PDA

View Full Version : முத்திரை பதித்த நடிகைகள்



rajeshkrv
07-06-2004, 10:06 AM
எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் சிலர் தங்கள் திறமையாலும் நடிப்பாலும் இன்றும் நினைவில்
நிற்கிறார்கள் அந்த வகையில் சிலரைப்பற்றி பார்ப்போம்..

முதலில் 1940 - 1950 பற்றி பார்ப்போம்

1. டி.ஆர்.ராஜகுமாரி ...
1941'ல் கச்ச தேவயானி என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்
அன்றே கவர்ச்சி வேடமேற்றவர் இவர்..
தன் கண்களாலும், உடலாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

பின் ஹரிதாஸில்(1944) இவர் பாகவதருடன் இணைந்து நடிக்க மன்மத லீலையயை வென்றார் உண்டோ
பாடலும் பிரபலமாக இவர் புகழின் உச்சிக்கு சென்றார்.

1945- பி.யு.சின்னப்பாவுடன் விகட யோகியில் நடித்தார்
1948- ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்டப்படைப்பான சந்திரலேகாவில் நடித்தா ர் இவரது இணை ரஞ்சன்

ரஞ்சனுடன் சேர்ந்து எம்.கே.ராதா என்ற படத்திலும் நடித்தார்

பின்னர் வானம்பாடி, பாசம் படங்களில் அம்மா வேடங்களில் நடித்தார்

சமீபத்தில் இவர் 79 வயதில் சென்னையில் மரணமடைந்தார்

40'களின் ராணி இவர் என்றால் மிகையில்லை

mythili
07-06-2004, 10:33 AM
நல்லதொரு ஆரம்பம், பாராட்டுக்கள்.
தொடருங்கள் ராஜேஷ்.

அன்புடன்,
மைதிலி.

மன்மதன்
07-06-2004, 10:51 AM
ஒரு நல்ல ஆரம்பம்.. வித்தியாசமான தலைப்பு.. பாராட்டுக்கள் ராஜேஷ்.


அன்புடன்
மன்மதன்

poo
07-06-2004, 03:07 PM
மன்றத்து தலைகளின் கனவுக்கன்னிகள் வலம்வரும் நேரமா?!!

அசத்துங்க நண்பரே!!

பாரதி
07-06-2004, 05:23 PM
அந்தக் கால நினைவுகளை படத்துடன் தந்து எங்களை அசத்தும் அன்பு ராஜேஷக்கு நன்றி.

பரஞ்சோதி
07-06-2004, 05:57 PM
அருமையான தலைப்பு, நிறைய செய்திகள் தெரிந்துக் கொள்ள முடியும்.

நன்றி ராஜேஷ் அண்ணா. தொடர்ந்து வித்தியாசமான தலைப்புகளில் கொடுங்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
07-06-2004, 05:58 PM
நல்ல தொடர். வாழ்த்துக்கள் நண்பரே. எனக்கும் பழைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு.

பரஞ்சோதி
07-06-2004, 05:59 PM
மன்றத்து தலைகளின் கனவுக்கன்னிகள் வலம்வரும் நேரமா?!!

அசத்துங்க நண்பரே!!

நண்பா பூ, நம்ம தலை அந்த காலத்தில் காலேஜ் கட் அடித்து சென்று பார்த்த படம் சந்திரலேகாவாம், என்கிட்ட சொல்லியிருக்கிறார்.

poo
07-06-2004, 06:25 PM
மன்றத்து தலைகளின் கனவுக்கன்னிகள் வலம்வரும் நேரமா?!!

அசத்துங்க நண்பரே!!

நண்பா பூ, நம்ம தலை அந்த காலத்தில் காலேஜ் கட் அடித்து சென்று பார்த்த படம் சந்திரலேகாவாம், என்கிட்ட சொல்லியிருக்கிறார்.
ஏகப்பட்ட பேர் அந்த படத்தை அப்படித்தான் பார்த்தாங்கபோல பரம்ஸ்...

நான் முன்பு வேலை செய்த கம்பெனி மேனேஜர், என் அப்பா, சித்தப்பா.. எல்லாரும் இதையேதான் சொல்றாங்க..

சன் டிவியின் காவிய புதனில் அந்தப்படம் போட்ட அன்னைக்கு பூவிதாவோட பிறந்தநாள் .. நல்லா ஞாபகம் இருக்கு... என் அப்பாவும், அந்த மேனேஜரும் உட்கார்ந்து படம் முழுக்க பார்த்துட்டுதான் எழுந்தாங்க.. பிறந்தநாளாச்சே.. கொஞ்சம் கலர் கலரா பாட்டு கேக்கலாம்னு இருந்த என் நண்பர்கள் காய்ந்துவிட்டார்கள்.!

பரஞ்சோதி
07-06-2004, 06:29 PM
நான் கூட சில நாட்களுக்கு முன்பு ஆறாவது தடவையாக பார்த்தேன், உண்மையில் டி.ஆர்.ராஜகுமாரி அழகாகவே இருக்கிறார். கண்கள் தான் எத்தனை காவியங்கள் பேசுகின்றன, அவரது கொஞ்சும் மொழிகள் தான் எத்தனை எதிரியாக இருந்தாலும் ஐஸ்ஸாக கரைத்துவிடுமே...

கருப்பு வெள்ளையில் கிடைத்த கருப்பழகி.

thamarai
07-06-2004, 07:46 PM
காலத்தால் அழியாத முத்திரை பதித்த நடிகைகளை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றது......
வாழ்த்துக்கள்....

இளசு
07-06-2004, 10:21 PM
அந்தக் கண்கள்.....

நன்றி குருகுருவே..

kavitha
08-06-2004, 03:16 AM
தனிப்பதிவுகளில் இனி கலக்கப்போகும் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

அந்த 'சந்திரலேகா' நடனமும்... கண்களில் பாவத்தை காட்டும் பாங்கும் (மனோகரா)மிக அருமையாக இருக்கும்.


கண்கள் தான் எத்தனை காவியங்கள் பேசுகின்றன, அவரது கொஞ்சும் மொழிகள் தான் எத்தனை எதிரியாக இருந்தாலும் ஐஸ்ஸாக கரைத்துவிடுமே...

தஞ்சை தமிழன்
08-06-2004, 05:06 AM
ராஜேஷ் அவர்களின் மீண்டுமொரு அருமையான தலைப்பும், அதன் சிறப்பை உணர்த்தும் விதம் டி.ஆர்.ராஜகுமாரியின் தகவல்களும்.

நல்லதொரு தலைப்பினால் தமிழ் நடிகைகளின் சிறப்பை எடுத்து கூற வந்திருக்கும் நண்பருக்கு பாராட்டுக்கள்.

சந்திரலேகாவில் ஜோடி - எம்.கே.ராதா-டி.ஆர்.ராஜகுமாரி. ரஞ்சன் அவர் மேல் மையல் கொண்ட வில்லனாகத்தான் வருவான். அதை கூட எத்தனை நளினமாக படம் பிடித்துள்ளார்கள். அவரது சிறப்பு-மயக்கும் கண்கள். நளினம்.

தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் கூட செய்து கொள்ளாமல் தனது உறவினர்களின் வாழ்க்கைக்காக வாழ்ந்தவர் என படித்திருக்கிறேன்.

rajeshkrv
08-06-2004, 12:18 PM
2) எம்.வி.ராஜம்மா

பண்டரிபாய், கண்ணாம்பா வரிசையில் ராஜம்மாவை மறக்க முடியாது.
பண்டரிபாயை விட ஒரு படி மேல் என்றே சொல்லுவேன்
சோகமான வசனம் பேசும் போது இவர் குரலில் நடுக்கம் வருமே ஆஹா..
கன்னட நடிகையாக இருந்தாலும் வசன உச்சரிப்பில் அழுத்தம் அபாரம்
கர்ணனில் குந்தியாக வருவாரே மறக்க முடியுமா

முதலில் கதாநாயகியாகவும் நடித்தார்
ஞானசவுந்தரி
குணசுந்தரி போன்ற படங்களில் நடித்தார்


இளம் வயதில் மிகவும் அழகாக இருப்பார். நம்பியார் வியந்து
பாராட்டிய அழகில் இவரும் ஒருவர்.

அம்மா வேடங்களில் உணர்ச்சி பொங்க நடிப்பதில் வல்லவர்
சிவாஜி,ஜெமினி,எம்.ஜி.ஆர் என அனைவருக்கும் அன்னையாக நடித்தவர்

நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை
கர்ணன்
பாகப்பிரிவிணை
கைராசி
தாய் உள்ளம்


கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர்

பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்துலுவின் மனைவியும் ஆவார்

1999 ஏப்ரல் மாதம் சென்னையில் இறந்து போனார்

அழகான தாய் வேடம் என்றவுடன் நம் நினைவுகளில் எம்.வி.ராஜம்மா
வராமல் இருப்பாரா என்ன

இந்த அழகான அம்மாவின் படம் என்னிடம் இல்லை
இருந்தால் இங்கே தாருங்களேன்

தஞ்சை தமிழன்
09-06-2004, 06:55 AM
படங்களில் பார்க்கும் போது ஒரு நடிகையாக நமக்கு தெரியாத விதம் ஒரு அம்மா போலவே இர்ந்தது இவரது இயல்பு நடிப்புக்கு சான்று.

நல்ல நடிகை எம்.வி.ராஜம்மா.

பரஞ்சோதி
09-06-2004, 08:10 AM
நேற்று தான் என் மனைவியோடு சேர்ந்து கர்ணன் படம் பார்த்தோம், அந்த அம்மா அருமையாக நடித்துள்ளார்கள். அவரது பேச்சுக்குரல் வித்தியாசமான ஒன்று. முடிந்தால் படம் பிடித்து கொடுக்கிறேன்.

poo
09-06-2004, 08:27 AM
நேற்று தான் என் மனைவியோடு சேர்ந்து கர்ணன் படம் பார்த்தோம்


கலி இன்னமும் முத்தலீங்கோ...!!

பரஞ்சோதி
09-06-2004, 02:24 PM
நேற்று தான் என் மனைவியோடு சேர்ந்து கர்ணன் படம் பார்த்தோம்


கலி இன்னமும் முத்தலீங்கோ...!!

அட அப்படியா, எங்க வீட்டிலேயேயும் இன்றைக்கு கழி தான், கருவாட்டு குழம்பும், கேப்பக்கழியும். இங்கேயும் முத்தலீங்கோ.

இளசு
09-06-2004, 10:04 PM
ஆலயமணி...

மாளிகை அனாதை சிவாஜி .
ஏழை நண்பன் எஸ்.எஸ்.ஆர் வீட்டில்...
நண்பனின் தாய் ராஜம்மா குளிர்க்காய்ச்சலில்..
முதலாளி சிவாஜி... அந்தத் தாயின் பாதங்களுக்கு
சுடவைத்த தவிட்டு ஒத்தடம் கொடுத்தபடி...
"அய்யோ.. முதலாளி.. நீங்க என் காலை..."
"தாயின் பாதங்களில் சொர்க்கம் இருக்குன்னு நபிகள் பெருமான் சொல்லியிருக்காரும்மா"

குடிசையை கண்களால் ஏக்கம் பனித்து பளிச்சிட பார்த்தபடி...

"சேகர் ரொம்ப கொடுத்துவச்சவம்மா"
"மகனே".
"இன்னொரு தரம் கூப்பிடுங்கம்மா.."


---- ராஜம்மா = இப்படித்தான் இருக்கணும் அம்மா ! என எண்ணவைக்கும் அம்மா!

--------------------------------------------------
பெருமூச்செறிகிறான் கர்ணன்..
அவன் மனதிலும் பாரங்கள்..
முகத்தில் கவலை ரேகைகள்..

மகனென்று அறியாத குந்தி..
மற்ற மகனைக் காக்க
வரம் கேட்டு ஏந்துகிறாள் முந்தி..

கர்ணனின் முகம் பார்த்து கலங்கிச் சொல்கிறாள்:

"சர்வ லட்சணங்கள் பொருந்திய உனக்கும் குறைகளா கர்ணா?"

அந்தக் குரல்... முகக்குழைவு.. நெற்றிச்சுருக்கம்...

ராஜம்மா - தாய் வேடமேற்க விழைபவர்களின் தாய்!

_______________________________________

நினைவாட வைத்த குருகுருவே....
நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து...

poo
10-06-2004, 07:57 AM
காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்து நம்மையும் உணரச்செய்கிறார் அண்ணன்...

rajeshkrv
10-06-2004, 11:34 AM
3. பி.பானுமதி
அஷ்டாவதாணி என்று அழைக்கப்படும் இவர்
சொந்தமாக பாடும் திறமை பெற்றவர்.
அன்றைய கால கட்டத்தில் இந்த திறமை மிகவும் அவசியம்.

இவர் நடிகையாக, பாடகியாக, இயக்குனராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, ஓவியராக மற்றும் தொழொலதிபராகவும் திகழ்ந்தவர்.
தமிழ், தெலுங்கு படவுலகில் ஒரு மறக்க / மறுக்க முடியாத ஒரு இடத்தை பிடித்தவர்

பி.புல்லைய்யாவால் திரையுலகிற்கு அறிமுகமானார். முதலில் நடித்த படம்
வர விக்ரயம் - 1939

அவரது திறமையினால் மள மளவென படங்களில் நடிக்க தொடங்கினார்
மாலதி மாதவம்,தர்மபத்தினி,பக்திமாலா, கிருஷ்ணப்பிரேமா
கிருஷ்ணப்பிரேமா உதவி இயக்குனர் பி.எஸ்.ராமகிருஷ்ணாவும் இவரும்
சந்தித்தனர். கண்டதும் காதல்.. திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு பின் இவர் மீண்டும் நடிக்க உதவியர் பி.என்.ரெட்டி. சுவர்க்க சீமா என்ற படத்தில் மீண்டும் நடித்தார்.
அதில் இடம்பெற்ற ஓஹோ பவுரம்மா என்ற பாடல் இன்றும் ரசிகர்கள்
மத்தியில் பிரபலம்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என நிறைய நடித்தார்.
தமிழில் குறிப்பிடத்தக்க படங்கள்
அலிபாபாவும் 40 திருடர்களும் - இணை எம்.ஜி.ஆர்
தாய்க்கு பின் தாரம் - இணை எம்.ஜி.ஆர்
கள்வனின் காதலி - இணை சிவாஜி
அம்பிகாபதி - இணை சிவாஜி
அறிவாளி - இணை சிவாஜி
கட்டிலா தொட்டிலா - இணை ஜெமினி
பத்துமாத பந்தம் - இணை அசோகன்
பாடிய பாடல்களில் சில
மாசிலா உண்மை காதலே
அசைந்தாடும் தென்றலே
மணப்பாறை மாடு கட்டி
கண்ணிலே இருப்பதென்ன
அவியல் துவையல் ..
இவர் இயக்கிய முதல் படம் சண்டிராணி (1953) 3 மொழிகளில் வந்த படம்.
இதில் தான் சுசீலா ஒரு ஹம்மிங் செய்தார்

தன் மகன் பெயரின் ஆரம்பித்த பரணி ஸ்டூடியோஸ் சார்பில் இவர் தயாரித்த படங்கள்
விப்ரநாரயணா
ரத்னமாலா
ப்ரேமா
சக்ரபாணி
லைலா மஜ்னு

இவர் பெற்ற விருதுகள்
1956 - பத்மஸ்ரீ
3 முறை தேசிய விருது
டாக்டர் பட்டம் ஆந்திர பல்கலைக்கழகம்
ரகுபதி வெங்கய்யா விருது

ஹிந்தியில் அசோக்குமாருடன் நடித்தவர்.


இவரது எழுத்தான அத்தகாரி கதாலுவிற்கு சாகித்ய அகாடமி
விருதும் கிடைத்தது

இன்றும் அறிவாளியில் அவர் சிவாஜியுடன் அடிக்கும் லூட்டி மறக்க முடியாதது..

ஆண்கள் கோலோச்சிய காலத்திலேயே, பெண் தனித்து நடிக்க முடியும் , காதல் காட்சிகளில் நெருக்கமில்லாமல் நடிக்க முடியும் என நிரூபித்தவர்

தமிழ் மற்றும் தெலுங்கில் 50'ன் முடிசூடா ராணி இவர் தான்

இக்பால்
10-06-2004, 11:46 AM
நல்ல தொடர். பாராட்டுங்கள். தொடருங்கள் ராஜேஸ். -அன்புடன் அண்ணா.

