PDA

View Full Version : "வள்ளுவனுடன் விஜயன்" - முரளி



முரளி
31-10-2012, 11:54 AM
விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை. அவன் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை. எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை சொன்னால்? யாருக்கு வேண்டும் இவனது வெட்டி வேதாந்தமும், வறட்டு நடையும்.

இவனது கதைகளை, இவனாலேயே படிக்க முடியவில்லை. அவ்வளவு வள வள.! இவனது கவிதையை திட்டி அனுப்பியிருந்தார்கள், அடிக்காத குறைதான். அபத்த களஞ்சியம்.

இதில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அவனது மனைவி “ஏங்க!ஏன் இப்படி இருக்கீங்க? உங்களை யாரு கதை எழுதலேன்னு அடிச்சாங்க? ஒண்ணு மோட்டு வளையை பாக்கிறீங்க. இல்லே தூங்கி போயிடறீங்க? உருப்படியாக வேறே ஏதாவது வேலையை பாருங்க”.

“வராது! வராது! கதை எனக்கெழுத வராது!” அலுத்துக்கொண்டான் விஜயன், தலையில் அடித்துக்கொண்டு திருவிளையாடல் தருமி மாதிரி. சீத்தலை சாத்தனார் போல் தலை வீங்கி விட்டது. ‘கடவுளே எனக்கு உதவி செய்ய மாட்டாயா’? கவலையில் அப்படியே நாற்காலியிலேயே தூங்கியும் போய்விட்டான்.

****

யாரோ விஜயனைத் தட்டி எழுப்பியது போலிருந்தது. விழித்தால் எதிரே ஒரு நீண்ட தாடியுடன், கையில் சுவடோடு. திருவள்ளுவர். “எழுந்திருப்பா! உனக்கு உதவி செய்யத்தான் இறைவன் என்னை அனுப்பினார்”

“ வாங்க! வாங்க ! கடவுள் வரவில்லையா?”

“தருமிக்குத்தான் அவர் போவார். உன்னைப் போன்ற கருமிக்கு நானே போதும்” வள்ளுவரின் ஹாஸ்யம் விஜயனுக்கு சிரிப்பு வரவில்லை. அவனுக்கு நகசுத்தி கூட வரும், ஆனால் நகைச்சுவை மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது.

“பரவாயில்லே! உங்களை பார்த்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!” விஜயன்.

“பேசும்போது நன்றாகத்தான் பேசறே! எழுதும் போது மட்டும் கோட்டை விட்டுடறே!” நகைத்தார் ‘நட்பு’ எழுதிய நாயகன்.

உங்களைப்பார்த்தால் கொஞ்சம் சோர்வாகத்தேரிகிறதே! கொஞ்சம் மோர் குடியுங்கள்” உபசரித்தான் விஜயன்.

“அதை ஏன் கேட்கிறாய் அப்பா! குண்டும் குழியுமாக அண்ணா நகர் வரதுக்குள்ளே சே! என்னா நகர் என்று ஆகி விட்டது.” என்று அங்கலாய்த்தார். “எங்க சங்க கால மண் சாலையே தேவலை போலிருக்கு. நகரம் இல்லே இது! நரகம்! ”

ஆமோதித்தான் விஜயன். “ ஆம் வள்ளுவரே! நாங்க கொஞ்சம் கொஞ்சமாக கற்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம் வீட்டில் மெழுகு வர்த்தி, கை விசிறிதான்- கரண்ட் என்பது காணாமலே போச்சு”

“சரி! சரி! அரசியலை விடு! விஷயத்துக்கு வருவோம்” என்று பேச்சை மாற்றினார் வள்ளுவன். ராஜதந்திரி அல்லவா!

“உன்னோட பிரச்னை என்ன ? கதை எழுத வரலே! கவிதை சுத்தமா வரேலே! அவ்வளவு தானே! நான் சொல்றபடி செய். நன்கு வரும்.” வள்ளுவர்

“என்ன பண்ணனும்?”- விஜயன்.

