PDA

View Full Version : கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு



மதி
23-10-2012, 12:30 PM
அன்பார்ந்த தமிழ்மன்ற உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்

உண்மையிலேயே இது எங்களுக்கு இன்பஅதிர்ச்சி தான். பின்ன போட்டி அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாய் கதைகள் ஏதும் வராத நிலையில் கடைசி இரு நாட்களில் கதைகளாய் குவித்து திக்குமுக்காட செய்தால் ஆனந்த அதிர்ச்சி கொள்ளாமல் என்ன செய்வது? :icon_b:



போட்டிக்கு மலை போல் வந்து குவிந்த கதைகள் : 32


http://images.zaazu.com/img/clap-animated-animation-clap-smiley-emoticon-000340-medium.gif (http://zaazu.com)


'மன்ற உறுப்பினர் மட்டுமே போட்டியில் பங்கு கொள்ளலாம்' என்ற விதிப்படியும் தங்கள் மன்றப்பயனர் பெயரைத் தெரிவிக்காததாலும் மூன்று சிறுகதைகள் நிராகரிக்கப்பட்டு மொத்தம் 29 சிறுகதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இனி உங்கள் ஆரவாரம் தொடங்கட்டும். இந்தத் திரியில் 29 கதைகளும் பதியப்படும். மன்ற மக்கள் படிப்பதற்காக இருவாரங்கள். :cool:

நவ. 7 ம் தேதியன்று வாக்குப்பெட்டிகள் திறக்கப்படும். கதைகள் நிறைய இருப்பதால் ஒவ்வொரு உறுப்பினர்க்கும் 4 வாக்குகள். தங்களுக்குப் பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்கலாம். ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். நான்கு வாக்குகளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ வாக்களித்தால் அவை நிராகரிக்கப்படும். எண்ணிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சரி தானே? :icon_b:

போட்டிக்கான கதைகளைப் பற்றிய விமர்சனங்களை மன்றத்தின் எந்தப்பகுதியிலும் போட்டி முடியும் வரை பதியவேண்டாம். அத்தகைய பதிவுகள் நீக்கப்படும். உறவுகள் வசதிக்காக இத்திரி மூடப்படுகிறது.

கதைப்போட்டிக்கான வாக்களிப்பு முடியும் கடைசி நாள் : 30-நவம்பர்-2012


சிறுகதைகள் கடலில் முத்துக்களெடுக்க தயாராகுங்கள்..! http://images.zaazu.com/img/thumbsup-thumbs-up-approve-ok-smiley-emoticon-000283-medium.gif

மதி
23-10-2012, 12:35 PM
தகுதியுடையவை தழைத்தோங்கும்


ஆசிரியர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி வகுப்பில் விளக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு காலத்தில் வாழ்ந்த விலங்குகள் பற்றியும், அவற்றின் தகவமைப்பு காலத்திற்கேற்ப மாறியதையும் சுட்டிக்காட்டினார். ஒருகாலத்தில் வாழ்ந்த மிருகங்கள் அடுத்த காலகட்டத்திற்கு முன்னேற முடியாமல் அழிந்தது பற்றியும் ,சில வகையான மிருகங்கள் மட்டுமே எல்லா காலத்திற்கும் தொடர்ந்தது என்பதையும் விவரித்துக்கொண்டிருந்தார்.

எப்படி சில மிருகங்கள் மட்டும் எல்லா காலத்திற்கும் தொடர்ந்தன ? தொடர்கின்றன? ஏன் டைனோசரஸ் போன்ற பெரிய மிருகங்கள் தற்போதும் வாழ முடியாமல் அழிந்தன? இதுபோன்ற கேள்விகள் கதிரவனின் மனதில் ஓடலாயின. அதற்கு ஆசிரியர், எந்தவொரு மிருகம் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அதுவே தொடர்ந்து வாழும். டைனோசரஸ் போன்ற விலங்குகள் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் தங்களுடைய பெருத்த உருவம் காரணமாக தப்பிக்கமுடியாததையும்; மரங்கள்,செடிகள் போன்ற தங்களுடைய உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் ஒட்டகங்கள் உயிர்வாழ அவைதம் கழுத்துகள் நீட்டப்பட்டதையும்; குரங்குகள் தங்கள் தகவமைப்பைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டதாலேயே அவைதம் பரிணாமம் மனிதனாக மாறி உலகை ஆட்டுவிப்பதையும் விளக்கினார். ஆகவே தகுதியுடையவை தப்பிப்பிழைக்கும் என்ற பாடத்தை மனதில் கொண்டே வளரலானான் கதிரவன்.

எப்போதும் படிப்பில் முதலாவதாக வந்தான்.யாரேனும் சந்தேகம் என்று கேட்டால் அவர்களுக்கு சொல்லித்தராமல் புறக்கணிப்பான். விளையாட்டில் மற்றவர்களை எப்படியாவது முந்தி வெற்றிபெற்றுவிடுவான். ஏனென்று கேட்டால், அவர்களுக்கு தகுதியிருந்தால் சொந்தமாக படித்து, சொந்தமாக முயன்று வெற்றிபெறவேண்டும் என்பான். தன்னுடைய தகுதிக்கேட்பவே நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்று, தகுதி குறைந்தவர்களை ஒதுக்கி நண்பர் வட்டாரத்தையும் குறைத்துக்கொண்டே வந்தான்.

படித்து முடித்து , ஒரு நல்ல அலுவலகத்தில் பணியிலமர்ந்தான். அலுவலகம் சிறு சிறு அணிகளாக வகுக்கப்பட்டிருந்தது. அவனுடைய அணியில் அருணும் ஒருவனாக இருந்தான். அவன் சற்று கூச்ச சுபாவமுடையவன். ஒருமுறை அணித்தலைவர் , அணியை திறம்பட செயல்படுத்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த ஆலோசனை அனைவர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அருண் தனக்கு தோன்றிய யோசனையை கதிரவனிடம் கூறினான். ஏனெனில் அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் பேசுவதற்கு தயக்கம் இருந்தது. ஆனால், கதிரவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அருணின் யோசனையை அனைவர் முன்னிலையிலும் கூறி பாராட்டையும் சிறந்த யோசனைக்காக பதவி உயர்வும் பெற்றான். தன்னைக் கேள்வி கேட்ட அருணுக்கு, தகுதியுடையவை மட்டுமே தழைத்தோங்கும் என்று பதிலளித்தான்.
ஒருமுறை தனது அணியோடு அருணும், கதிரவனும் ஒரு காட்டுக்கு சுற்றுலா செல்ல நேரிட்டது. காட்டின் ரம்மியத்தை வியந்து அனுபவித்துக்கொண்டிருந்தபோது ஒரு புலி அவர்களை நோக்கி பாய்ந்தது. எல்லாரும் ஆளுக்கொரு திசையில் தெறித்து ஓட அருணும், கதிரவனும் ஒருதிசையில் ஓடினர். புலியும் அவர்கள் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இருவரும் பிரிந்து ஓட, புலி கதிரவனை நோக்கி முன்னேறியது. அவனை கடித்துகுதற எத்தனித்த வேளையில், அருண் அங்கிருந்த மரக்கட்டையைக் கொண்டு புலியை அடித்து விரட்டினான்.

அப்போதுதான், கதிரவன் சிந்திக்கலானான். ஏன் அருண் தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் நம் உயிரைக் காக்க வேண்டும். மிருகங்கள் மட்டுமே , தாம் உயிர்வாழ மற்ற விலங்குகளை வீழ்த்தி , அழித்து வாழும். ஆனால், மனித குலம் தழைத்து விளங்குவதற்கு, அன்பு என்ற ஒரே தகுதிதான் தொன்றுதொட்டு தொடர்ந்துவருகிறது என்பதை அறிந்து மனதில் நிறுத்திக்கொண்டான். இனி மனித குலம் தழைத்தோங்க அன்பு என்ற ஒரே தகுதி போதும் என்பதில் கதிரவனுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஐயமிருக்காது.

மதி
23-10-2012, 12:36 PM
கடவுளும் மனிதனும்


தெருவெங்கும் மழை பெய்து சேறும் சகதிமாய் இருந்தது. நேற்று இரவு பெய்த கன மழை இன்றும் தொடர்ந்தது, அதை மழை என்று கூட சொல்லமுடியவில்லை, ஒரு சமயம் தூறலாகவும்.. மறு சமயம் சாரல் மழையாய்... பன்னீர் தூவுவதைப் போல தூறிக்கொண்டு... தெருவின் தரையை மண்ணோடு மழை நீர் கலந்து நசநசப்பை உண்டுபண்ணி அனைவருக்கும் புழுகத்தை உண்டாக்கியதே தவிர.. அந்த மழையால் கிஞ்சித்தும் பயனும் இல்லை.

தி.நகரில் உள்ள அந்த பரபரப்பான கடைவீதி.... சாலையில் மழைநீர் மண்ணோடு கலந்து சிறு ஒடையாய் செல்ல... மக்கள் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை உயர்த்திப் பிடித்தும்.... லாவகமாக தங்கள் கால்களை அடியெடுத்து வைத்து ஆடையில் சேறு படாதவாறு தாண்டிக் குதித்தபடி அவரவர் அவசரத்திற்கு தகுந்தவாறு நடை போட்டு சென்று கொண்டு இருக்க... சிறு குழந்தைகளோ தங்கள் கால்களை தண்ணீரில் நனைத்து குதியாட்டம் போட்டபடி அவர்கள் பின்னால் நடக்க.. ஒரு சிலர் குழந்தைகளை தங்கள் கண்களால் உருட்டியும் அவர்களை குரலால் அதட்டியும் மிரட்டியும் ஒழங்காக நடந்து வர கட்டளையிட்டு கொண்டு இருந்தனர்... வேறு சிலரோ குழந்தைகளை தோளிலும் இடுப்பிலும் சுமந்தபடி கைகளில் வாங்கிய பொருட்களின் பைகளை தூக்க முடியாமல் முணுமுணுத்தபடியே சென்று கொண்டிருக்க....

அந்த மழை நாளிலும் தி.நகரில் கூட்டம் அலைமோதியது... இந்த விலைவாசி ஏற்றத்திலும் எப்படித்தான் மக்கள் பெருமளவில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்களோ... பார்த்துக்கொண்டு இருந்த முருகனின் மனமோ எதிலும் லயிக்காமல் தன் ஆட்டோவில் அமர்ந்தபடி தெருவில் நடப்பதைக் கண்களால் பார்த்து... மனதால் அடுத்த சவாரியின் வருக்கைக்காக காத்துக் கொணடிருந்தான்.
அவனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது... உழைத்து உழைத்து உடல் தளர்ந்து கண்களில் கருமையும் கன்னத்தில் சுருக்கமுமாக அவன் வயதை அனைவருக்கும் பறைசாற்றியது. சிறு வயதில் படிப்பு ஏறாததால் ஏதோதோ வேலை செய்து... கடைசியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி கடந்து ஏழெட்டு ஆண்டுகளாக ஓட்டிக் கொண்டுவருகிறான்.

குடும்பம் என்று சொல்வதற்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் மகளுக்கு தன் வசதிக்கு ஏற்ற ஒரு கார் மெக்கானிக்கை திருமணம் செய்து வைத்தான். இதுநாள்வரைக்கும் வாழ்க்கை நிமமதியாயாக் கழிய... தற்பொழுது மகள் தலை பிரசவத்திற்காக வந்திருப்பதும்... பிரசவத்திற்கான நாளும் அடுத்த இரண்டு தினங்களுக்குள் இருப்பதும்... அவளுக்கு நல்லபடியாக பிரவசம் நடக்க வேண்டும் என அவன் மனம் விரும்பதும்... ஒரு தந்தையாய் அவனை கவலை கொளளச் செய்தது..
‘ஆட்டோ... திருவான்மியூர் வருமா....’

குரல் கேட்டு நினைவு திரும்பியவன்... அங்கு ஒரு கனமான பெண் நிற்க.... அந்தப் பெண்ணின் அருகில் மேலும் இருவர் நின்று கொண்டு இருந்தனர்.

‘வரும்மா.... ஏறிக்கோங்க... எததனை பேரு....’

அவளுடன் மற்றோரு இளம்பெண்... அடுத்து ஒரு வாலிப வயதை அடைந்த பையன்.. அனேகமாய் அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணின் பிள்ளைகளாய் இருக்க வேண்டும்... அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு இரண்டு கைகளில் நகைக்கடைப் பையையும்.. துணிக்கடைப் பையுமாக இருக்க.... அந்தப் பெண்ணோ தன் கையில் அந்த மழையிலும் ஐஸ்கிரீம்மை சுவைத்துக் கொண்டு இருந்தாள்.
‘மூணு பேரு... எவ்வளவு ஆகும்...’

அவர்களை ஏற இறங்கப் பார்த்தான்... பூசிய உடம்பும்... கழுத்தில் மின்னிய நகைகளையும் அணிந்திருந்த உயர்ந்த ரக ஆடைகளை அளவுகோளாக வைத்து அவர்களின் வசதியை கண்களால் ஆராய்ந்தவன்...

‘முன்னூறு ரூபா ஆவும்மா...’

‘என்னது... முன்னூறு ரூபாவா... ஆட்டோவில போறத்துக்கு கால் டாக்ஸில போயிடலாம் போல இருக்கே... அநியாமாய் இருக்கே.. நீ கேக்கறது...’

‘என்னம்மா பண்றது... பெட்ரோல் வெல ஏறிடுச்சு... நாங்க என்ன பண்ணமுடியும்... வாங்கறது பாதி பணம் பெட்ரோலுக்கே சரியாவுது...’
‘இருநூறுற்று அமபது தரேன்... அதுவே அதிகம்... வரமுடியும்மா...’

‘என்னம்மா... இப்படி கத்திரிக்காய் வாங்கற மாதிரி அம்பது ரூபாய அப்படியே கொறச்சா... என்ன பண்றது... ஒரு இருபத்தஞ்சு சேர்த்துக் கொடுங்க... ‘

மனதில் முனகியவாரே அந்தப் பெண்மணியும் மற்ற இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள... ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான், பல சந்து பொந்துகளில் நுழைந்து வெங்கட் நாராயண சாலையை அடைந்தான்... அப்படியே தேவர் சிலை வழியே நுழைந்து... கோட்டூபுரம் வழியாய்... அடையார் செல்வதாய் மனதில் நினைத்து சிக்னலுக்காக காத்து இருக்க...

‘ஏய்யா... போண்ணோட மாமியார் வீட்ல சொன்னது ஞபகமிருக்கா...’

முருகன் அப்பொழுதான் தூங்கி எழுந்தான்.... தன் முகத்தை கழுவ வாசலுக்கு வர.. அந்த அதிகாலை வேளையிலே அவன் மனைவி மல்லிகா அந்தப் பேச்சை ஆரம்பிக்க...

‘ம்ம்ம்... இருக்கு’ ஒற்றை வார்த்தையை பதிலாய் சொன்னான்

‘அதுக்கு என்ன முடிவு எடுக்கப் போற’

‘துட்டு பொறட்டனும்.... யாரைப் போய் கேக்கறதுன்னு தெரியல... அவ கல்யாணக் கடனே இன்னும் இருக்கு.... இதுல... பிரசவ செலவு எவ்வளவு ஆகுமுன்னு வேற தெரியல... அதுக்குள்ளே பொறக்கப் போற கொழந்தைக்கு அரை சவரன்ல செயின் போடனும்னா சொன்னா நான் என்ன தான் பண்றது... அதான் யோசிக்கறேன்’

‘இப்படி யொசிச்சுக்கிட்டே இருந்தா.. தானா வந்திடுமா.. எதையாவது அடமான்ம் கிடமானம் வச்சாவது சீர் செய்யனும்... அதுதானே நமக்கு மரியாதை’

‘என்னத்த வைக்கறது... சொத்துன்னு ஒன்னு இருந்தா தானே அடமானம் வைக்க...’

அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது... கடைசியாக அவள் கழுத்தில் இருந்த அரை சவரன் தாலியும் மகள் திருமணத்திற்கு அடமானம் வைத்து மீட்க முடியாமல் போய்விட்டது.

அவள் கழுத்தில் வெறும் மஞ்சள் துண்டைத்தான் கட்டிக் கொண்டு இருக்கிறாள்.

‘எதையாவது செஞ்சிதான் சீர் பண்ணனும்... ஒத்த புள்ள.. அதுவும் பொண்ணா இருக்கு.. அது கூட செய்யலனா.. அவ நல்லா வாழனும் இல்லையா..’

‘கேக்க நல்லதான் இருக்கு.. தெனமும் அலைந்சிட்டு தானே இருக்கேன்.. வர்ற வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்கு... எல்லா எடத்திலேயும் கடன வாங்கியாச்சு.. பாக்கலாம் கடவுள் நல்ல வழிய தராமவா போகப் போறாரு..’

முருகனுக்கு கெட்ட பழக்கம் என்று எதுவும் இல்லை.. எப்போவாவது குடிப்பதோடு சரி.. அதையும் டாக்டரின் அறிவுறையால் கடந்த சில நாட்களாக விட்டு விட்டான்.

இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச... பேச்சு இழுத்துக் கோண்டே சென்றதே தவிர... ஒரு முடிவும் கிட்டியபாடுதான் இல்லை.
பேசிக்கொண்டு இருப்பதில் எந்தப் பிரயோஜனும் இல்லை.. நினைத்தவன்... சவாரிக்கு சென்றாவது நாலு காசு சம்பாதிக்கலாம் என்று வீட்டை விட்டு அப்பொழுதே கிளம்பியவன் தான்...

காலையிலிருந்து தனக்கு தெரிந்தவரிடம் எல்லாம் பணத்தைக் கேட்க... பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை...ஒவ்வொருவரும் அவரவர் பஞ்சப்பாட்டை பாட... விதியை னொந்தபடி.. ஆட்டோவில் அமர்ந்திருந்த போதுதான் இந்த சவாரி கிடைத்தது...
‘அம்மா நாம பார்த்தோமே அந்த மூணு அடுக்க வச்ச செயின் ரொம்ப நல்லா இருந்துச்சி.. அத வாங்கி இருக்கலாம்... நீதான் அவசரப்பட்டு இத வாங்கிட்டே’ ஆட்டோவில் இருந்த மகள் சொல்ல.

‘அது எதுக்கடி இப்ப.. பொண்ணு பாக்கத்தானே வராங்க.. நிச்சியதார்த்ததுக்கு அந்த மாதிரி வாங்கிட்டாப் போகுது.. உனக்கு இல்லாம யாருக்கு வாங்கித் தரப் போரேன்’

‘அக்காவுக்கே கேட்டது எல்லாம் வாங்கித்தர... எனக்கு அக்கா கல்யாணத்துக்கு பத்து செட் ட்ரெஸ் வேணும்மா...’
‘சரிடா செல்லம்... வாங்கித் தரேன்...’

அவர்கள் பேச்சு முருகனின் காதில் விழத்தான் செய்தது... ஒருபக்கம் பணம் குவிந்து கிடப்பதும்... மறுபக்கம் அதே பணத்துக்கு மனிதர்கள் ஆளாய் பறப்பதும்.. ஆண்டவனின் லீலைகளில் ஒன்றா... அல்லது விதியின் விளயாட்டா.. தன் கவனத்தை ரோட்டின் மீது வைத்து ஆட்டோவை ஓட்ட..

ஆட்டோ அடையாறை நெருங்கியது... மழை வேகம் பிடிக்க... அது மேலும் வலுத்து பெரு மழையாய் வெளுத்து வாங்கியது... ஒருவழியாக திருவான்மியூரில் அவர்கள் அபார்ட்மென்ட்டின் வாயிலில் இறக்கியவன்... சவாரிக்கான பணத்தைப் பெற்று...
திரும்பவும் எதாவது சவாரி கிடைக்காத என்று ரொட்டோரம் மெதுவாக வண்டியை செலுத்திய போதுதான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது..

பக்கத்தில் அவனுக்கு தெரிந்த சேட்டிடம் தன் ஆட்டோவை அடமானம் வைத்து... பணத்தை வாங்கலாமென்றும்... அந்தப் பணத்தை தன் மகளின் பிரவச செலவுக்கும் அரை சவரன் தங்கச் செயினுக்கும் வைத்து கொள்ளலாமென்றும்... எற்கனவே பலமுறை அந்த சேட்டிடம் அடமானம் வைத்து, அவரிடமே வாடகைக்கு ஆட்டோவை ஒட்டியிருக்கிறான்.. யோசித்தபடியே ஆட்டோவை சேட்டு கடையை நோக்கித் திருப்ப...

அவன் பாக்கெட்டில் இருந்து செல்போன் அலறியது...

‘அப்படியா... இதோ வீட்டுக்கு வறேன்...’

தன் மகளுக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக மனைவி கூற.. ஆட்டோவை தன் வீட்டிற்க்குத் திருப்பினான்.

மகளையும் மனைவியையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்... மகளோ வலியால் துடிக்க...பெற்றவர்களின் மனம் கலங்கியது.

அவளை பரிசோதித்த டாக்டர்....

‘குழந்த தலை மாறி இருக்கு... தொப்புள் கொடி வேற சுத்திக்கிட்டு இருக்கு... ஆபரேஷன் தான் செய்யனும்.. என்ன சொல்றீங்க..’

ஆபரெஷன் என்றதும்... மல்லிகா அழத் தொடங்கிவிட்டாள்...

‘வேற வழியே இல்லையா...டாகடர் ‘

அப்பாவியாக முருகன் கேட்க...

‘ரெண்டு உசிரையும் காப்பாத்தனும்னா.. ஆபரெஷன் செய்யறத தவிர வேற வழி இல்ல..’

முருகனும் அவன் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கோள்ள..

‘சரி டாக்டர்... சீக்கிரம் அதற்கான ஏற்பாடு பண்ணுங்க’

‘ஆபரேஷன் செய்யறதுக்கு இன்னும் 14 பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.... அவங்களுக்கு முடிஞ்சப்புறம் தான் உங்க முறை வரும்...’

அந்த அரசு டாக்டர் அலட்சியமாய் சொலலியபடி அடுத்த பேஷன்ட்டை பார்க்க சென்று விட...

‘நான் அப்பவே சொன்னேன் கேட்டியா... தனியார் ஹாஸ்பிடல் போகலாம்ன்னு கொழந்த வேற வலியால துடிச்சுகிட்டு இருக்கா...இப்ப போய் காச பாத்திட்டு இருக்கியே..

‘கொழந்த நல்லபடியா பொறந்தா மாரியாத்த கோவிலுக்கு பொங்க வைச்சு... படையல் வச்சு.. மஞ்ச சேலைய சாத்தறேன் தாயே.’ தன் புடவைத் தலைப்பால் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி கன்னத்தில் போட்டுக் கொண்டாள் அவள்.

மனைவி சொல்வதுதான் அவனுக்கும் சரியென்று பட்டது... அவசர அவசரமாக இருவரையும் ஆட்டோவில் ஏற்றி பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்.. ‘மொதல்ல அட்வான்ஸ் பணம் கட்டுங்க.. அப்புறம் தான் பெட்டில் சேர்கக முடியும்’ என்று கூற...
மனைவியையும் மகளையும் ஹாஸ்பிடல் வரான்டாவில் விட்டு... பணத்திற்காக.... அந்த சேட்டிடம் செல்ல வெளியே வந்தான்...
மழை நின்று.. வானம் தெளிவானது கண்டு... ஆட்டோவின் இருபுறமும் உள்ள மறைப்பை மேலே தூக்கி கட்ட நினைத்து அதைக் தூக்கி கட்டும்போது தான் அதை கவனித்தான்.. பின் சீட்டின் அடியில் ஏதோ பளபளப்பாக மின்ன... குனிந்து எடுத்தவன்... அது தங்கச் செயினாய் இருக்க..

கிட்ட தட்ட முன்று சவரன் இருக்கும்... யார் விட்டு சென்றது என்று பலவாறு யோசித்தவன்... கடைசியாக ஆட்டோவில் சென்றவர்களை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தான்... தி.நகரில் ஏறிய அந்த குடும்பமாக இருக்குமோ... அவர்களை தான் சிறிது நேரத்திற்கு முன் வீட்டில் இறக்கி விட்டேன்... எதற்கும் அங்கே தானே செல்கிறோம்... ஒரு எட்டு சென்று கேட்டு விடலாம்.. அப்படி அவர்களது இல்லை என்றால் பின்னர் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம்...

அவனுக்கு இருக்கும் நெருக்கடிக்கு அந்த நகை போதுமானதுதான் என்றாலும்.... அவன் அடுத்தவர் பொருள் மேல் ஆசைப்படுவனும் அல்ல... முதலில் அவர்களிடம் கொடுத்து விட்டு பின்னர் சேட்டிடம் செல்லலாம் என்று ஆட்டோவை அந்த அபார்மென்ட் நோக்கி ஓட்டினான்...

அபார்ட்மென்ட்டை நெருங்கிய உடன் தான் கவனித்தான்... வீட்டின் வாசலில் ஒரு போலிஸ் வண்டி நிற்பதை... அதற்குள்ளாகவா போலிஸில் புகார் செய்து விட்டார்கள்... அல்லது அந்த அபார்ட்மென்டில் வேறு எதாவது வீட்டில் பிரச்சனையோ... மனதில் பலவாறு நினைத்தபடியே...

வாசலில் ஆட்டோவை நிறுத்தி.... அந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்த... கிராப் வெட்டிய...ஒரு வாட்ட சாட்டமான ஆள்... தடி மீசையுடன் கதவை திறந்தார்.

‘சார்... நான் ஆட்டோ டிரைவர்... இந்த வீட்ல இருக்கிறவங்க என்னோட ஆட்டோவில தான் தி.நகர் இருந்து சவாரி வந்தாங்க... அந்த அம்மாவை கொஞ்சம் கூப்பிட முடியுமா’

‘எதுக்கு’ அவர் குரலில் இருந்த ஏற்றம் அவனை கிலி அடையச் செய்தது... அதற்குள்ளாகவே... ‘யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க’ உள்ளேயிருந்து அந்த அம்மாவே வர...

‘வாங்கம்மா... இப்பத்தான் பார்த்தேன்... ஆட்டோவ துடைக்கும் போது... இந்த தங்கச் செயின. இது உங்களோடதா... பார்த்துச் சொல்லுங்க..’
‘பளார்’ என்ற அறை அவன் கன்னத்தில் விழ... அவன் காது கன்னம் எல்லாம் பொறி கலங்கியது... கன்னத்தில் கைவைத்தபடி வலி தாங்காமல் அப்படியே அமர்ந்து விட்டான்.

‘என்னடா... எத்தினி பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க.. ஆட்டோவில வர்ரவங்க நகையை அபேஸ் பண்ணறது... கொடுக்கிற சாக்கில... வீட்டுக்கு வந்து... நல்ல பேரு வாங்கி... கொடுக்கிற எதையாவது வாங்கிட்டு போறது.... அப்புறம் வீட்டையும் நோட்டம் விட்டு... கும்பலா வந்து.. கொள்ளை அடிச்சிட்டு போறது... ஒரு போலிஸ்காரன் வீட்டிலே உன் கைவரிசையை காட்றியா.... என்ன துணிச்சல்..’
மீண்டும் அவனை அடிக்க கையை ஓங்க..

‘சார்... அப்படியெல்லாம் இல்ல சார்... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க... சார்...சார்..‘

அவன் சொல்லச் சொல்ல... அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து.. போலிஸ் வண்டியில் ஏற்றி... ஸ்டார்ட் செய்து போலிஸ் ஸ்டேஷனை நோக்கி விரைந்தார்...

வண்டி செல்ல.. அவனுக்கோ வாங்கிய அடி உடம்பெல்லாம் வலிக்கச் செய்தது... சற்று தூரம் வண்டி சென்று இருக்கும்.... முருகனின் செல் போன் ஒலிக்க... பாக்கெட்டில் இருந்து காதில் வைக்க கூட முடியாமல் கை நடுங்கியது... மல்லிகா தான்...

‘பொண்ணுக்கு வலி வந்து... இப்பத்தான் பிரசவம் ஆச்சு... சுகப் பிரவசம்தான்..... வாய்யா சீக்கிரம் கொழந்தைய பார்க்க... அந்த மாரியாத்தாவே பொண்ணா பொறந்திருக்கா.. நான் கும்பிடற அந்த அம்மன் என்னை கைவிடல..’

எங்கோ அசரீரியாய் மனைவி குரல் ஒலிக்க... அப்படியே... உட்கார்ந்த சீட்டினிலே மயங்கிச் சரிந்தான் முருகன்.


(முற்றும்)

மதி
23-10-2012, 12:37 PM
நான் சொல்வதெல்லாம் உண்மை...



அன்று புதன்கிழமை. காலை 8.50 மணி. புதுச்சேரி.....

வழக்கம் போல அலுவலகம் வந்தடைந்து, என் மேசையில் பையை வைத்துவிட்டு, வருகை பதிவேட்டில் குமரன் என்ற பெயருக்கு நேரே கையெழுத்திட்டேன். பிறகு எப்பொழுதும் போல அலுவலக நண்பர்களைப் பார்க்க கணினியறைக்கு விரைந்தேன். கணினி அறைக்கு வெளியில் செருப்பை கழற்றிவிடுவது வழக்கம். அறையின் கதவிலிருந்த கண்ணாடியினூடே நண்பர்களை கவனித்துக்கொண்டே செருப்பை வெளியில் விட்டுவிட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளேச் சென்றேன்.

“வணக்கம் சார்“ என்று கூறிவிட்டு முருகன் சார் பக்கத்தில் அமர்ந்தேன். என்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் “சார்“ என்று கூப்பிட்டுதான் பழக்கம். அவரும் “வா குமரா“ என்றார்.

“என்ன சார் இன்னைக்கு என்ன விசேஷம்“

“ஒன்னுமில்லே குமரா“ என கூறியவர் சட்டென ஏதோ ஞாபகம் வந்ததைப்போல “குமரா நம் மனறத்தில் சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்காங்க“ என்றார்.

“என்ன தலைப்பு சார்“

“தலைப்பெல்லாம் ஏதும் இல்ல, நம்மோட விருப்பம்தான்“

“சரி, சிறுகதைன்னா எத்தன பக்கம் இருக்கனும் சார். ஒரு பக்கம் இருந்தா போதுமா ? “

“ஒரு பக்கம் இருந்தா அது குறுங்கதைப்பா“

“அப்புறம் வேற எப்படி சார்“

“கதையை படிக்கறப்ப என்னடா இது இவ்வளவு வளவளன்னு இருக்குதுன்னு யாரும் நினைக்காதமாரி இருக்கனும் குமரா அவ்வளவுதான்“

“சூப்பர் சார், சரியான விளக்கம். போட்டிக்கான கடைசி தேதி எப்ப சார்“

“இந்த மாசம் 20ந்தேதிப்பா“

அவ்வளவு தான், எப்படியாவது இந்த போட்டியில் பங்கெடுக்க விரும்பினேன். என் எண்ணமெல்லாம் எதைப்பற்றி கதை எழுதுவது என்பதில் தான்.

நான் ஒரு எழுத்தாளன் இல்லை என்பது சிறுகதையின் அளவைப்பற்றி கேட்ட போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் மன்றம் அறிவித்த சிறுகதைப் போட்டியில் பங்குபெற ஆவல் அதிகமாகியிருந்தது. அதற்காக எந்த தலைப்பில், எதை மையமாக வைத்து கதை எழுதுவது என்பதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

குடும்ப கதை எழுதுவதா இல்லை சமுதாயத்தின் நலன் பற்றிய கதை எழுதுவதா, நகைச்சுவையை மையமாகவைத்து கதை எழுதுவதா இல்லை துப்பறியும் கதை எழுதுவதா என்ற சிந்தனைதான் மனதில்.

சரி எதைப்பற்றியாவது எழுதுவதற்கு கதைக்கரு வேண்டுமே. எதை கருவாக எடுக்கலாம் என்று யோசிக்கலானேன். எப்பவுமே நமக்கு தேவையான நேரத்தில் குறிப்பிட்ட நபரின் பெயர் மறந்துவிடுமே அதுபோல எனக்கு எதுவுமே ஞாபத்திற்கு வரவில்லை.

“சரிங்க சார் வரேன்“னு சொல்லிவிட்டு அங்கிருந்து என் மேசைக்கு வந்தேன். மறுநாள் அலுவல் சம்பந்தமாக ஒரு கலந்தாய்வில் பங்கெடுக்க சென்னை செல்லவேண்டியிருந்ததால் அந்த வேலையில் மூழ்கிவிட்டேன்.

மறுநாள் சென்னை சென்று அங்கு கலந்தாய்வை முடித்துவிட்டு ஊர்திரும்ப பேருந்திற்காக காத்திருந்தேன். சிறிது நேரத்தில் சிதம்பரம் செல்லும் பேருந்து வந்தது. அப்பேருந்து புதுச்சேரி வழியாகதான் செல்லும் என்பதால் அதில் ஏறி அமரும் போது மணி இரவு 7.30. பயணச்சீட்டு வாங்கிய சிறிது நேரத்தில் அசதியில் உறங்கிவிட்டேன்.

“ஏம்பா பஸ்சு 10 நிமிஷம் இங்க நிக்கும், டீ டிபன் சாப்பிடறவங்க சாப்டுக்கோங்க“ என்ற நடத்துனரின் சத்தம் கேட்டு எழுந்தேன். தூக்கம் கலைக்கப்பட்ட அசதியில் கீழிறங்க மனமில்லாமல் இருக்கையிலேயே இருந்தேன்.

அப்போது தான் அந்த முதியவள் என் கவனத்தை ஈர்த்தாள். அவள் ஒரு சிறுவன் மற்றும் 40 வயதுடைய ஒருவனுடன் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தது அப்போதுதான் என் நினைவிற்கு வந்தது.

அந்த முதியளுக்கு அறுபது அறுபத்தைந்து வயதிருக்கும். சற்றே ஒடிசலான தேகம். கொஞ்சம் நைந்திருந்த புடவையை உடுத்திருந்தாள். மொட்டையடித்து ஒரு அங்குலம் அளவிற்கு வளர்ந்திருந்த முடி. முடி அனைத்தும் பாராபட்சமில்லாமல் வெள்ளை நிறத்திற்கு மாறியிருந்தது. தோலில் பழுத்த சுருக்கங்கள். காலில் செருப்பில்லை. கண்களில் கோபம், ஆதங்கம், இயலாமை இவை அனைத்தும் கொப்பளித்தக் கொண்டிருந்தது. ஏதோ புலம்பிக்கொண்டே பேருந்தில் ஏறினாள். அவளுடைய தோற்றம் என்னை ஈர்த்ததால் அவளுடைய புலம்பலை கவனிக்கத்தொடங்கினேன்.

“இப்ப பரோட்டா சாப்பிடறியா, தோசை சாப்பிடறியான்னு கேக்குறான். ரொம்பத்தான் அக்கற......... வூட்டுல இருக்குறப்பெல்லாம் ஏதாயாவது சொல்லிக்கினே இருக்குறது. நாலு பேரு பாக்குறப்ப மட்டும் அத சாப்பிடறியா, இத சாப்படறியான்னு ரொம்ப பாசக்காரன்மாரி கேக்குறான்“

இப்படி பேசிக்கொண்டே எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் பக்கத்தில் அவளுடன் வந்தச் சிறுவன் இருக்கையில் தூங்கிக்கொணடிருந்தான். அவளுது சத்தமில்லா புலம்பல் அருகில் இருந்த எனக்கு தெளிவாக கேட்டது. அந்த முதியவள் அதோடு நிறுத்தவில்லை. மீண்டும் ஆரம்பித்தாள். அருகில் இருந்த சிறுவனைப் பார்த்து.....

“டேய் நீ வேற. பகலெல்லாம் டிவிய பாத்துகுனு இருந்துட்டு இப்பதான் தூங்குற. ஒழுங்கா படுத்து தூங்குன்னு மதியானமே சொன்னனே கேட்டியா. உன் மாமன் சும்மாவே ஏதாவது சொல்லிக்கினே இருப்பான். அவன்கிட்ட பேச்சு வாங்காம இருன்னு சொன்னா கேக்குறியா“. சிறுவனைப்பார்த்து அவளிடமிருந்து வந்த வார்த்தைகள் இயலாமையால் வந்ததே தவிர கோபத்தில் வரவில்லை என்று நன்கு புரிந்தது.

“யாருயாருக்கு இன்னான்னா செய்றான்னு பாத்துகினுதான இருக்கேன். ஆனா பெத்தவளுக்கு செய்யகுள்ளதான் கணக்கு பாக்க தோனுது“

அவள் பேச்சிலிருந்து அவளுடன் வந்திருந்த 40 வயதுடையவன் அவள் பெற்றபிள்ளை என்று புரிந்தது. மீண்டும் அவள் ஆரம்பித்தாள்.

“நாமாட்டும் ஊர்ல நிம்மதியா இருந்துகுனிருந்தேன். ரொம்ப அக்கரையோட இவன் என்னய மெட்ராசுக்கு கூப்பிடும் போதே எனக்குத் தெரியும். அங்கேர்ந்து இங்க வந்தா நிம்மதியாவா இருக்க முடியுது. எதுகெடுத்தாலும் எடுத்தெறிஞ்சி பேசிக்குனு. அம்மான்னு மரியாதயே இல்லாம. இவன்கிட்ட நான் என்ன காசு பணமா கேட்டேன். தங்கச்சி மவன் வந்துகிறானே, ஒரு சட்ட துணி எடுத்து கொடுப்போம்னு தோனல. அவன் மாமியாவூட்டு செனத்துக்கு செய்யறது எனக்கு தெரியாமலா இருக்குது. நெனைக்க நெனைக்க அழயும் ஆத்திரமாவும் வருது. இருக்கட்டும் ஊருக்கு போய் பேசிக்கறன். பஸ்சிலயே கேட்டா நல்லாயிருக்காது. விட்டா ஓ..ன்னு ஒப்பாரி வைச்சிருவேன்“ என கூறும்போதே அவள் குரல் கம்மத்தொடங்கியது.

இந்த பேச்சிலிருந்து அவள் தன் ஊரில் இருந்து மகன் வீட்டுக்கு தன் மகள் வயிற்று பேரனுடன் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. முதியவள் சலைக்காமல் மீண்டும் ஆரம்பித்தாள்.

“வீட்டுல ஒரு வேலக்காரிமாரி என்னய வெச்சுக்குனு இருந்துட்டு, இங்க வந்து பரோட்டா வேணுமான்னு, தோச வேணுமான்னு கேக்கறான். பாவி, சின்ன புள்ள இவன்கிட்ட அவன் கோபத்த காட்றான். “ இப்படி சொல்லிக் கொண்டே படுத்திருந்த சிறவனைப் பார்த்து “ ஏன்யா என் மடியில படுத்துக்கய்யா“ என்று கரிசனத்துடன் மடியில் கிடத்திக்கொண்டாள். இப்போது அவள் கண்கள் குளமாகி இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஒன்று மட்டும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பேச்சிலும் அவள் மருமகளைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட அவள் பேசவில்லை. ஒரு வேளை மகனிற்கு இல்லாத அக்கரையை மருமகளிடம் ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என்று தோன்றியது. இப்படி எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் நடத்துனரின் குரல் முதியவளின் புலம்பலை அடங்கச் செய்தது.

“ஏம்பா அவங்க அவங்க பக்கத்துல ஒக்காந்திருந்தவங்க இருக்கறாங்களான்னு பாத்துகோங்க“. இந்த குரல் ஒளித்தக்கொணடிருக்கும் வேளையில் முதியவளின் அருகில் வந்தமர்ந்தான் அவள் மகன். அவளை பார்த்தமாத்திரத்தில் “ஏன் இப்ப அழுவுற. ஒன்கிட்ட இதே கதையா போச்சு“ என்றவாறே ஓரக்கண்ணால் என்னை கவனித்தான். அதற்கு அவள் “வேணான்டா, நான் ஏதாவது பேசிற போறேன். பஸ்சாயிருக்கேன்னு பாக்குறன்டா“ என்று உடைந்த குரலில் கூறினாள். அவள் குரல் பிசிரடித்தது.

பேருந்து வேகமெடுக்க ஆரம்பித்தது. அதன் இரைச்சலில் அவர்களின் வாதம் கரைந்துபோயிற்று.

முதியவளின் ஆதங்கத்தை எண்ணிக்கொண்டே வந்த எனக்கு சட்டென ஒரு யோசனை “நாம் ஏன் இந்த முதிவளின் புலம்பலையே கருவாகக் கொண்டு சிறுகதைப்போட்டிக்கான கதையை எழுதக்கூடாது“.

மீண்டும் போட்டியின் சிந்தனையில் மூழ்கினேன். ஆனால் எந்த கதையும் தோன்றவில்லை. எப்படி கதை எழுதலாம் என்று யோசித்து யோசித்து சோர்வடைந்து உறங்கியேவிட்டேன். பேருந்து புதுச்சேரியை அடைந்தது. போட்டியை யோசித்தவாறே நான் வீட்டை அடைந்தேன்.

மறுநாள் மீண்டும் கதையைப்பற்றிய யோசனைதான். இந்த களத்திற்கேற்ற கதையை எப்படி எழுதலாம் என்று.

“உண்மையைத்தாங்க சொல்றேன் எப்படி எப்படியோ யோசிச்சிட்டேன், முதியவளின் புலம்பலை எப்படி கதையா எழுதறதுன்னு எனக்கு தோனவேல்ல. என்னப்பத்தி நெனச்சா எனக்கே வெக்கமாத்தான் இருக்கு. நல்ல கரு, களம் கிடைத்தும் என்னால ஒரு கதைக்கூட யோசிக்கவும் முடியல எழுதவும் முடியல. இந்த அழகுல எனக்கு சிறுகதை போட்டியில கலந்துக்க ஆச வேற“.

சிறுகதைப்போட்டியின் இறுதி நாளும் வந்தவிட்டது. இன்னும் எனக்குள் கதை வந்தபாடில்லை.

“ஐயா, யாருக்காவது அந்த முதியவளின் புலம்பலை ஒரு கதையா எழுத யோசனை இருந்தால் தயவுசெய்து சொல்லுங்க...............“

மதி
23-10-2012, 12:38 PM
தீர்ப்பு


சங்கர் & பத்மா விவாகரத்து வழக்கிற்கு அன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால், இரு வீட்டாரின் உற்வினரும் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவில் கூடிப் பதற்றத்துடன் காத்திருந்தனர்.

அவர்களது பத்ற்றம் தீர்ப்பை எதிர்பார்த்து அல்ல. விவாகரத்து கண்டிப்பாக கிடைத்துவிடும் என இருசாராருக்குமே வக்கீல்கள் உறுதியளித்திருந்தனர். அவர்களது கவலை, தீர்ப்பின்படி குழந்தை கண்ணன் யாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்பதிலேயேயிருந்தது.

கண்ணன் மீது உயிரை வைத்திருந்த பெற்றோர் இருவருமே மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என வாதிட்டனர்.

“எனக்கு ரொம்பப் பயமாயிருக்கும்மா. இவன் சின்ன வயசிலேர்ந்தே எதுக்கெடுத்தாலும் அப்பா, அப்பான்னு அவருக்கிட்ட போயித்தான் செல்லங் கொஞ்சுவான். நான் அப்பப்ப கண்டிக்கிறதினால எங்கிட்ட பயம் அதிகம்.

இவன் எதுக்கேட்டாலும் இல்லேன்னு சொல்லாம, அந்தாளு வாங்கிக் கொடுத்துடுவாரு. நான் அப்பாக்கிட்டத்தான் இருப்பேன்னு நீதிபதிகிட்ட இவன் சொல்லிட்டா என்னம்மா பண்றது? குழந்தையோட விருப்பத்தையும் கேட்டுத்தான் தீர்ப்பு சொல்வாஙகன்னு சில பேர் பயமுறுத்தறாங்களே!,” என்றாள் பத்மா, கவலை தோய்ந்த முகத்துடன்.

“எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும் ஒனக்கு ஏன் நம்பிக்கை வரமாட்டேங்குது? அதெப்படி அம்மா இருக்கும் போது அப்பாக்கிட்ட அனுப்புவாங்க? நம்ம நாட்டுல பொண்ணுங்களுக்கு ஆதரவாத் தான் சட்டம் இருக்குன்னு நம்ம வக்கீல் உறுதியாச் சொல்றாரில்லே? அப்புறம் எதுக்கு வீணாக் கவலைப்படறே?”

“இல்லம்மா. வர வர இவன் போக்கே சரியில்ல. கொஞ்ச நாளா எங்கிட்ட மொகம் கொடுத்தே பேசறதில்லே. அவன் அப்பன் மாதிரி சரியான நெஞ்சழுத்தம். மனசில என்ன நினைக்கிறான்னு வாயைத் தொறந்து எதுவும் சொல்ல மாட்டாங்கிறான். அவனோட மெளனம் என்னை ரொம்ப பயமுறுத்துது. நான் தான் இவன் மேல உயிரா இருக்கேனே தவிர, இவனுக்கு எம்மேல கொஞ்சம் கூட பாசம் இல்லேம்மா”.

”தோ பாரு. தேவையில்லாததையெல்லாம் நெனைச்சு மனசைக் குழப்பிக்காதே. இன்னிக்கு மத்தியானம் கூட அவனைத் தனியா அழைச்சுட்டுப் போயி புத்திமதியெல்லாம் சொல்லியிருக்கேன்.

ஒஙகப்பா ஆசையாக் கூப்பிடறாரேன்னு நம்பிப் போயிடாதேடா. அவரு ரொம்பப் பொல்லாதவரு. ஒங்கம்மாவை நம்ப வைச்சுக் கழுத்தறுத்தவரு. கொஞ்ச நாள்லேயே இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டு வந்துட்டாருன்னா, அதுக்கப்புறம் ஒன்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாரு.

சித்திக்காரி ஒன்னை ரொம்பக் கொடுமைப்படுத்துவா, அம்மா மாதிரி வேற யாரும் ஒன்னை நல்லாப் பார்த்துக்க மாட்டாஙக.. தாயற்றுப் போனா சீரற்றுப் போகும்னு சும்மாவா சொன்னாங்க? அதனால நீதிபதியோ, இல்ல ஒங்கப்பாவோ கேட்டாங்கன்னா, நான் அம்மாக்கிட்டத் தான் இருப்பேன்னு அடிச்சுச் சொல்லிடு,”ன்னு அவங்கிட்ட பக்குவமா எடுத்துச் சொன்னேன்.

அவன் எதுக்கும் மறுப்பே சொல்லலை. ”சரி, பாட்டி, சரி பாட்டி,”ன்னு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுத் தலையாட்டிக்கிட்டான்.

இந்தக் காலத்துப் ப்சங்க ரொம்ப சம்ர்த்துங்க. யார்கிட்ட இருந்தா தனக்கு நல்லதுன்னு அதுங்களுக்கு நல்லாவே தெரியும். அதிலேயும் சின்ன வயசிலேர்ந்தே இவன் ரொம்ப சூட்டிகை. அம்மா என்ன தான் திட்டினாலும், கண்டிச்சாலும் குழந்தைக்கு மொதல்ல அம்மா தான், அப்புறம் தான் அப்பா,” என்று பத்மாவைத் தேற்றினாள் அவள் அம்மா.

பெற்றோருக்கிடையில் பிரச்சினை துவங்கிய பிறகு, கண்ணனின் சுபாவம் வெகுவாக மாறிவிட்டிருந்தது. யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. அடிக்கடி மோட்டுவளையை வெறித்த வண்ணம் மெளனத்தில் ஆழ்ந்திருந்தான். படிப்பில் முதல் மாணவனாக இருந்தவன், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களையே பெறத் துவங்கினான்..

எந்த நேரமும் எதையோ பறிகொடுத்தது போன்ற தோற்றத்துடன் இருந்த அவ்னிடமிருந்து, கலகலப்பு முற்றிலுமாக விடைபெற்றுப் போயிருந்தது. அவனது இந்த மாற்றத்துக்கான காரணத்தைப் பற்றி வகுப்பு ஆசிரியை, அவனிடம் வினவிய போது எதுவும் கூற மறுத்துவிட்டான்.

அவனது நலனில் அக்கறை கொண்ட ஆசிரியை, அவன் நண்பர்கள் மூலமாக அவனது பெற்றோர் பிரிந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களை ஒரு நாள் பள்ளிக்கழைத்துப் பேசினாள்.

”தோ பாருங்க. ரெண்டு பேருமே பையன் மீது உயிராயிருந்து பாசத்தைப் பொழியிறீங்க. என்ன பிரயோசனம்? குழந்தை நல்லாயிருக்கணும்னு உண்மையிலேயே நீங்க ஆசைப் பட்டீங்கன்னா, ஒங்கப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துட்டு மறுபடியும் சேர்ந்து வாழணும்.

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழறது தான் வாழ்க்கை. யாரு மொதல்ல விட்டுக் கொடுக்கிறதுன்னு ரெண்டு பேர்க்கிட்டயேயுமே ஈகோ இருக்கு. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஈகோ என்ன வேண்டியிருக்கு?

