள்களின் விற்பனை மையங்களை நவீனமயமாக்குதல், ஒருங்கிணைத்தல், போதிய குளிர்சாதனக் கிடங்கு வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சிறப்பு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தப்பட வேண்டும்.

அதிகபட்ச உற்பத்தி

விவசாயிகளுக்கு சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பிற துல்லிய பண்ணை சார்ந்த திட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நீர்ப்பாசனப் பரப்பை அதிகப்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முக்கியப் பயிர்களான நெல் போன்றவற்றின் உற்பத்தித் திறனை வட்டார வாரியாக ஆராய்ந்து, திட்டம் வகுத்து, அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த தகவல்கள் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.....தினத்தந்தி 15.1.11

nambi
15-01-2011, 01:04 AM
சென்னை-கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கடல்சார் கொள்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலங்கரை விளக்கங்கள் அழகுபடுத்தப்படும் என்றார்.

சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப கலங்கரை விளக்கமும், மாமல்லபுரத்தில் தேசிய கடல்சார் அருங்காட்சியகமும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடல்சார் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் கடல்சார் வளர்ச்சிக்குழு, இந்திய சர்வதேச துறைமுகக்குழு, கடல்சார் நிதிக்கழகம், ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி - கொழும்பு இடையே முதல்முறையாக கப்பல் போக்குவரத்து திட்டத்தை தொடங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் விரைவில் அந்த திட்டம் செயல்வடிவம் பெறும் என்றும் வாசன் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தைத் தொடர்ந்து சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம்-ராமேஸ்வரம்-கன்னியாகுமரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

...வெப்துனியா 15.1.11

nambi
15-01-2011, 01:09 AM
ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்னமும் காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ளது டெரசோபோலிஸ் என்ற நகரம். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இருக்கும் அது மலைப்பாங்கான இடம். அங்கு இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக கடந்த புதன்கிழமை 24 மணி நேரத்தில் 26 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.


இதனால், மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு செம்மண் கலந்த வெள்ளம் தரையை நோக்கி பாய்ந்தது. காட்டாற்று வெள்ளத்தில் மரங்கள், பாறைகள் உருண்டு கீழ்நோக்கி வந்தன.

மலை அடிவாரங்களில் ஏராளமான வீடுகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை முறையான அஸ்திவாரம் அமைக்காமல்&nbsp; மரச் சட்டங்கள், பிளைவுட் பயன்படுத்தி கட்டப்பட்டவை. மலையை அரித்துக் கொண்டு கீழிறங்கிய வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் நேற்று முன்தினம் வரை 500 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை நின்ற பிறகும் செம்மண் சகதி பல அடி உயரத்துக்கு படிந்துள்ளதால், அதற்குள் ஏராளமானோர் உயிருடன் சமாதி ஆகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பல பகுதிகளில் நிலச்சரிவு நீடிக்கிறது. அதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்து வருகின்றன. டெரசோபோலிஸ் நகரில் மின்சாரம், தொலைத் தொடர்பு, போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பிறகும் மிரட்டும் இடி, மின்னல் வெளிச்சத்தில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள், கால்நடைகள், மரங்கள் என பார்க்கவே கொடூரமாக இருப்பதாக ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

....தினகரன் 15.1.11

nambi
15-01-2011, 01:21 AM
சென்னை : மெரினாவில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, கடலில் குளிப்பதை தடுக்க ‘பீச் பக்கி’ என்ற கண்காணிப்பு வாகனத்தை போலீசாரிடம் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று ஒப்படைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முதன் முதலாக போலீசாருக்கு ‘பீச் பக்கி’ வாகனம் வழங்கப்பட்டது. தற்போது, மெரினாவில் கூட்டம் அலை மோதுகிறது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட புதியதாக ‘4 பீச் பக்கி’ வாகனம் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் மக்களை கட்டுப்படுத்தலாம்.

இன்று முதல் 18ம் தேதி வரை இந்த வாகனம் இங்கு இருக்கும். புதிதாக 15 ‘பீச் பக்கி’ வாகனம் வாங்க அரசிடம் கேட்டுள்ளோம், இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். பொங்கலை முன்னிட்டு 5,000 போலீசார் சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மெரினாவிலும் அதிக அளவில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இங்கு குளிக்க ஏற்கனவே தடை உள்ளது. அதையும் மீறி கடலில் குளிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றார்.

...தினகரன் 15.1.11

nambi
15-01-2011, 01:29 AM
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னை அமைந்தகரை குஜ்ஜி நாய்க்கன் தெருவில் சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மத வேறுபாடு இன்றி பொங்கல் வைத்தனர்.

இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். வி.ஜே.பாண்டியன் வரவேற்று பேசினார்.

விழாவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். அப்போது அவர், ’’கிராமத்தில் இருந்து பாரம்பரியம் நகரம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அதே வேலையில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு குத்துபாட்டு சென்று கொண்டு இருக்கிறது.

இந்த குத்து பாடல்களை குழந்தைகள் பாடும் நிலை உள்ளது. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களின் போது சினிமா பாடல்களை பாட வைத்து ஆடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்’’என்று தெரிவித்தார்.

....அலைகள் 14.1.11

nambi
15-01-2011, 01:34 AM
திருப்பெரும்புதூர் : ‘எந்த சாதியில் பிறந்தாலும் மனிதாகவே வாழ வேண்டும்’ என மேவளூர் குப்பத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருப்பெரும்புதூர் ஒன்றியம் மேவளூர்குப்பம் ஊராட்சியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:

சாதி, மதங்களை கடந்து ஒற்றுமையுடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காக சமத்துவப் பொங்கல் வைக்கிறோம். சாதி, மதங்களை ஒழிக்க போராடிய பெரியாரின் பெயர் சமத்துவபுரத்துக்கு வைக்கப்பட்டது. அவரது கொள்கையை பின்பற்றி அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்.

குழந்தை பிறந்தால் அது பெண் குழந்தையா? ஆண் குழந்தையா? என்றுதான் கேட்பார்கள். ஆனால் வளர்ந்தபின் அவர்களது சாதி, மத அடையாளத்தை காட்டிக் கொள்வார்கள். அத்திமரம் என்ற மரத்தின் உச்சியிலும் கிளையிலும் அடியிலும் காய் காய்க்கும். தனித்தன்மை உண்டு. 3 விதமாக காய்கள் காய்ப்பதால் கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் என்று அழைப்பது கிடைக்காது. அதேபோல் மனிதனாக பிறந்தவர் எந்த சாதியில் பிறந்திருந்தாலும் மனிதனாகவே வாழ வேண்டும் என்றார்.

....தினகரன் 15.1.11

nambi
15-01-2011, 10:52 AM
சபரிமலை அருகே நேற்று நிகழ்ந்த படுபயங்கர விபத்து மற்றும் நெரிசலில் சிக்கி முஸ்லிம் பக்தர் ஒருவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடகாவின் கர்வார் என்ற ஊரைச் சேர்ந்த மெஹபூப் சாப் மட்கை என்ற இந்த 22 வயது முஸ்லிம் பக்தர் தொடர்ந்து 5-வது ஆண்டாக சபரிமலைக்குச் சென்றார்.

முஸ்லிமாக இருந்தபோதும் ஒவ்வொரு ஆண்டும் அவர் சபரிமலை மகர ஜோதியை தவறவிடாமல் இருந்தார்.

இவர் நெரிசலில் சிக்கி பலியானதை முதலில் இவரது குடும்பத்தினர் முதலில் நம்பவில்லை ஆனால் இவருடன் வந்த மற்ற பக்தர்கள் மெஹபூப் குடும்பத்தினருக்கு இந்தத் தகவலை தெரிவித்தனர்.
...வெப்துனியா 15.1.11

பிரேம்
19-01-2011, 09:12 AM
சுவிஸ் பாங்கியில் தமிழக அரசியல்வாதிகள் கருப்பு பணம்; “விக்கிலீக்” இணைய தளம் வெளியிட்டது New Delhi புதன்கிழமை, ஜனவரி 19, 2:30 PM IST முந்தைய பதிவுகள் 4.5
இமெயில் பிரதி திரைப்படம் புதுடெல்லி, ஜன 19-


உலகம் முழுவதும் அரசியல் வாதிகளும், மற்றவர்களும் தாங்கள் சட்ட விரோதமாக சம்பாதித்த பணங்களை சுவிட்சர்லாந்து பாங்கியில் போட்டு வைத்துள்ளனர். இந்த பாங்கிகளில் பணம் போட்டு வைத்து இருப்பவர்கள் பற்றிய தகவலை வெளியிடுவது இல்லை.

எனவே தான் இந்த பாங்கிகளிலேயே பணத்தை போட்டு வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், தொழில் அதி பர்களும் தங்கள் கறுப்பு பணத்தை சுவிஸ் பாங்கிகளில் டெபாசிட் செய் துள்ளனர்.

இந்த வகையில் இந்தியர்களின் ரூ.72 ஆயிரம் லட்சம் கோடி பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தியர்கள் அதிகம் டெபாசிட் செய்துள்ள பாங்கிகளில் “ஜுலியஸ் போ” என்ற பாங்கியும் ஒன்று.

இந்த பாங்கியின் முன்னாள் ஊழியர் ருடால்எல்மர். அவர் “ஜுலியல் போ” பாங்கியில் ரகசிய கணக்கு வைத்து இருந்த 2 ஆயிரம் பேர் பட்டியலை உலக ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளத்துக்கு வழங்கி உள்ளனர். அதில் ஏராளமான இந்திய அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

அதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பணம் போட்டு வைத்து இருக்கும் தகவலும் உள்ளது. அதில் 2 கணக்குகள் தனிப்பட்ட நிறுவனங்கள் பெயரில் உள்ளன. மற்ற 2 கணக்குகள் தனிப்பட்ட 2 நபர்கள் பெயர்களில் உள்ளன.

ஒரு நிறுவனம் ரூ.400 கோடியும், இன்னொரு நிறுவனம் ரூ.45 கோடியும் டெபாசிட் செய்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் யாருடையது என்ற தகவல் சரியாக வெளியாகவில்லை. தமிழக அரசியல்வாதிகள் தொழில் நிறுவனங்கள் பெயரில் இந்த பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

ருடால் எல்மர் கொடுத்துள்ள 2 ஆயிரம் பேர் பட்டியலில் சிலருடைய பெயர் மட்டுமே தற்போது வெளிவந்து உள்ளது. விரைவில் 2 ஆயிரம் பேர் பெயரையும் விக்கி லீக் இணையதளம் வெளியிட முடிவு செய்துள்ளது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
------malaimalar--------

அவங்க யார் யாருன்னு..தெரிஞ்சா சொல்லுங்களேன்..

பாரதி
15-06-2011, 04:00 PM
ஈரோடு மாவட்ட கலைக்டர் திரு.ஆனந்தகுமார் அவர்கள் தனது மகள் கோபிகாவை இன்று பஞ்சாயத்து துவக்கப்பள்ளி , குமளான்குட்டை ,ஈரோட்டில் 2 ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார்! அவரின் இந்தச் செயலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்!:icon_b:

குறிப்பு: இச்செய்தி சுவரொட்டி வலைப்பூவில் வந்திருக்கிறது.

innamburan
15-06-2011, 05:13 PM
இதன் தொடர்பாக, பணி ஒன்றை துவக்குவதாக, உத்தேசம். பார்க்கலாம். செவ்வனே நடந்தால் பகிர்ந்து கொள்ளப்படும். முனைவர். ஆனந்தகுமாரை பாராட்டுவதில் இனைந்துக் கொள்கிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 05:18 PM
ஒரு முன்னுதாராணமான நிகழ்வுக்கு அடிகோலும் மாவட்ட ஆட்சியர் திரு.ஆனந்தகுமார் செயல் உண்மையில் பாராட்டத்தக்கது ..

Ravee
16-06-2011, 06:28 AM
பஞ்சாயத்து துவக்கப்பள்ளி கல்வி சிறப்பாய் கொடுக்கப்பட்டால் எல்லோருக்கும் சந்தோசமே ... கலெக்டர் திரு.ஆனந்தகுமார் போல எல்லோரும் துணிந்தால் ஆசிரியர்களுக்கு பொறுப்புணர்ச்சி கண்டிப்பாக கூடும் ..... :)

muthuvel
02-07-2011, 10:43 AM
ராசிபுரம்:அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், போதிய வசதி இல்லாததால், விசைத்தறி கூலித் தொழிலாளியின், மாற்றுத்திறனாளி மகன், செய்வதறியாது தவிக்கிறார்.


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 11வது வார்டு, அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி சுப்ரமணி (60). அவருக்கு, விஜயா என்ற மனைவி, செல்வி, மயில், ரத்னா என மூன்று மகள், கதிர்வேலு (18), கோபால் (15) என, இரு மகன்களும் உள்ளனர்.மூன்று மகள்களுக்கும் திருமணமாகி செட்டிலாகி விட்டனர். கடைசி மகன் கோபால், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். அதில், மாற்றுத்திறனாளியான கதிர்வேலு, வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 படித்தார். மே மாதம் வெளியான ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவில், கதிர்வேலு, 1,200க்கு, 1,158 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் ஐந்தாமிடமும் பெற்றார்.


மருத்துவபடிப்புகான கவுன்சலிங், சென்னையில் நடந்தது. அதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மதிப்பெண் அடிப்படையில், 198.25 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்து கதிர்வேலு சாதனை படைத்தார்.


அதை தொடர்ந்து, மாணவர் கதிர்வேலு, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்து, அங்கு சேர்ந்து படிக்க உள்ளார்.மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதன்படி மருத்துவ படிப்பு முடிக்க, மூன்றரை லட்சம் ரூபாய் முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.அவ்வளவு பணம் செலவு செய்து படிக்க வைக்கும் நிலையில், மாணவர் கதிர்வேலின் குடும்ப சூழல் இடம் கொடுக்காத நிலை உள்ளது. கதிர்வேலுவின் தந்தை சுப்ரமணி, தன் மூன்று மகள்களையும் கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறார். அதனால், நல்ல மதிப்பெண் பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், தனது மகனை படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளார்.
Nandri: dinamalar

பாலாஜி
26-08-2011, 05:51 PM
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசாங்கம் அதிகார மற்றும் ஊழல் போதையில் திளைத்துக் கிடக்கிறது, மக்கள்தான் அதனை மங்கச் செய்ய வேண்டும்", என அன்னா ஹஸாரே மக்களிடையே உரையாற்றினார்.அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள அன்னா ஹஸாரேவின் பெயர் பிரபலங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது. அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக இந்தியாவெங்கும் நடக்கும் பேரணிகளில் இதற்குமுன்பு இருந்திராத வகையில் திரளான கூட்டம் கூடுகிறது. பம்பாயில் நடைபெற்ற மாணவர் பேரணியில் அனைவருமே, "நானும் ஒரு அன்னா ஹஸாரே" என்று எழுதப்பட்ட தொப்பிகளை அணிந்திருந்தனர். அன்னா ஹஸாரே பற்றி ஆங்கில மீடியா ஓயாமல் பேச ஆரம்பித்திருக்கிறது ஆனால் தமிழ் மீடியாவிற்கு இது எல்லாம் என்ன என்றே தெரியவில்லை. எல்லா இடத்திலும் மக்கள் எப்படி எழுச்சியுடன் இருக்கிறார்கள் என்று காண்பிக்கிறார்கள், , ஜெய்பூர், குஜராத், பெங்களூர், கேரளா, மும்பை, டெல்லி என்று வருகிறதே தவிர தமிழர் நகரங்கள் மட்டும் மிஸ்ஸிங். ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் டீவி பார்த்துக்கொண்டு செல்லமே சீரியலில் எப்ப பாம் வெடிக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழனும் விழித்தெழும் காலம் எப்போதோ!

ஆதி
09-03-2012, 08:09 AM
டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வாழ்த்து

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக இன்று பெங்களூரில் அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் ராகுல் டிராவிட்(39). கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்த இவர் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய பிறகு, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக டிராவிட் பங்கேற்ற போட்டிகளில் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. டிராவிட் கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 194 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இதனால் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று பெங்களூரில் அறிவித்தார். பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிராவிட் உடன் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்பளே ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டிராவிட்டிற்கு, பிசிசிஐ தலைவர் சீனிவாசன், முன்னாள் கேப்டன் அனில் கும்பளே ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

டெஸ்ட் சாதனைகள்:

இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ள டிராவிட் 36 சதங்களும், 63 அரைசதங்களும் அடித்துள்ளார். இதன்மூலம் மொத்தம் 13,288 ரன்களை எடுத்துள்ள டிராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் 2வது நபராக உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் சராசரியாக 52.31 ரன்கள் வைத்துள்ளார்.

இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான டிராவிட், இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதி
09-03-2012, 08:15 AM
'போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா தீர்மானத்தால் அதிர்ந்து நிற்கும் இலங்கை!

ஜெனீவா: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமைச் சபையில் தனது தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா. இது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த தீர்மானம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டனர். சர்வதேச போர் விதிகளுக்குப் புறம்பாக படு பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்த சிங்கள ராணுவம் தமிழர்களை அழித்தது. ஏராளமான விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

இலங்கையின் இந்தப் போர்க்குற்றத்துக்கு உரிய விசாரணை நடத்தி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாடுகளின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு காரணமா தப்பித்து வந்தது இலங்கை.

இந்த நிலையில், ஐநாவின் மனித உரிமை அமைப்பில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா அதிரடியாக முடிவெடுத்தது. இதனால் இலங்கை பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா உதவும் என்பது இலங்கையின் நம்பிக்கை.

இந்த மாத இறுதியில்தான் இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா அதிரடியாக இன்றே தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது. இந்த தீர்மானம் குறித்து துணை மாநாட்டினையும் இன்று ஜெனீவாவில் நடத்தவிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்தத் தீர்மான நகல் மனித உரிமை சபையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விவாதத்துக்குப் பின்னர் இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

தீர்மான விவரம்:

இலங்கை போரின்போது சட்டத்திற்கு முரணாக குறிப்பிட்ட இனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடுநிலை நீதி விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், நிலப்பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடுநிலையான அமைப்பினை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுதந்திரமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றில், 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்கிறோம்.

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றின் அடிப்படையில்...

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம் இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆதி
09-03-2012, 08:20 AM
பிளஸ்டூ மையப் பகுதிகளில் தடையில்லா மின்சாரம்- மாணவர்கள் குஷி- மக்களுக்கு 'ஸ்வீட் ஷாக்'!

சென்னை: என்னப்பா ஆச்சு, இன்னிக்கு கரண்ட் கட்டே ஆகலை, அதுக்குள்ள நிலைமை சரியாப் போயிருச்சா... இதுதான் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் உதிர்த்த ஆச்சரிய வார்த்தைகள். காரணம், நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு அமலாகவில்லை. இதற்காக மக்கள் மகிழ்ச்சி அடையத் தேவையில்லை. பிளஸ்டூ தேர்வு நடைபெறும் மையங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் தற்போது மின் தடையை மாற்றியமைத்துள்ளனர்.

தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பல மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் நேற்று பிளஸ்டூ தேர்வு தொடங்கியது. மின்வெட்டால் மாணவ, மாணவிகளின் தேர்வு பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அரசுப் பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதி செய்து தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதேபோல தனியார் பள்ளிகளிலும் ஜெனரேட்டர் வசதியை செய்யுமாறும் அதற்கான செல்வை அரசு தரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு ஜெனரேட்டரை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பரீட்சை நடைபெறும் மையங்கள் அதாவது பள்ளிக்கூடங்கள் உள்ளி பகுதிகளில் மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் பல பகுதிகளில் நேற்று மின்வெட்டே அமலாகவில்லை. இதுதான் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு வேளை இரவில் கரண்ட் போகுமோ என்ற குழப்பமும் மக்களுக்கு வந்தது. ஆனால் அப்படிப் போகவில்லை. அதாவது நேற்று பல இடங்களில் மின் தடை இல்லை என்பதே செய்தி.

இருப்பினும் பரீட்சை நடைபெறும் மையங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் மின்தடையை அமல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

முன்னதாக அரசின் உத்தரவுப்படி பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகளில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் மின்சாரம் போகாததால், ஜெனரேட்டரைப் பயன்படுத்த நேரிடவில்லை.

மேலும் நேற்று நடந்த முதல் தேர்வான தமிழ் முதல் தாள் பரீட்சையை மாணவர்களும் புழுக்கமில்லாமல் நிம்மதியாக எழுதினர். வினாக்களும் சுலபமாக இருந்ததாக தேர்வு எழுதி விட்டு வந்த மாணவர்கள் சந்தோஷத்துடன் கூறினர்.

அமரன்
09-03-2012, 08:14 PM
உடனடிச் செய்திகள் மீண்டும் மன்றில் தளைப்பது கண்டு மகிழ்ச்சி.

தொடரட்டும் ஆதன்..

ஆதி
15-03-2012, 05:00 AM
மமதாவின் எதிர்ப்பால் பதவி விலகினார் தினேஷ் திரிவேதி-ரயில்வே அமைச்சராகிறார் முகுல் ராய்

டெல்லி: பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதால் தனது கட்சித் தலைவர் மமதா பானர்ஜியின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதை ஏற்பதாக பிரதமரும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து புதிய ரயில்வே அமைச்சராக திரினமூல் காங்கிரஸின் முகுல் ராய் பதவியேற்கவுள்ளார்.

தற்போது முகுல் ராய் டெல்லி விரைகிறார். அவரது தலைமையில் திரினமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் ரயில்வே கட்டண உயர்வை எதிர்த்து இன்று தர்ணாப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

ஆனால் பயணிகள் கட்டண உயர்வை முழுமையாக் திரும்பப் பெறும் சாத்தியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.

திரினமூ்ல் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருக்கிறார் ராய். மமதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசி. தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். ஏற்கனவே ரயில்வே இணை அமைச்சராக இருந்தவர்தான் இந்த ராய். அப்போதுதான் குவஹாத்தியில், இரு பெரும் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டன என்பது நினைவிருக்கலாம். இவர் கப்பல்துறை இணை அமைச்சராக இருந்தபோது டெல்லியை விட கொல்கத்தாவில்தான் முக்கால்வாசி நேரம் குடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஆதி
15-03-2012, 05:02 AM
[ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் மத்திய அரசுக்கு திமுக ஆதரவு வாபஸ்?

டெல்லி: ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்றும் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது, தான் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து முழுமையாக தவறி விட்டது திமுக என்ற குற்றச்சாட்டு இந்த நிமிடம் வரை வலுவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உரத்த குரல் எழுப்பி வருகிறது.

நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக செயல்பட மாட்டோம், நட்பு உள்ளது, வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அது பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு நேற்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது எஸ்.எம்.கிருஷ்ணா மூலம்.

இந்த நிலையில் சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்காக கிளம்பிய திமுக தலைவர் கருணாநிதியிடம், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது கருணாநிதி கூறுகையில், நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு இந்தியா செய்த துரோகமாகவே திமுக கருதும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் முடிவெடுப்போம் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்த பேச்சால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறையாவது கருணாநிதியும், திமுகவும் திடமாக செயல்படுவார்களா அல்லது வழக்கம் போல சொதப்புவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆதி
15-03-2012, 05:05 AM
12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4!

லண்டன்: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான 2வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம்.

Sri Lanka's killing fields என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சேனல் 4 வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இலங்கையின் இனவெறிப் படுகொலைகள் குறித்து பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது Sri Lanka's killing fields: War Crimes Unpunished என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4.

ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இலங்கை கொலைக் கள வீடியோக்கள்

http://videos.oneindia.in/watch/57128/sri-lankas-killing-fields.html

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3212461

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-03-2012, 05:09 AM
இனியும் தமிழ் மக்கள் இவரை (கலைஞர்) நம்ம வேண்டுமா. கனிமொழி மீண்டும் திகார் போகவேண்டி வரும் என்று ஒரு சிறு செய்த இவருக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டால் இவர் வாயை மூடிக் கொள்வார்:redface::sprachlos020:

ஆதி
15-03-2012, 05:17 AM
எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடாத சேனல் 4

லண்டன்: இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப்பில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள சேனல் 4 நிறுவனம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த அதிகாரபபூர்வமான எதையும் வெளியிடவில்லை.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் எப்படிக் கொடூரமாகக் கொல்லப்பட்டான் என்ற காட்சிகள் அதில் உள்ளன. பிரபாகரன் குறித்தும் பரபரப்புக் காட்சிகள் இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இருப்பினும் அப்படி எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசு வெளியிட்ட வீடியோக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள்தான் உள்ளன. இவையும் கூட அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்றே சேனல் 4 தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த 2வது ஆவணப்படத்தில் உள்ள பல காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. ஈவு இரக்கமற்ற கொடூரர்கள் கூட இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்ற உணர்வு வருகிறது.

இந்த ஆவணப்படத்தில் கேட்கப்பட்டுள்ளதைப் போலவே, உலக சமுதாயம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்விதான் நமது மனதிலும் எழுகிறது

ஆதி
15-03-2012, 05:18 AM
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்படாது- சொல்கிறார் சு.சாமி

சென்னை: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா. மனித உரிமைக் கமிஷன் தீர்மானத்தை இந்தியா ஆரிக்கக் கூடாது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே ஒன்று திரண்டு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன் வழி தனி வழி என்பது போல சுப்பிரமணியசாமி இப்படிப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஒருதலைப் பட்சமானது. ஏனெனில் அத்தீர்மானத்தில் விடுதலைப் புலிகள் செய்த கொலைகள் மற்றும் கற்பழிப்புகள் பற்றி எதுவும் சொல்லப்படவிலை.

அப்பாவி சிங்களர்கள், தமிழர்கள் உள்பட பலர் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்படனர். ஆகவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமர் ஆதரிக்கக் கூடாது.

ஆனால் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு, உரிமைகளும், அதிகாரங்களும் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்படி செய்ய அதிபர் ராஜபக்*சேவை வலியுறுத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றார் சாமி.

ஆதி
15-03-2012, 05:19 AM
முதலில் நாடு; பிறகுதான் கட்சி

புது தில்லி, மார்ச் 14: ""நாட்டு நலன்தான் முதலில்; குடும்பம், கட்சி எல்லாம் அதற்குப் பிறகுதான். விபத்தில்லாப் பயணம், எலி, கரப்பான் பூச்சி இல்லாத ரயில்பெட்டி, தாமதமற்ற இயக்கம் ஆகியவற்றுக்கே பயணிகள் முக்கியத்துவம் தருகின்றனர். பொதுபட்ஜெட்டிலிருந்து போதிய நிதி கிடைக்காதபோது ரயில்வேக்காக மிதமாகக் கட்டணம் உயர்த்துவது கடமை என்பதால் அதைச் செய்தேன்'' என்றார் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி.

கட்டண உயர்வு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:

""ரயில்வேயை முழு அளவில் நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ரயில்பெட்டிகளை வழக்கமான பழுதுபார்க்கும் பணிகளுக்கு அனுப்புவதற்குக்கூட ரயில்வேயிடம் பணம் இல்லை. ரயில் பாதையில் அடிபட்டு மும்பையில் மட்டும் நாள்தோறும் 10 பேர் பலியாகின்றனர். அந்த அளவுக்கு நமது ரயில்பாதைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. இப்படி நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய சம்பவங்களால் ரயில்வேயின் நம்பகத்தன்மையே கேள்விக் குறியாகியிருக்கிறது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தில்லி மெட்ரோ ரயிலில் மிகச் சிறந்த சிக்னல், பிரேக்கிங் அமைப்புகள் இருக்கின்றன. அவர்களால் முடியும்போது ரயில்வேயில் மட்டும் அது முடியாமல் போயிருக்கிறது.

2 காசு, 5 காசு, 10 காசு, 15 காசு, 30 காசு அளவிலான கட்டண உயர்வு என்பது பயணிகளைப் பெருமளவில் பாதிக்கப் போவதில்லை. இந்தக் கட்டண உயர்வைக்கூட நான் என்னுடைய நன்மைக்காகச் செய்யவில்லை. மக்களின் நன்மைக்காகவே செய்திருக்கிறேன். மக்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள். இப்போது எதிர்ப்பவர்கள்கூட முடிவில் ஏற்றுக் கொள்வார்கள்.

ஒருவேளை பிரதமர் என்னை அழைத்து, ரூ. 4 ஆயிரம் கோடியை வைத்துக் கொள்ளுங்கள் எனத் தந்தால், கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவது பற்றி யோசிப்பேன். மற்றபடி எந்த நெருக்கடிக்கும் கட்டுப்பட்டு ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாது. ரயில்வே துறையின் அமைச்சர் பொறுப்பு என்பது மிகப்பெரிய பணி. அதில் பல சவால்கள் இருந்தாலும், வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. இதன் மூலம் சாதாரண மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அதற்குப் பணம் தேவை'' என்றார் திரிவேதி.

ரயில்வே பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக் குழுத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் மாற்றங்கள் செய்தனரா என்று கேட்டபோது, "பிரணாப் முகர்ஜியும், மான்டேக் சிங் அலுவாலியாவும் எனது நண்பர்கள். தேசபக்தர்கள். பதவியேற்கும்போது ரகசியக் காப்புப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பட்ஜெட் பற்றி யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது' என்றார்.

உயர் வகுப்பு பயணிகளுக்கான கட்டண உயர்வை ஏற்கலாம், ஆனால், சாதாரண வகுப்புகளின் கட்டண உயர்வை ஏற்க முடியாது என்று திரிணமூல் எம்.பி. ஓ' பிரியான் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, "அவரைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஏனென்றால், அவர் ரயில்வேயைப் புரிந்து கொள்ளவில்லை' என்றார் திரிவேதி.

ரயில்வே பட்ஜெட்டை தயாரிப்பதற்கு முன்பாக லால் பகதூர் சாஸ்திரி உள்பட 1947-ம் ஆண்டு முதல் ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களின் உரையை படித்ததாகவும் அவர் கூறினார்.

கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவீர்களா என்று அவரிடம் கேட்டபோது, "கடமையைச் செய்திருக்கிறேன்... பலனைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. ரயில்வே அமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்தில் நான் ஒருபோதும் உழைத்ததில்லை' என்றார்.

"ரயில்வே வளர்ச்சியடையவில்லை என்றால், நாடு வளராது' என்று கூறி முடித்தார் திரிவேதி.

நன்றி தினமணி

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-03-2012, 09:43 AM
முதலில் நாடு, பிறகுதான் கட்சி --கேட்பதற்கு மிக நன்றாகத்தான் உள்ளது :redface::sprachlos020:
நன்றி ஆதன் அவர்களே:)

அன்புரசிகன்
15-03-2012, 11:17 AM
ஆதரித்து பேசினால் கோடியில் கோடி. எதிர்த்துப்பேசினால் கோடியில் ஒருவன். பிரபலமாவதற்கு இதை விட வேறு என்ன வேண்டும் ஆதன்....

M.Jagadeesan
15-03-2012, 12:04 PM
தமிழ் நாட்டில் பஸ் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியவர்கள், இரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணமும், பயணிகள் கட்டணமும் உயர்த்தியதற்குக் கண்டனம் தெரிவித்திருப்பது , விலாநோகச் சிரிக்க வைக்கும் சிறந்த நகைச் சுவையாகும்.

அமரன்
15-03-2012, 11:22 PM
சனல் 4 இன் இரண்டாம் பாகம்.. பல சிக்கலுக்குள் தமிழத்தை தள்ளும் போலத் தெரிகிறது. முழுப்படத்தையும் பார்த்து முடித்த நொடியில் ஈழத்தமிழனின் எதிர்காலம் பற்றிய இயலாமை மேலோங்கியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அன்புரசிகன்
16-03-2012, 12:46 AM
சனல் 4 இன் இரண்டாம் பாகம்.. பல சிக்கலுக்குள் தமிழத்தை தள்ளும் போலத் தெரிகிறது. முழுப்படத்தையும் பார்த்து முடித்த நொடியில் ஈழத்தமிழனின் எதிர்காலம் பற்றிய இயலாமை மேலோங்கியதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அது முதலாவது பாகத்திலேயே எனக்கு தோன்றியது. இப்போது எல்லாவற்றையும் பார்த்து புன்முறுவல் செய்வது ஒன்றே எம்மால் முடிந்தது அமரா....

----

இந்தியா ஆதரிக்குதோ இல்லையோ இஸ்ரேலுக்கு அமெரிக்கா எப்படியோ அப்படி தான் இலங்கைக்கு சீனா... சீனா வீட்டோ அதிகாரத்துடன் அனைத்து நாடுகளுக்கும் நிச்சயம் பூச்சாண்டி காட்டும்.... அதையும் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் எனில் நேட்டோ தான் விமானத்துடன் வரவேண்டும். நிச்சயம் அதுவும் சீனாவுடன் பலப்பரீட்சையில் இறங்குவதாய் அமையும்... அமெரிக்காவுக்கு அந்த பலம் இப்போதில்லை. ஆனால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நினைத்தால் நடக்கலாம். (அது தான் லிபியாவில் நடந்தது).. எப்படியோ இறுதியில் அழிவு நம்மவர்களுக்கே.......................................

ஆதி
16-03-2012, 04:23 AM
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: கார் விலை உயரும், வருமானவரி விலக்கு உச்ச வரம்பு உயருமா?

டெல்லி: இன்று 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். இதில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் ரூ. 1.8 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் வாங்கும் சம்பளத்துக்குத் தான் வரி விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தான் இது ரூ. 1.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால், அது ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி 'ஆப்பு' வைத்தார். இதனால், இந்த ஆண்டாவது இதை ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை உயர்த்துவார் என அனைவரும் (வருமான வரியைக் கட்டும் ஊதியதாரர்கள்) ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆனால், இதை ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்துவதோடு தனது சலுகையை பிரணாப் நிறுத்திக் கொள்வார் என்றே தெரிகிறது.

அதே போல வருட வருமானத்தில் 10%, 20%, 30% வரி செலுத்துவோருக்கும் விலக்கு வரம்பு சிறிதளவு அதிகரிக்கப்படலாம் என்றும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேரடி வரிகள் சட்ட மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தும்படி சிபாரிசு செய்திருந்தது. ஆனால், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பிரணாப் முகர்ஜி, அதை ஏற்க மாட்டார் என்றே தெரிகிறது.

இருப்பினும், வரிவிலக்கு உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்திவிட்டு அமைதியாகிவிடுவார் என்றெ தெரிகிறது.

கார்கள் மீது வரிகள் அதிகரிக்கும்:

பட்ஜெட்டில் கார்களுக்கு குறிப்பாக அதிக விலை கொண்ட உயர் ரக கார்களுக்கு வரி உயர்த்தப்படும் என்று தெரிகிறது. அரசுக்கு வருவாயை கூட்டும் நோக்கத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், சொகுசு கார்கள் விலை உயரும்.

மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ. 40,000 கோடி வரை திரட்ட கடந்த பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ. 14,000 கோடிக்கு மேல் பணத்தைத் திரட்ட முடியவில்லை. இதனால் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

வரிகளை உயர்த்தியும் மானியங்களைக் குறைத்தும் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் 5 மாநில இடைத் தேர்தல்களில் விழுந்த அடி இந்தப் பேச்சையெல்லாம் அப்படியே காற்றில் கரைத்துவிட்டது.

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் உலக வங்கி, ஐஎம்எப், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் கூறிய யோசனைகளை அமல்படுத்தியதால் நாட்டில் விலைவாசி உயர்ந்து காங்கிரஸ் அரசுக்கு செல்வாக்கு படுவேகத்தில் சரிந்து வருகிறது. இதனால் இந்த பட்ஜெட்டில் பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் ஏதும் பெரிய அளவில் இருக்காது.

உலக கார் தயாரிப்பு நிறுவனங்களை எல்லாம் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். கார் லோன்களை அள்ளித் தந்து பெரும்பாலானோரை கார் வாங்க வைத்தனர். ஆனால், இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலையும் விற்றால் மத்திய அரசுக்கு ரூ. 5 முதல் 15 வரை நஷ்டம் என்ற நிலை. இதனால், கார்களின் விலையை உயர்த்தும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. இதனால் கார்கள் மீதான வரி உயரலாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இப்போது 6.9 சதவீதமாகத் தான் உள்ளது. அதே சமயம் பணவீக்க 9 சதவீதம் என்ற அளவை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது. எனவே ரிசர்வ் வங்கியின் 'ரெபோ ரேட், ரிவர்ஸ் ரெபோ ரேட்' என்ற பண சப்ளை கொள்கையை மட்டும் கொண்டு நிலைமையைச் சமாளிக்க முடியாது என்பது மத்திய அரசுக்கு மிக மிகத் தாமதமாகவே தெரியவந்துள்ளது. இதனால், என்ன செய்வது என்ற திசை தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டுள்ளது மத்திய அரசு.

கிட்டத்தட்ட பட்ஜெட்டும் அப்படித்தான் இருக்கப் போகிறது!

ஆதி
16-03-2012, 04:28 AM
உலகின் 4வது பொருளாதார வல்லரசு இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.76,933 தான்!

http://tamil.oneindia.in/img/2012/03/15-dharavi-slum1-300.jpg

டெல்லி: உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று எனப் பெயரைப் பெற்றிருந்தாலும், இந்தியாவின் தனி நபர் வருவானம் இன்னும் சிலாகிக்கும் அளவுக்கு பெரிதாக உயரவில்லை.

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ 76933 (1527 டாலர்) மட்டுமே.

இந்தியாவின் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை சற்று உயர்ந்தது என்றாலும், நடப்பு விலைவாசியோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும்.

ஜி 20 அமைப்பில் உள்ள நாடுகளில் மிகக் குறைந்த தனி நபர் வருவாய் கொண்ட நாடு என்ற 'அந்தஸ்து' இந்தியாவுக்கு மட்டும்தான். உலகின் பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் இருந்தும், தனிநபர் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லையே என்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் தனி நபர் வருவாயில் 117வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது 94வது இடத்தைப் பெற்றுள்ளது.

1990-ல் சீனா 127வது இடத்திலிருந்தது. இப்போது அந்நாடு 74 வது இடத்தைப் பெற்றுள்ளது.

அதே நேரம், நாட்டின் மொத்த உற்பத்தி - ஜிடிபி- என்று பார்த்தால், உலகின் மற்ற நாடுகளைவிட நல்ல வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. 1980 முதல் 2010 வரை உலக ஜிடிபி 3.3 சதவீதம் அதிகரித்ததென்றால், இந்தியாவின் ஜிடிபி 6.2 சதவீத உயர்வு கண்டுள்ளது. உலக உற்பத்தி வீதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி.

கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இந்தியாவை வெகுவாக பாதித்துள்ளதாகவும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆதி
16-03-2012, 04:31 AM
2ஜி: மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் - 20-ந் தேதி ஆஜராக உத்தரவு

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும் 20-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தது.

ஆனால், அந்த நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாக சிவசங்கரன் குற்றம் சாட்டி இருந்தார்.

அதன்பேரில், மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்ற பிறகுதான், ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் வழங்கியதாகவும், இதற்கு பிரதிபலனாக, ரூ.550 கோடி லஞ்சம் பங்குகள் வடிவில் கைமாறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஆண்டு தயாநிதி மாறன், அமைச்சர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அமலாக்கப் பிரிவு சம்மன்

ரூ.550 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரம் தொடர்பாக, கடந்த மாதம் தயாநிதி மாறன் மீதும், அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் மீதும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் (PMLA) கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 20-ந் தேதி, தயாநிதி மாறனோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதியோ நேரில் ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.

மறுநாள் (21-ந் தேதி) கலாநிதி மாறனோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதியோ ஆஜராக வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.

இருவரும் தங்கள் தனிப்பட்ட பணபரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் தொடர்பான பணப் பரிவர்த்தனைக்கான ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில், இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது. மேலும், தனிப்பட்ட நபர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

சி.பி.ஐ.யும் விசாரணை

இதுதவிர, இதே குற்றச்சாட்டின் பேரில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் பற்றி சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறது

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 04:34 AM
ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் கட்ச்சிகளின் கூட்டுக் கொள்ளை, எல்லா நிலைகளிலும் தலை விரித்தாடும் இலஞ்சம் இவைதான் இந்தியாவைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்:sprachlos020:
செய்திக்கு நன்றி ஆதன்:)

ஆதி
16-03-2012, 05:16 AM
இலங்கையில் மீண்டும் கிளர்ச்சி வெடிக்கும்:: அமெரிக்கா எச்சரிக்கை

கொழும்பு: போர்க்குற்றங்கள், அதற்குப் பொறுப்பேற்றல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலும், இலங்கை அரசும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சோகமான பழைய நிகழ்வுகள் மீண்டும் நடக்கக்கூடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கும் எச்சரித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:

போருக்குப் பிந்தைய அமைதி, நல்லிணக்கம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டுவரும் நிலையில், இலங்கையில் மீண்டும் பழைய சோகங்கள் திரும்பாதபடி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டனையில் இருந்து தப்பிக்கும் போக்கிலிருந்து மாறி, குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் வகையிலான நீதியும் உண்மையும் வலியுறுத்தப்பட வேண்டும்.

2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழர்களிடம் நல்லிணக்கம் ஏற்படுத்தும் அரசியல், பொருளாதார, கலாசார ரீதியிலான எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 32 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் 10 பேரின் உடல்கள் கொலை செய்யப்பட்டதற்கான தழும்புகளுடன் கிடைத்திருக்கின்றன.

வடக்குப் பகுதியில் வசிக்கும் தமிழ்ப் பெண்களை துணை ராணுவக் குழுக்கள் தங்களது பாலியல் விருப்பங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களைப் பலவந்தப்படுத்தி வடக்கில் முகாமிட்டிருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இனப் பரவலைச் சீர்குலைக்கும் நோக்கில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியிருப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது; ராணுவத் தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசு அதிகார வர்க்கத்தில் இருந்து தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று சம்பந்தன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச்செயலர் பிளேக் கூறியுள்ளதாவது:

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மீண்டும் கிளர்ச்சி ஏற்படும் என்பது பல நாடுகளில் நடந்த இனப் பிரச்னைகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இது இலங்கையிலும் நிகழும் என்றார் அவர்.

ஆதி
16-03-2012, 05:19 AM
மாத ஊதியம் வாங்குவோருக்கு இன்னொரு அடி: 'பி.எஃப்' வட்டி குறைப்பு!


டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.ஃஎப்) வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் இந்த 'நல்ல வேலையை' மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்துள்ளார்.

இதன்படி 2011-12-ம் நிதி ஆண்டுக்கு பி.ஃஎப் வட்டி விகிதம் 9.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாத ஊதியதாரக்களுக்கு இருக்கும் ஒரே கட்டாய சேமித்து இந்த பி.ஃஎப் தான். ஓய்வு பெற்றுச் செல்லும்போது இந்தத் தொகை மாத ஊதியதாரக்களுக்கு மித உதவிகரமாக இருக்கும்.

இந்தத் தொகைக்கு மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வட்டி அளித்து வருகிறது. நமது பி.ஃஎப் தொகையை மத்திய அரசு தனது திட்டப் பணிகளுக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது. இதனால், அதற்கு வட்டியைத் தருகிறது.

இந்த வட்டியைக் குறைக்கப் போவதாக பல மாதங்களாகவே மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பி.ஃஎப் வட்டி விகிததில் மத்திய அரசு கை வைக்காமல் இருந்து வந்தது.

இந் நிலையில் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சாதகமாக தேர்தல் முடிவு அமையாததால், இந்த வட்டியை அதிரடியாக 1.25 சதவீதம் வரை குறைத்து 'புண்ணியம்' தேடிக் கொண்டுள்ளார் பிரணாப்ஜி.

கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய அளவுக்கு பி.ஃஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு 9.5 சதவீத வட்டி அளித்தால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்துக்கு ரூ. 526.44 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும், இப்போது நிர்ணயிக்கப்பட்ட 8.25 சதவீத வட்டி அளித்தால் ரூ. 24 லட்சம் மட்டுமே நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆதி
16-03-2012, 05:27 AM
"அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்'' - கருணாநிதி ஆவேசம்

சங்கரன்கோவில்: "அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்" என்று ஆவேசமாக பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.

சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து சங்கரன்கோவில் வடக்கு ரதவீதி, மேற்கு ரதவீதி சந்திக்கும் இடத்தில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.

கூட்டத்துக்கு மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேச்சு:

சங்ரன்கோவில் இடைத் தேர்தல் பொதுக் கூட்டம் போல் அல்லாமல், ஒரு பிரசார மாநாடு நடைபெறுவது போன்று இந்த பொதுக்கூட்டம் அமைந்து இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு வந்து மேடையில் ஏறிய போது எனது எண்ணம் எல்லாம், ஏற்கனவே இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி மறைந்துவிட்ட தோழர் கருப்பசாமியை பற்றித்தான் நினைத்திருந்தது. அவருக்கு இந்த பொதுக்கூட்டத்திலே எனது இறுதி மரியாதையை, இறுதி அஞ்சலியை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றத்தில் அவர் வேடிக்கையாகவும், விளையாட்டகவும், சில நேரங்களில் வேதனையாகவும் நடந்து கொண்டதை நான் பொருட்படுத்தியது இல்லை.

இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்து இருக்கிறது. ஒருவர் மறைந்து அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்த தேர்தல் இது. இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள், யார் இருந்தார், யார் மறைந்துவிட்டார் என்பதையும், இப்போது யார் வரவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அண்ணா... திராவிட...

தி.மு.க. ஆட்சி திராவிட கொள்கைகளின் ஆட்சி. ஜெயலலிதா தலைமையில் இருக்கக் கூடியது அண்ணா தி.மு.க. ஆட்சி. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதில், 'அண்ணா' என்பது இயக்கத்தின் பெயர். 'திராவிட' என்பது வைத்துக் கொண்ட பெயர். அதை வைத்துக் கொண்டு தமிழகத்தில் என்னென்ன கூத்துகள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள், சாதாரண மக்கள், சாமானிய மக்கள், கல்வி வாசனையே அறியாத மக்கள் மற்றும் படிப்பது கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள், அவர்களை எல்லாம் வாழ வைக்க திராவிடர் இயக்கம் உருவாகியது. அதை உருவாக்கி வளர்த்த பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இப்போது இல்லை.

ஆனால் நாம் இருக்கிறோம. எவ்வளவு நாட்கள் இருப்போம் என்பது தெரியாது. எவ்வளவு காலத்துக்கு இருப்போமோ அதுவரை திராவிடர் என்ற பெருமையை நிலைநாட்டும் கடைமையை நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்து இங்கே விளக்கிக் கொண்டிருக்கிறோம்.

சுந்தரனாரும் விவேகானந்தரும்...

திராவிட என்று சொல்ல உச்சரிக்கும் போது அதில் ஈர்க்கப்படுகிறவர்கள் உள்ளார்கள். அந்த சொல்லால் ஈர்க்கப்படுகிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.

இந்த மாவட்டத்தை சேர்ந்த, இதே மாவட்டத்தில் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தரை சந்தித்தார். விவேகானந்தரிடம் பேசிய போது அவர், "உங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன. உங்கள் கருத்துக்களை எல்லாம் சிந்திக்கிற வாய்ப்பை நான் பெறுகிறேன். அதே நேரத்தில் நான் திராவிடர் என்ற உரிமையை விட்டுத்தர எப்போதும் முடியாது," என்று சொன்னவர்தான் சுந்தரம்பிள்ளை. அப்படிப்பட்ட எடுத்துக்காட்டாக விளங்குகிற சொல் திராவிடம். அதை முதலாவதாகக் கொண்டு இயங்குகிற கழகம்தான் தி.மு.க.

உண்மையான உணர்வோடு திராவிட என்ற சொல்லை பயன்படுத்தி, இன வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தும் இயக்கம் தி.மு.க. அப்படிப்பட்ட தி.மு.க. நடத்தும் இந்த பிரசார பொதுக் கூட்டத்தில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்கிறோம்.

'எடை' போடும் தேர்தல்

இது இடைத்தேர்தல் என்று சொல்லப்படுகிறது. உண்மைதான். இந்த இடைத்தேர்தல். ஒருவர் மறைந்துவிட்டதால் நடத்தப்படுகிற தேர்தல் என்று சொல்லலாம். தற்போது நடைபெறுகிற ஆட்சியை, 9 மாத காலம் நடைபெற்ற ஆட்சியை எடை (இடை) போடுகிற தேர்தல் என்றும் சொல்லலாம்.

1980-ம் ஆண்டு சங்கரன்கோவிலுக்கு வந்தேன். அப்போது விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 20 ஆயிரம் பேர் அந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். நாராயணசாமி நாயுடு, அவரது தளபதிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரை அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்து சிறையில் போட்டார்கள். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் இறந்தார்கள். அதை கண்டித்து போராட்டம் நடத்தியதுதான் தி.மு.க.தான். அதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். பயிர் கடனை தள்ளுபடி செய்தோம். தாட்கோ கடனை தள்ளுபடி செய்தோம். உழவர் சந்தைகள் அமைத்தோம்.

ரூ.319 கோடி செலவில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினோம். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் அந்த திட்டத்துக்காக எத்தனை முறை இங்கே வந்தார் என்பது உங்களுக்கே தெரியும்.

சமச்சீர் கல்வி பட்டபாடு

இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் என்னென்ன செய்தார் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வி திட்டத்தை சமாதிக்கு அனுப்ப முயற்சி செய்தார். உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பெற்ற தீர்ப்புதான், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. நாம் உச்சநீதி மன்றத்துக்கு செல்லாமல் இருந்து இருந்தால் இன்று சமச்சீர் கல்வி என்பதே இல்லாமல் போயிருக்கும். உயிர் சாதிக்கு கல்வியும், அடிமட்ட சாதிக்க படிப்பறிவே கிடையாது, வாய்ப்பு குறைவு என்ற சூழ்நிலைதான் வாய்த்திருக்கும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை இடித்து, துவைத்து, தரைமட்டமாக்கி, அதில் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகத்தை எல்லாம் குப்பைக் கிடங்குக்கு அனுப்பி பாரதிதாசன் புகழுக்கே களங்கத்தை ஏற்படுத்திய அரசுதான், ஜெயலலிதா அரசு. தமிழை உயிராக மதித்த பாரதிதாசன், தேவநேயபாவாணர், பாரதியார் படங்களை அகற்றினார்கள்.

ஒரு ஆட்சி மாறி, அல்லது மக்களால் மாற்றப்பட்டு இன்னொரு ஆட்சி வருவது இயற்கை. அப்படி வருகிற போது ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள், முதலில் இருந்த ஆட்சியில் இருந்தவர்களை மதிக்க வேண்டும்.

வெள்ளையர் படங்களை ஏன் அகற்றினோம் என்றால் அவர்களால் நாம் அடிமைப்பட்டோம் என்பதால் அகற்றினோம். புரட்சிக் கவிஞர் என்ன செய்தார்? புரட்சிக் கவிஞர் புத்தகங்களை எல்லாம் குப்பைக்கிடக்குக்கு ஏன் அனுப்ப வேண்டும்? இது நியாயம்தானா?

தீக்குளிப்பேன்...

சென்னையில் அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நூலகத்தை, ஆசியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் கட்டப்பட்ட நூலகத்தை, வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் பாராட்டி புகழ்ந்த நூலகம் அது.

அண்ணாவின் புகழை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினோம். ஆனால் அதை இடித்துவிட்டு மருத்துவமனையாக்க போகிறேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். அண்ணா பெயரால் கட்சி வைத்துக் கொள்ள உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

மருத்துவமனை கூடாது என்று சொல்பவன் நான் அல்ல. வேண்டும் என்றே அண்ணா பெயரால் நாங்கள் அமைத்த நூலகத்தை அகற்றிவிட்டு அங்கே ஆஸ்பத்திரி கட்டுவோம் என்றால், அது யாருக்கு ஆஸ்பத்திரி? மனநோயாளிகளுக்கா?

இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு, போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.

தம்பி, தம்பி என்று பாராட்டி எங்களை எல்லாம் ஆளாக்க அண்ணா அரும்பாடுபட்டார். அவர் பெயரால் உருவான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாங்கள் அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா ஆணையிடுகிறார் என்றால் நாங்கள் மேற்சொன்னதைவிட என்ன சொல்லிவிட முடியும்?

அண்ணா தான் எங்களுக்கு ஆசிரியர். அவரை உருவாக்கியவர் தந்தை பெரியார். எக்காரணம் கொண்டும் திராவிட குறிக்கோளில் இருந்த இடம் மாறிவிட மாட்டோம்.

இந்த தொகுதியில் இருக்கும் ஆடவர்களே, பெண்டீர்களே, ஆசிரிய பெருமக்களே, மாணவச் செல்வங்களே, விவசாய பெருங்குடி மக்களே, நெசவாள தோழர்களே, நீங்கள் எல்லாம் தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு, உங்கள் மேலான வாக்குகளை உதய சூரியன் சின்னத்திலே அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றார் கருணாநிதி.

பங்கேற்றவர்கள்

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்திருமாவளவன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், வல்லரசு பார்வர்டு பிளாக் நிர்வாகி அமாவாசை, இந்திய தேசிய லீக் பஷீர் அகமது, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கவேலு, ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சற்குணபாண்டியன், பொன்முத்துராமலிங்கம், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதி
16-03-2012, 06:38 AM
'திராணி' தேர்தல்: சங்கரன்கோவிலில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது!

http://tamil.oneindia.in/img/2012/03/16-15-muthuselvi-jawahar-sathanthirumalaikumar-muthukumar.jpeg


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் நாளை மறுநாள் (18ம் தேதி) இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் அதி்முக வேட்பாளர் முத்துசெல்வி, தி்முக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார், மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார், பாஜக வேட்பாளர் முருகன் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் செய்கின்றனர். தி்முக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி, திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், மதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்ந நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையடுத்து தொகுதியில் முகாமிட்டுள்ள அனைத்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சங்கரன்கோவிலைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதையொட்டி தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 242 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை கொண்டு செல்லப்படுகின்றன. வாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஆதி
16-03-2012, 06:41 AM
போருக்குப் பிந்தைய ஈழத் தமிழர் நிலைமை... நெஞ்சை பிழியும் கொடூரம்

யாழ்ப்பாணம்: பிரபாகரனின் மகனான பாலசந்திரனை சுட்டுக் கொன்ற வீடியோ ஆதாரத்தை 'சேனல் 4' வெளியிட்டதை அடுத்து ஈழத்தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஷயம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இதனிடையே இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் படும் துயரங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.

அங்கிருக்கும் சர்வதேச அமைப்பு ஒன்று வெளியிட்ட தகவல்கள் மேலும் நெஞ்சை கிழித்தெறிவதாக உள்ளது.

அந்த அமைப்பு தெரிவித்த தகவல்களாவது;

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அங்குள்ள பெண்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சிங்கள ராணுவத்தினரின் வெறிக்கு பெண்கள் பலியாக்கப்படுகிறார்கள். இதில் சிறுமிகளும் அடக்கம் என்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம்.

12 ஆயிரம் ஈழத்தமிழர்கள் காரணமே இன்றி விசாரணை என்ற பெயரில் சிங்கள ராணுவத்தில் சிறைபிடிக்கப்பட்டிருகிறார்கள். அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன? உயிருடன் உள்ளார்களா? என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவத்தினர் சூதாட்ட விடுதிகளையும் மதுபான விடுதிகளையும் திறந்து வைத்து அட்டூழியம் செய்து வருகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் தலையீட்டிற்கு பிறகாவது தமிழீழ மக்களின் வாழ்வில் விடியல் ஏற்படவேண்டும் என்பதே அனைத்து உலகத் தமிழர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 06:51 AM
நிச்சயம் விடியல் வரும் என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன். சிங்கள காடையரின் அட்டுழியம் ஒரு நாள் அடங்கத்தான் போகிறது :frown:

ஆதி
16-03-2012, 09:05 AM
மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்

மொத்த செலவு ரூ 14.9 ட்ரில்லியனாக உயர்வு. கடந்த பட்ஜெட்டை விட இது 29 சதவீதம் அதிகம் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி).

விலை குறையும் பொருட்கள்: எல்சிடி, எல்இடி, சைக்கிள், சினிமா டிக்கெட், கேன்சர் மற்றும் எச்ஐவி மருந்துகள் விலை

விலை உயரும் பொருட்கள்: ஏஸி, பிரிட்ஜ், மொபைல் போன் கட்டணம், சிகரெட் விலை

தங்கம், பிளாட்டினம் மீதான சுங்க வரி 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு

வைரம் மீதான வரிகள் உயர்வு

விமானங்கள், ரயில்களுக்கான கருவிகள் இறக்குமதி மீதான சுங்க வரி ரத்து

சுத்திகரிக்கப்பட்ட தங்கம் மீதான சுங்க வரி 2 மடங்காக உயர்வு

மொபைல் போன் பாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி ரத்து

பட்ஜெட் சொல்வது என்ன?: ஆடம்பர பொருள்கள், ஓட்டல் உணவுகள், விமானப் பயணங்கள், கார்கள் விலை கிடுகிடு உயர்வு!

பிராண்டட் ஆடைகள் மீதான கலால் வரி (excise duty) 12 சதவீதம் உயர்வு

எல்ஈடி, எல்சிடி மீதான சுங்க வரி ரத்து

பங்குகளை வாங்கி விற்க 20 சதவீத வரிவிலக்கு

சேவை வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்வு

சிகரெட் மீதான கலால் வரி உயர்வு

அனல் மின் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளிக்கு சுங்க வரி ரத்து

உரத் தொழிற்சாலைகளுக்கான கருவிகளுக்கு 5 சதவீத சுங்க வரி ரத்து

2012-13ம் ஆண்டில் அரசின் செலவுகள் 29% உயரலாம்

சமையல் எரிவாயு மீதான சுங்க வரி (customs duty) நீக்கம்

நிலக்கரி இறக்குமதி மீதான சுங்க வரி முழுமையாக நீக்கம்

2012-13ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 5.1 சதவீதக்குள் அடக்க இலக்கு

பெரிய கார்கள் மீதான வரி 27% உயர்வு

2013 நிதியாண்டில் சந்தையில் ரூ. 4.8 லட்சம் கோடி கடன் திரட்ட திட்டம்

பள்ளிக் கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு

அடிப்படை கலால் வரி (excise duty) 12% உயர்வு

சேவை வரி (service tax) உயர்வு மூலம் ரூ. 18,660 கோடி அதிக வருவாய் கிடைக்கும்

7 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்களாக தரம் உயர்வு

விவசாயிகள் கடன் அட்டைகளை அனைத்து ஏடிஎம்களிலும் பயன்படுத்தலாம்

பான் கார்டு மூலம் வருமான வரி செலுத்தாதோரை கண்டறிய திட்டம்

பட்ஜெட் சொல்வது என்ன?: வருமான வரி கட்டுவோருக்கு பெரிய சலுகைகள் ஏதும் இல்லை.. கொஞ்சமே கொஞ்சம் சலுகை

வருமான வரி விலக்கு ரூ. 2 லட்சமாக உயர்வு (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை)

ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி

ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20%

ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி

பட்ஜெட் 2012-வீடியோ

2012ம் ஆண்டில் திட்டமில்லா செலவுகள் ரூ. 9.7 லட்சம் கோடி

கறுப்புப் பணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். சிறப்பு பிரிவும் தொடங்கப்படும்

பிரணாபின் 'தனியார், அந்நிய மய பட்ஜெட்' - தூங்கி வழியும் பங்கு மார்க்கெட் - ரிலையன்ஸ், டாடா பங்குகள் சரிவு

2012ம் ஆண்டில் வரிகள் மூலமான வருவாய் ரூ. 10.77 லட்சம் கோடி

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு

2012ம் நிதியாண்டில் நாட்டின்நிதிப் பற்றாக்குறை 5.9% சதவீதம்

மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட உற்பத்தித் திறன் உயர்வு

நாட்டில் போலியோ முற்றாக ஒழிக்கப்பட்டது

12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 புதிய பள்ளிகள்

பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1.95 லட்சம் கோடியாக உயர்வு

பட்ஜெட் சொல்வது என்ன: இனி மானியங்கள் பெருமளவு 'கட்'. ரேஷன், விவசாயத்தில் மட்டும் குறைந்த அளவு தொடரும்!

அடிப்படைக் கல்விக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 25,555 கோடி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களுக்கு வட்டி குறைப்பு

ராஜிவ் காந்தி பெயரிலான முதலீட்டுத் திட்டத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு

பங்குகள் மூலமான புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகம்

பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த ரூ 12040 கோடி

குடிமைப் பொருள் வழங்கல் முழுக்க முழுக்க கணிணிமயமாக்கப்படும்

இனி கிஸான் கிரடிட் கார்டுகளை அனைத்து ஏடிஎம்களிலும் உபயோகிக்கலாம்

ஊரக குடிநீர், கழிவு நீர் வெளியேற்ற திட்டங்களுக்கு ரூ. 14,000 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ரூ 11937 கோடி

கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ரூ 24000 கோடி

அரசின் சொத்துக்களை விற்று ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்

அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கு நிதி திரட்ட ரூ. 60,000 கோடிக்கு வரியில்லா பத்திரங்கள்

தேசிய அடையாள அட்டைத் திட்டத்துக்கு இந்த ஆண்டு மேலும் ரூ. 14,232 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் சொல்வது என்ன?: விவசாயிகளின் ஓட்டுக்கு மீண்டும் குறி.. கடன், மானியத்துக்கு 1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு

விவசாயத்துறைக்கு உதவும் நபார்ட் வங்கிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு

விவசாய கடன்களுக்கான வட்டி இந்த ஆண்டும் தளர்வு

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ. 5.75 லட்சம் ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் கோடி அதிகம்

நீர்ப்பாசனத்துக்கு என தன நிறுவனம். நீர்ப் பாசன திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் சொல்வது என்ன?: உள்கட்டமைப்பு, சில்லறை வர்த்தகம், தொழில்துறை, வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகளுக்கு தாராளம்

பட்ஜெட் சொல்வது என்ன?: அனைத்துத் துறைகளிலும் தாராள தனியார் மயம்

பட்ஜெட் சொல்வது என்ன?: கிங்பிஷருக்கு உதவ விமானத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி!

நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பு

மின்துறை, வீடுகள்-சாலை கட்டுமான நிறுவனங்கள் வெளிநாட்டு கடன்கள் வாங்க அனுமதி

2013ம் ஆண்டில் 8,800 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

2013ம் ஆண்டில் விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்பட்டு ரூ. 20,208 கோடி ஒதுக்கீடு

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு 50 லட்சம் கோடி இலக்கு - தனியாரைச் சேர்க்கவும் முடிவு

மின் உற்பத்தித் துறைக்கு நிதி திரட்ட ரூ. 10,000 கோடி வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்

5 ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டம்

விமானப் போக்குவரத்துத் துறையில் 49 சதவீதம் அந்நிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி

இந்திய அரசின் கடன் பத்திரங்களில் அன்னிய முதலீடுகளுக்கு தாராள அனுமதி

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 15,890 கோடி நிதியுதவி

பட்ஜெட் எபெக்ட்: வாகனங்கள் மீது வரி உயரலாம் என்ற யூகத்தால் கார், பைக் நிறுவன பங்குகள் விலை சரிவு

'பட்ஜெட் எபெக்ட்'- பங்குச் சந்தைகள் துள்ளல்- சென்செக்ஸ் குறியீட்டு எண் 180 புள்ளிகள் உயர்வு

சில்லறை வணிகத்தில் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள்

மானியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்

சில்லறை வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டம்

ராஜிவ் காந்தி பெயரில் புதிய முதலீட்டுத் திட்டம்

மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் சில்லறை வணிகத் துறையில் மேலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டுக்கு முயற்சி

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்

தனியார் முதலீடுகளை வேகமாக அதிகரிக்க நடவடிக்கை

இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்

மண்ணெண்ணெய்க்கு நேரடியாக மானியம் தர திட்டம்

3 ஆண்டுகளில் மானியங்களின் அளவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.7%க்குள் குறைக்க திட்டம்

மானியங்களின் அளவு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) 2%க்குள் கட்டுப்படுத்தப்படும்

உணவுப் பொருட்களுக்கு அதிக மானியம்

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கும் மானியத்தை நேரடியாக வழங்க திட்டம்

அந்நியச் செலாவணி 29 சதவீதம் அதிகரிப்பு

விவசாயிகள், குடிமக்களுக்கான மானியங்கள் நேரடியாக வழங்கப்படும். சோதனை முறையில் 50 மாவட்டங்களில் இப்படி வழங்கப்படும்.

பொதுப் பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்தில்

பெட்ரோலிய எண்ணெய் விலைகளின் கடும் உயர்வால். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் சராசரி விலை 1 பேரல் $115

மானியங்களால் தான் நிதிப் பற்றாக்குறை மிகவும் அதிகரிப்பு

நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3.6%. இந்த ஆண்டு அதைக் குறைக்க நடவடிக்கை

ஐரோப்பிய பொருளாதார நிலைமை படுமோசம்

தனியார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை

உற்பத்தித் துறை மீட்சியடைந்து வருகிறது

கடந்த 2 ஆண்டுகளாகவே வளர்ச்சி கடுமையாக பாதிப்பு

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதார நிலைமை பரவாயில்லை

பணவீக்கத்தை கட்டுப்படுத்த சந்தையில் நிதியை கட்டுப்படுத்தியதால் வளர்ச்சி பாதிப்பு

சர்வதேச பொருளாதார சீர்குலைவு இந்தியாவையும் பாதிக்கிறது

2012ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது

பணவீக்க விகிதம் அடுத்த சில மாதங்களில் குறையும்

அடுத்த ஆண்டில் இந்திய வளர்ச்சி 7.6% ஆக உயரும்

கருப்புப் பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை

ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 200 மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்

நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும்

Hega
16-03-2012, 09:06 AM
தொடர் செய்திகளுக்காக நன்றி ஆதன் .

ஆதி
16-03-2012, 09:18 AM
காணாமல்போன 1.17 லட்சம் குழந்தைகள் பற்றி விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் காணாமல் போன 1.17 லட்சம் குழந்தைகளின் நிலைமை பற்றி உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு சாரா நிறுவனமான பச்பான் பச்சோ அந்தோலன் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அரசு சாரா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் புல்கா , புவான் ரிப்பு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசின் புள்ளிவிவரங்களின்படியே 1.17 லட்சம் குழந்தைகள் கடந்த 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் ஆகியவற்றுக்காக கடத்தப்பட்டனரா? அல்லது குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டுள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஒரு நாளைக்கு 11 குழந்தைகள் காணமல்போவதாகவும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களில் பெரும்பாலும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காணாமல் போன 1.17 லட்சம் குழந்தைகளின் நிலைமை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 09:37 AM
மத்திய பட்ஜெட் குறித்து உடனயாக தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ஆதன் அவர்களே :aktion033::aktion033:

mathura
17-03-2012, 10:37 AM
ரத்தின சுருக்கமாக பட்ஜெட் விவரங்கள் மிக அருமை திரு ஆதன் அவர்களே. மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி

M.Jagadeesan
17-03-2012, 02:05 PM
நன்றி ஆதன்!!

ஆதி
19-03-2012, 06:55 AM
இலங்கைக்கு எதிரான தீர்மானம்... சிதம்பரம் முயற்சியால் ஆதரிக்கிறது இந்தியா?

