PDA

View Full Version : குடைக்குள் மழை



AJeevan
13-09-2004, 01:37 PM
குடைக்குள் மழை


http://www.vikatan.com/av/2004/sep/19092004/p7.jpg
பார்த்திபனிடமிருந்து மிக நுணுக்கமான, மாறுபட்ட, பயங்கரமான காதல் கதை!

காதல்,
நினைத்தால் குடைக்குள்ளே மழை பெய்ய வைக்கவும் முடியும்.
ஒருவனின் வாழ்க்கையையே குடை சாய்க்கவும் முடியும் என்பதே கதை.
http://www.vikatan.com/av/2004/sep/19092004/p7a.jpg
ஆளில்லாத ஒரு பழைய மாடல் பங்களாவில், தன்னந்தனியே இருக்கிற பார்த்திபன், மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். ஏன்... அப்படி அவருக்கு ஏற்பட்ட விரக்தி என்ன என்பதை அவரது எண்ண அலைகளாகவும், இடையிடையே அவர் நடத்துகிற தொலைபேசி உரையாடல்களாகவும் நமக்கு விளக்கிக் கொண்டே நகர்கிறது முதல்பாதி படம். அந்த வீட்டுக்குள் நடக்கிற சில சம்பவங்களினால் அடிக்கடி கட் ஆகி, மறுபடி ·ப்ளாஷ்பேக்கைத் தொடரும் உத்தியைப் படுஷார்ப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.


கதாநாயகி மதுமிதாவின் துள்ளலான காதல் குறும்புகளும் பளீர் நடிப்பும் துடிப்பான சீண்டலுமாக அந்தக் காதல் எபிஸோடு விறுவிறுப்பான வேகத்தில் நகர்ந்து, எதிர்பார்க்க முடியாத திருப்பத்தில் முடிவது, பார்த்திபனோடு சேர்த்து நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

வித்தியாசமான இந்த யுஒருதலைரு காதல் தோல்வியில் துவண்டதால்தான் பார்த்திபன் தற்கொலைக்கு முயற் சிக்கிறார் என்று நமக்கு முழுசாக உணர வைக்கும் போது, அவரைத் தடுத்துக் காப்பாற்ற, திடீரென அறிமுகமாகிறார் சிங்கப்பூர் ரிட்டர்ன் தம்பி (இதுவும் பார்த்திபனே!).

·பிரெஞ்ச் தாடியும், மைக்கேல் ஜாக்ஸன் ஹேர்ஸ்டைலுமாக இவரது வரவு, கதையில் புதிய சுவாரஸ்யங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், எம்.ஆர்.ராதா ஸ்டைலில் புரட்சிகர(?) கருத்து மழையும், விஜய டி.ராஜேந்தர் பாணியில் இழுத்து இழுத்து உச்சரிப்புமாக வளைய வந்தா லும், அடுத்த சிறிது நேரத்திலேயே பொசுக்கென்று இவர், அண்ணன் பார்த்திபன் கையால், துப்பாக்கிக்கு இரையாகி உயிரை விட்டுவிடுகிறார்.

மேலோட்டமாக ஒரு சராசரியான கதைபோலத் தோன்றினாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புரட்டிப்போடு கிற அந்த பகீர் க்ளைமாக்ஸ், தமிழ் சினிமா ரசிகர்களின் சிந்தனைக்குப் புது சவால். ஒரு மனிதனின் எண்ணச் சுழலை, காட்சி வடிவத்தில் கொண்டு வருவதற்கு எத்தகைய சிரத்தையும் கற்பனா சக்தியும் தேவை என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசன, இயக்குநர் ரா.பார்த்திபன். ஆனால், க்ளைமாக்ஸ் வரை சராசரி தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போடுவதற்கான கமர்ஷியல் விஷயங்கள் இதில் குறைவு.

படத்தின் நாலாவது ரீலில் சோகப் பாடல், அதிரடி ஆட்டம் வைக்கிற க்ளைமாக்ஸ் ஏரியாவில் தாலாட்டுப் பாட்டு, ஜிலீரென ஒரு ஹீரோயின் இருந்தும் காலரைக்கால் டூயட் என்று ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக் கிறார் பார்த்திபன்.

அந்த பங்களா... ஓர் அதிசய அரங்கம். இஞ்ச் இஞ்ச்சாக அந்தக் கட்டடத்தைக் கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிற, ரகளையான ரசனைக்காகவே தனிப் பாராட்டுக்கள். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம் ஓர் உதாரணம். ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனுக்கு சபாஷ்!

