PDA

View Full Version : படித்தவை - 7-1-2004 - அழியும் நாட்டுப்புற பாடல்கள்.



lavanya
06-01-2004, 07:14 PM
படித்தவை - 7-1-2004 - அழியும் நாட்டுப்புற பாடல்கள்.

பாரம்பர்ய தமிழக கிராமிய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது அல்லது வடிவம் மாறி வருவது குறித்து ஏற்கனவே எழுதியிருந்தேன்.அடுத்து நாட்டுப்புற பாடல்கள்
பற்றிய ஒரு கட்டுரை அமைவும் அதன் எதிர்காலமும் என்பது குறித்து சில செய்திகள்
படித்தேன்...அது குறித்த சில எண்ணப் பரிமாறல்கள் இங்கே...

கொல்லங்குடி கருப்பாயி,தேனி குஞ்சம்மா, கிழக்கு சீமையிலே பழனியம்மா போன்றோர்கள்
நல்ல சீனியர் பாடகிகள்..(பரவை முனியம்மா பின் வந்தவர் ) ஆனால் கொ.கருப்பாயி ஒரு
படத்தில் அறிமுகமாகி நடித்தவுடன் என்ன காரணமோ பின்னால் பாடுவதையும் கொஞ்சம்
கொஞ்சமாக நிறுத்தி விட்டார்...கண்ணுறங்கு தாயி போய் வா செல்ல மகளே என
உசிலம்பட்டி உருக்ககதைகளை பாடிய தேனி குஞ்சம்மா நடிப்பதில் வந்த பிறகு பாடுதலை
குறைத்து விட்டார். பழனியம்மா தற்போது குழுக்களில் ஒருவராக கும்மிப்பாட்டு, கோரஸ்
பாட்டு போன்றவற்றில் இருக்கிறாராம்.

சிங்கம் போலே நடந்து வர்ரான் செல்லப்பேராண்டி என தூள் பறத்திய பரவை முனியம்மா
கிட்டத்தட்ட பாட்டுகோட்டையார் போன்று புரட்சிகர கருத்துக்களை பாட்டில்
அறிமுகப்படுத்தியவர். இத்துணூண்டு படிச்சிருந்தாலும் இட்டுக்கட்டி பாடுற பாட்டில்
ஏதாவதொரு இடத்திலே கூட கம்யூனிஸ சித்தாந்தங்கள் வாராமல் போகாது.... குறிப்பாக
'நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் பாழும் நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும் ' என்ற பாடலும்
'நாங்க கேட்டதெல்லாம்' என்று தொடங்கும் பாடலும் பரவை முனியம்மாவை பட்டி தொட்டி
எல்லாம் அறிமுகப்படுத்திய பாடல்கள்.ஒரு டிவி மேடை நிகழ்ச்சி பாடலில் அவர் பாடியதை பார்த்தேன்...பாடும்போது ஆட்டமும் வருகிறது...'செக்கெல்லாம் வேணாம் தம்பிகளா ரூவாவா
கொடுத்திருங்க' என்கிறாராம் படத்தில் நடிப்பதற்கு..உஷார் பார்ட்டில் இல்லையா?
ஆனால் இவரும் திரைக்குப் போனவுடன் நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவாக பாட வருவதில்லை...செல்லூலாயிட் இண்டஸ்ட்ரியின் மாயை அப்படி.

கோட்டை சாமி ஆறுமுகம் என்ற ஒரு க்ரூப் இருந்தது.அதிலும் அந்த ஆறுமுகம் 'எங்க கருப்பண்ண சாமி நடந்து வந்தா அங்கே இடி மொழங்குது ' என்று பாடும்போது
எல்லையிலிருக்கும் அய்யனார்சாமியே கொஞ்சம் டியூட்டியை கட் அடிச்சிட்டு வந்து இவர்
நிகழ்ச்சியை பார்க்கும் என்பதில் மிகையில்லை..நல்ல பாடகர்...எல்லாமே இட்டுகட்டி
பாடும் பாடல்கள்...தலையில் ஒரு துண்டை கட்டி கொள்வார்.எந்த மாதிரி பாட்டு
பாடுகிறாறோ அதற்கேற்றாற்போல் ராஜு சுந்தரம் இல்லாமலே ஆடும் திறமை பெற்றவர்..
நிறைய குடிக்கிறார்..ஒத்துக்கொண்டது போல் நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்ற ஏராள
குற்றசாட்டுகள். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்பு சாமி தம்பதியினர்...இவர்கள் நிகழ்ச்சி ஒன்றை
புன்னை நல்லூர் மாரியம்மன்கோவில் திருவிழாவில் அருகிலிருந்து பார்த்தேன். குறிப்பாக
காதல் பாடல்களில் இருந்து காது குத்தல் பாடல்வரை எல்லாமே வைத்திருக்கிறார்கள்.
சினிமாவில் பாடியவற்றில் 'ஆளான நாள் முதலா ' என்ற பாடலில் இருந்து மன்றத்தில் இன்று
பதிக்கப் பட்டிருக்கும் பாடல்வரை எல்லாமே எல்லோரும் விரும்பி கேட்ட பாடல்.
நடிகராகவும் நடித்து பார்த்தார். சொல்ல மறந்த கதைக்கப்புறம் குரலை விரும்பும் மக்கள்
நடிப்பை விரும்பவில்லை என்ற உண்மை உறைக்க விலகி கொண்டார். தற்சமயம் விஜய் டிவியில் கதைப்பாட்டோ என்னவோ ஒரு நிகழ்ச்சியில் மனைவியுடன் சேர்ந்து நேயர்களுக்கு
விடும் கதையில் மன்னிக்கவும் விடுகதையில் மனைவி ஒரு விடை சொல்ல இவர் அதை ஏற்காமல் மனைவியை முறைப்பது,சத்தாய்ப்பது என்ற விதமாய் ஏதோ செய்து
கொண்டிருக்கிறார்.