ஒங்களோட இந்த முடிவால, அந்தப் பிஞ்சு மனசில பெரிய காயம் ஏற்பட்டிருக்கு. எதிர்காலத்தைப் பத்தி ஒரு பய உணர்வு தோணியிருக்கு. பாட்டு, டான்ஸ், பட்டிமன்றம்னு பள்ளிக்கூடத்தையே கலக்கிட்டிருந்த ஒங்க புள்ளை, இப்ப இருக்கிற இடமே தெரியாம அமைதியாயிட்டான். படிப்பிலேயும் கவனம் கொறைஞ்சுக்கிட்டு வருது.

இந்த மாதிரி சின்ன வயசில குழந்தை மனசு பாதிக்கப்பட்டுத் தவறான வழியில போக ஆரம்பிச்சிட்டா, அதுக்கப்புறம் நீங்க தலை கீழா நின்னாலும் திருத்த முடியாமப் போயிடும்.. பொறக்கும் போது எந்தப்புள்ளையுமே தீவிரவாதியா பொறக்கிறதில்லே. வளர்ற சூழ்நிலை சரியா அமையாம, சின்ன வயசுல பெத்தவங்கக் கிட்ட சரியான அன்பு கிடைக்காம ஏங்குற புள்ளைங்க தான், பின்னாடி வன்முறையில இறங்கித் தீவிரவாதியா மாறுறாங்க.

மகனோட வளமான எதிர்காலத்துக்காக தய்வு செஞ்சு ஒங்க முடிவை மறு பரிசீலனை பண்ணணும்.. பழசெல்லாம் மறந்துட்டு இன்னியேலேர்ந்து புது வாழ்க்கையைத் தொடங்குஙக. இல்லேன்னா ஒங்க மகனோட நெலைமையை நினைச்சுப் பின்னாடி ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்கும். நான் சொல்றதைச் சொல்லிட்டேன். அதுக்கப்புறம் ஒங்க இஷ்டம்”

”இல்லீங்க டீச்சர். இதே மாதிரி நெறைய கேட்டாச்சு. ‘இட்டீஸ் டூ லேட்’. அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி நாங்க வந்தாச்சு. இவருக்குப் பொண்டாட்டி முக்கியமில்லே. அம்மா இருந்தாப் போதும். இவருக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு. அவங்கம்மா பேச்சைக் கேட்டுட்டு, ஒருநாள் என்னைக் கை நீட்டி அடிச்சிட்டாரு. பொம்பிளை மேல கை நீட்டறவனெல்லாம் ஒரு ஆம்பிளையா டீச்சர்? நீங்களே சொல்லுங்க. இனிமே இவரோட சேர்ந்து வாழ முடியுங்கிற பேச்சுக்கே இடமில்லே. டீச்சர்,” என்றாள் பத்மா.


”இவ என்ன பண்ணினாள்னு கேளுங்க டீச்சர். கல்யாணம் ஆனவுடனே ஆம்பிளைங்க, அவங்களைப் பெத்தவங்களை அம்போன்னு நடுத்தெருவில விட்டுட்டு பொண்டாட்டி பின்னாடி ஓடி வந்துடணும். ஆனா பொண்டாட்டியோட அப்பா அம்மாவை மட்டும் தலையில தூக்கி வைச்சுக் கொண்டாடணும். மனுஷ ஜென்மமா இருந்தா குடும்பம் நடத்தலாம். ஒரு பேயோடு குடும்பம் நடத்த முடியுமா டீச்சர்? இனிமே சுட்டுப் போட்டாலும் எங்களுக்குள்ள ஒத்து வராது. .

என் பையன் மேல நீங்க இவ்ளோ அக்கறை எடுத்துக்கிறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ரொம்ப நன்றிங்க டீச்சர்.. அம்மா இல்லேன்னா என்ன, நான் அவனைத் தாய்க்குத் தாயா, தந்தைக்குத் தந்தையா இருந்து கவனிச்சுக்குவேன்,” என்றான் சங்கர்.

”அவனைப் பத்துமாசம் சுமந்து பெத்தவ நான் உயிரோடு இருக்கும் போது இவரு எதுக்குக் கவனிக்கணும்?. அவருக்கிட்ட கண்ணனை யாரு அனுப்புறதாச் சொன்னா?..நானே அம்மாவும் அப்பாவுமா இருந்து, நல்லபடியாக அவனை வளர்த்து ஆளாக்குவேன். அவன் எங்கிட்ட தான் இருப்பான்.”

”வாயை மூடுடி. பெத்துட்டா மட்டும் போறுமா? நீ வளர்த்த லட்சணம் தான் தெரியுமே! எம் புள்ளையை எங்கிட்டேயிருந்து பிரிச்சுடலாம்னு மட்டும் கனவு காணாதே. தீர்ப்பு யார் பக்கம் வருதுன்னு பொறுத்திருந்து பாரு. கண்ணன் கண்டிப்பா எங்கிட்ட தான் வருவான்” .

இருவரின் சண்டையை விலக்குவதற்குள் போதும் போது மென்றாகிவிட்டது ஆசிரியைக்கு. வீட்டில் இவர்களின் சண்டைக்கு நடுவில வளர்ந்த, கண்ணனின் நிலையை நினைத்துப் பரிதாபப்பட்டாள் அவள்.

நீதிமன்ற வளாகத்தில் பத்மா தாயிடம் புலம்பிக் கொண்டிருந்த அதே சமயத்தில், தன் தாயிடம் உள்ளக் குமுறலைக் கொட்டிக் கொண்டிருந்தான் கணேசன்..

”என்ன தான் திறமையான வக்கீலைத் தேடிப் பிடிச்சு நாம அமர்த்தியிருந்தாலும், சட்டம் பொம்பிளைகளுக்குத் தான் அனுசரணையா இருக்கும்மா. பையன் மேஜராகிற வரைக்கும் அம்மாக்கிட்ட தான் அனுப்புவாங்கன்னு எல்லாருமே சொல்றாங்க.. எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு.

புள்ளையை அவ கூட அனுப்பிட்டு, மேஜராகிற வரைக்கும் வாராவாரம் ஒரு நாள் மட்டும் நம்ம வீட்டுக்கு வர்ற மாதிரி தீர்ப்பு சொல்லிடுவாங்களோன்னு கவலையாயிருக்கு. இப்பத் தான் அவனுக்கு பன்னிரண்டு நடக்குது. அவனா விருப்பப்ப்பட்டு எங்கிட்ட வரணும்னா கூட, இன்னும் ஆறு வருஷம் காத்திருக்கணும். அவ என்னைப் பத்தி என்ன சொன்னாளோ தெரியலை, இப்பவே அவன் எங்கிட்ட கொஞ்ச்ம வித்தியாசமாத் தான் நடந்துக்கிறான் இன்னும் ஆறு வருஷத்துல, இவ என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவன் மனசைச் சுத்தமா மாத்திடுவாம்மா”.

”அப்டியெல்லாம் நடக்காதுப்பா. நீ கவலைப்படாதே. எப்பவுமே அவனுக்கு நீன்னா தான் ரொம்ப இஷ்டம். ஒங்கிட்ட வரத்தான் பிரியப்படுவான். கொழந்தைக்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுட்டுத் தான், நீதிபதி முடிவு சொல்லுவார். எவ்ளோ திமிரா யாரையும் சட்டை பண்ணாம, கால் மேல கால் போட்டுக்கிட்டு அங்க ஒட்கார்ந்திருக்கா பாரு அவ அம்மாவும் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு நம்மளைப் பார்த்து, ஏதோ காதுல ஓதிக்கிட்டுருக்கா.. இன்னியோட அவளுங்க திமிரு அடங்கணும். கொழந்தையை அவக்கிட்டேயிருந்து பிரிச்சாத்தான் அவக் கொட்டம் அடங்கும். நானும் வேண்டாத சாமியெல்லாத்தையும் வேண்டியிருக்கேன். நீ தைரியமா இரு,” என்று அவனைத் தேற்றினாள் அவன் அன்னை.

நீதிபதி வந்து இருக்கையில் அமர்ந்த போது, அங்கு அமைதி குடிகொண்டது.

”நீ ஏதாவது சொல்ல விரும்புறியா? நீ வேணுமின்னு ஒங்கப்பா அம்மா ரெண்டு பேருமே ஆசைப்படறாங்க. ஒனக்கு யார் கூடப் போக விருப்பம்? இங்கச் சொல்லப் பயமாயிருந்தா, நாம தனியா அறையில போய்ப் பேசலாம்,” என்றார் நீதிபதி கண்ணனைப் பார்த்து.

”வேணாம் சார். எனக்கொன்னும் பயமில்லே நான் இங்கியே பேசறேன்,”

என்று கணேசன் தைரியமாகத் துவங்கியதைக் கண்ட
பத்மாவின் இதயம், ’என்ன சொல்லப் போகிறானோ?’ என்ற பயத்தில் திக் திக் என்று அடித்துக் கொண்டது. ’

’கடவுளே! அப்பான்னு சொல்லணும்; அம்மான்னு சொல்லிடக்கூடாது ,’ ஆண்டவனிடம் அவசர உதவி வேண்டி நின்றான் கணேசன்.

”பரவாயில்லியே! தைரியமான பையனா இருக்குறியே! சரி.. சொல்லு. ஒனக்கு யார் கூட போக விருப்பம்?”.

”இவ்ளோ வயசானதுக்கப்புறம் கூட, என்னைப் பெத்தவங்களுக்கு அவங்களோட அப்பாம்மா வேணும். ஆனா இந்தச் சின்ன வயசில எனக்கு அப்பா அம்மா வேணுமேன்னு, ரெண்டு பேரும் கொஞ்சங் கூட கவலைப்படலே.

அப்பாவைப் பிரிஞ்சு அம்மாக்கிட்டேயோ இல்ல, அம்மாவைப் பிரிஞ்சு அப்பாக்கிட்டேயோ என்னால இருக்க முடியாது. இங்கக் கொஞ்ச நாள், அங்கக் கொஞ்ச நாள்னு தயவு செஞ்சு என்னை அனுப்பிடாதீங்க. அம்மாக்கிட்ட இருக்கிறப்போ, எப்பப் பார்த்தாலும் என் முன்னாடி அப்பாவைக் கரிச்சுக் கொட்டுவாங்க.. அப்பாக்கிட்ட போனா, பொழுதன்னிக்கும் அம்மாவைத் திட்டித் தீர்ப்பாரு.. அதனால யார் கூடவும் நான் போக விரும்பலே.

தயவு செஞ்சு என்னை எங்கியாவது ஒரு அனாதை ஆசிரமத்துக்கு அனுப்பிடுங்க. அப்பாம்மா யாருன்னு தெரியாம வளர்ற பசங்களோட நானும் ஒருத்தனா இருக்க விரும்புறேன். அங்கப் போனா தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்,” என்றான் கண்ணன்.

அவன் குரலிலிருந்த உறுதியும், கண்கள் உமிழ்ந்த வெறுப்பும்,
ஆணித்தரமாக அவன் பேசிய விதமும்,. தீர்ப்பை ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்த நீதிபதி உட்பட, அங்குக் கூடியிருந்த அனைவரையும் திடுக்கிட வைத்தது.

மதி
23-10-2012, 12:39 PM
அண்ணி என்றால்...

அம்மா வரலட்சுமி போன வாரம் இறந்துவிட்டாள். இறப்பு என்பது தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு சம்பவம். உற்றவருக்கோ உயிர்வேதனை. இந்த ஐம்பத்தெட்டு வருடவாழ்க்கையில் அம்மாவின் சிரமங்களையும் வேதனைகளையும் நான் நன்கு அறிவேன்.

எனக்கு ஐந்துவயதாகும்போது என் அப்பா தவறியதும் அப்போது பத்துவயது அண்ணன் ரகுவையும் என்னையும் ( ராம் ) எப்படி வளர்ப்பது என்று அம்மா குமுறி அழுததும், என் அப்பாவின் சாவுக்கு வந்தவர்கள் எங்கே இன்னும் ஒருநாள் இருந்தால் எங்கே குடும்பப்பொறுப்பை சிறிதாவது ஏற்கவேண்டி வருமோ என்று பயந்து அன்றைக்கே பல்வேறு காரணங்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டதும் அம்மா கதைகதையாகச் சொல்லி எங்களிடம் அழுதிருக்கிறாள்.

அப்பா இறந்தபோது அவர் விட்டுப்போனது இரண்டு தறிக்குழிகளும் இரண்டு படைமரங்களும் ( பட்டுச்சேலைத்தறியில் நெய்து முடித்துக்கொண்டே வரும் சேலையை சுருட்டிக்கொண்டே போகும் நீண்ட நால்பட்டை மரப்பலகை ) ஒரு ராட்டினமும் ஐந்து திருவட்டங்களும்தான். அவர் இருந்த வரையிலும் தறித்தொழிலில் முன்னேற்றம் என்பதைக் காணாமலேயே போய்விட்டார். காலமுச்சூடும் கூலிக்கு மாரடித்தே வாழ்க்கையை முடித்தவர். இப்போது ஏன் என் தந்தையை நினைக்கிறேன்..? ஒரு திறமையான கணவனாயும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் குடும்பப்பொறுப்பு மிக்க தலைவராகவும் இருந்திராத அவரை இப்போது நினைத்தாலும் கோபம் வரத்தான் செய்கிறது.

ஒருவாரம் ஆன நிலையில் இன்று காலை பட்டுசேலை காண்ட்ராக்டர் வந்து துக்கம் விசாரிக்கும் சாக்கில் அண்ணனிடம் இரண்டு தறிகளிலும் இருக்கும் முடிவுபெறாத சேலைகளின் அவசியத்தை நினைவுபடுத்திவிட்டுப் போய்விட்டார். வசதி உள்ளவர்களுக்குத்தானே துக்கம் எல்லாம் வருடக்கணக்கில் நீளும்..? அன்றாடம் சாப்பாட்டுப் பிரச்சினைகளில் காலம் தள்ளும் எங்களைப்போன்ற ஏழைகளுக்குத் துக்கம் ஏது..?

அம்மா இருந்தவரை அம்மா ஒரு தறியையும் அண்ணன் ஒரு தறியையும் நெய்துவந்தார்கள். அண்ணன் எட்டாவது கூட முடிக்கமுடியாத நிலையில் தனியாக எங்களை வளர்க்கக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கு உதவியாக இன்னொரு தறிக்குழியில் தள்ளப்பட்டுவிட்டார்.

தறிக்குழியில் ஒருமுறை விழுந்தவர்கள் மீண்டதில்லை என்பது எங்களைப்போன்ற நெசவாளர்களின் சாபம். கைகள் கண்கள் கால்கள் என எல்லாமே ஒற்றுமையாய் ஒருங்கிணைந்த நிலையில் இருந்தால் தான் பட்டுச்சேலை நெய்வது என்பது சாத்தியமாகும். அதிலும் பாதக்கோல்களை ( ஓடும் நூல் பாவினை மாற்றிப்பின்னலிட கால்களால் மிதிக்கும் வலது இடது மிதிகள். மரத்தால் ஆன பாதரட்சைப் போல இருக்கும். ) மாற்றி மாற்றி மிதித்து இரண்டு கைகளையும் இயந்திரம்போல் வலதும் இடதுமாக இயங்கவைத்து நூல்கண்டு பொருந்திய தறிநாடாக்களை ( மூங்கில் துண்டில் செய்யப்பட்டு கூர்மையான தந்தம் அல்லது துருப்பிடிக்காத இரும்பு மூக்கு வைக்கப்பட்ட கோல்கள் ) வலதும் இடதுமாக லாவகமாகப் பிடித்து அந்த வேகத்துக்கேற்ப சரியான நேரத்தில் ஜரிகை பார்டர்களை உருவாக்கும் ஜுங்கு எனப்படும் நூலியந்திரங்களையும் இயக்கி ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரண்டு மணிவரை தறி நெய்தால் ஐந்து நாட்களில் ஆயிரம் ரூபாய் பார்க்கலாம். தறி போடும் ஒருவரைத்தவிர இன்னொருவர் பட்டு நூல்களை சரிபார்த்து பட்டையத்தில் இழைத்து பின் ராட்டினத்தில் கண்டுகளைப் பொருத்தி நூல்கண்டுகளாக மாற்றி அமைக்க இன்னொரு உதவியாளர் தேவைப்படும்.

எப்படி எல்லாம் என் தாய் தனியாகக் கஷ்டப்பட்டு எங்கள் இருவரையும் வளர்த்திருப்பாள் என்பதை எனக்கு விவரம் வந்தபோது அறிந்தபோது அந்தத் தாய்க்கு ஒரு கோயிலைக் கட்டிக் கும்பிடலாம் எனத்தோன்றும். தனியாளாய்ச் சிரமப்பட்ட என் தாய்க்கு 14 வயதில் என் அண்ணன் தோள்கொடுக்க முன்வந்தபிறகு வீட்டில் இரண்டு தறிகளாயிற்று. வருமானம் இரண்டு மடங்கானாலும் விலைவாசியும் செலவுகளும் நான்கு மடங்கானதில் இரண்டு வேளைச் சோறும் ஒருவேளை நீராகாரமும் தவறாமல் கிடைப்பதே பெரிய வரமாகத்தான் பட்டது.

அண்ணன் ரகுவோ நான் தான் படிக்கமுடியவில்லை ராமாவது படித்து முன்னுக்குவரட்டும். நம் பரம்பரைச்சாபம் நீங்கி ஒரு நல்ல உத்யோகத்தில் வந்து உருப்படட்டும் என்று முடிவெடுத்தவராய் என்னைப் படிக்கவைத்தார். ஒரு தந்தையின் கண்டிப்பினையும் ஒரு அண்ணவின் விட்டுக்கொடுத்தலையும் ஒன்றாகக் கொண்ட என் அண்ணன் ரகு ஓர் அதிசயப்பிறவிதான். அவனது தியாகத்தால் இதோ நான் வீட்டில் சிரமப்பட்டாலும் படிப்பில் சூட்டிகையாய் இருந்ததால் எஞ்சினியர் கல்லூரியில் பி இ இரண்டாம் ஆண்டு படிக்கமுடிந்தது. ரகுவோ தனக்கென எதையும் செலவு செய்துகொள்ளமாட்டான். கிடைக்கும் வழிகளில் எல்லாம் காசு பார்க்க நினைக்கும் கடும் உழைப்பாளி. தறி நேரம் போக அச்சு பிணைத்தல் போன்ற வேலைகளையும் இரவு நேரத்தில் செய்து என் கல்லூரிச் செலவைச் சரிக்கட்டிக்கொண்டு இருந்தான். அம்மாவின் தறி சம்பாத்தியமும் அண்ணனின் சாமர்த்தியமும் சேர்ந்து என் படிப்புக்கும் எங்கள் மூவரின் வயிற்றுக்கும் ஓரளவு சரிக்கட்டி வந்தது.

அம்மாவின் சாமர்த்தியத்தைப்பற்றிக்கூறிக்கொண்டே போகலாம் என்றாலும் வயிற்றில் உயிர்போகும் வலியாகத் தொடங்கி அரசுமருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பைப் புற்றுநோய் எனக்கண்டறியப்பட்டு அரசு மருத்துவர்களின் பொறுப்பற்ற அறுவைச்சிகிச்சையால் அதிக ரத்தம் வெளியேறி இதோ போனவாரம் இறப்பதற்கும் முன்னால் ஆறுமாதத்திற்கு முன்பே அண்ணன் ரகுவுக்கு ஒரு திருமணத்தையும் செய்துவைத்துவிட்டதை பெரும் சாதனையாகச் சொல்லலாம். அதிக வசதி இல்லை என்றாலும் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த அண்ணி ஜானகி சொக்கத்தங்கம்தான். என் அம்மாவின் என் அண்ணனின் குறிப்பறிந்து நடப்பதிலும் தறிவேலைகளுக்கு மேல்வேலைகள் செய்து கொடுப்பதிலும் சுவையாகச் சமைப்பதிலும் அண்ணிக்கு நிகர் அண்ணிதான். நீ கொடுத்துவைச்சவ விசாலாட்சி உனக்கு தங்கம் போல மருமகள் வந்து இருக்கா என்று அக்கம்பக்கத்துப் பெண்களின் பொறாமைப்பேச்சுகளுக்கெல்லாம் ஒரு சிறுபுன்னகை மட்டும் தந்துவிட்டு மருமகளைப் பெருமையாகப் பார்ப்பாள் அம்மா.

எனது பிரிப்பரேட்டரி லீவில் ஒருவாரம் அம்மாவின் துக்கத்தில் கழிந்துவிட்டது. இனி எஞ்சி இருக்கும் ஒருவாரத்தில் இந்த ஆண்டுத்தேர்வுகளுக்குத் தயார்செய்யவேண்டும். தேர்வுக்கட்டணம் இன்னும் செலுத்திய பாடில்லை. தேர்வு தொடங்குமுன் கட்டாவிட்டால் இடையில் என்னை தேர்வெழுதாது நிறுத்திவைக்கும் ஆபத்தும் உண்டு என்ற நினைவு வந்ததும் இதை எப்படி அண்ணனிடம் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன். அவர் இப்போது தான் சற்றுத் தேறி தறியைத்தட்டித் துடைத்து மீண்டும் தறியை இயக்கும் ஆயத்தங்களில் மூழ்கி இருக்கிறார். அம்மாவின் தறியோ கடந்த ஒருமாதமாக அப்படியே கிடக்கின்றது. ஏற்கனவே கடன்கள் கொஞ்சம் ஏறிக் கிடக்கின்றது. என்னதான் அரசாங்க மருத்துவனையில் இலவச அறுவைச்சிகிச்சை என்று பெயர் இருந்தாலும் நிறைய மருந்துகளை எங்களை விட்டே வாங்கிவரச்சொல்லவே செலவுகள் எக்கச்சக்கமாகின. எங்கள் தறிக்காண்ட்ராக்டர் அவரால் கொடுக்க முடிந்த அளவுக்கு அட்வான்ஸ் ஆகவும் பத்தாயிரம் ரூபாயைத் துயர்துடைப்பு உதவியாகவும் கொடுத்தவை எல்லாம் கரைந்துபோயிருந்தன. அம்மாவின் ஈனச்சடங்குகளுக்கு சமூக ஃபண்டில் இருந்து கொடுத்து உதவி இருந்தார்கள். அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைக்கவேண்டும். இந்த நிலையில் தேர்வுக்கட்டணம் பற்றி அண்ணனிடம் எப்படிப்பேசுவது..?

என் தலையை யாரோ தடவியது போலிந்தது. தலையை உயர்த்தினேன், என் அண்ணிதான். ராமு நீ கலங்காதேப்பா.. அம்மாவுக்கு நல்ல சாவுதான் வந்துது. நோய்ப்பட்டு சிரிப்பாய்ச் சிரிக்க பாயிலயும் தரையிலயும் அசிங்கமாக்கிச் சாவும் சாவு இல்லாமல் இன்றும் இருப்பது போலவே நினைவுடன் பொசுக்குன்னு போனது நல்லது தான். தேத்திக்கோ ராமு. படிக்கவேண்டியதைப் படி என்றார்கள் அண்ணி. எனக்கு அழுகை அடக்கமுடியாமல் வந்துவிட்டது, யாராவது தேற்றும் போது உடைபட்டு விசும்பும் குழந்தைபோல அழுதேன். அழாதே ராமு. உங்க அண்ணன் எவ்வளவு தைரியமா அம்மா இல்லாத வாழ்க்கையை ஏத்துக்கிட்டாருன்னு பாரு. நாங்க ரெண்டுபேரும் உனக்கு இருக்கோம்ப்பா.. என்ற அண்ணியின் ஆதரவுச்சொல் என்னை ஆசுவாசப்படுத்தியது.

அப்போதுதான் ரங்கராஜன் மாமா வந்தார். தூரத்து மாமா உறவு. அண்ணனிடம் துக்கம் விசாரித்தவருக்கு காபி போடுக்கொடுக்க அடுக்களைக்குப் போனார்கள் அண்ணி.

‘’ என்னடா ரகு..? ஏன் சோகமா இருக்கே.. இதான் நமக்கு ப்ராப்தம்னு நினைச்சுக்கோப்பா. ஆகவேண்டியதைப் பாரு என்றவர் ரகு அண்ணாவைப்பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று நானோ அண்ணனோ எதிர்பார்க்கவில்லைன்னுதான் சொல்லனும்.

‘’ இனி என்னடா செய்யப்போறே..? ஒத்தைக்குழியில உலைவைக்க முடியாது. அமமா இருந்ததால் ஏதோ பொழப்பு ஒடிச்சு. பேசாம இன்னொரு குழியில் ராமுவை உக்காறவை. நாலு காசு தேத்தாத்தான் நாளைக்கு உனக்கு புள்ள பொறப்பு வந்தா சமாளிக்கமுடியும் ‘’ – இப்படி ஓர் அணுகுண்டைப் போடுவார் என நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

’’ இல்லீங்க மாமா.. ராமுவோட ரெண்டாவது வருசப்படிப்பு நடக்குது. இன்னும் ரெண்டு வருஷம் பல்லைக்கடிச்சு சமாளிச்சா அவன் ஒரு நல்ல வேலைக்குப் போய் அவன் வரையிலும் நல்லா இருக்கமுடியும். அதனால அவனை தறுக்குழியில் தள்ளுவதாக இல்லை. ‘’ அண்ணனின் குரல் திட்டவட்டமாக் ஒலித்தது.

’’ டேய் உலகம் புரியாமப் பேசாதே. உங்கம்மாவும் சம்பாதிச்சதால ரெண்டு வேளைக்காவது சாப்பிட முடிஞ்சுது. இனி எப்படி உன் தம்பியின் படிப்பையும் சமாளிச்சு குடும்பத்தை ஓட்டுவே..? ‘’

‘’ நான் இன்னும் எக்ஸ்ட்ரா வேலை செய்து எப்படியும் ராமுவைப் படிக்கவைச்சுடுவேன். ‘’ ஆக்ரோஷமாக அண்ணன் சொன்னபோது என் அண்ணன் வாயுரம் வளர்ந்து நிமிர்ந்து நின்றபோலிருந்தது.

‘’ இல்லைன்னா பேசாம ஜானகியை இன்னொரு தறி நெய்யச்சொன்னா என்ன..? ‘’ என்றார் மாமா. இது என்ன இவர் நம்மைக் குழப்பாம விட மாட்டாரோ என்று தோன்றியது. சட்டென்று அடிபட்டது போல நிமிர்ந்தார் அண்ணா. ‘’ நீங்க யோசிச்சுதான் சொல்றீங்களா மாமா..? ஜானகி நம்ம வூட்டுக்கு வந்த மஹாலட்சுமி. ஆறுமாதம் கூட ஆகலை. நம்ம ஜனங்கள்ல வீட்டுக்கு வந்த மருமகளை தறியில் தள்ளிய முதல் பாவியாக என்னை பாவம் செய்யச் சொல்றீங்களா..? ‘’ சினத்துடன் கேட்டார் அண்ணா.

இதற்குமேலும் நான் பதில் சொல்லாம இருந்தா மாமாவை அண்ணா அடிச்சாலும் அடிச்சுடுவார் போல இருந்ததால் நான் இடையில் நுழைந்தேன்.

‘’ அண்ணா.. அம்மா தறிக்குழியில் நானே உட்கார்றேன். ஆத்திரப்படாதீங்க..நிலைமை தெரிஞ்சு நாம தான் சமாளிக்கனும். படிப்பு என்ன பெரிசு அண்ணா..? படிச்சவன்லாம் இன்னும் வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு திரியிறான். கவலையை விடுங்கண்ணா.. ‘’ என்ற போது என்னை அறியாமலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. அம்மா.. அம்மா.. ஏன்ம்மா எங்களைவிட்டுப்போனே..?

‘’ பாருடா .. அதான் எதார்த்தம் தெரிஞ்ச புள்ள.. நீ தான் குதிக்கிறே கொதிக்கிற எண்ணையில விழுந்த தவளை மாதிரி. பிரச்சினை தீர்ந்துடுச்சு.. ‘’ என்று ஒருவித வெற்றிப்புன்னகை செய்தார் மாமா.

மாமாவுக்கு நான்கு மகன்கள் நாலுமே படிக்காமல் தறியில குந்தினதால் காசு புரளுது. தன் பிள்ளைங்க படிக்காம போனதைவிட நான் மேற்கொண்டு படிப்பது அவருக்கு உறுத்திக் கொண்டிருந்திருக்கும் போல. இப்போது குரலில் சந்தோஷம் தென்பட்டது.

‘’ எனக்கு கோபம் வரதுக்கு முன்ன போயிடுங்க மாமா. வயது மூத்தவர்னு தான் இத்தனை நேரம் பொறுத்துக்கிட்டிருந்தேன். என் தம்பி படிக்கனுமா தறிபோடனுமான்னு நான் தான் முடிவு செய்யனும்.. போங்க பொழப்பைப்பார்த்துக்கிட்டு..’’ அண்ணன் கத்தினார்.

’’ இருங்க சித்தப்பா.. காபி குடிச்சுட்டு போங்க ‘’ என்று சொல்லியபடி அண்ணி அவருக்கும் என் அண்ணனுக்கும் எனக்கும் காபி கப்களை நீட்டினாள். காபிகளை நாங்கள் எடுத்துக்கொண்டதும் நடுவாசலின் மேல் சாய்ந்துகொண்ட அண்ணி மாமாவிடம் கனைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்கள்

‘’ சித்தப்பா.. நீங்க பேசினதை நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். இந்த வீட்டுக்கு ஒரு மஹாலட்சுமியா என்னைக் கொண்டுவந்து வைத்து என்னை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட அம்மா போனபின் இந்தக் குடும்பத்துப் பொறுப்பு என்கிட்ட வந்துடுச்சுன்னு உங்களுக்குப் புரியாததா..? அம்மாவின் ஆசையும் ஏன் எங்க ஊட்டுக்காரருக்கும் இருந்த ஒரே ஆசை ராமுவைப் படிக்கவைத்து உத்யோகம் அனுப்பறது தான். குடும்பத்துல ஒருத்தியான எனக்குமட்டும் அந்த அக்கறை இருககாதா..? மருமகள்னா தறியில் இருக்கக்கூடாதுன்னு ஏதாச்சும் சட்டமா போட்டு இருக்காங்க..? நாளையில இருந்து அம்மா தறியில் நான் உக்காறப்போறேன். ராமு அவன் படிப்பை முடிக்கட்டும். ‘’

தீர்மானமாகச் சொல்லிய அண்ணியின் வார்த்தைகளை வெட்டிபேச வாயெடுத்த அண்ணனின் முயற்சியை ஒரு பார்வையால் தடுத்த அண்ணி என்னிடம், ‘’ ராமு நாளைக்கு காலேஜ் போயி எக்சாம் ஃபீசைக் கட்டிடு. நான் பணம் தரேன்..’’ என்றார்கள்.

மாமாவின் கண்களில் ஈயாடவில்லை.
என் வாய் அடைத்துக்கொண்டது. அம்மாவின் பேச்சுப் போலவே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு ரகமான பேச்சு. அம்மா எங்கேயும் போகவில்லை.

என் அண்ணியில் என் அம்மாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கியது. ஆனாலும் மனது நிறைந்தது.


முற்றும்

மதி
23-10-2012, 12:39 PM
சந்தேகம்


சைதாபேட்டை அனன்யா மகளிர் கல்லூரி நூலக வளாகத்தை விட்டு நான் வெளியே வரும்போது சரியாக மாலை 6.00 மணி. கடந்த எட்டு வருடங்களாக இங்குதான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன், லைப்ரரியனாக.

வெளியே வரும்போது யாரோ “லக்ஷ்மி” என்று கூப்பிட்டது போல் இருந்தது. திரும்பினேன். என்னை இல்லை. வேறு யாரையோ?

இன்று பார்த்து லேட். அப்பா காத்துக் கொண்டிருப்பார் பணத்திற்காக. ATM ல் பணம் எடுக்க வேண்டும். நகை ஆர்டர் கொடுத்திருந்தேன், தங்கையின் வளை காப்புக்காக. அதை வேறு வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும். இல்லைன்னா, அம்மா திட்ட ஆரம்பித்து விடுவாள்.

நேரம் பார்த்து, யாழினி, எனது உதவியாளினி, 5.00 மணிக்கு வேலை கொடுத்து விட்டாள். ஏதோ அவசரமாம். முடிக்க இவ்வளவு நேரம். அடிக்க வேண்டும் அவளை. இனிமேல்தான் ஆட்டோ பிடித்து, நகை வாங்கிக் கொண்டு, ATMல் பணம் எடுத்துக்கொண்டு, சென்ட்ரல் ஸ்டேஷன் போய், எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடித்து திருவள்ளூர் செல்ல வேண்டும். வீடு அங்குதான்.

இரவில் நகை, பணத்துடன் திருவள்ளூர் வரை செல்ல கொஞ்சம் பயம்தான். என்ன செய்வது? வேக வேகமாக, தி நகர் போய் நகையை வாங்கிக் கொண்டு, ரயில் நிலையம் அருகே பணம் எடுத்துக் கொண்டு, மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் ஏறினேன் யாரோ என்னை பின் தொடர்வது போன்ற உணர்வு. திரும்பினேன். சுமார் 45 வயது மதிக்கதக்க ஆள், கட்டையான உருவம், பத்து நாள் தாடி, என்னையே குறு குறு வென்று பார்ப்பது போல் இருந்தது. ஒருவேளை ஜெவேல்லேரியிலிருந்து தொடர்கிறானோ? ATM ல் பணம் எடுக்கும் போது பார்த்திருப்பானோ?

கைப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டே மின்சார வண்டியில் முதல வகுப்பில் ஏறினேன். அவனும் என்னைத்தொடர்ந்து ஏறினான். கம்பார்ட்மெண்ட்டில் சுமாரான கூட்டம். அவனைப்பார்க்காத மாதிரி ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.

பார்க் ஸ்டேஷன்ல வண்டி நின்றவுடன் இறங்கி சென்ட்ரல் ஸ்டேஷன் நோக்கி விறு விறுவென நடந்தேன். எதேச்சையாய் திரும்பினால், தாடிக்காரன்.. என்னைப் பார்க்காதது போல் பின்னாடியே வந்துகொண்டிருந்தான். என் படபடப்பு அதிகமாயிற்று. மணியோ 7.30. இரவு. கையில் நகை, ரூபாய்40,000 ரொக்கம். திருவள்ளூர் ஒரு கோடி போகவேண்டும். “இந்த அப்பா ஏன் திருவள்ளூரில் வீடு கட்டினாரோ?” திட்டிக்கொண்டே நடந்தேன். திருட்டுத்தனமாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். தாடிக்காரனைக்காணோம். அப்பாடா!. அனாவசியமாக பயந்து விட்டேனோ? வீட்டில் சொன்னால், அப்பா, அம்மா, அக்கா மட்டுமல்ல, அக்கா பையன் நிகிலும் சிரிப்பான். “சரியான சந்தேகபேர்வழி, பயந்தாங்கொள்ளி” என்று.

வீடு சேர 10 மணியாகிவிடும். அப்பா டென்ஷன் ஆகி விடுவார். மொபைலில் கூப்பிட்டு “ லேட்டாகும்பா! பயப்பட வேண்டாம்!” என்றேன். அப்பா கொஞ்சம் கவலைப்படற ஜாதி. “பத்திரம்! வேணுமென்றால் நான் ஸ்டேஷன் வரட்டுமா லஷ்மி” என்றார். அப்பாவுக்கு என்னை விட நகை, பணம் பேரில் கவலை. “வேண்டாம் வேண்டாம், ஸ்டேஷன் லேதான் என் ஸ்கூட்டி இருக்கே” நிராகரித்தேன்.

திருவள்ளூர் செல்லும் மின் வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பார்த்துக் கொண்டே நடந்தேன். லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் கொஞ்சம் கூட்டம். சிக்னல் விழுந்து விட்டது. பக்கத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறினேன். யாரோ என்னை இடித்துக்கொண்டே ஏறினார்கள்.

“இடியட்”. திட்டிக்கொண்டே திரும்பினேன். திக்கென்றது. அதே தாடிக்காரன். மாம்பலத்திலுருந்து என்னைத் தொடர்ந்து இங்கும் ஏறி விட்டான். நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்துக்கொண்டு, நெஞ்சு படபடக்க உள்ளே உட்கார்ந்தேன். எதிர் இருக்கையில் இருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி மெலிதாக முறுவலித்தாள். சக பிரயாணி. நானும் பதில் புன்னகை பூத்தேன்.

தாடிக்காரன் இரு வரிசை தள்ளி என்னைப் பார்த்தபடி உட்கார்ந்தான். கொஞ்சம் உதறல்தான் நகையையும், பணத்தையும் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டுமே!. கடவுளே! என்னைக் காப்பாற்று.- வேண்டிக்கொண்டேன். எங்கே பார்த்தாலும் கொள்ளை, நகை பறிப்பு பற்றி தினசரியில் படிப்பதால், எனக்கு பயத்தில் கொஞ்சம் ஜுரமே வந்தது போலிருந்தது.

வண்டி திருவள்ளுரை நெருங்க நெருங்க முதல் வகுப்பு காலியாகிவிட்டது. நானும் தாடிக்காரனும் மட்டும்தான். கத்தி, கித்தி எடுத்து மிரட்டுவானோ? குத்தி விடுவானோ? ஏன்தான் முதல் வகுப்பில் ஏறினேனோ? அவன் மெதுவாக எழுந்து என்னை நோக்கி நடப்பது போலிருந்தது.

பயத்தில் என்ன செய்கிறேனேன்றே தெரியவில்லை. அவசர அவசரமாக, கைப்பையை எடுத்துகொண்டு திருவள்ளூரில் வண்டி நிற்கும்முன் பிளாட்பாரத்தில் குதித்தேன். வலது கால் கொஞ்சம் மடங்கியது. நல்ல வேளை. சமாளித்துக் கொண்டேன். “ பார்த்து, பார்த்து” சத்தம் கேட்டது லேடீஸ் கம்பார்ட்மெண்ட் அருகில்..

திரும்பினேன். முதல் வகுப்பில் தாடிக்காரன் நான் உட்கார்ந்திருந்த இருக்கை பக்கத்திலிருந்து கூவி அழைத்தான்.

”சார், சார், கொஞ்சம் நில்லுங்க! அவசரத்தில் உங்க பர்ஸ் கீழே விழுந்ததை பாக்காம போறீங்களே?”

வெட்கமாக இருந்தது எனக்கு. பயத்தில் பர்ஸ் எனது பாண்ட்பாக்கேட்டிலிருந்து விழுந்ததைக்கூட கவனிக்கவில்லை. நின்று பர்சை வாங்கிக் கொண்டேன். “ரொம்ப தேங்க்ஸ்” – நான்

“சார்! உங்களை எனது கசின் யாழினியுடன் பார்த்திருக்கிறேன். அனன்யா மகளிர் கல்லூரிலே தானே வேலை பார்க்கிறீர்கள்? நானும் திருவள்ளுர்தான். கொஞ்ச நாளாச்சு இங்கே வந்து”- தாடிக்காரன்.

“அடக் கடவுளே! என்ன ஒரு சந்தேகம் எனக்கு” – எனக்குள் திட்டிக்கொண்டே, தாடிக்காரருக்கு மறுபடி ஒரு தேங்க்ஸ் போட்டுவிட்டு, டூ வீலர் ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன், லஷ்மி நரசிம்மன் ஆகிய நான்.

****

மதி
23-10-2012, 12:40 PM
புரிதல்...

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக்கு "டாடி..." என ஓடி வரும் பிள்ளைகளின் சத்தமின்றி வீடு அமைதியாய் இருந்தது ஆச்சிர்யமளித்தது

"தேவி... கொஞ்சம் காபி குடேன்" என்றபடி சோர்வாய் சோபாவில் அமர்ந்தான்

சற்று நேரம் பதில் வராமல் போக "தேவி... என்ன பண்ற? கொழந்தைங்க எங்க சத்தமே காணோம்?" என்றபடி சமையல் அறைக்குள் சென்றான்

அங்கு சமையல் அறையின் ஒருபுறம் போடப்பட்டிருந்த உணவு மேஜையில் அமர்ந்து குழந்தைகள் இருவரும் பள்ளி புத்தகத்தில் ஒரு பார்வையும் எதிரில் அமர்ந்திருந்த அன்னையின் மேல் ஒரு பார்வையுமாய் அமைதியாய் எழுதி கொண்டிருந்தனர்

ஏதோ பிரச்சனை செய்து பெற்றவளிடம் இருவரும் திட்டு வாங்கி இருக்கிறார்கள் என புரிந்தவனாய், சூழ்நிலையை சரியாக்கும் எண்ணத்தில் "ஹாய் செல்லம்ஸ்" என்றான் பிள்ளைகளை பார்த்து

தேவி அவனை முறைக்க "உன்னையும் சேத்து தான்" என்றான் பிள்ளைகள் அறியாமல் மையலாய் சிரித்து

தேவி உணர்ச்சி மாறாத முகத்துடன் பார்க்க "கொஞ்சம் காபி குடேன் ப்ளீஸ்" என்றான்

அவள் பதில் பேசாமல் எழுந்து அடுப்பின் அருகே செல்ல "என்னாச்சு?" என செய்கையால் பிள்ளைகளிடம் வினவினான்
பெரியவள் நிவேதா பதில் சொல்ல வர, அதற்குள் தேவி "நிவி, மாத்ஸ் ஹோம் வொர்க் முடி சீக்கரம், நாளைக்கி ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும் ஞாபகமிருக்கில்ல" என அதட்டினாள்

நிவேதா பாவமான முகத்துடன் எழுதுவதை தொடர, சின்னவள் ஸ்வேதா "மம்மி நான் பினிஷ் பண்ணிட்டேன். ப்ளே கிரௌண்டுக்கு போட்டுமா?" என எதிர்பார்ப்புடன் கேட்டாள்

"மிட் டெர்ம்ல நீ வாங்கிட்டு வந்திருக்கற மார்க் லட்சணத்துக்கு இனி ஒரு மாசத்துக்கு நோ ப்ளே கிரௌண்ட்... ஒழுங்கா உக்காந்து படி, இல்லேனா அடி பின்னிடுவேன்" என பெற்றவள் கோபமாய் கத்த, கண்ணில் நீருடன் தந்தையை பார்த்தனர் இருவரும்

"என்ன தேவி இது, பாவம்மா பசங்க. தினமும் கொஞ்ச நேரமாச்சும் விளையாடினாத்தான் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்" என்றான்

"ஆமா, உங்க புள்ளைங்க பாவம், நீங்க பாவம், வழில போற வர்றவங்க எல்லாரும் பாவம். இந்த உலகத்துலயே பாவம் இல்லாத ஜென்மம்னா அது நான் மட்டும் தான். உங்க எல்லாருக்கும் ரிலாக்ஸ் பண்ணிக்கணும். நான் மட்டும் எப்பவும் மாடு மாதிரி வேலை செஞ்சுட்டே இருக்கணும். எல்லார் வாய்லயும் விழணும்னு என் தலைல எழுதி இருக்கு. நான் பொறந்த நேரம் அப்படி" என கத்தலாய் தொடங்கிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்ருதி குறைந்து விசும்பலில் முடிய, இது வேறு ஏதோ பிரச்சனை என புரிந்தவனாய் பிள்ளைகள் முன் பேச வேண்டாம் என்பது போல் மௌனமானான் கார்த்திக்

பெற்றவள் கண்ணில் நீரை கண்டதும் பிள்ளைகள் இருவரின் முகம் வாடியது. அது காண சகியாமல் "சீக்கரம் ஹோம் வொர்க் முடிச்சா ப்ளே கிரௌண்ட் போலாம்" என கார்த்திக் சொல்ல

"ஹய்யா" என குதித்த பிள்ளைகள், அடுத்த கணம் அன்னையின் சம்மதம் கேட்பது போல் பாவமாய் தேவியை பார்த்தன

அவர்களோடு கார்த்தியும் கெஞ்சலாய் பார்க்க, "என்னமோ செய்ங்க" என தேவி எழுந்து தங்கள் அறைக்குள் செல்ல, அதையே சம்மதமாய் ஏற்று கொண்டவர்கள் போல் இருவரும் எழுதி முடித்து விளையாட சென்றனர்

பிள்ளைகள் செல்லும் வரை அமைதியாய் இருந்த கார்த்திக், பின் தேவியை தேடி அறைக்குள் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே முழங்காலில் முகம் புதைத்து படுக்கையில் அமர்ந்திருந்தவளை ஆதரவாய் தோள் தொட்டான்

அதற்கே காத்திருந்தவள் போல் அவன் மடி சாய்ந்து விசும்பினாள். சின்ன பிரச்னையை கூட தாங்கிகொள்ள முடியாத மென்மையான மனம் கொண்டவள் தன் மனைவி என்பதை உணர்ந்தவன் என்பதால், தானே சமாதானமாகட்டும் என நினைத்தவனாய் மௌனமாய் அவள் தலைகோதி அமர்ந்திருந்தான்

"என்னம்மா... ஆபீஸ்ல எதுனா பிரச்சனையா?" என மெல்ல பேச்சை ஆரம்பிக்க, இல்லை என்பது போல் தலை அசைத்தாள்

"என் மேல எதுனா கோபமா?" எனவும், அவசரமாய் இல்லை என்றாள்

"வேற என்ன?"

"இன்னைக்கி அம்மா ஆபீசுக்கு போன் பண்ணி இருந்தாங்க. அக்கா வீடு கட்ட போறாளாம். ஒரு பையன வெச்சுட்டு இருக்கற அவளே வீட்டு கட்றா, நீ ரெண்டு பொண்ணுகள வெச்சுட்டு இன்னும் பொறுப்பில்லாம இருக்கியேனு...எனக்கு ரெம்ப கஷ்டமா இருந்ததுங்க. ஆபீஸ்லயும் வேலை ஜாஸ்தி, வீட்டுக்கு வந்தா இதுக ரெண்டும் மிட் டெர்ம்ல மார்க் கம்மினு எல்லாமும் சேந்து டென்ஷன் பண்ணிடுச்சு. எங்கம்மாவுக்கு எங்கக்கா தான் எப்பவும் ஒசத்தி" என பெருமூச்சுடன் நிறுத்தினாள்

"உங்கம்மா சொன்னதுல தப்பொன்னும் இல்லடா. நாம நல்லா இருக்கணும்ங்கற எண்ணத்துல தான் சொன்னாங்க. அந்தந்த ஸ்டேஜ்ல பெத்தவங்களுக்கு பிள்ளைங்க மேல இருக்கற எதிர்பார்ப்புகள் தானே"
"அதில்லைங்க..." என்றவளை கை அமர்த்தியவன்

"நமக்கு எப்ப வீடு கட்டனும்னு இருக்கோ அப்ப தான் நடக்கும். நீ டென்ஷன் ஆகி கத்தினா இன்னைக்கே நடக்குமா? நீ டென்ஷன் ஆனா அது என்னையும் கொழந்தைங்களையும் பாதிக்கும்னு உனக்கு தெரியும் தானேடா" என கார்த்திக் வருத்ததுடன் கூற

அது அவளையும் வருத்த "தப்பு தான்...சாரி. இனிமே இப்படி இருக்க மாட்டேன். ரியலி சாரி" என மன்னிப்பு கோரும் குரலில் தேவி கேட்க,
ஒன்றும் பேசாமல் சிறு புன்னகையுடன் அவளை அணைத்து கொண்டான் கார்த்திக்

சற்று நேரம் அப்படியே இருந்தவள் "பேசாம சின்ன குழந்தையாவே இருந்துருக்கலாம், எந்த கவலையும் இல்லாம நிம்மதியான ஸ்டேஜ் இல்லையாப்பா" என ஏக்கத்துடன் தேவி கூற

"அப்படி எல்லாம் இல்ல தேவி. நேத்து நல்லா இருந்ததுனு நினைக்கறது தான் மனுஷ இயல்பு, ஏன்னா அந்த நேத்தை நாம வெற்றிகரமா கடந்துட்டோம்ங்கற நிம்மதி தான் காரணம்"

"எனக்கு ஒண்ணும் புரியல" என முகம் சுளித்தாள்

"இந்த குட்டி மண்டைல ஏறுற விதமா சொல்றேன் இரு. தேவிம்மா... அந்தந்த வயசுக்கு அந்தந்த டென்ஷன் கண்டிப்பா இருக்கும். ஆனா அந்த பருவம் தாண்டினதும் அதுலயே இருந்துருக்கலாம்னு தோணும். ரெண்டு வயசுல வீட்ல அடைச்சு வெக்கும் போது, எப்படா ஸ்கூலுக்கு போவோம்னு இருக்கும். அதே ஸ்கூலுக்கு போகணும்னு கட்டாயம் வரும் போது, ச்சே வீட்லயே இருக்கலாம் முன்னி மாதிரினு தோணும். அப்புறம் இந்த ஸ்கூல் டென்ஷன் இல்லாம சீக்கரம் காலேஜ் போயிரணும்னு தோணும். காலேஜ் போனதும், ஸ்கூல் லைப் தான் ஜாலினு தோணும்"

தேவி "ம்..." எனவும்

"நான் என்ன கதையா சொல்றேன்" என செல்லமாய் அடித்தவன்

"காலேஜ் படிக்கும் போது அப்பா கேக்கற பாக்கெட் மணி தரலைன்னு சொன்னா, சீக்கரம் வேலைக்கு போய் சம்பாதிக்கணும்னு தோணும். அதே வேலைக்கு போனப்புறம் காலேஜ் லைப் மாதிரி வராது அங்கலாய்ப்பு வரும். அதோட முடிஞ்சதா, அப்பறம் கல்யணம் ஆகலைனு டென்ஷன், அப்புறம் குழந்தை இல்லையே இன்னும்னு டென்ஷன். பிள்ளைக்கு ஸ்கூல் அட்மிசன் டென்ஷன், அவங்க எதிர்காலம் பத்திய டென்ஷன், வீடு சொத்து சேக்கணும்னு டென்ஷன்...அப்புறம்..."