டெல்லி: இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், "எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா... இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது," என்ற கேள்விகளை பாராளுமன்றத்திலேயே தமிழர் கட்சிகள் முன்வைத்தன.

தா பாண்டியன் போன்றவர்கள், இந்த முறை இந்தியா இலங்கைக்கு ஆதரவு காட்டினால், நான் ஒரு இந்தியன் என்ற குடியுரிமையையே மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். நான் மட்டுமல்ல, இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்லும் நிலைக்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தள்ளப்பட்டுவிடும் என பகிரங்கமாகக் கூறினார்கள்.

திமுக எம்பிக்களும் இதையே பாராளுமன்றத்தில் எதிரொலித்தனர். ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிமுகவினரும் இந்த விஷயத்தில் உறுதியாக நின்று மத்திய அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.

இனியும் இந்தப் பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கியதாகத் தெரிகிறது.

"இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்பதை, அது தமிழ் இனத்துக்கே எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு பகையாளியா? என்ற கேள்வியை கிருஷ்ணாவின் அறிக்கை எழுப்பிவிட்டது," என அழுத்தமாகக் கூறியுள்ளாராம் ப சிதம்பரம்.

இது பிரதமர், சோனியா உள்ளிட்ட அனைவரையுமே யோசிக்க வைத்துள்ளது. எனவே சில முக்கியமான அம்சங்களில் திருத்தங்கள் செய்து, தீர்மானத்துக்கு ஆதரவு தரலாம் என்பதே இப்போதைய நிலைப்பாடு என்கிறது டெல்லி வட்டாரம்.

இன்னொரு பக்கம், இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெருமளவு பெற்று வரும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்து செயல்படுவது டெல்லியை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, நாச்சிக்குடா, கச்சத் தீவில் சீனாவை காலூன்ற வைக்கும் வகையில், சீன வீரர்கள் உதவியுடன் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

எனவே இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் விதமாக, ஐநாவில் தமிழருக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கலாம் என்கிறார்கள்.

இதிலும் ப சிதம்பரத்தின் பங்குதான் முக்கிய அங்கம் வகிக்கிறது. ராஜீய உறவுகளில் இலங்கை தொடர்ந்து இழைத்து வரும் துரோகம், இலங்கைக்கு ஆதரவளிப்பதால், தமிழகத்தில் எந்த அளவு காங்கிரஸ் அந்நியப்பட்டு நிற்கிறது என்ற உண்மை ஆகியவற்றை ப சிதம்பரம்தான் இந்த முறை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

இவரது கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், அந்தோனி ஆகியோர் ஒப்புக் கொண்டதைவிட, எப்போதும் இலங்கையின் நண்பனாகத் திகழும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டதைத்தான் டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பேசுகிறார்கள்.

இன்னொரு பக்கம் திமுகவுக்கு நேர்ந்துள்ள பெரும் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளுமாறு சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளார்.

"மம்தாவைப்போல இந்த முறை கருணாநிதி கடும் நிலைப்பாட்டை மேற்கொண்டால், மத்திய அரசு தார்மீக ரீதியாகவே பலமிழக்கும். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் அரசு தமிழர் விரோதமாகப் போவதால், தமிழகத்துக்குள் முற்றாக ஆதரவை இழந்து நிற்க வேண்டி வரும்" என்ற நிதர்சனத்தை முன்னெப்போதையும்விட தெளிவாகவே உணர்த்தியுள்ளார் சிதம்பரம் என்கின்றனர்.

தங்கள் கோஷ்டி சண்டைகளை மறந்து, இந்த முறை சிதம்பரத்தின் கருத்தை முழுமையாக ஆதரித்துள்ளனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இதுவும் மத்திய அரசின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

மார்ச் 23-ல் வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் வரும் மார்ச் 22 அல்லது 23ம் தேதி ஐநா மனித உரிமைச் சபையில் ஓட்டுக்கு விடப்படுகிறது. ஏற்கெனவே இந்தத் தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவிள்ளன. இன்னும் ஒரு நாடு ஆதரவளித்தாலே போதும். எனவே இந்தியா ஆதரித்தாலும், இல்லாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் எம் தந்தையர் நாடு என்று ஈழத் தமிழர்கள் கொண்டாடிய தேசமான இந்தியா, இத்தனை துயரங்களுக்குப் பிறகாவது அரவணைக்காதா என்ற ஏக்கம் உலகத் தமிழரிடையே நிலவுகிறது. தாயகத் தமிழர்கள் 8 கோடி பேரின் ஆதங்கமும்கூட அதுவே.

அதைப் புரிந்து நடந்தால் இந்தியா இழந்த மரியாதையையும் அபிமானத்தையும் ஓரளவுக்குப் பெறும்!

ஆதி
19-03-2012, 06:57 AM
விரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 3 அடுக்கு பாதுகாப்பு


நெல்லை: சங்கரன்கோவில் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 242 வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புளியங்குடி வீரசாமி செட்டியார் பொறியியில் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த 242 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.

பின்னர் 242 இயந்திரங்களும் 24 மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான புளியங்குடி வீரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகளில் அவை வைக்குப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு அந்த பொறியியல் கல்லூரிக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்நியர் நுழைவதை தடுக்க கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த கல்லூரி முழுவதும் போலீஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (21ம் தேதி) நடக்கிறது.

ஆதி
19-03-2012, 07:00 AM
கூடங்குளத்தில் ஏடிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள், போலீஸார் குவிப்பு!

கூடங்குளம்: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முக்கிய விவாதத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், கூடங்குளத்தில் கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக இது நாள் வரை தமிழக அரசு போராட்டக் குழுவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப போராட்டக் குழுவினர் மீது தமிழக அரசு எந்தவிதமான கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆனால் உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் எந்தவிதமான சமாதானத்திற்கும் வர மறுத்து வருவதால் தமிழக அரசு எரிச்சலடைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையில், அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையையும் உதயக்குமார் நிராகரித்து விட்டார். இதனால் தமிழக அரசு கோபமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அணு மின் நிலையத்தைத் தொடங்க தமிழக அரசு பச்சைக் கொடி காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கேற்ப சமீபத்தில் கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளை திடீரென ஆய்வு செய்தார். இவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின்போது தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலையை, போராட்டத்தை பெரும் போலீஸ் பட்டாளத்துடன் சென்று முறியடித்தவர் என்பதால் ஜார்ஜின் வருகை கூடங்குளம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளார். அவர் போக 10 மாவட்ட எஸ்.பிக்களும் வந்துள்ளனர். பெருமளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த பின்னணியில், கூடங்குளத்தில் ஜார்ஜ் மற்றும் பத்து மாவட்ட எஸ்.பிக்கள், போலீஸாரின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதி
19-03-2012, 07:03 AM
ரூ8 ஆயிரம் கோடி விமான ஊழல்: வழக்கு பதிவு செய்யக் காத்திருக்கும் சிபிஐ


டெல்லி: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை வாங்கியதில் ரூ8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கில் 6 விமானத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.

43 விமானங்கள்

இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்கள் வாங்கியதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. முதல் நிலை விசாரணை அறிக்கை பதிவு செய்துள்ளது.

இந்த ஊழலில், கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் உள்பட 6 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு அனுமதி கேட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அது பற்றிய கோப்புடன் சி.பி.ஐ. கடிதம் எழுதியது.

ஆனால் அந்தக் கோப்பை சி.பி.ஐ.க்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது. அதில் சி.பி.ஐ. கூறியுள்ள அளவுக்கு, அந்த அதிகாரிகளுக்கு பொறுப்பு கிடையாது எனவும் வழக்கு பதிவு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. மீண்டும் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.

ஆதி
19-03-2012, 10:14 AM
கூடங்குளம் அணு மின் நிலையத்தால் பாதிப்பில்லை- வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 500 கோடி: ஜெ.!

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தால் பாதிப்பில்லை. எனவே இதை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளத்தில் ரூ. 500 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

எனது தலைமையில் இன்று (19.3.2012) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யாவிற்கு இடையே 1988 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, அதன் அடிப்படையில், இதற்கான பணிகள் 2001-ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள் 99.5 விழுக்காடும், இரண்டாவது அணு மின் நிலையத்தின் பணிகள் 93 விழுக்காடும் முடிவுற்றிருந்த நிலையில், அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு சில ஐயப்பாடுகளை எழுப்பி, அதனை மூட வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதனையறிந்தவுடன், ‘மக்கள் நலன்’ என்ற உன்னத நோக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை தொடர வேண்டாம் என்று தெரிவித்து, இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளிக்க நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் அவர்களுக்கு 19.9.2011 அன்று நான் கடிதம் எழுதினேன்.

எனது வேண்டுகோளினையடுத்து, பாரதப் பிரதமரின் உத்தரவிற்கிணங்க, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி அவர்கள் 20.9.2011 அன்று இடிந்தகரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்தார். 21.9.2011 அன்று என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து பேசியது குறித்து என்னிடம் எடுத்துரைத்தார்.

அன்றைய தினம், அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் சார்பாக அவர்களின் பிரதிநிதிகளும் என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகள் மேற்கொண்டு தொடரப்படக்கூடாது என தமிடிநநாடு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார்கள்.

அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் பொருட்டு, எனது தலைமையில் 22.9.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலைய பணிகைள நிறுத்தி வைக்குமாறு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வது” என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு, 7.10.2011 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமரை

டெல்லியில் சந்தித்து, அமைச்சரவை தீர்மானம் அடங்கிய மனு ஒன்றினை அளித்து உள்ளூர் நிலவரங்களை எடுத்துரைத்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்றும், அந்தக் குழு இந்தப் பிரச்சனை குறித்து விரிவாக ஆராயும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மத்திய அரசால் 15 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு, அணுமின் நிலைய எதிர்ப்புக் குழு சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேருடனும், மாநில அரசின் பிரதிநிதிகளான திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடனும் 8.11.2011, 18.11.2011 மற்றும் 15.12.2011 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினரால் பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டன. அந்த வினாக்களுக்கான பதில் அறிக்கையை வல்லுநர் குழு அளித்தது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பது குறித்த அறிக்கையையும் அளித்தது. இதனையடுத்து, 31.1.2012 அன்று நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில், மேலும் ஓர் அறிக்கையை மத்திய வல்லுநர் குழு அளித்தது.

இந்தக் கூட்டத்தில் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவின் சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பிரதிநிதிகளில் ஒருவர் மட்டும் கலந்து கொண்டார்.

இந்த அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலைகள் சர்வதேச தரத்திலான பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு ஆடீநுவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இத்திட்டத்தின் மூலம் வெளியேறும் கடல்நீர் மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை நிர்ணயித்துள்ள அளவில் இருப்பதால், கடல்வாழ் உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க பின் விளைவுகள் ஏதும் இருக்காது எனவும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி இந்த அணுமின் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே நிலவி வரும் எண்ணங்கள் மற்றும் அச்ச உணர்வுகள் குறித்தும் ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்படும் என்று 4.2.2012 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் அறிவித்தேன்.

இதன் அடிப்படையில், முன்னாள் அணுமின் சக்தி கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஆர். ஸ்ரீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டி அறிவு ஒளி, அண்ணா பல்கலைக்கழகம், எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர்

டாக்டர் எஸ். இனியன், மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி எல்.என். விஜயராகவன் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு 9.2.2012 அன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, கூடங்குளம் பகுதிக்குச் சென்று அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களை சந்தித்து, மக்கள் மத்தியிலே நிலவி வரும் எண்ணங்களையும்,அச்ச உணர்வுகளையும் கேட்டறிந்ததன் அடிப்படையிலும், அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலும், ஓர் அறிக்கையினை தயார் செய்து 28.2.2012 அன்று என்னிடம் அளித்தது.

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட இந்த வல்லுநர் குழு, கடல் நீர் எடுக்கும் பகுதி; உப்பு நீரைக் குடிநீராக்கும் நிலையம்; அணு உலைகளை அவசரமாகக் குளிர்விப்பதற்காக 6.3 மெகாவாட் திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்; ஒவ்வொரு பாதுகாப்பு முறைக்கும் தேவையான மின்கலன் வங்கி மற்றும் கட்டுப்பாட்டு மையம்; அணு உலை கலன்கள், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கு, முதன்மைக் குளிர்விக்கும் பம்புகள், வெப்பம் நீக்கும் முறைக்கான காற்று உட்புகும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அணுஉலைக் கட்டிடம்; மின் சுழலி மற்றும் கன்டன்ஸர் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தது.

பின்னர் அணுசக்திக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த 9 பிரதிநிதிகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒரு கலந்தாய்வையும் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், இத்திட்டம் குறித்த உள்ளூர் மக்களிடையே ஏற்பட்டுள்ள உணர்வுகளைத் தெரிந்து கொண்டு அதனைச் சரி செய்ய வேண்டும் என்பதே இந்த வல்லுநர் குழுவின் நோக்கம் என்றும், கூடங்குளம் மக்களின் எண்ணங்களை தமிழக அரசு மிக உயர்வாகக் கருதுவதாகவும், அணுமின் திட்ட எதிர்ப்பாளர்களிடம் அழுத்தம்திருத்தமாக வல்லுநர் குழு எடுத்துக் கூறியது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு கீழ்க்காணும் கருத்துகளை தெரிவித்துள்ளது.

1) கூடங்குளம் பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கமோ சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை.

2) கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளைப் போக்க உண்மையான முயற்சிகள் அனைத்தையும் அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழுவும், தொழில் நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்து உள்ளூர் மக்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதில்களை அளித்துள்ளது. இந்த வல்லுநர் குழு அணுமின் நிலையத்தை பார்வையிட்ட போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அறிக்கையில் விவரித்துள்ளது.

3) மேற்கூறிய காரணங்களினால், அரசு இத்திட்டத்தின் செயல்பாடுகளை மீண்டும் துவக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து அதன் மூலம் விரைவில் மின் உற்பத்தி தொடங்க ஆலோசிக்கலாம் என்றும்;

4) மேலும், உள்ளூர் மக்கள் இடையே சுமூகமான உறவுகள் ஏற்பட வழிவகுக்கும் வகையில், உள்ளூர் மக்களின் வாடிநக்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதாரத் திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்திட அணுசக்தித் துறை கேட்டுக்கொள்ளப்படலாம் என்றும் தெரிவித்தது.

வல்லுநர் குழு இதற்கான கீழ்க்கண்ட திட்டங்களை பரிந்துரைத்துள்ளது:

அ) கூடங்குளம் பகுதி மக்களிடையே இந்த மின் நிலையத்தின் சாதகமான அம்சங்கள் குறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்;

ஆ) கூடங்குளம் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளைச் சரி செய்ய தற்போது நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையை மாற்றி கூடங்குளம் பகுதியிலேயே விசைப்படகுகளைச் சரிசெய்யும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது;

இ) உள்ளூர் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைத்து பின்னர் நல்ல விலைக்கு விற்க ஏதுவாக ஒரு குளிர் பதனீட்டு நிலையம் அமைத்துத் தருதல்.

இந்தப் பின்னணியில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த அறிக்கை; மாநில அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த அறிக்கை; மற்றும் அணுமின் திட்டத்திற்கு எதிரானவர்களின் மனு விரிவாக ஆராயப்பட்டு, நில நடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவை ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதும், எவ்வாறான நிலையிலும் இந்த அணுமின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பதும், இந்த அணுமின் நிலையம் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பதும் தெரியவந்ததன் அடிப்படையிலும்; இந்த அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதும்; எனவே மீனவர் வாடிநவாதாரங்கள் பாதிக்கப்படாது என்பதன் அடிப்படையிலும்; அப்பகுதி மக்களிடையே நிலவும் ஐயப்பாடுகளுக்கு மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதில் அளித்துள்ளதை கருத்தில் கொண்டும்; அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது தான் என்பது தெரிய வந்ததன் அடிப்படையிலும்; மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத நிலைமையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும்;

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எனது தலைமையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கூடங்குளம் பகுதியில் சிறப்பு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், அங்கு வசிக்கும் மீனவர்களின் விசைப்படகுகளை சரி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்; மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைக்க ஏதுவாக ஒரு குளிர் பதனீட்டு நிலையம் அமைத்துத் தருதல்; அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தருதல்; சாலை வசதிகள் போன்ற இன்றியமையா உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகிய வளர்ச்சிப் பணிகள் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை தீர்மானித்தது.

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவிற்கு இணங்க, திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். அணுமின் நிலையப் பணிகளை மீண்டும் உடனடியாக மேற்கொள்வது என்ற தமிழக அரசின் இந்த முடிவிற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆதி
19-03-2012, 10:17 AM
பிரதமர் அறிவிப்பில் திருப்தி- கருணாநிதியின் உண்ணாவிரதம் வாபஸ்!


சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் இன்று கூறியுள்ள நிலையில், அதை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதையடுத்து கருணாநிதி தலைமையில் 22ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை திமுக தலைமை வாபஸ் பெற்றுள்ளது.

மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் என்று முன்னதாக திமுக தலைமை இந்று காலை அறிவித்திருந்தது.

அண்ணா அறிவாலயம் வளாகத்தில் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார். மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகர்களில் கட்சியினர் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும் அது கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் லோக்சபாவில், பிரதமர் இதுதொடர்பாக விளக்கம் அளித்துப் பேசினார். இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். இதையடுத்து தற்போது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்து விட்டது திமுக.

கருணாநிதியின் முந்தைய உண்ணாவிரதம்

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த கடைசி நாட்களில், இப்படித்தான் கருணாநிதி ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து மெரீனா பீச்சில் போய் படுத்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே இலங்கையில் போர் நின்று போய் விட்டதாக கூறி எழுந்து வீடு திரும்பினார். ஆனால் அதற்குப் பிறகுதான் பல ஆயிரம் பேரை சிங்களப் படையினர் கொடூரமாகக் கொன்று குவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

ஆதி
19-03-2012, 11:49 AM
கூடங்குளத்தில் அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் 10 பேர் திடீர் கைது!


கூடங்குளம்: கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் பெருமளவில் ஆயுதப் போலீஸார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அதிரடியாக அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 10 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவில் முக்கிய உறுப்பினர் ஆவார். போராட்டக் குழுவில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை இவர் சந்தித்துள்ளார். அதேபோல பிரதமரை சந்தித்த குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

அதேபோல ராஜலிங்கம், ஜேம்ஸ் அன்னதுரை, கணேசன் ஆகியோர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கூடங்குளத்திலிருந்து கொண்டு சென்றுள்ளனர். என்ன காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை.

இந்த கைது நடவடிக்கை கூடங்குளத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளனர்.

கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை பத்து மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு எஸ்.பி. தலைமையில் போலீஸாரைக் குவித்து வைத்துள்ளனர். ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

வஜ்ரா வாகனங்கள், ஆயுதப் படையினர், துப்பாக்கி ஏந்திய போலீஸார் என சகல விதத்திலும் தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணிகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அணு மின் நிலையப் பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 03:32 PM
விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று தெரிகிறது. இதானால் தமிழ் நாட்டின் மின்தடை எந்த அளவு குறையும் என்று தெரியவில்லை.

ராஜா
18-07-2012, 09:17 AM
நடிகர் ராஜேஷ் கன்னா மறைவு..

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/acters/rajeskanna--001.jpg

பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணா உடலநலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.


உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் இன்று (18/07/2012) பிற்பகலில் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த ராஜேஷ் கண்ணா பிரபல நடிகை டிம்பிள் கபாடியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு டிம்பிள் கண்ணா, ரிங்கி கண்ணா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களும் நடிகைகள் ஆவர். பிரபல இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், ராஜேஷ் கண்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ராஜேஷ் கண்ணாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.


29 டிசம்பர் 1942ஆம் ஆண்டு பிறந்த ஜதின் கண்ணா என்ற ராஜேஷ் கண்ணா, 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 180 படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் சில படங்களை தயாரித்தும், சில பாடல்கள் பாடியும் உள்ளார்.


மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் விருது இவருக்கு 2005ல் வழக்கப்பட்டது.


மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.

ராஜேஷ் கண்ணா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1992ல் நடந்த இடைத்தேர்தலில் புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996ல் நடந்த பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு தக்க வைத்துக்கொண்டார்.

நன்றி : நக்கீரன்.இன்

ராஜா
19-07-2012, 05:01 AM
அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம்: ஜெ. அதிரடி


அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று (18.07.2012) மாலை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே, வருவாய்த் துறை அமைச்சர் பதவியில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது.

ராஜா
19-07-2012, 05:15 AM
ஜெயலலிதா முதல் ஆளாக சென்று வாக்களித்தார்

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஓட்டுப்போட்டு வகிறார்கள். தமிழக சட்டசபை உறுப் பினர்கள் சென்னை கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக வாக்களித்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குசாவடியில் எம்.பி. க்கள் வாக்களித்து வருகின்றனர்.

ராஜா
19-07-2012, 05:48 AM
கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்


நான்குநேரியை சேர்ந்தவர் காளிதாஸ் என்ற காளியப்பன் (வயது 28). இவர் மீது வள்ளியூர் மற்றும் ஈரோடு பகுதியில் திருட்டு வழக்கு உள்ளது. இதை தொடர்ந்து போலீசார் காளியப்பனை கைது செய்து கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்திருந்தனர்.

வள்ளியூரில் நடந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 16-ந்தேதி கணேஷ் குமார், தர்மலிங்கம் உள்பட 3 போலீஸ்காரர்கள் காளியப்பனை வள்ளியூர் அழைத்து சென்றனர்.

அங்கு வழக்கு விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரெயிலில் காளியப்பனை போலீசார் அழைத்து வந்தனர். காளியப்பன் கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை ரெயில் திண்டுக்கல் வந்தது. அப்போது கைவிலங்குடன் கைதி தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவிலங்குடன் தப்பி ஓடிய காளியப்பனை தேடி வருகின்றனர்.

ராஜா
20-07-2012, 05:34 AM
நித்திக்கு 30-ம் தேதி மருத்துவ பரிசோதனை


கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கற்பழிப்பு வழக்கு தொடர்பாக நித்யானந்தா வரும் 30ம் தேதியன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று ராமநகரம் ஜூடிஷியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கான நோட்டீஸ் நித்யானந்தாவுக்கு இந்த வாரம் அனுப்பப்பட்டது என்று சி.ஐ.டி. போலீசார் கூறினார்கள்.

பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவப் பரிசோதனைக் குழு நித்யானந்தாவைப் பரிசோதிக்கும். முடிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறாக இருக்கும் நிலையில், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று சி.ஐ.டி. தரப்பில் தகவல் கூறப்படுகிறது.

