PDA

View Full Version : என்னைப் போல் எவன்? -- முரளி



முரளி
20-10-2012, 05:36 AM
என்னைப் போல் எவன்? (‘கூர்’ந்து ‘பார்க்’கவும்)

ஒரு நாளைப் போல இதே தொந்திரவு. தூங்க விட மாட்டேங்கிறாங்க. “பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, இதோட சேர்ந்து கொலஸ்ட்ரால் வேற. வாக்கிங் கிளம்புங்க.” மனைவயின் அதட்டல்.

வேறே வழியில்லை. கிளம்பிட்டேன். காலை 6.00 மணி. பார்க்லே கொஞ்சம் கூட்டம். கேட் கிட்டே வரிசையாக ஸ்கூட்டர்/மோட்டார் பைக்குகள், ஒட்டி ஒட்டி. வழியே இல்லை, வண்டிகளை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தேன்.

“கொஞ்சம் கூட அறிவே இல்லை. இப்படியா வண்டிகளை பார்க் பண்ணுவாங்க” அலுத்துக் கொண்டே சக நண்பர் வளைந்து வளைந்து நுழைந்தார். அவரது கையில் ஒரு சைனா மொபைல், “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே” அந்த கால எம்.ஜி.ஆர் பாடல் உரக்க பிளிரிக் கொண்டிருந்தது. ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’. பார்க்க முரட்டு மீசையுடன், கொஞ்சம் பெரிய தொப்பையுடன், போலீஸ் மாதிரி இருப்பார்.. நான் அவருக்கு வைத்திருந்த பெயர் எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி).

“பார்க் வந்திருக்காங்க இல்லியா! அதான் இப்படி பார்க் பண்ணியிருக்காங்க.!” ஜோக் கடித்தேன். என்னை ஏதோ பூச்சி மாதிரி பார்த்துக் கொண்டே வேகமாக நடந்தார். அப்படி என்ன தப்பாக சொல்லி விட்டேன்?

நெறைய பேர் பார்க்கை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள். சில பேர் இடம் வந்து கொண்டிருந்தார்கள், என்ன வேண்டுதலோ? கொஞ்சம் பேர் ஸ்லோவாக, சிலர் அசுர கதியில், அரசியல் பேசிக் கொண்டு, போனில் காலேஜ் சீட் பேரம் பேசிக்கொண்டு.

சில யுவதிகள், பறக்காத தலை முடியை கோதிய படியே இடுப்பசைக்க, சில வாலிப வயோதிக அன்பர்கள் அவர்களை ஜொள்ள, ரெண்டு மூணு விடலை ஜோடிகள் வாக்கிங் பெயரில் கடலை போட்டுக்கொண்டு, ‘பார்க்’க கண் ரெண்டு போதாது. பார்த்துக் கொண்டே ஊர்ந்தேன்.

என்னோட வேக நடைக்கு, எறும்பு கூட ஓவர் டேக் பண்ணிடும். எறும்பு என்பது இன்னொரு வயதான தம்பதியினருக்கு நான் வெச்ச பேர். ஜோடியாக ஒருவர் பின் ஒருவராக அசைவார்கள்.

சொல்ல மறந்திட்டேன். பார்க் ரெகுலராக வரவங்க எனக்கு வெச்ச பேர் ‘ஆமை’. அவ்வளவு வேகம். இந்த லட்சணத்தில் எனக்கு உடல் எடை குறைய வேறு ஆசை.

ஆயிற்று, 10 ரவுண்டு முடிந்தது. கிளம்ப வேண்டும். வெளியே கேட்டில் வரிசையாக வண்டிகள். “இங்கு வண்டிகளை நிறுத்தக் கூடாது” கேட் நோட்டீஸ் போர்டு கீழே ஸ்கூட்டர்/ பைக்குகள். இடைவெளி இல்லாமல். வெளியே வரும் போது, ஒரு பைக் தொப்பையில் இடி. அனிச்சையாக திரும்பினேன். இந்த பக்கம் இன்னொரு வண்டியின் ஹான்டல் பார் இடித்து முட்டி அடி. அந்த வண்டி கவிழ்ந்து, பின்னால் வந்த ஒருவருக்கு காயம். அதற்குள், எங்கிருந்து பார்த்தாரோ, விழுந்த வண்டியின் ஓனர் ஓடோடி வந்து “என்ன சார், வண்டிய தள்ளிட்டீங்களே! ‘பார்க்’காம கண்ணை மூடிட்டு வரீங்களே?” அடிக்கற மாதிரி பதறினார். இன்டிகேட்டர் லைட் உடைந்தால் யாருக்கு தான் கோபம் வராது?