"போதும் போதும்... எனக்கு தலையே சுத்துது. இப்ப எனக்கு டென்ஷன் இன்னும் ஜாஸ்தி ஆய்டுச்சு" என சிணுங்கினாள்

"தேவி... இதை டென்சனா எடுத்துகிட்டா வீணா ஒடம்பும் மனசும் தான் கெட்டு போகும். அதுக்கு பதிலா பொறுப்புகளா எடுத்துகிட்டா, அது உந்துசக்தியா இருந்து நம்மள சாதிக்க வைக்கும், அப்படி இருக்கறவன் சாதிக்கறான், டென்ஷன் ஆகறவன் தோத்து போறான், அதான் வித்தியாசம். நம்ம வாழ்க்கையோட வெற்றி தோல்விய தீர்மானிக்கறது நாமளே தான், புரிஞ்சதா?"

"நல்லாவே புரிஞ்சது. என் புருஷன் அதிபுத்திசாலினு கூட புரிஞ்சது" என்றாள் கேலியும் பெருமிதமும் கலந்த குரலில்

"என்ன புத்திசாலியா இருந்து என்ன பண்றது. என் புள்ளைங்களோட அம்மா விசயத்துல ஏமாந்துட்டனே" என பாவமாய் அவன் கூற

ஒரு கணம் விழித்தவள், புரிந்ததும் முறைக்க "ஆனா இப்படி ஒரு பார்வை பாத்தே கிளீன் போல்ட் பண்ணிடறியே தேவி" என காதலாய் பார்க்க, "அங்க மட்டும் என்னவாம்" என முணுமுணுத்தவளை, புன்னகையுடன் தன் அணைப்பில் இணைத்து கொண்டான் கார்த்திக்


(முற்றும்)

மதி
23-10-2012, 12:41 PM
பந்தா !


புதிதாக முளைத்த காலனியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள். இன்னும் நிறைய இடங்கள் நடுநடுவே காலி மனைகளாகவே நின்று கொண்டிருக்க ... அவசர நேரத்தில் கூட யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத நெருக்கடி என்பது தெளிவாக புலப்பட்டது. நடக்கும் பாதை மேடு பள்ளமாக சீரில்லாமல் இருந்தது. பாதையின் இருபக்கமும் சிறு சிறு இடைவெளியில் வேப்ப மரங்கள் அடர்த்தியாய் நின்று தலை அசைத்துக் கொண்டிருந்தன.

சுனந்தா, வனஜா இருவருக்கும் மனதுக்குள் படபடப்பாக இருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கி இருபது நிமிட நடைப்பயணம் மேற்கொண்டால் தான் அந்த காலனியில் இருக்கும் அவர்கள் உறவினர் வீட்டிற்கு போய் சேர முடியும். உட்புறம் பாதை இன்னும் சீரமைக்கப்படாததால் பேருந்து மெயின் ரோட்டிலியே நின்றுவிடும். இதற்கு முன் எத்தனையோ முறை தனியாக அந்த பாதையில் வந்திருக்கிறார்கள் . அப்போதெல்லாம் தெருவில் மின்சார விளக்குகள் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்த நேரம். இந்த இரண்டு மூன்று மாதங்களாக எப்போது மின்வெட்டு என்று தெரியாமல் ஒளியும், இருளும் மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் வீடு போய் சேருவதற்குள் பாதை இருட்டாகிவிடுமோ என்று பயமாக இருந்தது. இருவருக்கும் கழுத்தில் ஆறு பவுன் சங்கிலி கனமாக தொங்கிக் கொண்டு இருந்தது. இது போன்ற இருட்டு நேரங்களில் வழிப்பறி, கொள்ளை இன்னும் என்னன்னவோ நடக்கிறதே?

எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு எட்டி நடை போட்டார்கள். கட்டியிருந்த புடவை வேறு காலைத் தடுக்கியது. மழைத் தூறல் சாரலாய் ஆரம்பிக்க வானம் எப்போதும் விட முன்னதாகவே கருமை வண்ணம் பூசிவிட்டது. அவசரமாக குடையை விரித்தாள் சுனந்தா. மழைத்துளிக்காகவே காத்திருந்தது போல மின்சாரம் துண்டிக்கப்பட கையில் இருந்த செல் டார்ச்சின் சன்னமான வெளிச்சம் தவிர வேறு எந்த வெளிச்சமும் இல்லை. எப்போதாவது ஒரு முறை தாண்டி செல்லும் ஒரு சில பைக்குகளையும், சைக்கிள்களையும் தவிர வேறு நடமாட்டம் இல்லை. பின்னால் காலடி ஓசை கேட்க இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை. எல்லாம் பிரமையா?

சீக்கிரம் நட வனஜா.. யாரோ பின்னால பாலோ பண்ற மாதிரி இருக்கு.... சுனந்தா அவசரப்படுத்த .....
மீண்டும் பின்னால் சரசரவென்று காலடி ஓசை கேட்டது. என்னவென்று சுதாரிப்பதற்குள் இரண்டு முரட்டு தடியன்கள் அவர்கள் வாயை இறுக்கி மூடிவிட கத்துவதற்கு கூட வழியில்லாமல் போனது. சுனந்தாவும், வனஜாவும் அவர்கள் பிடியில் இருந்து விடுபட திமிறிக் கொண்டு இருந்தார்கள்.

சீக்கிரம் செயினப் பறிடா... எவனாவது வந்து தொலைக்க போறான்... ஒருவன் அவசரக் குரல் கொடுக்க ...
மூன்றாவதாக ஒரு ஆள் அந்த பெண்களின் கழுத்தில் கை வைத்த நேரம் அங்கிருந்த வேப்ப மரங்களின் மீதிருந்து தப தபவென்று பலர் குதிக்கும் காலடி ஓசை கேட்க... மூன்று வழிப்பறித் திருடர்கள் மீதும் முரட்டு அடிகள் சரமாரியாக விழுந்தன.... கிடைத்த இடைவெளியில் சுனந்தாவும், வனஜாவும் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

விரைந்து வந்த காவல் துறை வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சத்தில் மப்டியில் இருந்த போலீஸ் அந்த வழிப்பறி திருடர்களை அடித்துத் துவைத்து இருந்தது தெரிந்தது. ஒரு மாதமாக அந்த ஏரியாவில் அடிக்கடி வழிப்பறி, செயின் திருட்டு நடப்பதாக வரிசையாக காவல் நிலையத்தில் புகார் மனு. இன்று திட்டம் போட்டு தான் சுனந்தா, வனஜா என்ற இரு லேடி கான்ஸ்டபிள்களை அந்த பாதையில் நடக்கவிட்டு திருடர்களை வளைத்துப் பிடித்தனர்.

அங்கே போலீஸ் ஸ்டேஷனில் கிடுக்கிப் பிடி விசாரணை நடந்து கொண்டிருந்தது. மூன்று கொள்ளையர்களும் இளவயதினர் தான். பார்வைக்கு கல்லூரி மாணவர்களைப் போல இருந்தார்கள்.

இன்னும் எத்தன இடத்துல உங்க கைவரிசைய காட்டி இருக்கீங்க.? கொள்ளை அடிச்சத என்னடா பண்ணுனீங்க...போலீசாரின் ஒவ்வொரு கேள்வியோடும் அடி இடியாய் இறங்க...

சார்... எங்கள விட்டுடுங்க சார்... எல்லாமே திருப்பிக் குடுத்துடறோம். நாங்க ### காலேஜ் ல படிக்கறோம் சார். எங்க கூட படிக்கற பிரெண்ட்ஸ் எல்லாம் பயங்கர பந்தாவா இருப்பாங்க சார்... நாங்களும் ஆளுக்கு ஒரு பைக் வாங்கிட்டு ஸ்டைலா ஊற சுத்தணும்னு ஆசைப்பட்டோம். வீட்ல வாங்கி தர முடியாதுன்னு சொன்னாங்க. தப்பான வழில இறங்கிட்டோம் சார். விட்டுடுங்க சார்.. கேஸ் எல்லாம் போடாதீங்க சார்... எங்க எதிர்காலமே வீணா போயிடும்... காலில் விழாத குறையாக மூவரும் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

உங்கள பெத்தவங்க நீங்க நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்னு காலேஜ்க்கு அனுப்பிச்சா பொறுக்கித்தனம் பண்ணிக்கிட்டு திரியறீங்க. பைக் எடுத்துட்டு ஊரைச் சுத்திட்டு பொம்பள புள்ளைங்களுக்கு ஷோ காட்டணும். அதுக்கு திருட வேற சொல்லுது. இதுக்காகவே உங்கள இன்னும் நாலு செக்ஷன் ல போட்டு உள்ள தள்ளணும் டா. வாழ்க்கைல படிச்சோ , உழைச்சோ முன்னுக்கு வரணும்னு நினைக்கறவன் தாண்டா எதிர்காலம் பத்தி பேசணும். நீங்க எல்லாம் ஏண்டா எதிர்காலத்த பத்தி பேசிகிட்டு . உங்கள மாதிரி ஆளுங்கள மன்னிச்சு வெளிய விட்டா மத்தவங்க வாழ்க்கையும் சேர்ந்து இருண்ட காலமா மாறிடும். ராமதுரை... மூணு பேர் மேலையும் எப் .ஐ .ஆர் போடுங்க... சொல்லிவிட்டு மிடுக்காய் சென்று ஜீப்பில் அமர்ந்தான் இருபத்து ஐந்து வயதே ஆன இன்ஸ்பெக்டர் அஸ்வின்.

இளைஞர்கள் போகும் பாதையை பொறுத்ததே அவர்கள் வாழ்க்கை. அஸ்வின் போலவும் ஆகலாம்... அந்த திருடர்களைப் போலவும் மாறலாம்... வாழ்வதும் , வீழ்வதும் அவரவர் {நம்பிக்} கையில்..!!

மதி
23-10-2012, 12:42 PM
வீரபத்திரன் ...




அப்போதுதான் பேரலை நுரை கக்கி விட்டுப் பின்னோக்கியது.

குளிர் கண்டவனுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு மூலிகைப் பெட்டியும் கையுமாய் ஈர மண்ணில் நடந்து வந்தவர், சற்று தடுமாறியவராய், "எதோ பார்வையில் பட்டதே அதைக் கவனித்தும் நின்று நிதானித்துப் பாராமல் கடந்து வந்து விட்டேனே" என நினைத்துத் திரும்பிப் பார்த்தார் கூர்ந்து நோக்கினார் பரியாரி பெரிய தம்பி.

புதிய இரண்டு மூன்று தடங்களைத் தவிர பழைய அவரின் காலடித் தடங்கள் அலையில் கரை பட்டுப் போயிருந்தன.

புதைந்திருந்த ஒரு கருங் கல் தலை நீட்டிக் கொண்டிருந்தது, சூரிய கதிர் பட்டு வெளிச்சத்தில் வெண் தரையில் மினுங்கியது, அது ஒரு சிறந்த வகைக் கல்லாய் அவருக்கு புலப்பட்டது , அது இந்த இடத்துக்கு ஒரு அந்நிய பொருளாய் தெரிந்தது. கல்லும் பாறையும் கனிமமும் உலோகங்களும் அவர் மருந்துக்கு மூலப்பொருட்கள். அவைகளே அவர் தேடு பொருட்கள்.

அவசரமாய் மண்ணை விலக்கி எடுத்தவர் அதை ஆவலோடு நுணுக்கமாய் ஆராய்ந்தார்.

எதோ உணர்ந்தவர் போல் கண்ணை அகலவிரித்து ஆச்சரியத்தோடு, முழம் அளவுள்ள அந்தக்கருங்கல் துண்டை பிரட்டிப் பிரட்டிப் பார்த்தார் சின்னத்தம்பி பரியாரி பரவசப் பட்டார் மெய் சிலிர்த்தார்,

.......கொடுக்கை இழுத்துக் கட்டிக் கொண்டு ஓடினார் துள்ளினார்........கடல் பொங்கி அடித்து அலை வீசி சங்கு ஊதியது..........

வெள்ளிப் பூண் உருத்திராக்க மாலை மணிகள் கழுத்தில் குலுங்கித் தூங்கித் தொங்கி அங்கும் இங்குமாய் ஆட .............கடற்கரை மண்ணில் கால் புதைய கண்டெடுத்த கருங்கல் பாறைத் துண்டோடு ஓடினார்.

பாதிப் பனை முண்டு கொடுக்கும் வளை தாங்கிய பிரமிட்டு வடிவான தென்னோலை குத்தி நிக்கும் கோட்டை போன்ற அந்த ஓலை வீட்டின் திமிரான பெருந் திண்ணையில் வந்தமர்ந்தவர், கஷாயங்கள் , முலிகை வேர்களை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைத்து விட்டு மிகப் பக்குவமாய் வெள்ளைத் துணியில் அதை பக்தியோடு கிடத்திவிட்டு ..

அவசர அவசரமாய் வாகடங்களைப் பிரட்டிப் பிரட்டிக் கண்களால் வரி வரியாய் எதையோ தேடினார்.

கருங் கல் பாறைத் துண்டையும் படித்ததையும் ஒப்பு நோக்கினார், சிந்தித்தார் தெளிந்தார்.

"தக்கனின் அகந்தை அழித்த வீர பத்திர சுவாமி.......சிவனே சைவப் பெரும் பொருளே எம் குலம் தளைக்க வந்தவரே...

வாசலில் ஒற்றைத் திருக்கை வந்து நிற்பதும் பேரன், மகன் இறங்குவதும் தெரிகின்றது.

பேரன் பின்னால் வர கடகத்தில் பெரும் சுமையோடு மகன் பின்னே வருகிறார்கள்.

"பேரா வா இதை ஒருக்கா பார்"

பேரனின் கூர்மையான பார்வையில் நம்பிக்கை கொண்டவர் உற்சாகத்தோடு கூப்பிட்டார், அவன் பொருட் படுத்தவில்லை..

வெள்ளையர்கள் அறிமுகப் படுத்திய ஒரு நாட்காட்டியைப் பேரன் ஒரு கையில் வைத்திருந்தான் அதில் வர்ணத்தில் தேவ மாதா படம் போடப் பட்டிருந்தது பளிச்சிட்டது, மறு கையில் இரும்புப் பெட்டி,வந்ததும் வராததுமாய் பெட்டியைத் திறந்தவன் வேகமாய் கிளறிக் கொண்டிருந்தான். அதில் புத்தகங்களை சில உடுப்புக்களைத் திணித்து வைத்திருந்தான்."என்ன பேரா தேடுறாய்? ஒருக்கா வந்திட்டுப் போ, இந்தா இதைப் பாரப்பா."

மகன் வந்தவுடன் கிணற்றடிக்குப் போய்விட்டான்.

"பட்டணத்துக்குப் படிக்கப் போனவுடன இந்த பேரனை மறந்திட்டியே - வந்தவுடன ஒரு வார்த்தை கூடப் பேசாமல்.."

"இந்தாங்கோப்பா இதை வாசியுங்கோ" ஒரு கடுதாசித் துண்டை எடுத்து நீட்டினான்.

பனை ஓலை ஏட்டில் எழுதிப் படித்துப் பழக்கப் பட்டவர் அவர், "எவ்வளவு அழுத்தமாய் செய்திருக்கிறாங்கள்-எவ்வளவு தெளிவாய் எழுத்துக்கள்" உள்ளுக்குள் வெள்ளையரின் காகிதத்தை அதன் நேர்த்தியான நெகிழ்வான தன்மைகளை மனதிற்குள் ரசித்தபடிபிரித்தார்.

------------- வாசித்துக் கொண்டு போனவர் திடுக்கிட்டார்.....

"அப்புட்ட கடுதாசியைக் குடுத்திட்டியே" கிணற்றடியிலுருந்து திரும்பிய மகன், ஈரம் துடைத்தபடி

"அப்பு வாசிக்கிறார்"

தாழ்வாரத்திணுடாய் குனிந்து பார்த்தான். கடுதாசியைக் கையில் வைத்தபடி கஷாயங்கள் மூலிகைகளுக்கு நடுவே கண்ணில் நீர் வடிய இறுக்கமான முகத்தோடு...

"ஐயா அதைப் பற்றிப் பெரிசா யோசியாதையுங்கோ..."

"எங்கே இருந்து நாடு பிடிக்க வந்தவன் அந்த வெள்ளைக் காரண அவன் எங்களுக்குக் கல்வி தாறான், இடையில எங்கட ஊரான் இப்படி ...பொடியைப் பட்டணத்துக்கு அனுப்பி பெரிய படிப்புப் படிப்பிக்க வேணும் என்ட என் கனவில இவங்கள்....."

"அப்பு இவையல் ஒண்டும் செயேலாது, .அவங்கள் வெள்ளைக்கார அதிபர் சொல்லைக் கேக்க வேணும் அல்லாட்டி பள்ளிக் கூடத்தை விட்டுப் போகவேணும்.."

"மோனை என்னடா சொல்றாய்"

"மாணவனுக்காண்டி அந்த பண்டிதனைப் பள்ளியைவிட்டு நீக்கிவினமோ ?"

"கடிதத்தை நல்ல வாசியுங்கோ, தாங்கோ வாசித்துக் காட்டுறன்"

கடிதம் கை மாறியது..

சின்னப்புவின் பெற்றாருக்கு எழுதுவது,

உங்கள் மகனின் கல்விக்காய் எங்கள் கல்லூரியைத் தெரிவு செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியே, ஆனாலும் இங்கே எமது நிர்வாகத்தில் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் சமுகத்தின் - தமிழரின் இந்துக் கோட்ப்பாட்டின்படி உயர் சாதியார் படிக்கும் இந்தக் கல்லூரியில் தீண்டத் தகாதவரைச் சேர்க்கக் கூடாது என ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிரபல பண்டிதர் உங்கள் மகனைச் சேர்த்தால் கல்லூரியிலுருந்து விலகப் போவதாய் கூறுகிறார். அவரின் தமிழ் புலமையும் மத அறிவும் எங்கள் மாணவர்க்குத் தேவை.

ஆயினும் எங்கள் நிர்வாகம் எல்லோருக்கும் கல்வி வழங்க வேண்டும் அது அடிப்படை உரிமை என்பதில் உறுதியாய் இருக்கிறது.

இதுவே எங்கள் கிறிஸ்தவ கொள்கை. எனவே என்னதான் நடந்தாலும் உறுதியாய் இருக்கவும்.

உங்கள் மகனுக்கு ஏற்பட்ட இந்த அசௌகரியத்திற்காய் மனம்வருந்துகின்றோம்.

இப்படிக்கு

கல்லூரி நிர்வாகம்.

"அந்த பெரும்பான்மைச் சமுகத்தோட எதிர்த்துக் கொண்டு எப்படி படிக்க விடுறது, சதிகாரர்கள். படிக்காட்டியும் பறவாய் இல்லை பொடியன் உயிரோடிருந்தால் போதும்."

"ஒண்டும நடக்காது, நீங்கள் தைரியமாய் இருங்கோ"

"வெள்ளைக் காரங்கள் ஆட்சியில கொஞ்சம் மனசாட்சியாவது இருக்கு, அவங்கள் எங்கட மகனுக்கு பாதுகாப்பு கொடுப்பான்கள்"

"என்னன்டாலும் செய்யுங்கோ எனக்கு அவனை அங்க படிக்க இதுக்குப் புறமும் அனுப்ப மனசு கேக்கேல்ல ..."

எண்டவர் தான் கொண்டு வந்த கடற் கரைக் கல்லின் ஞாபகம் வந்தவராய் அதைக் காட்ட,

"தம்பி இஞ்ச வாங்கோ, இதைப் பாருங்கோ" கருங்கல் பாறையைக் காட்டியவர் ..

பேரன் கையில் தேவ மாத கலண்டரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்..,

"அதை அந்தக் கலண்டரை அங்கால வை தம்பி பேரா..இந்தச் சிலையைப் பார் இதில உனக்கு என்ன தெரியுது?"

"இந்தக் கல்லை எங்க எடுத்தனிங்கள்?"

"நான் முதலித் தம்பி அய்யாவுக்கு குளிர் கசாயம் கொடுத்திட்டு வரேக்க அந்தக் கடற்கரையோரமாய் கண்டெடுத்தனான்"

" என்ன இது..இதில என்ன இருக்கு ? இது ஒரு கல்லு , இதை வைச்சுக் கொண்டு நல்ல வித்தை காட்டுறியல், அப்பு கர வலைக்கு வாற சிங்களவர் இதைப் போட்டிருக்க வேணும்."

"இல்லைத் தம்பி ஒருக்காப் பார்- இது ஒரு தெய்வச் சிலை, இதில உனக்கு என்ன தெரியுது வடிவாப் பார்?"

மகனும் பேரனும் கூர்ந்து பார்த்தனர்..........

விறகுகள் குழை மூலிகை சேகரித்துக் கொண்டு பெண்டுகள் வீடு சேர்ந்தனர்....ஆடொன்று அவர்களை அடையாளம் கண்டு கனைத்தது .........

"அப்பு அம்மா ஆச்சி அக்கா வருகினம் அவையிட்டைக் கேளுங்கோ." தகப்பனும் மகனும் பரியாரியின் அழுங்குப் பிடியிலுருந்து தப்பித்துக் கொண்டனர்.

"சிவக் கொழுந்து இஞ்ச ஒருக்கா வந்திட்டுப் போ...பிள்ளையளையும் வரச் சொல்."

"பொறுங்கோ வாறன்"

பரியாரி திண்ணைக்கு எல்லோரும் வந்து..அவர் காட்டிய கருங்கல்லுத் துண்டைத் துளாவித் துளாவிப் பார்த்தனர்..........

"என்னப்பா எனக்கு ஒன்டுமாய்த் தெரியேல்ல"

தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பேரன் சின்னப்பு " நல்லா மாட்டிட்டினம்" கெக்கட்டம் விட்டுச் சிரித்தான்

அதைத் தகப்பன் கணபதி உள்ளுர ரசித்தபடி, சிரிக்க வேண்டாமென்று சைகை காட்டினார்.

கடைசிப் பெண் செல்லம் மட்டும்

"ஐயா இது வைரவர் மாதிரி இருக்கு"

இதைக் கேட்ட பெண்டுகள் தொடங்கி சின்னவன் பேரன் சின்னப்பு வரை ஒரு தினுசா அவளைப் பார்த்தனர்.

"வைரவரோ?" சிவக்கொழுந்துப் பாட்டி கொஞ்சம் பக்தியோடும் பயத்தோடும் கருங்கல்லுத் துன்டிலுருந்து எட்டி விலகிக் கொண்டார்.

"நீ கிட்ட வந்திட்டாய், வாகடமெல்லாம் பார்த்தனான் - இது வீரபத்திரரடி " அவர் உறுதியாய்ச் சொன்னார்.

"வீரபத்திரரோ" சிவக்கொழுந்துப் பாட்டி மேலும் வாயைப் பிழந்து கொண்டு அந்தக் கருங்கல்லுத் துண்டை கண்வெட்டாமல் பார்த்தார்.

"இது வீரபத்திரரடி" அவர் உச்சரித்த விதம் ஒரு அதிர்வை அங்கே உண்டாகியிருப்பதை எல்லோர் முகத்திலும் ஒரு விறைப்பு, சந்தேகங்களும்,பயமும் சிவக் கொழுந்துவிக்கு, இந்த மனிசன் வீட்டுக்க என்னத்தைக் கொண்டு வந்து கூத்தடிக்கிறார்

தூரத்தே கடல் அலை தள்ளி கூவிக்கொண்டிருப்பது கேட்கக் கூடியதாய் இருந்தது.

பேரன் சின்னப்புக்கு மட்டும் அப்பு வித்தை காட்டுவது போல் தெரிந்தது. அவன் தான் கொண்டு வந்த தேவ மாதா படம் போட்ட கலண்டரைக் கொண்டு வந்து. அப்புவுக்கு ஏட்டிக்குப் போட்டியாய்.

"இஞ்சை பாருங்கோ ஆச்சி எங்கட பள்ளிக் கூடத்தில தந்ததை........"

பளபளப்பான கடதாசி மட்டையில் தேவ மாதா அந்த ஆங்கில நாட்காட்டியில் எல்லோரும் வியந்து பார்த்தனர்.

"உது வெள்ளைக் காரன் சீமையிலுருந்து கொண்டு வந்தது, இதைக் கொடுத்து எல்லாரையும் மயக்கி தங்கட மதத்தில சேர்க்கிற தந்திரம்"

"ஓமப்பா அவையள் எல்லா இடமும் வேதக் கோயில் கட்டிகினம் - மருதடிச் சந்திக்கிட்ட சுண்ணக் கல்லும் பெரிய மரத் தீராந்தியலும் கொட்டி இருக்காம் - அவள் பூமணி விறகு பொறுக்கப் போகேக்க சொன்னவள். அங்கால பள்ளிக் கூடமும் நடத்திகினமாம். எல்லாப் பிள்ளைகளும் போகிறவையாம்."

"கல்வியைக் கொடுக்கட்டும் எல்லாருக்கும்- அது நல்லது, அப்பத்தான் எல்லாரும் முன்னேறலாம். அனால எங்கட கடவுளைக் கேக்க வேண்டாம்.."

"அப்பு உங்கட கடவுள் எண்டு சொல்றியல் அந்த முருகன் கோயிலுக்க ஏன் எங்கள உள்ளுக்க விடுகினமில்லை"

"பேரா அதுக்காண்டித்தாண்டா எங்கட படியேறி வந்திருக்கிறார் இந்த வீரபத்திரர்"

இயல்பாகவே உணர்ச்சி வசப்படும் பெரியதம்பிப் பரியாரி, இப்ப உரு வந்தவர் போல்.


"குடிலப் போடு - சாமியைக் குடி வை அங்க

கூட்டி வா எங்கட குலத்த

மடையைப் போடு

பறையை அடி

பண்டத்தை தூக்கு

எல்லாரும் வரட்டும்

எவரும் தொடட்டும்

எங்கட சாமி

எங்கட தீட்டப் போக்கும் ....


பட்டால் தீட்டுப் பட எங்கட சாமி

சின்னச் சாமி இல்லை

வீரபத்திர சுவாமி பெரிய சாமி ...


அக்கினியில் தீட்டேது

ஒளிக்குள் பண்டங்களைக் கலப்பது யார் ?

எங்கட சாமி பெரியவர்

துன்பம் போக்கும் துணையே சாமி..

தூர நில் எண்டு

சொல்லும் சாமி தீட்டுள்ள சாமி....


அது வேண்டாம்

அந்த நோயுள்ள

அந்த சாமிகள் வேண்டாம் ,


வீர பத்திரன் தக்கனை வெட்டி

தான் பெரியவன் என்ற அகந்தை தலையை வெட்டி...


அகோரமாய் எழுந்தார் எங்கடசாமி,

தீண்டாது அகந்தை

நான் பெரியவன்

நீ சின்னவன்

சொல்லுற தலையைத் தறிக்க

அகோரமாய் எழுந்தார் எங்கடசாமி,


கும்பிடும் குலத்தை

பெரிய குலமாய் மாத்தும் சாமி ,


எங்கள் சிவனின் சனத்தை தொடுகிற சாமி

வீரபத்திரன்..வீரபத்திரன்..."



பெரிய தம்பிப் பரியாரி இப்ப பூசாரி கூட. நாவலுக்கு அடியில் ஒரு குடில், அதற்குள் குடியேறிய சாமிக்கு முன்னால் மூலஸ்தானம் வரை முட்டிக் கொண்டு நின்றது அந்த ஊர்.

மதி
23-10-2012, 12:43 PM
அரளிப்பூக்கள்

பனி விழும் மார்கழி மாதம். சூரியன் கண் விழித்தபோது எங்கே போய் ஒளிந்தனவோ தெரியவில்லை பனித்துளிகளின் சுவடுகள் இல்லாமலிருந்தது.

காற்றின் சலசலப்பு தென்னை மர கீற்றுகளில் பளிச்சிட்டது. திறந்திருந்த ஜன்னலுகுள் காற்று வந்து போனதில் ஜன்னல் கதவுகள் வருவதும் போவதுமாக இருந்தன. காற்றின் வரத்து அதிகமாகிப்போனதில் ஜன்னலுக்கருகே அன்றைய நாளிதழை ருசித்துக்கொண்டிருந்த தங்கலட்சுமிக்கு இடையூறாக இருந்தது.

நாளிதழோடு மொட்டை மாடிக்குச்சென்று ஒரு கையில் தேநீர் அருந்தியபடியே நாளிதழை திருப்பினாள். தங்கலெட்சுகிக்கு வயது நாற்பத்தி ஐந்து கடந்திருந்தபோதிலும் புதன்கிழமை தினங்களில் தவறாமல் நாளிதழ் வாங்கி வந்து மணமகள் தேவை பகுதியை வரி விடாமல் படித்து முடித்தாள்.

எல்லா வரன்களுக்கும் இருபது வயதிலிருந்து முப்பது வயது வரையிலான மணப்பெண்களே தேவை என்றும் அதிலும் இன்ன சாதிக்குட்பட்ட பெண் வேண்டும் என படித்தபோது தன்னைத்தானே நொந்து கொண்டாள் தங்கலட்சுமி.

தன்னோடு படித்த தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி குழந்தைகள் பிளஸ் டூவிலும் பத்தாம் வகுப்பிலும் படிப்பதைக்கேட்கும் போதெல்லாம் கண்களின் ஓரம் கண்ணீர் கசியும்.

சொந்தபந்தங்களின் திருமண வீடுகள், ஹிரகப்பிரவேசம், இளவு வீடுகள் எல்லாம் தவிர்த்திருந்தாள் தங்கலட்சுமி, இவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்ற அவர்களது இளக்காரமான பார்வை தன்மீது படிந்து அதனால் கூனி குறுகி விடக்கூடாது என்ற நல்லெண்ணம் தான் அதற்கு காரணமாக இருந்தது

தனது மூத்தவள் சொர்ணலட்சுமியைப்போல யாரையாவது காதலித்து இரவோடிரவாக ஓடிப்போய் தாலி கட்டி குடும்பம் நடத்தியிருக்கலாம். அப்பொழுதெல்லாம் படிப்பு மிது காதலும் தனது அண்ணன்கள் மீது பயமும் படிந்திருந்தது.
நாகர்கோவில் இந்து கல்லூரியில் படித்த நாட்களில் காதல் கடிதம் தந்த அரவிந்தன் எப்போதாவது நினைவுக்கு வருவான். ஒரு நாள் வகுப்பு முடிந்து வெளியேறியபோது காதல் கடிதம் ஒன்றை நீட்டினான் அரவிந்தன்.

அந்த கடிதத்தை வாங்கி தானும் அவனை காதலிப்பதாகச் பதில் கடிதம் தந்திருக்க வேண்டும், அப்படி தந்திருந்தால் ஒருவேளை அவனோடு ஓடிப்போயாவது திருமணம் செய்திருக்கலாம். அப்பொழுது பாழாப்போன அண்ணன்களை கண்டு பயந்து காதலுக்கு மறுப்பு சொல்லி அவனை ஏமாற்றியிருந்தாள் தங்கலட்சுமி.

சமீபத்தில் மார்த்தாண்டம் பாபு ஸ்டோரில் பேனா வாங்கிவிட்டு திரும்பியபோது அரவிந்தனும் அவனது மனைவி குழந்தைகளும் நோட்டு புத்தகங்கள் வாங்க கடையில் நுழைவதைக் கண்டாள் தங்கலட்சுமி.

அரவிந்தன் ஓடி வந்து நல்லாயிருக்கிறியா என்று கேட்டதோடு தனது மனைவி குழந்தைகளை அறிமுகப்படுத்தி அவனது மகன் பிளஸ் ஒன் படிப்பதாகவும் மகள் ஏழாவது படிப்பதாகவும் சொன்னபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டவளாக அவளால் நடிக்கத்தான் முடிந்தது.
அவர்களை விட்டு பிரிந்து பஸ்நிலையம் வருவது வரை அவளால் கண்ணீரை தடுக்க முடியவில்லை. அரவிந்தனை ஏன் சந்திக்கும் சந்தர்ப்பம் தந்தாய் என்று இறைவனை சபித்தாள் தங்கலட்சுமி.

தன்னைப்போலவே திருமணமாகாமல் வீட்டில் அடைபட்டு கிடக்கும் தனது தங்கை பாக்யலட்சுமியும் கதியும் இது தான். அவளும் நாற்பத்தி இரண்டு வயதை கடந்து நிக்கிறாள். இந்த உலகத்தில் எல்லோருக்கும் திருமணம் நடக்கும்போது எங்க ரெண்டு பேருக்கும் ஏன் திருமணம் நடக்கவில்லை? என்ற கேள்விகள் எழும்போதெல்லாம் தனது அண்ணன்கள் மீது ஆத்திரம் வந்து மெல்ல மெல்ல பின்பு அடங்கிப்போய்விடும்.

ஏழைப்பெண்கள் என்றால் நமக்கு சொத்து சுகம் இல்லையே என்று ஏங்கி தவிப்பார்கள் ஆனால் தங்கலட்சுமியின் நிலையோ வேறு. ``ஆண்டவா எங்களுக்கு ஏன் இத்தனை சொத்தை தந்தாய்’’ இது தான் அவளது புலம்பலாக இருந்தது.

தங்கலட்சுமியின் அப்பா உயிரோடு இருந்த வரை அவளுக்கு பள்ளிக்கூடம் போவது ஒன்று தான் அவளது கடமையாக இருந்தது. ஐம்பத்தி இரண்டு வயதில் அவர் இறந்தபோது மூன்று பெண்களையும் மூன்று பசங்களையும் வைத்து காப்பாற்ற அவர் விட்டுச்சென்ற ஆறு ஏக்கர் நிலம் ஒன்றுதான் மீதமிருந்தது.

எதிர்காலத்தில் சிறுமிகளாக இருக்கும் இவர்களை அண்ணன்கள் பார்ப்பார்களோ மாட்டார்களோ என்ற பயத்தில் தங்கலட்சுமியின் மாமன்கள் வந்து சொத்தை அளந்து ஆளுக்கொரு ஏக்கர் வீதமாய் பிரித்து பத்திரம் எழுதினார்கள்.

மூத்தவன் லாசர் குடும்பச்சுமையை ஏற்றெடுத்தாலும் அவனுக்கு சொத்தின் மீதே அதிக கவனமிருந்தது. மூன்று ஆண்களுக்கும் தலா இரண்டு ஏக்கர் சேரவேண்டிய தனது தந்தையின் சொத்து தனது சகோதரிகளுக்கும் பங்கு போட்டதில் ஆளுக்கு ஒரு ஏக்கர் வந்ததை நினைக்க நினைக்க சகோதரிகள் மீது வெறுப்பு வந்து சேர்ந்தது லாசருக்கு.

இவர்களை திருமணம் செய்து வைத்தால் வரும் மாப்பிள்ளைகள் அவர்களது பங்குகளான ஒரு ஏக்கர் நிலத்தை கேட்பார்கள், அல்லது அவர்கள் விருப்பத்திற்கு விற்கவும் செய்வார்கள். இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க நகை நட்டு என்று நிறைய ரொக்கங்கள் செலவழிக்க வேண்டும், அதற்கு கடினமாக உழைக்கவேண்டும் அல்லது சொத்தை விற்று பணம் புரட்ட வேண்டும்.

எக்காரணத்தைக்கொண்டும் சொத்து நம்மை விட்டுப்போகக்கூடாது அதுபோல தங்கைகளுக்கு எழுதிய மூன்று ஏக்கர் நிலமும் அவர்கள் எடுத்துச் செல்லக்கூடாது அதற்கு ஒரே வழி யாருக்கும் திருமணப்பேச்சே எடுக்கக்கூடாது, சாகும்வரை நாம் போடும் சாப்பாட்டை தின்று விட்டு நம் காலடியில் கிடக்க வேண்டும். என்ற லாசரின் எண்ணம் தான் இன்று வரை பலித்திருந்தது.

எல்லோருக்கும் திருமணத்தடை என்று ஏதோதோ காரணமிருக்க தங்கலட்சுமிக்கும் அவளது தங்கை பாக்யலட்சுமிக்கும் தனது தந்தையின் சொத்து ஒரு தடையாக இருந்தது.

இதில் மூத்தவள் சொர்ணலட்சுமி எப்படியோ தப்பித்துக்கொண்டாள். முறைமாமன் டேவிட்டுக்கு அவள் மீது பிரியம் வர, இருவரும் காதலிக்கத்தொடங்கினார்கள்.

புதுக்கடையிலிருந்து வரும் 10 சி பஸ்சில் முன்பக்க இருக்கையில் முதல் ஆளாக அமர்ந்திருப்பாள் சொர்ணலட்சுமி. பஸ் அங்கிருந்து கிளம்பி மூன்று கிலோமீட்டர் தாண்டி வரும் சடையன்குழி நிறுத்தத்தில் அதே பஸ்சில் ஏற டேவிட் காத்திருப்பான்.
தூரத்தில் பஸ் வரும்பொழுதே மெல்லிய புன்னகை அவளிடமிருந்து புறப்பட்டுவிடும். அது அவனை சென்றடைவதற்க்குள் பஸ் நின்றுவிடும். பதிலுக்கு அவளும் புன்னகையை தழுவ விட்டபடியே பஸ்சினுள் ஏறுவான்.

அனேகமாக அவன் உட்காருவதற்கு இருக்கைகள் காலியாக இருக்காது. அவன் நின்றுகொண்டே அவளை பார்த்தபடியே பயணம் செய்வான். நொடிக்கொரு தடவை அவள் திரும்பி பார்த்து புன்னகை செய்வாள்.

சில சமயங்களில் அவனுக்கு பின்னால் நிற்கும் வயசு பையன்கள் அவள் வீசும் பார்வை தனக்கானதா என்று குழம்பிப்போவார்கள். பஸ் கருங்கல் பேருந்து நிலையத்தில் நின்றதும் எல்லோரும் இறங்கிவிட சொர்ணலட்சுமியும் டேவிட்டும் பேருந்து நிலைய இருக்கைகளில் அமர்ந்து கொண்டு பார்வைகளால் பேசிக்கொண்டிருப்பார்கள்.

சொந்த மாமன் மகன் என்றாலும் அவன் குடும்பத்திற்கும் தங்கலட்சுமியின் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்ததால் இவர்களது காதல் மறுக்கப்படும் என்று தெரிந்தே மறைத்து மறைத்து வைத்தனர். இருந்தும் இவர்களது காதல் விஷயம் லாசருக்கும் அவன் தம்பிகளுக்கும் எப்படியோ தெரிந்தது.

தனது தங்கை செத்து ஒளியட்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு அறைக்குள் வைத்து இரும்பு கம்பியால் அடி அடியென்று அடித்து துவம்சம் செய்தான் லாசர். அவள் அலறல் சத்தம் வெளியே கேட்டு விடக்கூடாதென்று வாயில் துணி வைத்து அடைத்திருந்தான்.
ரத்தம் கசிந்த தனது கால் தொடைகளில் கம்பிகளின் சுவடுகள் திட்டு திட்டாய் வீக்கமேறி மயங்கி சரிந்தாள். அவள் இறந்திருப்பாள் என நினைத்து தனது தம்பிகளை அழைத்துக்கொண்டு சென்னித்தோட்டம் செங்கல் சூளையில் செங்கலோடு செங்கலாக சுட்டு பொசுக்க சூளையின் நிலவரம் கேட்கப்போனார்கள் லாசரும் அவன் தம்பிகளும்..

சொர்ணலட்சுமிக்கு நினைவு திரும்பி தாழிட்ட கதவை பலங்கொண்டமட்டும் தட்டினாள். அவள் உயிர் பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று கருதி அவளது தாயார் கதவை திறந்துவிட்டாள். இனி ஒரு நொடி தாமதித்தால்கூட தன்னை தனது அண்ணன்கள் கொன்று விடுவார்கள் என்று நினைத்தபடியே நட்ட நடு நிசியில் கன்னங்கரு இருட்டில் தன்னந்தனியாக ஆற்றை கடந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்த தனது மாமன் மகன் டேவிட்டின் வீட்டில் சென்று அவன் மார்பில் புதைந்தாள்.

டேவிட் பதறிப்போய் பக்கத்திலிருந்த வயித்தியரை தட்டி எழுப்பி காயம் பட்ட இடங்களிம் எண்ணெய் தடவி அதிகாலையில் கேரளாவிற்கு அழைத்துக்கொண்டு சென்றதில் அவர்களும் அவர்கள் காதலும் தப்பித்தது.

தங்கலட்சுமியும், பாக்யலட்சுமியும் அவரவர் படிப்பு முடிந்து வீட்டில் சும்மா நின்றபோது யார் தலையிலாவது அவர்களை கட்டி வைக்க அவளது தாய் மரகதம் முயற்சி செய்யும் போதெல்லாம் எந்த முயற்சியும் எடுக்காமலேயே லாசரும் அவனது சகோதரர்களும் இருப்பது கண்டு மனம் வெம்மினாள்.

தனது அண்ணன்கள் தன்னையும் தங்கை பாக்யலட்சுமியையும் யாருக்கும் கட்டி வைக்க மாட்டார்கள் என்ற உண்மை தங்கலட்சுமிக்கு புரிந்த போது சொத்துக்களை வேண்டுமானால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்னையும் என் தங்கையையும் யாருக்காவது கட்டி வையுங்களேன் என்று கேட்டுவிடலாம் போல் தோன்றியது.

அப்படி கேட்டால் அது நாகரீகமாக இருக்குமா? எந்த பெண் தனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டிருக்கிறாள், வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருந்தால் அவர்களுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை, தனக்கு அப்பா இல்லாததால் அதை சகோதரர்களாவது நிறைவேற்ற வேண்டும்.

இங்கே எல்லாம் தலைகீழாக அல்லவா நடக்கிறது. மனம் சஞ்சலப்படவே படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடலாம் என்று வேலை தேடிக்கொண்டிருந்தாள் தங்கலட்சுமி. காலங்கள் நகர நகர அவளுக்கும் அவள் தங்கைக்கும் வயது கட்டுப்படாமல் ஏறிக்கொண்டே போனது.

முப்பது வயது நெருங்கியபோது தங்கலட்சுமிக்கு திருமணத்தின் மீதிருந்த நம்பிக்கைகள் காற்றில் அறுந்து போன பட்டம் போல அறுந்து போயிருந்தது. தூத்துக்குடியில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் டீச்சர் வேலை கிடைத்தது தங்கலட்சுமிக்கு. இனி இது தான் உலகம் என்று பள்ளிக்கூட ஹாஸ்டலில் தங்கிக்கொண்டாள்.

தங்கலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியபோது நிம்மதி பெருமூச்சு விட்டான் லாசர். இனி அடுத்தவள் பாக்யலட்சுமியும் வேலை தேடி எங்காவது போய் தொலைந்தால் சொத்து நம்மை விட்டு போகாது என்ற திடமாக எண்ணியிருந்தான். ஆனால் பாக்யலட்சுமி அதிகம் படிக்காமல் போனதில் தன் அக்காவைப்போல அவளால் வேலை தேட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தாள்.
காலம் கடந்திருந்த நிலையில் தனது பெண்களுக்கு காலா காலத்தில் திருமணம் ஆக வில்லையே என்ற கவலையில் மூத்தவன் லாசரை கண்டபடி திட்டிதீர்த்தாள் பாக்யம்.

``ஏய் கிழவி என் வீட்டு சோத்த தின்னுட்டு என்னயே ஏசுதியா, நீ இனிமே இங்க இருக்கப்பிடாது, ஓடு!,, தனது தாயாரை வெளியே தள்ளி கதவை தாழிட்டுக்கொண்டான் லாசர்.

பெத்த புள்ள கடைசி காலத்துல கஞ்சி ஊத்துவான் என்று நம்பியவளுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. தனது மகள் தங்கலட்சுமியுடன் சென்று தன் கண்ணீர் கதைகளைச் சொன்னபோது தங்கலட்சுமியால் அழ முடியவில்லை காரணம் அழுவதற்கு அப்போது அவளிடம் கண்ணீர் இல்லை, எல்லா கண்ணீரையும் எப்பொழுதோ அவள் இழந்திருந்தாள்.

நிராயுதபாணியாக நிற்கும் தனது தாய்க்கு இனி யார் ஆறுதல் சொல்வது அம்மாவை தன்னோடு வைத்துக்கொண்டால் என்ன என்ற கேள்வி எழுந்து அடங்கியது. அவள் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம் பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அம்மாவை தன்னுடன் வைத்துக்கொண்டாள்.

ஐந்து வருடங்கள் ஓடியபோது அவளது அம்மாவிற்கு வயது எண்பது தாண்டியிருந்தது படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது தாயாரை ஒருநாள் கூட தனது சகோதரர்கள் யாரும் வந்து பார்க்காமல் போனது பெரும் பாரமாகவே இருந்தது தங்கலட்சுமிக்கு.
அம்மா இனியும் தாங்கமாட்டாள் இன்றோ நாளையோ என்று இழுத்துக்கொண்டு கிடக்கிறாள் ஒருவேளை அம்மாவின் உயிர் போய் சேர்ந்துவிட்டால் அடக்கம் செய்யவாவது அண்ணன்கள் ஆறடி நிலம் தருவார்களா என்ற கவலை அவளோடு பதுங்கியிருந்தது.
அம்மா பாக்யசாலிதான், அவர்களை வயதான காலத்தில் கவனிக்க நான் இருக்கிறேன், ஒருவேளை எனக்கும் வயதாகி இதுபோல் படுக்கையில் கிடந்தால் என்னை பார்த்துக்கொள்ள எனக்கென்று யார் இருக்கிறார்கள் , நினைத்த மாத்திரத்திலேயே அழுகை வந்து முட்டியது தங்கலட்சுகிக்கு.

அம்மாவின் நிலமையை பார்த்து அன்று பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிடலாம் போலிருந்தது தங்கலெட்சுமிக்கு. இன்று ஒருநாள் மட்டும் அம்மாவோடு இருந்து அம்மாவை நன்கு கவனித்துக்கொள்ளவேண்டும். படுக்கை விரிப்புகளை துவைத்து இஸ்திரி போட்டு தந்தாள். அவள் அம்மா விரும்பிய கட்டங் காப்பி நாலைந்து முறை போட்டு தந்தாள்.

மாலை நான்கு மணிக்கு அவளது தாயாரின் வயிறு வீங்க ஆரம்பித்தது. அதிகமாக கட்டங் காப்பி குடித்ததால் அப்படியிருக்கும் என்று நினைத்தாள். இரவு மணி பத்தாகியும் அவளது அம்மாவின் வயிறு இறங்கியபாடில்லை. தங்கலட்சுமி மனதார பயந்தாள். அவள் அம்மாவிடமிருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று எழுந்து அடங்கியது. அதன் பிறகு அவள் அம்மா உடம்பிலிருந்து எந்த அசைவும் இல்லாமலிருந்தது.

தங்கலட்சுமி ஒரு முறைக்கு பல முறை உடலை அசைத்து அம்மா அம்மா என்று அழைத்தாள். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அம்மா இறந்தாள் என்று உறுதி செய்யவே அவளுக்கு பயமாய் இருந்தது.

தனக்கு ஆதரவாக இருந்த அம்மாவும் தன்னை விட்டு போய்விட்டாள் என்பதை நினைக்க நினைக்க யாருமற்றதொரு காட்டில் அனாதையாக விடப்பட்ட ஆட்டுகுட்டியைப்போல அலறி அழுதாள். அவள் அழுகைச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் எழும்பி வந்து விபரமறிந்து அவளோடு துக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அண்ணன் லாசரை கைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா இறந்த விபரத்தை சொன்னாள் தங்கலட்சுமி. இத்தனை நாள் அம்மாவைப்பற்றிய தேடல் இல்லாமலிருக்கும் அவர்கள் அம்மா இறந்த பிறகாவது அம்மா மீது இரக்கம் வந்து அம்மாவின் உடலை வாங்கிச்சென்று ஊரில் நல்லபடியாக அடக்கம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் பதிலுக்கு காத்திருந்தாள்.
``அவ கொழுப்பெடுத்து தானெ உனக்ககிட்ட வந்து சேர்ந்தா, அவள அங்கேயே புதைக்க வழியப்பாரு இல்லாட்டி ஒரு ஆம்புலன்ஸ் வேன் பிடிச்சு உடம்ப ஊருக்கு கொண்டு வா,!’’ சொல்லிவிட்டு கைபேசியை துண்டித்தான் லாசர்.

ஊரிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வேன் பிடித்து வரட்டுமா என்று கேட்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும், இது நான் இங்கிருந்து வேன் பிடித்துக்கொண்டு போக வேண்டுமா? இந்த நட்டநடு ராத்திரியில் எனக்கு யாரைத் தெரியும்.

அம்மாவை தனியாக பிணமாகப் படுக்க வைத்துவிட்டு நான் ஆம்புலன்ஸ் தேடி அலைவதா. ஒரு இளவு வீடு என்பதால் ,மட்டுமே அந்த ராத்திரியிலும் அக்கம் பக்கத்திலுள்ள நாலைந்து பேர் வந்து கூடியிருந்தார்கள் இல்லையென்றால் வந்திருக்க மாட்டார்கள்.
தங்கலெட்சுமிக்கு திரும்ப அவள் அண்ணனிடமிருந்து ஃபோன் வருமென்று எதிர்பார்த்து காத்திருந்தாள். விடியும் வரை எந்த அழைப்பும் வரவில்லை. அம்மாவின் உடலை ஊருக்கு கொண்டு போனால் கூட யார் சொத்தில் புதைப்பது என்ற பிரச்சனை வரும் பேசாமல் அண்ணன் சொன்னதைப்போல இங்கேயே மயானத்தில் புதைத்து விட்டால் என்ன என்று தோன்றியது.

பக்கத்திலிருந்த கவுன்சிலரிடம் விஷயத்தைச் சொல்ல அவர் அதற்கு ஏற்பாடும் செய்தார். மறுநாள் மாலை நான்கு மணிக்கு தூத்துக்குடி பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பாவம் பாக்யம் அம்மா தனது மகளிடம் வந்து அடைக்கலம் ஆனதில் சொந்த பந்தங்கள் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டிருந்தாள்.

அம்மாவின் நிலை தனக்கும் வந்து விடக்கூடாது என்று தான் இந்த வயதிலும் அவள் யாரையாவது கட்டிக்கொள்ளலாமா என்று வரன்களை தேடிக்கொண்டிருக்கிறாள்.

வரன் இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை என் அண்ணன்களை எதிர்க்க திராணி இருக்க வேண்டும் அப்படி செய்தால் தன் பேரில் இருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தை இப்பொழுது விற்றால் ஐம்பது லட்சம் தேறும் அதில் வரும் பணத்தை வைத்து எங்காவது ஒரு வீடு வாங்கி சந்தோஷமாக வாழலாம்

தன்னைப்போல தனது அண்ணன் வீட்டில் திருமணமாகாமல் கிடக்கும் பாக்யலட்சுமிக்கும் இதுபோல் ஒரு வரன் அமைந்து அவளுக்கும் திருமணமானால் அர்ச்சனைக்கு உதவும் பூக்களைப்போல எங்கள் வாழ்வும் மலரும் இல்லையென்றால் அர்ச்சனைக்கு உதவாத அரளிப்பூக்களாக கிடந்து சாக வேண்டியதுதான்

தங்கலட்சுமிக்கு இன்னும் நம்பிக்கை அறுந்து போய்விடவில்லை. தினத்தந்தி நாளிதழில் அவளுக்கென்றே நிறைய வரன்கள் கேட்டு பிரிண்ட் ஆகி இருந்தது. தன்னை கரம் பிடிக்க ஒரு முதிர்ந்த ராஜகுமாரன் வருவான் என்ற தேடல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மதி
23-10-2012, 12:43 PM
எதார்த்தம்


கூட்டம் நிறைந்த சென்னை கமலா தியேட்ட்ரில் இருந்து வெளியே வந்தேன் வாழ்வில் ஓர் நல்ல படம் பார்த்த நிறைவு வண்டியை பார்க் செய்திருந்த இடம் நோக்கி சென்றேன் கொஞ்சம் வழி விடுங்க ! வண்டி எடுக்க வேண்டும் ! என்ற குரல் கேட்டு திரும்பினேன் என் அருகில் அவன். பார்த்தவுடன் நினைவில் நின்றான் கணேக்ஷ்அய்யர் என் கல்லூரி தோழன் திருமணமானவன்..

கல்லூரி முடிந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு தொடர்பில் கணேக்ஷா எப்படி இருக்கே? திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தான்..

டேய் ! நீயா நான் உன்னை இங்கே எதிபார்க்கவில்லை..நான் நல்லா இருக்கேன் ..நீ எப்படி இருக்கே?..பட படவென்று பேசிகொண்டே அவள் அருகில் வண்டியினை கொண்டு வந்தான் ..

வழக்கமான கூச்ச சுபாவம் என்னில் உதிக்க என் அவளை கண்டதும் தயங்கினேன்.அவள் கையில் குழந்தை..என்னை பற்றி அவளிடம் கூறினான்.

இவன் என் நண்பன் ஜெய்சிவா உனக்கு தெரியுமே இவன் நம் பிரிவில் என்னருகில் இருப்பானே அவன் தான் ..அவள் ஹலோ என்றாள்.நானும் புன்னகைத்தேன்..எங்கள் பேச்சு கல்லூரி வாழ்வினை அலசியது அவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.
இறுதியில் அவனிடம் இது உன் குழந்தையா?

ஆமாம்..

சாரிடா என்னால உன் கல்யாணத்துக்கு வரமுடியல..

பரவாயில்லடா..

குழந்தை அழகாய் இருக்குது ..பேர் என்ன?

அஸ்வந்தினி..

நல்ல பேர் சரிடா நான் கிளம்புறேன்..உன் நம்பர கொடு நைட் கால் பண்ணுறேன்..

சரி குறிச்சிக்க..நம்பரை கொடுத்தான்..

சரி வற்றேண்டா.. வற்றேம்மா என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்..மனது கனத்திருந்த்து..

மாலை 6 மணி பணி நிமித்தம் ஒருவரை காண பெரம்ப்பூர் செல்ல வேண்டியிருந்த்து செல்லும் வழியில் அழைப்பு வந்தது அவன் தான் அழைத்திருந்தான்..பிறகு அழைக்கலாம் என மனம் நினைத்தது...அவரை பார்த்துவிட்டு என் பணி நிமித்தம் செய்ய வேண்டிய வேலைகளை கூறி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்..பிறகு டி வி யில் பிடித்தமான மெலடி பாட்டொன்று பாடியது .அதை கேட்டு கொண்டே இரவு சாப்பாட்டினை முடித்தேன் ..தூங்க நினைக்கையில் மறுபடியும் அழைப்பு வந்த்து ..

என்னை பற்றி விசாரித்தான்..நீ என்ன பண்ணுற? கல்யாணம் ஆயிட்டுச்சா ?

உனக்கு தான் தெரியுமே என் அப்பா பனங்காட்டில் பயனி இறக்குவாருங்கிறது. இப்ப இருக்கிற நிலையில வேறு என்ன பண்ணுறது வேறு வழியில்ல அதான் இருந்த சொத்த வித்து சொந்தமாக ரியல் எஸ்ஸேட் தொழில் பண்ணுறேன்..அவள் நினைவு மறக்கல கொஞ்சம் நாள் போகட்டும் என்றேன் ..

அப்போது அண்ணா சாப்பிட வா ! என்ற குரல் கேட்ட்து கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்றான்..

அவனிடம் கேட்டேன் உனக்கு ஏதுடா தங்கச்சி?

என் கூட பிறந்த தங்கச்சி இல்லடா ! என் சித்தி மக இன்னைக்கு காலையில கூட பார்த்தியே அவதான் ..

மனதில் காணாத வாணவேடிக்கை கண்ட குழந்தையாக குதியாட்டம் போட்ட்து..அதை அடக்கி வைத்தேன் ..பின் அவனிடம்
வகுப்பில் ஒரு முறை கூட சினேகமாய் பார்த்த்தும் பேசியதும் கூட கிடையாதே..

நான் பிறப்பதற்கு முன்பே என் சித்தி சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் என் வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் தொடர்பில்லாமல் இருந்த்து. இப்போ என் கல்யாணத்தோட தான் இந்த பிரச்சனையும் தீர்ந்தது அதோடுதான் இப்படி ஒரு தங்கை இருப்பதேதெரியும் இத்தனை நாள் நம்முடன் படித்திருந்தும் எனக்கு தெரியவில்லை..

அப்படியா?

அது எதுக்கு மக்கா ..விடு ..அப்புறம் காலேஜ் முடிஞ்ச பிறகு அவளை பார்த்தியா? அப்படி பார்த்தா சொல்லு நானும் உனக்காக பேசுறேன் இன்னிக்கு வரை அவ யாருன்னும் எங்கிட்ட சொல்லல..

சொல்லவா வேண்டாமா என்று ஒரு சிந்தனை..இறுதியில்

அவள் வேறு யாருமில்லை உன் தங்கைதான் என்றேன் ..அவ உன் தங்கச்சின்னு தெரியாமலே இத்தனை நாள் என் கூச்ச சுபாவத்தினால் அவளிடம் கூறாமல் அவளை ஒரு தலையாய் விரும்பினேன்..நீ தாண்டா எனக்கு உதவி செய்யனும்..

பதிலின்றி மௌனமாகி அணைந்தது அலைபேசி ...

சிறிது நேரம் கழித்து எஸ் எம் எஸ் வந்தது..பார்த்தேன் அவன் அனுப்பி இருந்தான்..சத்தமில்லாத வெற்றிட மனநிலையில் உணர்வுகளின் பதைப்பில் அவசரமாக படித்தேன்..

சாரிடா...

எதார்த்த உண்மை முகத்தில் அறைய கலங்கிய கண்களுடன் வானை நோக்க வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின..

மதி
23-10-2012, 12:46 PM
காதல் பண்பாடு


நள்ளிரவு மணி 2.00. தூக்கம் சட்டென அறுந்து திவ்யாவின் நினைவுகள் அவளையும் அவளது அசைவுகள் படுக்கையையும் புரட்டிப்போட்டு கொண்டிருந்தது.

நாளை விடிந்தால் அவள் வாழ்வில் முக்கியமான நாள். அவள் தனது எதிர்கால வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க வேண்டிய நாள். திவ்யா ஒன்றும் காதலை பற்றி முடிவெடுக்க வேண்டிய பதின்பருவ வயதினள் இல்லை. திருமணம் பற்றி முடிவெடுக்க வேண்டிய கன்னியும் இல்லை.

அவள் ஒரு திருமணமான கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மகனும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் ஆகிய இரு பதின்பருவ குழந்தைகளுக்கு தாயான 36 வயதான ஒரு நடுத்தர வயது பெண்.

திவ்யாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து மிகவும் அடக்க ஒடுக்கமாக வளர்க்கப்பட்டவள். சிறு வயது முதலே தான் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நிமர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். எல்லோரிடமும் நன்கு கலகலவென பேசி சிரித்து எப்போதும் மலர்ந்த முகத்துடன் வளைய வருபவள். இயற்கை மீது பற்றும் கதை கவிதைகள் வாசித்தலில் மேல் காதலும் கொண்டவள். இலக்கிய ஆர்வம் அதிகமுண்டு. இசை மீது பேரார்வம். எப்போதும் ஏதாவது சினிமா பாடலை பாடிக் கொண்டே எந்த வேலையும் செய்வாள்.

ஆனால் அவளைப்பற்றி அவள் பெற்றோர் வைத்திருந்த ஒரு தீர்மானம் அவளுடைய பத்தாம் வகுப்பு முடித்தபோதுதான் அவளுக்கு தெரிந்தது. அவளுடைய மற்ற தோழிகள் எல்லாம். மேல்நிலைக்கல்விக்கும் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் விண்ணப்பம் போட்டுக் கொண்டிருக்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று தலைமையாசிரியை பாராட்டி தந்த மதிப்பெண் பட்டியலை பற்றி பெரிதாக மகிழ்ச்சி எதுவும் காட்டாத பெற்றோரும் எந்த ஒரு பள்ளியிலும் விண்ணப்பம் வாங்க முனையாத அவளுடைய பெற்றோரின் நடவடிக்கையும்தான் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது.

அது குறித்து அவள் வினவிய போது அவர்கள் தந்த பதில் அவளை மேலும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது திவ்யாவை அவர்கள் அவளது மாமன் மகன் வெங்கடேசனுக்கு திருமணம் செய்து கொடுக்க போகிறார்கள் என்பதுதான். வெங்கடேசன் பத்தாவது வரைதான் படித்திருக்கிறான் என்பதால் அவளை மேற்கொண்டு படிக்க வைக்கப்போவது இல்லை என்றும் கூறி அவளை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.

சிறுவயது முதல் தான் கண்ட கனவுகள் எல்லாம் தகர்ந்துடைந்து போக கண்ணீரோடு அவர்களிடம் சண்டையிட ஆரம்பித்தாள். தான் பொறியியல் படிக்க வேண்டும் என்பதும் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதும் தன்னுடைய வாழ்நாள் லட்சியம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க மிகவும் பாடு பட வேண்டியதானது.

இறுதியில் அவளுக்கு வயது இன்னும் 18 ஆக வில்லை என்பதால் அவளை பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க ஒப்புக் கொண்ட பெற்றோர் ஆனால் அதற்கு மேல் படிக்க கூடாதென்றும் இதுவும் கூட வெங்கடேசன் தான் படிக்காவிட்டாலும் தன் மனைவி படித்தவளாக இருந்தால் தன் சந்ததியை படிக்க வைக்க உதவியாக இருக்குமென ஒப்புக்கொண்டதால்தான் தாங்கள் சம்மதம் தெரிவிப்பதாகவும் ;கூறியது அவளுக்கு மிகுந்த மனவருத்தமாக இருந்தது. என்ன சமூகம் இது. ஒரு பெண்ணுக்கு தான் விரும்பியதை படிக்க உரிமையில்லை. அப்படியே படிக்க வைத்தாலும் அது அவர்கள் விரும்பும் அளவுதான் அதுவும் கூட தன் சந்ததிக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான். என்றபோதும் இப்போதைக்கு படிக்க அனுமதி கிடைத்ததே பெரிய விஷயம். நாம் நன்று படித்து மேல்நிலைக்கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்றால் அப்போது எப்படியாவது மேல்படிப்பு படித்து விடலாம் என எண்ணி பள்ளியில் சேர்ந்து படித்தாள்.

படிக்கும் போதே ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து போட்டி போட்டு படிப்பாள். வகுப்பில் அவளுக்கும் அதே வகுப்பில் படிக்கும் சிவநேசனுக்கும்-தான் போட்டி. கதை கவிதை இசை என எல்லாவற்றிலும் ஒத்த சிந்தனை உள்ளவர்களாக இருந்தனர். இருவரும் அனைத்து போட்டிகளிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தை பெறுவார்கள். பள்ளியில் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகளும் இருவரையும் சரியான பொருத்தம் என்று குறிப்பிட்டு பேசுவதை சிவநேசன் உள்ளுர ரசிப்பான். அவனுக்கும் திவ்யாவின் ஆர்வமும் அவளுடைய அழகிய அகன்ற கண்களும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் திவ்யாவிடம் இருந்து அது போன்ற உணர்வு வெளிப்பாடு எதுவும் தெரியாததால் அது பற்றிய தன் கற்பனையை அவன் வளர விடவில்லை. திவ்யா திருமணத்தையே வெறுப்பவள் என்பதும் அவள் பெற்றோர் அவளுக்கு இட்டிருக்கும் விலங்கினைப் பற்றியும் அவன் அறிந்திருக்க நியாயமில்லை.

இருவரும் நன்கு படித்து திவ்யா முதல் மதிப்பெண்ணும் சிவநேசன் இரண்டாம் மதிப்பெண்ணும் பெற்றனர். ஆனால் காலம் யாரை எங்கே கொண்டு தள்ளும் என்பதை யாரறிவர். திவ்யாவை அவளது பெற்றோர் திட்டமிட்டபடி வெங்கடேசனுக்கு மணமுடித்தனர். வேங்கடேசன் நல்ல உழைப்பாளி. தொழிலில் நல்ல ஆர்வத்துடன் உழைத்து மெல்ல மெல்ல ஊரிலேயே சிறந்த தொழிலதிபர் என்ற நிலைக்கு உயர்ந்தான். அடுத்தடுத்து விக்னேஷ் அக்ஷயா என ஆஸ்திக்கொன்றும் ஆசைக்கொன்றுமாக இரு குழந்தைகள். வேங்கடேசனை பொறுத்தவரை திவ்யாவை நன்றாக எல்லா வசதிகள் செய்து கொடுத்து அவனளவில் நன்றாகவே வைத்திருந்தான்.

வெங்கடேசன் எப்போதும் தொழில் பற்றிய சிந்தனையோடுதான் இருப்பான். இரவு படுக்கைக்கு மட்டுமே வீடு வருவான். அதுவும் குழந்தைகள் எல்லாம் தூங்கிய பின்னிரவு நேராமாகத்தான் இருக்கும். தன் உணர்வுகளை ரசனைகளை எதையுமே பகிர்ந்து கொள்ள யாருமில்லாமல் குழந்தைகளே உலகம் என தன் வாழ்க்கையை கடனென வாழ்ந்து கொண்டிருந்தாள்.

கணவனின் உதவியின்றி தான் தனியாக குழந்தைகளை வளர்ப்பதால் எங்கே தந்தையின் அரவணைப்பில்லாதால் அவர்கள் பருவ வயது கோளாறுகளால் தவறான சகவாசம் அல்லது பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்களோ என்ற பயத்தினால் திவ்யா அவர்களை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தாள். அவர்களை ஒழுக்கசீலர்களாக வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில் அவர்களுக்கு செல்போன் கூட வாங்கித்தர மறுத்து விட்டாள். வீட்டு லேண்ட்லைன் போனில் அவர்கள் நண்பர்களுடன் பேசினால் கூட யார்? என்ன பேசினார்கள்? என கேள்விகளால் துளைத்தெடுத்துவிடுவாள். மற்ற விஷயங்களில் அன்பை பொழியும் அம்மா நண்பர்கள் விஷயத்தில் இவ்வாறு இருப்பதில் அவர்களுக்கே மிகுந்த வருத்தமுண்டு.

விக்னேஷ் பள்ளிக்கல்வி முடித்து சென்னை எஸ்.ஆர்.எம்-ல் ஏரொநாட்டிக்கல் பொறியியல் படிக்கவும் மகள் அக்ஷயா பதினொன்றாம் வகுப்பிற்கு விடுதியில் இருந்தால்தான் டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் படிக்க முடியும் என கூறி ராசிபுரத்தில் உள்ள விடுதியில் சென்று சேர்ந்து விடவும் கணவனின் தொழில் பக்தியும் எல்லாம் சேர்ந்து மெல்ல திவ்யாவை தனிமை சிறைக்குள் தள்ள ஆரம்பித்தன.

வெங்கடேசனிடம் மெல்ல தனிமையை பற்றி பேசி தான் நினைக்கும் எதிலாவது தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அனுமதி கேட்டாள். முதலில் மறுத்தவன் பின் அவளுடைய வற்புறுத்தலுக்காக ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் தேர்வுக்கு அனுப்பி வைத்தான்.

அங்கே அதே தேர்வுக்காக காத்திருந்த சிவநேசனைக் கண்டதும் திவ்யாவுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி. பள்ளி மாணவனாக பார்த்தவனை மீசை வளர்ந்த ஆண்பிள்ளையாக வயதுக்கேற்ற வளர்ச்சியுடன் இன்ஷெர்ட்டில் ஆபிஸர் போன்ற தோற்றத்துடன் அழகாக இருந்தவனை ஒரு நொடி வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் பின்புதான் சுதாரித்தாள்.

இரட்டை சடையில் ரிப்பன் வைத்து கட்டி ஸ்கூல் யூனிபார்ம் தாவணியில் பார்த்தவளை சற்றே பூசினாற்போன்ற தேகத்துடன் வயதுக்கே உரிய தெளிவுடனும் திவ்யாவை பார்த்த சிவநேசனும் மிகுந்த பரவசமடைந்தான்.

பரஸ்பரம் விசாரித்ததில் சிவநேசன் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் தன் இரு தங்கைகளுக்கு திருமணம் முடித்து ஐந்து வருடங்கள் முன்புதான் தான் திருமணம் முடித்திருப்பதாகவும் ஆனால் தனக்கு இன்னுமும் குழந்தையில்லை என்பதையும் தெரிவித்தான்.

சொல்லி வைத்தாற்போல சிவநேசனும் திவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் சேர்ந்து செய்தி வாசிப்பதாக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்த அடுத்த சந்திப்புகளில் கதை கவிதை இலக்கியம் என எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர். குழந்தையின்மை பற்றிய அவனுடைய வருத்தத்திற்கு அவள் அவனுக்கு ஆறதல் கூறினாள். இசை குறுந்தட்டுகளை மாற்றிக் கேட்டு ஷ்ரேயா கோஷலையும் ஹாரிஸ் ஜயராஜின் இசையும் எஸ். இராமக்கிருஷ்ணனின் கதா விலாசம் முதல் சிறிது வெளிச்சம் வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயங்கள் பற்றியும் பேசிப் பேசி மெல்ல மீண்டும் பள்ளிப் பிராயத்திற்கே சென்றதை போல உணர்ந்தனர்.

இருவரும் ஒருநாள் மழை இரவில் செய்தி முடித்து திரும்பும் போது பெருமழையின் காரணமாக அவளுக்கு ஆட்டோ கிடைக்காததால் சிவநேசன் தன் வண்டியில் ஏறிக்கொள்ளும் படி கூறினான். ஆனால் திவ்யாவால் இப்போது சாதாரணமாக அவனோடு ஏறிச்செல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது. வேறு வழியில்லை என்பதால் தயக்கத்துடனே ஏறிக்கொண்டாள். வெங்கடேசன் கார் வாங்கிய பிறகு கடந்த 10 ஆண்டுகளாகவே குடும்பத்துடன் எங்கு சென்றாலும் பிள்ளைகள் முன் சீட்டிலும் இவள் எப்போதும் பின் சீட்டிலுமே அமர்ந்து செல்வாள். நெடுநாளுக்கு பிறகு ஒரு ஆண் மகனோடு ஸ்பரிசம் படும்படி இருசக்கர வண்டியில் சென்றது அவளுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ச்சிய ஒரு உணர்வைத்த தந்தது. அன்று இரவு முழவதும் அவர்களின் இளம்பிராய சந்திப்புகளும் பேச்சுகளும் விளையாடிய பொழுதுகளும் மீண்டும் பசுமையாக இன்னும் இனிமையாக மனக்கண்களில் தோன்றி அவளை இம்சித்தன.

மறுநாளில் இருந்து சிவநேசன்; அவளைப் பார்த்த பார்வையும் சாப்பிட்டாயா? தூங்கினாயா? மகனது படிப்பு எப்படி இருக்கிறது? மகள் போன் செய்தாளா? என ஒவ்வொன்றை பற்றியும் அக்கறையுடன் விசாரித்தது அனைத்தும் அவளுக்குள் இருந்த தன் கணவன் செய்யத்தவறிய சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிய ஏக்கத்தை மேலும் அதிகரித்தது.

தான் தேடிக்கொண்டிருந்த ஒரு துணை இவனாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சிவநேசனோடு வாழ்ந்திருந்தால் தன் வாழ்வு இன்னும் இனிமையாகவும் காதலுடனும் பேசிக்கொள்ள பகிர்ந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்திருக்கும் என்று தோன்றியதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் அவர்கள்; வேலை செய்த தனியார் தொலைக்காட்சியில் ஊழியர்கள் அனைவரையும் ஊட்டிக்கு இரண்டு நாட்கள் சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்தனர். சிவநேசன் தனக்கு அலுவலகத்தில் ஆடிட்டிங் இருப்பதால் சுற்றுலாவுக்கு வரவில்லை என கூறிவிட்டான். திவ்யா எப்படியும் வரமாட்டாள் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அன்று திவ்யாவே போன் செய்து ஏன் சிவா நீ வரல நீயும் வந்தால் டூர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன் என்றாள்.

அவள் அப்படி உரிமையாக அழைத்தது அவனுக்கு மிகவும் பிடித்தது. அலுவலகத்தில் உடம்பு சரியில்லை என பொய் சொல்லி விடுப்பு எடுத்துக்கொண்டு அவனும் அவர்களோடு கிளம்பி விட்டான். ஆனால் தான் வரப்போவதை அவளுக்கு சொல்லாமல் சஸ்பென்ஸ் காத்தான். சுற்றுலா செல்லும் அன்று அவனைப்பார்த்த அவளது கண்களில் அத்தனை ஒளி வெள்ளம். ஐஸ்க்ரீம் கடையைப் பார்த்த சிறுமியை போல் துள்ளினாள். சொல்லவேயில்லை. பாவி! என உரிமையோடு கோபித்துக்கொணடாள்.

இருவரும் பார்த்துக்கொள்ளக்கூடிய பக்கத்து இருக்கைகளில் அவள் காம்பயரர் உமாவுடனும் இவன் அப்துலொடும் அமர்ந்து கொண்டனர். உமாவும் அப்துலம் காதலர்களாக இருக்க கூடாதா என இருவர் மனமும் ஏங்கியது.

ஊட்டியில் தொப்பி பாறை தற்கொலை ஸ்பாட் ரோஸ் கார்டன் என எல்லாவற்றையும் பார்த்து ரசித்தவர்கள் குளிர் தாங்காமல் எல்லோரும் இரவு 7.00 மணிக்கே படுத்து விட்டனர். யாருக்கும் தெரியாமல் சிவநேசன் வேறொரு பெயரில் ஒரு ரூம் புக் செய்திருந்தான். இரவு அனைவரும் குளர்காய்ந்து விட்டு அவரவர் அறைக்கு திரும்பிய போது திவ்யா நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் உனக்கும் விருப்பமிருந்தால் அறை எண் 103-க்கு வா என அவளிடம் கிசுகிசுத்தான்.

மணி 11.00-ஐ தாண்டியது. அவளை மீண்டும் செல்போனில் அழைக்கலாமா என்று எழுந்த எண்ணத்தை உதறினான். அதுதான் சொன்னேன்ல இனி அவளாக வந்தாள் சரி என்று வீம்பாக படுத்து விட்டான். மணி 12.00 கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தால் எதிர்பார்த்ததை போல் அவளேதான். ஓரு மணி நேரம் குட்டி தூக்கம் அவள் மேலிருந்த கோபத்தை குறைத்திருந்தது. சட்டென அவள் கையைப்பிடித்து இழுத்து கதவைத் தாளிட்டான். அதிர்ந்தவளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்றுதான் என முடிப்பதற்கு முன் அவளும் தெரியும் நீ என் மீது வைத்திருக்கும் அக்கறை எனக்கு புரியும் என்றாள்.

பின்பு அவன் வா உட்கார் என சொல்லவும் அவளும் அமர்ந்தாள். இருவரும் இரண்டு நிமிடம் மௌனமாக பார்த்துக்கொண்டனர். அதில் ஆயிரம் காந்தங்களின் ஈர்ப்பு சக்தியை இருவராலும் உணர முடிந்தது. அப்பார்வையின் தகிப்பை தாங்க முடியாமல் எழுந்து தலை கவிழ்ந்து நின்றவளின் அருகில் மெல்ல வந்து எதிரில் நின்றவன் அவள் கைகளைப் பற்றி புறங்கையில் முத்தமிட்டபடி அழகாய் இருக்கிறாய் ஐ லவ் யூ என்றான் மென்மையான குரலில்.

அதைக்கேட்டு சற்றே அதிர்ந்தவளாக தலையை பின்னுக்கு இழுத்து பெருமூச்சுடன் பயமாக இருக்கிறது என்றாள். இதென்ன சிவா 37-வயதில் காதலெல்லாம் சாத்தியமா? என்றாள் தயக்கத்துடன். உம்..... வந்திருக்கிறதே என தோள்களை குலுக்கி சொன்னான். அவன் பற்றியிருந்த கைகளை மெல்ல அழுத்தவும் அப்படியே அவன் தோளில் சாய்ந்து விட்டாள். அவன் அவளை இழுத்து அணைத்தபடி சுவரில் சாய்த்து குனிந்து அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான். தாங்க முடியாத உணர்வுகளால் அவன் தலையைக் கொய்தாள். அங்கே ஒரு ஆனந்த சங்கமம் அழகாய் ஆர்ப்பரித்தது.

அவனது மடியில் சாய்ந்து படுத்திருந்தவள் விடை பெறுவதற்கு முன்ää இரு கண்ணாடி வளையல்களை அவனிடம் தந்தாள். இது நான் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது தந்த தாம்பலத்தில் இருந்தது. இதைக்கொடுக்கத்தான் வந்தேன் என அவள் சொன்ன பொய்யான காரணத்தை அவன் ரசித்து சிரித்தான். அந்த சிரிப்பு அவளையும் தொற்றிக்கொண்டது. பின்பு இதை உன் மனைவி தீபிகாவிடம் கொடுத்து அணியச்சொல். கண்டிப்பாக கூடிய சீக்கிரமே குழந்தை பிறக்கும். குழந்தை வேணும்டா! தேய் ஆர் அவர் மோட்டிவேஷனல் ஸ்பிரிட் என்றாள். சுயநினைவுக்கு வந்தவனாக சற்றே ஆழ்ந்து யோசித்து ஆமென தலையசைத்தான்.

ஊர் திரும்பியவன் அந்த வளையலை மனைவியிடம் கொடுத்து திவ்யா சொன்ன வார்த்தைகளை அவள் எந்த நிலையில் இருந்து சொன்னால் என்பதை மட்டும் மறைத்து விட்டு கொடுத்து அணிந்து கொள்ள சொன்னான். அவளுக்குதான் தன் குடும்பத்தின் மீது எவ்வளவு அக்கறை என வியந்தான். தீபிகாவும் அதையே ஆமோதித்தாள். அவ்வளையல்களை தன் கைகளில் நம்பிக்கையோடு அணிந்து கொண்டாள்.

வீடு திரும்பிய திவ்யா கணவனின் முகம் பார்க்கும்போது குற்ற உணர்வு தன்னை ஆட்படுத்தியதை நன்றாக உணர்ந்தாள். ஆனாலும் சிவநேசனை அவளால் வெறுத்து ஒதுக்க முடியவில்லை. ஒரு நாள் வீட்டு அலமாரியை ஒழுங்குபடுத்துகையில் தன் தாய் தந்தையரின் புகைப்படத்தை பார்த்தவள் தான் அவர்களை பழி வாங்கி விட்டதாக உணர்ந்தாள்.
நீங்கள் கொடுக்காத ஒரு வாழ்வு எனக்கு கிடைத்து விட்டது. இந்த நொடி இந்த உலகத்திலேயே நான்தான் ரொம்ப சந்தோஷமானவள்|| என சொல்லிக் கொண்டாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் காதல் குறுஞ்செய்திகளும் அறிவு சார்ந்த விஷயங்களும்ன தினமும் மூன்று வேளை போனிலும் பேசி மகிழ்ந்தனர். மெல்ல விஷயம் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களிடமெல்லாம் பரவ ஆரம்பித்தது. இவர்களின் காதலை தோலுரித்து காமமாக அவர்கள் பார்த்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தங்களது காமத்துக்கு ஆடையணிவித்து காதலாக்க முயற்சித்தனர்;.

ஊம்! புதுசு புதுசாக தேவைப்படுகிறது! என இவளைப்பற்றியும் பெரிய இடமாக பார்த்து பிடித்து விட்டான் என அவனைப்பற்றியும் இருவர் காது படவே பேசினர். அவர்கள் இருவரும் பள்ளிப்பருவத் தோழர்கள் என்ற உண்மையை அவர்கள் நம்ப மறுத்தனர்.

சிவநேசனின் அடிக்கடி போன் பேசும் நடவடிக்கை குறித்து அவன் மனைவி தீபிகா அவன் மீது சந்தேகப்பட ஆரம்பித்தாள். ஏற்கனவே குழந்தையில்லை என்ற மனக்குறையில் இருந்தவளுக்கு இது மேலும் உளைச்சலை தந்தது. அவனது போன் ரிஜிஸ்டரை செக் செய்து சண்டையிட ஆரம்பித்தாள். அதைப்பற்றி அவன் திவ்யாவிடம் சொன்னவுடன்தான் திவ்யாவின் ஆறாவது அறிவு விழித்துக்கொண்டது. ச்சே! என்ன ஒரு பாவம் செய்து விட்டேன் என மனம் நோக ஆரம்பித்தாள். தன்மீது இருக்கும் மோகத்தில் எங்கே சிவநேசன் தன் குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விடுவானோ தீபிகாவும் கணவனின் அரவணைப்பில்லாமல் தன்னைப்போன்ற அன்புக்கு ஏங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடுவாளோ என்ற பயம் அவளைக் கவ்வியது.

அதற்குள் தீபிகா கர்ப்பமாகிவிட சிவநேசனுக்கு ஏக மகிழ்ச்சி. செய்தியறிந்த திவ்யாவும் எனக்குத் தெரியும் இது நடக்கும் என்று என்றாள் மகிழ்ச்சியாக.

சிவநேசன் மனதிலும் இப்போது லேசான சஞ்சலம். மனைவியின் சந்தேக எண்ணம் நீடித்தால் அது தன் குழந்தையை பாதிக்கும். மேலும் தான் தொடர்ந்து திவ்யாவுடன் உறவு கொண்டால் அதுவும் தன் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பினான். மெல்ல விலக ஆரம்பித்தான். திவ்யாவும் அதே முடிவில் இருந்த போதும் சிவநேசன் தன்னை விட்டு விலகுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் ஏமாற்றி விட்டதாக நினைத்தாள். தான் அவசரப்பட்டு இத்தனை வருடமாக காத்து வந்த கற்புத்தன்மையை அவனால் இழந்து விட்டதாக எண்ணித் துடித்தாள். சிவநேசன் அவளது இயலாமையை தன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு விட்டதாக நம்பினாள். இவற்றையெல்லாம் அவனிடம் நேரிடையாக கேட்க நினைத்தாலும் எங்கே அவன் தன்னை முழுவதுமாக வெறுத்து விடுவானோ என பயந்தாள். தனக்கு கிடைக்காத ஒரு பொக்கிஷத்தை கடவுள் ஒரு நிமிடம் கொடுத்து பிடுங்கிக்கொண்டதாக நினைத்தாள். தான் எப்போதுமே காதல் விஷயத்தில் ஒரு அபாக்கியவதி என்கிற தன்னிரக்க உணர்வு அவளை மேலும் சின்னாபின்னமாக்கியது.

இவையணைத்தும் சேர்ந்து கேள்வி கணைகள் அவளைத்துரத்த ஒரு நாள் கேட்டே விட்டாள். என்னை ஒரே ஒரு முறை அனுபவிக்க வேண்டும் என்ற திட்டத்துடன்தான் என்னிடம் பழகினாயா? என அழுதபடி கேட்டாள்.

அப்போதுதான் சிவநேசன் தனக்கிருந்த பயத்தை கூறினான். குழந்தை பிறப்பிற்கு பிறகு நாமிருவரும் இணையலாம் என கூறினான்.

அதுபோலவே பத்து மாதங்களில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் தீபிகா. இன்றுதான் திவ்யா குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறாள். குழந்தையை கைகளில் ஏந்திய நேரத்தில் மீண்டும் தாயானதாக உணர்கிறாள். தீபிகாவிடம் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள் எனக்கூறி விட்டு விடை பெற்றாள்.

மருத்துவமனை அறையை விட்டு அவளை வழியனுப்ப வந்த சிவநேசன் திவ்யாவிடம் இது நம் குழந்தை என கிசுகிசுத்தான. எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறாய சிவா? என வினவியவளிடம் மனம் மற்றும் உணர்வு ரீதியான அடிப்படையில்தால் சொல்கிறேன் என்றான். அதில் மனம் உருகியபோதும் தான் இனி தவறு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

இப்போது சொல் திவ்யா நாம் எங்கு செல்லலாம்? நீ எந்த ஊருக்கு அழைத்தாலும் நான் வரத்தயார் என கூறியவனிடம் மகிழ்ச்சி சிவா இனி நாம் இருவரும் சந்திக்கவே வேண்டாம். அதனால் டி.வி.யில் இருந்து நான் விலகி விடுகிறேன் என்றாள்.

ஏன் இந்த விபரீத முடிவு? என அதிர்ந்தவனிடம் சிறிது நேரம் மௌனம் காத்து பின் இல்லை இதுதான் நல்ல முடிவு நம் இருவரின் குடும்பத்திற்கும் ஏற்ற முடிவு என்றாள்.

திவ்யா நீ இல்லாத வாழ்வை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. நான் உங்கள் இருவரையும் ஒன்றாகவே நேசிக்கிறேன் உன்னால் எப்படி என்னை உதற முடிந்தது? என்றவனை அதுதான் உன் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே என்றவள் நினைவுகள் வாட்டும்போது குழந்தையின் முகத்தைப் பார் அதில் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கும் என்று கூறினாள்.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ராசிபுரம் சென்று தங்கி அக்ஷயாவின் படிப்பிற்கு உதவ போகிறேன். புதிய இடம் புதிய வாழ்க்கை எல்லாவற்றையும் எனக்கும் மாற்றிவிடும். கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் பழகிக்கொள்கிறேன் ஆனாலும் உனக்கும் உன் குடும்பத்திற்குமான என் பிரார்த்தனை எப்போதும் உண்டு என கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி வெளியேறினாள்.

மதி
23-10-2012, 12:46 PM
“பச்சை நிறமே இல்லை.”.


புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது.

ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின் கண்களும் , முன் இருக்கையில் அமர்திருந்த தலைமையாசிரியார் சுகவனத்தின் கண்களும்.

சிக்னலில் சிவப்பு லைட் விழுந்ததை கவனித்த ட்ரைவர் வண்டியை நிறுத்தினார். மீண்டும் நீல லைட் விழுந்தவுடன் வண்டியை கிளப்பினார்.

சற்று தொலைவில் ஒரு டீக்கடையில் லேப்டாப்பில் செய்திகளை படித்துக்கொண்டிருந்தவர்களிடம் சென்ற சுகவனம் தன் கையில் இருந்த ஒரு புகைப்படத்தை காட்டி இதை பாத்தீருங்காளா? என்றார் , அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள், இல்ல நாங்க பார்த்ததில்ல, இது என்ன?, என்று சிரிச்சிகிட்டே அவர்கிட்ட மறுபடியும் கேட்டனர்.

தலையை அசைத்தவாரே மறுபடியும் வண்டிக்கு வந்தார், செல்லும் வழியெல்லாம் வெறும் தொழிற்சாலைகளும் , காற்றுகூட புகமுடியாதளவுக்கு நெருக்க கட்டபட்ட வீடுகளாகவும் தான் காட்சியாளித்தது.

மஞ்சள் சால்வை போத்தினது போல் எல்ல இடமும் ஒரே புழுதியாக இருந்தது.

அங்க ஒரு இடதுல அழ்துளை கிணறு தோண்ட அதிலிருந்து தண்ணீர் வரம வெறும் ப்ளாஸ்ட்டிக் கழிவுகள் தான் தண்ணீரை போல வந்து கொண்டிருந்தது.

சுகவனமும் வழியில் செல்லும் ஒவ்வொருத்தர்கிட்டயும், அந்த போட்டவை காட்டி கேட்க யாருமே தெரியாதுனு சொல்லீடாங்க.
கடைசியாக அதைபார்த்த ஒருவர் எங்க தாத்தாவுக்கு தெரிஞ்சிருகணும் நினைக்கிறேன், வாங்க அவர்கிட்ட கேட்டு பார்ப்போம்.
அந்த புகைபடத்தை தனது சுருங்கிய கண்ணால் விரித்து பார்த்த பெரியவர், இந்த இடத்த பாக்காணும்னா இன்னும் நீங்க 300 கீ.மீ போகணும் சொன்னாரு.

இதை கேட்ட சுகவனம் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றிய சொல்லிவிட்டு அங்கிருந்தது கிளம்பினார்.
மாணவர்களும் மகிழ்ச்சியில் ஆரவரம் போட்டனர். சற்று நேரத்தில் அவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த இடத்திற்கு வந்துவிட்டனர், பசங்களை வண்டியில் இருக்க சொல்லிவிட்டு சுகவனம் அலுவலகத்திற்கு சென்றார், தான் வந்த விபரத்தை காப்பாளரிடம் கூறினார்.

அதைக்கேட்ட காப்பாளர் சாரி சார் இன்னைக்கு பர்மிஷன் தரமுடியாது, இன்னைக்கு மட்டுமில்ல, இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க பார்க்கமுடியாது, ஏன்ன எற்கனவே எல்லாம் டிக்கெட்டும் புக் ஆயிட்டு.

மூணு மாசத்துக்கு முன்னடியே நீங்க புக் பண்ணிருக்கணும், அப்பதான் நீங்க இப்ப பார்க்கமுடியும்,

இல்ல சார் எனக்கு தெரியாது, நாங்க ரொம்ப தூரத்துலேர்ந்து வர்றோம், பசங்கலெல்லாம் ரொம்ப ஆசையோட வந்தீருக்காங்க, இப்ப நீங்க பார்க்கமுடியாதுனு சொல்லீடிங்கனா ரொம்ப ஏங்கி போயிடுவாங்கா. இதுவரைக்கும் எங்க ஸ்கூலேருந்து யாருமே அத பார்த்ததுயில்ல , சோ ,ப்ளீஸ் நீங்க தான் கொஞ்சம் உதவி பண்ணணும்.

என்ன? சார் இப்படி தொல்ல பண்ணுறீங்க,

ஒரு நாளைக்கு 50 பேரதான் அனுமதிப்போம், இன்னைக்கு எல்லாமே புக் ஆயிட்டு, சரி ஒண்ணு பண்ணுவோம், 15 நிமிசம் டைம் தர்றேன் அதுக்குள்ள போய் பார்த்திட்டு வந்திடணும் சரிய?,

ஒ,கே சார், அதுபோதும்,

சரி வாங்க என்று சொல்லி கேட்டை திறந்துவிட்டார். பசங்களை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார் சுகவனம்,
பசங்களும் சுகவனமும் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யபடவைத்தது, அவர்கள் வியப்புடன் பார்த்தது முன்னே கம்பீரமாக நிற்கும் மரங்களைதான்.

நாகரீக வளர்ச்சியில் காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டதால் அந்த மாணவர்கள் அப்போதுதான் முதல் முறையாக மரங்களை பார்க்கின்றனர். அவர்கள் முகத்தில் எல்லையில்ல மகிழ்ச்சி கரைபுரண்டு ஒடியது, சுகவனம் இதுதான் மரங்கள் என்று மாணவர்களிடம் கூறினார்.

அது என்ன? நிறம் என்று மாணவர்கள் கேட்க, இதுதான் பச்சை நிறம் என்று விளக்கினார்.

இந்த காத்து ரொம்ப சூப்பர இருக்கு, ஏதோ புது வாசம் அடிக்குது, இந்த காத்து வீச எவ்வளவு கரண்ட் செலவாகும், இதுக்கு எங்க சார் மோட்டார் இருக்கு, இது எப்படி? சார் ஒரே கால்ல நிற்குது, என்று அடுக்குகடுக்காக கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர் மாணவர்கள்.
இதைக்கேட்ட சுகவனம் இதுதான் சுத்தமான ஆக்ஸிஜன் உள்ள காத்து, இந்த மரத்துல பச்சையம் என்று ஒரு கெமிக்கல் இருக்கு, அதுனால்தான் இது பச்ச கலருல இருக்கு. மரங்களே இல்லததால்தான் பச்சை என்கிற நிறமே இல்லாம போயிட்டு, அதுனாலதான் உங்களுக்கு பச்சை கலரே எப்படி இருக்கும்ணு?தெரியிலஇதுக்கு கிழ நிரைய வேர்கள் இருக்கும் அதுனால்தான் இப்படி நிற்குது .டேய் இலைகள பறிக்காதீங்க?

எங்க காலத்துல மரத்துக்கு கிழேதான் பாடம் நடத்துவாங்க இப்ப உங்களுக்கு மரத்த பற்றியே பாடம் நடத்த வேண்டியாத இருக்கு, இப்படி ஃபோட்டோவிலும்,புக்லேயும் மட்டும் தான் பார்க்க வேண்டியாதிருக்கு ,என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
அங்கு வந்த காப்பாளர் சார் உங்க டைம் முடிஞ்சிடுச்சி. நீங்க கிளம்புலாம் என்றார் .மிகுந்த மனவருத்ததுடன் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர்.

ஆரம்பத்துல இந்த இடம் முழுக்க சுற்றுலாத்தலமதான் இருந்திச்சு, கொஞ்ச கொஞ்சம இங்க இருக்கிற மரத்தயெல்லாம் காலிபண்ணி பேக்டரியாவும்,ப்ளாட்டாவும் ஆக்கீடாங்க, கடைசிய இருக்கிறது இந்த இடம் மட்டும்தான், அதுனால்தான் இந்த இடத்த பத்திரம பாத்துக்கிறோம் என்று கூறிய காப்பாளருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது காத்துல மரங்கள் ஆடுவது அனைவருக்கும் டாடா காட்டுவது போல் இருந்தது.

மாணவர்களும் பதிலுக்கு டாடா காட்டினர், அவர்களுடன் சேர்ந்த்து சுகவனமும் கையை அசைத்தார்.

வண்டிபுறப்பட்டு சென்றுக்கொண்டிருக்கும் போது சட்டென நின்றது, முகத்தை துடைத்தவாறே எழுந்த சுகவனத்திற்கு அப்போதுதான் தெரிந்தது தான் இதுவரை கண்டது கனவு என்று.

சுகவனம் அந்த ஊரில் வசிக்கும் பெரிய பணக்காரர், அவருக்கு சொந்தமாக ஒரு பள்ளியும் நிரைய தோட்டங்களும் உள்ளது.
அவருக்கு சொந்தமாக தோட்டத்தை அழித்துவிட்டு ப்ளாட் போட செல்லும்போதுதான் இந்த கனவு நடந்தது.
மரங்கள் இல்லன அந்த ஊரு எப்படி இருக்கும் என்பதைத்தான் இவ்வளவு நேரமா அவருடைய கனவுல வந்தது.
அதில் வந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் ஈட்டியை போல் பாய்ந்தது.

என்னயா ?முழுச்சிகிட்டீங்களா? என்று கேட்ட ட்ரைவர் மணியிடம் ஆமாம் இப்பதான் முழுச்சிகிட்டேன்.

எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்ய பார்த்தேன், என் மண்ண நானெ அழிகப்பாத்தேனெ, என்று மனசுக்குள்ளே நினைத்வாறே ,
ஸ்கூலுக்கு சென்ற சுகவனம் மத்த ஆசிரியர்களையும் தனது உதவியாளரையும் தனது ரூமுக்கு அழைத்தார்

இங்க இருக்குர மரத்தயெல்லாம் அழிக்கவேணாம், அப்படியே இருக்கட்டும், அதுமட்டுமில்ல ஏற்கனவே நாம போட்டு இருக்கிற எல்லா ப்ளாட்டிலேயும் புதுசா மரங்கல வாங்கிட்டு வந்துபோட்டுங்க, அத நம்ப ஸ்கூல் படிக்கிற ஒவ்வொரு பசங்ககிட்டேயும் கொடுத்து நட சொல்லுங்க, அத அவங்களவிட்டே நல்ல பராமரிக்க சொல்லுங்க, சரியா விளையாத மண்ணுல அந்த மண்ண டெஸ்ட் பண்ணி அதுக்கு ஏத்த மாதிரி சரியான மரங்களையும், பயிர்களையும் போடுங்க, அதுமட்டுமில்லாம நம்ப ஏரியாவுல இருக்கிற ஒவ்வொரு வீட்லேயும் ஒவ்வொரு மரம் கண்டிப்பா வளக்கணும்ணு சொல்லுங்க, பத்து வீட்டுக்கு ஒரு குப்பைதொட்டிய நம்ப செலவுலே வச்சி கொடுத்துடுங்க, குப்பையயெல்லாம் அதுல தான் போடனும், முடிஞ்சவரைக்கும் பிளாஸ்டிக் பொருள தவிர்க்க சொல்லுங்க .

இத கொஞ்சம் கவனமா ஃபாலோ பண்ணங்க என்று சொல்லியதோடு மட்டுமில்லாமல் அதை சரியாக கையாளவும் செய்தார்.

அன்று முதல் அந்த ஊர் மற்ற ஊர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தது.


ஒரு நாட்டின் வளம் நன்றாக இருக்கனும் என்றால்- அந்த
நாட்டிலுள்ள காட்டின் வளம் நன்றாக இருக்கனும்.
எனவே நாமும் மரங்களை வளர்ப்போம்.
காடுகளை பாதுகாப்போம்.


முற்றும்.

மதி
23-10-2012, 12:48 PM
மாற்றாள்

திறந்திருந்த ஜன்னல் வழியாக நுழைந்த அதிகாலை சூரியனின் இளம் மஞ்சள் கதிர்கள் அறையை ஆக்ரமிக்க துவங்கின. அலாரம் தனக்கு இடப்பட்டிருந்த கட்டளையின் படி மும்முரமாக ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது.

சிரமப்பட்டு கண்விழித்தான் வைத்தி. அலார ஒலியை நிறுத்தினான். வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாகவே எழுந்ததாலும், முன்தின இரவு தூக்கமின்னை காரணமாகவும் எழுந்திருக்க சிரமப்பட்டான்.