“முதல்லே நிறைய படிக்கணும்! ஐந்து வரி எழுத ஐயாயிரம் வரி படிக்கணும். அப்புறம் தான் எழுதவே ஆரம்பிக்கணும்”

“அய்யோடா! கல்லூரியிலேயே கஷ்டப்பட்டு படிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்தினேன். படிக்க கஷ்டப்பட்டு உத்தியோக உயர்வு வேண்டாமென்று சொல்லிவிட்டேன். என்னைப் போய்..” இழுத்தான் விஜயன்.

வெகுண்டார் வள்ளுவன். “படிக்காமல் கதை பண்ணினால், கவிதை சொல்ல நினைத்தால் காய்ந்து தான் போவீர்கள்.- சாடினார் ‘சான்றாண்மை’ சொன்ன பிரான்.

“சரி!. நிறைய படிக்கிறேன்! அப்புறம் எழுதறேன். மேலே சொல்லுங்கள்”

“இரண்டாவது: எழுதப் போற பிரச்சினை என்ன என்பதை முத்லில் தெரிந்து கொள். அந்த பிரச்னையை நன்றாக அலசு. மற்றவர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார். எதை,எப்படி,எப்போது சொல்லவேண்டுமோ அப்படியே சொல்லும் திறனை வளர்த்துக்கொள்.” அழகாக ஆரம்பித்தார் வள்ளுவன்.

கொஞ்சம் புரிந்தது போலிருந்தது விஜயனுக்கு. தனது தவறு தெரிந்தது.

“மூன்றாவது: சொல்லும் விஷயத்தை அழகாக, கூடிய வரையில் அந்த மொழியிலேயே சொல். சுருக்கமாக சொல். அவ்வையிடமிருந்து கற்றுக்கொள். இரண்டு வரியை இருபதாக்க இது என்ன மெகா சீரியலா?”

சிரித்தான் விஜயன். என்னை சொல்லிவிட்டு இவரே தங்கலிஷ்லே பேசறாரே.

வள்ளுவர் சொன்னார் “ சிரிக்காதே அப்பனே!. சில விஷயங்களை தமிழ்ப்படுத்தினால், படிப்பவர் பாடு பெரும் பாடு.”

“இல்லை! இல்லை! மேலே சொல்லுங்கள்”

வள்ளுவர் தொடர்ந்தார்.

“நான்காவது: நான் எழுதிய “பயனில சொல்லாமை” 20வது அதிகாரத்தில் வரும் குறட்களை கடைப்பிடி. “சொல்லுக சொல்லின் பயனுடைய : சொல்லற்க சொல்லின் பயனிலா சொல்” இந்த குறள் புரிந்ததா?”

“அப்புறம் எனது 65வது அதிகாரம் “சொல்வண்மை” படித்து நிற்க அதற்கு தக. கட்டாயம் எல்லாக் குறளும் படி.

எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ, அப்போதெல்லாம், நல்ல சிறந்த கதைகளை, கவிதைகளைப் படி. குப்பைகளை வெட்டி எறி. அதுவே நீ உருப்பட வழி”

“அப்படியே ஆகட்டும் ஐயா!”- வேறு என்ன சொல்ல.

"சொல்ல மறந்துவிட்டேன். இயற்கையை ரசிக்க கற்றுக்கொள். உனது அனுபவம் உனக்கு கை கொடுக்கும். உளறிக் கொட்டுவதை தவிர். மக்களை அவர்களது கலாச்சாரத்தை புரிந்து கதை சொல்"

'!' - வாயைப் பிளந்தான் விஜயன். இவ்வளவு இருக்கா?

“வாயை மூடு. இங்கு கொசு அதிகம் . உள்ளே போய்விடும். நான் வருகிறேன்!” எழுந்தார் குறள் கொடுத்த கோமகன்.

