PDA

View Full Version : சனிக்கிழமை ஏப்ரல் 23-05 மலேசிய செய்திகள்



Mano.G.
23-04-2005, 05:26 AM
புதிய விரிவாக்கப்பணி தொடர்பான ஒப்பந்தம்

அன்றாடம் போக்குவரத்து நெரிசல்களும் விபத்துகளும் ஏற்படும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளின் விரிவாக்கப்பணி தொடர்பில் அரசாங்கம் மற்றும் PLUS நிறுவனத்திற்கிடையேயான உடன்பாடு கோலாலம்பூரில் நேற்று கையெழுத்திடப்பட்டது.

அந்நெடுஞ்சாலைகளின் தரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் Datuk Seri S. Samy Vellu தெரிவித்தார்.

வாகனமோட்டிகளின் பாதுகாப்பையும் வசதிகளையும் கருத்தில் கொண்டு இந்த சாலை மேம்பாட்டு திட்டம் ஏற்படுத்தப்படவிருப்பதாக கையெழுத்து உடன்படிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.


-----------------------------------------------------------------


நீரிணைப்பகுதியில் கொள்ளையர்கள் கைது

ஜொகூர் மாநில நீரிணைப் பகுதியில் இந்தோனிசியாவைச் சேர்ந்த சுமார் 7 கடற்கொள்ளையர்களை,கடல் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இக்கொள்ளையர்கள் நீண்டகாலமாக அப்பகுதியில் பல கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக Komander SAC Abdul Rahman Ahmad தெரிவித்தார்.

Tanjung Stapa , Kota Tinggi அருகிலுள்ள கடல் பகுதியில் வாணிக கப்பல் ஒன்றைக் கொள்ளையிடும் முயற்சியின் போது அக்கொள்ளையர்கள் பிடிப்பட்டதாக அவ்வதிகாரி கூறினார்.


-----------------------------------------------------------------


கிளந்தானில் வனஇலாகா ஊழியர்கள் அதிகரிப்பு

சட்டவிரோத வெட்டு மரத்தொழில் நிகழாமல் பாதுகாப்பதற்கு, வன இலாகா ஊழியர்கள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமென கிளந்தான் மாநில துணை மந்திரி பெசார் Datuk Ahmad Yaacob வன இலாகாவிற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

ஊழியர்களை அதிகரிக்கும் இந்த ஆலோசனைத் தொடர்பான விவரங்கள் விரைவில் வன இலாகாவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்டு வரும் காடுகளில் தற்பொழுது அதிகமான சட்டவிரோத வெட்டு மரத் தொழில் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் அதனைக் கையாள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.


-----------------------------------------------------------------

கிள்ளானில் முதியவர் குத்திக்கொலை

கிள்ளான் Tengku Ampuan Rahimah மருத்துவமனையின் அடுக்குமாடி வீட்டில், 80 வயது தக்க இந்தியர் ஒருவர் கத்தி குத்துக்கு ஆளாகி மரணமடைந்தார்.

நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில், அவரின் வீட்டினுள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள்,அவரையும் , அவரது மகளையும் தாக்கியதாக தகவல் கிடைத்திருப்பதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், காயமுற்ற அவரது மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


-----------------------------------------------------------------


சாலை விபத்தில் இருவர் மரணம்

Jalan Seremban-Tampin சாலையில் நேற்று முன் தினம் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் Treler மற்றும் கார் மோதிக் கொண்டதில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரியின் மகன் ஒருவர் உட்பட இருவர் மரணமடைந்தனர்.

இந்திய இளைஞரான treler ஓட்டுநர் சிரம்பான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்ததாக நெகிரி மாநில போக்குவரத்து போலீஸ் அதிகாரி ASP Mohd Shahar Ibrahim தெரிவித்தார்.


-----------------------------------------------------------------


தீ விபத்து

Sibu, Sungai Malangan குடியிருப்பு அருகே நேற்று முன் தினம் மாலை கடும் தீ விபத்து ஏற்பட்டது.

