PDA

View Full Version : குண்டு ஒண்ணு வெச்சிருக்கோம் (மூன்று வாரத் தொடர் - வாரம்: 1) by ஆர். தர்மராஜன்



hypergraph
03-06-2017, 03:04 AM
மூன்று வாரத் தொடர்
வாரம் ஒன்று



குண்டு ஒண்ணு வெச்சிருக்கோம்



ஆர். தர்மராஜன்


இரவு மணி பதினொன்று. மேகங்களின் முற்றுக்கையால் மங்கிப்போயிருந்தது நிலா வெளிச்சம்.

நிசப்தம் சூழ்ந்திருந்தது. ஆள் நடமாட்டமற்று இருந்த அந்த சாலையில் ஒரு இடத்தில் வந்து நின்றது ஒரு ஜீப்.

பின் கதவைத் திறந்துக்கொண்டு இரண்டு ஆண்கள் இறங்கினர். சராசரி உயரம்... திடமான

உடல்வாக்கு. ஆளுக்கு ஒரு ரெக்சின் பையைப் பிடித்திருந்தனர். கதவைச் சத்தமின்றி

சாத்திவிட்டு டிரைவர் கதவுக்கு வந்து நின்றனர்.


கதவின் கண்ணாடியை இறக்கிவிட்ட டிரைவர் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். “இது உங்க

ரெண்டு பேருக்கும் முதல் அசைன்மென்ட். சொதப்பிட்டாதீங்க.”


“மாட்டோம்,” என்றார்கள் இருவரும், தாழ்ந்த குரல்களில்.


“நம்ம இயக்கத்தால எங்கெல்லாம் ஊடுருவிப்போக முடியும்னு... நாம இந்த அரசாங்கத்துக்குக்

காட்டணும்,” என்றான் டிரைவர், முன் கண்ணாடி வழியே இருட்டை வெறித்தபடி. “அதுக்குத்தான்

கிராமங்களைக் குறி வெச்சிருக்கோம். இது முதல் குறி.”


“இது என்ன கிராமம்?”


“பேரு பனிவயல். இதோ தெரியுதே இந்தப் பிரிவு... இதுல கொஞ்ச தூரம் நடந்தா கிராமம் வரும்.”


“எவ்வளவு பேரு இந்த கிராமத்துல?”


“தெரியலை... ஆனா அது முக்கியமில்லை,” என்றான் டிரைவர். “நீங்க போய்ப் பாத்து... வேலையை

முடிக்கணும்.”


“முடுச்சிடறோம். உங்கள மறுபடியும்...”


“நான் பக்கத்து டவுனுக்குப் போயிடறேன். வேலை முடிஞ்சதும் ஒரு மிஸ்டு கால் குடுங்க. வந்து இதே

ஸ்பாட்ல உங்கள பிக்-அப் பண்ணிக்கறேன்.”


“ஓகே.”


“ஞாபகம் இருக்கட்டும்... விடியறத்துக்கு முன்னாடி நாம இங்கிருந்து ரொம்ப தூரம் போயிருக்கணும்.”


“தெரியும். நாங்க ரெண்டு மணி நேரத்துக்கு மேலே எடுத்துக்க மாட்டோம்.”


டிரைவர் ஜீப்பைக் கிளப்பிக்கொண்டு போனான். இந்த இருவரும் ஆளுக்கு ஒரு டார்ச்லைட்டை

எடுத்துக்கொண்டனர்.


‘பனிவயல் 2 கி. மீ.‘ என்ற சாலையோர பலகை டார்ச் வெளிச்சத்தில் தெரிந்தது. அது காட்டிய திசை

ஒரு குறுகிய தார் ரோடு. வெளிச்சத்தை வீசிக்கொண்டு நடந்தார்கள். ரோடு அங்கங்கே வளைந்து

பின் நிமிர்ந்து போனது. இரண்டு பக்கமும் வயல பரப்பு.


“ஜோ,” என்றான் முன்னே நடந்துகொண்டிருந்தவன்... மெல்லிய குரலில்.


“ம்?”


“எங்க வெக்கலாம்னு ஐடியா பண்ணிட்டியா?”


“கிராமத்தையே நாம இனியும் பாக்கலியே, பாபு.”


“பாத்து அளவெடுக்கறதுக்கெல்லாம் நேரமில்லை. இப்பவே யோசனை பண்ணி வெச்சுக்கணும்.”


“சரி. கிராமம்னா கோவிலோ சர்ச்சோ இருக்கும். அங்கே வெச்சுடலாமா?”


“அதக் கண்டுபிடிக்க நேரமாயிட்டா?”


“கோவில்னா கொடிமரம்… சர்ச்சுனா கூரையில சிலுவை… இப்படி அடையாளம் இருக்குமே.”


“முதல்ல அது எங்கன்னு தெரியணும், ஜோ. ஒருவேளை அது உள்ளே… ரொம்பத் தள்ளியிருந்தா?”


“கிராம எல்லையில காளி கோவில் இருக்காது?”


“ம். ஆனா சில எல்லைக் கோவில்கள்ல காளி சிலை மட்டுந்தான் இருக்கும். அங்க வெடிக்க

வெச்சா பெரிய அளவில டேமேஜ் பண்ண முடியாமப் போயிடும்.”


“சரி …உன்னோட யோசனை என்ன சொல்லு.”


“முதல்ல எந்த பெரிய கட்டடம் தெம்படுதோ… அதுல வெச்சுடுவோம்.”


“அது ஒரு வீடா இருந்தாக்கூடவா?”


அதற்கு பாபு பதில் சொல்லவில்லை. சட்டென்று நின்றான். அதைக் கவனித்த ஜோவும் நின்றான்.

(...தொடரும்)
______________________________________________________________________________________________