தூக்கு மாட்டிக்கொள்ள பார்த்திபன் ஒரு பட்டுச் சேலையை எடுக்க, அந்த சேலையே மதுமிதாவாக மாறி அவரைப் படாதபாடு படுத்தும் காட்சியில் காமிராமேன் சஞ்சய் & இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இருவரும் சேர்ந்து பிரமாதப்படுத்து கிறார்கள்.

உடைந்துபோன பல்பின் கண்ணாடிச் சில்லையும் பிறைநிலாவையும் மாறி மாறிப் பார்க்கும் பார்த்திபன், நிலாதான் உடைந்து விட்டதோ என்றெண்ணி அந்த பல்புத் துண்டை நிலாவுடன் பொருத்திப் பார்க்க, பிறைநிலா முழு நிலாவாகி கூரை வழியே குதிப்பது... என ஆங்காங்கே அடடா போடவைக்கும் அழகு.

ஆந்திர வரவு புதுமுகம் மதுமிதா. தமிழ் சினிமாவுக்கு பார்த்திபனின் குடை... ஸாரி கொடை! கண்களைஉறுத் தாத கவர்ச்சியும், பஞ்சமில்லாத இளமைத் துள்ளலுமாக வளையவரும் இந்தப் பெண்ணுக்கு, அடுத்தடுத்து திறமையான இயக்குநர்களின் படங் களில் வாய்ப்புக் கிடைத்தால், சந்தேகமில்லாமல் செம ரவுண்டு வருவார்!

மதுமிதாவை காரில் போய்க் கடத்தி வருவதும், அவர் பார்த்திபனின் வெறித் தனமான காதலைப் படிப்படியாகப் புரிந்துகொள்வதும்... குணா, சேது, காதல் கொண்டேன் படங்களையெல் லாம் நினைவுறுத்துகின்றன. ஆனால், அந்தக் கடத்தல் அத்தியாயத்தின் முத்தாய்ப்பாக, காதலியோடு தனது கற்பனை வாழ்க்கையை மெகா சைஸ் ஆல்பமாக வரைந்து வைத்து, அதை நெகிழ்ச்சியோடு பார்த்திபன் வர்ணிக்கிற கவிதையான காட்சியில் பழைய வாசனையெல்லாம் பறந்தே போகிறது.

பொறிக்குள் வந்து சிக்கும் எலி, ஜன்னல் வழியே நுழையும் பாம்பு, ·ப்ரிஜ்ஜுக்குள் பார்த்திபன் வைத்து அடைகாக்கும் உறைந்த கோழி... இதெல்லாம் சராசரி ரசிகர்களின் மண்டையைக் குழப்பும் புதிர்கள்.

எஸ்.பி.பி&யின் எங்க போயிச் சொல்லுவேன்... காதுக்கு இதம். ராஜாவின் அடியே கிளியே... மனசுக்குச் சுகம்! இரண்டாம் பார்த்திபன், அவர் சம்பந்தப்பட்ட மிக நீளமான வசனக் காட்சிகள், திகட்டுமளவுக்கு யுகிம்மிக்ருகுகள் என குடைக்குள் சில கம்பிகள் குத்தினாலும், மனசுக்குள் மழைத்தூறல்தான்!

வழக்கமான எதிர்பார்ப்புகளை உதறிவிட்டு உள்ளே போனால், காதலை கதிகலங்கவைக்கும் பரிமாணத்தில் பதிவு செய்திருக்கும் பார்த்திபனின் முயற்சி, புதியதொரு அனுபவம்!

விகடன் விமரிசனக்குழு

Nanban
13-09-2004, 07:58 PM
அற்புதம் அஜீவன் - இ[ப்பொழுது தான் குமுதத்தில் விமர்சனம் படித்து விட்டு வந்தேன். அதற்குள்ளாக மன்றத்தில் இன்னும் விளக்கமாக விரிவாக, விமர்சனம்... இந்த வாரம் பார்க்கலாம்.....

Nanban
19-09-2004, 06:19 PM
என்ன விந்தை...

ஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு நண்பர்களுமே விமர்சனத்தைப் படிக்க வில்லையா...?

நல்ல படங்களுக்கு எப்பவுமே மவுசு குறைச்சல் தான் போலிருக்கிறது....

lavanya
21-09-2004, 10:46 AM
அருமையான படம் பார்த்திபனின் வித்தியாசமான ஒரு மறுபடைப்பு....இந்த
வாரம் பார்க்கலாம் என்றிருந்தேன் தியேட்டரிலிருந்து படத்தை தூக்கிவிட்டார்கள்.

எழுத்து சித்தர் பாலகுமாரன் சொன்னது நினைவுக்கு வருகிறது...உயர்ந்த விஷயங்கள் எல்லோர்க்கும் உகந்த விஷயங்கள் அல்ல..