தஞ்சை தமிழன்
11-06-2004, 09:08 AM
பானுமதியின் தகவல்கள் அருமை. எனக்கு பிடித்த நடிகைகளில் முக்கிய இடம் இவருக்குண்டு. அருமையான் குரல் மற்றும் சிறப்பான நடிப்பினால் கவர்பவர்.

நாடோடி மன்னனில் அவர் நடிப்பி சிறப்பானது.

பரஞ்சோதி
11-06-2004, 06:17 PM
பழைய நடிகைகளில் மிகவும் பிடித்தவர்களில் பானுமதி அம்மாவும் ஒருவர். என்ன கம்பீரமான நடிப்பு, கிண்டலான பேச்சுகள், கண்சிமிட்டும் அழகு. அருமையான நடிகை அவர்கள். நன்றி ராஜேஷ் அண்ணா.

rajeshkrv
15-06-2004, 09:33 AM
4) அஞ்சலிதேவி

அந்த காலகட்டத்தில் பானுமதியை தொடர்ந்து
எல்லோரையும் கவந்தவர் காந்தம் போன்ற கண்களுடைய
அஞ்சலி தேவி

அழைக்காதே நினைக்காதே பாடலை மறக்க முடியுமா
இல்லை இவரது நடனத்தை மறக்க முடியுமா.

தெலுங்கில் அறிமுகமாகி பின் தமிழ் தெலுங்கு என்று கொடி கட்டி பறந்து ஹிந்தியிலும் அசோக் குமாருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

இசையமைப்பாளார் திரு.ஆதிநாராயணராவ் அவர்களை மணந்தார்.

அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் இவர் தயாரித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன அதற்கு இசை அவரது கணவரே..

இவர் நடித்த படங்கள் சில..
பெண்
காலம் மாறிப்போச்சு
மணாளனே மங்கையின் பாக்கியம்
கணவனே கண் கண்ட தெய்வம்
மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
அனார்கலி
சர்வாதிகாரி
மர்மயோகி
டவுண்பஸ்
முதல் தேதி
செஞ்சு லெட்சுமி
சக்ரவர்த்தி திருமகள்
ஆடவந்த தெய்வம்
அடுத்த வீட்டுப்பெண்
லவ குசா
பக்த பிரகாலாதா

பின் அம்மா/அண்ணி வேடங்களில்
பூமாலை
உரிமைக்குரல்
அன்னை ஓர் ஆலயம்
காதல் பரிசு
அடுத்த வீட்டுப்பெண் படத்தில் இவரும் டி.ஆர்.ராமச்சந்திரனும் அடிக்கும் கூத்து ஆஹா அதுவல்லவோ நகைச்சுவை.

எல்லா பாத்திரங்களிலும் மின்னிய நட்சத்திரம் இவர் என்றால்
மிகையில்லை

ராஜ்

தஞ்சை தமிழன்
15-06-2004, 01:56 PM
அஞ்சலி தேவி,
இவரது தோற்றமும் நடிப்பும் சிறப்பானவை.

ராஜேஸ் கொடுத்த தகவல் அருமை.

இவர் ரஞ்சனுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தார். அதில் சண்டையெல்லாம் போடும் வீரபெண்ணாக. படம் பெயர் ஞாபகமில்லை.

பரஞ்சோதி
15-06-2004, 02:11 PM
அஞ்சலி தேவி அவர்கள் மிகவும் சிறந்த நடிகை. அவரைப் பற்றிய செய்திகளுக்கு நன்றி ராஜேஷ் அண்ணா.

இளந்தமிழ்ச்செல்வன்
15-06-2004, 05:19 PM
அற்புதமான தொகுப்பு ராஜேஷ் அவர்களே. பாராட்டுக்கள், தொடருங்கள் காத்திருக்கிறோம்

இளசு
16-06-2004, 08:28 PM
சிலரை நம் அறிவுக்கு (மட்டுமே) பிடிக்கும்..
ஆனால் இதயத்தை நெருடுவதில்லை... நெருங்குவதில்லை..
ஏன்..சொல்லத்தெரியவில்லை...

இந்த ரகத்தில் பலர்...
அதில் சிலர் -

பி.பானுமதி
அஞ்சலிதேவி


அப்புறம்.. அப்புறம்...
சுஹாசினி
ராதிகா
ரேவதி...


பட்டியல் முழுசாக் குடுக்க பயம்ம்மா இருக்குங்..
தீவிர ரசிக மக்கா டின்னு கட்டீங்கன்னா???!!!

gankrish
19-06-2004, 06:04 AM
ரொம்ப அருமையாம பதிவு ராஜேஷ்...

thamarai
20-06-2004, 05:36 AM
ம்.. பதிவுகள் அருமை.

aren
20-06-2004, 02:45 PM
ராஜேஷ் அவர்களே, அருமையான அலசல்.

பானுமதியின் வசனம் பேசும் திறன், இன்றும் அவருடைய படத்தைப் பார்த்து ரசிக்கலாம். எம்ஜியார் படங்களில் கதாநாயகிகளுக்கு ஒரு பங்கும் இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும். அவருடைய படங்களிலும் பானுமதிக்கு நிகரான பங்கு இருக்கும், அந்த அளவிற்கு நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர்.

அஞ்சலிதேவி, அடுத்த வீட்டுப் பெண் இன்னும் என்னுடைய நினைவில் இருக்கிறது. கணவனே கண்கண்ட தெய்வம், பெருவெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று.

தொடருங்கள்.

rajeshkrv
21-06-2004, 07:15 AM
5) நாட்டிய பேரொளி பத்மினி.

1932ஆம் வருடம் ஜுன் 12'ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாப்புரா என்ற ஊரில் பிறந்தார்.
லலிதா, ராகனி என சகோதரிகள் இவருக்கு உண்டு
இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைத்து வந்தனர்.

படிப்பில் ஆர்வம் இருந்தாலும் நாட்டியத்தில் தான் கவனம் சென்றது. அதில் இடைவிடாது பயிற்ச்சி பெற்று தேறினார்.
17'ம் வயதில் கல்பனா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையானார்.

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா , ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அனைத்து நடிகர்களுடனும் நடித்தார்
தமிழில் சிவாஜியுடன் ஜோடியாக இவர் நிறைய படங்கள் நடித்தார்.

நடனம் தெரிந்த நடிகையாதலால் , நடனத்திற்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களில் இவர் மின்னினார். அதே சமயம் மற்ற பாத்திரங்களிலும் தன் தனித்துவத்தை காட்டினார்.
உதாரணம் சித்தி, பேசும் தெய்வம் .., பூவே பூச்சூடவா

இவர் நடிப்பில் சில படங்கள்:

மதுரை வீரன்
மன்னாதி மன்னன் - கண்கள் இரண்டும் இன்று ...
வீரபாண்டிய கட்டபொம்மன் - இன்பம் பொங்கும் வெண்ணிலா
சித்தி,
பேசும் தெய்வம்
அமர தீபம் - தேன் உண்ணும் வண்டு ..
புனர்ஜென்மம் - என்றும் துன்பமில்லை
எதிர்பாராதது
இல்லறஜோதி
தேனும் பாலும் - ஒருவனுக்கு ஒருத்தி என்று
தில்லானா மோகனாம்பாள்
மங்கையர் திலகம் - நீல வண்ண கண்ணா வாடா
வியட்னாம் வீடு - உன் கண்ணில் நீர் வழிந்தால்

நல்ல கதாபாத்திரங்களில் நடித்து, நாட்டியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்த நடிகைகளில் இவர் தான் முதல்..

ராஜ்

kavitha
21-06-2004, 08:21 AM
நல்ல நல்ல தேர்வுகள்.. உதாரணங்களுடன்.. ராஜ் அவர்களுக்கு நன்றி !
---------------------------------------------------------------------------------------------------------


அப்புறம்.. அப்புறம்...
சுஹாசினி
ராதிகா
ரேவதி...


பட்டியல் முழுசாக் குடுக்க பயம்ம்மா இருக்குங்..
தீவிர ரசிக மக்கா டின்னு கட்டீங்கன்னா???!!!

அதெல்லாம் கட்டமாட்டாங்கண்ணா!

எனக்கும் ரேவதியின் மண்வாசனை, புதுமைப்பெண்
சரிதாவின் 'அச்சமில்லை, அச்சமில்லை', 'தண்ணீர் தண்ணீர்'
சுஹாசினியின் மனதில் உறுதிவேண்டும், சிந்து பைரவி, கோபுரங்கள் சாய்வதில்லை...
ராதிகாவின் 'பாசப்பறவைகள்', 'நல்லவனுக்கு நல்லவன்'...
அப்புறம் ஸ்ரீதேவியின் எல்லாப்படங்களும்...

aren
21-06-2004, 09:48 AM
பத்மினியும் வைஜயந்திமாலாவும் சேர்ந்து நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருக்கும் நடனங்கள் அனைத்தும் அருமை. இருவரும் போட்டி போட்டு நடித்தபடம் பெரும் வெற்றி பெற்றது.

பத்மினி கேஆர் விஜயா அவர்களுடன் சேர்ந்து நடித்த இரு மலர்கள் படத்திலும் பத்மினி அவர்களின் நடிப்பு அருமை.

rajeshkrv
24-06-2004, 09:16 AM
6. சாவித்திரி

நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்தவர் இவர்.
முகபாவங்களாலும், அழுத்தமான வசன உச்சரிப்பாலும் இவரது நடிப்பாற்றலுக்கு சான்று.

1936ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6'ம் தேதி சிர்ராவூர் என்ற ஊரில் (குண்டூர்) பிறந்தார்.

12 வயதில் அக்னி பரீக்ஷா என்ற திரைப்படத்திற்கு அழைப்பு வந்து, வயது குறைவு என்று மறுக்கப்பட்டது.

பின் சம்சாரம் என்ற படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நாகேஸ்வரராவுடன் நடிக்க தயங்கியதால் அந்த வாய்ப்பு புஷ்பலதாவிற்கு சென்றது. இவருக்கு அதே படத்தில் ஒரு சிறிய
வேடம் கிடைத்தது.

அவரது நடிப்பைப்பார்த்து சங்கராந்தி, பல்லேத்துரு என்ற படங்களில் வாய்ப்பு வந்தது.

ஆனால் பெல்லி சேசி சூடு(1952) என்ற படத்தில் இரண்டா
வது கதாநாயகியாக நடித்த பின் அவரின் புகழில் ஏற்றமே ..

பின் தேவதாஸ்(1953) பட வாய்ப்பு வந்தது.
அது தான் அவரை நாயகி அந்தஸ்திற்கு உயர்த்தியது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடி கட்டிப்பறந்தார்.
ஒரு வருடத்தில் சாவித்திரியின் 20 படங்கள் வந்த காலம் உண்டு.

எல்லா நடிகர்களுடனும் நடித்தார். உடன் நடித்த ஜெமினி கணேசனின் மீது காதல் கொண்டு அவரை மணந்தார்.
எந்த பாத்திரம் ஏற்றாலும் அதை அழகாக செய்யும் திறன் கொண்டவர்.(மனம் போல் மாங்கல்யம் படம் நடிக்கும் போது காதல் மலர்ந்தது)

பாசமலர் படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடித்தார்
மலர்ந்தும் மலராத பாதி

நடிகையாக மட்டும் அல்லாமல் சில படங்களை இயக்கவும் செய்தார்
சின்னாரி பாப்பலு, பிராப்தம், மாத்ருதேவதா ..

அவருடைய போராத காலம் பிராப்தம் மூலம் வந்தது.
தெலுங்கில் மூக மனசுலு. அதை தயரித்தவரும் அவரே. அது அவரை கடனில் ஆழ்த்தியது.

அவருடைய நூறாவது படம் கொஞ்சும் சலங்கை.

மற்றவர்களை போல் பேசுவது அவருக்கு சுலபம்
அவர் விரும்பி பேசுவது, சரோஜாதேவி, ஜெமினி, ரங்காராவ், ரேலங்கி இவர்களைப்போல்..
தமிழக அரசு அவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்தது.

வாழ்கையில் தோல்வி, நம்பிக்கை துரோகம் என பல வகையில் அடி பட்டு , குடி, போதை பழக்கங்களுக்கு அடிமையாகி 26,டிசம்பர் 1981
இந்த உலகத்தை விட்டு மறைந்தார்.

கலையுலகிற்கு அவர் எவ்வளவோ அளித்திருந்தாலும் பதிலுக்கு அது அவருக்கு செய்தது என்ன?
இந்த அற்புத நடிகையின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பே

அவர் நடித்த படங்களில் சில
பாச மலர் - மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
பதி பக்தி
பார்த்தால் பசி தீரும்
தேவதாஸ்
மாமன் மகள்
மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே
பெண்ணின் பெருமை
அமர தீபம் - தேன் உண்ணும் வண்டு
மாயா பசார் - ஆகா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
மகாதேவி - கண் மூடும் வேளையிலும்
யார் பையன் - குறும்பிலும் சிறு எழில் தோன்றும்
அன்னையின் ஆணை - கனவின் மாயா லோகத்திலே
களத்தூர் கண்ணம்மா - கண்களில் வார்த்தைகள் புரியாதோ

பாவ மன்னிப்பு - அத்தான் என்னத்தான்
கப்பலோட்டிய தமிழன் - காற்று வெளியிடை கண்ணம்மா
படித்தால் மட்டும் போதுமா - தன்னிலவு தேனிறைக்க

மஞ்சள் மகிமை - ஆகாய வீதியில் அழகான வெண்ணிலாரத்தத்திலகம்- பசுமை நிறைந்த நினைவுகளே
காத்திருந்த கண்கள் - வா என்றது உருவம்
பந்த பாசம் - இதழ் மொட்டு விரித்திட
கற்பகம்- ஆயிரம் இரவுகள்
நவராத்திரி- சொல்லவா கதை சொல்லவா
கை கொடுத்த தெய்வம் - குலுங்கிகுலுங்கி
கர்ணன் - என்னுயிர் தோழி
திருவிளையாடல் - நீலச்சேலை
கந்தன் கருணை - சொல்ல சொல்ல
சரஸ்வதி சபதம் - கோமாதா எங்கள் குலமாதா
ஜக்கம்மா

இந்த நடிகையர் திலகம் மறைந்தது தமிழ் திரையுலகத்திற்கு பேரிழப்பே

ராஜ்

kavitha
24-06-2004, 09:20 AM
நாட்டியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்த நடிகைகளில் இவர் தான் முதல்..

ராஜ்
ஆமாம் அந்த விதத்தில் மயூரி புகழ் சுதா சந்திரனும், பானுப்ரியாவும் எனக்குப்பிடித்தவர்கள். தற்போது இருப்பவர்களில் சினேகாவிற்கு நடனம் தெரிந்திருந்தாலும் இன்னும் அப்படி ஒருவாய்ப்பு அவருக்குக்கிடைக்கவில்லையே!

aren
24-06-2004, 01:43 PM
தமிழுக்குக் கிடைத்த திறமையான நடிகைகளில் சாவித்திரி அவர்கள் முதன்மையானவர். இன்றுதான் தெரிந்தது அவர் சிவாஜி அவர்களுக்கு முன்பாகவே சினிமாத்துறைக்கு வந்தவர் என்பது.

அவரி பல படங்களில் சிவாஜி அவர்களுடன் நடித்திருக்கிறார். அதில் பாசமலரும், நவராத்திரியும் மிகவும் சிறந்தபடங்கள். எம்ஜியார் அவர்களுடன் வேட்டைக்காரன் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதுவும் ஒரு வெற்றிப் படமே.

எல்லோராலும் மறக்கப்பட்டு கடைசியில் பணமேயில்லாமல் இயற்கை எய்தினார் என்பது மிகவும் வருந்தத்தக்கது. அவர் மறைந்த நாளில், சஞ்ஜய் காந்தி அவர்களும், முன்னால் ஜனாதிபதி வி.வி. கிரி அவர்களும் இயற்கை எய்தினார்கள்.

kavitha
25-06-2004, 04:35 AM
எல்லோராலும் மறக்கப்பட்டு கடைசியில் பணமேயில்லாமல் இயற்கை எய்தினார் என்பது மிகவும் வருந்தத்தக்கது.
தங்கத்தட்டில் உணவுண்டவருக்கு இந்த நிலையா?