“ஹலோ! வண்டியை உங்களை யார் சார் வழியில் நிறுத்த சொன்னாங்க? இங்கேயே அடி பட்டு கிடக்கிறோம், சத்தம் போடறீங்க” நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் கீழே விழுந்தவர் எகிறினார். அவ்வளவு தான், பிபி எனக்கும் எகிறிவிட்டது. நான் கத்த, “நாங்க பின்னே எங்கே விடறது, இந்த பக்கம் குப்பை வண்டி, அந்த பக்கம் கார்ப்பரேஷன் தோண்டிய பள்ளம். எங்களுக்கு ஏது இடம்? சொல்லுங்க! ” வண்டி காரர் கத்த , மற்றவர்கள் கூச்சல் போட, கூட்டம் சேர்ந்து விட்டது. கொஞ்சம் ரசா பாசம் ஆகிவிட்டது.

என்கிட்டே இல்லாத ஒண்ணை இருக்கான்னு வண்டி காரரின் நண்பர் வினவியதும் (வேறென்ன, மூளைதான்), கோபம் தாங்காமல் அடிக்க போனேன். (அவரும் அங்கேதான் தன் ஸ்கூட்டியை பார்க் பண்ணியிருந்தார்). துரதிர்ஷ்டவசமாக அவரிடம் அடி வாங்கிக்கொண்டேன்.

அன்றிலிருந்து மனசுக்குள் ஒரு வெறுப்பு.. பத்து நாள் பார்க் பக்கமே போகாமலிருந்தேன். என்னை அடித்தவர் முகம் மற்றும் அவரது டூ வீலர் ஞாபகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர பழி வாங்க மனது துடித்தது. மறக்க முயன்று கொண்டிருந்தேன். முடியவில்லை.


இந்த பத்து நாளும் ரோட்டில் வாக்கிங். ஆனால், மாநகராட்சி தோண்டல். அவர்களது உபயத்தில் ரோடே பள்ளமும் மேடுமாக. குழியில் விழுந்தால், எழுந்துக்க முடியாது. போட்டு மூட வேண்டியதுதான். குப்பை வேறு.

வேறு வழி, திரும்பவும் பார்க்குக்கு போனேன். நோ சேஞ். வண்டிகள் கேட் வாசலில் பார்கிங். என்னை அடித்தவரோட ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது. அடி வாங்கியது மறக்க முடியவில்லை. பழி வாங்க மனது துடித்தது. என்ன பண்ணலாம்? வண்டியை தள்ளி விடுவோமா? யாராவது பார்த்து விட்டால்? டயரை பஞ்சராக்கி விட்டால்? ஆனால் அது சாத்தியமில்லையே. படிச்சவங்க பண்ற காரியமா இது? மாட்டிக்கொண்டால் எவ்வளவு அவமானம் ? யோசனையுடன் பார்க்கில் நடந்தேன்.. அன்று ஆமையே அசால்டாக என்னை ஓவர்டேக் பண்ணியிருக்கும். திடீரென்று ஒரு பல்பு என் மண்டைக்குள் எரிந்தது. ஐடியா. பழி வாங்க.

***
மீதி ... . இந்த திரியிலேயே

சுகந்தப்ரீதன்
20-10-2012, 01:57 PM
ரொம்ப இயல்பா நிகழ்ச்சிகளையும் எண்ணவோட்டங்களையும் காட்சிபடுத்தியிருக்கீங்க முரளி சார்..!!:)

வாழ்த்துக்கள்... தொடருங்கள்...:icon_b: ஆமாம் பவரே இல்லாத இடத்துல பல்பு எப்படி எரியுமாம்..?!:confused:

நாஞ்சில் த.க.ஜெய்
20-10-2012, 03:38 PM
இயல்பான மனவோட்டத்தில் நிகழும் செயல்களின் தொகுப்பு இந்த கதை ..பிபி குறைக்க போன இப்படி ஏத்தி விடுறாங்களே :sauer028:..ஆமா இல்லாத ஒன்னுல எப்படி பல்பு எரியுது :confused:...தொடருங்கள் முரளி அவர்களே..