Narathar
21-09-2004, 12:20 PM
எப்போதுமே பார்த்திபன் வித்தியாசமாய் கதை சொல்லுவார்
சில நேரங்களில் அதிகமாக பேசி படம் பார்க்கும் நம்மை கொல்லுவார்....
இதில் இரண்டையும் சம விகிததில் செய்திருக்கின்றார் போல் தெரிகிறது!!

தஞ்சை தமிழன்
21-09-2004, 01:27 PM
விகடனின் விமர்சனம் கண்டால் படத்தை பார்க்கலாம் போல் தோன்றுகிறது.

பார்க்க வேண்டும்.

பரஞ்சோதி
21-09-2004, 01:41 PM
பார்த்திபன் அதிகமாகவே பேசுவார் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே.

வித்தியாசமாக சிந்திப்பதாக எழுதியதை படித்து, பார்க்க ஆசை தான்.

AJeevan
21-09-2004, 02:11 PM
குடைக்குள் மழை
another view

'கமர்ஷியல் கவிதை' என்று பார்த்திபனால் அறிவிக்கப்பட்டு வெளிவந்துள்ள 'குடைக்குள் மழை' படத்தில் கமர்ஷியலும் சரி கவிதையும் சரி பெரிதாக இல்லை. இருந்தாலும் ஓரளவு வித்தியாசமான, துணிச்சலான முயற்சி எடுத்தற்காக பாத்திபனை பாராட்டலாம்.

கேன்டிட் கேமராவில் எடுக்கப்படும் தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆட்டோ டிரைவர் பார்த்திபனை காதலிப்பது போல அந்த சேனலில் வேலை செய்யும் மதுமிதா நடிக்கிறார். பார்த்திபன் அதை உண்மை என்று நம்பி மதுமிதாவை ஆழமாக காதலித்துவிடுகிறார். பிறகு டிவி நிகழச்சிக்காக நடந்த நாடகம் என்று தெரியும்போது அதிர்ந்து போகிறார். தான் ஏமாந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பப்பட்டு அனைவரும் பார்க்கும் போது காதல் ஏமாற்றத்துடன் அவமான உணர்ச்சியும் சேர மனநோயாளியாக மாறிவிடுகிறார். ஒரு மன நோயாளியாக அவரது கனவு வாழ்க்கையே மீதிக் கதை.

நீளமான முதல் பாதியை ஓரளவு சுவாரஸ்யமாக கொண்டுசென்ற பார்த்திபன், இரண்டாம் பாதியில் ரசிகர்களை அலுக்க வைத்துவிடுகிறார். இருந்தாலும் படத்தின் இறுதிப்பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார். காதலிக்கு பிறந்த நாள் பரிசாக செய்யும் 'குடைக்குள் மழை' காட்சி ஒரு கவிதை என்றால் மதுமிதா குடித்துத் தந்த இளநீரை பார்த்திபன் குடிக்கும் விதம் ஒரு இளமைத் துள்ளல். கமலுக்குப் போட்டியாக நிறைய முத்தக் காட்சிகளையும் வைத்திருக்கிறார் பார்த்திபன். நிறைய ப்ளாஷ்பேக்குகள் படத்தில் வந்தாலும் குழப்பம் ஏற்படாத வகையில் இயக்குனர் கதை சொல்லியிருக்கிறார். படத்தில் குறைவான கேரக்டர்கள்தான். பார்த்திபன் மதுமிதாவைச் சுற்றியே கதை செல்கிறது. சில கேரக்டர்களுக்கு நடிகர்களை காண்பிக்காமல் வசனத்தை மட்டும் பேச வைத்திருக்கிறார்.

ஆட்டோடிரைவர் பாத்திரத்தை அழகாகச் செய்திருக்கிறார் பார்த்திபன், காதலில் ஏமாற்றம் அடையும்போதும் தற்கொலை முயற்சியில் இறங்கும்போதும் கனமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். சிங்கப்பூர்க்கார பார்த்திபன் பாத்திரம் மிகவும் செயற்கையாக உள்ளது. அவரது உடைகளும் தலை முடியும், அவர் கத்திப் பேசுவதும் சகிக்கவில்லை. அழகான அறிமுகம் மதுமிதா. ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். படத்தில் டெலிபோனும் மழையும் கதாபாத்திரங்கள் போலவே படம் முழுக்க வருகின்றன. ஸ்ரீமன் இன்ஸ்பெக்டராக ஒரு சிறிய வேடத்தில் வருகிறார்.