இளசு
25-06-2004, 11:06 PM
என் குருகுருவுக்கு..

எப்படி எப்படி எல்லாம் நாட்டியப்பேரொளிக்கு எழுதலாம் என நான் பம்மி
யோசிக்க...
நடிகையர்திலகமும் வந்துவிட...

இரட்டைச் சோதனை...

இந்த நேரம் பாத்து எனக்கு தட்டச்ச வர்ல...


மகாப் பதிவு இது... என் வந்தனம்..

தஞ்சை தமிழன்
26-06-2004, 05:04 AM
நடிகயை திலகத்தினை பற்றி கூற பதிவுகள் ஒன்று மட்டும் போதாது. அப்படிபட்ட நடிகை. அவரை பற்றிய தகவல்களை செம்மையாக த்ந்த நண்பர் ராஜ்க்கு நன்றி. பாராட்டுக்கள்.

அவரது கள்ளங்கபடமற்ற முகம்தான் அவருக்கு பிரதானம்.

rajeshkrv
02-07-2004, 09:55 AM
7) பி.சரோஜாதேவி..

இந்த பெயரைக் கேட்டவுடனே .. அந்த துள்ளல், துடிப்பு, ஈர்க்கும் கண்கள், இளமை நம் நினைவுக்கு வரும் .

நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர் மூலமாக திரையில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நடித்து பெயர் பெற்றவர்
இவரது கொஞ்சும் தமிழ் அவ்வளவு அழகு.

எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி மூன்று ஜாம்பவான்களுடனும்
சரி சமமாக நடித்த ஒரே நடிகை இவரே.

தேவர் பிலிம்ஸில் எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி கூட்டணி தான் எப்பொழுதும்.

அடிமைப்பெண் தயாரித்த போது ஒரு வேடம் சரோஜாதேவியும் மறு வேடல் ஜெயலலிதாவும் செய்தனர் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தது. பின் சில காரணங்களால் அது நின்று போக இவரும் திருமணம் செய்து கொண்டுவிட இரண்டு வேடங்களையும் ஜெயலலிதாவே செய்தார்.

தங்கமலை ரகசியம், மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற படங்களில் சிறிய வேடமேற்றார் பின் 1960'களின் முடி சூடா ராணியாக விளங்கினார்

எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி,எஸ்.எஸ்.ஆர், பாலஜி, ரவிசந்திரன், ஏ.வி.எம்.ராஜன், பிரேம் நசீர், நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ்,ராஜ்குமார், சுனில்தத், ராஜேந்திரகுமார் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் சில

பாலும் பழமும்- ஆலயமணியின் ஓசையை
பார்த்தால் பசி தீரும் - பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேரும்
புதியபறவை - சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
படகோட்டி - என்னை எடுத்து தன்னை கொடுத்து
இருவர் உள்ளம் - அழகு சிரிக்கின்றது
குலமகள் ராதை - சந்திரனை காணாமல் அல்லி
ஆடிப்பெருக்கு - தனிமையிலே இனிமை காண முடியுமா
மாலதி -
மணப்பந்தல் -
சபாஷ்மீனா-
பத்துமாத பந்தம் - பூமாலை ஒன்று பூவோ இரண்டு
தாயைக்காத்த தனையன் -
வாழ்கை வாழ்வதற்கே - ஆத்தோரம் மனலெடுத்து
வாழ வைத்த தெய்வம்
கல்யாணப்பரிசு - உன்னை கண்டு நானாட
தாமரை நெஞ்சம் - ஆலயம் என்பது வீடாகும்
பாகப்பிரிவினை - தங்கத்திலே ஒரு குறை
குலவிளக்கு
எங்க வீட்டுப்பிள்ளை- குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
பாசம் - உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்

பாலும் பழமும்,புதியபறவை,குலவிளக்கு, தாமரை நெஞ்சம் போன்ற படங்களில் இவரது நடிப்பு அபாரம்.

இவரது சிறப்பு காமெடி.. உடனிருப்பவர்க்ளுடன் சேர்ந்து இவர் செய்யும் நகைச்சுவை அபாரம்
குறிப்பாக எங்க வீட்டுப்பிள்ளையில் எஸ்.வி.ரங்காராவ் அவர்களுடன் இவர் பேசும் விதம் ஆஹா.. அந்த கேலி, கிண்டல் - டைமிங் இது தான்

அந்த காலத்திலேயே உடைகளில் வித்தியாசம் காட்டியவர் இவரே

சல்வார் காமீஸ் (புதியபறவை),
பஞ்சாபி சுடிதார், வித வித மான புடவைகள்
வலது கையில் கடிகாரம் என
ஆஹா எத்தனை எத்தனை..

பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது பெற்ற ஒரே நடிகை இவரே.
பல விருதுகள் பெற்றவர்.
திரையிலிருந்து ஒதுங்கி இருக்கும் இவர் இப்பொழுது ஈடுபட்டிருப்பது தியானம், ஆன்மீகம் போன்றவற்றில்.

இன்றும் இளமையுடன் இருக்கும் இவரை நினைக்காத
நாளில்லை

எனது மிகவும் பிடித்த நடிகைப்பட்டியலில் இவருக்கு முதலிடம்

ராதிகா, மீனா,ஸ்ரீதேவி இவர்களது பேட்டிகளில் கூறுவது இது தான் சரோஜாதேவியை திரையில் பார்ப்பதே மகிழ்ச்சி அந்த கொஞ்சும் தமிழ் கேட்பது இனிமை..

வாழ்க என்றும் இந்த அபிநய சரஸ்வதி

ராஜ்

sujataa37
02-07-2004, 12:55 PM
எம்ஜியார் அவர்களுடன் வேட்டைக்காரன் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதுவும் ஒரு வெற்றிப் படமே.


நன்பர் ஆரென் அவர்களே,

ஒரு கொசுறு தகவல்.

சாவித்திரி எம்ஜியாருடன் மூன்று படங்கள் நடித்துள்ளார் :

வேட்டைக்காரன்
பரிசு
மகாதேவி

kavitha
02-07-2004, 01:10 PM
இப்போதும் கொஞ்சிப்பேசும் அழகு நடிகை!

aren
02-07-2004, 01:58 PM
என்னுடைய தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி சுஜாதா அவர்களே.

aren
02-07-2004, 02:00 PM
அருமையான பதிவு ராஜ் அவர்களே.

தமிழ் சினிமாவில் சரோஜாதேவியின் பெயர் எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மிகவும் திறமையான நடிகை.

சபாஷ் மீனா என்ற படத்தில் சரோஜாதேவி அவர்கள் சந்திரபாபு அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். சிவாஜி அவர்களுக்கு மாலினி அவர்கள் ஜோடியாக இருந்தார். இந்தப் படத்தில் மாலினி அவர்கள்தான் கதாநாயகி. நல்ல நகைச்சுவைப்படம், இன்றும் பார்த்து மகிழலாம்.

இளசு
02-07-2004, 11:41 PM
முதல் படம் ; பாலும்பழமும்.. டாக்டர் ரவி -- சாந்தி இனிய தாம்பத்யக்காட்சி

இரண்டாம் படம் : கோபால் லதாவிடம் " என்னைக்கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே" (எங்கே நிம்மதி?) என இறைஞ்சி நெகிழ்த்தும் காட்சி..

மூன்றாம் படம்: லதா கோபாலிடம் " உன்னை ஒன்று கேட்பேன்" எனக் கப்பலில் கேட்டுப் பாடும் காட்சி..

நன்றி குருகுரு... மலரும் நினைவுகள் தந்தமைக்கு..


கூடுதல் தகவல் தந்த சுஜாதா அவர்கள்... அடிக்கடி வந்தால் இன்னும் நல்லாருக்கும்..

aren
03-07-2004, 02:54 AM
புதியபறவை படத்தை முதல் முதலில் பார்த்த பொழுது மிகவும் திரில்லாக இருந்தது. கடைசியில் என்ன நடக்குமோ என்று ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கு எடுத்துச் சென்றது இந்தப் படம். தாதாமிராசி அவர்களுடைய இயக்கத்தில் வந்து மிகவும் வெற்றி பெற்ற படம்.

சிவாஜி, சரோஜாதேவி, செளகார் ஜானகி, எம்.ஆர். ராதா ஆகியோரது நடிப்பில் வந்த அருமையான படம்.

தஞ்சை தமிழன்
03-07-2004, 12:41 PM
!!!!!!!!!!

வியக்கிறேன் நண்பர்களுடைய பதிவுகளை கண்டு.

rajeshkrv
05-07-2004, 10:03 AM
8 )
விஜயகுமாரி.

தமிழ் நாட்டின் நடிகை என்று சொன்னால் அந்த காலத்தில் இவர் தான்.

வசன உச்சரிப்பும், அதை இவர் வெளிப்படுத்தும் விதமும் அபாரம்.
கண்ணகி பாத்திரத்திலும் சரி, நானும் ஒரு பெண் படத்திலும் சரி மிக அருமையான நடிப்பு இவருடையது.

கலைஞரின் வசனத்தை மிகவும் அபாரமாக பேசி நடித்திருப்பார் பூம்புகார் திரைப்படத்தில்.

எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து பின் வாழ்கையிலும் அவரையே
கைப்பிடித்தார்

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்வார். எளிமையான
நடிகையும் கூட.

எம்.ஜி.ஆருடன் நடித்த காஞ்சித்தலைவன்
சிவாஜியுடன் நடித்த பார் மகளே பார், பச்சைவிளக்கு
எஸ்.எஸ்.ஆருடன் நடித்த பூம்புகார், நானும் ஒரு பெண், சாரதா,
ஜெமினியுடன் நடித்த கல்யாணப்பரிசு,பாத காணிக்கை,
ஜெய்சங்கருடன் நடித்த டீச்சரம்மா
பாலாஜி,முத்துராமனுடன் நடித்த போலீஸ்காரன் மகள்
கல்யாண்குமாருடன் நடித்த மணிஓசை
என மறக்க முடியாத படங்கள்..

சாரதாவின் ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
நானும் ஒரு பெண் - கண்ணா கருமை நிற கண்ணா
கல்யாணப்பரிசு - துள்ளாத மனமும் துள்ளும்
என அழகுப்பாடல்களில் இவர் பங்கும் அழகே..

பின்னர் அம்மா வேடங்களில் , பூவே உனக்காக வில் அழகான பாட்டி வேடமும் நம்மை ஈர்க்கவே செய்தன..

தமிழ் திரையுலகில் இவர் பதித்த முத்திரை அழுத்தமானது.

ராஜ்

தஞ்சை தமிழன்
05-07-2004, 02:43 PM
அருமையான நடிகை.

தனது வசனங்களில் கூட ஏற்ற இறக்கங்களை காட்டி தனது திறமையை வெளிப்படுத்துபவர்.

அருமையான் கருத்து செறிவுள்ள பாடல்களில் நடித்தவர்.

aren
05-07-2004, 03:48 PM
விஜயகுமாரி அவர்கள் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம் போலீஸ்காரன் மகள். விஜயகுமாரியின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் இந்தப்படத்தில்.

rajeshkrv
06-07-2004, 10:45 AM
9) வாணிஸ்ரீ
60'களின் முடிவில் 70'ன் ஆரம்பத்தின் மின்னிய நட்சத்திரம் வாணிஸ்ரீ..
எல்லா முன்னனி நட்சத்திரங்களுடனும் நடித்தவர்.
ஒரு பாடலில் தோன்றி, காமெடி வேடம் செய்து கதாநாயகி அந்தஸ்திற்கு உயர்ந்தவர்
கருப்பு நிறமாக இருந்தாலும் நடிப்பு, வசனம் மற்றும் தோரணை மூலம் எல்லோரையும் கவர்ந்தவர்

வசந்த மாளிகை, வாணி ராணி, இருளும் ஒளியும், தாமரை நெஞ்சம், வெள்ளி விழா என இவரது நடிப்பில் மின்னிய படங்கள் எத்தனையோ..

இவரது நடிப்பில் வந்த படங்கள் சில

அவசர கல்யாணம்
காதல் படுத்தும் பாடு
கண்ணன் என் காதலன்
வசந்த மாளிகை
வாணி ராணி
தாமரை நெஞ்சம்
இருளும் ஒளியும்
டீச்சரம்மா
நிறைகுடம்
நான்கு சுவர்கள்
வெள்ளி விழா
சிவகாமியின் செல்வன்

சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், ஜெமினி, ஜெய்சங்கர் என எல்லா நடிகர்களுடனும் நடித்தவர்.
குறிப்பாக சிவாஜியுடன் நடித்த படங்கள் மிகவும் அருமை.


கலைமகள் கைப்பொருளே
திருமகள் தேடி வந்தாள்
நாளை இந்த வேளை பார்த்து
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
வெள்ளிக்கின்னம் தான்
மயக்கம் என்ன இந்த மெளனம் என்ன
என்ற பாடல்களில் இவரது நடிப்பு துடிப்பு மிகுந்தது

ராஜ்

தஞ்சை தமிழன்
06-07-2004, 12:08 PM
வாணிஸ்ரீ யின் தகவல் அருமை. அவரது படங்களில் பல அருமையான பாடல்கள் இருக்கும்.

முடிவில் அவரது நடிப்பில் வந்து வெள்ளிவிழா கண்ட வசந்த மாளிகை பட காட்சி அருமை.

aren
06-07-2004, 03:49 PM
வாணிஸ்ரீ அவர்களின் பெயரே மறந்துவிட்டது, ஞாபகப்படுத்தியதற்கு நன்றி ராஜ் அவர்களே.

அவர்கள் சிவாஜி அவர்களுடன் நடித்த வசந்தமாளிகை மாபெரும் வெற்றி பெற்ற படம்.

அவர்கள் நடித்த முதல் தமிழ்படம் சாந்தி நிலையம்தானே?

பரஞ்சோதி
06-07-2004, 05:46 PM
அருமையான பதிவுகள் ராஜேஷ் அண்ணா.

வாணிஸ்ரீ அழகும் நடிப்பும் சேர்ந்து கலந்த கலவை.

உயர்ந்த மனிதன் படித்திலும் அவர் நடித்துள்ளார் தானே, ஆனால் சிறிய வேடத்தில் வருவார்.

தொடர்ந்து கொடுங்கள், அனைவரும் விரும்பும் தலைப்பு இது..

rajeshkrv
14-07-2004, 11:53 AM
10) கே.ஆர்.விஜயா10 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 10,000 ரூபாய்க்கு நடிக்கும் இவர் எனக்கு பிடிக்காத நடிகை
பட்டியலில் இருப்பினும் முத்திரை பதித்ததில் இவருக்கும் பங்கு உண்டு.

புன்னகை அரசி என்ற பெயருக்கேற்ப அழகான புன்னகை உடைய முகம்.
கற்பகம் மூலம் அறிமுகமாகி பின் நல்ல அழுத்தமான
பாத்திரங்கள் பல செய்து பெயர் பெற்றவர்.

சிவாஜியுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர்
பின் அம்மன் வேடங்களில் மின்னியவர்.

கற்பகம் தொடங்கி ஆணழகன் வரை எல்லோரையும் கவர்ந்தவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தவர்.