அவன் தங்கியிருந்த மேன்ஷனில் பெரும்பாலோர் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதை கழிவறைகள் காலியாக இருந்ததிலிருந்து உணரமுடிந்தது. காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தபோது, அவனின் அறைநண்பர்கள் தூக்கத்தை விரட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

“என்ன மாப்ள இவ்ளோ காலையில எழுந்திட்ட.. ஏதாவது ஸ்பெஷல் புரோகிராமா..” என்றான் அறைவாசிகளில் ஒருவன்.

“ஒன்னும் இல்லப்பா.. சும்மாதான்.. தூக்கம் வரல..”

“பொய் சொல்லாதடா.. தங்கச்சி வரச்சொல்லுச்சா..” என்றான் மற்றொரு அறைவாசி நண்பன்.

தங்கச்சி என்று அவன் குறிப்பிட்டதும், முன்தினம் அவனை தூக்கமில்லாமல் செய்த ரோசியின் நினைவுகள் மீண்டும் அவனை சூழ்ந்து கொண்டது. எனினும் சமாளித்துக்கொண்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை, எழுந்து வேலைக்கு கிளம்புங்க” என்றவாறு அலுவலகம் செல்ல தயாராகி பேருந்து நிறுத்தம் வந்து நின்றுகொண்டான்.

ரோசி – கடந்த ஆறு மாத காலமாக அவன் நினைவுகளில் உறைந்து போனவள். ஆர்ப்பாட்டமில்லாத அழகு. பார்த்த மாத்திரத்தில் காதலிக்க தூண்டும் கண்கள். வைத்தி சற்று அதிகமாகவே தூண்டப்பட்டிருந்தான்.

தினமும் அலுவலகம் செல்லும் பேருந்தில் திட்டமிடப்படாத, எதிர்பாராத விதமாய் தொடங்கிய சந்திப்புகள், பின்னர் திட்டமிடப்பட்டு, காத்திருந்து பயணித்து, காதலை கண்களால் பரிமாறிக்கொள்ளும் விதமாய் உருமாறியது. வழக்கமான பயணத்தின் போது, டயர் பஞ்சரால் பேருந்து ஓரம்கட்டப்பட்ட ஒரு காலை பொழுதில் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு மவுனம் விலகிவிட, வாய் வழியே காதல் கசிந்தது. அதுமுதல் சிறந்த காதலர்களுக்கான எல்லா லட்சணங்களுக்குள்ளும் தங்களை பொருத்திக்கொண்டனர்.

ஆனால் கடந்த இரண்டு தினங்களாக அவள் வழக்கமாக வரவேண்டிய பேருந்தில் வராததால் வாடிப்போனான் வைத்தி. செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே காலையில் அவள் பேருந்து ஏறும் நிறுத்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே சென்று நின்றுவிடுவது என்று முடிவெடுத்து அதன்படி வந்து காத்திருந்தான்.

அவன் நினைத்தது போலவே ரோசியும் வழக்கத்தைவிட முன்பாகவே பேருந்து நிறுத்தம் வந்தாள். இவனை கண்டதும் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைக்க முயன்றாள். வைத்தி மெல்ல அவளருகில் சென்று, “என்னாச்சி ரோசி... ஏன் என்ன தவிர்க்கிற..” என்றான்.

“நீங்க செய்தது சரியா.. ஏன் சொல்லாம மறைச்சிங்க..” ரோசிக்கு குரல் தழுதழுத்தது.

“என்ன சொல்ற புரியல... “

“நான் வேலை செய்ற பி&பி நிறுவனத்தில் ஒரு வருடம் முன்பு வரை நீங்க வேலை செய்து இருக்கீங்க. அங்க ஏதோ சண்டை போட்டுகிட்டு அங்கிருந்து விலகி, வேணும்னே எங்க நிறுவனத்தோட முதல் எதிரி நிறுவனமான ஷக்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கீங்க. உண்மைதான..”

“இது தான் உன் பிரச்சனையா..” இறுக்கம் தளர்ந்தான் வைத்தி.

“உங்களுக்கு இது சாதரணமாக தெரியலாம்... ஆனால் எனக்கு அப்படியில்ல. எங்க நிறுவனத்தோட பழைய போட்டோவுல உங்கள பார்த்துட்டு கேட்டப்பதான் இதெல்லாம் தெரிந்தது. இன்னைக்கு நானும் என் குடும்பமும் நிம்மதியாக வாழ்றதுக்கு எங்க பி&பி நிறுவனம் தான் காரணம். அதை அழிக்க நினைக்கிற ஒரு நிறுவனத்தில் வேலை செய்ற உங்கள காதலிக்க என் மனசு இடம் கொடுக்கல. அதனால..” அவள் சொல்லி முடிப்பதற்குள் உரிமையோடு குறுக்கிட்டான் வைத்தி “அவசரப்படாதே என் செல்லக் காதலியே.. எனக்கு பசிக்குது.. வா சாப்டுகிட்டே பேசுவோம்”

சற்று தயங்கியவள் அவன் ஆளுமைக்கு ஆட்ப்பட்டவள் போல் அவனை பின் தொடர்ந்தாள். அதிகம் ஆள் வர வாய்ப்பில்லாத ஒரு ஹோட்டல் மூலையிலிருந்த மேசையருகே அமர்ந்தனர். சர்வரிடம் வேண்டிய சிற்றுண்டியை சொல்லிவிட்டு, முகத்தில் லேசான புன்னகையோடு, “ரோசிக்கண்ணு இது தொழில் ரகசியம். இப்ப எதுவும் கேக்காத. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ.. நீயே வியக்கற அளவுக்கு புரமோஷனும் பணமும் வரும்” என்றான்.

“இத சொல்லத்தான் இங்க வந்திங்களா, நான் கிளம்பறேன்” எழுந்துகொண்டாள். “அவசரப்படாதே ரோசி.. உட்கார் சொல்றேன்” யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தான். அவள் உட்கார்ந்துகொண்டாள்.

“ரோசி, தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைத்து நான்கு வழி சாலையமைக்க அரசு ஒரு திட்டம் போட்டதும், அதுக்கு டெண்டர் விட்டதும் உனக்கு ஏற்கனவே தெரியும்னு நினைக்கிறேன். அது பல்லாயிரம் கோடி ரூபாய் புராஜக்ட். அந்த திட்டத்தை ஏலம் எடுக்க, நீ வேலை செய்ற பி&பி நிறுவனமும், நான் வேலை செய்ற ஷக்தி நிறுவனமும் கடும் போட்டி போடுது. இதுல போட்டி நிறுவனம் குறிப்பிடும் தொகை தெரிஞ்சிட்டா சுலபா ஜெயிச்சிடலாம். அதனால நான் ஒரு திட்டம் போட்டேன். அதன்படி ஷக்தி நிறுவனம் கோரும் தொகையை தெரிந்து சொன்னால் புராஜக்ட் மேனேஜர் பதவியும் ஒரு கோடி ரூபாய் பணமும் தரணும்னு பி&பி நிறுவனத்தோட சேர்மேனிடம் பேசிட்டு தான் அங்கே சண்டை போடற மாதிரி சூழ்நிலையை உருவாக்கி அங்கிருந்து விலகி ஷக்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இங்க சில முக்கிய பைல்களை திருடி வெற்றிகரமா கொட்டேஷன் தொகையை தெரிஞ்சிகிட்டு அதை பி&பி நிறுவனத்தில் கொடுத்துட்டேன். அந்த தொகையை விட ஒரு லட்சம் ரூபாய் குறைத்து போட்டு பி&பி நிறுவனம் இந்த ஏலத்தில் ஜெயிச்சிடுவாங்க. அப்புறம் ஐயாதான் புராஜக்ட் மேனேஜர். அதுக்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு. போதுமா...” நீண்ட உரையாற்றி முடித்தான் வைத்தி.

அனைத்தையும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த ரோசி, வைத்தியின் கைபிடித்து அவன் உள்ளங்கையில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தாள்.

ஊடலுக்குபிறகான அவர்களின் நேசம் மேலும் பலப்பட்டது.

முடிவு அறிவிக்கபடும் நாளில், குறித்த நேரத்தில் அரசு குறைந்த தொகை கோரிய நிறுவனத்தை தேர்வு செய்வதாக அறிவித்தது. அவன் எதிர்பார்த்தபடியே முடிவையறிந்து ஷக்தி நிறுவனம் சோகத்தில் மூழ்கியது. மேலும் சிக்கன நடவடிக்கை என கூறி சிலரை வேலையிலிருந்து நீக்குவதாக ஷக்தி நிறுவன நிர்வாகம் அறிவித்தது. அதில் வைத்தியின் பெயரும் இருந்தது. சிறிது நேரம் சோகமாய் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு மெல்ல வெளியேறினான் வைத்தி.

பின்னர் தன் பதவியேற்பு விழாவின் தேதியறியும் ஆவலோடு, பி&பி நிறுவன சேர்மேனை செல்பேசியில் அழைத்தான்.

“என்னப்பா வேணும்” சேர்மேனின் உதவியாளர் பேசினார்.

“சேர்மேன் சார் இல்லியா” உற்சாகமாக கேட்டான் வைத்தி.

“இருக்காரு.. உனக்கு என்ன வேணும் சொல்லு” பேச்சிலிருந்த கடுமை வைத்தியை திடுக்கிட வைத்தது. “என்ன சார் இப்படி பேசறீங்க.. எவ்வளவு பெரிய வெற்றி தேடி தந்திருக்கேன்”

“கிழிச்ச போ.. அதான் புரோஜக்ட அந்த பன்னாட்டு சீட்டர்ஸ் கம்பனிகாரன் தள்ளிட்டு போயிட்டானே” என்றார் எரிச்சலோடு.

“என்ன சார் சொல்றீங்க, புரொஜக்ட் நமக்கில்லையா..”

“விவரமே தெரியாதா, அமெரிக்க பன்னாட்டு சீட்டர்ஸ் கம்பனிகாரன் நம்ம தொகையைவிட ஒரு லட்சம் ரூபாய் கம்மியா போட்டு புரொஜக்ட தூக்கிட்டான். சேர்மேன் ரொம்ப அப்செட். உன்னோட பேச விரும்பல. நீ நம்பக தன்மை இல்லாதவன்னு அவர் நினைக்கிறார். இனி நீ இங்க வேணாம்னு சொல்லிட்டார். வச்சிடட்டுமா” பதிலை எதிர் பார்க்காமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பேரதிர்ச்சியில் உறைந்துபோனான் வைத்தி. ரோசி முகத்தை எப்படி எதிர் கொள்வது என நினைத்தபடியே, மெல்ல நடக்கத்தொடங்கினான்.

“வைத்தி.. வைத்தி” ரோசியின் குரல் கேட்டது ஆனால் அவளை காணவில்லை. அதேநேரத்தில் அவன் பக்கத்தில் நின்றிருந்த விலையுயர்ந்த வெளிநாட்டு காரின் கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே டி ஷர்டும், ஜீன்சும் அணிந்த நவநாகரீக பெண் அமர்ந்திருந்தாள். “கெட் இன்” அநாயாசமாக ஆணையிட்ட அந்த பெண்ணை உற்று நோக்கினான். ஆம். ரோசி தான் அவள். ஆச்சர்யம் அகலாத நிலையில் இயந்திரத்தனமாக காரில் அமர்ந்து கொண்டான்.

“வைத்தி, உனக்கு அதிகம் விளக்க வேண்டியிருக்காதுன்னு நினைக்கிறேன். பி&பி நிறுவனத்திற்காக நீ என்ன செய்தியொ அதே வேளைய அமெரிக்க சீட்டர்ஸ் கம்பனிக்காக நான் செய்தேன். ஷக்தி நிறுவனத்தோட தொகையை தெரிந்துகொள்ளத்தான் உன்னோடு பழகினேன். ஆனால் நீயும் அதே திட்டத்தோடு இருக்கறத தெரிஞ்சிக்கிட்டேன். அதனால என் வேல சுலபமாயிடுத்து. அவ்வளவுதான். தெரிந்தோ தெரியாமலோ நீ என்னை லவ் பண்ண. அதனால உண்மைகளை சொல்லனும்னு தோனுச்சி. மற்றபடி நோ செண்டிமென்ட்ஸ்”.

வைத்தி எதுவும் பேச இயலாதவனாக உட்கார்ந்திருந்தான்.

“ஒகே வைத்தி, எனக்கு நேரமாச்சி.. இறங்குறியா..” என்றவள் ஏதோ பொத்தானை அழுத்த கார் கதவு திறந்து கொண்டது. இறங்கி நின்றான். அவன் காலுக்கு பிடிபடாமல் பூமி நழுவி நழுவி சென்றது.

மதி
23-10-2012, 12:48 PM
மாயை


ஓயாமல் பெய்த அடைமழையால் சூரியன் கூட வெளி வர தயக்கம் காட்டி மெது மெதுவாய் மேகப் போர்வையை கிழித்து சோம்பல் முறித்து எட்டி பார்த்தது... எப்பொழுதும் இயந்திர தனமாக வாழும் சென்னைவாசிகளுக்கு, மழையா? வெய்யிலா?

சுனாமியே வந்ததாலும் அவர் அவர் அலுவலில் மும்முரமாய் இருப்பதாய் ஒரு தோரணையில் வாழும், ஜீவராசிகள்..

”டேய் விஜி எந்திரிடா, சூரிய உதயத்தை ஒரு நாள் ஆச்சும் பார்த்து இருக்கியா? நைட் எல்லாம் கண்விழிச்சு லேப்டாப்-ல எதையோ நோண்டிட்டு இருக்க வேண்டியது...ஆடு மாடு கூட எந்திரிச்சாச்சு எந்திரிக்குரனா பாரு”...

"ஏம்மா சிவகாமி , உன் அண்ண மகன் தானே ..எங்கியாச்சும் கண்டுக்கிறியா நீ...என் பேச்சுக்கு எங்க மதிப்பு இருக்கு இந்த வீட்டுல..ச்சே..என்று அலுத்துக்கொண்டார் நடராஜன்...

”விடுங்க சின்ன பையன் தானே...வேலை கிடைச்சிட்டா இப்படி எல்லாம் தூங்க கூட நேரம் இருக்காது... உதாரணத்துக்கு என்னை பாருங்க...இவன் தூங்குரதை பார்க்க ஆசையா இருக்கு,..என்னால தூங்க முடியுதா? சாவுற வரைக்கும் வேலைக்கு போகணும்னு என் விதியில எழுதி இருக்கு”.. என்று அலுத்துக் கொண்டாள் சிவகாமி..

”அப்போ என்னை பிரயோஜனம் இல்லாதவனு சொல்றியா?? வேலைக்கு போகாம உக்காந்து இருக்கேனு சொல்லி கட்டுறியா?” கொதித்து எழுந்துவிட்டார் நடராஜன்...

சொந்த தொழில் செய்து நஷ்டம் மேல நஷ்டம் வந்ததும் இல்லாம சக்கரை வியாதி, ரத்த கொதிப்பும் வந்து இனி வேலைக்கு போக முடியாமல் போன விரக்தி வெறுப்பு எல்லாம் அப்போ அப்போ தனக்கு மாட்டிய அடிமைன்னு விஜி மேல கொட்டி தீர்ப்பார்

”ஐயோ ஆரம்பிச்சுட்டார்... டேய் விஜி எந்திரி, என்னை பஸ் ஸ்டாப்-ல விட்டுரு,., நான் ஆபீஸ்க்கு போறேன்”... என்று தப்பித்தால் போதும் என்று கிளம்பி வாசலுக்கு சென்று காத்திருந்தாள் சிவகாமி..

தினம் தினம் இதை கேட்டு அலுத்து போனதால் எந்தவித அதிர்ச்சியும் கட்டாமல் அத்தையை கொண்டு பஸ் ஸ்டாப்பில் விட உடை மாற்றி கிளம்பினான்..

விஜய்..

எல்லா கனவுகளையும் நெஞ்சில் சுமந்து , ஒரு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞன்.. அம்மாவின் ஆசை ... அக்காவின் திருமணம், எல்லா வீட்டில் உள்ள மகன்களுக்கே உண்டான கடமை உணர்வும் மற்றும் தன்னுடைய சின்ன சின்ன ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்ற போகும் வேலை வரும் வேலை தெரியாமல் அன்றாடம் இப்படி சிறு சிறு சண்டைகள் சில நேரம் பெரிய சண்டையாகி "இவனுக்கு எதுக்கு நாம சோறு போடணும்னு" என்ற மாமாவின் வார்த்தைகள் காது பட கேட்டாலும், கண்டும் காணமல் போக பழகி கொண்டாலும் சில நேரங்களில் மனம் உடைந்து வரும் கண்ணீர் துளிகளை மறைக்கமுடியாமல் தவித்து துடிப்பான்.. அந்நேரம் அவன் கண்மூடி துயரம் மறக்க நினைக்கையில்

"விஜி கவலைபடாதடா நிச்சயம் நீ ஆசை படுற வேலை கண்டிப்பா கிடைக்கும்" அந்த மகிழ்ச்சி நாளுக்காக நான் காத்துகிட்டே இருப்பேன்..

திவ்யாவின் நம்பிக்கை ஊட்டும் வரிகள் மட்டுமே அவன் வழிகளை தீர்க்கும் மருந்தாகும் பல நேரங்களில்..
சொல்லாத காதலை அவள் சொல்லும் மகிழ்ச்சி நாளில் சொல்ல காத்திருக்கிறான்.

"டேய் விஜி நிறுத்து...ஸ்டாப் வந்திருச்சு...என்ன சிந்தனையில நீ இருக்கியோ"...மாமா சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்காத..இன்னைக்கு இண்டர்வியூ போகணும்னு சொன்னியே,,, இந்தா பணம்.. பார்த்து பத்திரமா போய்டுவா...உங்க அம்மா போன் பண்ண நான் விசாரிச்சேன்னு சொல்லு" என்று அவசரம் அவசரமாக பஸ் ஏற ஓடினால் சிவகாமி..

TNPSC பயிற்சி மையம்..

உங்கள் அரசாங்க வேலை கனவை நிறைவேற்றி தருவதே எங்கள் லட்சியம்..

முயற்சியும் உழைப்பும் இருந்தால் உங்கள் கனவு நிறைவேறும்

இன்றே இணைந்து பயன் பெறுங்கள்

பயிற்சி மையத்தின் விளம்பர பலகை..

சட்டென்று ராஜேஷ் நினைவுக்கு வர ...அவனைச் சென்று பாப்போம் என்று நேராக ராஜேஷ் வீட்டை நோக்கிச் சென்றான் விஜி..

TNPSC தேர்வு எழுதி இருந்தானே என்ன ஆச்சு என்று கேட்கலாம் என்று நினைத்து கொண்டே செல்ல..

எங்க போற விஜி? என்று அவன் நண்பன் சுரேஷ் கேட்க.
"நம்ம ராஜேஷ பார்க்க" என்று சொல்ல..


"அவன் இங்க இல்லைடா.. அவன் கத்தார் போய்ட்டான்.. டிரைவர் வேலை கிடைச்சிருச்சு அவனுக்கு"...

"என்னடா சொல்ற? அவன் அரசாங்க வேலைக்கு தான் போவேன்னு கஷ்டப்பட்டு படிச்சானே.. என்ன ஆச்சு?

"இன்னுமா இதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்க? அதெல்லாம் சும்மா கண்துடைப்பு-டா...நேர்மையா எழுதினவன் எவனுக்குமே வேலை கிடைச்சதா சரித்தரமே இல்லை...

"எக்ஸாம்-ல பாஸ் பண்ணிட்ட லெட்டர தான் நாம பிரேம் செய்து வச்சுக்கணும்டா"...

"எல்லாம் பணம் செய்ற வேலைடா....இவன் சும்மா இல்லாமல் நேர்மையா இருந்து தான் வேலை கிடைக்கல, வேற வழியில முயற்சி பண்ணலாம்னு எவனோ சொன்னானு ஒருத்தன் கிட்ட ரெண்டு லட்சத்தை கட்டி, அவன் இவன்கிட இப்போ வரும் இண்டர்வியூ அப்போ வரும்னு ஏமாத்திட்டு போய்ட்டான்"...

"கடனாளியாக ஆனது தான் மிச்சம்...இப்போ பாரு கத்தார்-ல டிரைவர் வேலைக்கு போய்ட்டான்...வாங்கின கடனையாவது அடைச்சிடலாம்னு .. அதனால விஜி எந்த வேலை கிடைச்சாலும் போடா.. நேரத்தை வீணடிக்காமல் என்று சுரேஷ் சொல்லி விட்டு நகர..

சொந்த ஊரான திருச்சியை விட்டு சென்னைக்கு வந்து அல்லல் பட்ட நாள் எல்லாம் கண் முன்னே நிழல் ஆட...
கவலை தோய்ந்த முகத்துடன், விஜி சென்ற வாரம் வந்த TNPSC பணிக்கான தேர்ச்சிப் பெற்றதாக வந்த கடிதத்தை எடுத்து ஒரு கணம் பார்த்தான்...

ஆசையாக அம்மாவிற்கு சொன்ன போது
“கவலைப் படாத விஜி உனக்கு அரசாங்க வேலை தான் கிடைக்கும்னு உன் ராசியிலேயே இருக்கு” என்று சொன்னது நினைவுக்கு வர கண்ணில் நீர்த்துளி மீண்டும் கன்னத்தை தொட, ஒரு கணம் சுதாரித்து மீண்டும் வீடு நோக்கி செல்ல
மீண்டும் TNPSC பயிற்சி மையம்.. பலகை..

அங்கே இருவர்..

“மச்சி எப்டியாவது இதுல சேரணும்டா... வேலைன்னு போன அரசாங்க வேலை தண்டா ...எத்தனை வருஷம் ஆனாலும் சரிடா” என்று பேசுவதை கேட்டு

விஜி சிரிப்பதா அழுவாத என்றுத் தெரியாமல், கல்லூரி முடித்து மூன்று வருடமாக “போகாத ஊருக்கு வழி தேடியதைப் போல” திரை மறைவில் நடக்கும் சித்து வேலைகள் அறியாமல் பல கனவுகளை நெஞ்சில் சுமக்கும் என்னை போன்ற முட்டாள்களை யார் திருத்துவது என்று தன்னைத் தானே திட்டி கொண்டு

இன்னைக்கு நடக்கப் போற இண்டர்வியூ , அதுவாச்சும் நிஜமா இல்லை, பொய்யா என்று தனக்குள் தானே வினா எழுப்பிக்கொண்டு, எதிர்காலத்தை பற்றிய கனவை மறந்து, பயத்தை மட்டுமே நினைவில் கொண்டு வீட்டை நோக்கி செல்ல

“வாடா வா...எப்போ போன இப்போ வர...இது வீடா இல்லை சத்திரமா” என்று மாமாவின் அர்ச்சனை..

சிறு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு தன் அறை நோக்கி சென்றான் கனத்த இதயத்தோடு..

மதி
23-10-2012, 12:50 PM
நானும்,ஜெயனும்,திருச்சியும்.


இன்று அவன் மரணமடைந்த செய்தி கிடைத்தபோது நான் நொறுங்கிபோனேன்.கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்த சொந்தங்கள் அநேகம் .வாப்பா ,உம்மா ,மூத்த சகோதரர் ,சகோதரிகள் என்று, பாதிப்பேருக்குமேல் போய்சேர்ந்துவிட்டார்கள் . அவர்களின் இழப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்த நேரமிது . மனைவியும் மகளும் அவர்களின் பிரிவின் துயரை மறக்கச்செய்து கொண்டிருக்கிற நேரம் . எனக்கு அதிகம் நண்பர்கள் எப்போதுமே கிடையாது . என் வாழ்நாள் முழுதும் இருந்த எனது நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . இப்படி அபூர்வமான எனது நண்பர்களில் ஜெயன் முதன்மையானவன்.

அன்று வகுப்பில் மாணவர்கள் சிலர் ஆங்கில கவிதையை சரியாக மனப்பாடம் செய்யவில்லை . அதற்காக நாங்கள் பகல் சாப்பாட்டிற்கு அனுப்பப்படவில்லை . இரண்டு மணிக்கு மதிய வேலை ஆரம்பமானதும் , அடுத்து வந்திருந்த அறிவியல் ஆசிரியர் சாமியல் சார் நாங்கள் தனியாக புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு நிற்பதை பார்த்து காரணம் கேட்டார் . காரணம் சொன்னதும் ,சரி போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தார் . ஆனால் எனக்கு சாப்பாடு கொண்டுவரும் கூடைகார அம்மா , நான் வராததால் ஏற்கனவே போய்விட்டார்கள் .என்னிடம் வெளியில் சாப்பிட காசும் இல்லை . வீட்டிற்குபோனால் நேரம் ஆவதுடன் ,வாப்பாவுக்கு காரணம் தெரிந்து அவர் தண்டிப்பார் . ஆகவே பசியோடு இருந்து விட முடிவு செய்தேன் . அந்த தூங்குமூஞ்சி மரநிழலில் தண்ணீர் குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு சாமியல் சார் கொடுத்திருந்த ஒரு மணி நேர அவகாசம் முடிவதற்காக காத்திருந்தேன் . அந்த நேரத்தில்தான் ஜெயனின் நட்பு கிடைத்தது.அதுவரை ஒரே வகுப்பில் இருந்தாலும் அறிமுகம் இல்லாமல் இருந்தோம் . ஏன் சாப்பிடபோகவில்லையா ? என்று கேட்டான் .ஏற்கனவே கூடைகார அம்மா போய்விட்டதையும் , வீடு காந்தி மார்க்கெட் பக்கம் இருப்பதால் போய்வர நேரமாகலாம் என்றும் சொன்னேன் . சரி எங்கள் வீட்டிற்கு வா .எங்கள் வீடு சமஸ்பிரான் தெருவில்தான் இருக்கிறது என்றான் . வேண்டாம் எனக்கு பிரச்சினை இல்லை என்றேன் . அவன் விடவில்லை .பசியாகவா இருக்கப்போகிறாய் என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான் . அவன் அம்மா விஷயம் அறிந்து இருவருக்கும் பரிமாறினார் .அன்று ஆரம்பமானது எங்கள் நட்பு.

அது 1961ம் ஆண்டு.ஊரிலிருந்து படிப்பதற்கு திருச்சிக்கு வந்தோம்.தந்தை திருச்சி ராணித்தெரு வீட்டில்இருந்தார்கள்.என்னோடு என் தம்பி மற்றும் எனது உறவினர் பிள்ளைகள் என்று மொத்தம் எட்டுப்பேர் வந்தோம்.ஊரில் நாங்கள் சரியாகப்படிக்கவில்லை என்ற பொதுவான குற்றச்சாற்றின் பேரில் திருச்சியில் எங்கள் படிப்பை தொடர முடிவு செய்தார்கள்.முதலில் நாங்கள் எல்லோரும் தெப்பக்குளத்தின் அருகில் உள்ள அந்த பிரபலமான பள்ளியில் சேர்வதற்காக விண்னப்பித்திருந்தோம்.நுழைவுத் தேர்வு நடந்தது.அதில் நான் மட்டும் அந்த பள்ளியில் சேர்ந்தேன்.மற்றவர்கள் இடம் கிடைக்காததால் மற்ற பள்ளிகளில் சேர்ந்தார்கள்.நான் அப்போது III பாஃர்ம் என்று அழைக்கப்பட்ட,8ம் வகுப்பில்,சேர்ந்தேன்.எனக்கு 8ம் வகுப்பு ஆசிரியராக வில்லியம் இருந்தார்.அவருக்கு முஸ்லிம்களை பிடிக்கவில்லை.மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்.ஆனால் மற்ற ஆசிரியர்கள் கிறித்தவர்களுக்கே உரிய அன்போடு பழகினர்.எனக்கு புதிய இடம்,புதிய சூழல்,மற்றும் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர் ஆகியவை மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது.பள்ளியில் இப்படி இருக்க வீட்டிலும் மிகவும் கடுமையான சூழல்.மற்றவர்களுக்கு நல்ல பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் வீட்டின் அருகில் இருந்த சிறிய பள்ளியில் சேர்ந்தார்கள்.நாங்கள் எல்லோரும் காலையில் 4 மணிக்கே எழுந்துவிட வேண்டும்.வீட்டில் மொத்தம் 35 பேர் இருந்தோம்.அதாவது எங்கள் நான்கு கடைகளில் வேலை செய்தவர்களும் அடக்கம்.

காவிரிக்கரையில் இருந்தபோதும் கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம்தான் .அத்துனை பேரும் குளிப்பதற்கு அந்த வீட்டில் தண்ணீர் பற்றாததால் காலையில் நாங்கள் 4மணிக்கே எழுந்து காலை தொழுகையை முடித்துவிட்டு துண்டு உடைகள் எடுத்துக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தந்தையின் நண்பர் வீட்டிற்கு குளிக்கச் செல்வோம்.பாதி தூக்கம்,அசதியுடன் அங்கு போய் சேருவோம்.என் தம்பி எழுந்ததுமே தூங்கி வழிவான்.தம்பி எழுந்தஉடன் கழிவறையில் போய் அங்கு தூங்கிகொண்டே காலைக்கடனை முடிப்பான்.பின்பு குளிக்கும் வீட்டிற்கு வந்தபின் அங்குள்ள குளியல் அறை படிகளில் தூங்குவான்.ஒருவாறு குளித்துவிட்டு வீடுவந்து சேர்வதற்குள் விடிந்திருக்கும்.பிறகு குரான் ஓதுவோம்.கடையில் வேலை செய்யும் காசிம் எங்கள் எல்லோருக்கும் ஓதச்சொல்லித் தருவார்.தொழுகைமுறை,கலிமாஆகியவையும் கற்பிப்பார்.8மணியானதும் காலை உணவு சாப்பிடச்செல்வோம். அத்தனை பேருக்கும் ஒரே சமையல்தான்.அவருக்கு உதவிக்கு முகைதீன் இருந்தான் .அவனுக்கு என் வயது இருக்கும் ..காலை உணவிற்கு பிறகு பள்ளிக்கூட புத்தகப்பையை எடுத்துக்கொண்டு,தந்தை இருக்கும் செயற்கை வைர கடைக்கு வந்து அங்கு உட்கார்ந்து படிக்க வேண்டும்.அவர் கடைக்கு வந்ததும் 9மணியளவில் நாங்கள் பள்ளிக்குப் போக அனுமதி தருவார்.நான் பள்ளிக்கு நடந்து போவேன்.பள்ளி தெப்பக்குளத்திற்கு அருகில் இருக்கும்.பள்ளியின் புதிய சூழல்,வகுப்பு ஆசிரியரின் கடுமை,எல்லாம் பெருத்த சுமையாக இருக்கும்.கிராமத்திலிருந்து வந்த எனக்கு,பாடங்கள் கடினமாக இருந்தது.இருந்த போதிலும் வகுப்பில் சுமாரான மானவனாக இருந்தேன்.இத்தனை கஷ்டங்கள் இருந்த போதிலும்,இளம் வயது காரனமாக எதுஉம் பெரிதாக தெரியவில்லை.சிறு சிறு சந்தோசங்கள்கூட பெரிதாக தெரிந்தது.ஆரம்பத்தில் பகல் உணவிற்கு,நான் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போவேன்.ஒருமுறைசாப்பிட்டுச்செல்ல நேரமாகி வகுப்பில் தண்டனை பெற நேர்ந்தது.அப்போது முதன்முறையாக பள்ளிக்கு பகல் உணவு அனுப்பும்படி போராடினேன்.முதலில் மறுத்த தந்தை ,பின்பு சம்மதித்து,கூடைக்காரர் மூலம் சாப்பாடு பள்ளிக்கு வந்தது. வீட்டிலிருந்து ஒரு வெங்கல டிபன் கேரியரில் பகல் உணவு சாப்பாட்டு கூடை ஆள் கொண்டு வருவார்.சாப்பாட்டு நேரத்தில்,சாப்பிட்ட நேரம்போக,கொஞ்சம் விளையாட நேரமும் கிடைத்தது.மாலையில் பள்ளி 4.30 மணிக்கு முடிந்ததும்,5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பது வாப்பாவின் கட்டளை.எனக்கும் எல்லோறையும் போல் விளையாட ஆசை.ஆனால் 5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பதால் விளையாட முடியாமல் ஆசையை அணை போட்டுவிட்டு வீட்டிற்கு வருவேன்.சில சமயத்தில் வரும் வழியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்ததில் நேரமாகி வீட்டில் உதைவாங்கியதும் உண்டு.திருச்சியில் நடைபாதைகளில் பல விதமான வேடிக்கைகள் நடக்கும்.தேள்,பாம்பு,போன்றவற்றை வைத்துக்கொண்டு,விஷ கடிகளுக்கு மருந்து இலவசமாக தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்,சுலபமாக ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கையூட்டி,ஏமாளிகளிடம் பணம் முழுவதையும் பிடிங்கிக்கொள்ளும் நாடாக்குத்து சூதாட்டக்காரர்கள்,திராவிட இயக்க பாடல்களை பாடும் தெருப்பாடகர்கள்,சிறு சிறு வித்தைகள் காட்டும் கலைக்கூத்தாடிகள்,என்று பல விதமான தெருக்கவர்ச்சிகள்தான் எனக்கு பொழுதுபோக்காக இருந்தன.அவற்றில் மிகவும் நான் கவரப்பட்டது,ஹிப்நாடிசம் செய்வதாக விளக்கம் அளித்து கருப்பு துணியால் ஒரு சிறுவனை மூடி,அவன் ஹிப்நாடிசம் மூலம் பதில் அளிப்பான் என்று கூறி,சாலையில் செல்லும் வாகனங்களின் எண்கள் முதல் பார்வையாளர்களின் சட்டைப்பையில் இருக்கும் பொருட்கள் வரை சொல்லவைப்பது ஒன்று.அப்போது நான் ஹிப்நாடிசம் மூலம் அவற்றை சாதிக்க முடியும் என்று நம்பினேன்.அதுவே பின்பு என்னை ஹிப்நாடிசம் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அது பற்றி படிக்க ஈடுபாடு ஏற்பட்டது.

5மணிக்கு வீட்டிற்கு வந்ததும் கொஞ்ச நேரம் இருட்டும் வரை மொட்டை மாடியில் நிற்கலாம்.அதற்குள் லுஹர்(பகல்)அஷர்(மாலை)தொழுகைகளை முடித்திருக்க வேண்டும்.மொட்டை மாடியில் அந்த மாலை நேரக்காற்றை அனுபவித்ததும் அந்த காலகட்டத்தில் சந்தோசமான நேரங்கள்.சந்தோசம் என்ன என்று அறியாத காலத்தில் அவைதான் சந்தோசங்கள்.
இன்றும் திருச்சி என்று நிணைக்கும்போது சிறு சிறு கோயில்களிலிருந்து வரும் கற்பூரம் கலந்த பூ வாசனை,மாலையில் கடைகளில் வாசல் தெளிக்கும் போது வரும் மண் வாசனை,திறந்த சாக்கடை நாற்றம்,குளோரின் அதிகம் கலந்த குலாய் நீர்,கரை புரண்டு ஓடும் காவேரி,பழங்கால பாணி சினிமா அரங்குகள்,அந்த பெரிய காந்தி மார்கட் ஆகியவைதான் நினைவில் வரும்.

திருச்சியை பொருத்தவரை எனக்கு நன்பர்கள் அதிகம் இல்லை.அதற்கு என் தனிமை விருப்பமே காரணம்.வீட்டில் என் தம்பியை விட சிராஜ்ஜுடன் அதிகமான நட்புடன் இருந்தேன்.எனக்கும் அவனுக்கும் இரண்டு மூன்று வயது வித்தியாசம் இருந்த போதிலும்,அதிக நட்புடன் நடுவயது வரை தொடர்ந்தது.பின்பு ஏற்பட்ட சில சம்பவங்கள் எங்களை சற்று தள்ளி இருக்க செய்தது.இருந்த போதிலும் அந்த நட்பை நான் என்றும் மறந்ததில்லை. எனக்கு அனுமதிக்கப்பட்ட அந்த சில சமயங்களில் நான் அதிகம் கழிக்கும் இடம் ஜெயனின் வீடுதான்.அவன் தாயார் மிகவும் அன்பானவர். தன் சொந்த மகனைப்போல் அன்பாக இருப்பார்கள்.அவன் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.வெலிங்டன் தியேட்டர் பின்புறம் இருக்கும் ஸ்டோர் என்று சொல்லப்படும் பல பகுதிகளாக வாடகைக்கு இருக்கும் பல குடும்பங்கள் வசிக்கும் பழமையான கட்டிடம்.அது அவர்களின் பூர்வீக சொத்து என்று நினைக்கிறேன்.அவனுடைய மாமாவின் குடும்பமும் ஒரு பகுதியில் இருந்தார்கள்.ஜெகனின் ஸ்டோரின் மொட்டை மாடியில் ஓலை கொட்டகை போட்டிருப்பார்கள். தேர்வுகாலங்களில் அங்குதான் கம்பயின் ஸ்டடி பண்ணுவோம். ஜெகனும் படிப்பில் சுமார்தான். எங்கள் வகுப்புத்தோழன் விஜயனும் கம்பயின் ஸ்டடிக்கு சேர்ந்து கொள்வான். விஜயன்தான் வகுப்பில் பர்ஸ்ட் ரேங்க் . இருபதிற்குமேல் ரேங்க் வாங்கிகொண்டிருந்த நாங்கள் , பத்து ரேங்குகளுக்கு அருகில் நானும் ஜெயனும் வந்தது விஜயனுடன் சேர்ந்து கம்பயின் ஸ்டடி பண்ணியதுதான் காரணம். விடுமுறை தினங்கள் ஜெயன் வீட்டிலேயே பொதுவாக கழியும். தாயார் ஊரில், தந்தையின் கடுமையான கட்டுப்பாடுகள் ,இவற்றிற்கிடையில் சந்தோஷமான கணங்கள் ஜெகனின் வீடுதான். அவனுடைய தந்தை சிறுவயதிலேயே விபத்தொன்றில் மறைந்துவிட, அவனுடைய தாய் மாமாவின் பாதுகாப்பில் அவன் குடும்பம் இருந்தது . அவன் மாமா மகன்கள், ஜெகனின் தம்பிகள், அந்த ஸ்டோரில் இருந்த மற்ற பையன்கள் ,மற்றும் ஜகன் தெருவில் இருந்த பையன்கள் என்று பெரிய கூட்டமே மொட்டை மாடியில் பட்டம் விடும் காலங்களிலும், தேர்வு காலங்களிலும் கூட்டம் சேருவோம். எல்லோருக்கும் ஜெயன்தான் தலைவன். அத்தனை கூட்டத்திலும் ஜெயனைத்தவிர மற்றவர்களோடு நான் அதிகம் ஒட்டவில்லை. அதற்கு என்னுடைய இண்ட்ரோவெர்ட் குணம் காரணமாக இருக்கலாம் . பொதுவாக பட்டம் விடும்காலம் டிசம்பர் மாதத்தில் வரும். அது அறையாண்டு தேர்வு காலமாக இருக்கும். அப்போது கம்பயின் ஸ்டடி நடக்கும் .தேர்வுகள் முடிந்ததும் பட்டம் விடும் காலம் ஆரம்பித்துவிடும்.மாமாவின் மகன்கள்,ஜெயனின் தம்பிகள்,மற்றும் அந்த ஸ்டோர் முழுவதும் இருந்த பையன்கள் எல்லோருக்கும் ஹீரோ ஜெயன்தான்.பட்டம் விடும் காலம் வந்தால்,அவனுடைய ராஜ்யம்தான்.மாஞ்சா போடுவதுமுதல் பட்டம் விடுவதுவரை கலகலப்பாக ஜெயன் வீட்டு மொட்டை மாடியில் அவன் தலைமையில் நடக்கும்.ஜெயன் பட்டம் விட மற்ற எல்லோரும் அவனுக்கு உதவியாக பின்னால் இருப்போம்.ஒருவர் பட்டத்தை மற்றவர் அறுக்க கடுமையான போட்டி நடக்கும்.பொதுவாக மார்வாடிகளும் சிந்திகளும் அதிகம் செலவு செய்து பட்டம் விடுவதில் புதிய யுத்திகளை உபயோகித்து அதிக பட்டங்களை அறுத்து பட்டம் விடுவதில் முன்னனியில் இருப்பார்கள்.ஆனாலும் ஜெயன் அவர்களுக்கு சலைத்தவன் அல்ல.அது ஒரு போர்காலம் போல் இருக்கும்.தந்தையின் கட்டுப்பாடுகளால் நான் அதிகம் வாரநாட்களில் போகமுடியாது.இருந்தாலும் ஞாயிற்றுகிழமைகளிலும்,விடுமுறை நாட்களிலும், கிடைக்கும் அனுமதியில் அவனுடைய வீட்டில்தான் இருப்பேன். தந்தைக்கும் ஜெகனை தெரியும், பிடிக்கும் .அவன் வீட்டிற்கு போவதற்கு தந்தைக்கு சம்மதம்தான். ஆனால் அதிலும் பொதுவான நேரக்கட்டுப்பாடு உண்டு. என்ன ஆனாலும் வீட்டில் விளக்குபோடுவதற்குள் வந்துவிட வேண்டும். அறையாண்டு விடுமுறைக்கு மற்ற உறவு பிள்ளைகள் ஊருக்கு போய்விடுவார்கள் .தந்தை என்னையும் ,தம்பியையும் அப்போது ஊருக்கு அனுப்பமாட்டார் . ஊருக்கு போனால் சுற்றிக்கொன்று கெட்டுப்போய்விடுவோம் என்பது அவர் எண்ணம். சிராஜும் ஊருக்கு போயிருப்பான் . அதனால் எதாவது சமாதானம் சொல்லி ஜெயன் வீட்டில் அந்த அரையாண்டு விடுமுறையை அதிகம் கழிப்பேன் .

சினிமாவுக்கு போவதில் தந்தையிடம் மிகுந்த கட்டுப்பாடு உண்டு .மாதம் ஒருமுறைதான் சினிமாவிற்கு போகமுடியும். ஒரு ஞாயிற்றுகிழமைகளில் 65 காசுகள் தருவார். அப்போது திருச்சியில் தியேட்டர்களில் கீழ் தளத்தில் பின்பகுதி வகுப்புக்கான டிக்கட்டின் விலை. ஆக குறைந்த டிக்கட் 35 காசுகள் என்று நினைக்கிறேன் .சினிமாவிற்கு போகுமுன்னால் தந்தை நேர்காணல் சென்சார் ஒன்று நடத்துவார். எந்த படத்திற்கு போகிறாய்? யார் நடிகர் ? எந்த தியேட்டர் என்ற விபரம் சொல்லவேண்டும் . சில நடிகர்களின் படங்களுக்கு அனுமதி தரமாட்டார் .அவை ஆபாசமாக இருக்கும் என்பது அவர் அபிப்பிராயம் . சிவாஜி கணேசன் படம் என்றால் உடனே U சர்டிபிகட்தான். அனுமதி உடன் கிடைக்கும் . படம் பார்த்துவிட்டு திரும்பிவந்து டிக்கட்டை அவரிடம் காட்டவேண்டும் . அவரோடு சேர்ந்து நான் மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன். ஒன்று கற்பகம். அதில் வரும் ரங்கா ராவ் போன்ற தோற்றம் உடையவர் என் தந்தை . இப்போதும் தொலைகாட்சியில் ரங்கராவ் நடித்த பழைய படங்களை பார்த்தால் தந்தையின் நினைஉகளுக்கு போய்விடுவேன் . அடுத்தது தந்தையோடு சென்னைக்கு முதல் முறையாக சென்றிருந்தபோது சாந்தி தியேட்டரில் அவரோடு பார்த்த சாந்தி படம், அடுத்தது மதுரையில் மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் மூத்த சகோதரரைபார்க்கப்போனபோது ,சிந்தாமணி தியேட்டரில் பார்த்த பாகப்பிரிவினை ஆகியவை மரணமடைந்து விட்ட அந்த இருவருடனும் நான் பார்த்தபடங்கள். அந்த படங்களை சமீபத்தில் தொலைகாட்சியில்பார்த்தபோது அவர்களை நினைத்து அழுதுவிட்டேன்.

ஒருமுறை ஜெயன் வீட்டின் அருகில் இருந்த வெல்லிங்டன் தியேட்டரில் நீல வானம் படம் திரையிட்டிருந்தார்கள் .ஜெயனிடம் அதிகமாக டிக்கட் ஒன்று அந்த படத்திற்கு இருந்தது .அது ஒரு ஞாயிற்று கிழமைதான் . ஆனால் தந்தையின் உத்தரவில்லாமல் போகமுடியாது .சென்ற வாரம்தான் சினிமாவுக்கு சென்றிருந்ததால் ,அனுமதி கிடைக்காது ,ஆகவே கேட்டும் பயனில்லை .மேலும் சினிமாவிற்கு போகாத ஞாயிருகளில் வீட்டிற்கு இரவு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்பது தந்தையின் உத்தரவு . அகவே ஜெயன் என்னை அழைத்தபோது மறுத்து விட்டேன் . ஜெகன் என்னை இடைவேளை வரை பார்த்துவிட்டு போகும்படி சொன்னான் .நானும் ஒத்துக்கொண்டுவிட்டு ,சைக்கிளை ,அவன் வீட்டில் விட்டு விட்டு படம் பார்த்தோம் . ஆனால் படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை .தந்தையிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்தான் .இடைவேளையில் நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு விட்டிற்கு புறப்பட்டேன் .இன்னும் ஒரு சில நிமிடங்கள்தான் இருந்தது 8 மணிக்கு . அப்போது ஜெயன் சொன்னான் . வீட்டில் போய் தலையை காட்டிவிட்டு சாப்பிட்டுவிட்டு வேகமகவந்துவிடு மீதிபடத்தையும் பார்க்கலாம் என்றான் . அதற்கு வசதியாக அவன் வீடும் இருந்தது .அவன்வீடு வெல்லிங்டன் தியேட்டரை ஒட்டி இருந்தது .அவர்கள் வீடு கொல்லை வழியாக தியேட்டர் உல் பகுதிக்கு போய்விடலாம் .எனக்கும் முழு படத்தையும் பார்த்துவிட வேண்டும் என்று விருப்பம் இருந்தது . அதேபோல் வீட்டிற்குபோய் வாப்பாவிடம் தலையை காட்டிவிட்டு ,அவசரம் அவசரமாக இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு திரும்பவும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜெயன் வீட்டின் வழியாக
தியேட்டருக்கு வந்து மீதி படத்தையும் பார்த்தேன் . ஆனால் தந்தை நான் சாப்பிட்டபின் அவசர அவசரமாக வெளியே சைக்கிளில் போனதை தந்தை பால்கனியிலிருந்து பார்த்துவிட்டார் .இது அறியாத நான் 10மணிக்கு வீட்டுக்கு வந்தபோது தந்தை பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் என் எனக்கு வேர்த்துகொட்டிவிட்டது .பிறகு தந்தையின் அந்த பெல்ட் அடி . தந்தையை அவருடைய இத்தகைய கடுமையான தண்டனைகளுக்காக நான் அவரை ஒருபோதும் வெறுத்ததில்லை .அந்தகால தந்தைமார்களுக்குள்ள நம்பிக்கைகள் அவருக்கும் இருந்தது . பிள்ளைகளை அடித்துத்தான் திருத்தமுடியும் என்று நம்பினார்கள் .ஆனால் அன்பு என்பது குறைந்ததல்ல .அந்த கடுமையான தண்டனைகளே அந்த அன்பின் அன்றைய கால வெளிப்பாடுதான் .