ராஜா
20-07-2012, 05:40 AM
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இலங்கை நாளை மோதல்

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹம்பன் டோடா மைதானத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய அணி கடைசியாக மார்ச் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் விளையாடினர். அதன் பிறகு தற்போது தான் இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.


ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் இலங்கை தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்று இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

நட்சத்திர வீரர் தெண்டுல்கர் இந்த தொடரில் விளையாடததால் ஷேவாக்குடன் தொடக்க வீரராக யார் விளையாடுவர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாளைய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

ராஜா
20-07-2012, 07:44 AM
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

http://tamil.oneindia.in/img/2012/07/20-vijayakanth-dmdk1-300.jpg

ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் தாம் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

ராஜா
20-07-2012, 03:05 PM
நித்யானந்தா வழக்கில் அமெரிக்க கோர்ட் அதிரடி தீர்ப்பு


அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளை நிதி வசூல் செய்து வந்தது. இந்நிலையில் பாபட்லால் சாவ்லா என்பவர் நித்யானந்தாவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளைக்கு ரூ.8 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாகவும், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இவ்வழக்கு விசாரணையின்போது அறக்கட்டளையின் தலைவர் நித்யானந்தாதான் என்பதற்கான கையெழுத்து ஆவணமும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.


வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் நித்யானந்தா அறக்கட்டளை குற்றம் புரிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மனுதாரர் பாபட்லால் சாவ்லாவிடம் பெற்ற ரூ.8 கோடி பணத்தையும் நித்யானந்தா அறக்கட்டளை திருப்பி வழங்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொழிலதிபர் பாபட்லாலைத் தொடர்ந்து மேலும் பலர் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிதாக வழங்கப்பட்ட கோர்ட் தீர்ப்பை அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் வரவேற்றுள்ளார்.

மேலும் நித்திக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு நகல்களை இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

ராஜா
20-07-2012, 03:08 PM
ஜனாதிபதி தேர்தல் : முலாயம்சிங்கின் வாக்கை ரத்து செய்யுமாறு
தேர்தல் ஆணையம் உத்தரவு


இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.


இந்த தேர்தலின் போது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் நாடாளுமன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். அப்போது, தான் தவறுதலாக வாக்களித்து விட்டதாக கூறி புதிய வாக்குச்சீட்டு தருமாறு கோரினார்.


இதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக வாக்களித்தபோது,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்ததாக அறிவித்தார். மேலும் பா.ஜனதா கட்சியின் வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்ததால் தவறுதலாக வாக்களித்ததாக அவர் கூறியுள்ளார்.




இந்த தகவல் வெளிவந்ததை தொடர்ந்து, சங்மாவின் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, முலாயம்சிங்கின் வாக்குப்பதிவை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது.

ராஜா
20-07-2012, 03:17 PM
அமெரி்க்காவில் பேட்மேன் படம் ஓடிய தியேட்டரில் முகமூடி நபர் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

http://tamil.oneindia.in/img/2012/07/20-batman-darkknight-300.jpg

அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியான அரோராவில் உள்ள மாலில் அமைந்துள்ள திரையரங்கில் நேற்று நள்ளிரவில் புதிய பேட்மேன் படமான தி டார்க் நைட் ரைஸஸ் திரையிடப்பட்டது. அப்போது புகையில் இருந்து தப்பிக்கும் முகமூடி அணிந்த மர்ம நபர் தியேட்டருக்குள் புகுந்து யாரும் எதிர்பாராவிதமாக தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். இதில் அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பிறகு அந்த நபர் கண்ணீர்ப்புகை குண்டை வீசிவிட்டுச் சென்றுவிட்டார். அவர் 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கத்தியைக் கொண்டு வந்துள்ளார்.
முதலில் அவர் சுடத் தொடங்கியதும் ஏதோ பட விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என்று பார்வையாளர்கள் நினைத்துள்ளனர். அதன் பிறகே அவர்களுக்கு விபரீதம் புரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அமெரி்க்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய படமான தி டார்க் நைட் ரைஸஸ் குறித்து பிரபல திரை விமர்சன இணையதளமான ராட்டன் டொமேட்டோஸ் விமர்சனம் செய்திருந்தது. அந்த கட்டுரையின் கமென்ட்ஸ் பாக்ஸ் நிரம்பிவிட்டது. அதில் சாதாரண கமென்ட்ஸ் வரவில்லை. வாசகர்கள் ஒருவருக்கு ஒருவர் கொலை மிரட்டல், கற்பழிப்பு மிரட்டல் போன்று பல்வேறு மிரட்டல் கமென்ட்ஸ்களை எழுதி மிரட்டியதால் கமென்ட்ஸ் பாக்ஸையே தூக்கிவிட்டனர். அந்த அளவுக்கு இந்தப் படம் குறித்து உலகெங்கும் மிகச் சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.

ராஜா
21-07-2012, 05:39 AM
சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு: போலீசுக்க நீதிபதி கண்டனம்


சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கின் அரசு தரப்பு சாட்சியை 2 ஆண்டுகளாக சாட்சியம் அளிக்க ஆஜர்படுத்தாததற்காக பாண்டிபஜார் போலீசுக்கு சென்னை செசன்சு கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.


சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன். இவர், தன் உதவியாளர் கோபு ஸ்ரீதரை துப்பாக்கியைக் காட்டி கொலை செய்ய முயன்றதாக பாண்டிபஜார் போலீசார் 2001-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கில் சுதாகரன், தோட்டம் பாஸ்கர், ஆர்.பி.ஐ.பாஸ்கரன், சுதாகரனின் தந்தை விவேகானந்தன், சுரேஷ், மொய்னுதீன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.




இந்த வழக்கு சென்னை 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. போலீசார் தாக்கல் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றம் சுமத்தப்பட்ட சுதாகரன் உள்ளிட்டோரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதன்பின்னர் இந்த வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியான புகார்தாரர் கோபு ஸ்ரீதர் சாட்சியம் அளிக்க வேண்டும். அவருக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் உள்ளார்.


இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தட்சணாமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதாகரன், தோட்டம் பாஸ்கர், மொய்னுதீன் ஆகியோர் மட்டும் ஆஜரானார்கள்.


அப்போதும் அரசு தரப்பு சாட்சி கோபுஸ்ரீதர் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை. இதையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.அன்புக்கரசு, "அரசு சாட்சியை ஆஜர்ப்படுத்தாமல் போலீசார் வழக்கை இழுத்தடிப்பதாக கூறினார்.


இதையடுத்து பாண்டி பஜார் போலீசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும், அன்று முதல் சாட்சியான கோபு ஸ்ரீதரை ஆஜர்படுத்த வேண்டும்` என்றும் போலீசுக்கு உத்தரவிட்டார்.

ராஜா
21-07-2012, 05:40 AM
மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் சிறுமலர் மேல் நிலைப்பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜா
21-07-2012, 05:44 AM
பிறந்து ஒரே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை: டாக்டர்கள் சாதனை


மதுரை, புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று பச்சிளங் பெண் குழந்தை பிறந்தது.

பிறந்த சில மணி நேரத்தில் அக்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பதறிப்போன பெற்றோர் ஆபத்தான நிலையில் அப்பெண்குழந்தையை மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் வினோத், குழந்தையை பரிசோதனை செய்தார். பின்னர் அக்குழந்தைக்கு செயற்கை சுவாசகருவி (வெண்டிலேட்டர்) பொருத்தப்பட்டு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கப்பட்டது.

எக்ஸ்ரே, ஸ்கேன் முடிவுகளை பார்த்தபின் அந்த பெண் குழந்தைக்கு கண்ஜெனய்டால் டயபர் மெட்டிக் ஹெர்னியா என்ற பிறவிக்குறைபாடு நோய் இருந்தது தெரியவந்தது.

அதாவது வயிற்றுப்பகுதியையும், நெஞ்சு பகுதியையும் பிரிக்கும் டயபர் தடுப்பு சுவர் வளர்ச்சி அடையாமல் இருந்துள்ளது. இதனால் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் ஆகியவை நெஞ்சுப்பகுதிக்குள் சென்றதால் நுரையிரலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது தெரியவந்தது.



இதை சரிசெய்ய குழந்தைக்கு, பெற்றோரின் ஒப்புதலுடன் அறுவை சிகிச்சை செய்ய வடமலையான் குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி குழந்தைகள் நலப்பிரிவு நிபுணர் கணேஷ் பிரபு தலைமையில்,

டாக்டர் கருப்பசாமி, மயக்கவியல் நிபுணர் சண்முக சுந்தரம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பச்சிளங் பெண் குழந்தைக்கு தீவிர அறுவை சிகிச்சையை செய்து வெற்றி கரமாக முடித்தனர். பின்னர் டாக்டர்கள் வினோத், நாவரசு, கண்ணன் ஆகியோர் தொடர்ந்து பெண் குழந்தைக்கு சிறப்பான சிகிச்சை அளித்தனர்.

டாக்டர்களின் தீவிர முயற்சியால் குழந்தைக்கு செயற்கை சுவாசகருவி அகற்றப்பட்டு, தற்போது இயல்பான நிலையில் உள்ளது.

பிறந்து ஓரே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர்களை, வடமலையான் மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் புகழகிரி வடமலையான் பாராட்டு தெரிவித்தார்.

ராஜா
21-07-2012, 05:46 AM
நடிகர் ஜீவா 65 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும்- தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தல்


ஜீவா-ஸ்ரேயா ஜோடியாக நடித்த ரௌத்திரம் படம் கடந்த வருடம் ரிலீசானது. தெலுங்கிலும் இப்படத்தை ராச்சா என்ற பெயரில் வெளியிட்டனர்.

ஆர்.பி. சவுத்ரி இப்படத்தை தயாரித்து இருந்தார். தமிழ், தெலுங்கில் 'ரௌத்திரம்' படம் தோல்வி அடைந்ததால் தியேட்டர் அதிபர்கள் நடிகர் ஜீவா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டதாக கூறப்படுகிறது.




இதுகுறித்து தியேட்டர் அதிபர்கள் கூறும் போது, ரௌத்திரம் படத்துக்கு நஷ்ட ஈடு தர சம்மதித்தனர். ஆனால் இதுவரை பணம் கொடுக்கவில்லை. எனவே ஜீவா படங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

ஜீவா தற்போது 'முகமூடி', நீதானே என் பொன் வசந்தம் படங்களில் நடிக்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கூறும் போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ரூ.65 லட்சம் நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டது உண்மைதான்.

இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட முடிவை எடுப்போம் என்றார். ஆனால் ஆர்.பி.சவுத்ரி இதனை மறுத்தார். யாருக்கும் பணம் தருவதாக உறுதி அளிக்கவில்லை என்றார்.

ராஜா
21-07-2012, 05:54 AM
கிரிக்கெட் வீரர்கள் ராகுல் சர்மா, வெயின் பார்னல் கைது-போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி!

http://tamil.thatscricket.com/img/2012/07/21-rahul-sharma-12-300.jpg

மும்பை ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, தென் ஆப்பிரிக்கா வீரர் வெயின் பார்னல் ஆகியோர் உட்பட மொத்தம் 90 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் ராகுல் சர்மா, வெயின் பார்னல் உட்பட 86 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனையடுத்து 86 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜா
21-07-2012, 06:00 AM
பில்லா 2 விநியோகஸ்தருக்கு ஹார்ட் அட்டாக்? - திரையுலகில் பரபரப்பு...

http://tamil.oneindia.in/img/2012/07/20-billa35-300.jpg

பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.
ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.
முதல் இரு தினங்கள் மட்டும் ஓரளவு கூட்டம் வந்ததாகவும், அடுத்த தினத்திலிருந்து வசூல் படுபாதாளத்துக்கு போய்விட்டதாகவும் அவருக்கு தகவல்கள் வர ஆரம்பித்தனவாம்.

இதனால் மனமுடைந்துபோயிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் பில்லா 2-ன் வசூல் விபரம் அறிக்கையாக கொடுக்கப்பட்டதாம். இதைப் படித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். இதைத் தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பில்லா 2 ஏ சான்றிதழ் பெற்ற படம். எனவே வரிவிலக்கு கிடையாது. 30 சதவீத கேளிக்கை வரி போக, விநியோகஸ்தருக்கு 50 சதவீத நஷ்டத்தை கேரளத்தில் இந்தப் படம் ஏற்படுத்தக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜா
21-07-2012, 06:41 AM
ராஜேஷ் கன்னாவின் 'ஆசிர்வாத்' எனக்கே.. உடன் வசித்த பெண் நோட்டீஸ்!

http://tamil.oneindia.in/img/2012/07/20-anitha-advani-300.jpg

மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா, மும்பையில் வசித்து வந்த ஆசிர்வாத் வீடு தனக்கே சொந்தம் என்று கடைசிக்காலத்தி்ல் அவருடன் வசித்து வந்த பெண்மணியான அனிதா அத்வானி உரிமை கோரியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜா
22-07-2012, 03:05 AM
இந்திய அணி அபார வெற்றி


இலங்கையில் இன்று நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய காம்பீர் 3 ரன்களில் அவுட்டானார். சேவக் அதிரடியாக ரன்கள் குவித்தார். 97 பந்துகளில் 96 ரன்களில் அவுட்டாகி 4 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.



ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டானார். சுரேஷ் ரெய்னா , கேப்டன் தோனி ஜோடி சேர்ந்து ரன் குவிப் பில் ஈடுபட்டனர்.

ரெய்னா 45 பந்தில் 50 ரன்கள் குவித்து அவுட்டானார். தோனி 35 ரன்னில் அவுட்டானார். இர்பான ஞூபதான் 7 ரன்னில் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் தில்ஷன் 6 ரன்னிலும், தரங்கா 28 ரன்னிலும் அவுட்டானார்கள். சங்ககாரா சிறப்பாக விளையாடினார் 151 பந்துகளை சந்தித்த அவர் 133 ரன்கள் குவித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களையே குவித்தனர். சந்திமால்13 ரன்னிலும், கேப்டன் ஜெயவர்த்தனே 12 ரன்னிலும், மாத்யூஸ் 7 , திரிமானே 7 ரன்னிலும் அவுட்டானார்கள். ஹூராத் டக் அவுட்டானார்.

பொறுமையாக விளையாடி வந்த பெரரா 44 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜா
22-07-2012, 03:08 AM
இலங்கை: ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அட்டவணை

ஜுலை21 முதலாவது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோட்டா பிற்பகல் 2.30 மணி

ஜுலை24 2-வது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோட்டா பிற்பகல் 2.30 மணி

ஜுலை28 3-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிற்பகல் 2.30 மணி

ஜுலை 31 4-வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிற்பகல் 2.30 மணி

ஆகஸ்டு 4 5-வது ஒரு நாள் போட்டி பல்லகெலே பிற்பகல் 2.30 மணி

ஆகஸ்டு 7 20 ஓவர் போட்டி, பல்லகெலே இரவு 7 மணி

ராஜா
22-07-2012, 03:12 AM
முற்றியது மோதல்: மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு - சரத் பவார் கட்சி முடிவு

http://tamil.oneindia.in/img/2012/07/21-sharad-pawar-300.jpg

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. சரத்பவாரும் அந்த கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேலும் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடம், நிதியமைச்சராக இருந்த பிரணாப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் ராஜினாமா செய்ததால், அந்த இடம் ஏ.கே.அந்தோணிக்கு வழங்கப்பட்டது.

இது சரத்பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதவிர கவர்னர், மாநிலங்களவை துணைத் தலைவர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமனத்தில் கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் மதிப்பதில்லை என்ற அதிருப்தி நீண்ட நாட்களாகவே சரத்பவாருக்கு இருந்து வந்தது.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமருக்கும், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க போவதாக சோனியாவுக்கும் சரத்பவார் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பது குறித்து சரத்பவார் வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் பட்டேல், காங்கிரஸ் உறவில் பிரச்னைகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என அறிவித்தார்.
திங்கள்கிழமை கூடும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் இறுதிமுடிவு மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸுடன் இணக்கமான உறவு அமையாத சூழலில், வெளியிலிருந்து ஆதரவளிக்க சரத் பவார் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா
22-07-2012, 03:14 AM
இந்தியாவை ஒபாமா அவமதிக்கவில்லை - தி வால் ஸ்ட்ரீட் விளக்கம்

http://tamil.oneindia.in/img/2012/07/21-obama300.jpg

இந்தியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளது என்றும், இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்த சில முக்கியமான சந்தைக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஒபாமாவின் கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஒபாமாவின் சிறப்பு பேட்டி வெளியான உடனே மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்தார். பா.ஜ.க. மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அமெரிக்க பத்திரிகையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், ‘இந்திய பொருளாதாரம் பற்றி பராக் ஒபாமா கூறிய உண்மைகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு பொறுக்கவில்லை. உண்மையில் இந்தியாவை ஒபாமா அவமானப்படுத்தவில்லை, உற்சாகப்படுத்தியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா
22-07-2012, 03:19 AM
இந்திய அணிக்காக ஆடி காயம்: சச்சின், ஜாகிர்கான் உட்பட 5 வீரர்களுக்கு இழப்பீடு

http://tamil.thatscricket.com/img/2012/07/21-sachin-zaheerkhan-300.jpg

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி காயமடைந்த சச்சின், ஜாகிர்கான், நெஹ்ரா உட்பட 5 வீரர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.7 கோடி வழங்க பிசிசிஐ தீர்மானித்துள்ளது. பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி என்ற 2 வகை ஒப்பந்தங்களில் இந்திய வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் இந்திய வீரர்களுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகையை பெற்று தர முடியவில்லை. காலதாமதமாக வழங்கப்பட்டாலும், இந்திய அணிக்காக விளையாடி காயமடைந்த சச்சின், ஜாகிர்கான், முனாப் பட்டேல், ரோஹித் சர்மா, நெஹ்ரா ஆகியோருக்கு உறுதி அளித்தப்படி ரூ.7 கோடி இழப்பீடு தொகை வழங்கப்படும்

ராஜா
22-07-2012, 03:22 AM
இந்திய ஊடகம் என்றால் தமாஷ் என்று பொருள், சொல்கிறார் ஹர்பஜன் சிங்

http://tamil.thatscricket.com/img/2012/07/21-harbhajanbowl-30.jpg

இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் எதிரணியினரை மிரட்டி வந்த இவர், கடந்த ஆண்டு காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த அஸ்வின், சிறப்பாக பந்துவீசி வருவதால் ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இளம் ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியில் நுழைந்தது ஹர்பஜன் சிங்கின் வாய்ப்பை தடுத்தது.
இந்த நிலையில் ஐபிஎல் 5 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பதவி வகித்த ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் பெரியளவில் முன்னேற்றம் தெரியவில்லை. தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், தனது பந்துவீச்சின் மூலம் விக்கெட்களை வீழ்த்த திணறி வருகிறார்.

ஹர்பஜன் சிங்கின் மோசமான பார்ம் தொடர்வதால், அவரால் விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. எனவே அவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியுமா? என்று இந்திய ஊடகங்கள் கேள்வி எழுப்பின. இதனால் அதிருப்தி அடைந்த ஹர்பஜன் சிங், தனது மன குமுறலை, டுவிட்டர் இணையதளத்தில் கொட்டி தீ்ர்த்துள்ளார். அதில் இந்திய ஊடகங்கள் என்றால் தமாஷ் என்று தெரிவித்துள்ளார்.

ராஜா
22-07-2012, 03:23 AM
ஜெயலலிதா மட்டும் கொடநாட்டில் போய் ஓய்வெடுப்பது நியாயமா? : நாஞ்சில் சம்பத் பேச்சு

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nangil%20sampath%20speech.jpg

திருச்செந்தூரில் மதிமுகவின் 19வது ஆண்டு தொடக்க விழா, அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியபோது,

ஜெயலலிதாவுக்கு முதல்வர் பிச்சை போட்டவர் வைகோ. அதை அவர் மறந்துவிட்டார். கடந்த தேர்தலில் எங்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு கொல்லைப்புறத்தில் கூட்டணி பேசி 41 இடங்கள் ஒரு கட்சிக்கு கொடுத்தனர். அதன்பின்னரும் உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் இருக்கிறோம்.

தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. ஜூனில் மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் பாயும். விவசாயிகள் எல்லாம் ஏர் உழுது நாற்று நடும் காலம் இது. ஆனால் தஞ்சை உட்பட தமிழகமே வறண்டு கிடக்கிறது. ஆனால் ஜெயலலிதா மட்டும் கொடநாட்டில் போய் ஓய்வெடுத்து வருகிறார். இது நியாயமா?

எங்களது பிரசாரத்தால் வருங்காலத்தில் வைகோவை முதல்வராக்குவோம்’’என்று தெரிவித்தார்.

ராஜா
22-07-2012, 03:31 AM
ஜெயலலிதா எந்த பிரச்சினை குறித்து பேசினாலும் கூட்டணியில் இல்லாததால் காங்கிரஸ் காதுகொடுத்து கேட்காது : சீமான்


அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழர்கள் பாதிக்கப்பட்டால் கேட்க யாரும் இல்லை. ஆனால் கேரளாவில் பாதிக்கப்பட்டால் உடனே நீதி கிடைக்கிறது. காரணம் கேரளத்தினர் அதிகார மட்டத்தில் பரவி உள்ளதோடு இன உணர்வோடு உள்ளனர். அந்த இன உணர்வு தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லை.

தமிழர்களை சுட்டதற்கு அமெரிக்கா கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினை மட்டு மல்ல முதலமைச்சர் ஜெயலலிதா எந்த பிரச்சினை குறித்து பேசினாலும் கூட்டணியில் இல்லாததால் காங்கிரஸ் காதுகொடுத்து கேட்காது என்று தெரிவித்தார்.

ராஜா
22-07-2012, 03:33 AM
2 வயது குழந்தையிடம் கிட்னி திருடிய டாக்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தைக்கு விரலில் ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனால் ஆபரேசன் முடிந்து 4-வது நாளில் அந்த குழந்தை இறந்தது. பரிசோதனையில் அக்குழந்தையின் கிட்னி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கிட்னி திருடப்பட்டதால்தான் குழந்தை இறந்து விட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். அத்துடன் குழந்தைக்கு ஆபரேசன் செய்த டாக்டர் பிரதீப் கோயல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழந்தையின் தந்தை காஷ்யப் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து டாக்டர் கோயல் மற்றும் அவரது குழுவினர் மீது காவல்துறையினர் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை டாக்டர் கோயல் மறுத்துள்ளார்.