இவரது நடிப்பில் வந்த சில படங்கள்
நெஞ்சிருக்கும் வரை - எங்கே நீயோ நானும் அங்கே
ஊட்டி வரை உறவு - அங்கே மாலை மயக்கம்
கை கொடுத்த தெய்வம் - ஆஹா மங்கல மேளம்
சர்வர் சுந்தரம் - சிலை எடுத்தான்
எதிரொலி
தேன் மழை
நினைவில் நின்றவள்
தாழம்பூ
மிட்டாய் மாமி
அன்னபூரணி
நத்தையில் முத்து (100வது படம்)
கை கொடுப்பாள் கற்பகாம்பாள்
மேல் மருவத்தூர் அற்புதங்கள்
நம்ம விட்டு தெய்வம் - ஆசை மனதில் கோட்டை கட்டி
பட்டனத்தில் பூதம்
தங்க பதக்கம்
திரிசூலம்

சொந்த குரலில் அழகாக பேசும் பாங்கு , பாவம் என இவரது நிறைகள் இருந்தாலும் கதாப்பாத்திரங்களுடன் ஒன்றி
கொஞ்சம் அளவுக்கு மீறி நடிப்பதிலும் இவர் வல்லவர்

ராஜ்

தஞ்சை தமிழன்
14-07-2004, 12:52 PM
கதாப்பாத்திரங்களுடன் ஒன்றி
கொஞ்சம் அளவுக்கு மீறி நடிப்பதிலும் இவர் வல்லவர்

ராஜ்

அதனால்தானோ என்னவோ சிவாஜியுடன் அதிகம் நடித்தார் என நினைக்கிறேன்.

பாரதி
14-07-2004, 03:04 PM
தொடர்ந்து அருமையாக வழங்கி வரும் ராஜ்-க்கு என் நன்றி.

மன்மதன்
14-07-2004, 03:17 PM
முதல் வரியிலேயே , எனக்கு பிடிக்காத நடிகை என்று சொல்லி அவர் பற்றிய அழகான கட்டுரை கொடுக்கும் அந்த மனபக்குவம் யாருக்கும் வராது.. (எனக்கு கே.ஆர். பிடிக்காது..)

தொடரட்டும் உங்கள் ரசனைகள்....

அன்புடன்
மன்மதன்

rajeshkrv
20-07-2004, 09:03 AM
11) தேவிகா

தமிழ் திரையுலகில் இவருக்கென்று தனி இடம் உண்டு.

நெஞ்சில் ஓர் ஆலயத்தை மறக்க முடியுமா?

முதலாளி மூலம் அறிமுகமாகி பின் பல படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் நடித்தார்.

முகபாவத்தால் முத்திரை பதித்த இன்னொரு நடிகை இவரே.
முன்னவர் சாவித்திரி.

அருமையான கதாப்பாத்திரங்கள் அமைந்தது இவருக்கு.

இவர் நடித்த சில படங்கள்.

நீலவானம் - அருமையான நடிப்பு ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
நெஞ்சம் மறப்பதில்லை- நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நெஞ்சில் ஓர் ஆலயம் - முத்திரை பதித்த நடிப்பு
சொன்னது நீ தானா சொல் சொல்
கர்ணன் - கண்ணுக்கு குலமேது சிவாஜியுடன் அருமையான நடிப்பு
சுமைதாங்கி - ராதைக்கேற்ற கண்ணனோ
குலமகள் ராதை
பந்தபாசம்
பலே பாண்டியா
வாழ்கைப்படகு -ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆனந்த ஜோதி - நினைக்கத் தெரிந்த மனமே
வானம்பாடி - அருமையான நடிப்பு - கங்கை கரைத் தோட்டம்

கண்ணதாசன் போற்றிய அழகு இவருடையது.

இவரது கடைசிப்படம் இப்படியும் ஒரு பெண்

பின் நானும் ஒரு தொழிளாலியில் கமலின் அம்மாவாக நடித்திருந்தார்.

அழகான நடிகைப்பட்டியலில் இவரது பெயரும் இடம்பெறும்

புராணப்படங்களுக்கு பொருந்தும் முகம்
சமூகப்படங்களிலும் ஜொலித்தார்

ராஜ்

இளசு
21-07-2004, 05:41 AM
ஒவ்வொரு கட்டுரை பற்றியும் பல வரிகளில் அலச ஆசை குருகுருவே..
நேரம்தான்.... இல்லை..

இத்தனை நேர்த்தியாய் , அருமையாய் இத்தொடர்..

ஒட்டுமொத்தமாய் ஒரு வார்த்தை -- அருமை!

தஞ்சை தமிழன்
21-07-2004, 06:35 AM
தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்த தேவிகாவை பற்றிய பதிவு அருமை.

ராஜ் க்கு எனது அன்பான பாராட்டுக்கள்.

rajeshkrv
26-07-2004, 12:22 PM
[/b] 12) எஸ்.என்.லக்ஷ்மி[/b]
இந்த பெயரைக்கேட்ட உடனே நமக்கு மைக்கேல் மதன
காமராஜன் பாட்டி ஞாபகம் வர வேண்டும்

1960'லிருந்து இன்று வரை களைகட்டிய நடிப்பை வழங்கி வரும் நடிகை இவரே..
ஆஹா எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள்

சர்வர் சுந்தரத்தில் நாகேஷின் அம்மா வேடத்தில் கலக்க்கியிருப்பாரே மறக்கமுடியுமா
அதே போல் எதிர் நீச்சலில் மாதுவை லாவகமாக வேலை வாங்குவதும், மாது தன் தம்பி திருடியதை பார்த்ததை மறைக்க
தினம் சோறு போட்டேனேடா அம்மா மாதிரி என்று சொல்லி குழைவதும் அருமை.

தேவர் மகனில் நாசரின் அம்மா வேடம்
அதே சமயம் கமல் மீது பாசம் என அழகு நடிப்பு

அதுவும் நாசர் இறந்த பின்
"நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா போகுதே " என கதறுமிடம் நடிப்பில் இவர் மூத்தவரே..

இப்படி பல வேடங்களில் மின்னும் இவர் மனோரமாவையும் சில நேரங்களில் மிஞ்சக்கூடியவர்.

காமெடி வேடமும் சுலபமாக வரும்

இவரைப்பற்றி ஒரு பக்கத்திற்கு மேல் கட்டுரை எழுத ஆசை தான்
நேரமின்மை சுருக்கமாக முடிக்கிறேன்
எம்.ஜி.ஆர்,சிவாஜி, ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் என எல்லோருக்கும் அம்மாவாக நடித்தவர்.
பின் அடுத்த தலைமுறையினருக்கும் அம்மாவாக நடித்தவர் இவர்.
இவர் முத்திரை பதித்தவர்களில் இல்லை என்றால் நான் அவருக்கு செய்யும் துரோகம் அவரது திறனுக்கு செய்யும் துரோகம்
நான் துரோகியாக விரும்பவில்லை

ராஜ்

தஞ்சை தமிழன்
26-07-2004, 12:41 PM
இத்தனை நுணுக்கமாக ஆராய்ந்து தமிழ் சினிமாவில் தோன்றிய சிறிய நடிகைகளின் சிறப்பையும் அழகாக தரும் ராஜ் க்கு எனது நன்றி.

இளசு
26-07-2004, 10:55 PM
குருகுருவுக்கு..

எஸ்.என்.லட்சுமி அவர்களுக்குத் தந்த அங்கீகாரம் மெய்சிலிர்க்க வைக்கிறது..

ஆப்பக்கடை பாட்டி, பேரன் ஸ்டாரானவுடன் மூக்குக்கண்ணாடி, ஸ்டைல் ஆங்கிலம் என மாறும் ராமன் எத்தனை ராமனடி...

மூக்கையா என வாஞ்சையுடன் வளைய வரும் பட்டிக்காடா பட்டணமா

நீங்கள் சொன்ன தேவர் மகன் ..( கழுவ துடைக்க நான் வேணும், ஊட்டிவிட, பேப்பர் படிக்க அவளா??)

இப்படி ஒரு மாமியார் வேண்டும் என ஏங்க வைக்கும் மகாநதி..

முதலிரவு அலையில் ஆப்பிள் சாப்பிடறேளா என நாகேஷை படுக்கையில் உட்காரச்சொல்லி அமர்க்களப்படுத்தும் க்ளெப்டோமேனியா பாட்டி (மை.ம.கா.ராஜன்)

திறமை எங்கிருந்தாலும் என்றாவது அங்கீகரிக்கப்படும் என்பதற்கு உங்கள் இப்பதிவே சான்று.. மகிழ்ச்சி..வாழ்த்துகள்.. நன்றி..

தொடருங்கள்..

இளந்தமிழ்ச்செல்வன்
26-07-2004, 11:37 PM
எஸ். என். லட்சுமி அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை. நன்றி ராஜேஸ் கே ஆர் வி.. இளசு அவர்களே

rajeshkrv
27-07-2004, 08:33 AM
13.) சி.கே.சரஸ்வதி

இந்த பெயரும் மறக்கக்கூடிய பெயர் அல்ல. வில்லத்தனமான வேடங்களில் கலக்கியவர். பாகப்பிரிவினையில் சிவாஜியின்
சித்தியாக நடித்ததையும், தில்லானா மோகனாம்பாளில்
வடிவாம்பா வேடத்தில் அசத்தியதையும் மறக்க முடியுமா நம்மால்.
ஒரு காலத்தில் எல்லா படத்திலும் இருப்பார் இவர்
மாமியார்,சித்தி,அத்தை என பல வேடங்கள்
சில சமயங்களில் பாந்தமான வேடங்களும் கிடைத்தன.

நவக்கிரகம் படத்தில் நாகேஷின் தாயார் என பொய் சொல்லி வீட்டில் நுழையும் ரவுடி வேடத்தில் பின்னியிருப்பார்.

முகத்தை கடு கடு என வைத்துக்கொண்டு நச் நச் என தேள் கொட்டும் வசனங்களால் எல்லோரது குறிப்பாக பெண்களின்
சாபத்திற்கு ஆளானவர்.

ரோஜாவில் அர்விந்த்ஸ்வாமி பெண் பார்க்க வர
அங்கே பாட்டிகள் அடிக்கும் லூட்டியில் இவரே தலைவி.

சின்னத்தம்பியில் பிரபுவிற்கு பெண் பார்க்க கிளம்பும்
பட்டாளத்தில் இவரும் சீவி சிங்காரித்து செல்வது அழகு.

வில்லத்தனமான வேடம் செய்பவர்கள் இவரது சில படங்களை பார்த்து நிறைய தெரிந்து கொள்ளலாம்

இவர் நடிப்பில் சில படங்கள்

தில்லான மோகனாம்பாள்
பாகப்பிரிவினை
மஹாகவி காளிதாஸ்
பாலும் பழமும்
நவக்கிரகம்
நானும் ஒரு பெண்
நம்ம வீட்டுத் தெய்வம்
நான் பெற்ற மகனே
என பல உண்டு.

ராஜ்

பரஞ்சோதி
27-07-2004, 08:46 AM
தொடர்ந்து பழம்பெரு நடிகையரின் தகவல்களை கொடுக்கும் அண்ணாவுக்கு நன்றி, அத்தோடு அருமையாக விமர்சனத்தோடு கூடுதல் தகவல் கொடுக்கும் இளசு அண்ணாவுக்கு நன்றிகள்.

rajeshkrv
28-07-2004, 11:49 AM
14) ஆச்சி என்று செல்லமாக அழைக்கப்படும்
மனோரமா..

இயற்பெயர் - பாப்பா
பிறந்த இடம் : மன்னார்குடி

கொஞ்சும் குமரியில் நாயகி வேடம்
பின் நகைச்சுவைப்பாத்திரங்கள்,பின் அழுத்தமான வேடங்கள் என இன்றும் திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரம்

எம்.ஜி.ஆர்,சிவாஜி,கலைஞர்,அண்ணா,ஜெயலலிதா என 5 முதல்வர்களுடனும் பணியாற்றியவர்

எவ்வளவு நீள வசனமாகட்டும், பாடலாகட்டும்
ஜமாய்த்துவிடுவார்.


எத்தனை படங்கள் எத்தனை பாத்திரங்கள்
அடேயப்பா அத்தனையும் சொல்ல முடியுமா என்றால் முடியாதுதான்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் அதிக படங்களில்
நடித்தமைக்கு( இன்னொருவர் பிரேம் நசீர்).

நாகேஷடன் ஒரு வகை
தங்கவேலுவுடன் ஒரு வகை
எம்.ஆர்.ராதாவுடன் ஒரு வகை
சந்திரபாபுவுடன் ஒரு வகை
சோவுடன் ஒரு வகை
பின் சுருளியுடன் ஒரு வகை
கவுண்டமனியுடன் ஒரு வகை என நகைச்சுவையில் எத்தனை பரிமானங்கள்

தில்லானா மோகனாம்பாளில் அந்த ஜில் ஜில் ரமாமணி வேடமாகட்டும்
சூர்யகாந்தியில் அந்த மாமி வேடமாகட்டும்
சம்சாரம் அது மின்சாரத்தில் ஆண்டாள் வேடமாகட்டும்
சின்னக்கவுண்டர் படத்தில் ஆத்தா வேடமாகட்டும்
எல்லாமே முத்திரை பதித்தவை

2002'க்கான பதம்ஸ்ரீ விருது பெற்றவர்
புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை தேசிய விருது பெற்றவர்.

மேடை நாடகங்களில் நடித்தவர்.
தமிழ் திரையுலகில் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொண்டு
பொருந்தி வரும் பாத்திரங்களுக்கு மெருகேற்றுபவர்.
இவர் பதித்த முத்திரை கொஞ்சம் அழுத்தமானதே..



ராஜ்

rajeshkrv
02-08-2004, 09:50 AM
15) சுந்தரிபாய்.

கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி.
சி.கே.சரஸ்வதி போல் இவரும் பல பாத்திரங்களில் நடித்தவர்
அம்மா,அத்தை,மாமியார்,பாட்டி,சித்தி என இவர் நடிக்காத பாத்திரங்களே இருக்க முடியாது.
வில்லத்தனமான வேடங்களில் அவ்வளவு அழகாக பொருந்துவார்
அதே சமயம் அடங்கிய மனைவி வேடங்களிலும் அசத்துவார்

உதாரணமாக ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம்
பாட்டி வேடத்தில் சித்தி
அம்மா வேடத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள்
அத்தை - அரங்கேற்றம்

இன்னும் பல படங்கள்

முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர்.

ராஜ்

இளசு
03-08-2004, 05:25 AM
எவ்வளவு பெரிய நெத்தி, அதில் எவ்வளவு பெரிய பொட்டு..
தில்லானா மோகனாம்பாளில் சிகே சரஸ்வதியை நாகேஷ் இப்படி வர்ணிக்க
அவர் முகத்தில் தோன்றும் உணர்வுகள்..

அந்தக்கால "துணை" நடிகைகள் கூட எத்தனை முத்திரை பதித்திருக்கிறார்கள்.

ஊட்டிவரை உறவு படத்தில், அறுபது வயதான அந்தப் பருவத்திலும்
கணவன் இன்னொரு "ரகசிய மனைவி" உள்ளவன் எனத் தெரிந்து
"சீ.." என மௌன எரிமலையாய் சீறும் சுந்தரிபாய்..

ஆச்சியைப் பற்றி எழுத எனக்குத் துணிவில்லை...

குருகுருவின் இச்சேவை காலத்தை அந்த நாயகியர் சாதனை போலவே
காலத்தை வென்று நிற்கும்.

தஞ்சை தமிழன்
03-08-2004, 03:00 PM
ராஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்

என்ன சொல்வது உங்களை.

இத்தனை தகவல்களையும் அழகாக தரும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இளசுவின் தன்மையான ஆதரவான பதிவுகள்.

மேலும் முத்திரைகளை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

பரஞ்சோதி
03-08-2004, 04:36 PM
அருமையான பதிவுகள்,

அன்னையை பார்க்க முடியாமல் தவித்த நாட்களில் ஆச்சியிடம் அன்னையை கண்டவன் நான். அவர் ஒரு தெய்வப்பிறவி, பெண் சிவாஜி கணேசன்.

rajeshkrv
04-08-2004, 11:18 AM
16.குமாரி சச்சு..

ஒளவையாரில் சின்ன அவ்வையாக தோன்றியவர்

வீரத்திருமகனில் நாயகியாக தோன்றியவர்
காதலிக்க நேரமில்லை மீனலோசனியை மறக்க முடியுமா
நம்மால்.
நாகேஷ் - சச்சு இணை நல்ல பொருத்தம்..
துடுக்குடன் பேச்சும் பாவமும் கொண்ட நடிகை சச்சு.

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
- என்ன அழகான பாடல்
அன்னை படத்தில் வரும் பாடலில் தோன்றியவர் இவரே
அதே படத்தில் வரும் ஓ பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா
பாடலும் அருமை.