சுகந்தப்ரீதன்
21-10-2012, 03:40 PM
நமது ஊரில் நடப்பது நகராட்சி இல்லை. நகராத ஆட்சி.:icon_b::icon_b:

ஐயா... ஒரு சிறுவேண்டுகோள்...
ஒவ்வொரு பாகத்திற்க்கும் ஒரு திரி ஆரம்பிக்காமல் ஒரே திரியில் தொடர்ந்தால் வாசகர்களுக்கு வாசிப்பதற்க்கு எளிதாகவும் நன்றாகவும் இருக்குமே..!!:)

முரளி
22-10-2012, 04:32 AM
:icon_b::icon_b:

ஐயா... ஒரு சிறுவேண்டுகோள்...
ஒவ்வொரு பாகத்திற்க்கும் ஒரு திரி ஆரம்பிக்காமல் ஒரே திரியில் தொடர்ந்தால் வாசகர்களுக்கு வாசிப்பதற்க்கு எளிதாகவும் நன்றாகவும் இருக்குமே..!!:)

அப்படியே ஆகட்டும் ஐயா. இந்த பாகத்தையும் அப்படி செய்ய முடியுமா? என்ன செய்ய வேண்டும்?

முரளி
22-10-2012, 05:37 AM
சுகந்த ப்ரீதன் உங்கள் விருப்பப்படி, பாகம் இரண்டை இந்த திரியிலேயே ஏற்றி விட்டேன். மிக்க நன்றி.


----
அடுத்த நாள். மனைவிக்கு முன்பாக நான் எழுந்து வாக்கிங் தயாராகி விட்டேன். ““பாருங்க! உங்களுக்கு வயசாயிண்டே போறது. ரத்த கொதிப்பு,...” மனைவி முடிப்பதற்குள் வீட்டிற்கு வெளியே. கையில் ஒரு சின்ன பேனா கத்தி. விடுவிடுவென பார்க் நோக்கி நடந்தேன். முயல் கூட அன்று என்னிடம் ரேசில் தோற்றிருக்கும். என்னை அடித்தவரோட ஸ்கூட்டி பார்க்கில் வழியை மறித்துக்கொண்டு பாவமாக நின்று கொண்டிருந்தது. நேராக அருகில் போனேன். யாரும் பார்க்கவில்லை. கத்தியால் சீட்டில் நாலு கோடு இழுத்தேன். டர்ரென்று சீட கிழிந்தது. அப்பாடா, திருப்தி. பழி வாங்கினால் என்ன சுகம். என் சீட் கிழியப் போவது எனக்கு அப்போது எப்படி தெரியும்?

திரும்பினேன். ஸ்கூட்டி ஓனர், என்னை அடித்த மகானுபாவன், கூட ரெண்டு தடியன்கள். “மாட்டினியா! மவனே! பத்து நாலா (அவருக்கு ளா வராது) எங்க வண்டிங்க சீட் கிழிச்சியே! நீதான்னு எனக்கு சந்தேகம். பிடிச்சிட்டோம் பாத்தியா!” கொக்கரித்தான் ஸ்கூட்டி ஓனர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் பார்க் பக்கம் வந்தே பத்து நாளாயிற்றே. இன்னிக்கு தானே இந்த வேலையை பண்ணினேன். பத்து நாளா நான் எங்கே, எப்படி செய்திருக்க முடியும்?. என்னைப் போல் எவனோ ஒருவன், இந்த வேலையை பண்ணியிருக்கிறான். பழி என் தலையில்.

எல்லாரும் சேர்ந்து என்னை ஜூஸ் பிழிந்து விட்டார்கள். என்னை ஒண்ணுமே சொல்ல விடலை. ஒரே ஒரு நாள் கிழிச்ச பாவத்துக்காக, பத்து பேருக்கு புது சீட கவர் வாங்க பணம் கொடுத்தேன். நல்ல வேளை, தெரிந்த நண்பர்கள் வந்து காப்பாற்றினார்கள். இல்லாவிட்டால், போலீஸ் கேஸ் ஆகியிருக்கும்.