ராஜா
22-07-2012, 03:38 AM
பெங்களூரில் இக்னைட்டரை விற்பனைக்கு கொண்டு வந்த ஹீரோ

http://tamil.drivespark.com/img/2012/07/21-06-06-hero-ignitor-600.jpg

ரூ.56,747 விலையில் பெங்களூரில் இக்னைட்டர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.
ஸ்டன்னர் என்ற பெயரில் ஹோண்டா விற்பனை செய்து வரும் பைக்கை இக்னைட்டர் என்ற பெயரில் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹீரோ நிறுவனம்.

125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இக்னைட்டர் அதிகபட்சமாக 11 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஏற்கனவே, வட மாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்ட இக்னைட்டர் பைக்கை தற்போது பெங்களூரிலும் அறிமுகம் செய்துள்ளது ஹீரோ. பெங்களூர் தவிர, கர்நாடகத்தில் 15 நகரங்களில் இக்னைட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களில் இக்னைட்டர் கிடைக்கும். பேஸ் வேரியண்ட்டில் டிரம் பிரேக் கொண்டதாக இருக்கும். டாப் வேரியண்ட் முன்பக்கம் டிஸ்க் பிரேக் கொண்டதாக இருக்கும்.

பாந்தர் பிளாக், ஸ்போர்ட்ஸ் ரெட், பியர்ல் ஒயிட் மற்றும் வைப்ரன்ட் புளூ ஆகிய 4 வண்ணங்களில் இக்னைட்டர் கிடைக்கும்.

ராஜா
22-07-2012, 03:40 AM
ஐபோனுக்காக, ஏர்செல் ஸ்டோர்களில் குவியும் கூட்டம்!

http://tamil.gizbot.com/files/2012/07/apple-iphone-3gs-500.jpg

கடந்த 2011-ஆம் ஆண்டு கூட இந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்த ஒரு ஸ்மார்ட்போன்.
இன்னும் கூட இந்த ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு ஏக வரவேற்பு குவிந்த கொண்டே இருக்கிறது. இத்தகைய இந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 3-ஜி-எஸ் என்ற ஸ்மார்ட்போனை ரூ, 9,999 விலையில் கொடுக்கிறது ஏர்செல் நிறுவனம். இந்த செய்தி நேற்று வெளியானதொன்று தான் தாமதம்.
ஏர்செல் ஸ்டோர்களில் இந்த ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதற்கு அளவே இல்லை.
அப்படி முந்தியடித்து கொண்டாலும் நிறைய பேருக்கு இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கவில்லை. இன்னும் சில ஸ்டோர்களில் ஸடாக் இல்லை என்றும் கூட சில வாடிக்கையாளர்கள் திரும்பியிருக்கிறார்கள்.

இது பற்றி தகல்களை முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 121 என்ற ஏர்செல் எண்ணிற்கு அழைத்து விவரம் அறியலாம். அல்லது 5800 000 என்ற (டோல் ஃப்ரீ) எண்ணிற்கு மெசேஜ் செய்தும் விவரம் அறியலாம்.

ராஜா
22-07-2012, 01:13 PM
இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவரானார் பிரணாப் முகர்ஜி

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/Pranab-Mukherjee97981.jpg

குடியரசுத்தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இந்தியாவின் 14வது குடியரசுத் தலை ரானார் மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்கில்ஐ.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாப் 5.58 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சங்மா 2 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.


மொத்தமுள்ள 763 எம்பிக்களில் பிரணாப்புக்கு 527 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தது. 206 பேர் பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ராஜா
22-07-2012, 01:17 PM
நெருப்புக்கோழி பறவை அல்ல;ஒரு விலங்கு: பாக்.சட்டசபையில் நூதன தீர்மானம்


பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில சட்டசபையில் ஒரு நூதன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், நெருப்புக்கோழி பறவை அல்ல. அது ஒரு விலங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பறவை போன்று அதனால் பறக்க முடியாது. எனவே, அது ஒரு விலங்கு என கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு வெற்றி பெற்றது. இதை பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே அறிவித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அறிவித்து இருந்தது. அதை ஏற்க மறுத்த அவர் கையெழுத்திட வில்லை.

எனவே, சட்டசபையில் தீர்மானம் இயற்றி அமோகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து பாகிஸ்தான் சட்டமந்திரி ரானா சனா கூறும்போது, ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வரிசையில் நெருப்புக் கோழியையும் விலங்குகள் வரிசையில் கொண்டு வந்துள்ளோம் என்றார்.

ராஜா
22-07-2012, 01:20 PM
நித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி

மதுரை ஆதீன சொத்துக்களில் நித்யானந்தா சீடர்கள் தலையிட்டதையடுத்து அவர்கள் மீது மதுரை ஆதீனம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுடன் கைலாய யாத்திரைக்கு மதுரை ஆதீனம் செல்ல மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதீன மடத்திற்கு மதுரை சூடம்சாமியார் சந்து, ஜடாமுனி கோவில் பகுதிகளில் சொந்தமாக வாடகை குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு சென்ற நித்யானந்தாவின் சீடர் ஒருவர், அங்கிருந்தவர்களிடம் நீங்கள் கொடுத்த முன் பணத்தை கொடுத்து விடுகிறோம். எனவே உடனடியாக குடியிருப்புகளை காலி செய்யு மாறு கூறி மிரட்டினார்.


இதுகுறித்து அங்கு வசிப்பவர்கள் மதுரை ஆதீனத்திடம் புகார் தெரி வித்தனர். அப்போது தனக்கு தெரியாமலேயே நித்யானந்தாவின் சீடர்கள் இதுபோன்ற மிரட்டல் செயல்களில் ஈடுபடுவது அவருக்கு தெரியவந்தது.

இதேபோல் நித்யானந்தாவின் மற்றொரு சீடர் மூத்த ஆதீனம் அருண கிரிநாதரின் படத்தை நீக்கி விட்டு நித்யானந்தாவின் படத்தை மட்டும் “விசிடிங் கார்டில்”அச்சடித்து வைத்துள்ளார். இதுவும் அவருக்கு கடும் அதிருப்தியை ஏற் படுத்தி உள்ளது.


இதேபோல் நித்யானந்தாவின் சீடர்கள் மதுரை ஆதீன மடத்தில் உள்ள அருணகிரிநாதரின் புகைப் படங்களை அகற்றி உள்ளனர். இதுகுறித்து அவரிடம் மூத்த சீடர்கள் முறையிட்டனர்.


நித்யானந்தா வருகிற 27-ந்தேதி முதல் 15 நாட்கள் கைலாய யாத்திரைக்கு புறப்பட திட்டமிட்டுள்ளார். யாத்திரைக்கு வருமாறு மூத்த ஆதீனம் அருணகிரி நாதருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டதாக ஆதீன மடத்தின் சில சீடர்கள் தெரிவித்தனர்.

எனவே நித்யானந்தாவுக்கும், மதுரை ஆதீனத்திற்கும் மோதல் தொடங்கி உள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நித்யானந்தாவை நியமிக்கப்பட்டதில் இருந்த மதுரை ஆதீனத்திற்கு இருந்த மக்களின் செல்வாக்கு சரிய தொடங்கி உள்ளதாக ஆதீனம் அருணகிரிநாதரின் சீடர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜா
22-07-2012, 01:27 PM
ஜெயா டிவி துணைத் தலைவர்- இரு பணியாளர்கள் நீக்கம்.. செங்கோட்டைக்கு தொடரும் ஆப்பு..

ஜெயா டிவி'யில் நிர்வாகத் துணைத் தலைவராக இருந்த ரங்கநாதனை பணியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.




மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, அந்நிறுவனத்தின் நெட்வொர்க் பொறுப்பாளர் மஞ்சுநாத், முன்னாள் நிர்வாக இயக்குனர் அனுராதா வின் நேர்முக உதவியாளர் ஜனார்த்தனம் ஆகி யோரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட் டையனின், சிறப்பு நேர்முக உதவியாளராக, 1991 முதல் 1996 வரை இருந்தவர் ரங்கநாதன்.

செங்கோட்டையன் சிபாரிசில், ஜெயா டிவி'யில் சட்ட ஆலோசகர் மற்றும் நிதி, நிர்வாக துணை தலைவராக ரங்கநாதன் பதவி யேற்றுக் கொண்டார்.


ஜெயா டிவி' கணக்குகளை, புதிய ஆடிட்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார். அப்போது, கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜா
22-07-2012, 01:41 PM
புதிய ஜனாதிபதியாக 25ல் பதவியேற்கிறார் பிரணாப்

ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று நடைபெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் படி பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றார் .மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்கில் ஐ.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாப் 5.58 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். பிரணாப் முகர்ஜி, வரும் 25ந் தேதி ஜனாதிபதி பொறுப் பேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரணாப் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரசார் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து தேர்வான முதல் ஜனா திபதி பிரணாப் என்பது குறிப்பிடத்தது. 76 வயதான பிரணாப் முகர்ஜி, 2017ம் ஆண்டு வரை ஜனாதி பதியாக இருப்ப்பார். ஜனாதிபதி 40 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டிருந்த பிரணாப் முகர்ஜி, 1973ல் மத்திய அமைச்சரானார். மத்திய பாதுகாப்பு, வெளியுறவு, நி தித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பிரணாப்.

ராஜா
22-07-2012, 01:42 PM
தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் : கலைஞர்

மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என *வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட் டும்படி, பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என *கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள் ளதை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ராஜா
22-07-2012, 01:59 PM
தமிழ்நாட்டில் செல்லாத ஓட்டுப் போட்ட 4 எம்.எல்.ஏக்கள்- சங்மாவுக்கு 148 வாக்குகள்

http://tamil.oneindia.in/img/2012/07/22-sangma-jaya3-300.jpg

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டில் பி.ஏ.சங்மாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
தமிழகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 45 வாக்குகளும் பி.ஏ.சங்மாவுக்கு 148 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. அதாவது பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு 7920தான். பி.ஏ.சங்மாவுக்கோ மொத்தம் 26,048 வாக்குகள் கிடைத்தன. அதேசமயம், தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரணாப் முகர்ஜியை திமுக கூட்டணி ஆதரித்தது. அதேபோல் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் அப்படியே பிரணாப் முகர்ஜிக்கு 45 வாக்குகள் கிடைத்துவிட்டன. பி.ஏ.சங்மாவை அதிமுக ஆதரித்தது. அதிமுகவுக்கு 150 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அப்படியானால் அனேகமாக அதிமுக எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள்தான் செல்லாதவையாகி இருக்கலாம்.

புதுச்சேரியில் பிரணாப் முகர்ஜிக்கு மொத்தம் 23 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 368. ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவுக்கு வெறும் 5 வாக்குகள்தான் கிடைத்தன.

ராஜா
22-07-2012, 02:08 PM
ரூ. 10 லட்சம் அம்பாசடருக்கு டாட்டா.. ரூ. 12 கோடி பென்ஸில் ஏறப் போகும் பிரணாப்!

http://tamil.oneindia.in/img/2012/07/22-president-wagon-from-ambass.jpg

பிரணாப் முகர்ஜியின் முகவரி மட்டுமல்ல, அவரது காரும் கூட மாறப் போகிறது. இதுநாள் வரை தனது மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரையே பயன்படுத்தி வந்த பிரணாப் முகர்ஜி இனிமேல் மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பயனபடுத்தப் போகிறார்.கடந்த ஐம்பது ஆண்டு்களாகவே அம்பாசடர் காரில் மட்டுமே பயணித்து வந்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக காரை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான காராக ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 காரே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீளமான லிமோசின் காரான இந்த பென்ஸானது, பல்வேறு வசதிகளுட்ன் கூடியதாகும். டிரைவருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான பகுதி, சவுண்ட் புரூபுடன் கூடிய கண்ணாடியால் பிரிக்கப்பட்டுள்ளது.பிடித்தமான இசையைக் கேட்கக் கூடிய வசதி உள்ளே இருக்கிறது. அதேபோல திரைப்படம் பார்க்கும் வீடியோ திரை வசதியும் உள்ளது. டிவியும் உள்ளது. செய்திகளையும் கேட்கலாம், பார்க்கலாம். அனேகமாக பிரணாப் முகர்ஜி செய்தி கேட்பதையே விரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தக் காரின் பாதுகாப்பு வசதி மிகவும் சிறப்பானது. அதாவது ஏவுகணையை விட்டுத் தாக்கினாலும் கூட இது சேதமடையாதாம். அந்த அளவுக்கு பக்காவான பாதுகாப்பு வசதி இதில் உள்ளது. அதேபோல எத்தனை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டாலும் ஒரு குண்டு கூட உள்ளே போகாது. கிரேனட் தாக்குதலிலிருந்தும் கூட இது தப்பி விடும். வெடிகுண்டுகள் வெடித்தாலும் கூட காருக்கு ஒன்றும் ஆகாதாம். இதுகுறித்து கார் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், ஏகே.47, எம் 67 ஆகிய துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டாலும் காருக்கு ஒன்றும் ஆகாது. அதேபோல அதி நவீனமான அமெரிக்க தயாரிப்பு கிரெனேடைத் தூக்கி வீசினாலும் காருக்கு ஒன்றும் ஆகாது.

காரின் கண்ணாடிகள் அனைத்தும் 60 மில்லிமீட்டர் பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடிகள் ஆகும்.
காரின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 90 லிட்டர் ஆகும். காரில் ஏதாவது தீவிபத்து ஏற்பட்டு விட்டால், எரிபொருள் டேங்க் தானாகவே மூடிக் கொள்ளும். டயர்கள் கூட புல்லட் புரூப் கொண்டவை. அதாவது டயரைப் பார்த்து யார் சுட்டாலும் கூட டயருக்கு ஒன்றும் ஆகாது. மேலும் கார் டயரில் சுத்தமாக காற்றழுத்தம் இல்லாவிட்டாலும் கூட, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில், 30 கிலோமீட்டர் வரை தொடர்ந்து காரை ஓட்ட முடியும்.

காருக்குள் இருப்போர் ஏதாவது பிரச்சினை என்றால் எந்த இடத்திலிருந்தாலும் பேனிக் அலார்மை ஒலிக்க வைக்க முடியும். பேனிக் அலார்மை தொட்டு விட்டால், காரின் அனைத்துக் கதவுகளும் தானாகவே மூடிக் கொள்ளும். அதேசமயம், காருக்குள் இருப்போர் உள்ளே இருக்கும் தகவல் தொடர்பு வசதி மூலம் வெளியில் இருப்போருடன் பேச முடியும்.

இந்தக் காரில் 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய அட்டகாசமான ஹர்மான் கார்டன் லாஜிக்7 ஸ்டீரியோ மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக ஜிபிஎஸ் சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும் உள்ளது. போதிய அளவுக்கு வெளிச்சம் தரும் வகையிலான விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கார் சீட்டுகள் அருமையான லெதர் குஷன் சீட்களாகும். இந்த இருக்கைகள் மழை மற்றும் குளிர்காலத்தில் மிதமான சூட்டைக் கொடுக்கும். அதேசமயம், வெயில் காலத்தில் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக சிறிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவர் கேபின் தவிர குடியரசுத் தலைவர் அமரும் பகுதியில் இரண்டு வரிசை சீட்கள் உள்ளன. இரண்டு வரிசையும், எதிரும் புதிருமாக இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. அதாவது குடியரசுத் தலைவர், தன்னுடன் பயணிப்போருடன் அமர்ந்து பேசிக் கொண்டு செல்லும் வகையில் இந்த இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. காருக்குள்ளேயே சிறிய பிரிட்ஜும் உள்ளது. எனவே எத்தகைய சூடான பிரச்சினையாக இருந்தாலும் ஏதாவது கூலாக சாப்பிட்டுக் கொண்டு பேச முடியும்.

இப்படி சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காரின் விலை ஜஸ்ட் ரூ. 12 கோடிதான். இதுவரை பிரணாப் முகர்ஜி பயன்படுத்தி வந்த புல்லட் புரூப் பொருத்தப்பட்ட அம்பாசடர் காரின் விலை ரூ. 10 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கலைவேந்தன்
22-07-2012, 03:30 PM
பரபரப்பான அனைத்து செய்திகளையும் வாசித்தேன்.

குடியரசுத்தலைவரின் கார் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கின்றன.

ராஜா
22-07-2012, 04:22 PM
முதல் மறுமொழி, மகிழ்வைத் தருகிறது கலை..!

ராஜா
22-07-2012, 04:37 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_790023.jpeg

ராஜா
23-07-2012, 05:46 AM
என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்! செங்கோட்டையன் கண்ணீர்!

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/admk/admk-vip/senkotaiyan-1.jpg

கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நல்லமுத்து கம்பன் அறக்கட்டளை சார்பில் 50-வது ஆண்டு கம்பன் விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கம்பன் பெருமைகளை நான் சொல்ல வேண்டியதில்லை எல்லோருக்கும் தெரியும். ராமாயணத்தில் ராமனுக்கு பல்வேறு சோதனைகள் வந்துள்ளது.



சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது ராமர், அனுமாரை சீதாவிடம் தூதுவனாக அனுப்பி வைத்தார். அப்போது அனுமாரிடம், சீதா, ராமர்தான் அனுப்பி வைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டாள். உடனே அனுமார் ராமன் கொடுத்த கணையாளியை காண்பித்தார். மேலும் அவரது நெஞ்சை பிளந்தார் அதில் ராமர் தெரிந்தார்.

அதேபோல் என் நெஞ்சை பிளந்து பார்த்தால் அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் தெரிவார் (இவ்வாறு அவர் கூறியதும் அவரது கண்களில் கண்ணீர் ததும்பியது). இந்த விழாவுக்கு என்னை அழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

ராஜா
23-07-2012, 05:57 AM
ராகுலைவிட திக்விஜய் சிங் சிறந்த பிரதமராக இருப்பார்: கோவிந்தாச்சார்யா

http://tamil.oneindia.in/img/2012/07/23-govindacharya-300.jpg

அமேதி எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தியை விட காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் சிறந்த பிரதமராக இருப்பார் என்று ராஷ்ட்ரீய ஸ்வாபிமான் ஆந்தோலன் நிறுவனர் கே.என். கோவிந்தாச்சார்யா தெரிவித்துள்ளார்.

மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரான இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராவார். பாஜகவின் வழிகாட்டியாக இருந்த அவர் இப்போது கட்சியிலிருந்து தூர இருந்தாலும் இன்னும் சங் பரிவார் அமைப்புகளால் பெரிதும் மதிக்கப்படும் தலைவராவார்.

ராஜா
23-07-2012, 06:02 AM
கருணாநிதி, வைகோவுக்கு இலங்கை பிரச்சனை ஒரு அரசியல் விளையாட்டு: குமரன் பத்மநாபன்

http://tamil.oneindia.in/img/2012/07/23-kp-300.jpg

இலங்கையில் தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை என்றும், ஒருங்கிணைந்த இலங்கையிலேயே வாழ விரும்புவதாகவும், ஆனால் தனி ஈழம் வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச நிதிப் பொறுப்பாளரும், அந்த இயக்கத்தின் ஆயுத கொள்முதல் பிரிவின் தலைவருமான கே.பி என்ற குமரன் பத்மநாபன் கூறியுள்ளார்.

கருணாநிதிக்கும் ஈழம் குறித்துப் பேசும் மற்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், தமிழக அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் குறித்தும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்தும் முதலில் குரல் கொடுக்க வேண்டும்.

வைகோவின் தலைவரான பெரியார் என்ன சொன்னார்?. தனித் திராவிட நாடு தான் அவரது கொள்கை. இந்தக் கனவை வைகோவும் தானே கண்டார். அந்தக் கனவை ஏன் கைவிட்டார்?. அதே நிலைமை தான் தமிழ் ஈழத்துக்கும் ஏற்பட்டது.

இவ்வாறு பேட்டியளித்துள்ள கே.பி. ஒரு நல்ல விஷயத்தையும் கூறியிருக்கிறார். அது, நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்பது.

ராஜா
23-07-2012, 06:16 AM
தமிழத்தில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் - தா. பாண்டியன்

இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 5 ஆண்டுகளாக இருந்த மின்வெட்டு அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம், குஜராத்தில் இருந்து விலைக்கு வாங்கப்படும் மின்சாரம் கூட சரியான ஒருங்கிணைப்பு வசதி இல்லாததால் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. நிலக்கரி இறக்குமதி செய்வதிலும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் அனல் மின் நிலைய உற்பத்தியும் பாதிக்கப்பட்டு்ள்ளது.
தண்ணீர், மின்சாரம் ஆகிய இரு பிரச்சனைகளுக்காகவும் தமிழகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். இல்லையென்றால் தமிழத்தில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் என்றார்.

ராஜா
23-07-2012, 06:21 AM
மறு பிறவியில் ஜனாதிபதியின் குதிரையாகப் பிறக்க விரும்பிய பிரணாப் முகர்ஜி

http://tamil.oneindia.in/img/2012/07/23-pranab300.jpg

இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின்(76) அக்கா அண்ணாபூர்னா தேவி(86) தனது தம்பி குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு,

பிரணாப் எம்.பி. ஆனபோது டெல்லியில் அவருக்கு கொடுக்கப்பட்ட வீட்டு வராண்டாவில் உட்கார்ந்து நானும், அவரும் டீ குடித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்து ராஷ்ட்ரபதி பவன் நெடுந்தூரம் கிடையாது. இந்த வராண்டாவில் இருந்து பார்த்தால் குடியரசுத் தலைவரின் குதிரைகள் செல்வது தெரியும். குதிரையை கவனிப்பவர்கள் அதற்கு உணவு, தண்ணீர் கொடுப்பதை இங்கிருந்தே பார்க்க முடியும்.
அப்போது பிரணாப் கூறுகையில், அக்கா, அந்த குதிரைகள் எவ்வளவு ஆனந்தமாக உள்ளது என்று பாருங்களேன். அவை வேலை செய்யவே தேவையில்லை. சும்மா சாப்பிட்டுவிட்டு இருக்கின்றன. அதன் முடி எவ்வளவு ஷைனிங்காக இருக்கிறது பாருங்கள். நான் அடுத்த பிறவியில் குடியரசுத் தலைவரின் குதிரையாகத் தான் பிறப்பேன் என்றார்.

இந்த பிறவியிலேயே நீ குடியரசுத் தலைவராவாய். அபப்டி இருக்கையில் எதற்காக மறுபிறவியில் குடியரசுத் தலைவரின் குதிரையாகப் பிறக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். நான் கூறியவாறே எனது தம்பி குடியரசுத் தலைவராகிறார். ஆனால் எனது வயது காரணமாக டெல்லியில் நடக்கும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் என்னால் கலந்து கொள்ள இயலாது என்பது வருத்தமாக உள்ளது என்றார்.