அதேப் போல் தேங்காய் சீனிவாசன், எம்.ஆர்.ராதா,சுருளிராஜன் இவர்களுடனும் அருமையாக ஜோடி சேர்ந்து நகைச்சுவை வழங்கினார்.

அது மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்

இவர் நடித்த சில படங்கள்

வீரத்திருமகன்
அன்னை
காதலிக்க நேரமில்லை
திக்கு தெரியாத காட்டில்
காசே தான் கடவுளடா
திருமாங்கல்யம்
இப்படியும் ஒரு பெண்
குலவிளக்கு (குபீர்)


ராஜ்

mythili
04-08-2004, 11:42 AM
சச்சு நடித்த "காதலிக்க நேரமில்லை" படத்தில், ஒரு பாட்டிற்கு சச்சு நடனமாடுவாறே.....அது என்ன பாடல் நியாபகம் வர மாட்டேன்றது.
யாராவது சொல்லுங்களேன். :-(

இப்போது ஜெயா டீவியில் இரவு 8.00 முதல் 8.30 வரி வரும் "வீட்டுக்கு வீடு லூட்டி" தொடரில், சச்சுவின் நகைச்சுவை அருமை.
ஆனைவரும் ரசிக்கும் வகையில் உள்ளது.

இன்றைய பதிப்புக்கு நன்றி ராஜேஷ்.

அன்புடன்,
மைதிலி

rajeshkrv
04-08-2004, 11:49 AM
மைதிலி நீங்கள் குறிப்பிடும் பாடல்

மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்

பரஞ்சோதி
04-08-2004, 01:59 PM
மைதிலி நீங்கள் குறிப்பிடும் பாடல்

மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்

அந்த பாடலில் நாகேஷ், சச்சு அவர்கள் ஆடும் ஆட்டம் அருமையாக இருக்கும். அத்துடன் பாட்டு முடிந்ததும், நாகேஷை விரட்டும் காட்சி மறக்க முடியாதது.

rajeshkrv
10-08-2004, 01:03 PM
17. எம்.என்.ராஜம்

ரத்தகண்ணீரில் எம்.ஆர்.ராதாவை காலால் உதைப்பாரே அந்த காட்சியை மறக்க முடியுமா

பிறந்த ஊர்: மதுரை
தேதி : ஆகஸ்ட் 5

டி.கே.எஸ் நாடக சபாவில் நுழைந்து அங்கே தான் வசன உச்சரிப்பையும் தமிழையும் கற்று கொண்டார்

பராசக்தியில் கிருஷ்ணன் - பஞ்சு அவர்களால் நிராகரிக்கப்பட்டு அவர்களாலேயே
ரத்தகண்ணீரில் அறிமுகம் செய்யப்பட்டார்

பின் பல படங்களில் வில்லி, அக்கா, அண்ணி,
மாமியார் என பல வேடங்களில் அசத்தியவர்

காவியமா நெஞ்சின் ஓவியமா - பாவை விளக்கு படத்தில் சிவாஜியுடன் மும்தாஜ் வேடத்தில் பாடும் பாடல் மறக்க முடியாத ஒன்று

அதே போல் தெய்வப்பிறவி படத்தில்
எஸ்.எஸ்.ஆரின் இணையாக வந்து
காளை வயசு கட்டான சைசு,
தாரா தாரா வந்தாரா பாடல்களில் இவரது ஸ்டைலும் பாவமும் பிரமாதம்

நாடோடி மன்னனில் ஒரு எம்.ஜி.ஆரின் ஜோடி
ரங்கோன் ராதாவில் சிவாஜியின் இரண்டாவது ஜோடி என வெளுத்து வாங்கியவர்

திருடாதே வில் ஏ மிஸ்டர் பாலு பாடலில் துள்ளல் அருமை

பெண்மனி அவள் கண்மனி படத்தில்
சீதாவின் கொடுமைக்கார மாமியாராக வந்து நம்மை கதி கலங்க செய்வாரே மறக்க முடியுமா

திருமதி ஒரு வெகுமதியில் கோகிலாவின் அம்மாவாக கிஷ்முவிடம் உதவி கேட்பாரே அதையும் மறக்க முடியாது.

சின்னத்திரையிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார்
பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் தான் இவரது கணவர்

டயலாக் டெலிவரியில் இவர் பலருக்கு முன்னோடி

முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர்


ராஜ்

பரஞ்சோதி
10-08-2004, 06:22 PM
எம்.என். ராஜம் அம்மா அவர்கள் சிறந்த நடிகை, சினிமாவில் மட்டுமல்லாது டிவி தொடர்களிலும் சிறப்பாக நடித்தவர். நன்றி அண்ணா.

தஞ்சை தமிழன்
11-08-2004, 05:17 AM
சச்சு
மற்றும்
எம் என் ராஜம்

இருவரை பற்றிய பதிவுக்கும் எனது நன்றி.

தனது எளிமையான நடிப்பால் இன்னமும் நம்மை கவரும் சச்சுவுக்கு நிகர் அவரே.

எம் என் ராஜத்தின் திறமையை தமிழ் திரையுலகம் அவ்வளவாக பயன் படுத்தியிருக்கவில்லை என்பது எனது எண்ணம்.
சிறந்த நடிகை. அனால் அதற்கேற்ற புகழ் பெறவில்லை.

mythili
12-08-2004, 04:46 AM
மைதிலி நீங்கள் குறிப்பிடும் பாடல்

மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்

ஆமாம்..இப்போது தான் நியாபகம் வந்தது.

அருமையான பாடல். நினைவு கூர்ந்த ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றி.

அன்புடன்,
மைதிலி

mythili
12-08-2004, 04:50 AM
எம்.என்.ராஜம் பற்றிய தகவல்களை படங்களோடு கொடுத்த ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றி.

"பாசமலர்" படத்தில், சிவாஜிக்கு ஜோடியாக வருபரும் இவர்தானே, :-)
அந்தப் படத்தில் அவர் ஒரு மருத்துவர் என நினைக்கிறேன்.

அன்புடன்,
மைதிலி

rajeshkrv
12-08-2004, 01:25 PM
18. எஸ்.வரலக்ஷ்மி.

நடிப்புடன் பாடும் திறமுன் பெற்றிருந்த
நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆந்திராவில் 27-செப்டம்பர்-1926'ல் பிறந்தவர்.

முதல் படம் பாரிஸ்டர் பர்வதீசம் (தெலுங்கு)

இவரும் நாயகி முதல் பாட்டி வேடம் வரை வெளுத்து வாங்கியவர்.

சக்ரவர்த்தி திருமகளில் வஞ்சகமாக அஞ்சலி தேவியை ஏமாற்றி எம்.ஜி.ஆரை அடைய துடிப்பார்

அதே எம்.ஜி.ஆருக்கு நீதிக்கு தலை வணங்கு படத்தில் அம்மாவாக நடித்தவர்
(இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூக்களில்) பாடலை மறக்க இயலுமா?

பணமா பாசமாவில் சரோஜாதேவியின் அம்மாவாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

மாலதியில் அதே சரோஜாதேவியின் அண்ணியாகவும் அருமையாக நடித்திருப்பார்

இவர் செய்த பாத்திரங்களிலேயே மிகவும் அருமையான பாத்திரம் பூவா தலையா படத்தில் இவர் ஏற்ற வேடம் மிகவும் அருமை
ஜெய்சங்கருடன் இவர் போட்டி போடுவாரே அப்பா அருமையான நடிப்பு

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா-
கந்தன் கருணையை மறக்க முடியுமா

இவர் பாடிய சில பாடல்கள்

மனம் கனிந்தருள் வேல் முருகா
டக் டக்குன்னு - வீர பாண்டிய கட்டபொம்மன்
(இணையும் குரல்கள் சுசீலா, கோமளா)

ஏடு தந்தானடி தில்லையிலே -
ராஜ ராஜ சோழன்

தென்றல் வந்து வீசாதோ - சிவகங்கை சீமை
இணையும் குரல் டி.எஸ்.பகவதி

மங்களம் காப்பாய் சிவசக்தி - தாய்

கடைசியில் உன்னை நான் அறிவேன் - குணா

நல்ல திறமை வாய்ந்த நடிகை

ராஜ்

இளந்தமிழ்ச்செல்வன்
12-08-2004, 04:06 PM
தங்களின் அனைத்து பதிவுகளுக்கும் தகவல்களுக்கும் நன்றி நண்பரே.

rajeshkrv
18-08-2004, 12:46 PM
19.செளகார் ஜானகி

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர்.

ஏனோ சோக பாத்திரங்களையே இவருக்கு கொடுத்தனர்.

நல்ல நடிப்பும் வசனம் பேசும் திறனும் கொண்டவர்.

பாலசந்தர் இவரது நடிப்புத்திறமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்
அதானாலேயே இவர் தயாரித்த படத்தை இயக்கும் பொறுப்பு பாலசந்தருக்கே கிடைத்தது

இவர் நடித்த சில படங்கள்

பாக்கியலக்ஷ்மி -
மாலை பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி

படிக்காத மேதை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

பாலும் பழமும் - சிறிய வேடம்
பார்த்தால் பசி தீரும் - ஜெமினியின் இரண்டாவது மனைவி

அன்னை

பார் மகளே பார்
நீரோடும் வைகையிலே

நானல்
குயில் கூவி துயில் எழுப்ப
இதில் கொலைகாரர்களிடம் மாட்டிக் கொண்டு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

மோட்டார் சுந்தரம்பிள்ளை

மஹாகவி காளிதாஸ்
மலரும் வான் நிலவும்

பாமா விஜயம்.
மேஜரின் மனைவியாக
2 குழந்தைகளுக்கு தாய் என அவர் பாமாவிடம் அலட்டுவது அழகு.
(சோகமில்லாமல் நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று)

ஒளி விளக்கு
தன் உயிரைக் கொடுத்து எம்.ஜி.ஆரை காப்பாற்ற இவர் பாடும்
இறைவா உன் மாளிகையில் என்ற பாடலை யார் மறந்திருப்பார்கள்
எம்.ஜி.ஆர் உடம்பு சரியில்லாமல் இருந்த போது தமிழகம் எங்கும் ஒலித்த பாடல் இது தான்.
சுசீலாவின் குரலில், வாலியில் கனமான வரிகளில் பாடல் அற்புதம்

உயர்ந்த மனிதன்
மிடுக்கான பணக்கார பெண் வேடத்தில் கன கச்சிதம்.
சிவாஜியுடன் வாக்குவாதம் செய்யும் அழகே அழகு

இரு கோடுகள்:
மற்றுமொரு பாலசந்தரின் காவியம்
பைல் லை என இவரும் ஜெமினியும் பேசும் வசனங்கள் நச்.

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
சுசீலா- ஜமுனாராணி குரல்களில்
என்றும் திகட்டாத பாடல்

காவியத்தலைவி
சொந்த தயாரிப்பு
இயக்கம் பாலசந்தர்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
குறிப்பாக கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா என்ற வரி பாடும் போது
சுசீலாவும் சரி இவரும் சரி உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்கள்

தில்லுமுல்லு
அழ மட்டும் தான் தெரியும் என்று நினைத்திருந்தவர்களை
வியக்க வைக்கும் வண்ணம் நகைச்சுவையில் வெளுத்து வாங்கிய படம்
பைப் மூலமாக மாடியேறும் காட்சியாகட்டும்
குளியலறையிலிருந்து அப்பாவி போல் வெளிப்படும் காட்சியாகட்டும்
ஆஹா ...

புது புது அர்த்தங்கள்
ரூபி டார்லிங் என்று சொல்லிக்கொண்டு பூர்ணம் விஸ்வநாதனுடன் இவர் அடிக்கும் லூட்டி
அடடா என்ன அழகு

முத்திரை பதித்தவர்களில் இவர் இல்லாமலா?

ராஜ்

இளசு
19-08-2004, 10:31 PM
உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியல.. குருகுரு..

சச்சுவைப்பத்தியும், எம் என் ராஜம் அவர்களைப் பத்தியும் படிச்சுட்டு பதில் எழுதறதுக்குள்ள ,,,,, சௌகார்..

ஹீரோயின்கள் அஞ்சும் அழகு சச்சு..
(சிவந்த மண், கலாட்டா கல்யாணம்..)

இப்போக் கூட ( பம்மல் சம்பந்தம் -தாத்தா மரணக்காட்சியில்)
நடிப்பால் கண்கலங்க வைக்கும் ராஜம்..

அழுமூஞ்சி என முத்திரையை வென்று, குடித்துவிட்டு கணவனை திட்டும் மாடர்ன் மனைவி - வில்லியாய் புதிய பறவை சித்ரா.. சௌக்கார்..

எல்லாருமே நம் மனதிலும் முத்திரை பதித்தவர்கள்..


தொடரட்டும் இப்பொக்கிஷப்பதிவு..

இளந்தமிழ்ச்செல்வன்
20-08-2004, 04:32 AM
ஆழமான அழகான தொகுப்பு மற்றும் விவரங்கள் நண்பரே. வாழ்த்துக்களும் நன்றியும்

பரஞ்சோதி
20-08-2004, 06:33 AM
அருமையான தகவல்கள் நன்றி ராஜேஷ் அண்ணா.

வரலட்சுமி அம்மா அவர்கள் குணாவின் கமலின் தாயாராக வந்தவர் தானே? அவரது பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றவை.

சௌகார் ஜானகி அவர்கள் திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்று, பின்னர் நடித்து கதாநாயகியாக தொடர்ந்தவர் என்று படித்திருக்கிறேன்.

சௌகார் ஜானகி அவர்கள் நடித்த தில்லுமுல்லு கதாபாத்திரமாகட்டும், அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேலா என்ற பாடலை மறக்க முடியுமா என்ன?

rajeshkrv
20-08-2004, 12:24 PM
அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா
ஆஹா நான் சொல்ல மறந்த பாடலை நினைவூட்டிய பரஞ்சோதி அவர்களே நீவீர் வாழ்க.

வாலி -வி.குமார் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி
அதுவும் பிராமண வழக்குப்பாடலுக்கு இது தான் முன்னோடி
இதில் சினிமா பைத்தியமாக நடித்திருப்பார் செளகார்
அதை வாலி அழகாக " மூன்றெழுத்து மூன்று ஷோவும் பார்த்தது நீ
தாண்டி" என்று சொல்லியிருப்பார்

டி.எம்.எஸ்ஸம், சுசீலாவும் பாடியிருக்கும் விதம் அற்புதம்
அதுவும் சுசீலா சொல்லும் என்னத்த செய்வேள் ( நடுத்தர மாமிகள் மாமாக்களிடம் கேட்பது போல் அவ்வளவு பாங்காக )
பின் கடைசியில் ஹம்ஹம்ம் என்று சுசீலா குரலால் அழ
திரையில் செளகார் முகத்தில் சோகம் ஆட
நைசாக ரூபாயை ஸ்ரீகாந்திடமிருந்து எடுப்பாரே
ஆஹா
வெடுக் வெடுக் என்று பேசிக்கொண்டு இவர் நடித்த இந்த கதாப்பத்திரம்
முத்திரை பதித்த ஒன்று

rajeshkrv
26-08-2004, 07:18 AM
20 ) ஜெயந்தி:

பாலசந்தரின் ஆஸ்தான நாயகியாக விளங்கியவர்

எதிர்நீச்சல் - பைத்தியம்

இருகோடுகள் - கணவன் வேறு ஒரு பெண்ணுடன் போய்விடுவாரோ என பயப்படும் பாத்திரம்

புன்னகை - ஜெமினியின் மனைவி அவனை தவறு செய்ய தூண்டும் பாத்திரம்

பாமா விஜயம் - நாகேஷின் மனைவி

இப்படி பல படங்கள்
பல பாத்திரங்கள்

எதிர் நீச்சலில் இவர் மாதுவின் மீது காட்டும் அன்பு அந்த நடிப்பு
பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

பின் மாப்பிள்ளை சார், வியட்நாம் காலணி
என நடித்தவர்

முத்திரை பதித்தவர்களில் ஜெயந்தியும் ஒருவர்

thamarai
26-08-2004, 06:34 PM
முத்திரை பதித்த நடிகைகளின் பதிவுகள் அனைத்தும் அருமை.