****

நச்சென்று தலையில் ஒரு அடி. விழித்தால் மனைவி. கையில் தோசைக் கரண்டியுடன். “கடைத்தெருவுக்கு போய் காய் வாங்கிட்டு வாங்கன்னு கரடியாய் கத்தறேன்! கனவு கண்டுகிட்டா இருக்கீங்க!. முதல்லே கெளம்புங்க!”

எழுந்து விட்டான் விஜயன். . முதலில் மற்றவர் எழுதியதை, நல்ல விஷயங்களை படிக்க முடிவு செய்து விட்டான். முக்கியமாக வள்ளுவன் தந்த குறளை. இனி கதை எழுதி கண்டவர் வாயில் விழுவதில்லை.

அவனது முடிவு நல்ல முடிவு என்றே தோன்றுகிறது,

குறைந்த பட்சம் வாசகர்களுக்கு ......ஒரு துன்பம் குறைந்தது..

முற்றும்...

*****

மதி
31-10-2012, 12:04 PM
கதையமைப்பு அழகாய் இருந்தது. உங்கள் பார்வையில் கதை எழுதுவது பற்றி நன்றாகவே சொல்லிருக்கீங்க. முற்றும் போட்டுட்டுட்டேனு கதை எழுதாம இருந்துடாதீங்க. படிக்க நாங்க இருக்கோம். தொடர்ந்து எழுதுங்க.

jayanth
31-10-2012, 12:24 PM
விகடக் கதை...

நன்றகாக இருந்தது...!!!

arun
31-10-2012, 04:12 PM
கதை எழுதாமல் இருக்க ஒரு கதையை எழுதி இருக்கீங்க நன்றாக இருந்தது பாராட்டுக்கள்

கீதம்
01-11-2012, 01:53 AM
கதை எழுதத் தேவையான உத்திகளை அழகாக நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள். இல்லையில்லை, வள்ளுவர் சொல்லியிருக்கிறார். இப்படி ஆளுக்காள் வலைப்பூவோ, இணையதளமோ வைத்துக்கொண்டு எழுதித் தள்ளுவார்கள் என்று அன்றே தெரிந்திருந்தால் வள்ளுவர் அதற்கும் அப்போதே குறள்களை இயற்றியிருந்திருப்பார். இப்படி கஷ்டப்பட்டு அண்ணா நகர் வந்து தூங்குபவனை எழுப்பிச் சொல்லியிருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. :) மிகவும் அழகான நடையில் அருமையான கதை. பாராட்டுகள்.

M.Jagadeesan
01-11-2012, 03:15 AM
உங்களுடைய கதையும், கற்பனையும் நன்றாக உள்ளது. தொடர்ந்து உங்களுடைய படைப்புகளைப் படிக்க ஆவல்.

சிவா.ஜி
01-11-2012, 07:33 AM
அருமையான, சரளமான நடை. வித்தியாசமான கதைக்கரு இவையெல்லாம் உங்களிடமிருந்து மேலும் பல சுவாரசியமான கதைகளை எதிர்பார்க்க வைக்கிறது. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் முரளி.

சுகந்தப்ரீதன்
01-11-2012, 08:09 PM
நையாண்டியாய் வார்த்தைஜாலம் காட்டி வள்ளுவரின் உதவியுடன் கதை எழுதுவது எப்படி என்று வாசகர்களுக்கு கற்று தந்திருக்கிறீர்கள் முரளியண்ணா..!!:)

இக்கதைமூலமா நாங்க உங்ககிட்ட ரொம்ம்ம்ம்ம்ப எதிர்பார்க்குறோமாக்கும்..!!:icon_b:

முரளி
02-11-2012, 03:56 AM
மிக்க நன்றி சுகுந்த ப்ரீதன் .. இதில் வேடிக்கை என்னவென்றால் என்னைப் போன்ற குருடன் இன்னொரு அந்தகனுக்கு வழி காட்ட நினைப்பது தான். .என்னைப் போன்ற புதுமுகங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் கதை கவிதை எழுதுவதில் பொதிந்திருக்கிறது . உங்களைப் போன்ற பண்பட்டவர்களின் வழி காட்டுதல் நிச்சயம் தேவை.