கார்த்திக் ராஜாவின் இசையில் 'எங்கே போய் சொல்லுவேன்' பாடல் ஓ.கே. சுரேஷ்ராஜனின் நேர்த்தியான படத்தொகுப்பு படத்துக்கு ஒரு பலம்.

'குடைக்குள் மழை' கொஞ்சம் மழை, கொஞ்சம் பிழை

மன்மதன்
21-11-2004, 06:52 AM
]நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்தது. படத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் எல்லாத்தையும் உடைத்து விட்டது.. விமர்சனம் எழுதலாம் என்று வந்தால் இங்கே அஜீவன் தந்திருக்கும் விகடன் விமர்சனத்துக்கும் மேலே எழுத முடியாது.. என்ன சொல்ல வந்தேனோ அதை விகடன் அப்படியே எழுதியிருப்பது ஆச்சரியம்.

இரண்டாவது பார்த்திபன் வரவு, நிலா கீழே இறங்கி வருவது, ரெ·ப்ரிஜ்ரேட்டடுக்குள் கோழி , பொறியில் எலி என்று சில பெரிய 'Hint' கொடுத்திருப்பது ஹாலிவுட் பாணி.. உலக தரத்துக்கு கமலுக்கு அடுத்து பார்த்திபன் என்று கூட சொல்லலாம்..

இடைவேளையில் இரண்டாவது பார்த்தி 'இனி மேல்தான் இருக்கு' என்று ஒரு டயலாக் அடிப்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்குவது உன்மைதான்.. சில காட்சிகளிலேயே காதலை பற்றி நம்மை கண்டிப்பாக யோசிக்க வைக்கிற வசனங்களை மட்டுமே பேசி விட்டு இறந்து விடுவது சராசரி ரசிகனை ஏமாற்றமடைய வைக்கும்.. பார்த்திபன் படம் என்றால் இனி சராசரிக்கும் மேல் என்ற ஒரு எதிர்பார்ப்பு இந்த படம் மூலம் விளங்கும்.. 'குடைக்குள் மழை' என்ற தலைப்பிலே கவிதை.. கிளைமேக்ஸில் டைட்டிலை தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு ஒரு கவிதை காட்சிகளில்..

குடைக்குள் மழை.. படம் முடிந்ததும் மனதுக்குள் பொழிகிறது....அழுத்தமாக..

அன்புடன்
மன்மதன்


பார்த்திபனிடமிருந்து மிக நுணுக்கமான, மாறுபட்ட, பயங்கரமான காதல் கதை!



காதல்,
நினைத்தால் குடைக்குள்ளே மழை பெய்ய வைக்கவும் முடியும்.
ஒருவனின் வாழ்க்கையையே குடை சாய்க்கவும் முடியும் என்பதே கதை.

பிரெஞ்ச் தாடியும், மைக்கேல் ஜாக்ஸன் ஹேர்ஸ்டைலுமாக இவரது வரவு, கதையில் புதிய சுவாரஸ்யங்களுக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், எம்.ஆர்.ராதா ஸ்டைலில் புரட்சிகர(?) கருத்து மழையும், விஜய டி.ராஜேந்தர் பாணியில் இழுத்து இழுத்து உச்சரிப்புமாக வளைய வந்தா லும், அடுத்த சிறிது நேரத்திலேயே பொசுக்கென்று

[quote]மேலோட்டமாக ஒரு சராசரியான கதைபோலத் தோன்றினாலும், ஒட்டு மொத்தப் படத்தையும் புரட்டிப்போடு கிற அந்த பகீர் க்ளைமாக்ஸ்,

தமிழ் சினிமா ரசிகர்களின் சிந்தனைக்குப் புது சவால்.

அந்த பங்களா... ஓர் அதிசய அரங்கம். இஞ்ச் இஞ்ச்சாக அந்தக் கட்டடத்தைக் கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிற, ரகளையான ரசனைக்காகவே தனிப் பாராட்டுக்கள். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம் ஓர் உதாரணம். ஆர்ட் டைரக்டர் விஜய் முருகனுக்கு சபாஷ்!

மதுமிதாவை காரில் போய்க் கடத்தி வருவதும், அவர் பார்த்திபனின் வெறித் தனமான காதலைப் படிப்படியாகப் புரிந்துகொள்வதும்... குணா, சேது, காதல் கொண்டேன்

பொறிக்குள் வந்து சிக்கும் எலி, ஜன்னல் வழியே நுழையும் பாம்பு, ·ப்ரிஜ்ஜுக்குள் பார்த்திபன் வைத்து அடைகாக்கும் உறைந்த கோழி... இதெல்லாம் சராசரி ரசிகர்களின் மண்டையைக் குழப்பும் புதிர்கள்.