இளசு
26-08-2004, 11:55 PM
தாமரைக்கன்னங்கள்..
எதிர்நீச்சலில் வாலியின் வரிகளில் ஜொலித்த ஜெயந்தி..

மறக்கமுடியாத முத்திரை நடிகை..

திருமணப் பரபரப்பிலும் தொடர்பதிவுகள், வினாடிவினா என அசத்தும் குருகுரு..
பாராட்டுகள் ..

பெரியதம்பி : செப்டம்பரில் இருந்து ஜோடியாய் மன்ற உலா வர விண்ணப்பம்..
சின்னதம்பி : அதாவது.. தேனிலவெல்லாம் முடிந்த பிறகு வந்தாப் போதும்..

rajeshkrv
01-09-2004, 04:22 AM
[b]21) டி.பி.முத்துலட்சுமி

அதான் எனக்கு தெரியுமே
இந்த வசனத்தை யாராவது மறந்திருப்பார்களா என்ன?

அந்த அளவிற்கு இது நினைவில் உள்ளதென்றால் காரணம்
டணால் தங்கவேலுவும் - டி.பி.முத்துலட்சுமியும் தான்

காமெடி பாத்திரங்களில் வெளுத்து வாங்கியவர் என்றே சொல்லலாம்

தங்கவேலு, டி.ஆர்.ராமசந்திரன்,குலதெய்வம் ராஜகோபால், காகா ராதாகிருஷ்ணன் போன்றோருடன் அருமையாக நடித்தவர்.

பின் அத்தை வேடங்களும் செய்தவர்

ஹரிசந்திரா படத்தில் சந்திரமதியை விலைக்கு வாங்குபவரின் மனைவியாக வருவார். ஜி.வரலக்ஷ்மியை விரட்டி விரட்டி வேலை வாங்கும் மாமி வேடத்தில் அருமையாக நடித்திருப்பார்

வீரபாண்டிய கட்டபொம்மனில் பத்மினியின் தோழி.
ஏ.கருணாநிதியுடன் இவருக்கு பாடலும் உண்டு

பூவா தலையாவில் எஸ்.வரலக்ஷ்மியின் எடுபிடியாக வருவார் .. ஒரு கண் மாறு கண்ணாக இருக்கும் இந்த படத்தில். இதிலும் நல்ல நடிப்பு

வாலிப விருந்து - ரவிச்சந்திரனின் அத்தையாக வருவார். ஸ்மோகிங் பீஸ் என்று இவர் சொல்லும் விதமே நமக்கு சிரிப்பை வரவழைக்கும்

முத்திரை பதித்தவர்களில் இவர் இல்லாமலா

ராஜ்

இளசு
01-09-2004, 04:45 AM
மிக யதார்த்தமாய் பேசும் பாணி ( ஆண்களில் ரங்காராவ் போல்)..
பூரி சுடும் "அறிவாளி" (அதான் எனக்குத் தெரியுமே)
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி பாட்டு ( கட்டபொம்மன்)

கொஞ்சம் ரெட்டை நாடி சரீரத்துடன், இயல்பான குரல், நடை, முகபாவங்களால் தரமான முத்திரை நடிப்பு தந்த முத்துலட்சுமியை
இங்கே பதித்து அவரைச் சிறப்பித்த குருகுருவுக்கு நன்றி..

பரஞ்சோதி
01-09-2004, 04:48 AM
நடிகை ஜெயந்தி வாழ்க்கையில் தோற்றாலும், சினிமாவிலும், அரசியலிலும் வென்றவர். சிறந்த நடிகை. காதோடு தான் நான் பாடவா என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலுக்கு நடித்தவர் தானே.

நடிகை முத்துலட்சுமி அவர்களின் நகைச்சுவை ரசிக்கும்படியானது. அனைத்து நகைச்சுவையாளர்களுடனும் சேர்ந்து கலக்கியவர்.

நன்றி ராஜேஷ் அவர்களே!.

gragavan
01-09-2004, 06:14 AM
டி.பி.முத்துலட்சுமியை யார் மறக்க முடியும்? அறிவாளி படத்தில், "சுச்சு போட்டா பக்குன்னு பிடிச்சுக்குமாமே" என்று வெகுளித்தனமாக தங்கவேலுவிடம் கூறும் போது சிரிக்காதவர் யார்? இயல்பாக நடித்தவர்களில் அவரும் ஒருவர். பெரும்பாலும் கதாநாயகியின் தோழியாக வருவார். பிறகு வயதான பாத்திரங்களும் செய்தார். அருமையான நடிகை இவர்.

ராஜேஷ், அடுத்தது யாரென்று ஆவலாய் காத்திருக்கிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Narathar
02-09-2004, 09:00 AM
தாங்கள் பதிவு எனக்கு பல பழய நடிகைகளை நினைவூட்டியது.
நன்றி!

இளசு
03-09-2004, 07:37 AM
அப்போ நீங்களும் என்னைப்போலத்தான் , இல்லையா நாரதரே..!!!

தஞ்சை தமிழன்
03-09-2004, 08:50 AM
முத்திரை பதித்த நடிகைகளை பற்றி எழுது எங்கள் மனதில் முத்திரை
பதிக்கும் நண்பர் ராஜ்க்கு பாராட்டுக்கள்.

வரலட்சுமி,
ஜெயந்து போன்ற சிறந்த நடிகைகள் நடித்த படங்களை பார்த்து ரசிக்க முடிந்தவன் என்பதில் பெருமை படுகிறேன்.

rajeshkrv
30-09-2004, 08:11 AM
22) சுகுமாரி

வாரயோ தோழி வாராயோ பாடலில் சாவித்திரியை மேடைக்கு அழைக்கும் தோழிகளில் தலைமையாக வருவாரே மறக்க முடியுமா..

எத்தனை வருடங்கள் எத்தனை கதாபாத்திரங்கள் எத்தனை பாவங்கள் அடேயப்பா .. இன்றும் சிறப்பாக செய்துகொண்டிருக்கும் இவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.

தமிழ், மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னடம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி என பல மொழிகளிலும் மின்னியவர்.

2500 படங்களுக்கு மேல் நடித்தவர்

1940'ல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்

சினிமா தவிர
ஒய்.ஜி.பி மற்றும் சோ நாடக குழுவில் நடித்தவர்

ஓர் இரவில் குழந்தை நட்சத்திரமாக ஒரு நடனம் செய்தார்

இவரது டயலாக் டெலிவரியில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்.

முகமது பின் துக்ளக் படத்தில் இவர் செய்த வேடம் அபாரம்
சமீபத்தில் நாடகமாக பார்த்த போதும் அதே துடிப்புடன் இவர் அந்த வேடத்தில் நடித்ததை பார்த்து பிரமித்தேன்.

சமீபத்தில் பம்மல் கே சம்பந்தததில் சிம்ரனை கமலுடன் சேர்த்து பேசுவாரே அந்த காட்சி அருமை..

தற்பொழுது உள்ள அனுபவமான நடிகைகளில் இவருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு

பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

எல்லா தலைமுறை நடிகர்களுடனும் நடித்தவர்

முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர்

ராஜ்

தஞ்சை தமிழன்
30-09-2004, 09:46 AM
இன்றும் மலையாளத்தில் நிறைய நடிக்கும் இவரின் நடிப்பு சிறப்பானது.

சிறந்த நடிகை.

rajeshkrv
13-10-2004, 08:14 AM
23) காஞ்சனா..

ஏர்ஹோஸ்டஸாக இருந்து பின் நடிகையானவர்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லையில் அறிமுகமாகி
அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர்.

அப்பொழுதே கிளாமர் வேடங்களையும் தயங்காமல் செய்தவர்.


காதல் கதாப்பாத்திரங்களையே நிறைய செய்தவர்
குறிப்பிடும்படி அமைந்த கதாப்பாத்திரங்கள் என்றால்
பாமாவிஜயம், சாந்தி நிலையம், சிவந்த மண், அவளுக்கென்று ஒரு மனம், உத்தரவின்றி உள்ளே வா, அவன் தான் மனிதன் , அதே கண்கள், வீர அபிமன்யூ,

அதே கண்களில் புதுவருட நடனம் அபாரம்

70'ல் பல படங்களில் நடித்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர்

பெற்றோரின் கொடுமையால் இன்று பெங்களூரில் கோயிலை சுத்தம் செய்து ஜீவனம் நடத்திவருவதாக கேள்வி.

மணிரத்னத்தின் மெளன ராகத்தில் மோகன் - ரேவதி விவாகரத்து வழங்கும் வக்கீலாக வருவார்

முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர்
ராஜ்

மன்மதன்
13-10-2004, 09:45 AM
சுகுமாரி..

இன்றைய மலையாள படங்களில் தவிர்க்க முடியாத குணச்சித்ர நடிகை..

காஞ்சனா..

அன்றைய கவர்ச்சி/நடிப்புக்கன்னியின் இன்றைய நிலையை நினைக்கும் போது மனம் வருந்துகிறது.. இவர்களை மாதிரி உள்ளவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இன்றைய ஏழையின் தோழர்களாக சித்தரிக்கும் நடிகர்கள் ஏன் உதவி பண்ணக்கூடாது.???

மன்றத்தின் பொக்கிஷப்பதிவுகளில் இது ஒன்று.. தொடருங்கள் ராஜேஷ்.

அன்புடன்
மன்மதன்

தஞ்சை தமிழன்
13-10-2004, 12:41 PM
பாமா விஜயத்தில் காஞ்சனாவின் நடிப்பு இயல்பாய் இருக்கும்.

அவரது இன்றைய நிலைமை வருத்தமளிக்கிறது.

பரஞ்சோதி
13-10-2004, 07:07 PM
சுகுமாரி அம்மா, மிகவும் சிறந்த நடிகை. அவரது கணவர் இயக்குநர் பீம்சீங் என்று நினைக்கிறேன், சரியா ராஜேஷ் அவர்களே!

மலையாளத்தில் அவரது காமெடி ரவுசுகளை மிகவும் ரசிப்பேன்.

பரஞ்சோதி
13-10-2004, 07:10 PM
காஞ்சனா அவர்களும் சிறந்த நடிகை. அவரது காலக்கட்டத்தில் மிகவும் அழகாக தோன்றியவர்.

அவரது பெற்றொரின் கொடுமையால், தற்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் படித்தேன். இன்னமும் தன்னம்பிக்கை இழக்காமல் தனியாக போராடி வருகிறார்.

rajeshkrv
17-11-2004, 06:15 AM
[b][i]24. ஜெயலலிதா ஜெயராமன்

இன்றைய தமிழக முதல்வர் .. ஆம் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர்.

மைசூரில் பிறந்து சென்னையில் சினிமா உலகில் தனக்கென இரு இடத்தை பிடித்தவர்.

நடிகை சந்தியாவின் மகள் இவர்.

பிறந்த தேதி - பிப்ரவரி 24 1948

அறிமுகம் - ஸ்ரீதரின் வெண்ணிறாடை...
எம்.ஜி.ஆரோடு - ஆயிரத்தில் ஒருவன்
சிவாஜியோடு - கலாட்டா கல்யாணம்.

பல படங்கள் பல இயக்குனர்கள்
குறிப்பாக எம்.ஜி.ஆருடன் நிறைய படங்கள் நடித்தார்

நடிப்புத்திறமை இவருக்கு இருந்தது காரணம் பரதநாட்டியத்தில் இவர் தேர்ச்சி பெற்றவர்.
நல்ல குரல்வளம், ஏற்ற இறக்கத்துடன் வசன உச்சரிப்பு என பல வகையில் சிறந்து விளங்கினார்.

எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் சிவாஜியை தூக்கி சாப்பிடும் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இவரது நடிப்பில் வந்த சில படங்கள்

ஆயிரத்தில் ஒருவன்
மேஜர் சந்திரகாந்த்
கந்தன் கருணை
புதிய பூமி
கணவன்
எங்கள் தங்கம்
அடிமைப்பெண்
சூரியகாந்தி - நல்ல நடிப்பு
ராஜா
தெய்வமகன்
எங்கிருந்தோ வந்தாள் - நல்ல நடிப்பு
அரசகட்டளை
கண்ணன் என் காதலன்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
தாய்க்கு தலை மகன்
எங்க மாமா
சுமதி என் சுந்தரி - நல்ல நடிப்பு
பட்டிக்காடா பட்டணமா
சவாலே சமாளி
ராமன் தேடிய சீதை
பாக்தாத் பேரழகி
பாட்டும் பரதமும்
நதியைத் தேடி வந்த கடல் ( இணை சரத்பாபு இசை இளையராஜா) 1980 - கடைசி படம்

மார்டன் டிரஸ் போட்டு அசத்தியவர்

பின் ஜெய்- ஜெயலலிதா
ரவிச்சந்திரன் - ஜெயலலிதா என்று சொல்லும் அளவிற்கு இவர்களோடு பல படங்கள் நடித்தார்

நீங்க நல்ல இருக்கோனும்( முதல்வராகவே நடித்தார்)


நல்ல குரல்வளம் உள்ளதால் சில் பாடல்களை பாடினார்
அம்மா என்றால் அன்பு - அடிமைப்பெண் படத்தில் இவரே பாடிய பாட்டு

முத்திரை பதித்தவர்களில் இவரும் உண்டு

ராஜ்

பரஞ்சோதி
17-11-2004, 07:13 AM
ஜெயலலிதா அவர்களை சிறந்த நடிகையாக ஏற்றுக் கொள்ளலாம்.

குண்டு கன்னங்களும், கூர்மையான கண்களும், குரல் வளமும் அவரது சினிமா வெற்றிக்கு காரணம்.

அவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும், திமிரான நடிப்பு என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், எல்.ஆர். ஈஸ்வரி பாடல்கள் மிகவும் பொருந்தும்.

நன்றி ராஜேஷ்.

gragavan
17-11-2004, 07:27 AM
ஒரு நடிகையாக ஜெயலலிதாவை யாருக்கும் பிடிக்காமல் போகாது. நல்ல நடிப்பு. சிறந்த ஆடல் திறமை. அருமையான பாடும் திறமை என்று அனைத்தையும் சிறப்பாகச் செய்தார். எந்தப் பாத்திரமாகட்டும் அதை திறம்படச் செய்துள்ளார் என்பதில் தவறில்லை. எல்லாப் பாடகிகளின் குரலுக்கும் அவர் பொருத்தமாக இருப்பார். இருந்தாலும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் என்றால் அவரே பாடியது போல அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அவரே கூட சில பாடல்களைப் பாடியுள்ளார். "நானென்றால் அது அவளும் நானும்" பாடலில் அவர் ஆங்கில வரிகளை அழகாக விசுவநாதன் தந்த மெட்டில் பாடும் அழகே அழகு. ஒரு முத்திரை பதித்த நடிகையாக ஜெயலலிதா பாராட்டுக்குரியவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
20-11-2004, 09:40 AM
[i]25) லக்ஷ்மி ..
60'ன் ஆரம்பத்தில் அறிமுகமான ஒரு அருமையான நடிகை..

இன்றும் எல்லா கதாப்பாத்திரங்களும் செய்து மின்னிக் கொண்டிருக்கும் நடிகை இவர்.

எல்லா மொழிகளைலும் சொந்த குரலில் பேசும் திறமை வாய்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

சில நேரங்களில் சில மனிதர்களுக்காக தேசிய விருது பெற்றவர்

சில நேரங்களில் சில மனிதர்கள்
சிறை
சம்சாரம் அது மின்சாரம்
தாலிதானம்
போன்ற படங்களில் இவரது நடிப்பு அபாரம்.

இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள்

ஜீவனாம்சம்
மாட்டுக்காரவேலன்
காவல் தெய்வம்
எதிரொலி
நூற்றுக்கு நூறு
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
சிறை
சம்சாரம் அது மின்சாரம்
மன்னிப்பு
படையப்பா

டயலாக் டெலிவரி அதாவது வசனம் பேசும் முறை இதில் இவர் வல்லவர்

எம்.ஜி.ஆர்,சிவாஜி தொடங்கி அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர்

தமிழ்த்திரையுலகில் முத்திரை பதித்தவர்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லையென்றால்
பட்டியல் பூர்த்தியாகாது.