இத்தீச்சம்பவத்தில் 41 வீடுகள் தீயில் அழிந்ததுடன், சுமார் 200 பேர் தங்களின் இருப்பிடத்தை இழந்துள்ளதாகவும் Sibu தீயணைப்பு தலைவர் Abang Azemi Abang Annuar தெரிவித்தார்.

இவ்வாண்டில் Sibu பகுதியில் ஏற்படும் முதல் தீச்சம்பவம் இதுவென அவர் குறிப்பிட்டார்.
_________________________________

மன்னிப்பு கேட்ட ஜப்பான் பிரதமர்

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் தங்களின் நாட்டு இராணுவம் பிறநாட்டு மக்களிடம் கருணையற்ற முறையில் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்பதாக ஜப்பான் பிரதமர் Junichiro Koizumi தெரிவித்தார்.

நேற்று ஜகார்த்தாவில் தொடங்கிய ஆசியா-ஆப்பிரிக்கா உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய போது அவர் அக்கருத்தினை தெரிவித்தார்.

ஜப்பானின் பாடப்புத்தகங்களில் வரலாற்றுச் சம்பவங்கள் மாற்றி எழுதப்பட்டிருப்பதாக சீனாவில் போராட்டங்கள் வலுவடைந்து வரும் வேளையில் ஜப்பான் பிரதமர் இக்கருத்தினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஜப்பானுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியினைக் கோரி வரும் சூழ்நிலையிலும் இக்கருத்து வெளியிடப்பட்டிருப்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தினை ஈர்த்துள்ளது.

_________________________________
அறவழி ஆயுதம் ஏந்துவோம்: கருணாநதி

தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக திமுகவினர் அறவழி ஆயுதம் ஏந்தத் தயங்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலின்போது அமைச்சர்களே சாலையில் அமர்ந்து மறியல் செய்தும், கலகம் செய்தும் அமைதிக்குப் பங்கம் விளைவித்துள்ளார்கள். இதை உயர்நீதிமன்றமும் கண்டித்துள்ளது.

இதேபோன்ற கலகமும், மறியலும், வன்முறையும் சட்டசபை இடைத் தேர்தலிலும் அரங்கேறக் கூடும். இவற்றை எதிர்த்து திமுகவினரும், தோழமைக் கட்சியினரும் அறவழி ஆயுதம் ஏந்துவதில் எந்தத் தவறும் இல்லை.

இடைத் தேர்தலில் திமுக பெறும் வெற்றி, திமுக அணியினர், எதிர் வரும் சட்டசபை பொதுத்தேர்தலை சந்திப்பதற்கு ஊக்கமாக அமையும். கூட்டணியை பலப்படுத்தும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
__________________________________
ஆசியா-ஆப்பிரிக்க உச்சநிலை மாநாடு

இந்தோனிசியாவில் பரபரப்பான சூழ்நிலையில் ஆசியா-ஆப்பிரிக்கா உச்சநிலை மாநாடு நேற்று தொடங்கியது. ஜப்பான் - சீனா இருநாட்டு உறவுகள் சிக்கலாக உருவெடுத்துள்ள சூழ்நிலையில் நடைபெறும் இம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் குவிந்துள்ளனர்.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi Jakarta சென்றுள்ளார். அவரை இந்தோநிசியாவிற்கான மலேசிய தூதர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றனர்.


-----------------------------------------------------------------


அமெரிக்க வான் எல்லையில் பறக்க விமானங்களுக்குக் கட்டுப்பாடு

அமெரிக்கா மீது மீண்டும் விமானவழித்தாக்குதலை நடத்த அல்-கய்தா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அமெரிக்க வான் எல்லையைக் கடந்து செல்லும் பிற நாட்டு விமானங்கள், முன் கூட்டியே அமெரிக்காவுக்குத் தகவல் தெரிவிப்பதுடன், விமானப்பயணிகளின் பட்டியலையும் அறிவிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தரையிறங்கும் விமானங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு முன்பு விதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் அமெரிக்கா வழியாக விமானத்தில் கடந்து சென்றது தெரிய வந்ததால், இப்புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தினமும் 50 விமானங்கள் அமெரிக்காவைக் கடந்து செல்கிறது.


