PDA

View Full Version : பாரந்தாங்கி - by முரளி



முரளி
14-09-2013, 02:52 PM
என் பெயர் கலா. என் கணவர் செந்தில் எனது அருகில், ஆதுரமாக. நான் ஆஸ்பத்திரியில் .

அலை அலையாக எண்ண ஓட்டங்கள். கண்ணை மூடிக் கொண்டேன்.

எனக்கு பிரசவ வலி எடுத்து விட்டது. மயக்கமாக இருந்தது, நினைவும் தப்ப ஆரம்பித்தது. ஒரே கும்மிருட்டு.

குழந்தை பிறந்து விட்டது. இதுவரை என்னுள்ளே இருந்த குட்டி கண்ணன், இப்போ வெளியே. அப்பப்பா. ஒரே அழுகை. என் மடியிலேதான் எப்போதும். எல்லாவற்றிற்கும் நான் வேணும் அவனுக்கு. தாங்கவில்லை அவன் ஆர்பாட்டம்.

கண்ணனுக்கு ஒரு வயது. இதுவரை என்னையே ஒட்டி இருந்த குழந்தை, இப்போது நடக்கிறது. தத்தி தத்தி. என்னை விட்டு, வாசலை நோக்கி. வெளியே உலகத்தை பார்க்க.

கண்ணனுக்கு வயது ஐந்து. இப்போ அவனுக்கு வெளியிலேதான் விளையாட்டு. எல்லாத்துக்கும் ஒரு அழுகை. என்னோட விளையாட அவனுக்கு நேரமில்லை. விருப்பமுமில்லை.

கண்ணனுக்கு பதினைந்து வயது. என் பக்கத்திலே தான் இருக்கிறான். ஆனால், என் கிட்டே பாடம் கேக்க விருப்பமில்லே. “போம்மா உனக்கு ஒண்ணும் தெரியாது. நானே படிச்சிகிறேம்மா”. என்னை விட்டு விலகரானோ? ரொம்ப நாளாவே அவனுக்கு தனி அறைதான்.

ஆயிடுத்து 20 வயது கண்ணனுக்கும்.இப்போ அவனுக்கு நானே வேண்டாம். அவன் அறைக்குப் போனாலே, “என்னம்மா வேணும்? கதவை தட்டிட்டு வரக்கூடாது?” அதட்டறான். அவன் உலகமே வேறே. இப்போ என் அருகாமையும் அவனுக்கு தேவையில்லை. அவனுக்கு இப்போ நான் பணம்காயிச்சி மரம் மட்டுமே. நான் வெறும் பாரந்தாங்கி.

முப்பது வயது கண்ணனுக்கு. நானும் என் கணவரும் பாடு பட்டு, கடன் வாங்கி படிக்க வெச்சோம். நல்ல வேலை. நல்ல இடத்திலே கல்யாணமும் பண்ணி வெச்சோம். இப்போ அவனுக்கு நாங்க இடைஞ்சல். சொல்லிட்டு, தனிக் குடித்தனம் போயிட்டான். இப்போ நான் அவனுக்கு சுவையற்ற சுமை.

எனக்கு வயது அறுபத்தைந்து. இப்போ காசு பணம் எங்ககிட்டே இல்லை. எல்லாம் கண்ணன் படிப்புக்கு, அவன் வீடு வாங்க செலவாயிடுத்து. கண்ணனும் இப்போ அருகில் இல்லை. எனக்கு கான்சர். எங்களுக்கு முதியோர் இல்லம் வாசம். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. கண்ணன் என்னைக் கண்டு கொள்வதே இல்லை. கிட்டே வந்தா ஒட்டிப்பேனோன்னு பயம். இதுக்காகவா இவனை இவ்வளவு பாடு பட்டு பெத்தேன்? வளர்த்தேன்? சே! என்ன வாழ்க்கை இது? இப்போ நான் அவனுக்கு வெறும் பாரம்


****

“கலா ! கலா! கண்ணை விழிச்சுப்பாரு. மெதுவா! மெதுவா! எழுந்திரு!” – செந்தில்.

“இப்போ நான் எங்கே இருக்கேன்? டாக்டர் என்ன சொல்லறாங்க?”