ராஜ்

பரஞ்சோதி
20-11-2004, 10:21 AM
இலட்சுமி மிகவும் அருமையான நடிகை, இவரது நடிப்பில் வந்த சிறை, சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களை மறக்க முடியாது, அருமையான நடிப்பு.

அழுத்தம் திருத்தமாக கழுத்தை அசைத்து பேசும் இவரது நடை இவருக்கு பிளஸ் பாயிண்ட்.

rajeshkrv
26-11-2004, 09:43 AM
26) சுஜாதா ..

பாலசந்தரின் பெருமைக்குரிய அறிமுகம் இவர்.

ஆம் அவள் ஒரு தொடர்கதையில் அறிமுகம் அதன் பின் இவரது சினிமா வாழ்கை ஒரு தொடர்கதை
தான்.

இன்றளவும் இவரைப்போல் முகபாவத்துடன் வசனம் பேச ஆளில்லை..

எந்த வேடமேற்றாலும் அதில் தன்னை புகுத்திக்கொண்டுவிடுவதில் வல்லவர்

மாறுபட்ட கோணங்கள் இதோ ..

அவள் ஒரு தொடர்கதை - குடும்பத்தை தோளில் சுமக்கும் பாத்திரம் ..

" கல்யாணத்திற்கு முன்னாடி கர்வமா இருக்கலாம் கர்ப்பமா இருக்கத்தான் கூடாது " என இவர் பேசும்விதம் அருமை.

துணையிருப்பாள் மீனாட்சி - என்ன அருமையான நடிப்பு

நூல்வேலி -- எழுத்தாளராகவும் சென்சார் போர்ட் உறுப்பினராக இவர் நடித்த விதம் அபாரம்

பரீட்சைக்கு நேரமாச்சு .. இதில் ஐயங்கார் மாமி வேடத்தில் ஜொலித்திருப்பார்
அதில் வி.கோபாலகிருஷ்ணனுக்கு சமைத்து போடுவார்
இப்படி இவர் போட்டும் மகன் ஒய்.ஜிக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில்
இவர் "அவருக்கு வடிச்சு போட்டு போட்டு என்னத்த கண்டோம் " என்று பேசுவதை பார்த்து கொண்டே இருக்கலாம்

அவர்கள் : கொடுமைக்கார கணவனிடமிருந்து மீண்டு சுயமாக வாழமுடியும் என நிரூபிப்பார் அபார நடிப்பு.


அன்னக்கிளி -- தான் காதலித்தவரை தன் சிநேகிதியும் காதலிக்கிறாள் என தெரிந்து விட்டுக்கொடுத்து
பின் அவர்கள் குழந்தையையும் காப்பாற்ற தன் உயிர் தரும் வேடம்
சுஜாதாவின் நடிப்பு மிளிரியது.

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது .. இதிலும் திறம்பட நடித்திருப்பார்

மாரியம்மன் திருவிழா - இதில் டெல்லிகணேஷிற்கு இணை .. பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு
வாழ்கைப்பட்டு வரும் பெண் வேடம் ஜமாய்த்திருப்பார். நான் ரசித்த வேடம்


லலிதா -- கோரா காகஸ் படத்தின் தமிழ் வடிவம் .. என்ன அருமையான நடிப்பு

அந்தமான காதலி - சொல்லவும் வேண்டுமோ ..


பின் பல குணச்சித்திர வேடங்கள்

உன்னை நான் சந்தித்தேன்,

விதி - இதில் பூர்ணிமாவிற்காக வாதாடும் வேடம் பின்னியிருப்பார் ..

உயிரே உனக்காக - அருமையான வேடம்

ரஜினிக்கு அம்மாவாக உழைப்பாளி
சமீபத்தில் பாபாவிலும் பாந்தமான நடிப்பு ..

இவர் பதித்த முத்திரை ஏராளம் ..

ராஜ்

pradeepkt
26-11-2004, 10:54 AM
சுஜாதா மாதிரி அற்புதமான நடிகையை இங்கே உள்ள இயக்குநர்கள் வீணாக்குவதை நினைத்தால்...
சாதாரணமான அம்மா வேடமானாலும் நான் இவரது சமீப கால படங்களில் (?!) மிகவும் ரசித்துப் பார்த்தது - சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள் - அமைதிப்படை.
மணிவண்ணனின் (இப்ப எங்க சார்?) இயக்கத்தில் அந்த லொள்ளு சத்தியராஜுக்கு ராஜகுமாரியாகவே பதிலடி கொடுக்கும் பாங்கிலாகட்டும், சின்ன சத்தியராஜ் மீது காட்டும் பாசத்திலாகட்டும், கடைசியில் சோறு போட்ட அடியாளே கொல்லும்போது ஒரு "you too brutus" பார்வை பார்ப்பதிலாகட்டும்... அவரது முகபாவங்கள் முந்நூறு கதைகள் சொல்லும்.

அன்புடன்,
பிரதீப்

இளசு
30-11-2004, 05:25 AM
ஒரு நடிகையாக ஜெயலலிதாவை யாருக்கும் பிடிக்காமல் போகாது. .

அன்புடன்,
கோ.இராகவன்


அன்பு இராகவன்,
ஒரு நடிகையாக ஜெ அவர்களை எனக்குப் பிடிக்காது.
திறமையாளர் என ஒப்புக்கொள்வது வேறு..
"பிடித்துப்போவது" என்பது வேறு..

இந்தப் பட்டியலில் பி.பானுமதி, சுகாசினி. ரேவதி, விஜயகுமாரி..

இது என் ரசனைப் பட்டியல் மட்டுமே..


நல்ல சிவாஜி படங்களை 10 முறை 20 முறை பார்த்ததுண்டு.
ஜெ ஜோடி என்றால் இந்த எண்ணிக்கை பாதியாய்க் குறைந்து விடும்..




குருகுரு ராஜ்
அசத்துறீங்க... கலையுலகப்பதிவுகளின் ராஜா நீங்கதான்..

rajeshkrv
01-12-2004, 07:39 AM
27) ஸ்ரீவித்யா ..

கண்ணாலே பேசும் வித்தையை கற்றவர் இவர்


நூற்றுக்கு நூறில்(1971) ஜெய் மேல் கொண்ட காதலினால்
தானே ஆடையை கிழித்துக்கொண்டு ஜெய் தன்னை கற்பழித்துவிட்டார் என பழி போடுவாரே
அப்பொழுதே யார் இந்த பெண் என எல்லோரையும் நிமிர்ந்து உட்கார வைத்தவர்.

ஆனால் எல்லோரையும் கவர்ந்தது சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) படத்தில் தான்
அந்த நுனிமூக்கு கோபக்கார அக்கா வேடம் கன கச்சிதம்


1975 - கலா கேந்திராவின் அபூர்வராகங்கள் .. படத்தின் பிரதான பாத்திரம் பைரவி
வேடமேற்றவர் ஸ்ரீவித்யா .. இந்த ஒரு படம் போதும் இவரது திறமையை கூற..

பிரபலமான பாடகி வேடத்தில் தன் அம்மா எம்.எல்.வி சாயலை கொண்டு வந்ததாகட்டும்
தன் மகளின் போக்கை கண்டிக்கும் தாய்மை ஆகட்டும்
கமல் தன் மீது காதல் கொண்டுள்ளதை எண்ணி தவிப்பதாகட்டும்
வராத கணவன் வந்து நின்றதும் அடையும் ஆனந்தமும் அதே கணவன் தரையில் சாய கண்ணில் சோகம் மின்ன இவர் விடும் இரண்டு சொட்டு கண்ணீராகட்டும்
அடேயப்பா கண்களா அவை இல்லை இல்லை எனக்கு சிறிய வயதில் கதை சொன்ன பாட்டி ஆம் சொல்லும் பாங்கில் தான் எத்தனை நேர்த்தி.


1977'ல் ஸ்ரீகிருஷ்ண லீலாவில் சிவகுமார் கண்ணன் வேடமேற்க , ஜெயலலிதா பாமா வேடமேற்க
இவர் ஏற்றது ருக்மணி வேடம்.
அதிலும் தன் திறமையை நிரூபித்தார்

1978'ல் வந்த கே.எஸ்.ஜியின் காஞ்சி காமாட்சியிலும் இவருக்கு நல்ல வேடம்

பின் மெல்ல மெல்ல வயதறிந்து அம்மா,அண்ணி,அக்கா வேடங்கள் செய்ய ஆரம்பித்தார்.
அதிலும் சளைத்தவர என்ன..

மாப்பிள்ளையில் ரஜினிக்கு சரிக்கு சரி மல்லுக்கு நிப்பாரே அதை மறக்க முடியுமா...

காதலுக்கு மரியாதையில் அந்த கடைசி 10 நிமிடம் 4 கண்களும் வித்தைகாட்டும் ஆம்
இவரும் ஷாலினியும் கண்ணாலேயே பேசிக்கொள்வார்களே அது தான்..

எந்த மொழியிலும் சரி
நல்ல நடிப்புத்திறமை இருந்தால் வரவேற்பார்கள்

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகியவற்றிலும் நடித்து அசத்தியவர்.

தேவிபாலா ஆனந்த விகடனில் மடிசார் மாமி எழுதும் போது அந்த மாமி வேடத்தை நிஜ படமாக போட ஆசைப்பட்டார்.. அவருக்கு நினைவில் வந்த முகம் ஸ்ரீவித்யா..

அது தான் இவர் பதித்த முத்திரை

ராஜ்

தஞ்சை தமிழன்
01-12-2004, 11:16 AM
ஸ்ரீ வித்யா வின் நடிப்பை அளவிட முடியாது. தனது அருமையான நடிப்பால் இன்னமும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

தந்த ராஜ் க்கு ந்ன்றி.

thamarai
02-12-2004, 06:08 AM
கதை சொல்லும் கண்கள் ஸ்ரீ வித்யா பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள்...

இளசு
02-12-2004, 06:22 AM
கதை சொல்லும் கண்கள் ஸ்ரீ வித்யா பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள்...

அழகாய்ச் சொன்னீங்க தாமரை..

குருகுரு அவருக்கே உரிய பாணியில் அழகா சொல்லியிருக்கார்.

அசத்தும் தொடர் இது.


(100/100 க்கு முன்னமே (?) மூன்றெழுத்து என்ற படத்தில் ஸ்ரீவித்யாவைப் பார்த்ததாய் நினைவு..)

பரஞ்சோதி
02-12-2004, 06:32 AM
எனக்கு மிகவும் பிடித்த அழகான நடிகைகளில் ஸ்ரீவித்யா அவர்களும் ஒருவர்.

நன்றி ராஜேஷ்.

rajeshkrv
02-12-2004, 09:02 AM
இளசு அவர்களே நீங்கள் சொன்னால் சரியாத்தானே இருக்கும்

நான் சொன்னது படத்தில் மற்றவர்கள் பார்க்கும் படி அதாவது
பாத்திரம் மக்கள் மனதில் பதியும்படி வந்தது 100/100'ல் என்பது என் கருத்து

aren
03-12-2004, 07:50 AM
ஸ்ரீவித்யா பற்றிய அருமையான விஷயங்களை இங்கே அளித்த ராஜ் அவர்களுக்கு நன்றி.

சிவாஜி அவர்களுடன் ஒரு படமாவது கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்று முயற்சி செய்தவர்களில் இவரும் ஒருவர். கடைசியில் இமயம் படம் மூலம் அது கிடைத்தது என்று நினைக்கிறேன்.

மாணவன் என்ற படத்திலும் இவர் ஜெய்சங்கர்மேல் காதல் கொண்டு அவரை அடைய முயற்சிசெய்தார் என்று நினைக்கிறேன். இப்பொழுது அவ்வளவாக ஞாபகத்தில் இல்லை.

இவர் விஜய்க்கு அம்மாவது நடித்த காதலுக்கு மரியாதை படம் அருமை. நம்முடைய அம்மாவும் இப்படி இருக்கக்கூடாத என்று அனைவரையும் ஏங்கவைக்கும் கதாபாத்திரம். அருமையாக நடித்திருந்தார். அதுவும் கடைசி காட்சியில், என்னுடைய மருமகளை எனக்கு கொடுத்துடுங்களேன் என்று கெஞ்சும் காட்சியில் பிரமாதமாக நடித்திருந்தார்.

aren
03-12-2004, 07:55 AM
சுஜாதா - நிச்சயமாக பாலசந்தர் அவர்களின் பெருமைக்குரிய அறிமுகங்களில் இவரும் ஒருவர்.

உண்மைகள் (இந்தியில் கோஷிஷ்) படத்தில் கமல் அவர்களும், சுஜாதா அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கும் காட்சிகள் அனைத்தும் அருமை.

இவர் நடித்த படங்களில் வெற்றி பெற்ற படங்களே அதிகம் என்று நினைக்கிறேன்.

aren
03-12-2004, 08:00 AM
எனக்குப்பிடித்த தமிழ் நடிகைகளில் லஷ்மி அவர்களும் ஒருவர். அருமையான நடிகை.

இவர் ரஜினியுடன் போட்டி போட்டு நடித்த பொல்லாதவன், நெற்றிக்கண் போன்ற படங்கள் பெருவெற்றி பெற்றன.

சிவகுமார் அவர்களுடன் நடித்த அவன், அவள், அது மகத்தான வெற்றி பெற்றது. அதில் சிவகுமார், லஷ்மி, ஸ்ரீபிரியா ஆகியோரின் நடிப்பு அருமையாக இருக்கும்.

இவர் ஜெய்சங்கருடன் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. நூற்றுக்கு நூறு, மாணவன், வீட்டுக்கு வீடு ஆகியவை நல்ல வெற்றி பெற்றன.

இவர் இந்தியில் நடித்த ஜீலி படித்தின் பாடல்கள் இன்றும் நம் மனதில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கும்.

இளசு
03-12-2004, 08:11 AM
ஆஹா அடிக்கடி வந்து இப்படி கூடுதல் தகவல் தந்து அசத்துங்க ஆரென் அவர்களே..

காதலுக்கு மரியாதை உச்சக்காட்சியில் நீங்கள் சொன்னது 100% உண்மை!

சுஜாதா, லட்சுமி பற்றி உங்கள் கருத்துகள் முழுக்க எனக்கும் உண்டு..

ரசனை என்னும் ஒரு புள்ளியில்
எத்தனை மன்ற இதயங்கள் இணைகின்றன...

பிரியன்
03-12-2004, 04:46 PM
நிச்சயமாக ....எவ்வளவு அழகான நடிப்பு...

எனக்கு இதைவிட நல்ல மருமகள் கிடைக்க மாட்டாள் எனும் சொல்லும் இடத்தில் அவரது முகபாவம்


அவருக்கு என் வணக்கங்கள்

rajeshkrv
22-12-2004, 07:05 AM
28. ரமாபிரபா ..

வெண்ணிலா முற்றத்திலே வேணுகானம் பாடல் நினைவுக்கு வரவேண்டுமே..
அதே போல் "குட்மார்னிங் சிஸ்டர்" என இருளும் ஒளியும் படத்தில் வரும் காட்சி ஞாபகம் வரவேண்டுமே..

ஆம் நகைச்சுவை, குணசித்திரம் என இரண்டிலும் மின்னியவர் இவர்
ஒரு கட்டத்தில் நாகேஷின் ஆஸ்தான ஜோடியாக இருந்தவர்.

இவரை நன்கு பயன்படுத்திக்கொண்டது இயக்குனர் சிகரமே...

உத்தரவின்றி உள்ளே வா படத்தில் இவர் சங்ககாலப்பெண் போல் நாதா பிராண நாதா என நாகேஷை அழைக்கும் அழகே தனி..

எத்தனை பாத்திரங்கள் எவ்வளவு அருமையான நடிப்பு..
தமிழில் நடித்திருந்தாலும் இவரை நிறைய பயன் படுத்தியது தெலுங்கு திரைப்பட உலகம் தான்..

நவக்கிரகத்தில் முத்துராமனுக்கு 2 மனைவிகள் ஒருவர் ஜி.சகுந்தலா இவர் இரண்டாமவர்.
இருவரும் அடித்துக்கொள்ளும் நடிப்பு அருமை..