ராஜா
23-07-2012, 06:25 AM
மழை இல்லை, மேட்டூர் நீரும் இல்லை, மின்சாரமும் இல்லை-தமிழகத்தில் நெல் விளைச்சல் கடும் பாதிப்பு

http://tamil.goodreturns.in/img/2012/07/23-paddy-crop-300.jpg

மழை இல்லை, மேட்டூர் நீரும் இல்லை, மின்சாரமும் இல்லை என்ற நிலையில் தமிழகத்தில் தஞ்சை, நாகை. திருவாரூர் மாவட்டங்களில் குறுவை நெல் விளைச்சல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி காவிரி நீர் திறந்து விடப்படும்.

ஆனால், இந்த ஆண்டு குறுவை விவசாயத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர் கிடைக்கவில்லை. அதே போல மின்சார தட்டுப்பாடும் நிலவுவதால் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரைப் பெறவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

ராஜா
23-07-2012, 06:32 AM
பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கடிகள் ஆரம்பம்.. அப்சல் குரு கருணை மனுவை நிராகரிக்க தாக்கரே கோரிக்கை

நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவியேற்க தேர்வு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டன.
நாடாளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்து தனது பதவிக் காலத்தை பிரணாப் முகர்ஜி தொடங்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணியின் முடிவிலிருந்து விலகி பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தந்த பால் தாக்கரே சிவசேனாவின் சாம்னா இதழில் எழுதியுள்ள கட்டுரையில், ஜனாதிபதியாக பதவியேற்கும் பிரணாப் முகர்ஜி தனது முதல் வேலையாக அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும். அது தான் அவர் செய்யும் முதல் காரியமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராஜா
23-07-2012, 06:40 AM
பதவியேற்கும் நாளில் பிரணாபுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வெளியிடுவோம்: அன்னா ஹசாரே குழு

http://tamil.oneindia.in/img/2012/07/23-anna-300-2.jpg

இது குறித்து ஹசாரே குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,

ஏற்கனவே ஒரு ஊழல்வாதி பிரதமர் இருக்கையில் தற்போது குடியரசுத் தலைவரும் ஊழல்வாதியாக வந்துள்ளார். பிரணாப் முகர்ஜிக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வரும் 25ம் தேதி நாங்கள் துவங்கவிருக்கும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது வெளியிடுவோம். இனிமேல் அரசை நம்புவதாக இல்லை. அரசின் உறுதிகளை இம்முறை ஏற்க மாட்டோம். எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் எங்கள் உடல்களைத் தான் அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முடிக்க மாட்டோம் என்றார்.

அன்னா குழுவினர் ஊழலுக்கு எதிராக வரும் 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கின்றனர். அதே நாளில் தான் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா
23-07-2012, 06:47 AM
பிரணாப், பி.ஏ.சங்மாவுக்கு எத்தனை ஓட்டுக்கள்... மாநில வாரியாக முழு விவரம்

http://tamil.oneindia.in/img/2012/07/23-pranab4-sangma4-300.jpg

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கும், பி.ஏ.சங்மாவுக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை வாக்குகள் கிடைத்தன என்ற முழு விவரம் இதோ...

எம்.பிக்களின் வாக்குகள்

மொத்தம் 733 பேர் வாக்களித்தனர். அதில், பிரணாபுக்கு 72 சதவீதம் பேரும், சங்மாவுக்கு 28 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

எம்.எல்.ஏக்களின் வாக்குகள் - மாநில வாரியாக

ஆந்திரா - 185 வாக்குகள் - பிரணாப் 98% , சங்மா 2%
அருணாச்சல் பிரதேசம் - 56 வாக்குகள் - பிரணாப் 96% , சங்மா 4%
அஸ்ஸாம் - 113 வாக்குகள் - பிரணாப் 89% , சங்மா 11%
பீகார் - 236 வாக்குகள் - பிரணாப் 62%, சங்மா 38%
சட்டிஸ்கர் -89 வாக்குகள்- பிரணாப் - 44%, சங்மா 56%
கோவா - 40 வாக்குகள் - பிரணாப் 22%, சங்மா 78%
குஜராத் - 182 வாக்குகள் - பிரணாப் 32% , சங்மா 68%
ஹரியானா - 82 வாக்குகள் -பிரணாப் 65%, சங்மா 35%
ஹிமாச்சல் பிரதேசம் - 67 வாக்குகள் - பிரணாப் 24%, சங்மா 66%
ஜம்மு காஷ்மீர் - 83 வாக்குகள்- பிரணாப் 82%, சங்மா 18%
கர்நாடகா - 220 வாக்குகள் - பிரணாப் 53%, சங்மா 47%
கேரளா - 124 வாக்குகள் -பிரணாப் 100% , சங்மா0%
ராஜஸ்தான்- 198 வாக்குகள்- பிரணாப் 57% , சங்மா 43%
ஒடிஷா - 141 வாக்குகள்- பிரணாப் 18%, சங்மா 82%
உ.பி. - 398 வாக்குகள் - பிரணாப் 88%, சங்மா 12%
மேற்கு வங்கம் -278 வாக்குகள் - பிரணாப் 99%, சங்மா 1%
மத்தியப் பிரதேசம் - 223 வாக்குகள் -பிரணாப் 33%, சங்மா 67%
மகாராஷ்டிரா - 272 வாக்குகள் - பிரணாப் 83%, சங்மா 17%
மணிப்பூர் - 59 வாக்குகள் - பிரணாப் 98%, சங்மா 2%
மேகாலயா - 57 வாக்குகள் - பிரணாப் 60%, சங்மா 40%
மிஸோரம் - 39 வாக்குகள் - பிரணாப் 82%, சங்மா 18%
டெல்லி - 68 வாக்குகள் - பிரணாப் 66%, சங்மா 34%
தமிழ்நாடு - 193 வாக்குகள் - பிரணாப் 23%, சங்மா 77%
உத்தரகாண்ட் - 69 வாக்குகள் - பிரணாப் 57%, சங்மா 43%
சிக்கிம் - 29 வாக்குகள் - பிரணாப் 97%, சங்மா 3%
திரிபுரா - 57 வாக்குகள் - பிரணாப் 98% , சங்மா 2%
ஜார்க்கண்ட் - 80 வாக்குகள் - பிரணாப் 75%, சங்மா 25%
பஞ்சாப் - 114 வாக்குகள் - பிரணாப் 39%, சங்மா 61%
நாகாலாந்து - 58 வாக்குகள் - பிரணாப் 100%, சங்மா 0%
புதுச்சேரி - 28 வாக்குகள்- பிரணாப் 82%, சங்மா 18%

ராஜா
23-07-2012, 10:50 AM
அமெரிக்காவில் நண்டு வயிற்றில் இயேசு உருவம்: பின்லேடன் போன்றும் தெரிகிறது

http://tamil.oneindia.in/img/2012/07/23-jesus-image-crab.jpg

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள எவரெட்டில் கேன்பீல்டு குடும்பத்தார் கடந்த வாரம் நண்டு பிடித்தனர். அவர்கள் பிடித்த நண்டுகளை படகில் போட்டு அதை வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை வீட்டுக்கு வந்து போட்டு பார்த்தபோது அவர்கள் அதிர்ந்துவிட்டனர். அதற்கு காரணம் வீடியோவில் உள்ள ஒரு நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு நாதர் உருவம் தெரிந்தது தான்.

ஆனால் அந்த உருவம் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் போன்றும் உள்ளதாக பலர் தெரிவித்தனர். அந்த உருவம் கொண்டது பெண் நண்டு என்பதால் அவர்கள் அதை கடலிலேயே விட்டுவிட்டனர். அதனால் அவர்களிடம் உள்ள வீடியோ மட்டுமே இந்த அதிசயத்திற்கு ஆதாரம் ஆகும்.
கேன்பீல்டு குடும்பத்தார் மிகவும் நல்லவர்கள். அவர்கள் வேண்டும் என்றே வதந்தியைக் கிளப்பி விடுபவர்கள் அல்ல என்று அவர்களை நன்கு தெரிந்தவர்கள் தெரிவித்தனர். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ தான் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

ராஜா
23-07-2012, 11:40 AM
ராகிங் கொடுமையால் பேசும் திறனை இழந்த கல்லூரி மாணவி

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோட்லாமில் உள்ள காயத்ரி ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாமிலி. கடந்த 19ம் தேதி இரவு கல்லூரி விடுதியில் மின்சாரம் இல்லாத நேரத்தில் சீனியர் மாணவிகள் சிலர் ராகிங் என்ற பெயரில் ஷாமிலி தனியாக இருந்தபோது அவரது அறைக்குள் புகுந்து கயிற்றால் அவரது கழுத்தை நெறித்துள்ளனர். இதில் ஷாமிலி காயம் அடைந்தார்.

அவரது அறையில் தங்கியிருந்தவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது ஷாமிலியால் பேச முடியவில்லை. அவரது கழுத்தில் கயிறு வைத்து இறுக்கிய தடம் இருந்தது. உடனே அவரை உள்ளூர் மருத்துவமனைக்கும், அதன் பிறகு விஜயநகரம் மாவட்ட மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கயிறை வைத்து இறுக்கியதில் ஷாமிலியின் குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் அவரால் இனிமேல் பேச முடியாது என்றும் தெரிவித்தனர். இது குறித்து அறிந்த ஷாமிலியின் தந்தை தனது மகளை விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார். அதன் பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து ஷாமிலி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது அறையில் தங்கியிருந்தவர்கள் சாப்பிடச் சென்றிருந்தனர். அப்போது விடுதியில் மின்சாரம் இல்லை. அறையில் நான் தனியாக இருந்தபோது சில மாணவிகள் வந்து என் கழுத்தை கயிறால் இறுக்கினர் என்று கூறியுள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜா
23-07-2012, 11:43 AM
முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் பராமரிப்பதை தடுக்கக் கூடாது-கேரளாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

http://tamil.oneindia.in/img/2012/07/23-mullaperiyar10000-300.jpg

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் தமிழகத்தை கேரள அரசு அனுமதிக்கக் கோரிய தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் தமிழகத்தை கேரள அரசு அனுமதிக்க வேண்டும். அந்த பணிகள் 3 நபர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு பொறியாளர் மற்றும் மத்திய பணிகள் குழு தலைவரால் நியமிக்கப்படும் பொது நபர் ஒருவர் அந்த கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவார்கள். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராஜா
23-07-2012, 12:10 PM
அமர்நாத் யாத்திரை பலிகள் : சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

புதுடில்லி : ஆண்டுதோறும் அமர்நாத்தில் உருவாகும் பனிலிங்கத்தை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தபயணத்தின் போது நிறையபேர் இறந்து போகவும் செய்கின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 13 பேர் இறந்துள்ளனர். இதுவரை 97 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரையின் போது இதுவரை 97பேர் இறந்துள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் பி.எஸ்.சவான் மற்றும் சவந்தர் குமார் தெரிவித்துள்ளனர்.

யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உரிய வசதியை செய்து கொடுக்குமாறு ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளனர். மேலும் மாநில அரசு, மத்திய அர*சை தொடர்புகொண்டு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும்படியும், உ.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து டாக்டர்களை வரவழைத்து யாத்திரை செல்லும் வழிகளில் முகாம் அமைக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜா
23-07-2012, 12:21 PM
நேதாஜியின் படையில் இருந்த இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை லக்ஷ்மி சேகல் மரணம்

http://tamil.oneindia.in/img/2012/07/23-captain-lakshmi-sahgal.jpg

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப் படையில் முதல் பெண் கமாண்டராக பணியாற்றியவர் லக்ஷ்மி சேகல். சென்னையில் பிறந்த அவர், கடந்த 1938ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். அதன்பிறகு சிங்கப்பூருக்கு சென்ற லக்ஷ்மி சேகல், அங்குள்ள இந்தியர்களுக்காக இலவச மருத்துவமனை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 1943ம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸை சந்தித்தார். இவரிடம் இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை குறித்து சுபாஷ் சந்திரபோஸ் பேசினார்.

சுபாஷ் சந்திரபோஸின் திட்டத்தின் மூலம் கவரப்பட்ட லக்ஷ்மி, தன்னை இந்திய ராணுவத்தில் இணைத்து கொண்டார். அதன்பிறகு இந்திய ராணுவத்தில் முதல் பெண் கமாண்டராக பணியாற்றிய இவர், 1947ம் ஆண்டு கர்னல் பிரேம் குமார் சேகலை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கான்பூரில் குடியேறிய இவர், டாக்டர் தொழில் செய்து வந்தார்.
கடந்த 1971ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த லக்ஷ்மி, கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் அப்துல் கலாம் வெற்றி பெற்றார்.

கேப்டன் லக்ஷ்மி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த இவர், கடந்த 18ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் இவரது நிலை நேற்று மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றது. இதனையடுத்து இன்று காலை 11.20 மணி அளவில் அவர் மரமடைந்தார். அவரது உடல் மருத்துவ படிப்பிற்காக அளிக்கப்பட்டதால், அவருக்கு இறுதி சடங்கு நடைபெறாது என்று அவரது மகள் சுபலக்ஷ்மி அலி தெரிவித்தார்.

கீதம்
23-07-2012, 01:15 PM
அன்றாட நாட்டு நடப்புகளான அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளையும், விநோதத் தகவல்களையும் சுடச்சுடப் பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும் ராஜா அவர்களே.

ராஜா
24-07-2012, 04:13 AM
வருகைக்கும், தருகைக்கும் நன்றி மேடம்..!

ராஜா
24-07-2012, 04:29 AM
திருவிழாவில் போலீஸ் கலவரம்!

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/ilngo/New%20Folder/salam-02.jpg

சேலம் நெய்க்காரப்பட்டியில் ஆடி பண்டிகையை முன்னிட்டு நடக்க இருந்த எருத்தாட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தடுத்துள்ளது. தங்கள் வழிபாட்டு உரிமையின் ஒரு வடிவமான இப்பண்பாட்டிற்கு தடை போட்டதால் கோபமான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/ilngo/New%20Folder/salam-22.jpg

அவர்களை பேச்சுவார்த்தைக்கு கோயில் மைதானத்திலேயே மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் அழைத்து நேரத்தை இழுத்தடிக்க,

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/ilngo/New%20Folder/salam-23.jpg

கடுப்பான மக்களோ எருதுகளை அவிழ்த்துவிட முயற்சிக்க அதன் பின் காவல்துறை செய்த தாக்குதல் தான் உங்கள் கண் முன்னே படங்களாக...

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/ilngo/New%20Folder/salam-30.jpg

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/ilngo/New%20Folder/salam-29.jpg

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/ilngo/New%20Folder/salam-35.jpg

இவ்வளவு நடந்தும் சேலம் மாவட்ட எஸ்.பி அஸ்வினோ, 'எந்த தடியடியும் நடக்கவில்லை' என ஊடக, பத்தரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/ilngo/New%20Folder/salam-34.jpg

ராஜா
24-07-2012, 04:30 AM
70 பைசா உயர்கிறது பெட்ரோல் விலை

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 70 பைசா எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. விலையை உயர்த்தாவிட்டால் -ட்டருக்கு ரூ.1.41 இழப்பு ஏற்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. இந்த விலை உயர்வு 23.07.2012 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வையடுத்து சென்னையில் பெட்ரோல் -ட்டருக்கு ரூ.73 ஆனது.

ராஜா
24-07-2012, 04:40 AM
டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை: பழ. நெடுமாறன்

ஈழத் தமிழர்களுக்காக டெசோ மாநாடு நடத்தப் போகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி வீரமுழக்கமிட்டார். ஆனால் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வந்து அவரை சந்தித்துவிட்டு சென்ற பிறகு சுருதி குறைந்து இப்போதைக்கு தனி ஈழக் கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்றார். இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்த பிறகு அவர் துடிக்கிறார்.

கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்பது அவருக்கே தெரியும். ஆனால் இதன் மூலம் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகள் கனிமொழியை காப்பாற்றிவிடலாம் என்று அவர் நினைக்கிறார் என்கிறார் நெடு.

ராஜா
24-07-2012, 05:57 AM
சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்!

http://tamil.oneindia.in/img/2012/07/24-chennai-airport.jpg

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க மத்திய திட்டக் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்புக்கு முக்கியக் காரணம், சென்னை விமான நிலையம் நாட்டுக்கு ஈட்டித் தந்து வரும் பெரும் வருமானம் தான்.

ராஜா
24-07-2012, 05:59 AM
வவுனியா சிறையில் படுகொலை செய்யப்பட்ட நிமல ரூபனுக்கு பிரிட்டன் தமிழர் ஒன்றியம் இரங்கல்

http://tamil.oneindia.in/img/2012/07/24-nimalaruban-300.jpg

பிரிட்டன் தமிழர் ஒன்றியம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டதும், அதில் அடிகாயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லப்பட்ட கணேசன் நிமலரூபன், ராகம வைத்தியசாலையில் மரணமான செய்தி கேட்டு தமிழினமே அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தது.

மீண்டும் 1983ல் ஜூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவுகளும், இனவெறித்தாக்குதல் காட்சிகளும் கண்முன்னே வந்துபோனது.
ஏதோ ஒரு வகையில் சிறையிலாவது தமது மகன் உயிருடன் உள்ளார் என்ற சிறிய நம்பிக்கையில் இருந்த பெற்றோருக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் பிரிட்டன் தமிழர் ஒன்றியமும் உணர்வுபூர்வமாக பங்கு கொள்கிறது.

நிமலரூபனின் பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர் மற்றும் சமூக நண்பர்களின் கரங்களை இறுகப் பற்றி எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா
24-07-2012, 06:01 AM
வருமான வரி ரிட்டன் தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுண்ட்டர்கள்

http://tamil.oneindia.in/img/2012/07/24-10-tax-3-300.jpg

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை வருமான வரி அலுவலகத்தில் ரிட்டன் தாக்கல் செய்ய 40 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளது.

ராஜா
24-07-2012, 06:20 AM
600 நிரந்தர தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க மாருதி முடிவு

http://tamil.drivespark.com/img/2012/07/24-23-maruti-strike2.jpg

கடந்த வாரம் மானேசரிலுள்ள மாருதி கார் ஆலையில் தொழிலாளர்கள் நிகழ்த்திய வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மனிதவள மேம்பாட்டு துறை பொது மேலாளர் ஒருவர் பலியானார். 40 அதிகாரிகள் உட்பட 90 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் 100 தொழிலாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாருதி முடிவு செய்துள்ளது.


வன்முறையி்ல் ஈடுபட்டதாக கருதப்படும் 600 நிர்ந்தர தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை நியமிக்கவும் மாருதி முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜா
24-07-2012, 06:34 AM
இந்தியாவில் தடை- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

http://tamil.oneindia.in/img/2012/07/24-ltte2-300.jpg

டெல்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4-ம் பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கும், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்யும் உத்தரவை ஏன் பிறப்பிக்கக்கூடாது என்பதற்குமான விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதற்கு மறுப்போ அல்லது பதிலோ இருந்தால் 30 நாட்களுக்குள் டெல்லியில் உள்ள நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி உயர்நீதிமன்ற `ஏ' கட்டிட தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20-ல் அடுத்த மாதம் 27-ந் தேதி பிற்பகல் உரிய வழக்கறிஞர் மூலம் நடுவர் மன்றத்தில் ஆஜராகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜா
24-07-2012, 06:56 AM
'ஆளவந்தானுக்கு' கிடைத்த ஹாலிவுட் அங்கீகாரம்.. கமல் பெருமிதம்!

ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து ஒரு அரிய ஊக்கம் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பை பார்த்து அசந்து போன ஹாலிவுட் டைரக்டர் குவென்டைன் டரன்டினோ தனது கில் பில் (Kill bill) திரைப்பட வரிசையில் காட்சிகளை அமைத்தாராம்.

இந்தத் திரைப்படம் 2003ம் ஆண்டு உருவானதாகும். ஆனால் படம் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பதிப்பை 2003லும், இரண்டாம் பாகத்தை 2004ம் ஆண்டிலும் வெளியிட்டார் குவென்டைன். தனது 3வது பாகத்தை 2014ல் வெளியிடவுள்ளார்

ஆளவந்தான் படத்தில் இடம் பெற்ற அந்த வித்தியாசமான கிராபிக்ஸில் அமைந்த சண்டைக் காட்சிகள் புதிய முயற்சி என்று புகழாரம் சூட்டிய அவர் அதே பாணியில் தனது படத்திலும் காட்சிகளை அமைத்துள்ளாராம். இதற்காக ஆளவந்தான் படத்தையும், கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளாராம்.

சமீபத்தில் மும்பை வந்திருந்த அவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசியபோது இதுகுறித்துக் கூறினாராம் குவன்டைன்.
குவன்டைன் ஹாலிவுட்டில், பல்ப் பிக்ஷன், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரிசர்வாயர் டாக்ஸ் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.

இனி மேலாவது விமர்சகர்கள் என்னுடைய படங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகளை சரிவர புரி்ந்து கொள்வார்கள் என கருதுகிறேன் என்று கமல் கூறினார். ஆளவந்தானால் தான் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டதாக பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு புலம்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ராஜா
24-07-2012, 07:08 AM
23 தமிழக மீனவர்கள் இன்று விடுதலையாகலாம்: எஸ்.எம். கிருஷ்ணா நம்பிக்கை

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேர் இன்று விடுவிக்கப்படலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ராஜா
24-07-2012, 07:13 AM
கல்யாணமாகி 55 வருஷமாச்சு, இதுவரை சண்டையே போட்டுக் கொண்டதில்லை..பிரணாப் மனைவி

http://tamil.oneindia.in/img/2012/07/24-pranab-and-his-wife-with-rahul-gandhi.jpg

எனக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் திருமணமாகி 55 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட இருவருக்கும் இடையே சண்டை வந்ததில்லை என்று பிரணாப் முகர்சியின் மனைவி சுவ்ரா முகர்ஜி கூறியுள்ளார்.

M.Jagadeesan
24-07-2012, 07:34 AM
கல்யாணமாகி 55 வருஷமாச்சு, இதுவரை சண்டையே போட்டுக் கொண்டதில்லை..பிரணாப் மனைவி

http://tamil.oneindia.in/img/2012/07/24-pranab-and-his-wife-with-rahul-gandhi.jpg

எனக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் திருமணமாகி 55 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட இருவருக்கும் இடையே சண்டை வந்ததில்லை என்று பிரணாப் முகர்சியின் மனைவி சுவ்ரா முகர்ஜி கூறியுள்ளார்.