இன்னும் சில பிரபலமில்லாத பாடகர்கள் 'கொளுந்து வெத்தலைகாரி'
'செக்க செவந்தவளே' போன்ற சின்ன சின்ன 'ஆல்பங்கள்' வெளியிட்டாலும் அவ்வளவாக இப்போதெல்லாம் கேஸட் கடைகளில் கிராமிய பாடல் தொகுப்புகள் தெரிவதில்லை.
நாத்து நடும் மக்கள் எல்லாம் சரிகம பதநிசே என்று அட்வான்ஸாய் போய்
கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்க தோணுகிறது.

இளசு
06-01-2004, 11:05 PM
தெருக்கூத்து, பாவைக்கூத்து போல் இவை அருகுவதும் காலத்தின் கட்டாயம் லாவ்.
திரைவெளிச்சம் பட்டால் இக்கலைஞர்கள் வளராமல், கருகிவிடுவது -
நீங்கள் சொன்னாற்போல் ஒரு நிதர்சன முரண்.

தம்ஸம், ஒப்பாரியும் போல் இவற்றையும் வன்தகடுகளில் ஆர்வலர் சேமித்து வைத்தால்தான் உண்டு - அடுத்த தலைமுறைகளுக்காக..

(பெரும்பாலான ஆடியோ நாட்டுப்புறப்படல்கள் - கொஞ்சம் பச்சை நிற
மிக்ஸ் மசாலாக்கள்..சும்மா டைம்பாஸ்..)

poo
07-01-2004, 02:32 PM
பல்கலைக்கழகங்களில் பாடமாகத்தானே இருக்கிறது இன்னமும் இவைகள்?!!...

வி.சி.டி-கள் வெளியிடவேண்டும்... பரவை முனியம்மா பாட்டிக்கு மெயில் பண்ணிடறேன்!!

நன்றி அக்கா!!

pgk53
07-01-2004, 04:31 PM
நாடுப்புறப்பாடல்கள் அழிந்து வருகிறது என்று கூற இயலாது.
ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் . அதாவது காலம்.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாட்டுப் புறப் பாடல்கள் மீண்டும் கோலோச்சும் என்று நம்புகிறேன்.
லாவண்யா , மதுரைக்கார ஜோடியான நவநீதன் சுப்புலட்சுமி தம்பதிகளை குறிப்பிட மறந்துவிட்டீர்களே.

முத்து
07-01-2004, 04:37 PM
நாட்டுப்புறப் பாடல்களின் பலவீனமே பெரும்பாலும்
அவை செவிவழிப் பாடல்களாய் இருப்பதுதான் ..
சில வருடங்களாகத்தானே அவை தொகுக்கப்பட்டு வருகின்றன ..
மறைந்து போன நாட்டுப்புறப் பாடல்கள் ஏராளம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை ...

puppy
07-01-2004, 04:38 PM
நாடுப்புறப்பாடல்கள் அழிந்து வருகிறது என்று கூற இயலாது.
ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் . அதாவது காலம்.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாட்டுப் புறப் பாடல்கள் மீண்டும் கோலோச்சும் என்று நம்புகிறேன்.
லாவண்யா , மதுரைக்கார ஜோடியான நவநீதன் சுப்புலட்சுமி தம்பதிகளை குறிப்பிட மறந்துவிட்டீர்களே.

அவங்க ஊரு இல்லே இல்லையா..அதான் மறந்துட்டாங்க போல...அப்படி தானே லாவ்.....