-----------------------------------------------------------------


சிங்கப்பூர் விமான நிறுவனத்தை மிரட்டிய இந்தியர்

சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் கிளை அமைப்பான SilkAir விமானத்தினை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் போலிசாரால் கைது செய்யப்பட்ட இந்தியஆடவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.

இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த அவ்விமானத்தில் இருந்த சிப்பந்தியிடம், தான் ஒரு இஸ்ரேலிய அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், அவ்விமானத்தை வீழ்த்தி விடப்போவதாகவும் மிரட்டியதாக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தர்போது ஜாமீனில் அவர் மீதான குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டால், 7 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.


-----------------------------------------------------------------


அமெரிக்காவுக்கு முன்னாள் சோவியத் அதிபர் கண்டனம்

அணுஆயுதங்களைக் குவியல், குவியல்களாக உற்பத்தி செய்து வைத்துக் கொண்டு, பிற உலக நாடுகளை அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என அமெரிக்கா மிரட்டி வருவதாக உடைந்த சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் அதிபர் Micheal Korpachev கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய Korpachev, உலகின் சக்தி மிக்க நாடாக வளர்ந்து விட்டதால், அமெரிக்காவுக்கு வெற்றி வியாதி பீடித்துள்ளதாகவும், உண்மையிலேயே உலகில் அமைதி நிலவ வேண்டுமென அமெரிக்கா விரும்பினால் முதலில் தன் வசம் உள்ள ஆயுதங்களை அது அழிக்க முன் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


-----------------------------------------------------------------


அமெரிக்காவில் தீபாவளி சிறப்புத் தபால்தலை

தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்புத் தபால்தலை ஒன்றை அமெரிக்க அரசாங்கம் வெளியிட வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான Frankfallon ஒரு தீர்மானம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தீபாவளியை அனைத்துத் தரப்பினரும் விரும்பிக் கொண்டாடி வருவதால் தீபாவளியைச் சிறப்பித்து தபால்தலை வெளியிட வேண்டுமென அவர் தன்னுடைய தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புத் தபால்தலை வெளியிடக் கோரி, தபால்துறையின் கீழ் உள்ள குடிமக்கள் தபால்தலை ஆலோசனைக்குழுவுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் மனு செய்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் 15 இலட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
___________________________________
Blackburn ஆட்டக்காரர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற FA Cup ஆட்டத்தில் Blackburn அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் Andy Todd, Arsenal ஆட்டக்காரர் Robin van Persie உடன் வன்முறையில் ஈடுபட்டதற்கான வழக்கை காற்பந்து கழகம் தள்ளுபடி செய்துள்ளது.

குறிப்பிட்ட ஆட்டத்தில் இருஅணிகளும் விளையாடும் பொழுது, Andy Todd தனது முழங்கை மூட்டு பகுதியால் Robin van Persie முகத்தைத் தாக்கியது குறித்து காற்பந்துக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

அச்சம்பவம், தவறுதலாக ஏற்பட்டது எனவும், அது ஒரு விபத்து எனவும் Andy Todd தனது தரப்பு அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரஞ்சோதி
23-04-2005, 09:25 AM
இன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.

அமெரிக்கா தீபாவளி தபால் தலை வெளியிடுவது மகிழ்ச்சியான செய்தி.

ஜப்பான் சரித்திரத்தை மாற்றி எழுத நினைத்தது துக்ளக் ராஜாவின் நடவடிக்கை போன்று இருக்கிறது.


மைக்கேல் கார்போசேவ் அன்றைக்கு செய்த தவறினால் தான் இன்றைக்கு அமெரிக்கா தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் ஆடுகிறார்கள்.