அடுத்த நாள், பார்க் பக்கம் போனேன். ‘சார்! சார்!’ என்று யாரோ கூப்பிட்டார்கள். திரும்பினேன். டெய்லி மார்னிங் வாக் வருபவர். ஒல்லியா இருப்பார். பென்சில்னு அவருக்கு அடைமொழி. “சாரி சார், நேத்து நீங்க சீட் கவர் கிழிக்கறப்போ நான் அங்கே தான் இருந்தேன்”

“ஆமா சார், கோபத்திலே நான் ஒரு நாள் தான் சீட கிழிச்சேன். அனால், பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் மாதிரி, பத்து நாள் தண்டனை கொடுத்திட்டாங்க” எனக்கு ஆதங்கம்.

“படிச்ச நீங்களே இதெ செய்யலாமா? பண்றது தான் பண்றீங்க, யாரும் பாக்காம பண்ண வேண்டாம்? நானே ரெண்டு நாள் இந்த தடியன்கள் வண்டி சீட் கிழிசிருக்கேன். மாட்டினேனா?”- பென்சில்

“அப்படியா? ஏன் அப்படி பண்ணீங்க?”

“பின்னே என்ன? வண்டியே குறுக்கால நெடுக்கால நிறுத்தி இடைஞ்சல் பண்றாங்க. கேட்டால் சண்டைக்கு வராங்க”- தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

“அப்போ, மீதி ஏழு நாள் யார் கிழிச்சிருப்பாங்க!”

“அதான் சார், எனக்கும் புரிபடலை. ஆனாலும், ஸ்கூட்டர் கேட் கிட்டே நிறுத்திறது குறையலியே! தண்டனை கொடுத்தாலும் திருந்த மாட்டேங்கறாங்க”. பென்சிலுக்கு குழப்பம்.

எனக்கு தெரிந்துவிட்டது. யாரை சொல்லியும் பிரயோஜனமில்லை. குறை எல்லோரிடமும் தான். நமது ஊரில் நடப்பது நகராட்சி இல்லை. நகராத ஆட்சி. கார்பரேஷன் மெத்தனம், ஊர்பட்ட ஸ்கூட்டர், கட்டமைப்பு குறைகள், மலிந்து போன ஊழல், மக்களின் வெறுத்து போன முரட்டு சுபாவம், தன்னலம் எல்லாம் தான் காரணம்.

வன்முறை இதற்கு வழியில்லை. நான் செய்த தவறு எனக்கு மெதுவாக புரிந்தது. ஆமை தானே! எதுவுமே மெதுவாகத்தான். கோபப்பட்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது. நஷ்டம் தான் மிச்சம். முடிவு செய்து விட்டேன். மீண்டும் ஒரு முறை பல்பு எரிந்தது. இனி என் வழி இன்முறை தான்.

பார்க் டிரஸ்ட் மெம்பர்களிடம் சொல்லி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்சில் மாதிரி, எஸ்.பி (சவுண்ட் பார்ட்டி) மாதிரி நண்பர்கள் மூலமாக , ஸ்கூட்டர் பார்கிங் சீர் செய்யவேண்டும்.

முற்றும்.........

ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-10-2012, 04:56 PM
இயல்பான கதை

கீதம்
24-10-2012, 05:57 AM
இயல்பான சம்பவங்களையும் மிகவும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். பாராட்டுகள். உடன் நடக்கும் ஒவ்வொருவருக்குமான பட்டப்பெயர்கள் அவர்களது உருவை மனக்கண் முன்கொண்டுவந்து நிறுத்துகின்றன. சரி, இந்த பார்க்கில் உள்ள பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? ஆவலுடன் காத்திருக்கிறேன்.

முரளி
24-10-2012, 06:36 AM
நன்றி கீதம். முதலில் உங்களது பாராட்டுக்களுக்கு! இரண்டாவது உங்களது உதவிக்கு(கதையின் இரண்டாம் பாகத்தின் பின்னூட்டங்களையும் முதல் பாகத்தின் தொடர்ச்சியோடு இணைத்துவிட்டதை சொல்கிறேன்).

பார்க்கில் பார்கிங் பிரச்னை ஒரு தீராத பிரச்னை இல்லை. மிக சிறிய பிரச்சினை கூட . ஆனால், மக்கள், நகராட்சி, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் சம்பந்தப்பட்டது. ஒன்று கூடியே ஒரு அமைப்பிற்கு வரவேண்டும். தன்னலம் குறைய வேண்டும். பொது நல எண்ணங்கள் கூட வேண்டும். நான் நினைப்பது சரிஎனில், இது போன்ற கதைகள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும்.

