PDA

View Full Version : உழைத்து உண்



M.Jagadeesan
25-09-2015, 06:36 AM
ஒரு கழுகு , தன் குஞ்சுடன் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது .

" அம்மா ! ரொம்பத் தாகமா இருக்கு ! குடிக்கத் தண்ணி வேணும் ! " என்றது குஞ்சு .

" கொஞ்சம் பொறு ! தண்ணி எங்கே இருக்குதுன்னு பார்க்கிறேன் ! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......அதோ ! அந்த வீட்டின் கொல்லைப் புறத்திலே உள்ள ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் உள்ளது ! வா ! நாம் போய்க் குடிக்கலாம் ! " என்றது தாய்க் கழுகு .


கழுகும் ,குஞ்சும் பறந்து வந்து அந்தப் பானையின் விளிம்பின் மீது அமர்ந்தன !

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது . அது கழுகுக்கும் ,அதன் குஞ்சுக்கும் எட்டவில்லை .

" அம்மா ! தண்ணி எனக்கு எட்டலையம்மா ! " என்று சொல்லி அழுதது கழுகுக் குஞ்சு .

" கவலைப் படாதே ! ஏதாவது ஒரு வழி பிறக்கும் . அதுவரையில் அந்த மரத்தின் கிளை மீது உட்கார்ந்திருப்போம் ; வா ! " என்று சொல்லி தன் குஞ்சுடன் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளை மீது அமர்ந்தது கழுகு .

சிறிது நேரம் சென்றது . அப்போது அங்கு ஒரு காகம் வந்தது . அதுவும் தண்ணீரைத் தேடி அலைந்து களைத்திருந்தது . பானையின் மேலே ஏறி நின்று பார்த்தது .

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டு , மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது . ஆனால் பாவம் ! காகத்திற்கும் தண்ணீர் எட்டவில்லை .

தண்ணீர் எட்டவில்லையே என்று காகம் வருத்தப்படவில்லை . அங்குமிங்கும் பார்த்தது . பானைக்குப் பக்கத்தில் கொஞ்சம் கூழாங்கற்கள் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தது . உடனே செயலில் இறங்கியது . ஒவ்வொரு கல்லாக எடுத்து வந்து பானைக்குள் போட்டது . தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது . தண்ணீர் பானையின் விளிம்பைத் தொட்டவுடன் , காகம் , மகிழ்வோடு நீரைக் குடிக்க ஆரம்பித்தது .

இந்த தருணத்திற்காகத்தான் கழுகு காத்திருந்தது. மரத்தின் கிளையிலிருந்து சரேலெனக் காக்கையின் மீது பாய்ந்தது . இதைச் சற்றும் எதிர்பாராத காக்கைத் தப்பித்தோம் , பிழைத்தோம் என்று பறந்து மறைந்தது . கழுகு ஆசைதீரத் தண்ணீரைக் குடித்தது . தன் குஞ்சையும் தண்ணீர் அருந்தக் கூப்பிட்டது . குஞ்சு, பறந்துவந்து தாயின் அருகில் அமர்ந்தது. நீர் அருந்தாமல் தாய்க் கழுகையே பார்த்துக் கொண்டிருந்தது .

" ஏன் சும்மா இருக்கிறாய் ? தண்ணீரைக் குடி !"

" அம்மா ! அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா ! அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் ! அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம் . " என்றது கழுகுக் குஞ்சு .

" ஏய் மூடனே ! பேசாமல் தண்ணீரைக் குடி ; தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் தேனை ,மனிதன் திருடி உண்கிறான் . தன் கன்றுக்காகப் பசு சேமித்து வைத்திருக்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான் . அதெல்லாம் தவறு இல்லையென்றால் ,இதுவும் தவறு இல்லை . பிழைக்கின்ற வழியைப் பார் ! பேசாமல் தண்ணீரைக் குடி! " என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .


தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவச்சம் - 1065 )

பொருள் :
=======

தெளிந்த நீர்போல சமைத்த கூழே ஆயினும் , தம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை .
.

முரளி
25-09-2015, 04:41 PM
அருமையாக சொல்லப்பட்ட கதை. வாழ்க்கைக்கு அவசியம்.

முரளி
25-09-2015, 04:43 PM
ஆயினும், மையக் கருத்து கழுகின் குணத்திற்கு தோதாக இருந்தாலும், மனிதனை " வாழ வழியில்லையென்றால், அதர்ம வழியில் போ ! " என்று தவறான வழிக்கு இட்டுச்செல்லும் அறிவுரையோ ? இன்னொன்றும் நோக்குகிறேன், குரள் சொல்லும் கருத்துக்கு கொஞ்சம் ஒவ்வாத போல் தொன்றுகிறது, கதை முடிவு. தங்கள் கதைகளில் பொதுவாக நான் " poetic justice" காண்பது வழக்கம். அது இக்கதையில் காணக் கிடைக்க வில்லையே. !

இன்றைய கால மனிதன் அடித்து பிழைத்தாக வேண்டும் என்பது உண்மையே. ! உண்மையை உரைக்க சொன்னதும் சரியே ! Motivational , Inspirational என்ற பெயரில் கவைக்குதவாத கருத்துக்களை கேட்டு அலுத்து தான் விட்டது ! வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

M.Jagadeesan
25-09-2015, 05:06 PM
இந்தக் கதையைப் பொருத்தவரையில் கழுகுக் குஞ்சுதான் கதாநாயகன் . அது கடைசி வரையில் நீரைக் குடிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது . தாய்க் கழுகு வற்புறுத்தியும் , அது நீரைக் குடிக்கவில்லை . ஒரு நீதியை இரண்டு வழியில் சொல்லலாம் . ஒன்று POSITIVE APPROACH மற்றொன்று NEGATIVE APPROACH . இது இரண்டாம் வகையைச் சார்ந்தது .

கும்பகோணத்துப்பிள்ளை
27-09-2015, 11:29 AM
அடித்து சாப்பிடுவது கழுகின் குணம் அதன் நீயாயம்... சிபி சக்கரவர்த்தியால் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாயம் எனவேதான் ஈடாக சதையையறுத்து கொடுக்கிறான்!
ஆனால் தன் இனத்தை தானே அடித்து பிழைப்பது மனித நியதியாகிவிட்டது!
உழைப்பு திருடர்கள் நிறைந்தாகவே இருக்கிறது இவ்வுலகம்
உலகவியல் நடைமுறையை உணர்திய கதை வாழ்த்துகள் ஜயா!

Keelai Naadaan
03-10-2015, 06:05 PM
மகாபாரதத்திலும் பஞ்ச தந்திர கதைகளிலும் விலங்குகளும் பறவைகளும் பேசுவதாக நீதிக்கதைகள் சொல்லப்படிருக்கின்றன.

அது போல சொல்லப்பட்ட நல்ல ரசிக்கும் படியாக அமைந்த கதை. பாராட்டுக்கள் ஐயா.

ஆனாலும்,


" அம்மா ! அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா ! அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் ! அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம் . " என்றது கழுகுக் குஞ்சு .



என்பதோடு முடித்திருந்தால் கதை குறளுக்கு ஏற்ப அமைந்திருக்கும் என எண்ண தோன்றுகிறது.

aren
01-10-2019, 03:51 AM
நல்ல படிப்பினை