“மனசை திடப் படுத்திக்கோ கலா!. இப்போதான் நீ தைரியமா இருக்கணும்”

“என்ன சொல்றீங்க?”

“எல்லாம் முடிஞ்சு போச்சும்மா! நான் பயந்தா மாதிரியே உனக்கு குறைப் பிரசவமாயிடுச்சு. நீ பொழச்சதே பெரிய விஷயமாம்.”

“பரவாயில்லேங்க! நீங்க இருக்கீங்களே, அதுவே போதும். குழந்தை யில்லேன்னா என்ன?”

“என்னம்மா சொல்றே?”

“எப்படியிருந்தாலும், நம்மை விட்டு அவனோ அல்லது அவளோ, மிஞ்சிப் போனால் இருவது வருஷம்தான் கூட இருப்பாங்க. இதிலேயும் கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டு தூர விலகுவாங்க. அப்புறம் ஒரேயடியா விட்டுட்டு போயிடுவாங்க. இதெல்லாம் நமக்கு தேவையேயில்லை. அப்போ போறதை இப்போவே போயிட்டான்னு நினைச்சிக்கிறேன்.”

“ஐயோ! டாக்டர். இங்கே பாருங்க. என் மனைவி என்னன்னமோ பேசறா? பயமா இருக்கு!”

கூட இருந்து கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் சொன்னார். “இல்லே! இல்லே! செந்தில். உங்க மனைவி ரொம்ப நார்மல். இப்போ நீங்க அவங்களுக்கு ஆறுதலா இருந்தா அதுவே போதும். நீங்கதான் நொடிந்து போகக் கூடாது.”

“என்ன சொல்றீங்க டாக்டர் ?”

“அவங்க ரொம்ப திடமான மனமுடயவங்க. ஏற்கெனவே அவங்களுக்கு தன் உடல் பிரச்னை தெரியும். ப்ளசண்டா கோளாறும் இருக்கறதாலே, குழந்தை இறந்தே பிறக்கும் அபாயம் இருக்குன்னு நல்லாவே தெரியும். என் கூட பேசியிருக்காங்க. மன ரீதியா தனக்கு ஏற்படக்கூடிய சோகத்தை தாங்க, தன்னை தானே அவங்க தயார் படுத்திக் கிட்டாங்க. துயரத்தை தன் வழியிலே ஒப்புக்கிட்டாங்க.”

ஒரு வேளை டாக்டர் சொல்லறது நிஜமா இருக்குமோ! குழந்தை பாக்கியம் எனக்கில்லைன்னு தெரிந்து, இல்லாத பிள்ளை மேல் , என்னை அறியாமல் வெறுப்பை வளர்த்துக் கிட்டேனோ? சீ !சீ ! இந்த பழம் புளிக்கும் மாதிரி என்னை நானே சமாதானப் படுத்திக்கிறேனோ? தெரியலை. ஒண்ணு மட்டும் நிச்சயம். இடிந்து போறதாலே எந்த லாபமும் இல்லை. இருக்கிற வரைக்கும் செந்திலோட ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கப் போறேன். அவருக்கு ஆதரவா இருக்கணும். இந்த சோகத்தை சேர்ந்து தான் எதிர்கொள்ளணும்.

“செந்தில், எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க? சீக்கிரமே வீட்டுக்கு போலாம். இந்த ஆஸ்பத்திரி வாடையே பிடிக்கலே.”- புடவையை எடுத்து இழுத்துக் கட்டிக்கொண்டேன்.

இனி என் கணவன், குழந்தை எல்லாமே செந்தில் தானே. அவருக்கு நான்தானே எல்லாம். தேவைப்பட்டால், தத்து எடுத்துக் கொள்வோம்.

**** முற்றும்

கீதம்
16-09-2013, 12:11 AM
கதையில் குறிப்பிடப்பட்டது போல் 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' கதைதான்.

மனம் தன்னைத்தானே தன் துயரங்களின் பாரந்தாங்கியாய் உருவகித்துக்கொள்கிறது. இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைக் காட்டிலும் இருப்பதைக் கொண்டே திருப்தியுறக் கற்றுக்கொடுக்கிறது காலம்.