முரளி
25-10-2012, 04:13 PM
ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

முரளி
25-10-2012, 04:15 PM
பாராட்டுக்களுக்காக சுகந்தப்ரீதன் அவர்களுக்கு மிக்க நன்றி

முரளி
25-10-2012, 04:16 PM
பாராட்டுக்களுக்காக நாஞ்சில் த.க.ஜெய் அவர்களுக்கு மிக்க நன்றி

sarcharan
26-10-2012, 05:47 AM
அடுத்த பகுதியை வெகுசீக்கிரத்தில் பதியுங்கள். :):):)

ந.க
26-10-2012, 06:30 AM
நகைச்சுவையும் யதார்த்தமும் இணைந்து 'பார்கை''பார்கிங்கை' நகராட்ட்சியின் பாராமுகத்தைப் பார்க்க வைத்தீர்கள். பாராட்டுக்கள்.

arun
26-10-2012, 09:01 PM
இயல்பான நகைச்சுவை கதையெங்கும் காண முடிகிறது .. பாராட்டுக்கள்

முரளி
29-10-2012, 12:56 PM
சர்சரண் அவர்களே , தவறை மிக அழகாக சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி கொண்டேன். இப்போது மீண்டும் கதையின் இரண்டாம் பாகம் சென்று பாருங்கள், பல்ப் எரிந்து எனக்கு சொன்ன அறிவுரை என்ன என்று. முற்றும் கூட வைத்து விட்டேன்.

சிவா.ஜி
29-10-2012, 02:00 PM
மிக இயல்பான நடையில் அழகான கதை. வாசிப்பவரைக் கூர்ந்து நோக்கச் சொல்லிய கதாசிரியர்...தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து நோக்கியிருப்பது கதயின் எல்லா வரிகளிலும் தெரிகிறது. ஒரு நல்ல கதாசிரியருக்கான முதல் தகுதியே...இந்த கூர் நோக்குதான். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் முரளி.

முரளி
29-10-2012, 02:49 PM
சிவா.ஜி. மிக்க நன்றி. இந்த 'கூர்'ந்து 'பார்க்'கவும் என தலைப்பில் இணைக்க இன்னொரு காரணம் உண்டு. இந்த கதை நாயகன் 'ஆமை' என்ற நாமம் சூட்டப்பட்டவன். வடமொழியில் (சமஸ்கிருதம்) கூர்ம என்றால் ஆமை என பொருள். 'பார்க்'கில் 'ஆமை 'என்றே 'கூர்'ந்து 'பார்க்'கவும் தலைப்புக்கு பொருள் கொள்ளலாம். இது எப்படி இருக்கு ?

த.ஜார்ஜ்
29-10-2012, 03:18 PM
முரளி தெளிந்த நீரோட்டம் போல கதை செல்கிறது. முடிவு மட்டும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களால் இன்னும் சிறப்பாக மிளிர முடியும் என்று நம்புகிறேன் .வாழ்த்துககள்

முரளி
30-10-2012, 04:40 AM
நன்றி ஜார்ஜ். உங்களது கண்ணோட்டம் சரியானது. பிரச்னைகளை சொல்லும் கதாசிரியர் அதற்கு ஒரு தீர்வையும் வைக்க வேண்டும். எனக்கு தோன்றிய சிறு தீர்வை "வன்முறை வழியல்ல , இன்முறை தான் வழி". ஆனால் இது போதாது.

பார்க்கில் பார்கிங் பிரச்னை ஒரு தீராத பிரச்னை இல்லை. மிக மிக சிறிய பிரச்சினை கூட . அன்றாட எரிச்சல். ஆனால், மக்கள், நகராட்சி, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் சம்பந்தப்பட்டது. ஒன்று கூடியே ஒரு அமைப்பிற்கு வரவேண்டும். தன்னலம் குறைய வேண்டும். பொது நல எண்ணங்கள் கூட வேண்டும். நான் நினைப்பது சரிஎனில், இது போன்ற கதைகள் கொஞ்சம் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும். படிக்கும் அன்பர்கள் வேறு நல்ல முடிவு காணக்கூடும். ஒரு சிறிய சமூக பிரச்னைக்கு இந்த மன்றத்தில் சமூக ஆர்வலர்கள், படித்தவர்கள் ஊக்கத்துடன் பங்கு கொள்வது மனதிற்கு நிறைவை கொடுக்கிறது.

வேறு ஏதேனும் வழி நிச்சயம் கிடைக்கும்.