​PUC வரை திருச்சியில் ஒண்றாக நாங்கள் படித்தோம் .அதன் பின் பட்டப்படிப்பிற்கு நான் சென்னை போனபின், எங்கள் பிரிவு ஆரம்பமானது . கடிதங்களில் எங்கள் நட்பு தொடர்ந்தது . பின்பு இந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள். இடையில் பத்து ஆண்டுகள் எங்கிருக்கிறோம் என்ற விபரமே இல்லாமல் இருந்தோம் . அதற்கு காரணம் ஏன் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளும் , ஏமாற்றங்களும்தான் காரணம் . அந்த நிகழ்வுகள் அவனை பாதிக்கவேண்டாம் என்று எண்ணியே அந்த காலகட்டங்களில் அவனை தவிர்த்தேன் .அந்தக்காலங்களில் மும்பை, சவுதி , சிங்கபூர் என்று வாழ்வின் நீரோட்டத்தில் பல இடங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தேன் . நான் செய்துவந்த தொழில் நஷ்டம் , தோல்வி ,தொடர்ந்த தொழில் வேலை மாற்றங்கள் என்று பல கஷ்டங்கள் . அதன் பின் நான் 1998 இல் துபாய் வந்தேன். சிட்டி சென்டரில் கேஸ் கௌண்டரில் ஒரு கை ஓங்கி அறைந்தது .கோபத்தோடு திரும்பிபார்த்தால் ,ஜெயன் . சந்தோசத்தில் ஏறக்குறைய அழுதுவிட்டோம் .பத்தாண்டு நிகழ்வுகளை மால் பெஞ்சில் பகிர்ந்துகொண்டோம் .எனக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களை தெரிவிக்காததர்காக கோபித்துக்கொண்டான் . வீட்டிற்கு வரும்படி அழைத்தான் .அடுத்த வெள்ளிக்கிழமை வார விடுமுறையில் வருவதாக சொல்லி பிரிந்தேன் . நான் ஷார்ஜாவில் இருந்தேன் .தினமும் போனில் பேசிக்கொள்வோம் . அடுத்த வெள்ளிக்கிழமை துபாயில் அவன் வீட்டிற்கு போனேன் . திருச்சியில் அவன் கல்யாணத்தில் பார்த்த அவன் மனைவியை அறிமுகம் செய்துவைத்தான் . அவன் மகளையும் அறிமுகம் செய்தான் . மகளும் துபாயில் நல்ல வேலையில் இருந்தாள். மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருப்பதாக சொன்னான் . மகளுக்கு வயது 30 நெருங்குவதையும் ,பல வரன்கள் தட்டிபோவதையும் வருத்தப்பட்டான் . பின் ஒவ்வொரு வெள்ளியும் அவன் வீட்டிற்கு போவேன் . மாலையில் வா வெளியே போவோம் என்றான் . அப்போது அவன் மனைவியின் முகம் சுருங்குவதை கண்டேன் . என்னை பாருக்கு அழைத்து சென்றான் . நான் குடிக்க மாட்டேன் என்பது அவனுக்கு தெரியும் . எனக்கு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு அவனுக்கு மதுபானம் ஆர்டர் செய்தான் . அவன் மிதமாக குடித்தாலும் அது எனக்கு பிடிக்கவில்லை . நான் முதன் முதலில் PUC இல் சேர்ந்தபோது அப்போது கிடைத்த வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து புகை பிடிக்க ஆரம்பித்தேன் . அப்போதுகூட அவன் அதை தொடாததோடு ,என்னையும் கண்டித்தான் . புகைப்பழக்கம் எனக்கு 40 வயதில் சர்க்கரை நோய் வரும்வரை தொடர்ந்தது . அவனுக்கு அந்த பழக்கம் ஏற்படவே இல்லை .அப்படிப்பட்டவன் மதுப்பழக்கத்திற்கு ஆளானது எனக்கு ஆச்சரியம்தான் . எந்த கெட்டபழக்கமும் இல்லாத அவனுக்கு இது எப்படி ஏற்பட்டது . அவனிடம் கேட்டேன் . எல்லாம் துபாய் வந்தபிறகுதான் என்றான் . மகளுக்கு வரன் கிடைக்காதது , துபாய் வாழ்வின் மன இருக்கங்கள் , அலுவல் சம்பந்தமான பார்டிகள் ஆகியவைதான் மதுப்பழக்கத்திற்கு காரணம் என்றான் . இருந்தாலும் நான் அந்த பழக்கத்தை அங்கீகரிக்கவில்லை .விட்டுவிடும்படி சொன்னேன் . அதிகம் குடிப்பதில்லை என்றும் விடுமுறை அன்று மட்டும் குடிப்பதாக சொன்னான் . அவன் வீட்டிற்கு வந்ததும் ,அவன் மனைவி அவன் குடிபற்றி முறை இட்டார் .சமீபத்தில் இருதய அறுவைசிகிச்சை செய்திருப்பதாகவும், மேலும் சர்க்கரை ,ரத்தகொதிப்பு போன்றவற்றிற்கு மருந்துகள் எடுத்துகொள்வதாகவும் சொன்னார் . நானும் அவனுக்கு குடியை நிறுத்திவிடும்படி சொன்னேன் .அனால் அவன் விடுவதாக இல்லை .

பின்பு வார நாட்களிலும் குடிப்பதாக அவன் மனைவி சொன்னார் . நான் எவ்வளவோ அறிவுரை சொன்னேன் . கேட்கவில்லை .அவன் வேலையும் போய்விட்ட நிலையில் திருச்சிக்கு போய்,அங்கு செட்டில் ஆக முடிவு செய்தனர் . மகளுக்கு வரன் அமையாததே பெரிய கவலை என்று சொன்னான் . கடவுள் சீக்கிரம் ஒரு நல்ல வரனை கொடுப்பார் கவலைபடாதே .அதற்காக குடிக்காதே .அது தீர்வல்ல என்று அறிவுரை சொல்லி அனுப்பினேன் .

பிறகு எங்கள் நட்பு தொலைபேசியில் தொடர்ந்தது .அடிக்கடி பேசிக்கொண்டோம் .அவன் மனைவி இப்போது குடி அதிகமாகி விட்டதாகவும் ,நண்பர்களோடு சேர்ந்து குடிக்கிறார் ,கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொன்னார் . அந்தநேரத்தில் நல்ல செய்தியும் வந்தது . அவன் மகளுக்கு நல்ல வரன் வந்ததுதான் . அமெரிக்க மாப்பிள்ளை .விரைவில் திருமணம் நடந்து மகள் கணவனோடு அமெரிக்க சென்றுவிட்டாள். ஜெயன் இப்போது நிம்மதி அடைந்ததாக சொன்னான் . பின்பும் குடியை நிறுத்துவதாக தெரியவில்லை .இப்போது மகளின் பிரிவிற்காக குடிப்பதாக சொன்னான் . அவன் துணைவியார் ஒருபள்ளியில் ஆசிரியையாக இருந்தார் . அவன் வீட்டில் தனிமை மற்றும் ரிடையர் வாழ்கை போரடிப்பதாகவும், அதற்காக குடிப்பதாகவும் புதிய காரணம் சொன்னான் .
பின்பொருநாள் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது .அவன் மனைவிதான் பேசினார் . குடித்துவிட்டு வீதியில் மயங்கி விழுந்து விட்டதாகவும் , மருத்துவமனையில் ஐ சி யு வில் இருப்பதாகவும் சொன்னார் . தினமும் அவன் உடல்நிலை விசாரித்துக்கொண்டிருந்தேன் .இருபதுநாட்களுக்கு பிறகு வீடுதிரும்பிவிட்டான் என்ற பின் நிம்மதி பிறந்தது ..
அந்த நிம்மதி சீக்கிரமே போய்விட்டது வீட்டிற்கு வந்த சில நாட்களில் வாதம் அடித்து கண்பார்வையும் போய்விட்டது . பேச்சும் குழறியது . ஆறுமாதத்தில் அவன் ஓரளவு நடமாட்டத்துடன் பேச்சும் வந்தது .ஆனால் கண்பார்வை முழுமையாக போய்விட்டது . இந்த காலகட்டங்களில் என்னால் ஊருக்குவரமுடியாமல் போய்விட்டது .ஆனாலும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டோம் .சீக்கிரம் வரும்படி சொல்வான் . விரைவில் வருவதாக சொல்வேன் .ஆனால் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது .
சென்ற டிசம்பர் விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது,திருச்சிக்குப்போய் அவனைப்பார்த்து வந்தேன்.என் துனைவியும் மகளும் உடன் வந்தனர்.சர்க்கரை நோயால் அவதிப்பட்டு,கண்பார்வை இழந்து அவன் துன்பப்படுவது என்னை மிகவும் காயப்படுத்தியது.எப்படி இருந்தவன்? அவனுடன் அவன் துனைவி மட்டும் இருந்தார்.அவனுடைய ஒரே மகள் திருமனமாகி யுஎஸ்ஸில் இருக்கிறார்.அவன் துனைவியார் அருகில் உள்ள பள்ளிக்கு வேலைக்கு போய்விட்டபின் ,பகலெல்லாம் தனிமையில் கழிகிற அவன் வாழ்கையை நினைத்து மிகவும் வருந்தினேன்.அவன் மகள் குழந்தை உண்டாகி இருப்பதால், கோடை விடுமுறையில் அவன் துனைவியார் யுஎஸ்சிற்கு செல்ல இருப்பதாகவும்,அப்போது அவனை மதுரைப்பக்கமுள்ள ஒரு ஊரில் முதியவர் இல்லத்தில் சேர்க்கப்போவதாகவும் சொன்னார்கள்.அது என்னை மிகவும் பாதித்தது.குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களிலிருந்து மாறி அணுக்குடும்பங்களாகி மணிதனை தனிமைப்படுத்தி விட்ட அவலத்தை நினைத்து வருந்தினேன்.எங்களுக்கும் ஒரு மகள்தான் இருக்கிறாள்.அதிகம் பெற்றுக் கொள்ளாததற்காக வருந்தினேன்.என் மகளை அதிகப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். பேரப்பிள்ளைகளையாவது அதிகமாக பார்க்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

அவனின் கடைசி நேரங்களில் யாரும் அருகில் இல்லை .மனைவி அமெரிக்காவில் இருந்தார் . முதியோர் இல்லம் போக மறுத்து தனிமையில் இருந்திருக்கிறான் . அடிக்கடி உரையூரிளிருக்கும் அவன் தங்கை வந்து பார்துக்கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள் . அந்த கடைசி நிமிடங்களில் யாரும்மில்லை . நேற்று இரவுதான் நான் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன் . பள்ளி நாட்கள் பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தோம் .காலையில் அவன் மனைவியின் அழைப்பு அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னது .

இழந்து விட்ட சொந்தங்களுக்கு ,மனைவியும் மகளும் மற்ற சொந்தங்களும் ஈடுசெய்கிரார்கள் .இந்த நண்பனின் இழப்பிற்கு என்போன்ற தனிமை மனிதர்களுக்கு, யார் ஈடு செய்வார் ? சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள நண்பன் வேண்டும் .

மதி
23-10-2012, 12:53 PM
அன்பு சம்ராஜியம்


தஞ்சை தரணியில் காவிரியால் வளமான நகரத்துக்கு அருகாமையில் பச்சை பசேல் என வயல்வெளிக்கு நடுவே அந்த அழகிய கிராமம்.

காலை கதிரவன் மெல்ல எழ, கந்த சஷ்டி கவசம் காதில் தேனாய் விழ, கதிர் இழுத்து போர்த்திக் கொண்டு சுகமாய் அரை குறை தூக்கத்தில் படுத்திருந்தான்.

“கதிர், எழுந்திரு நேரம் ஆகுது” என்று எழுப்பினாள் அக்கா வளர்மதி. சோம்பலாய் எழுந்து, வரவேற்பறையை எட்டி பார்த்தான், எதிர் வீட்டு தங்கராசு மாமாவும் கதிர் அப்பாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“பொண்ணு பெயர் சுதாராணி லட்சணமாய் அழகாய் இருக்கும், பி.ஏ. வரைக்கும் படிச்சிருக்கு, இந்தாங்க பொண்ணோட போட்டோவை பாருங்க.” என்று போட்டோவையும், சான்றிதழ்களின் நகலையும் கொடுத்தபடி தொடர்ந்தார்.

“பொண்ணோட வீட்டுல ஜெயராமன், லெஷ்மணன்னு அண்ணன், தம்பிங்க, ரெண்டு பேரும் இரட்டையர்கள், ஒரே குடும்பத்தில் அக்காவையும் தங்கச்சியையும் கல்யாணம் செய்துகிட்டாங்க.

மூத்தவர் ஜெயராமனோட பொண்ணுதான் சுதாராணி. நல்ல குடும்பம். வெங்கட்டுக்கு இன்னிக்கு பொண்ணு பார்க்க போறோம். பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடலாமான்னு நினைக்கிறேன் .” என்றார் கதிர் அப்பா.

“ஆமாண்ணே, பொண்ணு நல்லா இருக்கு. நல்லபடியா பேசி முடிச்சிட்டு வாங்க.” என்று கிளம்பினார் தங்கராசு.

“கதிர், இதை உள்ளே கொண்டு போய் வை” என்றார் அப்பா.

தன் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க ஊருக்கு போக போறோம் என்று மகிழ்ச்சியோடு அந்த சான்றிதழை வாங்கி படித்தான், வியந்து போய் மீண்டும் பார்த்தான். மீண்டும் வியந்தான்.

கதிரை பார்த்து அவன் அம்மா “சீக்கிரம் ஆபிஸ்க்கு கிளம்பு கதிர். சாயுங்காலம் நேரம் கழித்து வராம சீக்கரம் அலுவலகத்தில் இருந்து வந்துடு.” என்றாள்.

“சரிம்மா” என்று சொல்லிவிட்டு விரைந்தான். மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்தான் கதிர். கிளம்பி வெளியே வரவே வேன் தயாராக இருந்தது. முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் அனைவரும் வர, வேன் கிளம்பியது. அவன் ஜன்னல் அருகில் அமர்ந்து காவிரி நதியின் அழகை பார்த்து ரசித்தப்படியே வந்தான்.

பெண்ணின் வீடு வந்தது. அனைவரையும் அன்போடு வரவேற்றார்கள். சம்பிரதாயமாக பேசாமல், சகஜமாய் பேசினார்கள். இரு வாசல் வைத்த வீடு உள்ளே ஒரே வீடாய் இருந்தது. அண்ணன் தம்பி இருவரும் குடும்பமாய் ஒரே வீட்டில் வசித்தார்கள். வாசல் மட்டுமே இரண்டு. மனசு எல்லாம் ஒன்றாக இருந்தது.

அனைவருக்கும் சாப்பாட்டை கேட்டு கேட்டு பரிமாறினார்கள். வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது.

அனைவரும் கூடிபேசி பிப்ரவரி மாதம் திருமணத்தை வைத்தார்கள். அங்கே கடைக்குட்டியான திரபா அந்த வீட்டில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளைய வளைய வந்தாள். கதிருக்கு திரபாவை பார்த்ததும் சற்றே பொறாமையாக இருந்தது. ஒரு அறையில் திரபா அலமாறியில் உள்ள தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சான்றிதழ்கள் நினைவுக்கு வந்தது. பெரியவர் பெயர் ஜெயராமன், அவரோட பொண்ணுதான் அண்ணி. ஆனா J.L. சுதாராணி அப்படின்னு எழுதியிருக்கு. ஒரு வேளை தவறுதலாக போட்டு விட்டார்களோ?

“திரபா, உங்களுடைய அடையாள அட்டையை பார்க்கலாமா?” என்றான் கதிர்.

“எதுக்கு கதிர், நான் என்ன படிக்கிறேன்னு தெரிஞ்சுக்கனுமா?” என்று புன்சிரிப்புடன் கேட்டவாறே கொடுத்தாள் திரபா.

அதை பார்த்து மீண்டும் வியந்து போனான் கதிர். அதிலும் J.L.திரபா என்று போட்டிருந்தது.

“ஏன் அப்படி பாக்குறீங்க?” என்றாள் திரபா

“உங்கள் எல்லோருக்கும் J.L.ன்னுதான் இன்ஷியல் போடுவீங்களா?” என்றான் கதிர்.

“ஆமாம், எங்களுக்கு இரண்டு அப்பா, இரண்டு அம்மா. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். எங்களை பிரிச்சி பார்க்காதீங்க. சரியா” என்றாள் திரபா.

“சரி திரபா” என்றான் கதிர் நெகிழ்வுடன்.

அனைவரும் கிளம்பினார்கள். கதிர் திரபாவிடமும் சுதாராணியிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

திருமணம் மிக விமர்சையாக நடந்தது. அன்று இரவு தொலைகாட்சியில் தங்கமலை ரகசியம் திரைப்படம் போட்டார்கள்.

அண்ணி வீட்டுக்கு வந்ததும் மிகவும் ஜாலியாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தாள் இன்னொரு அம்மாவாய், தவறுகளை கண்டித்தாள் அப்பாவாய்.

சுதாராணி ஊருக்கு கிளம்புகிறாள் என்றால் கதிருக்கு இரவெல்லாம் தூக்கமே வராது. அண்ணியுடன் ஊருக்கு செல்வது குஷியாக இருக்கும். சுதாராணியும் ஏதாவது காரணம் சொல்லி கதிரை அழைத்து செல்வாள்.

அண்ணி வந்தாலும், வராவிட்டாலும் அடிக்கடி அண்ணியின் ஊருக்கு செல்வது கதிருக்கு வாடிக்கையாகிவிட்டது.
அங்கு பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா சின்னம்மா என்று அழைப்பதில்லை. இருவரையும் அப்பா என்றும் அம்மா என்றே அழைத்தார்கள்.

யாரும் இது உன்னுடையது என்னுடையது என்று சண்டையிடாமல் அனைத்தையும் பகிர்ந்து பயன்படுத்தினார்கள்.

இனிப்பு வாங்கி வந்தாலும் கூட யாராவது இல்லை என்றால் அவர்களுடைய பகுதி குளிர் சாதன பெட்டியில் காத்திருக்கும். மற்றவர்கள் அதை தொடக்கூட மாட்டார்கள்.

இதனால் அவர்களிடம் இருந்து ஓற்றுமையை மட்டும் இல்லை அன்பு, மரியாதை, விட்டுக் கொடுத்தல் என அனைத்தையும் கற்றுக் கொண்டான் கதிர்.

முதல் முறை சென்ற போது திரபாவுக்கு இணையாக கதிரை தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள். காலை சாப்பாட்டில் இருந்து, படுக்க போகும் வரை. அந்த அன்பில் நெகிழ்ந்து போனான் அவன்.

சில ஆண்டுகள் கழிந்து, கதிர் படிப்பை முடித்து விட்டு வேலைச் செல்ல ஆரம்பித்தான்.

அதன் பிறகு அதிகமாக செல்ல இயலவில்லை. எப்போதாவது விடுமுறை வந்தால் காலை சென்று அனைவரையும் பார்த்து விட்டு இரவு திரும்பி விடுவான்.

அண்ணியின் ஊருக்கு அருகாமையில் உள்ள ஊரில், பெண் பார்த்து, கதிருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

ஒரு முறை அண்ணியின் வீட்டுக்கு கதிர் மட்டும் சென்றவன். 2 மணி நேரத்தில் மின்னல் மாதிரி அதிர்ச்சியுடன் வந்தான்.

அதன்பிறகு அவன் அங்கு செல்லவில்லை. ஏதாவது விஷேசம் வந்தால் கூட, ஏதாவது காரணம் சொல்லி அங்கு செல்வதை தவிர்த்துவிடுவான். பல முறை வராததை கவனித்த சுதாராணி.

“ஏன் கதிர், எங்க அம்மா வீட்டுக்கு வரவே மாட்டுற. நீ சின்ன பிள்ளையா இருக்கும் போது, துள்ளி குதிச்சிக்கிட்டு எனக்கு முன்னாடி கிளம்புவ. ஆனா உனக்கு திருமணம் ஆனதும் கூப்பிட்டாலும் வரமாட்டுறியே” என்று கேட்டாள் சுதாராணி.

“அண்ணி, ஒரே வீட்டில் ஒற்றுமையாக, பெரியப்பா சித்தப்பா என்ற வேறுபாடு இன்றி நான்கு பேரையும் அப்பா, அம்மா என்று அழைத்து, உங்களின் தந்தையார் பெயரை அனைவருமே J.L. இன்ஷியலாக போட்டு, ஊருக்கே ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்தது உங்களின் குடும்பம்.

அனைவரும் அன்போடு அண்ணா அண்ணி அக்கா அத்தான் என்று உறவாடி, அன்னத்தோடு அன்பையும் பரிமாறிய போது, நான் சோகத்தின் உச்சிக்கே போனேன்.

உங்கள் வீட்டில் திரபாவாக பிறந்திருக்க கூடாதா என்று ஏங்கி பல இரவுகள் அழுதிருக்கிறேன். பாசங்கு இல்லாத பாசம் அங்கு வளைய வந்தது.

நான் கடைசியாக சென்ற போது, அதிர்ந்து போனேன். என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்த அன்பு சகோதரர்கள் பிரிந்து தனித்தனியாக ஒரே வீட்டை இரண்டாக பிரித்து யாரோ போல வாழ்வது கொடுமை. அதை என்னால் பார்த்துகிட்டு அரை மணி நேரம் கூட இருக்க முடியவில்லை.

அன்று ஒற்றுமையான அன்புக்கு அழுத நான், இன்று பிரிந்த, அந்த அன்பு சம்ராஜித்திற்காக மனதுக்குள் அழுகிறேன். பாசத்தின் கோட்டையை பாழடைந்த மண்டபமாக பார்க்க விரும்பவில்லை.” என்று கண்கள் கண்ணாடி திரையிட சொன்னான் கதிர்.


(முற்றும்)

மதி
23-10-2012, 12:53 PM
மாமன் மகள்

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=900&d=1350887461

கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அன்புசெல்வனுக்கு தலை கால் புரியவில்லை..காரணம் இந்த வருடம் திருவிழாவிற்கு அவனுடைய மாமா ஊரிலிருந்து வருவதாக அம்மா இப்போது தான் சொன்னாள்.அவன் சந்தோஷத்திற்கு காரணம் இருக்கிறது..ஆம் மாமாவுடன் அவன் மாமன் மகள் மாயாவும் வருவாள் அல்லவா..? அன்புசெல்வனுக்கு மாயாவை ரொம்ப பிடிக்கும்.அவளின் ஒவ்வொரு செயலையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பான் அவன். சென்ற முறை மாயா ஊருக்கு வந்திருந்த போது அவன் மாயாவையே சுற்றிச் சுற்றி வந்தான்.அவளிடம் என்னென்னவோ பேசிப் பார்த்தான்.ஆனால் அன்புசெல்வன் பாவம்..மாயா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஊருக்கு கிளம்பும் போது அவனுக்கு மாயா தந்த ஒரு பரிசு....புன்னகை.மாயா அன்புசெல்வன் வீட்டுக்கு வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக பேசுவாள் என்ற நம்பிக்கையிலேயே ஆறு மாதங்களைக் கடந்துவிட்டான் அவன்..

திருவிழாவும் வந்து விட்டது. மாமாவை அழைத்துச் செல்வதற்காக காலையிலேயே தனது ஊர் பேருந்து நிலையத்தில் காத்துக்கிடந்தான் அன்பு. அன்பு எதிர்பார்த்த பேருந்து வந்துவிட்டது. மாமாவையும் அத்தையையும் கூடவே மாயாவையும் பார்த்த அவனுக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை.மாமா மற்றும் அத்தையிடம் நலம் விசாரித்த அன்புசெல்வன்மெதுவாக மாயாவைப் பார்த்தான். அவனைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தாள் மாயா. ஆனால் இந்த முறையும் மாயா அவனிடம் பேசவே இல்லை.நான்கு நாட்கள் ஓடிவிட்டன.திருவிழா முடிந்து விட்டது.மாமா ஊருக்கு கிளம்ப தயாரானார்.மாயா தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்த்த நான்கு நாட்களாய் அவளையே சுற்றி வந்த அன்புசெல்வனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஏமாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத அன்புசெல்வன் , மாமாவிடமே கேட்டுவிட்டான். ஏன் மாமா மாயா என்னிடம் பேசவே இல்லை??

அன்புசெல்வனின் மனதைப் புரிந்து கொள்ளாத மாமா சிரித்துக்கொண்டே சொன்ன பதிலை கேட்ட அவன் முகத்தில் ஏமாற்றம்.மாமா சொன்னார் மாயா பேச இன்னும் நான்கு மாதங்கள் ஆகும். அவள் பிறந்து எட்டு மாதம் தானே டா ஆச்சு...இன்னும் நான்கு மாதங்கள் ஆகுமா? என்ற ஏக்கத்தில் நின்ற அன்புசெல்வனைப் பார்த்து சிரித்தாள் மாயா..வாயில் விரலை வைத்துக்கொண்டே...!!!

(மேலே இருக்கும் படத்துக்கும் நம்ம கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

மதி
23-10-2012, 12:54 PM
உண்மைகள் தெளிவாகும் போது …

http://www.tamilmantram.com/vb/attachment.php?attachmentid=902&d=1350887759



ஜெஸ்சி , நான் அண்ணா பேசுறேன் ....

சொல்லுண்ணா .....

நாளைக்கு பேசினபடி வங்கி பணிமாறுதல் வாங்கி ஜான் மேரியை கூட்டிகிட்டு உன் வீட்டுக்கு வந்துடுவான் ..... நீதான் பார்த்துக்கணும் .... மும்பையில இருந்தவன் ...நம்ம ஊரு எப்படி ஒத்துக்குமொன்னு தெரியலை.....

ஏன்னா .... அவன் நாலு வருசமாத்தானே வடநாட்டிலே இருக்கான் .... அண்ணி போன பின்னாலே காலம் முழுசும் அவனை ஆளாக்குறதிலேயே அவன் கூடவேதானே இந்த ஊரிலே இருந்த .... இப்போ நீ சென்னைக்கும் உன் பிள்ளை மும்பைக்கும் போனதாலே நெல்லை ஒண்ணும் குறைஞ்சு போயிடலை ...... ஜான் அரை மணிக்கு முன்னே போனில் பேசினான் ..... மாடியை முழுசும் சுத்தம் பண்ணி வச்சுட்டேன் . குழந்தைகளை நான் பார்த்துக்கறேன் .........நீ கவலை படாதே .....

ஜெசி மா ... போனமாசம் அங்க போய் இவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு . ரெண்டு பெரும் ஏதோ மெசின் மாதிரி இருக்காங்க .... ஒரு சந்தோசமும் தெரியலை .....

மேரிக்கும் ஜானுக்கும் ஏதும் பிரச்சனையா அண்ணா ?

என்னன்னு தெரியலைமா ...... அவங்க காதலிச்சு கல்யாணம் பண்ணப்ப கூட நான் ஏதும் சொல்லல .... எல்லாம் நம்ம முறைப்படி கர்த்தர் ஆசியோட நல்லா நடக்கணும்ன்னு மட்டும்தான் ஆசைப்பட்டேன் . அந்த பொண்ணும் எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லித்தான் நம்ம குடும்பத்தில வந்தா ..... பிறகு மும்பை போன பின்னாலேதான் ஏதோ பிரச்சனை நடந்து இருக்கு ..... அவன் கிட்ட பேசினா பிடியே கொடுக்க மாட்டேங்கறான் .... ரெண்டு வருஷம் ஆகப்போகுது .... ஒரு குழந்தை இல்ல .... குட்டி இல்ல .... ஏன்தான் தேடி தேடி இவளை பிடிச்சுட்டு வந்தானோன்னு இருக்கு .... நம்ம பக்கத்தில இல்லாத பொண்ணா .... என்ன காதலோ கன்றாவியோ .... பொறுப்பில்லாத பொண்ணு ... வளர்ப்பே சரியில்லமா ....

அண்ணன் குரல் தழுதழுக்க .... ஜெசி இடைமறித்தார் .
அண்ணா கவலையை விடு ..... ஒரு ஆசிரியையாய் இத்தனை வருஷ வாழ்க்கையிலே எத்தனையோ பிள்ளைகளை பார்த்துட்டேன் .... நம்ம குழந்தைகளை பார்த்துக்க மாட்டேனா .... கர்த்தர் மேல பாரத்தை போட்டுட்டு உன் வேலையை பாரு ..... பசங்க வரட்டும் .... நான் பார்த்துக்கறேன் .

ஜெசியம்மாவின் வீடு நெல்லைக்கு வெளியே புறநகர் பகுதியில் இருந்தது . முன்னர் கிராமமாக வயல்வெளிகளாக இருந்த பகுதிகள் நாளடைவில் பிளாட்டுகளாக போடப்பட்டு வீடுகளாக மாறிப்போனது . ஜெசியம்மாவின் வீட்டில் இருந்து தாமிரபரணி நடக்கும் தொலைவில் இருந்தது . அருமையான தண்ணீர் , ஆரோக்கியமான காற்று .... அவரின் உறவுகள் விபத்தில் விட்டு போக அந்த பூர்வீக வீடு ஆறுதலாய் இருந்தது .

மறுநாள் காலை ஜானும் மேரியும் முதலில் காரில் வர மதியம் போல சரக்கு வாகனத்தில் வீட்டு சாமான்கள் வந்து இறங்கின . வீட்டை ஒழுங்கு செய்வதிலேயே ஒரு வார பொழுது போய்விட்டது . மேரியின் கலை ஆர்வம் அவள் வீட்டை பார்த்து பார்த்து ஒழுங்கு செய்வதிலேயே தெரிந்தது . ஆனால் அனைத்தும் அவள் விருப்பபடி ஒழுங்கு செய்யப்பட்டதாகவே தெரிந்த்தது . ஜானும் அவளும் ஜெசியம்மாவின் முன் ரொம்பவும் குறைவாகவே பேசிக்கொண்டனர் . கல்யாணத்தின் போது பார்த்த பிள்ளைகளா இவர்கள் என்று ஜெசியம்மாவிற்கு பட்டது . வந்ததும் ஏதும் பேசவேண்டாம் என்று மேரிக்கு தேவையான உதவிகள் செய்வதில் மட்டுமே கவனமாய் இருந்தார் . நாட்கள் செல்ல செல்ல மேரியே தன்னை சுற்றி ஒரு தனிமையை உருவாக்கிக்கொண்டு இருப்பதை உணர்ந்தார் . சில நேரம் மாடிபடிகளில் விசும்பல் சத்தம் கேட்டு என்ன மேரி என்றால் முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஒண்ணும் இல்லை அம்மா என்பாள் .

அம்மா .......... இது ஒன்றுதான் மேரி ஜெசியம்மாவிடம் அதிகம் பேசிய வார்த்தைகளாக இருக்கும் . பார்க்க நல்ல பெண்ணாகவே தெரிகிறாள் . ஒருவேளை இந்த பெண் அவள் வீட்டை நினைத்து வருத்தப்படுகிறாளா ? .... மேரியாக வாய் திறவாமல் ஜெசியம்மாவாள் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை .

அன்று மாலை ஜெசியம்மா தோட்டத்திற்கு வந்த போது மேலே மேரி யார்கூடவோ பேசிக்கொண்டு இருந்தாள். யாராய் இருக்கும் .... ஜெசியம்மாவின் பார்வையில் படாமல் யாரும் மாடிக்கு செல்ல முடியாது . குழப்பமாய் ஜெசியம்மா மாடிக்கு விரைந்தார் . கதவுகள் தாளிடாமல் திறந்தே கிடந்தன. ஓசை படாமல் ஜெசியம்மா வீட்டிற்குள் போனார் . அங்கே ...............
ஜன்னல் திண்டில் ஒரு பக்கமாக உக்கார்ந்து கொண்டு தோட்டத்தில் உள்ள மரத்தை பார்த்து மேரி பேசிக்கொண்டு இருந்தாள் . கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் ..........
ஜெசியம்மா அதிர்ச்சியானார் . அவர் அருகில் வந்தது கூட கவனிக்காமல் மேரி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள் .
அங்கே மரத்தின் உச்சியில் நாரைகள் இரண்டு கூடு கட்டி இருந்தன . ஒரு பறவை குஞ்சிகளுடன் இருந்தது . மற்றது அவைகளுக்கு உணவை கொண்டுவந்து ஊட்டிக்கொண்டு இருந்தது .
மேரி மேலும் பேசிக்கொண்டே இருந்தாள் ..... நீ கொடுத்து வச்சவ .... பாரு உன் புருஷன் எப்படி குஞ்சிகளை தாங்குறான் ... . ம்ம்ம்ம் ... குழந்தைகள் அருமை தெரிஞ்சவன் .... கொடுத்து வச்சவடி ... அவள் கண்ணில் இன்னும் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது .

மேரி ...... என்னம்மா இது ..... ஜெசியம்மா மேரியின் தோளைத்தொட மேரி அதிர்ச்சியாய் திரும்பினாள்.

அது அது ஒண்ணும் இல்லைமா .... கண்களை துடைத்துக்கொண்டாள் .

வா நாம கொஞ்சம் ..... ஆத்தங்கரை வரை நடந்துட்டு வருவோம் . முதலில் மௌனமாக இருந்த மேரி பின்னர் சரியென்று தலை அசைத்தாள்.

ஆற்றங்கரை வரை இருவருமே மெளனமாக நடந்து வந்தார்கள் . அங்கே சிவன் கோவிலை ஒட்டி பெரிய படித்துறை உண்டு . முன் மாலையாய் இருந்ததால் படித்துறையில் யாரும் இல்லை . தூரத்தில் ஆற்றின் நடுவில் சிலர் துணிகளை சலவை செய்து கொண்டு இருந்தார்கள் .ஜெசியம்மா படித்துறையில் அமர்ந்தார் ...... மேரியையும் அருகில் அமரச்சொன்னார் . அமைதியாக அவள் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தார் . அந்த கண்ணில் கபடம் இல்லை ... கர்வம் இல்லை .... ஆனால் எதையோ சொல்லத்துடித்து அதை மறைக்க அங்கும் இங்கும் கண்கள் அலை பாய்ந்தது . ஜெசியம்மாவின் பார்வையை சந்திக்க முடியாமல் மேரி தலை குனிந்தாள். இரண்டு கண்ணீர் திவலைகள் அவள் கால்களில் விழுந்து தெறித்தது .

மேரி .... என்னம்மா பிரச்சனை உனக்கு ? .... ஜான் என்ன தப்பு பண்ணான் ?....
சொல்லு ?.... அம்மா இருக்கேன் .

இந்த வார்த்தைகள் கேட்டதும் ...... அடக்கி வைத்து இருந்த அழுகை பீரிட்டு வந்தது . மேரி அழுது கொண்டே இருந்தாள் . எத்தனை நேரம் அழுது இருப்பாள் என்றே தெரியாது . இத்தனை நாட்களாய் அவள் தலையணைகளை மட்டுமே நனைத்துக் கொண்டு இருந்தாள் . இன்று முதல் முறையாய் ஆதரவாய் ஒரு மடியில் .......

இரவு ஜான் வந்ததும் ஜெசியம்மா .... ஜானை அழைத்தார் .

ஜான் நாளைக்கு வங்கிக்கு லீவு போடு ....

ஏன் அத்தை ... உங்களை எங்கயும் கூட்டிட்டு போணுமா ....

உன் அப்பாவை வரச்சொல்லி இருக்கேன் ..... நம்ம வீட்டு விஷயம் கொஞ்சம் பேசணும் …. நாளைக்கு காலையில பேசிக்கலாம் . போய் படு .... கதவை அடைத்துக்கொண்டு ஜெசியம்மா போய் விட்டார் .

வீடு அத்தை பங்குக்கு என்று அப்பா எப்பவோ கொடுத்துவிட்டார் . இப்ப இதில என்ன குழப்பம் அத்தைக்கு .... ஜான் குழம்பியவாறே படுக்கபோனான் .
மறுநாள் காலை ...... ஜெசியம்மா மாடிக்கு வந்தார் .
ஜானகி .... இங்க வா..... மா ....
மேரி என்ற ஜானகி உள்ளே இருந்து வந்தாள் ....
போடா குழந்தை ..... கோவிலுக்கு போய் எல்லாம் நல்லபடியா நடக்கணும்ன்னு வேண்டிக்கோ ....
ஜானகி மறு வார்த்தை பேசாமல் படி இறங்கி போனாள் .
ஜெசி என்ன பண்ணுற .... மேரியை எதுக்கு பழைய பெயர் சொல்லி கூப்பிடுற ... இதுக்குத்தான் இவங்களை நான் இங்க உன்கிட்ட அனுப்பினேனா ? இது கர்த்தருக்கு நாம பண்ணுற பாவம் .... ஜான் அப்பா இரைந்தார் .
எதுண்ணா, பாவம் ..... ஒரு பாவப்பட்ட மனசை புரிஞ்சிக்காம அதை சாகடிகிரீங்களே அது பாவமா ? இல்லை ரெண்டு கொளந்தையை கொன்னுட்டு இறக்கம் இல்லாம ஒருத்திக்கு மலடி பட்டம் வாங்கி தந்துட்டு நிக்குறானே ... அது பாவமா .... இல்லை இது எதுவுமே தெரியாம கர்த்தருக்கு மட்டும் நான் நல்லவனா இருப்பேன்னு மார்தட்டிகிறீயே இதுதான் பாவம் ..... உன் பிள்ளை யோக்கியன் அந்த பொண்ணுகிட்டதான் குறை இருக்கும்ன்னு நீ எதை வச்சு சொன்ன ... உன்னோட கர்வம் , சுயநலம் ... அதுதானே உன் பிள்ளை கிட்டயும் இருக்கும் ... முதல்ல நீங்க எல்லாம் மனுசங்களா இருங்க ... அதுக்கு அப்புறம் தேவனை பத்தி கவலைபடலாம் ..... ஜெசியம்மா ஒரே மூச்சாய் இரைந்தாள் .

நடந்தது எதுவும் புரியாமல் ஜானின் அப்பா முழித்தார் .
ஜெசி என்னம்மா நடந்துச்சி .... ஜான் நீ என்ன தப்பு பண்ண .... கர்த்தாவே எனக்கு ஒண்ணும் புரியலை ... யாராவது உண்மையை சொல்லுங்க ....

இப்போ கேளு என்ன தப்பு பண்ணான்னு ... இதை ஒரு வருஷம் முன்னாலே கேட்டு இருந்தா இப்போ உன் பேரன் உன் மடியில கிடந்திருப்பான் .
ஜான் தலை குனிந்து நின்றான் ....

ஜெசியம்மா தொடர்ந்தார் ..... அண்ணா உன் பிள்ளை கல்யாணம் பண்ணதும் குழந்தை பெத்துக்கிட்டா தன் சந்தோசம் போய்டும்ன்னு உன் மருமகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு பண்ணி இருக்கான் ... ஒரு தடவை இல்லை ..... இரண்டு தடவை . இது உனக்கு தெரியுமா ..... அவ கிட்ட எத்தனை நல்ல விஷயங்கள் இருக்கு ... கேவலம் உனக்கு அவ உடம்பு மட்டும்தான் பெருசா பட்டுச்சா ... அதை மட்டும்தானா காதலிச்ச .... என் அண்ணன் பையன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு ...

அத்தை ... இப்படி சொல்லாதீங்க .... மும்பையில இருக்கிற வருமானத்துக்கு இப்ப குழந்தைங்க வேணாம்ன்னு சொல்லித்தான் நான் அவளை அபார்சன் பண்ண சொன்னேன் .... நான் அவளை இப்பவும் முழுசா காதலிக்கிறேன் உடம்புக்காக மட்டும் இல்லை மனசுகக்காகவும்தான். அது இப்ப அவளுக்கும் புரியலை ... உங்களுக்கும் புரியலை ……..ஜான் படபடப்பாக பேசி முடித்தான்.

இப்படி சொல்ல உனக்கு வெக்கமாய் இல்லை ... மும்பையில வருமானம் பத்தலைன்னா இங்க கிளம்பி வந்து இருந்தா நீ நல்ல புருஷன் ... அப்படி உன் அப்பா என்ன உன்ன தெருவிலையா நிறுத்தியிருக்கான். உனக்கு இங்க சொத்து இல்லை , சொந்தம் இல்லை பாரு .... என் பிள்ளையும் , அவரும் அல்பாயுசுல போனதும் நீதானேடா என்னை சொர்க்கத்துக்கு வழிகாட்டி அனுப்பி வைப்பன்னு நினச்சேன் .... நீ நீ ... ஜான் குழந்தை பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்குறது இல்லைடா .... அதை போய் இப்படி பண்ணிட்டியே . லேசா சொல்லுறியே அந்த வலியை மனசாலேயும் , உடம்பாலேயும் தாங்குற வேதனை ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் . உனக்கு உன் சந்தோசம் பெருசு ...உன் அப்பாவுக்கு கடவுள் பெருசு .... எனக்கு இங்க மனுசங்கதான் பெருசு .... அவங்க கிட்டதான் நான் கடவுளை பார்க்கனும்னு நினைக்கிறேன் .... வானத்தில இருந்தோ ... சொர்க்கத்தில இருந்தோ இல்லை . நரகத்திலையும் என் கூட யார் இருந்து என்னை பார்த்துப்பானோ அவர்தான் எனக்கு கடவுள் . கடவுளை புத்தகத்தில மட்டும் தேடாதீங்க ... தேவன் தேவாலயத்தில மட்டும் இருக்கிறது இல்லை .... மனிதர்களுக்குள்ளேயும் இருக்கான் . முதல்ல பிரச்சனைகள் தீரணும் என்றா உங்க பக்கத்தில அந்த பிரச்னைக்கு என்ன காரணம்ன்னு கண்டு பிடிங்க .... ஜெசியம்மா மூச்சு வாங்க பேச்சை நிறுத்தினார் .

அத்தை என்னை மன்னிச்சுகோங்க .... நான் ஆரம்பத்தில அப்படி இருந்தது உண்மைதான் இப்போ அப்படி இல்ல ... இப்போ எனக்கும் குழந்தைகளோட இருக்கனும்ன்னு ஆசை இருக்கு ... ஆனா மேரிதான் அதுக்கு .... ஜான் முடிப்பதற்குள் ஜெசியம்மா இடைமறித்தார் .

உன் கூட படுத்துக்க வரலைன்னு சொல்லுறீயா .... ஒரு மனைவியை கேவலபடுத்த இதை விட ஒரு வார்த்தை கிடையாது ஜான் . நீ அவளை காதலிச்ச .... கல்யாணம் பண்ணா அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா இருந்த ...... மதம் மாறி வந்தா போதும்ன்னு உன் அப்பாவும் உன் ஆசைக்கு சம்மதம் தெரிவிச்சார் . ஆனால் அதுக்கு பிறகு நீங்க வாழ்ந்ததுதான் வாழ்க்கை ... அதில எத்தனை சந்தோசத்தை அந்த பொண்ணு அனுபவிச்சா ... பெத்த அம்மா அப்பா ஒதுக்கிடாங்க ... மொழி புரியாத ஊரு ... மனசை புரிஞ்சிக்காத புருஷன் , பையனை மட்டுமே நெனைக்கிற மாமனார் .... இப்படி இருக்கையில யார் கிட்ட போய் அவ நிப்பா ... இழப்பு எல்லாம் அந்த பெண்ணுக்குத்தான் . அதை ஏன் ரெண்டு பேரும் புரிஞ்சிக்கலை .... உன் மனசு மாறும் போது அவ மனசு உடஞ்சி போனாளே ... அதை சரி பண்ண என்ன செய்யணுமோ அதை விட்டு நீ பிள்ளை கேக்கும் போது பெத்து தர அவ மெசின் இல்லை .... அப்படி பெத்தாலும் அது நல்ல பிள்ளையாய் இருக்காது ... உன்னை மாதிரி ரெண்டும்கெட்டானா ... தறுதலையாத்தான் இருக்கும். முதல்ல அவ குடும்பத்தை அவளுக்கு திருப்பி கொடு ... அவ வாழ்க்கையில உனக்காக எதை எல்லாம் இழந்தாளோ அதை எல்லாம் எடுத்துக்கொள்ள வாசலை திறந்து வை . அப்புறம் அவ ஜானகியா இருக்குறதா மேரியா இருக்கிறதான்னு அவ முடிவு பண்ணட்டும் . ஒண்ணு மட்டும் சொல்லுறேன் ஜான் ... உன் மேல நம்பிக்கை இருகிறதாலேதான் அந்த பொண்ணு இன்னும் உன்னோட இருக்கா .... அவ சரியாத்தான் இருக்கா ... நீ உன்னை சரி பண்ணிக்கோ ... குடும்பத்தில் சந்தோசம் தானா வரும் .
ஜெசியம்மா வெளி வாசல் திறக்கும் சத்தம் கேட்டு முன் வாசலுக்கு போனார். உள்ளே இரண்டு ஆண்களும் உண்மையால் அறையப்பட்டு சிலுவையில் தொங்கினார்கள் . உண்மைகள் தெளிவாகும் போது கர்த்தர் தெரிந்தார் ஜெசியம்மாவின் உருவத்தில்.

மதி
23-10-2012, 12:54 PM
கடவுள்களின் முகவரி


பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த மத்திய தொடர்வண்டி நிலையத்திற்குள் அலமேலு மெல்ல நடந்தாள். குவிந்துகிடந்த மனிதர்கள் அங்கும் இங்குமாக இயந்திரதனமாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரது சுறுசுறுப்பான ஓட்டம் அலமேலுவிற்கு கதிரவனை நினைவுபடுத்தி அவள் விழிகளை ஈரப்படுத்தியது. சற்று நின்று பெரும்மூச்சிவிட்ட நொடியில் அந்த புத்தகம் அவளது கண்ணில் பட்டது.


அக்னியின் - விடியல்’. பயணத்திற்காக காத்திருப்பவர்களில் இளைஞர் ஒருவர் முழுவதுமாக அந்நூலில் முழ்கியிருந்தார். அவருக்கு பக்கத்து இருக்கையில் வெறுமை உட்கார்ந்திருந்தபடியால் அதை எழுப்பி அனுப்பிவிட்டு அலமேலு அமர்ந்து கொண்டாள். புத்தகத்தையும் அந்த வாசகரையும் ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டாள். அவளுக்குள் இனம்காண முடியாத உணர்வு. அதற்கு காரணம் மகிழ்ச்சியா பெருமிதமா அவைகளைப் பின்னுக்குத்தள்ளி முன்னே முன்னே வந்து முகங்காட்டும் குற்ற உணர்வா என்று புரியாமல் குழம்பினாள்.


சட்டென தம்பி…நீங்க படிச்சிட்டிருக்கீங்களே…அந்த புத்தகம் எப்படி இருக்கு? என்றாள்.


புத்தக அட்டையை திருப்பி பார்த்துக்கொண்டே அந்த ஆசாமி யார் நீங்க? என்பதுபோன்ற கேள்விப்பார்வை வீசினான்.
அலமேலு அமைதியாய் உட்கார்ந்து கொள்ள அவளது நினைவலைகள் பின்நகர்ந்து கடந்தகால கரைநோக்கி பாய்ந்தது.



***
"என்னங்க… கத எழுத உட்கார்ந்துட்டிங்களா...? கிழிஞ்சிதுபோங்க. பையன கூட்டிகிட்டுபோய் முடிவெட்டிகிட்டு வாங்க. கண்ணுலவந்து குத்துது கொடையுதுன்னு நாலுநாலா கத்திக்கிட்டு கெடக்கறான் பாருங்க." அடுப்படியில் இருந்தபடியே ஆணை பிறப்பித்தாள் அலமேலு.


"ஏம்மா…அரைமணி நேரங்கழிச்சி போகக்கூடாது…? ஏன்னா அதுக்குள்ளää இந்த கதைய முடிச்சிடுவேன்." தயங்கியபடியே பேசினான் கதிரவன்.


"எனக்குத்தெரியாதுங்க. எக்கேடாவது கெட்டுப்போங்க. கதைய முடிக்கிறேன்.. கதைய முடிக்கிறேன்னு ஒங்க பொண்டாட்டி புள்ளைங்க கதைய அற்ப ஆயுசுல முடிக்கப்போறீங்க."


எரிச்சலோடு எடுத்தேற கட்டிவிட்டு கிளம்பினான்.


கதிரவன் -பொருளாதாரத்தில் ஒரு முதுநிலை பட்டதாரி. படித்து முடித்த அடுத்த வருடமே தனியார் நூற்பாலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணி கிடைத்தது. குடும்பம் நடத்த அது போதுமான வருமானம் தரும் என்கிறபடியால் அடுத்த ஆறு மாதங்களில் திருமணமும் முடிந்தது. அப்போது அலமேலு தனியார் பள்ளி ஆசிரியை. திருமணத்திற்கு பிறகும் அவள் அந்த வேலையை தொடரலாம் என்கிற சுதந்திரம் கதிரவன்மேல் ஒரு புரிந்துணர்வு ஏற்பட காரணமாயிருந்தது.


இரண்டு மாதங்களுக்கு பிறகு கதிரவன் தனது இன்னொரு முகத்தை அலமேலுவிற்கு அறிமுகப்படுத்தினான். பள்ளிக் காலங்களில் கதைபோன்று கிறுக்கியவற்றையும் கல்லூரி நாட்களில் எழுதி பிரபல இதழ்களில் வெளிவந்த ஒன்றிரண்டு சிறுகதைகளையும் அவளுக்கு படித்துக்காட்டினான். அப்போதே அவள் அதில் ஆர்வம் இல்லாதவளாய்த்தான் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டாள். நூறு சதவிகிதம் புரிந்துகொண்ட கதிரவனும் அதற்குப்பிறகு இதுபற்றியெல்லாம் அவளிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.


ஆறு ஆண்டுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்றிற்கு அப்பாவாகியிருந்த கதிரவனின் தலையில் காலம் கல்லைத் தூக்கிப்போட்டது. ஆம். அவன் பணியிலிருந்த ஆலை நிர்வாகக் குளறுபடியால் இழுத்து மூடப்பட்டது. அதுவரை வாசிப்பதையம் எழுதுவதையும் பொழுதுபோக்காக கொண்டிருந்த அவன் இனி முழுநேர எழுத்தாளனாகிவிட முடிவெடுத்தான்.


எழுத்தே வாழ்க்கை என்றாகிப்போன பிறகு நிறைய வாசிக்கத் தொடங்கினான். புதுமையை உட்புகுத்தி 'அக்னி' எனும் புனைப்பெயரில் படைப்புகள் பிரசவித்தான்.


***


"புக் வேணுமா மேடம்?" நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து நிறுத்தினான் பக்கத்து இருக்கை இளைஞன்.

