PDA

View Full Version : காற்றின் கருவை கொண்டவளே



ந.க
08-11-2012, 04:53 PM
காற்றின் கருவை கொண்டவளே
http://2.bp.blogspot.com/-CM8ukCO1Chg/UJNwTTGfzdI/AAAAAAAAAf0/gMjZq_K6ayQ/s320/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE.jpg



திம்மாக்கா
நீ திக்கம்மா
வெட்ட வெளியாய் வெறிச்சோடிய ஊருக்கு

தோலைப் புண்ணாக்கும்
வெயில் ஊசியின்
அனல் முனையில்
காற்று கருனை அற்று
மலட்டுப் பூமியில் முள்ளாய்க் கிடக்க

மரம் கண்டால்
மண் மலரும்
மனிதர் மகிழ்வார்

ஊருக்கு உன் போல்
ஒரு பெண் போதுமே

உலகெங்கும் தன உயிரைப் பயிராக்கும்
ஒரு பெண்ணில்லையே
ஒருவருக்குப் பால் கொடுக்க ஒரு தாய் உண்டு
ஊருக்கே
அதன் காற்றை கழுவிச் சுவாசம் கொடுக்க
நிழல் மரங்களை
கர்ப்பம் கொண்டால் ....

நாங்கள் குடிப்பது

எங்கள்
காற்று சுமக்கும் பிராணன்
நீ
நட்ட மரங்களின்
நீ
ஊற்றிய உயிர் நீரின்
வேர் பிடித்த ஆலின்
முலைப்பாலே.....

அதனால் நீ

பிராண வாயுவின் பிரம்மாட்டியே...

ஆயிரம் ஆல் நட்ட
கடவுள் கை
உலகைத் தூக்கும் நெம்பே நீ..

வருமானம் வருமென்றால்
மானம் அறுக்கும் மனிதருக்கு
ஆயிரம்
மரம் வைத்து
புது மதம் தந்த
புத்தபெருமாட்டி நீ ...

மீண்டும் புகழ்கின்றேன்
இல்லை துதிக்கின்றேன்..
பிராணவாயுவைச் சுமக்கும்
ஈரமுள்ள
இறவாக்
காற்றின் கருவை கொண்டவளே...
நீ
சிவன் சுமக்கும் கங்கையைப் போல்
உன் மனம் முழுக்க ஈரம்
வறண்ட மண்ணுக்கு
உச்சம் தலையில் நீர் சுமந்து
உன் உயிரைச் சுரந்தாய்
ஆலுக்குத் தாய் ஆனாய்..

நீர் சுமந்த மண்ணை
மரம் ஆள
ஆல மரத்தால் அலங்கரித்து
அங்கங்கு முளைத்துச் சாகும் கண்டுகளுக்கு
ஆயிரம் கால ஆளும் வரம் கொடுத்தாய் ..

பெற்றால் ஒரு பிள்ளை
வளர்த்தால் ஆயிரம் பிள்ளை
ஊருக்கெல்லாம் நிழல் கொடுக்கும்
நிலம் ஆளும் பிள்ளைகள் பெற்றாய்..

தேசம் தேடி
விருதுகள் தரவும்
வெகுமதிகள் வெறுத்து
ஊரில் நேர்மை நட்டவளே

ஊரின்
வழி நெடுக
பச்சைப் பாதையை போட்டாய்
காற்று
வழி தவறிப் போகாமல்
பசுமையாய்
நீ
திம்மாக்கா
திக்கும் திசையும் படைத்தாய்.

கண்ணப்பு
===================================================================


ஆயிரம் மரம் வைத்த அபூர்வ திம்மக்கா!
இரா.வினோத்
படங்கள்: சு.குமரேசன்
'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்!
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!
இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!
பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!
''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''

- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.
''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். 'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.
இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?’னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்!
காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.
ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''
- நாமும் கலங்கித்தான் போனோம்.
''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''
- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !
திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!
''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’
- அவள் விகடன்

நாஞ்சில் த.க.ஜெய்
08-11-2012, 05:36 PM
பிராணனை எடுக்கும் அசுத்தம் கொண்ட காற்றினை சுத்தம் செய்யம் மரங்களை நட்ட பாட்டி திம்மக்கா அவர்கள் புகழ் ஆல்போல் தழைத்தோங்கும் மற்றவர்க்கும் முன் உதாரணம் ..
''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’பணம் சேகரிக்கும் மனிதர்கள் உணவிற்கு பதில் பணத்தினை உண்ண முடியாது எனும் நிலையினை உணர்ந்து இது போல் தன்னாலியன்ற மரங்களை நட்டால் செய்த பாவங்கள் கொஞ்சமேனும் கரையும் ..முன்னுதாரனமாக திகழும் இவர் போன்ற செயல்வீரர்களை முன்னெடுத்து செல்வதே ஒரு அரும் பணியாகும் ..அவ்வாறு தினசரி ஊடகங்கள் செய்தால் நன்று ...அவ்வகையில் கண்ணப்பு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

கீதம்
08-11-2012, 09:49 PM
கவிதையின் ஒவ்வொரு வரியும் திம்மக்கா அவர்களின் அரும்பணியைப் பறைசாற்றி நிற்கின்றன. பிராணவாயுவின் பிரம்மாட்டி, புதுமதம் தந்த புத்தபெருமாட்டி போன்ற புதிய சொல்லாட்சிகள், அவரது மேன்மையோடு கவிதையின் மேன்மையையும் உயர்த்துகின்றன. ஆயிரம் ஆலின் தாயான அவரை உங்களோடு நாங்களும் போற்றி வணங்குகிறோம். மிகவும் லயித்து எழுதப்பட்ட இக்கவிதைக்கும் கருவுக்கும் மிகுந்த பாராட்டுகள்.

ந.க
09-11-2012, 05:12 AM
மிக்க மகிழ்ச்சி, நம் பூமி நாம் வாழும் வீடு, அந்த வகையில் திம்மாக்கா பராசக்தியின் உருவத்தோற்றம்....
நன்றி உங்கள் நயமான பாராட்டுக்களுக்கு: நாஞ்சில் த.க.ஜெய், கீதம்

jayanth
09-11-2012, 07:33 AM
மா... துஜே சலாம்...!!!


பகிர்ந்த கண்ணப்புக்கு நன்றி...!!!