முரளி
02-11-2012, 04:28 AM
கீதம் அவர்களே, ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள். நன்றி..

வாயில் வைக்க முடியாத எனது பண்டங்களையும் "ஆஹா! பேஷ்! பேஷ்! ரொம்ப பிரமாதம்!" என்று அங்கொன்று, இங்கொன்றாக ஓரிருவரைத் தவிர, ஒட்டு மொத்தமாக பாராட்டுவது, மன்றத்தின் பண்பட்டவர்கள், தூண்களின் உயர்ந்த எண்ணங்களை பிரதிபலித்தாலும், உண்மை அதுவல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இத்தகைய பாராட்டுக்களை நம்புவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அந்த எண்ணத்தின் எதிரொலி தான் இந்த கதை.

குறை சொல்லுங்கள். அது குறையல்லவே..பின்னூட்டம் என்பது பாராட்டுக்கு மட்டுமல்லவே?

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த மன்றம் எனக்கு நிறைய வழி காட்டியது. என்னைப் போன்ற நிறைய புகு முகங்களை வழி நடத்தும். பாராட்டுக்கள். மெய்யாலுமே பாராட்டுக்கள்...

முரளி
02-11-2012, 05:08 AM
நன்றி மதி, நிச்சயம் தொடருவேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

மதி
02-11-2012, 05:33 AM
சில நாட்களிலேயே மன்றத்தை நன்றாக புரிந்துள்ளீர் முரளிதரன். வெறும் பாராட்டாக இல்லாமல் தட்டிக்கொடுத்து குறைகளை களைய சொல்லும் மன்றத்தின் பின்னூட்டங்கள். படைப்பாளிகளைப்போலவே சிறந்த விமர்சகர்களும் மன்றத்தில் இருக்கிறார்கள். போகப்போக மேலும் புரிந்துகொள்வீர்கள்.

மேலும் எழுதுங்கள்.

pk_muthukumaran
02-11-2012, 05:49 AM
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானான எனக்கு தங்கள் கதை நிறைய கற்பித்திருக்கிறது.
தங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி.... தொடர்ந்து எழுதுங்கள்...

முரளி
02-11-2012, 06:16 AM
வாருங்கள் நண்பரே.. இருவருமே ஒரே படகில்தான் பயணிக்கிறோம். சொல்லப்போனால், நீங்க முந்தாநாள் பெஞ்ச மழைக் காளான். நான்தான் நேத்தைய காளான். காளானுக்கு ரெண்டு சுழி ன வா மூணு சுழி ண வா. :lachen001:


இந்த கதை எனக்கே ஒரு பாடமாக இருக்கட்டும் என நினைத்தேன். தங்களுக்கும் ஒரு செய்தியாக இருந்தால் மிகவும் சந்தோஷம். எனது கதை உங்களை ஏதேனும் விதத்தில் புண்படுத்தியிருந்தால், பண்பட்டவராய் மறந்து விடுங்கள்.

மதி
02-11-2012, 06:23 AM
இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது முரளி அவர்களே.. கண்டிப்பாக நிறைய எழுதுங்கள்.. :icon_b:

pk_muthukumaran
02-11-2012, 10:16 AM
ஐயா, எழுதுவதில் தங்களைவிட இளையவன் தான் நான்... தவறை சுட்டிகாட்டியதற்கு நன்றி, திருத்திக்கொள்கிறேன்...இளையவனை மன்னியுங்கள்...

முரளி
02-11-2012, 10:48 AM
முத்துக்குமார் அவர்களே,உங்கள் பாராட்டுக்கு நன்றி.