"இல்ல..தம்பி.. நீங்க படிச்சிட்டிருக்கீங்களே.. அந்த புத்தகம் எழுதனவரோட மனைவிதான் நானு."

"ஐயோ..அப்படீங்களா…? வணக்கம்மா" அலமேலுவின் கால்களை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான்.

"ஐயையோ… என்ன தம்பி நீங்க? நானே அக்கினியில்லையே…அவரோட மனைவிதானே… எங்காலுலலாம் விழுந்துகிட்டு…"

"இல்லமா. என்ன பொறுத்த வரைக்கும் நான் அவுரு கால்ல விழுந்த மாதிரிதான்"

பளாரென கன்னத்தில் அரைந்ததுபோலிருந்தது அலமேலுவிற்கு.

'அலமேலு.. நீ என்ன பேசினாலும் திட்டினாலும் சாபம்விட்டாலும் என்னோட வெற்றிக்கு பின்னால நீ இருக்கறன்னு நான் மட்டும் பேசல… இந்த சமூகமே பேசுது. அவங்களுக்கெல்லாம்.. 'அக்னி'ங்கறது நான் மட்டுமில்ல. நீயும்தான்.' கதிரவன் எப்போதோ சொல்லியிருந்த வார்த்தைகள்தான் அதற்கு காரணம்.

'சென்னையிலிருந்து மும்பை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ்' ஒன்பதாவது பிளாட்பாரத்திலிருந்து….' அறிவிப்பை தொடர்ந்து
'தம்பி. நான் கௌம்ரேம்பா.' என்று எழுந்தாள்.

"மும்பைக்காமா?"

"ஆமாம்ப்பா. ஐயாவோட மகன் மகள்லாம்; மும்பாய்ல இருக்காங்க"

விடைபெற்றுக்கொண்டு அவள் முன்நோக்கி நடக்கத்தொடங்கியதும் நினைவுகள் பின்னோக்கி நடந்தது.


***


"என்னங்க… ஏதோ 'பட்டற'ன்னு…பேசப்போனீங்க. அர..நாள் கழிச்சி வர்றீங்க. இன்னா குடுத்தாங்க…?"

கதிரவன் அமைதியாய் தன் ஜோல்னாப்பையிலிருந்து சால்வையை உருவி மேசை மீது வைத்துவிட்டு நகர்ந்தான்.

"ஆமா.. நான் தெரியாமதான் கேட்கறேன.; உங்க தமிழ் ஆளுங்களுக்கு இதவிட்டா வேற எதுவும் தெரியாதா?"

"…ம்..தமிழாளுங்க….! இவ மட்டும் இங்கிலீஷ்காரி பாரு…" உச்சரிப்பை உதட்டைவிட்டு வெளியேறிவிடாமல் நசுக்கினான்.

" நா..சம்பாரிக்கிறது வாயிக்கும் வயித்துக்குமே சரியாயிருக்குது. நீங்களும் எதாவது கம்ப்பனி கிம்ப்பனிக்கு போனீங்கன்னா… கொழந்தைங்களுக்கு சேத்துகீத்து வைக்கலாம். அந்த அக்கற கொஞ்சமும் இல்லாம…எழுத்தாளனாகிட்டன்..கிழுத்தாளனாகிட்டேன்னு ஏடா கூடமா பேசிக்கிட்டு. எக்கேடாவது கெட்டுத் தொலைங்க. எல்லாம் எந்தலையெழுத்து…"

" அடியே..ய்…பணம் சம்பாதிக்கிறது மட்டுமே வாழ்க்கையில்ல. எவன் எவ்ளோ சம்பாரிச்சு என்ன புண்ணியம்? நாளைக்கு அவனெல்லாம் செத்தா..அது ஒரு சம்பவம். ஆனா…நான் செத்தா அது ஒரு செய்தி. நான்… சமுதாயத்துல எனக்குன்னு ஒரு கூட்டத்த சேத்து வச்சிருக்கேன். பணம் மட்டும் வட்டி குட்டின்னு போடாது….புகழும் போடும்."

காட்சி அந்த இடத்தில் அறுந்தபோது "உண்மதாங்க. உண்மதான்." என்று கண்கலங்கினாள்.

ஏ.சி கம்பார்ட்மென்டில் தன் இருக்கையை தேடி அமர்ந்து கொண்டாள். தன் எதிர் இருக்கையில் இருந்த இளம்தம்பதியர் ஏதோஅவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தமிழர்களாய் இருந்தது அலமேலுவிற்கு அறுதல் தந்தது.

" அம்..மா.. நீங்க… அக்னி ஐயாவோட மனைவி தானே…?" தம்பதியரில் ஆடவன் கேட்டான்.

ஆச்சரியத்தோடு 'ஆமாம்.' என்றாள்.

" அம்மா.. ரொம்ப சந்தோஷம்மா. நான் ஐயாவோட அமைப்புல இருந்தேம்மா. உங்க வீட்டுக்கெல்லாம்கூட வந்திருக்கிறேன்."

"பானு… நான் சொல்வேனே.. அக்னி ஐயா…அவரோட மனைவி இவுங்க." அவன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.

அவள் சம்பிரதாயத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு 'சொல்லறத கேளுங்க. புக்ஸ்லாம் வேணாங்க. காச இப்டி கரியாக்காதீங்க..' என்று சொல்லிவிட்டு முகத்தைதிருப்பி ஜன்னல் பக்கம் வைத்துக்கொண்டாள்.

"இல்ல பானு…கத அனுப்பியிருக்கேன். வந்திருக்குதான்னு பாக்கவேணாமா?" தலையை சொறிந்த அவனிடம் தீடீரென உரிமையோடு

"நீ போய் வாங்கிட்டுவாப்பா. நான் அதுவரைக்கும் பானுவோட பேசிக்கிட்டிருக்கேன்." என்றாள் அலமேலு.

அவன் தயங்கி தயங்கி நகர்ந்ததும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் அலமேலு பேசத்தொடங்கினாள்.

" நானும் ஒன்ன மாதிரிதாம்மா. எனக்கும் புக்ஸ்லாம் வாங்கி காச கரியாக்கனா பிடிக்காது."

அவள் ஆர்வமானதும் 'அலமேலு-கதிரவன்' பற்றிய முழுகதையையும் சொல்லத்தொடங்கினாள். பேச்சின்போது

"அப்போ அவர் சொல்லும்போதெல்லாம் புரியாத ஒரு விஷயம் இப்போ புரியுதுமா. கதை எழுதறவங்க… கடவுள்மா. அவுங்க…புதுசு புதுசா படைக்கிறவங்க. நம்ம பண்பாடு கலாச்சாரம் சீரழிஞ்சிபோவாம பாதுகாக்கிறவுங்க. சமுதாயத்துல முள் செடியா வளர்ற அவநம்பிக்கையும் மூடத்தனத்தையும் அழிக்கிறவுங்க. ஆக்கல் காத்தல் அழித்தல்ன்னு மூணு வேலையையும் அக்கறையோட செய்யற அவுங்க கடவுள்மா. இத மட்டும் நான் முன்கூட்டியே உணர்ந்திருந்தா…முப்பது வருஷம்…அவர பாடாதபாடு படுத்தியிருக்கமாட்டேன். அவுரும்…நிம்மதியா சந்தோஷமா இன்னும் கொஞ்ச நாளு.. இருந்திருப்பாரு…" கண்ணீர் கட்டுப்பாட்டை இழந்து வழிந்தது.

" என்னங்க .. இந்தப்பாவிய மன்னிச்சிடுங்க…" மேலே பார்த்து வாய்விட்டு அழுத அலமேலுவின் கைகளை அந்த இளம்பெண் அழுத்திப்பிடித்தாள். அது 'நீங்க செஞ்ச தப்ப நான் செய்ய மாட்டேன்ம்ப்பா ' என்பதன் அர்த்தமாகப்பட்டது அலமேலுவிற்கு.

மதி
23-10-2012, 12:55 PM
செல்போன்


செல்போன் சிணுங்கியது: !!!!

இது அழைப்பு மணி அல்ல அலாரம் மணி என்பது கனகசபைக்கு தெரியும். காலை 5.00 மணி மார்கெட்டிற்கு சென்றுவிட்டு தனது மளிகை கடையை திறக்க பரபரப்புடன் எழுந்தார். குளித்து தலையை துவட்டிகொண்டே தன் மகள்கள் உறங்கிக் கொண்டிருப்பதை வெறுப்புடன் பார்தார். அழகில்லாமல் பிறந்து விட்ட அவர்களுக்காக பணம் சேர்க்க ஓயாமல் உழைக்க நேர்ந்ததை எரிச்சலுடன் உணர்ந்தார். ஐந்து மாத கைக்குழந்தையுடன் தன் முதல் மனைவி இறந்ததை நினைத்து அதிகம் கவலை கொள்ளாமல் பணம் மட்டுமே குறிக்கோளாய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ப்ளஸ்டு மாணவியான ரம்யா தன்னை விடவும் கருப்பாய் அழகில் குறைந்த தங்கை ராஜியை எழுப்பினாள். சமையலறையில் இருந்து சித்தியின் குரல் “எழுப்பாதே அவள் தூங்கட்டும்”.

செல்போன் சிணுங்கியது: !!!!

வியாபாரத்தில் பிஸியாக இருந்த கனகசபை எரிச்சலுடன் போனை எடுத்தார். ரம்யா இரவு 9.30 மணி ஆகியும் வரவில்லை என்ற தகவல் மேலும் கோபத்தை அதிகரித்தது. அவ்வமயம் ரம்யா வந்துவிட்டாள் என்ற செய்தியும் சொல்லப்பட செல்போன் ரம்யாவிடம் செல்ல உச்சரிக்கத்தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தார். சிறப்பு வகுப்பு தனக்கு இருந்ததையும் தோழியிடம் நோட்ஸ் வாங்க சென்றதையும் ரம்யா சொல்ல அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இரவு உணவு பரிமாறிக்கொண்டே விபரீதம் புறியாமல் சித்தி “என்னங்க அவளுக்கு செல்போன் வாங்கிக்கொடுங்க. அப்பத்தான் எனக்கும் சரி உங்களுக்கும் சரி டென்சன் இல்லாமல் இருக்கும்”. மறுநாள் கேமரா வைத்த செல்போன் கிடைத்தது ரம்யாவுக்கு.

வேகமாக வீட்டுக்குள் வந்த ராஜியை தடுத்து என்ன என்றால் ரம்யா தெருமுனையில் ஒருவன் தினமும் தன்னையே பார்ப்ததாகவும் இம்முறை பின்னால் வீடுவரை வந்து விட்டதாகவும் கூறினாள். ஆச்சாயமானால் ரம்யா அவள் சொல்லும் பொய்யை உண்மை என்று நம்பி. அடுத்து கழிவிரக்கம் தழுவியது ரம்யாவை. பெருமூச்சுடன் தன்னையே நொந்து கொண்டாள்.

காபி சாப்பிடரீங்களா! ஏன தன் தோழி ஹரினியின் அண்ணன் ஷ்யாம், தன்னை அவர்கள் வரவேற்பறையில் தோழியிடம் தன் ரிகார்ட் நோட்டை வாங்கிக்கொண்டு கிளம்பினாள். தன் தந்தையோ சித்தியோ ஒருநாள் கூட சாப்பிடரியா என ஒருநாளும் கேட்டதில்லை. இன்ஜினியரிங் படிக்கும் அழகான ஷ்யாம் தன்னை கேட்கவும் வீடு வந்து சேரும்வரை அதையே அசைபோட்டுக்கொண்டு மகிழ்ந்தாள்.

செல்போன் சிணுங்கியது: !!!!

மறுமுனையில் ஷ்யாம் தன் தங்கை ஹரின் பேசவேண்டும் என கூறி போனை தங்கையிடம் தந்தான். பள்ளி சம்மந்தமான விஷ்யங்களை பேசி வைத்துவிட்டபின் ஷ்யாமின் குரல் காதுக்குள் ஒலித்துக்கொணடே இருந்தது அவன் மேல் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு உருவானது. நேரில் நான்கைந்து முறை ஷ்யாமை பார்த்தும் பேசுவதற்கு பயந்து சும்மா இருந்தாள். இதே போல் இரண்டு முறை ஷ்யாம் போன் செய்து தங்கையிடம் தரவே சிறிது துணிச்சல் கொண்டாள் ரம்யா நேரில் செல்ல முடியாமல் ஷ்யாம் நம்பருக்கு மிஸ்டுகால் தந்தாள், உடனே பதில் வராமல்போகவே தவித்தாள்.

இரவு 10.30 மணி

செல்போன் சிணுங்கியது: !!!!

தூக்கம் வராமல் தவித்த ரம்யா ஷ்யாமின் அழைப்பை உடனே அட்டெண்ட் பண்ணாமல் தவிர்த்தாள். போனை எடுத்தவுடன் ஷ்யாமின் அன்பான வார்த்தைகளால் மகிழ்ந்தாள். கனவுகளுடன் தூங்கினாள். மேலும் மேலும் தைரியம் பெற்று ஷ்யாமுடன் செல்போனில் அடிக்கடி பேச ஆரம்பித்தாள். நேரில் பேசுவதற்கு அஞ்சும் சில விஷயங்களை செல்போனில் சரளமாக பேச ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் ஷ்யாம் தன்னை காதலிப்பதாக சொன்ன பொய்யையும் உண்மை என்று நம்பினாள். சினிமா பார்க் பீச் என்று வளர்ந்த அந்த விடலைக்காதல் யாருமில்லாத நேரத்தில் அது ஷ்யாமின் பெட்ரூமில் முடிந்தது. சித்தியும் அப்பாவும் தன் கண்முன்னே செய்த காமலீலைகளால் பாதிக்கப்பட்டிருந்த ரம்யா ஷ்யாமின் தொடல்களை தடுக்க நினைத்தும் அணுமதித்தாள். ஏதோவொரு பயமும் சந்தோஷ்மும் கலந்து கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தாள்.

செல்போன் சிணுங்கியது:

ரம்யா எண் என தெரிந்து செல் போனை எடுக்காமல் தவிர்த்தான் ஷ்யாம். தவித்தாள் ரம்யா, இரண்டு மூன்று முறை முயற்சிக்கிப்பின் ஷ்யாமிடமிருந்து பழைய அனபான வார்த்தைகளுக்குப் பதில் எரிச்சலான வார்த்தைகள் வந்து விழ ஆரம்பித்துவிட்டன. நொறுங்கிப் போனாள் ரம்யா. வெளியே சொல்லமுடியாமல் அதே பழைய சோக வாழ்க்கையுடன் நாட்கள் உருண்டோடின. வகுப்பை ஒழுங்காக கவனிக்காமல் ஆசிரியர்களின் வசவுகளையும் அப்பாவின் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

செல்போன் சிணுங்கியது: !!!!

ஷ்யாமின் நண்பன் நட்ராஜ். ஷ்யாம் மதியம் வழக்கமாக சந்திக்கும் சினிமா தியேட்டரில் சந்திக்க விரும்புவதாக கூறினான். இரவு தண்ணியடித்துக் கொண்டே ஷ்யாமிடம் நெம்பர் வாங்கியது ரம்யாவுக்கு தெரிய நியாயமில்லை. தியேட்டரில் நட்ராஜைப் பார்த்து ஷ்யாம் எங்கே என்றாள். ஷ்யாம் வரவில்லை எனவும் அவன் உனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அவன் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் நான் உன்னை விரும்புவதாகவும் அன்பொழுக பேச ஆரம்பித்தாள். வாழ்க்கையில் ஒரு பிடிப்புமே இல்லாமல் இருந்த ரம்யா நட்ராஜை முழுமையாக நம்பினாள். ஆனால் ஷ்யாம் சுழற்றிவிட்ட அதே சக்கரத்தை நட்ராஜீம் சுழற்றி விட்டதை கண்டு திகைத்து பயந்துபோனாள் வேறுவழியில்லாமல் முதல் அனுபவ உணர்வுகளை அடக்க இயலாமல் அடங்கிப்போனாள்.

செல்போன் சிணுங்கியது: !!!!

பலமுறை முயற்சி செய்தும் நட்ராஜ் செல்போனை எடுப்பதாக தெரியவில்லை. கோபம் வெறுப்பு பயம் அழுகை என அனைத்து உணர்வுகளும் ஒருசேர ரம்யாவை ஆக்ரமித்தது. அப்பாவையும் சேர்த்து ஆண் இனத்தின் மேலே ஒரு வெறுப்பும் கோபமும் படரத்தொடங்கியது. மிகுந்த மன அழுத்தத்துடன் இரவு உணவு அருந்தாமலே உறங்கிப்போனாள்.

காலை 5.00 மணி

இம்முறை செல்போன் சிணுங்கவில்லை மாறாக அலறியது. தன் எஜமானி மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்குவதைகண்டு!!!!.

மதி
23-10-2012, 12:55 PM
காதலுக்கு உருவம் உண்டு


இரவு மணி 11.15, புதுக்கோட்டை இரயில் நிலையத்தை அடைந்தான் சிவா. தான் வந்த காரை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு நடைமேடை நோக்கிச் சென்றhன். சென்னை - இராமேஸ்வரம் இரயில் செல்லும் முதல் நடைமேடையை அடைந்து,அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்தான். பக்கத்திலே சிலர் அதே இரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். வேறு சிலரோ நடைமேடை ஒரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டே தனிமையில் இருக்கையில் அமர்ந்தான் சிவா. இரயில் வர இன்னும் 30 நிமிடங்கள் இருக்க வானத்தைப் பார்த்தப் படியே அமர்க்கையில் சாய்ந்தான். உறங்கும் நேரமாக இருந்தப் போதிலும் அவன் கண்களில் உறக்கம் இல்லை, காலையிலிருந்து அழுது அழுது அவன் கண்கள் சிவந்துக் காணப்பட்டது.

5 வருடங்களாகக் காதலித்தப் பெண், சிவாவை வேண்டாம் எனக் காதலை உதறிவிட்டாள.் இருவருக்கும் இந்த 5 வருடங்களில் சிறு சிறு சண்டைகள் வருவதும் மறுபடியும் அதை மறந்தும், மன்னித்தும் காதலித்து வந்தனர், ஆனால் கடந்தச் சில மாதங்களாகவே இருவருக்கும் பிரியும் அளவுக்குச் சண்டை வரத் தொடங்கியது, சண்டை முற்ற முற்ற அவளுக்கு காதல் கசக்கத் தொடங்கி, சிவாவை வெறுத்து ஒதுங்கி விட்டாள். அதன் பிறகு சிவா எவ்வளவு மன்றாடியும் அவள் மறுபடியும் அவனுடன் பேச மறுத்துவிட்டாள். இறுதியில் தற்கொலை தான் ஒரே முடிவு என வாழ்க்கையை முடிக்க நினைத்தான்.

அன்று மாலை 4 மணி அளவில் அந்த பெண்ணிடம் இறுதியாக ஒரு முறை பேச நினைத்து அலைபேசியில் தொடர்புக் கொண்டான், ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதே கோபத்தில் தற்கொலைச் செய்யத் துணிந்த சிவாவிற்கு, ஒரு தொலைபேசி வந்தது அவனது அம்மாவிடம் இருந்து. சற்று நேரம் யோசித்தப் பின் எடுத்தான்.

அம்மா....... (மெதுவாக)

என்ன சிவா சாப்டியா பா..... இன்னக்கு 5 மணி இரயில்ல நானு, அண்ண, அக்கா, அக்கா புள்ள எல்லோரும் கிளம்பி வரோம் நீ இரவு 11.45 மணிக்கு கூப்புட வந்துடு என்றாள்.

சிவா சற்று மௌனத்திற்குப் பிறகு சரி மா......

என்னப்பா ஒரு மாதிரி பேசுர உடம்பு சரியில்லையா....

நல்லாதான் இருக்கேன்.....

சரிப்பா நான் வைக்கிறேன்

சரி மா.......

6 மாதத்திற்குப் பிறகு வரும் அக்காவை உயிரோடுச் சென்று வரவேற்பதா இல்லை நாம் பிணமாக இருக்கப்போவதைப் பார்க்க வருகிறாளா என சிந்தனை சிவாவிற்கு ஓடத் தொடங்கியது. அக்காவின் குழந்தை மேல் சிவாவிற்கு ரொம்ப பாசம், குழந்தைக்கும் சிவா என்றால் உயிர். எல்லாவற்றையும் யோசித்தப்பின் தனது சாவை ஒரு நாள் தள்ளி வைக்க முடிவுச் செய்தான்...

மணி 11.45 இரயில் வரும் ஒசைக்கேட்டது, தலையை இரயில் வரும் திசையை நோக்கித் திருப்பினான் இரயில் நடைமேடையை அடைந்தது, எழுந்து நடைமேடையில் அவர்களைத் தேடி நடக்க ஆரம்பித்தான். இரயிலின் S4 பெட்டியில் இருந்து முதலில் அண்ணன், அக்கா துணி பைகளுடன் இறங்கினார்கள், அவன் அம்மா குழந்தையைத் தோலில் சாய்த்துக்கொண்டே பெட்டியில் இருந்து இறங்கினாள், அந்த 3வயது குழந்தை நன்றhக உறங்கிக்கொண்டிருந்தாள், சிவா அம்மாவிடம் சென்று குழந்தையை வாங்கித் தன் தோலில் போட்டுக்கொண்டு அக்காவுடன் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினான்...

காரைச் சாவியை அண்ணனிடம் கொடுத்து விட்டுப் பின் இருக்கையில் அம்மாவுடன் அமர்ந்தான் சிவா. அம்மா சிவாவிடம்
பாப்பா இரயில் ஏறுன 10 நிமிடத்துல இருந்தே கேக்க ஆரம்பிச்சுட மாமா வீடு எப்ப வரும், மாமா இப்போ எங்கனு கேட்டு கேட்டு இரயிலையே இரண்டாக்கிட, இப்ப பாரு தூங்குற எதுமேப் பண்ணாத மாதிரி.....

அக்காவும் ஆமா டா சிவா,

எப்போதும் சிவா மாமா சிவா மாமா தான் சொல்லிட்டு இருக்க, உன்ன முழிச்சுப் பாத்தான அவளோ தான், இனி ஒரு வாரத்துக்கு உன்னயும் அவளையும் பிடிக்க முடியாது என்றாள்..

சிவா எல்லாவற்றைக் கேட்டுக்கொண்டே குழந்தையை தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக சிவா கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் குழந்தை கண்கள் திறந்துப்பார்க்காமலே, சிவா மாமா ஊரு வந்துடுசு என்றாள்.. இப்பொதும் கண்கள் திறக்கப்படவில்லை.... அப்படியே உறங்கியும் போனாள்....

அம்மா, அக்காவைப் பார்த்து

பாருடி உன் பிள்ளைய தூங்குனக்கூட மாமா மேல இருக்கப் பாசத்த என்றாள்

உன் பிரிவைத் தாங்கும் சக்தி இந்தப் பிஞ்சு இதயத்திற்கு இருக்காது என அவன் மனம் அவனுக்குச் சொல்லத் தொடங்கியது, கார் வீட்டை அடைந்தது........



- முற்றும் -

மதி
23-10-2012, 12:56 PM
பிராயச்சித்தம்

தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

முத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.

மெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.

" அண்ணா.. தூங்கிட்டிருந்தீங்களோ ? "

" ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் "

அவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். அவருக்குப் பேய்பிடித்து சில நாட்களுக்கு முன் தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.

அந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.

முத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.

சின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல்,வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.

முத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.

போன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.

பப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.

விடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக 'இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்' எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.

பழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.

நல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் 'இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு' என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியைச் சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போனார். பின்னர் அதிலேயே அவருடன் போய் வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.

இன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.

முத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.

" தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ? "

தன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..

" வேண்டாமண்ணே..நான் வந்தது...மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்" என்றார்.

" சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் " அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.

அண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். 'இதற்கொன்றும் குறைச்சலில்ல' என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.

" தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா? நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல "

"அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்" முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.

"அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ?" மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.

" இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது?"

"அவன் எண்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு "

" ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்? "

புருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.

கதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு வசுந்தரா நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . வசுந்தரா சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.

அந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.

" என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்" என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.

மதி
23-10-2012, 12:57 PM
தண்ணீர்

ராமலிங்கம் பூங்காவில் அமர்ந்திருந்தார். அவர் ஜெயராமுக்காக காத்திருந்தார். தினமும் சுமார் ஆறிலிருந்து எட்டு மணி வரை பேசுவார்கள். சில சமயம் கோவில் அல்லது மாலுக்குப்போய் பேசுவார்கள். அவர்கள் பேச்சு அரசியல், பொதுப்ப்ரச்சனை,வீட்டுப் பிரச்சனை என்று நீண்டு கொண்டே போகும். அன்றும் பேச ஆரம்பித்தார்கள்.

'உங்கள் பில்டிங்கில் தண்ணி வரதா? '

'இப்போதைக்கு வரது. வெயில் காலத்தில் எப்படியோ தெரியலை. '

'இந்தியா முழுவதும் மழை குறைவு தான். '

"மழை வந்தாலும் பிடித்து வைக்க ஒரு வழியும் செய்வதில்லை. இந்த அரசியல் வாதிகள்ஒருவருக்கொருவர் குற்றம் சொல்வதிலேயே டயம் சரியாக இர்ருக்கு."

"எல்லா ஆறுகளையும் ஒண்னு சேர்த்தால் கஷ்ட்டம் இருக்காதாம்"

"இதற்கு சென்டர் தான் முயர்ச்சிக்கணும்'

"சென்டர் சுப்றேமே கோர்ட் சொல்வதை யார் கேட்கிறார்கள்? காவேரி பிரச்சனை தீர்த்துதா? "

"தண்ணீரை பொது உடமையாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்!"

ராமலிங்கத்துடைய மொபைல் அடித்தது. "ஊரிலிருந்து கசின் வரப்போரானாம். நான் வரேன். கிளம்பினார்.

வீட்டுக்குப்போய் கால் அலம்ப போன போது குழாயில் தண்ணி வரவில்லை.

ஏ மாலா ஏன் தண்ணி வரலை"?

சிறிது தயங்கியவள் "பக்கெட்டில் பிடித்து வைச்சிருக்கேன்"

"ஏன் தண்ணி வ-ர-லை?"

"நம்ம பில்டிங்கில் பக்கத்து சைடில் தண்ணி நின்னு போச்சு. பழைய பைப்பு. அடைஞ்சிருக்கு"

அதான் தெரியுமே.மீட்டிங் போட்டோமே. நிறைய பேர் பணம் தர சம்மதிக்கலை. அடுத்த வாரம் மீட்டிங் இருக்கு."

"அதுவரை எங்கு போவார்கள்? அதான் அந்த சைடுகார அவர்களே பணம் செலவழித்து பைப்பு மாற்றுகிறார்கள்."

"அதெப்படி என் பெர்மிஷன் இல்லாமல் மாற்றுவார்கள்? நான்தானே செகரட்டரி."

வேகமாக வெளியே வந்தார். "வேலையை நிறுத்துங்கள்" என்று கத்தினார்.

அந்த சைடிலிருந்த குடும்பத்தினர் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

"சார் எங்கள்ளுக்கு சொசைட்டி பைசா வேண்டாம்.டியுப் போட்டு எடுக்க எந்த வீட்டுக்காரரும் சம்மதிக்கலை.ஒரு மணி நேரத்தில் வேலை முடியும். மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் "

"என் சம்மதமில்லாமல் எப்படி ஆரம்பிக்கலாம்?இப்போதே வேலையை நிறுத்துங்கள்' என்று சப்தம் போடா ஆரம்பித்தார்!!

மதி
23-10-2012, 01:00 PM
சக்ரவியூகம்


“குறை ஓன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஓன்றும் இல்லை கண்ணா........
குறை ஓன்றும் இல்லை... கோவிந்தா”


என்ற மதுரமான குரலில் பாடிக்கொண்டிருந்தாள் நந்தினி. அரங்கமே அவள் பாடலின் பக்தி லயத்தில் மூழ்கி கிடந்தது. பேரருள் கண்ணனை அந்த கோவிந்தனை தன் பாடலினால் அனைவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள். கச்சேரி முடிந்ததும் அனைவரும் பலத்த கரகோஷத்தினால் தம் பாராட்டுகளைத் தெரிவித்தனர். நந்தினி சிறந்த பாடகி என அறிவித்து அவளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

நந்தினி அனைவருக்கும் புன்னகையோடு கைகூப்பி தன் நன்றியை தெரிவித்தாள். ஸ்டேஜ் திரை முடியதும் நந்தினியின் அம்மா கற்பகம் ஓடி வந்து தன் மகளை அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள். “அம்மா தாத்தா எங்க? ” என்று நந்தினி கேட்டாள் “இதோ வந்துட்டேன்” என்று புன்னகையோடு சதாசிவம் கற்பகத்தின் தந்தை இருசக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்தார் அதில் கற்பகம் தன் மகளை உட்கார வைத்தாள்.

இரவு வீட்டில் சாப்பிட்டப் பிறகு “தாத்தா இன்னிக்கு கச்சேரி எப்படி” என்று நந்தினி கேட்டாள் “உன்ன மிஞ்ச இந்த லோகத்துல யாரு இல்லடி கொழந்த பிச்சி எடுத்துட்ட” என்றார்

“ம்ம் நந்தினி ரெண்டாவது பாட்டுல கொஞ்ச ஸ்ருதி சேரலடி ஒரு எடத்துல தாளம் கூட விலகிடுச்சி” என்று சுட்டிக்காட்டினாள் அம்மா
“அது எனக்கும் தெரியும்மா அப்போ எனக்கு வாய்ஸ் ட்ரை ஆயிடுத்து அதான்”

“அப்போ இன்னும் கொஞ்சம் நீ நல்லா ப்ராக்டீஸ் பண்ணனும்.... சரி நீ போய் படு” நந்தினி தன் இருசக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அதை லாவகமாக தன் அறைக்கு ஓட்டிச் சென்றாள்.

மறுநாள் காலை கற்பகம் நந்தினி காலேஜ் சென்றவுடன் கோயிலுக்கு வந்தாள். சுவாமி தரிசனம் முடித்தாள் மனமுருக மகளுக்காக பிராதித்தாள். அங்கே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு தன் கணவன் சுவாமிநாதனை எதிர்பாராமல் சந்தித்தாள். சற்றே எடைப் போட்டு தொந்தியுடன் இருந்தான். அவன் அருகே வந்து சற்று தயங்கி

“எப்படி இருக்கே?”

“நன்னா இருக்கேன்” கிளம்ப முற்ப்பட்டாள்

“என்னை எப்படி இருக்கேள்னு கேட்கமாட்டியா? இன்னும் உனக்கு கோபம் தீர்ல இல்லயா?”

“நான் யாரு உங்கள கேள்வி கேட்க கோபப்பட எனக்கு அந்த உரிமை இல்ல”

“ஆமா நா செஞ்ச தப்புக்கு மன்னிப்பே இல்ல இப்போ தண்டனையே அனுபவிசிட்டு இருக்கேன்”

“என்ன சொல்றேள்?”

“உன்னையும் கொழந்தையும் ஆத்தவிட்டு அனுப்பிச்ச பாவத்துக்கு தண்டனைய அனுபவிக்கிறேன். நீ போனதுக்கப்புறம் உனக்கு விவாகரத்து கொடுத்துட்டு நானும் அம்மாவும் தஞ்சாவூர் போயிட்டோம் ரேவதிய கல்யாணப் பண்ணின்டேன் எங்களுக்கு ஒரு பய்யப்பொறந்தான். சொத்தெல்லாம் ரேவதிக் கைக்கு மாறிடுத்து........ நீ சாது மாட்டுப் பொண்ணா இருந்தே அம்மா உன்ன அவ்ளோ கொடுமப்படுத்தினா ஆனா அதெல்ல ரேவதிக்கிட்ட நடக்கல ...............அம்மா இப்போ ஹோம்ல இருக்கா.....பய்ய படிக்கணும்னு மெட்ராஸ் வந்தோம் அவனுக்கு எல்லா கெட்டப் பழக்கமும் இருக்கு சொத்த கறைக்குரான் கேட்க ஆளில்லை” விசும்பினார் சுவாமிநாதன்

“கற்பகம் நீ நம்ம பொண்ணை நன்னா வளர்த்திருக்கே என்னமா பாட்டு பாட்றா நா ஒருதரம் அவளோட பேசணும் ..........அவ தோப்பனார் நான்னு சொல்லமாட்டேன் .......... உங்க ஆத்துக்கு வரட்டுமா?”

“என்னை மன்னிச்சுடுங்கோனா” என்று கூறி அவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்

வீட்டுக்கு திரும்பியதும் மனம் உளைச்சலாக இருக்கவே சற்று ஓய்வு எடுத்தாள் பழைய நினைவுகள் அவள் கண்முன் நிழலாடியது.

“உங்க குழந்தைக்கு ரெண்டு காலும் சுவாதீனம் இல்ல நரம்பு பாதிச்சிருக்கு டிரீட்மென்ட் கொடுத்து பார்க்கலாம் ஆனா சரியாகும்னு கேரண்டி கொடுக்க முடியாது” டாக்டர் சொன்னார்

பிறந்து இரண்டே நாள்ஆன தன் பிஞ்சுக் குழந்தையை மடியில் போட்டு அழுதாள் கற்பகம் “இந்த சனியன தூக்கி வெளிய போடு யாரு இதை ஆயுசு பூரா வெச்சி காப்பாத்த முடியும்” என்றாள் அவள் மாமியார்

“அத்தைய்ய்”

“என்னடி சத்தபோட்ற இந்த கொழந்தை பெரிசானா யார் கால் இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணிப்பா?”

“கல்யாணம் ஒண்ணுதான் வாழ்கையில்லை அத்தை இவள நல்லாப் படிக்க வெச்சி பெரிய ஆளாக்குவேன்”

“கற்பகம் அம்மாவையா எதிர்த்து பேசற அவா வாழ்ந்துப் பார்த்தவா அவாளுக்கு எல்லாத் தெரியும்” சுவாமிநாதன்

“என்னங்க நீங்களுமா?”

“என்னால இந்த கொழந்தைய ஏத்துக்க முடியாதுடி நாளைக்கு இதுக்கு கல்யாணம் காட்சி பண்ண முடியுமா? இது என் குழந்தைனு சொல்ல அவமானமா இருக்கு இதை நம்ம வேளக்காரன்கிட்டக் கொடுத்துடு அவன் இதை எங்கயாவது விட்டு வந்துடுவான் பணம் கொடுத்துடலாம் அதுக்கு”

கற்பகம் அழுதுக்கொண்டே “என்னால என் குழந்தையப் பிரிய முடியாதுங்க தயவு செஞ்சிபுரிஞ்சிக் கோங்க”

“கற்பகம் கடைசியா சொல்றேன் நாங்க சொல்றத கேளு”

“சுவாமிநாதா ஒண்ணு நா இந்த ஆத்துல இருக்கணும் இல்ல இந்த கொழந்தை இந்த ஆத்துல இருக்கணும நீயே முடிவு செய்” --அம்மா

“நீங்க இந்த ஆத்துல இருங்க அத்தை நானும் என் கொழந்தையும் இந்த ஆத்த விட்டுப்போறோம்”

“என்ன நெஞ்சழுத்தம்டி நோக்கு அம்மாவையே எதிர்த்து பேசறயா? போ இந்த ஆத்த விட்டு போ இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமு இல்லை”

“சுவாமிநாதா படிச்ச திமுறு வேற ஓண்ணுமில்லடா........போட்டும் போ இதுகளுக்கு கஷ்டப்பட்டாதான் புத்திவரும்”

“நான் போறேன் அத்தை ....... தாலிங்கறது ஒரு பொண்ணுக்கு வேலிதான் அத்தை ஆனா தாலி இல்லனாhகூட ஒரு பொண்ணு மனசுல சக்ரவியூகம் அமசுன்டா அவளோட அனுமதி இல்லாம யாரும் உள்ள வரமுடியாது இத புரிஞ்சிக்கேங்கோ நான் இன்னிக்கு சங்கல்பம் செய்றேன். இவள ஏதாவது ஒரு துறையில சிறந்து விளங்க செய்வேன்னா அப்போ நீங்க நாம இவள வளர்க்காம விட்டுடோமேனு நிச்சயமா ஃபீல் பண்ணுவேள்”

அன்று வெளியே வந்து தன் தந்தையுடன் சேர்ந்து நந்தினிக்கு பிடித்த பாட்டு கற்றுக்கொடுத்து பல இன்னல்களுக்கு பிறகு அவளை சிறந்த பாடகியாக்கியுள்ளாள். இன்று அவள் சங்கல்பம் நிறைவேறியது.

மதி
23-10-2012, 01:01 PM
ஆசான்


அந்த மதிய வேளையில் கதிரவனை வர விடாமல் சிறைபிடித்து வைத்திருந்த முரட்டு மேகங்கள் ஒன்று திரண்டு மழையாய் கொட்டி தீர்த்தன. மழை நின்ற பிறகும் ஏனோ இடியும், மின்னலும் தொடர்ந்து நர்த்தனம் செய்து கொண்டிருந்தது. அதிகம் மிதிபட்டு தெளிவாய் சிரித்தது சாலையோரம் தேங்கி கிடந்த மழை நீர். சொட்டுசொட்டாய் விழுந்த தண்ணீர் துளிகள் சன்னல் கம்பிகளில இசை எழுப்பிக் கொண்டிருந்தது. மௌனமாய் சாய்ந்தபடி இனம் புரியாத வேதனையோடு கைகளில் தவழ்ந்த ஈரமாய் கிடந்த கடிதத்தை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக்கம். வெளியே வந்த கமலம் கணவரின் கரங்களில் தவழ்ந்த கடிதத்தை கண்டதும் அவருடைய மௌனத்தை கலைத்தாள்.

"என்ன கடுதாசி இது?"

"ம்...உம் மவன் போட்ட கடுதாசி" என்றார் மாணிக்கம். அதைக்கேட்டவுடன் பரபரப்பானாள் கமலம்.

"அப்படியா...என்ன எழுதி இருக்கான் சொல்லுங்க" என்றால் முகம் மலர...

"என்ன பாசம் பொத்துகிட்டு வருதோ?"

இல்லைங்க...என்ன இருந்தாலும் அவ நம்ம...." கமலம் முடிப்பதற்குள்...

போதும்....நிறுத்துடி...அவன் பண்ணிண காரியத்துக்கு உன்னோட பாசம் ரொம்ப அவசியமோ? இந்த ஊர்ல எனக்கு இருந்த மரியாதையை நாசம் பண்ணிண பாவி அவன்..." என்று பொருமி தள்ளினார் மாணிக்கம்.

ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மாணிக்கம். ஆனாலும் ஓய்வில்லாத மன உளைச்சலில் கிடந்தார். ரகு அவரது ஒரே மகன். அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் உத்தியோகம். கை நிறைய சம்பளம். மகனின் திறமையையும், உழைப்பையும் பார்த்து பூரித்துப் போனார்கள் மாணிக்கமும், கமலமும். அவனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து பார்க்க ஆசைப்பட்ட போதுதான் ஒரு பேரிடியை கொடுத்தான் ரகு. தன்னோடு வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாகவும் அந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினான். கூடவே இன்னொரு பேரிடியை தந்தான். அவள் அமெரிக்க நாட்டுப் பெண் என்றும் அவள் பெயர் லிண்டா என்றும் ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான். அதிர்ந்து போனார் மாணிக்கம் அப்பாவிடமிருந்து பதில் வராததால் நேரடியாக அவரிடம் பேசி சம்மதம் வாங்க ஊருக்கு வந்த போதுதான் பிரச்சனை மேலும் பெரிதானது.

சோகத்தோடு நினைவுகளை அசை போட்ட கமலத்தை பார்த்து பெருமூச்சோடு....

"பழச நினைச்சு என்ன ஆகப்போகுது கமலா..." என்றார் மாணிக்கம்.

"இப்ப அவன் என்னதான் எழுதியிருக்கிறான்?"

"லீவுக்கு அவன் குடும்பத்தோட ஊருக்கு வரலாம்னு இருக்காணாம். வரட்டுமானு கேக்றான்." மாணிக்கம் சொன்னதை கேட்டதும் அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்...

"என்ன குடும்பத்தோட வரானா...கண்டிப்பா வரச் சொல்லி கடுதாசி போடுங்க..."

"என்ன பேசற கமலா...இவ்வளவு அசிங்கம் நடந்திருக்கு மறுபடியும்...." மாணிக்கம் முடிப்பதற்குள்.

"போதும் நிறுத்துங்க...அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்? நமக்கு தெரியாம பொண்ண கூட்டிட்டு ஓடிட்டானா? உங்கள மதிச்சு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கத்தானே அவன் வந்தான் அவனை நாமதான் அசிங்கப்படுத்திட்டோம். நாம ஒண்ணும் அசிங்கப்படல"

கமலம் பொரிந்து தள்ள....

“போதும் கமலா. இந்த ஊர்ல எனக்குனு ஒரு மரியாதை இருக்கு. வாத்;யார் புள்ள மக்குனு சொல்லுவாங்க. ஆனா நான் அவன நல்லா படிக்கவச்சு வெளிநாட்டு அனுப்பிவச்சேன். எதுக்காக? இந்த காரியம் பண்றதுக்கா? இப்படிபட்ட அவன மறுபடியும் கூப்பிடனுமா...?"

"கூப்பிட்டா ஒண்ணும் தப்பில்ல. அவன் என்ன கொலையா பண்ணிட்டான்?" என்றால் கமலம்

"ஆனா கமலா நம்ம சொந்த பந்தம் என்ன நினைக்கும். ஏற்கனெவே அவன் பண்ணிண காரியத்துக்கு நம்ம சாதி சனம் நம்ம மேல கோபத்தோட இருக்காங்க. உனக்கே அது நல்லா தெரியுமே"

"சாதி, மதம் இல்லைனு நீங்கதான் பாடம் சொல்லி தந்தீங்க. ஆனா இப்ப நம்ம மவன் கல்யாணம் பண்ணிணதுக்கு கோபப்படறீங்க. சாதி சனத்தை நாம பாத்திட்டு இருந்தா இப்படி அநாதையா நாம வீட்டுக்குள் கெடக்க வேண்டியதுதான். நாம சாகும் போது எத அள்ளிட்டு போறோம்? உங்களோட வறட்டு கவுரவம் கோபத்தை விட்டிட்டு அவங்கள வரச்சொல்லி தயவு பண்ணி கடிதாசி போடுங்க". கமலம் தன் மொத்த ஆதங்கத்தையும் கொட்டி புலம்பி தீர்த்தாள். அவளின் புலம்பலில் நிலை குலைந்த மாணிக்கம் சிலையாய் அவள் வீட்டிற்குள் செல்வதை பார்த்துக் கொண்டேயிருந்தார்.

அன்று கமலத்திற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மகன் குடும்பத்தோடு வருவதால் விழுந்து விழுந்து அவசரஅவசரமாக எல்லா வேலைகளையும் செய்தாள். மனைவியின் நடவடிக்கையை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக்கம். வாசலில் கார் சப்தம் கேட்டதும் ஆராத்தி தட்டோடு ஓடோடி சென்றாள் கமலம். முழுசாக ஐந்து வருடங்கள் ஓடி விட்டது மீண்டும் தன் மகனை பார்ப்பதற்கு ஏதோ உயிர் போய் மீண்டும் வந்தது போல் இருவருக்கும் இருந்தது. காரை விட்டு இறங்கிய ரகு தன் மனைவி குழந்தையோடு வாசலுக்கு வந்ததும்....

"ஒரு நிமிஷம் இருங்க...." என்று மகிழ்ச்சியோடு ஆரத்தி தட்டை சுற்றி திருஷ்டி கழித்தாள் கமலம்.

வெள்ளைக்கார பெண்ணை பார்க்க அக்கம் பக்கம் எல்லோரும் மாணிக்கம் வீட்டை கூட்டமாக முற்றுகையிட்டார்கள். அமெரிக்க என்றாலே ஆச்சரியமாகத்தானே பார்ப்பார்கள். ஏதோ ஜவுளி கடை பொம்மை அண்ணாந்து பார்ப்பது போல் லிண்டாவை பார்த்தார்கள். லிண்டாவிற்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஆரத்தி சுற்றி முடித்ததும் தன் பேரனை அள்ளி எடுத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் பொங்க முத்தமிட்டு மகிழ்ந்தாள் கமலம்.

"உள்ள வாங்க" என்று அழைத்தாள் கமலம். எல்லாவற்றையும் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தை நோக்கி ரகு....

"அப்பா எப்படி இருக்கீங்க? இன்னும் என் மேலே கோபமா?" என்று ஆதங்கத்தோடு கேட்டான்.

"இல்லப்பா...உள்ள வா....உள்ள வாம்மா" என்று லிண்டாவை அழைக்க, தன் அப்பா, அம்மாவை அறிமுகப்படுத்தி வைத்தான் ரகு.
லிண்டா மெல்ல தலை சாய்த்து இரு கரம் கூப்பி வணக்கத்தை சொன்னது கமலத்தின் காதருகே கிசுகிசுத்தார் மாணிக்கம்.

"பையன் எல்லாமே நல்லாதான் சொல்லி கொடுத்திருக்கான்" என்றதும்...

"அவன் எம் மவன்" என்று பெருமிதத்தோடு சொன்னாள் கமலம்.

வீட்டிற்குள் சென்றதும் கமலத்திற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. லிண்டாவிற்கு ஆங்கிலத்தை தவிர வேறு மொழி தெரியாததால் அப்பா, அம்மா பேசிய எல்லா விவரங்களையும் ரகு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான். தன் வீடு முழுக்க சுற்றி காட்டினான் ரகு. தன் கடந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தான். தங்களுக்காக ஓடி ஓடி கமலம் உபசரிப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் லிண்டா.

"ஏம்பா ரகு...என் பேரனுக்கு என்ன பேரு வெச்சிருக்க?"

"ஹர்ஷத்னு வெச்சிருக்கேன்" என்றான் ரகு.

"என்னடா பேரு இது. ஒரு நல்ல தமிழ் பேரா வைக்கக்கூடாதா" என்று ஆதங்கப்பட்டார் மாணிக்கம்.

"போதும் உங்க தமிழ் புராணம்" என்றாள் கமலம்.

அம்மாவின் பேச்சைக் கேட்ட ரகு மெல்லிய சிரிப்போடு...

"அப்பா! பேருதான் ஹர்ஷத். ஆனா நாங்க செல்லமா ராஜானு கூப்பிடுவோம். ஏன்னா என் தாத்தா பேரு ராஜரத்தினம்தானே."

தன் தந்தையை நினைவு கூர்ந்ததை கண்டு சந்தோசப்பட்டார் மாணிக்கம்.

பாத்ரும் சுத்தமாக இல்லாததால்....

"ஓ! நாஸ்டி டாடி" என்று வெளியே ஓடி வந்தான் ரகுவின் மகன்.

"ஏண்டா இது நாஸ்டியா? உங்கப்பா உன்ன மாதிரி இருக்கும்போது பாத்ரூமே இல்லடா" என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் மாணிக்கம்.

பேரக்குழந்தையோடு விளையாடிதில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அந்த அமைதியான மாலை நேரத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு கார் மாணிக்கம் வீட்டை நோக்கி வந்து நின்றது. வீட்டின் முன் கார் வந்து நின்றதும் வெளியே வந்ததார் மாணிக்கம். காரின் முன் கதவை திரந்து வந்தவர் மாணிக்கத்தை நோக்கி....

"கலெக்டர் அய்யா உங்கள பாக்க வந்திருக்காரு" என்று சொன்னதும் பரபரப்பானார் மாணிக்கம். காரின் பின்புற கதவை திறந்து வெளியே வந்தவரை கூர்ந்து கவனித்தார் மாணிக்கம்.

"வணக்கம் அய்யா...நல்லா இருக்கீங்கலா? என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று காலில் விழுந்தவரை பார்த்ததும் வெலவெலத்தார் மாணிக்கம்.

"நீங்க....நீங்க...?" என்று மெல்ல மாணிக்கம் இழுக்க...

"என்ன தெரியலீங்களா....நான்தான் ஆரோக்கியசாமி மகன் சார்லஸ்." என்றதும்...

"அடடா...சார்லஸா....அடையாளமே தெரியல. வாங்க வாங்க" என்று அழைத்ததும்....

"என்னங்க அய்யா... என்ன போய் வாங்க போங்க கூப்பிடறீங்க....சும்மா வா போனே கூப்பிடுங்க"

"சரிப்பா உள்ள வா... கமலா இங்க வந்து பாரு யாரு வந்திருக்கானு" என்று சார்லஸை உள்ளே அழைத்து சென்றார் மாணிக்கம்.

"சார்லஸ்! டிரெயினிங் எல்லாம் முடிஞ்சுதா...?"

"டிரெயினிங் முடிஞ்சு இப்ப நம் மாவட்டதுக்கே மாற்றலாகி வந்திருக்கேன்"

கமலம் யார் என்று தெரியாமல் விழிக்க...

'என்ன கமலா முழிக்கற. நம்ம ஆரோக்கியசாமி மவன் சார்லஸ். இப்ப நம் மாவட்டதுக்கு கலெக்டாரா வந்திருக்கான்."