அதே போல் 47 நாட்களில் கணவனின் கொடுமையிலிருந்து ஜெயப்பிரதாவை காப்பாற்ற முயலும்
திருடியாக வருவார்.

பல பாத்திரங்கள்
பின் வயதான வேடங்கள் செய்தார்.. செய்து கொண்டிருக்கிறார்..

அருமையான நடிகை..

ராஜ்

aren
22-12-2004, 08:18 AM
ரமாபிரபா, மிகவும் திறமையான ஒரு நடிகை, ஆனால் அவருக்கு தமிழில் அவ்வளவாக சந்தர்பம் வரவில்லை. மனோரமா இருந்ததால் இவரால் நகைச்சுவை நடிகையாக முன்னுக்குவரமுடியவில்லையோ என்னவோ?

அவசர கல்யாணம் படத்தில் வரும் வெண்ணிலா முற்றத்திலே வேணுகானும், மேல் மாடி முற்றத்திலே நீயும் நாணும் என்ற பாடல் இன்றும் தமிழ்நாட்டு வானொலிகளில் ரீங்காரித்துக்கொண்டிருக்கிறது.

சரத்பாபு அவர்களை காதலித்து மணந்தார்.

ராஜேஷ் அவர்கள் கூறியதுபோல் "நாதா பிராணநாதா" இன்றும் யாராலும் அதை மறக்க முடியாது. நாகேஷ் ரவிச்சந்திரன் அவர்ள் இருக்கும் விட்டில் வந்து அவர்களை நன்றாக அழ வைப்பார். அதுவும் நாகேஷ் இவரிடம் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகள் சோகமாக இருப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும்.

தமிழில் இவரை அதிகம் பார்ப்பதில்லை. இது தமிழ்த்திரையுலகிற்கு ஒரு இழப்பே.

rajeshkrv
04-01-2005, 10:19 AM
29. ஜி.சகுந்தலா

சமீபத்தில் மரணம் அடைந்த இந்த அருமையான நடிகையை தமிழ் சினிமா சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை.

இவரும் எத்தனை பாத்திரங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா

காமெடி, குணச்சித்திரம்,வில்லி என வெளுத்து வாங்கிய நடிகை
சிவாஜியின் வாயால் பாராட்டு பெற்றவர் இவர்.

ஆம் வியட்னாம் வீடு நாடகத்தில் சிவாஜியின் மனைவி வேடமேற்றது இவரே...

நம்ம வீட்டு தெய்வத்தில் சி.கே.சரஸ்வதியுடன் சேர்ந்து கே.ஆர்.விஜயாவை கொடுமைப் படுத்தும் வேடம்
அருமையாக செய்திருப்பார்

அதே போல் நவக்கிரகத்தில் முத்துராமனின் முதல் மனைவி .. நல்ல நடிப்பு

கன்னிப்பெண் - இதில் ஜெய்சங்கருக்கு அம்மா வேடம் -- நல்ல நடிப்பு

இதயவீணை - இது தான் இவர் நடித்த கடைசி படம்

ஏனோ இவரை சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை.

ஆனாலும் கொடுத்த பாத்திரத்தில் முத்திரை பதித்தவர் இவர்

மந்திரி குமாரியில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக வந்தவர் இவரே(ஆஹாஹா வாழ்விலே பாடல் ஞாபகம் வருகிறதா)

ராஜ்

gragavan
04-01-2005, 11:52 AM
Originally posted by rajeshkrv@Dec 22 2004, 01:05 PM
28. ரமாபிரபா ..

வெண்ணிலா முற்றத்திலே வேணுகானம் பாடல் நினைவுக்கு வரவேண்டுமே..
அதே போல் "குட்மார்னிங் சிஸ்டர்" என இருளும் ஒளியும் படத்தில் வரும் காட்சி ஞாபகம் வரவேண்டுமே..

ரமாபிரபா மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர். அதிலும் நீங்கள் குறிப்பிட்ட இருளும் ஒளியும் திரைப்படம். அதில் சிறப்பாக நடித்தது ரமாபிரபா என்றால் மிகையாகாது. ரங்காராவும் படத்தில் இருப்பார். ஆனால் ரமாபிரபா அவரை எளிதாக தூக்கிச் சாப்பிட்டு விடுவார். அந்தப் படத்தில் பல காட்சிகளில் கண் கலங்க வைத்த நல்ல நடிகை. அவரை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
10-01-2005, 07:14 AM
30. ஸ்ரீப்ரியா

தேரோட்டம் படம் மூலம் அறிமுகமான இவர் திரையுலகின் முன்னனி நாயகியாக சுமார் 6-7 வருடங்கள் திகழ்ந்தார்.

கமலுடன் இவரும் , ஸ்ரீதேவியும் தான் நிறைய படங்கள் ஜோடி சேர்ந்தனர்.
கமல் தவிர, ரஜினி, சிவாஜி,எம்.ஜி.ஆர்.ஜெய்சங்கர்,சிவகுமார் என எல்லோருடனும் நடித்தவர் இவர்.

எந்த கதாப்பாத்திரமானாலும் அதை எதார்த்தமாக செய்பவர் இவர்.

அவரது நடிப்பு சிறப்பாக அமைந்த படங்களில் சில இதோ

மோகம் முப்பது வருஷம்

ஆட்டுக்கார அலமேலு - தேவர் பிலிம்ஸ் ஆட்டுக்கார அலமேலுவில் இவரது நடிப்பு பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது.

நவரத்தினம் - எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். பேர் சொல்லும் பாத்திரம் இவருக்கு

ஆடுபுலி ஆட்டம்-

பாலாபிஷேகம் - இதில் ஜெய்சங்கரை மணந்து அவரது சித்தியை அடக்கும் வேடம் தூள் கிளப்பியிருப்பார்

இளமை ஊஞ்சல் ஆடுகிறது - ஸ்ரீதரின் இயக்கத்தில் பிரதான வேடம் - காதலனா, நிச்சயம் செய்யப்பட்டவனா என்ற கேள்விக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் வேடம்

அவள் அப்படித்தான் - இவரது சிறந்த நடிப்பை கொண்ட படம். ருத்ரைய்யாவின் இந்த படத்தில் கமல்,ரஜினி இருந்தாலும் நடிப்பில் முன்னோடி இவர் தான்

நீயா - இன்றும் நாம் இந்த படத்தை ரசிப்பதற்கு பல காரணம் அதில் ஒன்று இவர்

அன்னை ஓர் ஆலயம் - தேவர் பிலிம்ஸ் ரஜினி கூட்டணி -- நதியோரம் நாணம் கொண்டு இவர் ஆடியதை மறக்க முடியுமா

திரிசூலம் - சிவாஜி 3 வேடங்கள் செய்த படம் இளைய சிவாஜிக்கு இணை இவர்.


நட்சத்திரம் - இவரது 100வது படம் இதை இவரே தயாரித்தார். சிறந்த நடிப்பு

சிம்லா ஸ்பெஷலில் கமலுக்கு ஈடுகொடுத்து காமெடியில் பின்னியெடுத்திருப்பார்

வாழ்வே மாயம் - தைரியமாக செக்ஸ் வொர்கர் வேடமேற்றார்.. அந்த வாழ்வே மாயம் பாடலில் கண்களாலேயே நடிப்பை வழங்கியிருப்பார்

தனிக்காட்டு ராஜாவில் ரஜினிக்கு சந்தர்ப்பவசத்தால் மனைவியாவார்.. அதிலும் நல்ல நடிப்பு

நினைவுகளில் கார்திக்குக்கு அண்ணியாக வந்து நம்மை அசத்துவார்

எனக்குள் ஒருவன் - கதையே இவரை சுற்றித்தான் வரும் - தேர் கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி தோழி என இவர் கேட்பது நம் காதில் விழாமலா இருக்கும்.

இவருக்கு கலைமாமணி கூட வழங்காதது வருத்தத்திற்குரிய விஷயமே..

எல்லா வேடமும் பொருந்தும், அதே போல் எல்லா உடைகளும் பொருந்தும்

தமிழ்த்திரையுலகில் 70'ன் கடைசியிலிருந்து 80'களின் ஆரம்பம் வரை இவரது கொடியே பறந்தது

ராஜ்

mythili
10-01-2005, 07:36 AM
ஸ்ரீ ப்ரியா அவர்களின் நட்சத்திரம் படத்தில் வரும் ஒரு பாடல்..."அவள் ஒரு மேனகை..என் அபிமான தாரகை..." மிகவும் பிடித்த பாடல்.

வாழ்வே மாயம் படத்தில் சிறு ரோலாக இருந்தாலும்...வாழ்வே மாயம் பாடலில் கமலுடன் சேர்ந்து அவரது நடிப்பும் அருமை. :-)

நன்றி ராஜேஷ்.

அன்புடன்,
மைதிலி

pradeepkt
10-01-2005, 07:57 AM
அவள் அப்படித்தானிலிருந்து "சின்னப்பாப்பா பெரியபாப்பா" வரையிலான இவரது நடிப்பு சாம்ராஜ்யம் மிகப் பெரிது.

அன்புடன்,
பிரதீப்

aren
12-01-2005, 06:33 AM
அவள் அப்படித்தான் படத்தில், ஆபீஸில் வேலை செய்யும் "பாய்" ஸ்ரீபிரியாவின் இடுப்பிலிருந்து ஒரு கையை எடுக்காமலேயே மறு கையால் வேறு வேலை செய்வதைப் பார்த்து ஸ்ரீபிரியா கடுப்பாகி, அக்கா மேலே கண்ட இடத்திலெல்லாம் கை வைக்கக்கூடாது என்று ஸ்ரீபிரியா பேசும் இடம் ஒரு பெரிய "பஞ்ச்"

அதேபோல் ரஜினி கமலிடம் ஸ்ரீபிரியா அதாவது "மஞ்சு" பற்றி பேசும் பொழுது தியேட்டரே கை தட்டும்.

அவள் அப்படித்தான் சென்னையில் பெரும் வரவேற்பை பெற்றதற்கு ஸ்ரீபிரியா ஒரு முதன்மை காரணம். ரஜியையும், கமலையும் தூக்கிசாப்பிட்டு விடும் கதாபாத்திரம் அவருக்கு அந்தப்படத்தில்.

ஒரு சிறந்த தமிழ் நடிகை. தமிழித்திரையுலகில் ஸ்ரீதேவியுடன் போட்டி போட்டு நடித்த நடிகை.

இவர் நட்சத்திரம், நீயா போன்ற படங்களை தன் தாயுடன் சேர்ந்து தயாரித்தார். இவர் இப்பொழுது சன் டிவியில் விக்ரமாதித்தன் என்ற தொடரை தயாரித்து இயக்கி வருகிறார்.

இப்பொழுது லதாவின் தம்பி ராஜ்குமார் அவர்களை மனம் செய்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். இது உண்மையா என்பது தெரியாது.

rajeshkrv
24-01-2005, 10:05 AM
31. ஜெய்சித்ரா

இவரை அவ்வளவு சுலபத்தில் மறக்கமுடியுமா என்ன..
1972'ல் தனது படமான குறத்தி மகனுக்கு புதுமுகம் தேடிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவரை கண்டு பிடித்து அறிமுகம் செய்தார். பின் ஏறுமுகம் தான்.

இவர் ஒரு சீன் வந்தாலும் அதை பற்றி பேச வைக்கும் திறன் படைத்தவர். சுஜாதா பற்றி பேசும் பொழுது டயலாக் டெலிவரி பற்றி பேசியிருந்தேன்.. இது இவருக்கும் பொருந்தும். பட படவென இவர் வரும் காட்சியில் மின்னல் அடிக்கும் .. நச்சென்று பேசுவார். அந்த காலத்தில் நச்சென்றும் இருந்தார்.

களையான முகம், நல்ல குரல் , துறு துறு முகபாவம் என தமிழ் திரையுலகின் அந்த நாள் ஜோதிகா
என்றால் தப்பில்லை என நினைக்கிறேன்..

மள மள என எல்லோருடனும் நடிக்கும் வாய்ப்பு, நவரத்னத்தில் எம்.ஜி.ஆரோடு அவரை கிண்டல் செய்யும் காட்சியிலெல்லாம் நன்றாக நடித்திருப்பார்.

இவரது 100வது படமான நாயக்கரின் மகளிலும் இவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும்.

பாலசந்தரின் படங்களின் இவரது நடிப்பு மேலும் நன்றாக இருக்கும்

எனக்கு பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் நடித்த வெற்றிப்படங்கள் சில இதோ

குறத்தி மகன்
பாரதவிலாஸ் - சிவாஜியின் மகளாக வருவார்
சொல்லத்தான் நினைக்கிறேன் - கடைசி தங்கையாக வந்து சிவகுமாரை காதலிப்பார். அப்பா பட பட என இவர் பேசும் விதம் நம்மை வியக்க வைக்கும். அதே சமயம் கமலை திருத்த அவனிடம் தன்னை இழந்த பின் இவரது நடிப்பு ஷொட்!!

பொன்னுக்கு தங்க மனசு - தேன் சிந்துதே வானம் மறக்கமுடியுமா
பாத பூஜை - ஜெயாவுடன் நடித்திருப்பார் - கண்ணாடி அம்மா உன் இதயம் நல்ல பாடல்
உங்கள் விருப்பம்
கலியுக கண்ணன்
வெள்ளிக்கிழமை விரதம் - பாம்பின் மேல் கொண்ட பக்தி ஒரு பக்கம் கணவன் மேல் கொண்ட பாசம் ஒருபக்கம் என பின்னி எடுத்திருப்பார்

சினிமா பைத்தியம் - சினிமா நிஜம் என நம்பி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளும்
கதாப்பாத்திரம் இதில் இவரது நடிப்பு அருமை

குமார விஜயம் - கன்னி ராசி என் ராசி பாடல் ஞாபகம் வருகிறதா

சத்தியம் - இதில் மிகச்சிறந்த நடிப்பு இவருடையது.

ஆதிபராசக்தி - இதில் அந்த நடனக்காட்சியை மறக்க முடியாது

இளமை ஊஞ்சல் ஆடுகிறது - இளம் விதவை வேடம் கமல் மீது ஒருவித பார்வை வீசுவாரே மயங்காதார் மனம் யாவும் மயங்கும்

அக்னி நட்சத்திரம் - கார்த்திக்கின் அம்மா வேடம் .. இரண்டாவது மனைவி என்றாலும் பிள்ளைக்கும் தகப்பனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இவர் படும் பாடு அப்பப்பா...

புதுப்புது அர்த்தங்கள் - தொங்கனா கொடுக்கா என தெலுங்கு மொழி பேசிக்கொண்டு கீதாவின் தாயாக வரும் இவர் விவேக் இவரை மன்னிப்புக்கேட்க சொல்லும் இடத்தில் அருமையாக நடித்திருப்பார்
"அண்ணா செப்பு அண்ணா செப்பு" என விவேக் சொல்ல " மன்னிச்சுக்கங்கண்ணா என இவர் கூறும் முகபாவம் அருமை"

மூன்று நாயகர்களின் நாயகியாக விளங்கினார்(சிவகுமார், ஜெய்சங்கர், கமல்)

ஜெய்சித்ரா என்றும் ஜெயித்த சித்ரா தான்

ராஜ்

gragavan
24-01-2005, 11:28 AM
இவரொரு சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை. சத்தியம் படத்தை மறக்க முடியுமா? நடிகர் திலகமும் கமலும் இருக்கும் அந்தப் படத்தில் இவரும் நடிகர் திலகமும் வரும் காட்சிகளிலெல்லாம் இவரே முன்னிற்பார். தன்னால் தான் பார்க்க வளர்ந்த பெண்ணின் வாழ்வு பாழானதே என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் திலகம் கூனிக் குறுக, அவரை விட்டுக் கொடுக்காமலும் அதே நேரத்தில் உணர்களை அழகாக வெளிப்படுத்தியும் நடித்திருப்பார் ஜெய்சித்ரா. மிகவும் சிறந்த நடிப்பு.

ஆதிபராசக்தியில் இவர் நடித்திருக்கிறாரா என்ன? எந்தக் கதையில் வருகிறார்? இவரைப் பார்த்த நினைவில்லையே!

அன்புடன்,
கோ.இராகவன்