எத்தனை சமாதானங்களைச் சொன்னாலும் உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய ஏக்கமொன்று சுழன்றாடியபடியே வாழ்நாளைக் கடத்தும் என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.

பாரந்தாங்கி மனத்தில் பாரமேற்றும் கதைக்கரு. பாராட்டுகள் முரளி ஐயா.

சிவா.ஜி
16-09-2013, 05:43 AM
வித்தியாசமான கதை....ஆனால் ஏனோ மனதை ஈர்க்கவில்லை. எதிர்மறை சிந்தனையால் கோர்க்கப்பட்டது காரணமாய் இருக்குமோ...!!!

முரளி
16-09-2013, 06:12 AM
நன்றி சிவா.ஜி. உங்கள் கருத்து சரியானதே. நாம் எப்போதும் விரும்புவது சந்தோஷம் தான்.. துக்கம் வேண்டாம்தான். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பதே நல்லது.

ஆனால், வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் கலந்து வருவதே. எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் நம்மிடையே வித்தியாசம் வரக்கூடும்.

துன்பம் நேர்கையில் மனம் தன்னைத்தானே தயார் செய்துகொள்கிறது. சிலர், தற்கொலை முயற்சி. சிலர் மனது பேதலித்து விடும். (shut off from reality) சிலர் டிப்ரேஷன், சிலர் குடி , போதை போன்ற வழக்கம். ஆனால், சிலர், தன்னை திடப் படுத்திக் கொண்டு வாழ முயற்சிப்பார்.

ஒருவருக்கொருவர் இது வேறுபடுகிறது. அவரது மன நிலைக்கேற்ப. அதை சொல்லவே இந்த கதையை எடுத்துக் கொண்டேன்.

இதில் , கலா தன்னை திடப் படுத்திக் கொள்ள ஒரு நெகடிவ் எண்ணத்தை வளர்த்துக் கொண்டாள்.

வள்ளுவர் கூறுவதை இங்கே சொல்ல விழைகிறேன்.

இடுக்கண் அழியாமை

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

DR. எலிசபெத் குப்ளர் ராஸ், சாவை எதிர்கொள்ளும் ஐந்து நிலைகளை விவரிக்கிறார். இறப்பவராகட்டும் , தாய்மை எதிர்பார்த்து குறைப் பிரசவத்தில் சேயை இழந்த அம்மாவாகட்டும் தனக்கு வேண்டியவரை இழந்தவராகட்டும், அம்மா வை இழந்த குழந்தையாகட்டும், இது பொருந்தும் என சொல்கிறார்கள். ( நன்றி : On Death and Dying).

மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, துயரத்தை ஒப்புக்கொள்ளுதல் (சாவை எதிர்நோக்குதல் அல்லது வாழ தொடங்குதல்) என 5 வகையாக நிலைகளை DR. ராஸ் பிரிக்கிறார். இந்த ஐந்தும் அந்த வரிசையில் வரவேண்டும் என இல்லையாம். இதில், கலா ஐந்தாவது நிலையை எட்டிவிட்டார். அதற்கு அவரை அறியாமல், அவர் கொண்ட வழி 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' பாணியே.

மேலும் விவரங்களுக்கு

http://en.wikipedia.org/wiki/K%C3%BCbler-Ross_model

மும்பை நாதன்
16-09-2013, 04:31 PM
முரளி, கதையை படித்த போது ஏற்பட்ட திருப்தியை விட, உங்கள் பின்னூட்டத்தை படித்த போது எனக்கு அதிக மன நிறைவு ஏற்பட்டது.

ஒரு கதையை படைப்பதற்கு முன்னால் எந்த அளவுக்கு தகவல்களை திரட்டி அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதை மிக நன்றாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

படைப்புக்கு நன்றி.

மும்பை நாதன்

முரளி
24-12-2015, 07:30 AM
நன்றி மும்பை நாதன் !

Keelai Naadaan
02-01-2016, 12:28 PM
சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' பாணி என இருந்தாலும் நிதர்சனமான உண்மைகள் மனதை உறுத்துகிறது.

முரளி
03-01-2016, 05:54 AM
நன்றி கீழை நாடான் !