"அடையாளமே தெரியலப்பா. எப்படி இருக்கற?" என்று அன்போடு விசாரித்தாள்.

"நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்கலா?" என்று நலம் விசாரித்தான். பிறகு தன் மகன் குடும்பத்தோடு வந்திருப்பதை சொன்ன மாணிக்கம் எல்லோரையும் அறிமுகப்படுத்தி சார்லஸ்க்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மாணிக்கம்.

லிண்டாவிடம்...

"மை ஸ்டுடண்ட்... நௌ ஹி ஸ் டிஸ்ரிடிக் கலெக்டர்" என்று அறிமுகப்படுத்தினார் மாணிக்கம். தன் மாமனாரை பெருமிதத்தோடு பார்த்தாள் லிண்டா.

"சரிங்க அய்யா...நான் கிளம்பறேன்" என்றான் சார்லஸ்.

"இருப்பா...சாப்பிட்டு போலாம்" என்றாள் கமலம்.

"இல்லம்மா...வேலை இருக்குமா...இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்...அய்யா நான் கிளம்பறேன்" என்று விடை பெற்றான் சார்லஸ். மகிழ்ச்சியோடு வழியனுப்பி வீட்டிற்குள் வந்ததும் ரகு மெல்ல...

"அப்பா நாங்களும் கிளம்பறோம்" என்றதும்

"ஏம்ப்பா நீதான் இன்னும் லீவு இருக்குன்னு சொன்னையே" என்று மாணிக்கம் கேட்க

"ஆமாப்பா. ஆனா நான் இங்க தங்க முடியும். ஆனா லிண்டாவும், பையனும் இந்த மாதிரி தங்கி பழக்கம் இல்லாதவங்க. அதனால டவுன்ல ஹோட்டல் தங்கியிருக்கோம். நம்ம சாப்பாடு, இடம் எல்லாம் இவங்களுக்கு சேராது அதான். நாளைக்கு வரேப்பா."

ரகு சொல்ல சொல்ல மாணிக்கம், கமலத்தின் முகம் சுருங்கி போனது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. கிடைத்த சிறிது ஓய்வு நேரத்தில் மெல்ல செய்தித்தாளை புரட்டி படித்துக் கொண்டிருந்தான் சார்லஸ்.
அப்போது வெளியே காலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்தான். அவனுடைய உதவியாளர் நின்று கொண்டிருந்தார்.

"என்ன பரமசிவம் திடீர்னு?"

"சார்...ஒரு வருத்தமான செய்தி...."என்று இழுத்தார்.

"என்ன...?"

"நம்ம மாணிக்கம் வாத்தியார் காலமாயிட்டார்" என்று உதவியாளர் சொன்னதும் அதிர்ந்து போன சார்லஸ்

"சார் இறந்திட்டாரா?...எப்படி? என்னாச்சு அவருக்கு?"

"இன்னிக்கு காலைல நெஞ்சுவலினு சொன்னாராம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுகுள்ள உயிர் போயிடுச்சு"

"அப்படியா....? அவர் மகனுக்கு தகவல் சொல்லியாச்சா?"

"அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க...அவருக்கு தகவல் சொல்லியாச்சு. ஆனா அவர் வரமுடியாத சிக்கல் மாட்டிட்டாராம். உறவுக்காரங்களை வச்சு காரியம் பண்ண சொல்லிட்டாரு. ஆனா யாரும் அவருக்கு காரியம் பண்ண மாட்டேங்கறாங்க"

"என்ன கொடுமை இது. ஏன் பண்ண மாட்டேங்கறாங்க?"

"அவரு மகன் சாதி விட்டு வேறு மதத்த சேர்ந்த வெளிநாட்டுப் பொண்ண கல்யாணம் பண்ணிட்டதால உறவுக்காரங்களுக்கும் வாத்தயாருக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்ல. அதான்"

"அதுக்காக இந்த நேரத்துலயா அவங்க கோபத்தை காட்டறது?"

"என்ன சார் செய்யறது...காலம் எவ்வளவு மாறியும் இன்னும் அதே ரத்தம்தான் இங்க ஓடுது."

பரமசிவம் சொன்னதை கேட்டு நொந்து போனான்.

கூடுகளை நோக்கி பறவைகள் திரும்பும் அந்த அந்தி சாயும் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த சுடுகாட்டில் மாணிக்கத்தில் உடற்கூடு அநாதையாய் கிடந்தது. சுடுகாட்டில் தன் காரை நிறுத்திவிட்டு மெல்ல மாணிக்கத்தின் உடல் அருகே வந்தான் சார்லஸ். அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகளின் நடுவே எத்தனையோ மாணவர்களை நிமிர வைத்த அந்த உடல் சாய்து கிடந்தது. எதிரே அவரின் ஒட்டுவதற்கு விருப்பம் இல்லாத பங்காளி உறவுகள் என ஒரு கூட்டமே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. அவர்களை நோக்கி சார்லஸ்

"இவ்வளவு பெரிய மனுஷன் செத்திருக்காரு. அவருக்கு கடைசியாய் காரியம் பண்ணி அனுப்ப அனுமதி கொடுங்க"

கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர்....

"இதபாருங்க தம்பி. இது எங்க சொந்த பிரச்சனை. நீங்க தலையிடாதீங்க"

"கொள்ளி வைக்கிற இடத்துல சொந்த பிரச்சனை என்ன வேண்டிகிடக்கு" என்று சார்லஸ் கேட்க...

"சாதி விட்டு கல்யாணம் பண்ணி எங்கள அசிங்கப் படுத்தின குடும்பத்துக்கு நாங்க எதுவும் செய்ய வேண்டியதில்லை" என்று பெரியவர் உறும

"அதுக்காக உங்க கோபத்தை இந்த நேரத்துல காட்டறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா..?

"இதபாரு உன்னோட கலெக்டர் அதிகாரத்தை இங்க காட்டாதே...அந்த ஆளோட மவனே வரல. உனக்கு என்ன வேண்டி கெடக்கு?"
மற்றொருவர் நக்கலாய் கேட்க கோபமடைந்த சார்லஸ்

"அவர் என்னோட வாத்தியார். அவருக்கு இப்படி ஒரு காரியம் நடக்கறத பாத்து சும்மா இருக்க முடியாது"

சார்லஸ் சொல்ல சொல்ல....

"இத பாரு இதுல நீ தலையிடாதே. மரியாதையா திரும்பி போயிடும்"

"முடியாது" என்று சார்லஸ் மறுப்பு சொல்லி சிதைக்கு அருகே நெருங்கியபோது மாணிக்கத்தின் உறவினர்கள் கோபத்தோடு சார்லஸை நெருங்கினார்கள். அதில் இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுக்க சார்லஸ் கோபத்தோடு கத்தினான்.

"என்னடா நெஞ்ச நிமித்தரீங்க? நான் கலெக்டரா இருந்தாலும் இந்த மண்ணலதான் பொறந்தேன். எனக்கும் அதோ கோபமும், ஆத்திரமும் நெறைய இருக்கு" என்றவன் வேகமாக தன் காருக்குள் வைத்திருந்த கைத்துப்பாக்கி வேகமாக எடுத்துக் கொண்டு....

"வாங்கடா..." என்று கத்த மெல்ல சண்டை போட்ட கூட்டம் பயத்தில் கொஞ்சம் பின்வாங்க பதறிப்போன அவன் உதவியாளர் பரமசிவம் ஓடி வந்து அவனை தடுத்து...

"சார்...கொஞ்சம் பொறுமையாய் இருங்க...நீங்கலே இப்படி செய்யலாமா....?

"எப்படி பொறுமையாய் இருக்கறது பரமசிவம்? இவங்க என்னை என்ன செஞ்சுறுவாங்க...அதையும் பாக்கறேன்." என்றவன் தன் சட்டையை கழற்றி எறிந்து விட்டு அருகே இருந்த வெட்டியான் கையில் இருந்த தீ பந்தத்தை வாங்கி மாணிக்கத்தின் உடலுக்கு நெருப்பு மூட்டினான் சார்லஸ். தான் பாடமாய் கற்றுத் தந்த "சாதிகள் இல்லையடி......" இப்போது படமாய் இருக்கும்போது நிறைவேறியதை நினைத்து மெல்ல நிம்மதியோடு அந்த ஆத்மா தன் பயணத்தை தொடர்ந்தது,

மதி
23-10-2012, 01:01 PM
சில நிஜங்கள்


போகப் போக இந்த லோகநாயகி சுபாவேம சரியில்லாம போயிடுத்து மாமி. ஆரம்பத்துல நல்ல பொம்மனாட்டியா, ஆத்துக்கு அடக்கமான மருமகளா இருந்தா, ஆனா இப்ப ரொம்ப மோசமானவளா மாறிட்டா. நேக்கு ரொம்ப கஷ்டமா போயிடுத்து மாமி. குடும்பத்துக்கு குத்து விளக்கா இருக்க வேண்டியவ இப்படியா பொறுப்பில்லாதவளா மாறணும்? மாமியார கொஞ்சம் கூட மதிக்கிறதில்ல. எல்லாத்துக்கும் எதிர் பேச்சு தான். அவா ஆத்துக்காரன் அதான் அந்த வினோத்துப்பய இவள லவ் மேரஜ் பண்றதுக்கு முன்னாடியும் இவள சுத்தி சுத்தி தான் வந்தான். இப்பவும் சுத்தி தான் வாரான். இதுல அவனுக்கு வெளியூர்ல வேல கிடச்சி போயிட்டான். வாரத்துக்கு ஒரு நாளோ ரெண்டு நாளோ தான் அவனால வீட்டுக்கு வர முடியும் . இனிமே இந்த
லோக நாயகி பண்ணப்போற கூத்தெல்லாம் எங்க அவனுக்கு தெரியப்போறது?

அவ அம்மாக்கும், அவ மாமியாருக்கும் ஒேர வயசு தானே இருக்கும். அம்மாவுக்கு குடுக்குற மரியாதைல கொஞ்சம் கூடவா மாமியாருக்கு இவ கொடுக்கப்பிடாது? தன் மாமியாருக்கு விஷம் கலந்து குடுக்குற அளவுக்கு துணிஞ்சிட்டாளே பாதகத்தி. எல்லாம் அந்த சிவா, அதான் அவ கள்ள புருஷன், வினோத் சினேகிதன் சொல்லிக்குடுக்குற ஐடியா தான். வினோத்துக்கு உள்ளுர்ல கெடைக்க வேண்டிய வேலைய வெளியூருக்கு மாத்தி விட்டேத இந்த சிவா தான். இந்த சிவா வினோத் ஆத்துல காலடி எடுத்து வச்சத்துக்கு அப்புறம் இந்த பிரச்சனை எல்லாமே. இப்ப பாருங்க தன் சினேகிதன் வீட்டுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டான் சண்டாளன்.

சிவா மோசமானவன்னு தெரிஞ்சிக்காம அவன வீடுவரைக்கும் வர விட்டது வினோத் தப்பு. சிவா போட்ட சொக்குபொடியில மயங்கி அவன் வலையில விழுந்தது லோகநாயகி தப்பு. இந்த லோகத்துல மனுசாள நம்பேவ முடியிறதில்ல மாமி. யாரு நல்லவா? யாரு கெட்டவா? ன்னே தெரிய மாட்டேங்கிறது. எல்லாரும் பாக்குறதுக்கு நல்லவா மாதிரிதான் தெரியுறா. ஆனா பழகிப்பாத்தா தானே தெரியுறது அவா, அவா யோக்கியைத என்னான்னு.

என்ன பொம்மனாட்டி இவா? இந்த சிவா ஆத்துக்கு வந்தாலே போதும் எல்லாத்தையும் மறந்து அவன் கூட பேச ஆரம்பிச்சிடுறா. அப்படி என்னத்த தான் பேசிப்பாளோ. நேக்கு ஒரு மண்ணும் புரியல. ஒரு தடவ இப்படித்தான் லோகநாயகி சிவா கூட பேசிட்டு இருந்தா. அப்போ அவ குழந்தைய தேள் கடித்திடுத்து. தொட்டில்ல கெடந்து அந்த பச்ச மண்ணு துடியா துடிச்சி அழுகுது. இது கூடவா அவ காதுல விழாம போகும்? அந்த அளவுக்கு பேசுறா. நல்ல வேள அந்த நேரத்துல பெருமாளா பார்த்து கோவிலுக்குப் போன அவா
மாமியார சீக்கிரம் அனுப்பி வைச்சிருக்காரு போல. அவங்க மட்டும் அப்போ வரலன்னா..... நெனச்சி பாக்கேவ நெஞ்சு பதறுது மாமி.

இதெல்லாம் நடந்ததுக்கு அப்புறம் தானே இன்னக்கி அவா மாமியா லோகநாயகிய கண்டிச்சாங்க. எங்க இவங்க இன்னும் இப்படியே கண்டிக்க ஆரம்பிச்சிட்டா நிம்மதி போயிடும். சிவா கூட பேச முடியாது. கள்ள காதல் வெளிய தெரிய வந்துருமோனு பயந்து அவாள கொல்ல துணிஞ்சிட்டா. அதனால தான் அந்த விஷம் கலந்த பால அவங்களுக்கு குடிக்க கொடுத்தா.
அவங்க அத குடிக்கிறதுக்குள்ள இந்த பாவிபய டிவிக்காரன் தொடரும்னு போட்டு முடிச்சிட்டான். இப்பல்லாம் டிவி சீரியேல பார்க்க முடியல மாமி.ரொம்ப விளம்பரமா போட்டு கொல்றா.


"ஏண்டி புவனா. குழந்த எவ்ளோ நேரமா பசியில அழுதுண்டு இருக்கு. நோக்கு இந்த டிவி சீரியல பத்தி பேச ஆரம்பிச்சிட்டா எதுவுமே காதுல விழாதோ டீ? நானும் எவ்வளவு பிராணண குடுத்து கத்தீண்டு இருக்கேன். கொஞ்சம் உள்ள வா டீ..."

அட! அட! அட! சித்த நேரமாவது என்ன நிம்மதியா இருக்க விடுதா இந்த கெழம். எனக்குன்னு மாமியாரா வந்து எம் பிராணத்த வாங்கீண்டு..... என் ஆத்துக்காரர்ட்ட இத ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்துட்டு நாம நம்மதியா இருக்கலாம்ன்னு பல தடவ சொல்லி பார்த்தாச்சி. அவரு கேக்குற மாதிரியே தெரியல. இன்னக்கி வரட்டும் அவரு.... ஹ்ம்.... நீங்க நாளக்கி மறக்காம நிஜங்கள் சீரியல் பாருங்கோ மாமி. நான் அப்புறம் வாரேன்.


ஒரு வழியாக புவனா வீட்டுக்குள் நுழைகிறாள். அவள் குழந்தை இன்னும் அழுகையை நிறுத்தியதாக தெரியவில்லை.

மதி
23-10-2012, 01:02 PM
கடைசி வரை...

மகாதேவன் மேல வாங்க.. என அழைத்த குரலைக் கேட்டு தலையை உயர்த்தினான் மகாதேவன். நான்கு பேர் நின்றிருந்தார்கள்.
நம்ம க்ளாஸ் ரூம் இதுதான் என்றான் ஒருவன் அருகிலிருந்த வகுப்பறையை சுட்டிக்காட்டியபடி

மகாதேவன் படிகளில் ஏறி வகுப்பறையை அடைந்தான். அங்கிருந்த நீளமான பெஞ்ச்களை பார்த்தபடியே "எங்க எக்ஸாம் நம்பரையே டேபிள்ல காணோம்.

அதெல்லாம் அப்படித்தான்.. சிரித்தபடி சொன்னான் ஒருவன்

யார் வேணா எங்க வேணா உட்காரலாம் என்றான் இன்னொருவன்

அந்த அறை முழுவதும் மாணவர்களின் பேச்சுக்களால் இரைச்சலாய் இருந்தது.

மகாதேவனுக்கும் உடனிருந்த நண்பர்களுக்கும் வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். டி.எம்.இ எனப்படும் இளநிலை பொறியாளர் படிப்பில் மூன்றாம் செமஸ்டர் தேர்வுக்காக வந்திருந்தனர். பி.டெக் தேர்வு எழுதுபர்களும் அங்கு இருந்தனர். எல்லோரும் சம்பந்தப்பட்ட பாடபுத்தகம் வைத்திருந்தனர். எல்லோரும் பகுதி நேர படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள்.

ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். மாணவமாணவிகள் ஒரு பெஞ்சுக்கு மூன்று பேர் வீதம் அமர்ந்தார்கள். ஆசிரியர் முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களிடம் விடைதாள்களை கொடுத்து "உங்களுக்கு ஒன்னு எடுத்துக்கிட்டு அப்படியே மத்தவங்களுக்கு பாஸ் பண்ணுங்க" என்றார். தொடர்ந்து, உங்க நம்பர், சப்ஜக்ட் கோட் நம்பர் எல்லாம் சரியா எழுதுங்க. என்றார்.

சரியாக 9.55க்கு ஒரு நபர் வந்து வினாத்தாள் கட்டுகளை கொடுத்து விட்டு போனார். 10.00 மணிக்கு மின்சார மணி சத்தம் கேட்டது. ஆசிரியர் முதலில் பி.டெக் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் வாங்கிக்கோங்க.. என வினாத்தாள்களை கொடுத்தார். அடுத்து டிப்ளமோ ஸ்டூடண்ட்ஸ் வாங்கிக்கோங்க... என கொடுத்தார்.

மகாதேவன் கேள்வித்தாளை ஒருமுறை முழுமையாக படித்தான். அவன் எதிர்பார்த்தது போல் எளிதாயில்லை. படித்தது எல்லாம் மறந்து போனது போல் ஒரு பதைப்பு. புத்தகத்தின் பக்கங்களை திருப்பும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அங்கிருந்த பலரும் புத்தகத்தை பார்த்து எழுத துவங்கியிருந்தார்கள். சிலர் விடைக்கான பக்கத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். மகாதேவன் தெரிந்த விடைகளை எழுதினான். மனதுக்குள் புத்தகத்தை எடுக்கலாமா வேண்டாமா என யோசனை.

அப்போது கையில் துண்டு சீட்டுடன் ஒருவன் வகுப்பறைக்குள் வந்தான். எல்லாம் கவனிங்க...இந்த கொஸ்ட்டின்ங்களுக்கு ஆன்சர் உங்க புக்லயே இருக்கு. டி.எம்.இ க்கு சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. கொஸ்ட்டின் ஒன்.. பேஜ் நம்பர் ட்வெண்ட்டி டூ. கொஸ்ட்டின் டூ பேஜ் நம்பர் சிக்ஸ்டி சிக்ஸ், கொஸ்ட்டின் த்ரீ பேஜ் நம்பர் நைண்ட்டி ஒன்.. என கேள்வித்தாளில் இருந்த பத்து கேள்விகளுக்கும் விடைக்கான பக்கங்களை சொன்னார். அது போலவே பி.டெக் கேள்விகளுக்கான விடைகளையும் சொன்னார். கடைசியில் "செக்கிங் வர்றப்ப யாரும் மாட்டிக்கிட்டா நாங்க பொறுப்பில்ல" என்றார்.

புத்தகத்தை பார்த்து எல்லோரும் விடைகளை எழுதினார்கள். நேரம் ஆக ஆக சிலர் "கை வலிக்குது..பாஸ் ஆக இது போதும்" என கமெண்ட் அடித்து சிரித்தவாறு விடைத்தாள்களை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு போனார்கள். எல்லோருடைய முகமும் மகிழ்ச்சியாயிருந்தது. இந்த படிப்பை முடித்தால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என பேசிக்கொண்டார்கள். அவர்களில் மத்திய, மாநில, மற்றும் தனியார் கம்பெனிகளில் பணிபுரிவோர்கள் இருந்தனர்.

மறுநாள் அடுத்த பரிட்சையிலும் இதே மாதிரி எழுத துவங்கும் நேரத்தில் அந்த நபர் வந்து விடைகளை சொல்லி விட்டு போனார். அன்று பரிட்சை முடித்து மகாதேவன் தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். ஆனால் மனதில் குழப்பம். இப்படியும் பாஸாகனுமா? இப்படியும் சர்ட்டிபிகேட் வாங்கனுமா? என துளைத்தது. ஆனா சர்ட்டிபிகேட்டுக்கு தனி மதிப்பு உண்டே.
பெயருக்கு பின்னால் பெருமையாக போட்டுக்கொள்ளலாமே.

அகத்தின் அழகு முகத்தில் தெரிய, இரவு சாப்பிடும் போது மனைவி கேட்டாள் "என்னங்க எக்ஸாம் கஷ்டமாயிருந்துச்சா"?
"ப்..ச்" என்றவாறு இல்லையென தலையசைத்தான்.

அன்று இரவு அவனுக்கு சரியான தூக்கம் வரவில்லை. கடந்த சிலமாதங்களாகவே தேர்வுக்காக படிப்பதால் தூக்கம் குறைந்து போனது. தெருவில் ஜன நடமாட்டம் இல்லை. தெருவிலே இரு புறமும் நடந்தான்.

மகாதேவன் பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் விடுமுறையில் மெயின் ரோட்டிலிருந்த லேத் (LATHE) பட்டறையில் உதவியாளராக சேர்ந்தான். அங்கேயே வெல்டிங் வேலையும் கற்றுக்கொண்டான். லேத்-தின் முன்பு நிற்க ஆரம்பித்தால் அவனிடம் கொடுக்கப்பட்ட வரைபடத்துக்கேற்ப லேத்தில் பொருத்தப்பட்ட இரும்பு உருளையை மாற்றாமல் அங்கிருந்து நகரமாட்டான். சில நேரம் ஆறு ஏழு
மணி நேரம் கூட ஓய்வில்லாமல் நின்றபடியே இருப்பான். இரும்பின் வெளிப்புறம் கண்ணாடி போல மாறிப்போகும் அவனிடம்.

வெல்டிங் செய்யும் போது புகைப்பட்டு அன்று இரவெல்லாம் கண்களில் நீராக வழியும். இரவு தைலத்தை லேசாக விரலில் தடவி இமைக்கு மேல் போட்டு படுத்துவிடுவான். அரைமணி நேரத்துக்கு கண்களில் எரிச்சல் ஏற்படும். பிறகு சரியாகிவிடும். மறுநாள் காலை வேலைக்கு செல்ல தவறியதில்லை. இரும்பு ஜன்னல்கள் கதவுகள் செய்யும்போது பனையின் மீது கிடத்தியிருக்கும் இரும்பு சட்டத்தின் மேல் வைத்திருக்கும் கட்ரு (உளி) மேல் சம்மட்டியை இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி ஓங்கி அடிக்கும் போது ஒரே அடியில் என்ன விட்டுடு என துண்டுகளாகி போகும். அவற்றை லிவர் ப்ளேட் மேல் வைத்து லிவரால் வளைக்கும் போது அவை அவன் கைக்கேற்ப்ப வளைந்து விரும்பும் வடிவமாக மாறும்.

சில சமயம் ஆஸ்பெஸ்டாஸ் ஓடு பதிக்கும் நேரங்களில் உயரமான இடங்களிலும் முக்கால் அடி அகல சுவரில் தரையில் நடப்பது போல் தயக்கமில்லாமல் நடப்பான். இரண்டு வருட தொழில் அனுபவத்துக்கு பிறகு அரசு ஐ.டி.ஐ யில் சேர்ந்து "டர்னர்" படிப்பு முடித்து சான்றிதழும் பெற்றான்.

தெருவில் நடந்து கொண்டிருந்த மகாதேவன் கையில் அதிர்ந்த அலைபேசியை பார்த்தான். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

ஹலோ..? என்றான்

ஹலோ மஹா... நான் நம்பி..நம்பி ராஜன் பேசுறேன்.

பத்து வருஷத்துக்கு முன்பு கேட்ட குரல். ஹே நம்பி.. எப்டிடா இருக்கெ..? ஆமா என் நம்பர் எப்டி கெடச்சது" கேட்டான் மகா

கிருபா குடுத்தான்..... ஒனக்கு ஒரு பையன் ஒரு பொன்னு இல்ல... பசங்க எப்டி இருக்காங்க. என்றான் நம்பி

எல்லாம் நல்லா யிருக்காங்க.. ஆமா ஒன்னோட ரெண்டு பொன்னுங்களும் சவுக்கியமா?

எல்லாம் நல்லாயிருக்காங்க... பரவாயில்ல ஞாபகம் வச்சிருக்கியே.

அப்புறம் நம்பி, வேலையெல்லாம் எப்டி போயிட்டிருக்கு..?

நா இங்க கோயம்பத்தூர்ல ஒரு கம்பெனில சைட் சூபர்வைசரா இருக்கேன். நீ எப்டி இருக்கே. பார்ட் டைம்ல டிப்ளமோ படிச்சியே..முடிச்சிட்ட இல்ல..?

இல்லடா பார்ட் டைம்ல படிக்கிறதெல்லாம் பெரிய டார்ச்சர்டா. அத அப்ப டிஸ்கண்ட்டினியூ பண்ணிட்டேன்.

ஏண்டா?

கம்பெனில வேலய முடிச்சிட்டு அங்க க்ளாஸ்க்கு போனா சில சமயம் மாஸ்டர் வரமாட்டாங்க. நாம கொஞ்சம் லேட்டா போயிட்டாலும் வெளியில்யே கொஞ்ச நேரம் நிக்க வச்சுதான் உள்ள வரச்சொல்லி கையசைப்பாங்க. பர்ஸ்ட் செமஸ்ட்டர்ல ஒரு சப்ஜட்டுக்கு ஒரே ஒரு நாள் தான் மாஸ்டர் வந்தாரு. மேக்ஸ் சொல்லவே வேண்டாம். அவ்ரு பாட்டுக்கு நடத்திக்கிட்டே போவாரு.
ப்ளஸ்டூ முடிச்சவங்களுக்கு மட்டும் கொஞ்சம் புரியும். நம்மல மாறி ஆளுங்களுக்கு புரியாது. டியூஷன் சேர்ற அளவுக்கு அப்ப வசதியுமில்ல. நேரமுமில்ல. ஒருமுறை செகண்ட் செமஸ்டர் அப்ப ஒரு சப்ஜக்ட்டுக்கு மாஸ்டரே வரல. ஹெச்.ஓ.டி க்கிட்டபோய் கேட்டோம். அவரு "மாஸ்டர் வரலன்னா நீங்க தாம்பா படிக்கனும். நீங்க கட்டுற பீஸ வச்சு ஒரு மயிரும் புடுங்க முடியாதுன்னாரு".
பார்ட் டைம் டீச்சர்ஸ்க்கெல்லாம் அப்ப அந்தளவுக்கு சேலரி இல்லையோ என்னமோ..?

"ஆமா..மா பார்ட் டைம்ல படிக்கிறதெல்லாம் அவ்ளோ ஈசியில்ல. நா ஐ.டி.ஐ முடிச்சிட்டு அடுத்த வருஷமே புல் டைம்ல டி.சி.இ சேர்ந்துட்டேன்..." என்றான் நம்பி

படிக்கனும்னு ஆசப்பட்டா மேரேஜ்ஜுக்கு முன்னாடியே படிச்சிடனும். மேரேஜ்ஜுக்கு அப்புறம் படிக்கிறதா இருந்தா வேற வேலைக்கு போகாம எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம இருந்தா தான் முடியும். என்றான் மகாதேவன்

நம்மல மாறி மிடில் க்ளாஸ்க்கு பிக்கலும் பிடுங்கலும் தான லைஃப் எனக்கூறி சிரித்தான் நம்பிராஜன். மகாதேவனும் சிரித்தான்.

சரி விடு மஹா.. பசங்கள நல்லபடியா படிக்க வை.

எங்க விட முடியுது..? ஒர்க் பண்ற எடத்தில எல்லாம் வேல தெரிஞ்சாலும் தெரியாட்டியும் படிச்சவங்களுக்கு ஒரு மரியாத, எங்களமாதிரி ஆளுங்களுக்கு ஒரு மரியாததான். படிச்சிருந்தா ஈஸியா ப்ரமோஷன் வாங்கலாம். இல்லன்னா கஷ்டம் தான்.

ஆமா..மா இங்க கன்ஸ்ட்ரக்சன் சைட்ல காலம்பூரா ஒழச்சு குடும்பத்த, பிள்ளைங்கல காப்பாத்துற சித்தாளு பெரியாளுங்கள வா போன்னு பேசுவோம். அவுங்க வயசானவங்களா இருப்பாங்க. அதே புதுசா அப்பதான் டி.சி.இ முடிச்சிட்டு வருவாங்க அவுங்கள சார்..ம்பாங்க..மேடம்..பாங்க" என்ற நம்பியின் குரலில் வருத்தம் தொனித்தது.

இங்க நம்ம நாட்டில உழைக்கிறவனுக்கு மரியாத யில்ல. சட்டையில அழுக்குப் படாம வேல செய்றவனுக்கு தான் மதிப்பு. ஒடம்பு வலிக்க உழைக்கிறவன கீழ்சாதிக்காரனா பாக்கிறவங்க நம்ம ஆளுங்க. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால நம்ம ஐ.டி.ஐக்கு போயிருந்தேன். கொஞ்சம் கூட ஒரு டெவலப்மெண்ட் இல்ல. அந்த காம்பவுண்ட் வேலியெல்லாம் விழுந்து கெடக்கு.
என்றான் மகாதேவன்.

இங்க நம்மூர்ல ஐ.டி.ஐ படிப்புக்கெல்லாம் மதிப்பு இல்ல. பீ.ஏ...பீ.காம்னு ஏதாவது டிகிரி கோர்ஸ் படிச்சிட்டு, கெடச்ச வேலய செய்துக்கிட்டு, இல்லாட்டி வேலயா கெடைக்காம இருக்கிறவன் கூட கல்யாண பத்திரிக்கையில பேருக்கு பின்னாடி பீ.ஏ.. பீ.காம்னு போட்டுக்குவான். ஆனா ஐ.டி.ஐ படிச்சவன் எத்தன பேரு வெல்டர், டர்னர், ஃபிட்டர்னு போட்டுக்கிறான்..? நீயே கூட போட்டிருக்க
மாட்ட.." என்றான் நம்பி

ம்.. அதத்தான் நானும் சொல்றேன். அந்த படிப்புக்கு மரியாத இருந்தா தான போட்டுக்கு முடியும். ஒருமுறை டிப்ளமோ ஸ்டூடண்ட்டு ஒருத்தன இண்டர்வியூ பண்ணோம். எங்க மேனேஜர் நாலஞ்சு கேள்வி கேட்டார். ஒன்னுத்துக்கும் பதில் சொல்லல. கடைசியா சர்க்கிளுக்கும் பை ஆர் ஸ்கொயருக்கும் என்ன ரிலேசன்னு கேட்டார். அதுக்கும் பதில் சொல்லல. சரி நாங்க லட்டர்
அனுப்புறோம்னு சொல்லி அவன அனுப்பி வச்சார் மேனேஜர்." என்றான் மகா.

இப்பல்லாம் எங்க ஒழுங்கா படிச்சிட்டு வந்து எக்ஸாம் எழுதுறாங்க. ரொம்ப பேர் பிட் அடிச்சுதான் எழுதுறாங்க. என் சிஸ்டர் டீச்சரா இருக்காங்க. அவுங்க வந்து சொல்வாங்க. பொண்ணுங்க கூட சூப்பரா பிட் அடிக்கிறாங்களாம். அதும் சுடிதார் டிரஸ் கால்கிட்ட ரொம்ப லூஸா இருக்கிறதால தொடைக்கு அடியில வச்சு மறச்சுக்குவாங்களாம். எழுதுறப்ப தொடைக்கு மேல வச்சு துப்பட்டாவில
மறச்சுக்கிதுங்களாம். அவ்வளவு ஏன் போலிஸ் டிபார்ட்மெண்ட்டில இருந்து எக்ஸாம் எழுத வர்றவங்க கூட பிட் அடிக்கிறாங்களாம். என்றான் நம்பி.

நம்பி, நா இப்ப இங்க ஒரு காலேஜ்ல டி.எம்.இ சேந்திருக்கேன். எக்ஸாம் ஹால்ல அப்டியே புக்க டேபிள் மேல வச்சு தான் எல்லாரும் எக்ஸாம் எழுதுறாங்க. நா ஹால் டிக்கட் வாங்க போனப்ப தான் ஒருத்தன் பி.டெக் சேந்தான். அவங்கிட்ட காலேஜ் ஆள் சொன்னாங்க "நீங்க ஃபீஸ கட்டிட்டு எக்ஸாம் அட்டண்ட் பண்ணுங்க. கட்டாயம் நீங்க பாஸ் ஆயிடுவீங்க அவ்ளவுதான் நாங்க
சொல்ல முடியும்னாங்க. அந்த படிக்க வந்த ஆளு "எப்டீங்க க்ளாஸே அட்டண்ட் பண்லயென்னு" கேட்டான். அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்னாரு அந்த காலேஜ் ஆளு. எனக்கு அப்ப ஒன்னும் புரியல. எக்ஸாம் ஹால்ல தான் புரிஞ்சுது....... என் தலையெழுத்து நானும் அப்படித்தான் எழுதினேன். என பெருமூச்சு விட்டான் மகா.

சரி விடு. ரொம்பல்லாம் ஃபீல் பண்ணாத, இப்பல்லாம் நியாயத்துக்கு மதிப்பில்ல. தைரியமா தப்பு பண்றது கூட இப்ப ஒரு க்வாலிஃபிகேஷன்" என்றான் நம்பி

மகாதேவன் விரக்தியாய் சிரித்தான்.

மறுநாள் காலை வழக்கமாக வேலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தான் மகாதேவன். "என்னய்யா பரிச்சைக்கு போகலயா?" என்றார் அவனுடைய அப்பா.

அந்த பரிச்சய எழுதி பாஸ் ஆனா அது எனக்கு அசிங்கம்ப்பா. அங்க எல்லாரும் புக்க பாத்து எழுதுறாங்கப்பா. அப்படி புக்க பாத்து எழுதி நானும் படிச்சிருக்கேன்னு பட்டம் வாங்குறத விட நான் படிக்காதவனாவே இருந்துட்டு போறேன். இப்படி பொய் சர்ட்டிஃபிகேட் வாங்கி தான் எனக்கு எங்க கம்பெனியில ப்ரமோஷன் கெடைக்கும்னா எனக்கு அந்த ப்ரமோஷனே வேண்டாம்"
என்ற போது மகாதேவன் கண்கள் கலங்கி குரல் தடுமாறியது. மூக்கை உறிஞ்சி கொண்டு பெரு மூச்சு விட்டான்.

எவன்னா எப்படின்னா எழுதிட்டு போறான், நீ படிச்சு எழுத வேண்டியது தானய்யா. என்றார் அப்பா

எனக்கு அந்த எக்ஸாம் ஹால பாக்கவே அருவருப்பா இருக்குப்பா என்ற போது அவன் கண்ணிலிருந்து நீர்த்துளி விழுந்தது.

அந்த காலேஜ்ல கட்ட பன்னெண்டாயிரம் கடன் வாங்கியிருந்தியே அத அடச்சிட்டியா..? என்றார் அப்பா வருத்தத்துடன்.

போன மாசமே அடச்சிட்டேன்ப்பா. என்றான் மகா.

கடந்த சில மாதங்களாய் படிப்புக்காக நேரம் செலவிட்டதால் வேளையில் சற்று கவனம் குறைந்திருந்தான். இப்போது அந்த சுமை இல்லை. வழக்கம் போல் வேலையில் கவனம் செலுத்தினான். சார்ஜண்ட்டாக இருந்தவன் அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு அலுவலகத்தில் சூபர்வைஸராக பதவி உயர்வு பெற்றான். பொதுவாக டிப்ளமோ முடித்தவர்களுக்கு மட்டுமே அந்த பதவி கிடைக்கும்.
அவனே கூட எதிர்பாரதது. கிடைத்து விட்டது. நேர்மைக்கும் உழைப்புக்கும் அனுபவத்துக்கும் என்றைக்கும் மதிப்பிருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால்...!

ஆனால் அலுவலக கலந்தாய்வு கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேச வேண்டிய எழுத வேண்டிய அவசியம் இருந்தது. பலவிதமான பொறியியல் கணக்குகள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆங்கிலத்தில் வருகிற கடிதங்களை புரிந்து அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் எழுத வேண்டியிருந்தது. அவையெல்லாம் பெரிய சவாலாய் இருந்தது அவனுக்கு.

ஒருநாள் இதையெல்லாம் நினைத்தவாறே மேற்கொண்டு படிக்கலாமா..? வேண்டாமா? என யோசித்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான். சாலையில் வாகன நெருக்கம் அதிகமாய் இருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின் பக்கம் எழுதப்பட்டிருந்த வரிகளை படிக்க நேர்ந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வரிகள்...

"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை கல்வி"


அந்த நீளமான சாலையின் முனை வரை அந்த ஆட்டோ அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது.
மகாதேவன் தன் வண்டியை கல்லூரி இருக்கும் பாதையை நோக்கி செலுத்தினான்.

மதி
23-10-2012, 01:07 PM
யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?


"அம்மா! இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்க?"."அந்த மேசை மேல தான் இருந்துச்சு! நால்லா தேடிப் பாரு!!".
நானும் அரைமணிநேரமாகத் தேடுகிறேன்.கிடைக்கவில்லை.

ராசியான பேனா! எவ்வளவோ ஸ்டைலா புது புது பேனா வந்தாலும்,இந்த பேனா மேல எனக்கு காதல் அதிகம்!ஐந்து வருட பிணைப்பு எங்களுக்குள்! அழகான என் எழுத்துக்கள் என்றும் அழகாக இருக்க வேண்டி, என் அப்பா வாங்கித்தந்த பேனா அது.
அந்தப் பேனாவினால் எழுதத் துவங்கினாலே,எழுத்துக்கள் உயிர் பெற்றது போல எனக்குள் உணர்வு வரும்.அது விவரிக்க முடியாத இன்பம்!அந்தப் பேனாவைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

"பேனா கிடைச்சுதா?" என்ற கேள்வியோடு அம்மா என் அறைக்குள் வந்தாங்க.இருவருமாக அலமாரி,மேசை,படுக்கை என எல்லா இடங்களிலும் தேடினோம்.சிறிது நேரத்துக்கு பிறகு, அம்மா ஏதோ நியாபகம் வந்தது போல, "அடடா..மறந்தே போய்ட்டேன்!நீ காலையில ஆபிஸ் போனதுக்கு அப்புறம், காமாட்சி அக்கா வந்துச்சு. ஏதோ அவங்க பொண்ணுக்கு லோன் வாங்க விண்ணப்பம் பூர்த்தி செய்யனும்னு பேனா கேட்டுச்சு. நானும் அந்த பேனாவை எடுத்துக் குடுத்திட்டேன்.இன்னும் கொண்டு வந்து தரலை..நானும் வேலையா இருந்ததால, மறந்தே போய்ட்டேன்!!","அந்த பேனாவை எதுக்குமா குடுத்த?" என்று கூறிவிட்டு கோபத்தோடு வாசலை நோக்கிச் சென்றேன்."மணி ஆறு ஆகிடுச்சு! அவங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க! போய் வாங்கிட்டு வந்துடு..இனிமே நான் யாருக்கும் குடுக்கல டா! கோபப்படாதே!",என்ற அம்மாவின் குரல் வாசல் வரை கேட்டது.

காமாட்சி அக்கா வீடு, எங்க வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கிறது.எங்க தெருவில் மொத்தமே 6 வீடுகள் தான், அதில் படிச்ச உயிர்கள் ரெண்டு பேர் தான். ஒன்னு நான். இன்னொன்னு, காமாட்சி அக்கா பொண்ணு யமுனா.நான் படிச்சு முடிச்சு வேலைல இருக்கேன். யமுனா கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.நல்ல குடும்பம்.லேசான பனிக்காற்று, கார்த்திகை மாதம் என்பதை நினைவுப்படுத்தியது.
காமாட்சி அக்கா வீட்டுக்கு வெளியே கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.என்னைப்பார்த்ததும்,"தம்பி! வாங்க.இப்ப தான் யமுனா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.உள்ள வாப்பா!",நான் வாசலில் நுழைந்தபோது அடுத்த கட்டளை,"யம்மு!!! குமார் அண்ணனோட பேனாவை எடுத்துட்டு வா!" என்று சொல்லியபடிதுணிகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்."அண்ணா! எப்படி இருக்கீங்க?",இது யமுனா."நல்லா இருக்கேன் யம்மு.காலேஜ் எப்படிப் போகுது?"என்றபடி பேனாவை வாங்கிகொண்டேன்."காலேஜ் ஜாலியா போகுது.பரீச்சை வந்தா தான் கடுப்பா இருக்கும்!" ,"அது அப்படித்தான். கல்லூரி முடிச்சதுக்கு அப்புறம்,இந்த எரிச்சல் கூட சிரிப்பூட்டும்!"என்றேன்.அவள் சிரித்தாள்.

சிறிது நேரப் பேச்சுக்குப் பின்னர், காமட்சி அக்கா கொடுத்த தண்ணீரை பருகிவிட்டு வெளியே வந்தேன்.பேனா எனது சட்டைப் பையில்.
வீடு வந்து சேரும் போது மணி 7. ஒரு கதை எழுத நினைத்து தான் அந்த பேனாவைத்தேடினேன்.உடை மாற்றிக்கொண்டு, வெள்ளைத்தாளுடன் மொட்டை மாடியில் அமர்ந்து யோசிக்கத்துவங்கினேன்."வந்து சாப்பிடு டா! மணி எட்டாகப் போகுது." அம்மாவின் குரல் கற்பனைகளைக் கலைத்து விட்டது. "இப்ப தாம்மா வந்தேன்.அதுக்குள்ள என்னசாப்பாடு?பசிக்கல.நான் அப்புறமா சாப்பிடுறேன்!",என்றேன் கோபமாக. அப்படி சொன்னேனே தவிர பசி வயிற்றைக் கிள்ளியது.ஒரு வரியாவது எழுதிவிட்டு சாப்பிடப் போலாம் என அமர்ந்திருந்தேன்.

நிலா,வானம்,நட்சத்திரம்,மேகம் எனப்பார்த்த எனக்கு,கதை எழுதும் எண்ணம் மாறி, கவிதை எழுதத் தோன்றியது.
"நிலவே! உனக்கும் எனக்கும் இடையில் உணர்வுப்பாலமாய் என் கவிதை" எனத்துவங்கிய போது பசி உணர்வு மேலோங்கிவிட்டது. பேனாவையும், தாளையும் மேசை மேல் போட்டுவிட்டு அவசர அவசரமாக சாப்பிடச் சென்றேன்.உண்ட மயக்கம். உடனடி உறக்கம்.
காலை எழுந்து அலுவலகம் செல்லும் அவசரத்தில் இரவு நடந்த கவிதை முயற்சி மறந்தே போய்விட்டது.

மாலையில் வீட்டுக்கு வந்த உடன் மீண்டும் தேடினேன்.
"அம்மா! இந்த மேசை மேல வச்சிருந்த என் பேனாவை பார்த்தீங்களா"!!


"மறதி, நம் தேசிய வியாதி"

மதி
07-11-2012, 09:12 AM
மன்ற உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்

கதைப்போட்டிக்கான வாக்கெடுப்பு தொடங்கிவிட்டது. போட்டியில் இருக்கும் 29 கதைகளுள் உங்களுக்குப் பிடித்த 4 கதைகளுக்கு ஒரே தடவையில் வாக்களிக்கவும். நான்கிற்கு அதிகமாகவும் குறைவாகவும் இடப்பட்ட வாக்குகள் செல்லாத வாக்குகளாக கணக்கில் கொள்ளப்படும். (தயது செய்து இதை வாக்களிக்கும் போது கவனத்தில் கொள்ளவும்).:cool::cool:

வாக்கெடுப்பு நவம்பர் 30ம் தேதி முடிவடையும். வாக்களித்தவுடன் 'வாக்களித்தாயிற்று' என இத்திரியில் தெரியப்படுத்தவும்.

வாக்களிக்கத் தொடங்குவீர்.. சிறந்த கதையாசிரியர்களைத் தேர்ந்தெடுப்பீர்!! :icon_b::icon_b:

கலைவேந்தன்
07-11-2012, 01:10 PM
வாக்களித்துவிட்டேன்.

ந.க
07-11-2012, 02:42 PM
வாக்களித்துவிட்டேன்.

க.கமலக்கண்ணன்
07-11-2012, 04:59 PM
வாக்களித்துவிட்டேன். அனைவரும் வாக்களிக்கவும்...

கோபாலன்
07-11-2012, 07:38 PM
நானும் வாக்களித்துவிட்டேன் . :)

கீதம்
08-11-2012, 03:07 AM
வாக்களித்துவிட்டேன். :icon_b:

குருதவசி
08-11-2012, 10:40 AM
வாக்களித்துவிட்டேன்

கலையரசி
08-11-2012, 01:53 PM
வாக்களித்து விட்டேன். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நாஞ்சில் த.க.ஜெய்
08-11-2012, 05:26 PM
சிறப்பான கதைகளின் அணிவகுப்பு ..வாக்களித்து விட்டேன்..கலந்து கொண்ட கதாசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்....

shreemurali
09-11-2012, 11:17 AM
I voted thanks for the opportunity

முரளி
09-11-2012, 12:26 PM
வாக்களித்து விட்டேன். வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

wilsongnanasingh
09-11-2012, 03:25 PM
வாக்களித்துவிட்டேன்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
11-11-2012, 04:22 PM
வாக்கு அளித்தாயிற்று. நன்றி

மஞ்சுபாஷிணி
13-11-2012, 06:57 PM
வாக்கு அளித்துவிட்டேன்பா.. அன்புநன்றிகள்...

அனுராகவன்
14-11-2012, 02:32 PM
வாக்களித்துவிட்டேன்

puduvai.ve.senthil
15-11-2012, 08:10 AM
அப்பாடா... வாக்களித்துவிட்டேன்... என் கடமை முடிந்தது. நன்றி....

PUTHUVAI PRABA
15-11-2012, 10:54 PM
வாக்களித்துவிட்டேன்.

Keelai Naadaan
18-11-2012, 11:08 AM
நானும் வாக்களித்து விட்டேன். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கலையரசி
21-11-2012, 01:05 PM
இன்று வரை 27 பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட 29 க்தாசிரியர்கள் கூட இன்னும் வாக்களிக்கவில்லை போலிருக்கிறதே!

கதைப்போட்டிக்கு வாக்களிப்பது பற்றி மன்றப்பண்பலையில் அவ்வப்போது அறிவிப்புக் கொடுக்கலாமே மதி?

மதி
21-11-2012, 01:48 PM
நல்ல யோசனை அக்கா.. பதிவு செய்கிறேன்.. :icon_b:

M.Jagadeesan
21-11-2012, 03:41 PM
வாக்களித்துவிட்டேன்!

மதி
23-11-2012, 04:36 AM
இன்னும் ஒரு வாரமே உள்ளது.. உங்கள் விருப்பக் கதைகளை தேர்வு செய்து வாக்களிப்பீர்... சிறந்த கதாசிரியர்களை அடையாளம் காண்போம்..

நன்றி.. !!

மஞ்சுபாஷிணி
23-11-2012, 10:15 AM
இன்று வரை 27 பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட 29 க்தாசிரியர்கள் கூட இன்னும் வாக்களிக்கவில்லை போலிருக்கிறதே!

கதைப்போட்டிக்கு வாக்களிப்பது பற்றி மன்றப்பண்பலையில் அவ்வப்போது அறிவிப்புக் கொடுக்கலாமே மதி?

இது நல்ல யோசனைப்பா...

சுகந்தப்ரீதன்
25-11-2012, 04:19 PM
மன்ற மாமணிகளே... போட்டி கதைகளோ 29.. இதுவரை விழுந்த வாக்குகளோ வெறும் 30.. வாக்கெடுப்பு நிறைவுபெற இன்னும் ஐந்துநாட்களே மீதமிருக்கும் நிலையில்.. சிரமம் பாராது அனைவரும் விரைந்து வந்து தங்களின் பொன்னான வாக்குகளை இங்கே பதிந்து படைப்பாளிகளை ஊக்குவிக்கமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்..!!:icon_b:

கலைவேந்தன்
28-11-2012, 07:49 AM
வாக்களிப்பின் எண்ணிக்கை 30 ஐத் தாண்டவே இல்லை இன்னும். வாக்களிக்காதோர் விரைவில் வாக்களிக்க வருக.

pk_muthukumaran
29-11-2012, 04:50 PM
அன்பரே, வாக்களித்தாயிற்று.

A Thainis
29-11-2012, 07:06 PM
வாக்களித்தேன்,

நற் சிந்தனையில் கடைந்தெடுத்த அழகான கதைகள் அனைத்தும், இக்கதைகளை படைத்திட்ட கதைமாந்தர் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

மதி
30-11-2012, 01:15 AM
இன்றுடன் வாக்களிப்பு முடிவடைகிறது. விரைந்து வாக்களியுங்கள்....:icon_b:

இன்பக்கவி
30-11-2012, 09:27 AM
வாக்களித்துவிட்டேன்!