இது ஒன்றும் அதிசயமல்ல.55 ஆண்டுகளில் ஒருநாள் கூட சண்டை போடாமல் கழிந்தது இல்லை என்று கூறினால்தான் அதிசயம் .

ராஜா
24-07-2012, 07:47 AM
ஹா..ஹா..ஹா..!

அப்படியே இருந்தாலும் வெளியில் சொல்வார்களா..? அதுவும் இன்று பிரணாப் உள்ள நிலையில்..!

ராஜா
24-07-2012, 09:08 AM
ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

http://tamil.oneindia.in/img/2012/07/24-bus1-300.jpg

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால், பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர், அதில் பணிக்கு தவறாமல் வருபவர்கள், வராமல் இருப்பவர்கள் போன்றவை குறித்து ஆய்வு நடத்துமாறு, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிவது தெரியவந்தது. இதில் கடந்த 2011 ஜூன் முதல் 2012 ஜூன் வரை 2,354 ஊழியர்கள் 80 நாட்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.

795 ஊழியர்கள் ஒருநாள் கூட வேலைக்கு வரவில்லை. இதில் 200 ஊழியர்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஒரு வருடமாக பணிக்கு வராமல் இருக்கும், ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நோட்டீஸ் பெற்றும், அதற்கு தகுந்த விளக்கம் அளிக்காவிட்டால் அவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜா
24-07-2012, 09:11 AM
பிரபாகரன் திருமண நாளில் என் திருமணம் நடக்கும்! - சீமான் அறிவிப்பு

http://tamil.oneindia.in/img/2012/07/24-seeman5-300.jpg

சீமான் கூறுகையில், "ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.

பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?ஆனால் இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் என்பது உறுதி.. எல்லோரையும் அழைத்து விரைவில் அறிவிப்பேன்," என்றார்.

சீமான் தான் திருமணம் செய்யவிருக்கும் பெண் யாரென தெரிவிக்கவில்லை. என்றாலும், அவர் திருமணம் செய்ய இருப்பது ஈழத்தைச் சேர்ந்த போராளி விதவைப் பெண்ணான யாழ்மதியை என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.

ராஜா
24-07-2012, 01:34 PM
அசாமில் கலவரம் பரவுகிறது : பதட்டம் நீடிப்பு ; 50 ஆயிரம் பேர் வீடு இழந்து தவிப்பு

ராஜா
24-07-2012, 01:35 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_495864.jpeg

ராஜா
24-07-2012, 01:52 PM
அதிர்ஷ்ட இடிதாங்கி எனக்கூறி ரூ.1.25 கோடிக்கு விற்க முயற்சி: நூதன மோசடி: இருவர் கைது

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_514070.jpg


ராஜபாளையத்தில்,"அதிர்ஷ்டம் தரும் இடிதாங்கி' எனக்கூறி, பிளாஸ்டிக் பைப்புடன் கூடிய தாமிர கம்பியை காண்பித்து, ரூ.1.25 கோடிக்கு விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி பொன்னுசாமி. கடந்த சில நாட்களாக, இவரை தொடர்பு கொண்ட மோசடி நபர்கள் இருவர் , "அதிர்ஷ்டம் தரும் இடிதாங்கி ஒன்று தங்களிடம் உள்ளதாகவும், வீட்டு மாடியில் பொருத்தினால், இடி விழும்போது, அதன் அபூர்வ சக்தி வீட்டிற்குள் கிடைக்கும். இதன் மதிப்பு ரூ.1.25 கோடி.இதை தொழிலதிபர்கள் பலருக்கு விற்று உள்ளதாகவும், ஆடி தள்ளுபடியாக ரூ.25 லட்சம் குறைத்து உள்ளதாகவும்,' கூறி உள்ளனர். இதை நம்பிய பொன்னுச்சாமி, ராஜபாளையம் வந்து அங்குள்ள லாட்ஜில் தங்கினார். நேற்று முன்தினம் இரவு, தளவாய்புரத்தை சேர்ந்த கஜேந்திரன், 38, முகவூரை சேர்ந்த வேல்முருகன், 42, ஆகிய இருவரும் , போலி இடிதாங்கியுடன் லாட்ஜ் வந்தனர். பிளாஸ்டிக் பைப்பில் ஜரிகை பேப்பர் சுற்றப்பட்டு, குமிழுடன் தாமிர கம்பி இருந்தது. பேப்பரை அவிழ்த்து காட்டுமாறு கூறியபோது, "சார்ஜ்' ஏறுவதாக கூறி, அதை காண்பிக்க மறுத்தனர். சந்தேகம் அடைந்த பொன்னுச்சாமி, ராஜபாளையம் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜா, கருப்பையா எஸ்.ஐ., ஆகியோர், "அதிஷ்ட இடிதாங்கி' எனக்கூறியதை கைப்பற்றி பார்த்த போது, பிளாஸ்டிக் பைப்பில் போலி தாமிர கம்பி இருந்ததை கண்டனர். இதைதொடர்ந்து இருவரையும் கைது செய்தனர்.

ராஜா
24-07-2012, 01:56 PM
என் பிறந்தநாளை முன்னிட்டு எல்லோரும் ரோட்டை ரிப்பேர் பண்ணுங்க...: கேப்டனின் அதிரடி ஆணை!

http://tamil.oneindia.in/img/2012/07/24-vijayakanth31-300.jpg

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் அதுவும் மணிவிழா அடுத்த மாதம் வருகிறது. இதனால் ஆகஸ்ட் 25-ந் தேதியன்று திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் தமது 60-வது பிறநநாளையொட்டி சிறப்பு விழாவை நடத்துகிறார் கேப்டன்.

அத்துடன் தமது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை ஒரு மாத காலம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார் கேப்டன். இத்துடன் முடிந்தால் பரவாயில்லை. அடுத்து கேப்டன் போட்ட உத்தரவுதான் அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகளை உறைய வைத்திருக்கிறது.

அதுதான் சாலைகளை சீரமைக்க வேண்டும், சாலைகளின் தடுப்பு சுவருக்கு வர்ணம் பூச வேண்டும் என்று அதிரடியை கிளப்பிவிட்டிருக்கிறார் கேப்டன்.
இதேபோல்தான் மணல் கொள்ளையை தடுக்க தடுப்புச் சுவர் அமைங்கன்னு கேப்டன் போட்ட உத்தரவால் அரசாங்கத்திடமிருந்து "நில அபகரிப்ப்" மரியாதைதான் கிடைத்தது.

இப்ப சாலை சீரமைப்பு பணிக்காக என்ன மரியாதை கிடைக்குமோ என்று கலங்கிப் போயிருக்கின்றனர். இதனால் ஸ்கூலில் வாத்தியார்களிடம் பொய்சொல்வது மாதிரி டகால்ட்டி கொடுத்து எப்படி கேப்டனின் கிடுக்குப் பிடியில் இருந்து எஸ்கேப்பாவது என ப்ளான்போட்டபடியே வலம் வருகின்றனர் தேமுதிக நிர்வாகிகள்

ராஜா
24-07-2012, 01:58 PM
சட்டத்தை சகட்டுமேனிக்கு மிதிக்கும் மதுரை ஆதீனம், நித்தியானந்தா... கோர்ட்டுக்கு வராமல் முரண்டு!

http://tamil.oneindia.in/img/2012/07/24-madurai-aadheenam-nithyanantha111.jpg

மதுரையை சேர்ந்த வக்கீல் மணிவாசகம் மாவட்ட முதன்மை கூடுதல் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில்,
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டு உள்ள நித்யானந்தா பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதை விசாரித்த நீதிபதி, இரு சாமியார்களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் சம்மனை வாங்கவில்லை. வாங்கிய மதுரை ஆதீனம் கோர்ட்டுக்கு வரவில்லை. கேட்டால், அதெல்லாம் நாங்கள் வரமாட்டோம் என்று திமிராகப் பேசியிருந்தார்.

இந்த நித்தியானந்தா, சம்மனை வாங்கவே மறுத்து விட்டார். இதையடுத்து நாளிதழ்களில்அதை விளம்பரமாக போடுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார். இன்றைக்கு வழக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இன்று நீதிமன்றத்தில் வழக்கு நீதிபதி ராஜசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
ஒருவேளை இருவரும் தொடர்ந்து கோர்ட்டுக்கு வர மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜா
24-07-2012, 02:01 PM
நடைப்பயிற்சி செய்த ராஜபக்சே மனைவி முன்பு நந்தி போல நின்றவர் கைது!

http://tamil.oneindia.in/img/2012/07/24-shiranthi-rajapakse4-300.jpg

காலே பேஸ் கிரீன் என்ற இடத்தில் ஷிராந்தி வழக்கமான காலை நடைப்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் நின்றிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பகுதிக்கு வந்தார். ஷிராந்தி நடை பயிற்சிக்குப் போனபோது அவரது பாதையில் நின்று கொண்டு நகராமல் நின்றார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை விலகிச் செல்லுமாறு இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியபோது அதை அந்த நபர் கேட்கவில்லை. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர். குற்றம் இழைக்கும் நோக்கத்தில் அவர் வந்திருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் மன நலம் குன்றியவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ராஜா
24-07-2012, 02:38 PM
இங்கிலாந்தில் மாமியாரை கொடுமைப்படுத்தி கொன்ற இந்திய மருமகளுக்கு 11 ஆண்டு சிறை

இந்தியாவை சேர்ந்தவர் ராஜ்விந்தர் குர்(37). அவரது மாமியார் பாஜித் குர் பட்டர்(56). இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் போர்டுலேண்டு சாலையில் உள்ள பிளாட் ஒன்றில் வசித்து வந்தார். இந்த நிலையில் 6 மாத விடுமுறைக்காக இங்கிலாந்தில் உள்ள இவரது மாமியாரின் வீட்டிற்கு வந்தார் ராஜ்விந்தர் குர்.
அங்கு மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வயது சென்ற பாஜித் குரை, ராஜ்விந்தர் அவ்வப்போது தாக்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ராஜ்விந்தவர் குர் தனது மாமியாரை முள் உருட்டி கொண்டு தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பாஜித் குர் உயிரிழந்தார்.

பாஜித் குருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் அறிந்த, அதே பகுதியை சேர்ந்த ஜான் பிக் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது பாஜித் குர் நிர்வாணமாக, தலையில் படுகாயமடைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மாமியாரை கொலை செய்ததை மறுத்த ராஜ்விந்தர், தன்னை மாமியார் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டினார். இந்த வழக்கின் விசாரணை வின்சஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது, கொலை குற்றம் உறுதி செய்யப்பட்ட ராஜ்விந்தர் குருக்கு, 11 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜா
24-07-2012, 02:54 PM
கடித்த பாம்பை கையில் ஏந்தி மருத்துவமனை வந்த வாலிபரால் பரபரப்பு

தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த வாலிபரால், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வெளிச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (32). இருளர் இனத்தை சேர்ந்த இவர், அங்குள்ள வயலில் நேற்று மதியம் எலி பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகிலுள்ள வயலில் சென்ற மூன்று அடி நீளமுள்ள, "ஜமுக்காள விரியன்' பாம்பைக் கண்டு, அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். அந்த பாம்பை தைரியமாக கட்டையால் அடித்த ஜெயராஜ், பாம்பு இறந்து விட்டதாகக் கருதி, அதை வலது கையால் தூக்கினார். அப்போது, உயிருடன் இருந்த பாம்பு, ஜெயராஜின் இடது கை மணிக்கட்டில் கடித்ததில், ஜெயராஜ் மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் ஜெயராஜை பாம்புடன் ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜா
25-07-2012, 04:59 AM
20 நாள் கைலாய யாத்திரை புறப்படும் நித்யானந்தா..!: அப்போ ஆண்மை பரிசோதனை?

http://tamil.oneindia.in/img/2012/07/25-nithyananda-45-555-300.jpg

நித்யானந்தா நிருபர்களிடம் பேசுகையில், என் மீதான ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய்யானவை. தனது மகனை மீட்டுத் தருமாறு மதுரை ஆட்சியரிடம் பெற்றோர் புகார் கொடுத்துள்ளது, அந்த பெற்றோருக்கும், மகனுக்கும் இடையே இருந்த பிரச்சனை. அதை அவர்கள் பேசித் தீர்த்துக் கொண்டார்கள்.
பெங்களூரில் இம்மாதம் 30ம் தேதி ஆண்மைப் பரிசோதனைக்கு ஆஜராகுமாறு போலீஸார் எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். நான் கைலாய யாத்திரைக்குச் செல்வது 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, யாத்திரை முடிந்து வந்த பிறகு பரிசோதனைக்கு ஆஜராவதாக போலீஸில் மனு கொடுத்துள்ளோம். இது குறித்த வழக்கில் எனது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விவரங்களைத் தெரிவிப்பார்.

நான் புதன்கிழமை (இன்று) மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்கிறேன். அங்கிருந்து நேபாளம் சென்று கைலாயம் செல்வேன். என்னுடன் கைலாயத்தில் 200 பக்தர்களும் 3 வாரம் தங்கியிருந்து வழிபாடு செய்ய உள்ளனர். ஆதீன விதிமுறைகளை கடைப்பிடித்து, முறைப்படிதான் மதுரை ஆதீனமாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை தேர்வு செய்ததில் எந்த முறைகேடும் இல்லை.

என் பெயரைப் பயன்படுத்தி யாரும் புதிய நிறுவனமோ, ஹோட்டலோ, டிராவல் ஏஜென்சியோ தொடங்கக் கூடாது என்று என் பக்தர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன் என்றார்

ராஜா
25-07-2012, 05:02 AM
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தனர்.

அதில் சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். எனவே, பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 23) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கின்றனர். இதற்கு முன்பு அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மேல் கோர்ட்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே, அதை கருத்தில் கொள்ளாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் பணிகளை தாமதமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, வழக்கு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ராஜா
25-07-2012, 05:04 AM
செங்கல் சூளையில் வேலைபார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்திக்கு கெய்ல் நிறுவனம் ரூ.1 லட்சம் நிதி

2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் செங்கல் சூளையில் வேலை பார்ப்பது தெரிய வந்ததையடுத்து அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியை மத்திய பொதுத்துறை நிறுவனமான கெய்ல் (Gas authority of India-GAIL) வழங்குகிறது.

ராஜா
25-07-2012, 05:07 AM
நாங்குநேரி மணல் கடத்தல் விவகாரம்- விசாரிக்க சென்ற போலீஸ் சுட்டதில் இளைஞர் பலி- சாலை மறியல்

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/paramasivam/tenkasi/nellai---091.jpg

நாங்குநேரி அருகே செங்கல் சூளைக்காக குளத்தில் இருந்து திருட்டுத் தனமாக மணலை அள்ளிய விவகாரத்தில் விசாரணை நடத்தச் சென்ற போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது மறுகால் குறிச்சி கிராமம். இக்கிராமத்தினர் பெரும்பாலானோர் செங்கல் சூளை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மண் அருகே உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் அக்குளத்து மண் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் அக்குளத்தில் இருந்து திருட்டு தனமாக மண் அள்ளுவது தொடர்கதையாகிவந்தது.

இப்படி திருட்டுத்தனமாக மண் அள்ளியது தொடர்பாக மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கூடுதல் விசாரணைக்காக மறுகால்குறிச்சி கிராமத்துக்கு போலீசார் சென்றனர். அங்கு முருகனின் அண்ணன் வானமாமலையிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வானமாமலை மற்றும் அவருடன் இருந்த பொதுமகக்ளுக்கும் போலீசாருக்கும் இடையெ திடீரென மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வானமாமலை உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை சுற்றி வளைக்க முயற்சித்தனர். ஆனால் அங்கிருந்து போலீசார் வெளியேறிவிட்டனர்.

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வானமாமலையின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.. பின்னர் உதவி ஆட்சியர் ரோகிணியும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு இரவு 7 மணிக்கு சாலை மறியல்கைவிடப்பட்டது. அதன் பினன்ர் வானமாமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு குறித்து உதவி ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராஜா
25-07-2012, 05:11 AM
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வெளியேறுவோம்: காங்கிரசுக்கு பவார் 24 மணி நேரம் கெடு


http://tamil.oneindia.in/img/2012/07/25-sharad-pawar-300.jpg

தங்கள் கோரிக்கைகளை இன்றுக்குள் நிறைவேற்றாவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்று சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.

மன்மோகன்சிங் அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். சரத்பவார் 3வது இடத்திலும், ஏ.கே. அந்தோணி 4வது இடத்திலும் இருந்தனர். பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்துவிட்ட நிலையில் இயல்பாகவே 3வது இடத்தில் உள்ள தமக்குத்தான் 2வது இடம் கிடைக்கும் என சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் மன்மோகன்சிங்கோ அந்த இடத்தை 4-வது இடத்தில் இருந்த ஏ.கே. அந்தோணிக்கு ஒதுக்கினார். இதில் சரத்பவார் கடும் அதிருப்தி அடைந்தார்.

இதனால் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை சரத்பவார் புறக்கணித்தார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் கூட்டத்தையும் புறக்கணித்தார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் சரத்பவார் மற்றும் தேசியவாத காங்கிரசின் மற்றொரு அமைச்சரான பிரபுல் பட்டேல் இருவரும் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து பவாரும், பிரபுல் பட்டேலும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பவாரை சமாதானப்படுத்தினார். இதற்கிடையே பவார் தங்கள் கோரிக்கைகளை ஒரு கடிதமாக எழுதி பிரதமருக்கு அனுப்பினார். இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை இன்றுக்குள் அதாவது 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசில் இருந்து விலகிவிடுவோம் என்று பவார் எச்சரித்துள்ளார். இதனால் டெல்லி அரசியல் பரபரப்பாக உள்ளது.

ராஜா
25-07-2012, 05:31 AM
சிலிண்டர் விலை 7 ரூபாய் குறைந்தது

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 7 ரூபாய் வரை குறைந்தது.

சென்னையில் சிலிண்டர் விலை 7 ரூபாயு குறந்து 386 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப் படுகிறது. மாநில வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

ராஜா
25-07-2012, 06:00 AM
பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு..

http://img.dinamalar.com/business/admin/news/large_1343194033.jpg

புதுடில்லி : தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 12 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 70 பைசா நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை, கடந்த மே மாதம், லிட்டருக்கு, 7.54 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு, நாடு முழுவதும், பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. இதன்பின், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், ஜூன் 3ம் தேதி, லிட்டருக்கு 2.02 ரூபாயும், அதே மாதம், 29ம் தேதி, லிட்டருக்கு 2.46 ரூபாயும், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.

ஆனால், தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 12 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

ராஜா
25-07-2012, 08:30 AM
பேராசிரியை கண்டித்ததால் பி.இ. மாணவி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டுவை அடுத்த வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகள் வைத்தீஸ்வரி (20). அவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் கல்லூரி முடிந்த பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும். ஆனால் வைத்தீஸ்வரி இரவு வெகுநேரமான பிறகே விடுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகம் கண்டித்துள்ளது.

ஆனால் அவர் அதன் பிறகும் குறிப்பிட்ட நேரத்திற்கு விடுதிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரை போராசிரியை ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி விடுதியின் 5வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜா
25-07-2012, 09:45 AM
இனி வெறும் வெள்ளைத் தாளில் சிகரெட்கள்.. எழுத்துக்கள் கூடாது!

http://tamil.oneindia.in/img/2012/07/25-cigarette.jpeg

இந்தியாவில் தயாரிக்கப்படும் சிகரெட்களில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், சிகரெட் பயன்படுத்துவதால் கெடுதல் ஏற்படும் என்பதை குறிக்கும் படம் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தியாவில் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

ஆனால் நாட்டில் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது தவிர குறைந்தபாடில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள், வெறும் வெள்ளை காகிதம் சுற்றியது போல சிகரெட் மீது எந்த எழுத்தும் இல்லாமல் சிகரெட்கள் தயாரிக்கின்றன.

இதனால் ஆஸ்திரேலியாவில் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். இதையடுத்து இந்தியாவில் சிகரெட் குடிப்பவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், இந்தியாவிலும் சிகரெட்களை வெறும் வெள்ளை தாள் சுற்றிய சிகரெட்களை தயாரிக்குமாறு, மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.

ராஜா
26-07-2012, 03:52 AM
வாலிபருடன் நான்கு நாட்கள் சுற்றிவிட்டு வீடு திரும்பிய மகள்களை சுட்டுக்கொன்ற தந்தை

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணம், தலிபான்களின் செல்வாக்கு மிக்கப்பகுதி. இங்கு பெண்கள் கல்வி கற்பதற்கும், நாகரீக உடை அணிவதற்கும், மற்ற ஆண்களுடன் பேசுவதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நத் அலி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள், வாலிபர் ஒருவருடன் வீட்டை விட்டு சென்று விட்டனர்.

நான்கு நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர்கள் மீது கடும் கோபம் கொண்ட தந்தை, துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்றார். இரண்டு மகள்களை சுட்டு கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை அழைத்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜா
26-07-2012, 03:55 AM
ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்ட வாலிபர்கள்


பெங்களூரைச் சேர்ந்தவர் திவ்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வித்யரான்யபுரத்தில் , தனது பாட்டி வீட்டில் தங்கி உள்ளார், தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை பணிமுடிந்து ஏஷ்வந்தாபூர்- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார். அப்போது ரயிலில் பயணித்த நான்கு வாலிபர்கள் ராம்நகரம் ரயில் நிலையம் வந்த போது திவ்யாவிடம் சில்மிஷம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார். தொடர்ந்து அவரை கற்பழிக்க முயற்சித்தனர். உடனே அவர் அலறி கூச்சலிட்டு போலீசாரிடம் புகார் தெரிவிப்பதாக எச்சரித்தார்.

இதனால் நான்கு வாலிபர்களும் ஆத்திரமடைந்தனர். சிம்ஷகா ஆற்றுப்பாலத்தினை ரயில் கடந்து சென்று கொண்டிருந்த போது, நான்கு வாலிபர்களில் ஒருவன் திவ்யாவை பின்புறமாக எட்டி உதைத்தான்.

இதில் 25 அடி உயரத்தில் இருந்து ஆற்றி்ல் கீழே விழுந் தார். இதில் அவருக்கு தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இ*தனை மற்றொரு பெட்டியில் பயணித்தவர்கள் பார்த்தனர். உடனடியாக அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மைசூரின் கல்யாண்கீர் பகுதியைச் சேர்ந்த அக்பர் (24),இம்ரான் (25), சுபான், அகமது ஆகிய நான்கு பேரை தேடி வந்தனர்

.இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு மாண்டியா போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஓடும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணை மனபங்கம் செய்ய முயன்ற வாலிபர்கள் அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.