PDA

View Full Version : 'கர்ம யோகி' -- முரளி



முரளி
18-10-2012, 05:16 AM
இன்று நான் அலுவலகத்திற்கு லேட். நான்தான் அங்கு மேனேஜர். நேற்றும் அதற்கு முன் தினமும் 2 நாட்கள் அலுவலக வேலையாக வெளியூர் போகவேண்டிய சூழ்நிலை. நான் இல்லையென்றால் என்ன கூத்தடிக்கிறர்களோ என் ஆபீசில். முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டியிருக்கிறது. சே! என்ன கொடுமை சார் இது ?

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQvPCkqxPCAoKQjDdaG0Qmvk0CJkhe2XAuHtPsUIR09B3IFciUP

நேற்றுதான் நான் ஹைதராபாதிலிருந்து திரும்பி வந்தேன். அங்கு மேலாளர்களுக்காக ஒரு வார பணிப் பட்டறையில்,நேற்று “வாடிக்கையாளர் சேவை” பற்றிய தலைப்பில் எனது பேச்சு. அதற்காக சென்றிருந்தேன் .என் உரை முடிந்தவுடன் ஒரே கைதட்டல். “பேஷ்! பேஷ்! ரொம்பப் பிரமாதம்” என வந்திருந்த அதிகாரிகள் பாராட்டினார்கள். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறதாமே!. கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அலுவலகத்தில் நுழைந்தேன். சந்தைக் கூட்டத்தில் இருப்பது போல் இருந்தது. வாடிக்கையாளர்கள் அங்கும் இங்கும் அலை மோதிக் கொண்டிருந்தார்கள். “இப்போது முடியாது !, “நாளைக்கு வாருங்கள்”, “இந்த கவுண்டர் இல்லை”, “அந்த கவுண்டர் போங்கள்” என்று அலுவலகச் சிப்பந்திகள் வாடிக்கையாளர்களை விரட்டிக் கொண்டிருநதார்கள். மொத்தத்தில் ஊழியர் , வாடிக்கையாளர் இடையே பரஸ்பரம் குமுறல்கள், அங்கலாய்ப்புகள், கோபதாபங்கள், அங்கே நிறையவே வழிந்து கொன்டிருந்தது.

சில ஊழியர்கள் ஓரமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் . அவர்களாகவே எடுத்துக் கொண்ட தேநீர் ஒய்வு.

அக்கௌன்டன்ட் மேஜை அருகே வாடிக்கையாளர் கூட்டம், ஒரே சத்தம். எனக்கு கோபமாக வந்தது. என்ன அக்கௌன்டன்ட் இவர்? கொஞ்சம்கூட நிர்வாகத்திறனே இல்லையே! கண்ட்ரோல் பண்ணத் தெரியலியே!

இருக்கட்டும், நேரம் கிடைக்கும் போது இவருக்கு கொஞ்சம் நிர்வாகத்திறன் பற்றி கிளாஸ் எடுக்கலாம். நினைத்துக்கொண்டே எனது கேபினை அடைந்தேன்.

என் கேபின் வாசலில் சில வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சில பேர் முகத்தில் எள்ளும் கொள்ளும்!. சிலர் சலிப்புடன் எனது அறையை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர் . புகார் கொடுக்கவோ அல்லது கையெழுத்துக்காகவோ? அவர்களை பார்த்து ஒரு புன்னகையுடன் எனது அறைக் கதவை திறந்து உள்ளே சென்றேன் . அறையின் ஏசி மெல்லிதாக சத்தத்தோடு இதமான காற்றையும் வீசிக் கொண்டிருந்தது.

“இந்த ஆபீசில் எல்லாத்துக்கும் நான் மட்டும்தானா! என் வேலையை செய்ய விட மாட்டேங்கிறாங்களே!” கொஞ்சம் கடுப்புடன் இருக்கையில் அமர்ந்தேன்.

எனது கம்ப்யூட்டரை கிளுக்கினேன். நிறைய வேலை இருக்கிறது. எனது அனுமதி கேட்டு நிறைய நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள், மனுக்கள் காத்துக்கொண்டிருந்தன.

அடேடே! ஹெட் ஆபிசிலிருந்து எனக்கு ஒரு பாராட்டு வந்திருக்கிறதே! ஒரு மாதத்திற்கு முன்பு நான் புவனேஸ்வரில் பங்கு கொண்ட “எப்படி வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது” சொற்பொழிவு போல் இங்கும் நடத்த வேண்டுமாம். அடுத்த வாரம் டெல்லியிலும் பேச வேண்டுமாம். அடி சக்கை!

அறை வாசலில் ஆளரவம். யாரோ எட்டிப் பார்க்கிறார்கள் போலிருக்கே! கஸ்டமரோ? உடனே எனது கடை நிலை ஊழியனை பெல்லடித்து கூப்பிட்டேன்.

“ ரவி! உடனே வா. சூடா கொஞ்சம் டீ, அப்புறம் பிஸ்கட் கொண்டு வா. ஏதாவது போன் வந்தால், நான் முக்கியமான கஸ்டமருடன் இருப்பதாகச் சொல். சரியா!"

"சரி சார் !"

"அப்புறம் ரவி, அறைக் கதவை மூடு. வாசலில் நிக்கறாங்களே, அவங்களை அக்கௌன்டன்டைப் பார்க்கச் சொல். ஒரு வாடிக்கையாளரையும் உள்ளே விடாதே. எனக்கு நிறைய வேலை இருக்கிறது”

ரவி கதவை மூடிக் கொண்டு வெளியே சென்றான். அப்பாடா!. எனது செல் போனை மௌனமாக்கினேன். பிரிப் கேசைத் திறந்து முக்கியமான பேப்பர்களை வெளியே எடுத்தேன். ரயில் டிக்கெட்டுகள், டாக்ஸி பில்ஸ், ஹோட்டல் பில், எல்லாவற்றையும் தேடி ரக வாரியாகப் பிரித்தேன்.

அடடா! எவ்வளவு வேலை இருக்கிறது ? ஹைதராபாத்திற்கு சென்று வந்த செலவுப் பட்டியலை ஹெட் ஆபீசிற்கு அனுப்ப வேண்டும். அப்புறம் எனது பெட்ரோல் பில், கஸ்டமர் எக்ஸ்பென்செஸ் பில், மெடிக்கல் பில்,. இது மட்டுமா? டெல்லியில் நான் எடுக்க வேண்டிய “ வாடிக்கையாளர் மகிழ்ச்சியும் வணிக மேம்பாடும்” பற்றி நோட்ஸ் வேறு தயார் பண்ண வேண்டும். இதை முடிக்கவே இன்றைய பொழுது போதாது.

வெளியே ஒரே கூச்சல். அக்கௌன்டன்டே சமாளிக்கட்டும். சுத்த வேஸ்ட் அவர். என் கூட இருந்தும் எதையும் கத்துக்கலியே!

***

மதியம் சுமார் 2.30 மணியிருக்கும். உண்ட களைப்பு, உழைத்தது போதும். லேசாகக் கண்ணை அசத்தியது.

“சார், சார்”-ரவி எழுப்பினான். “ஹெட் ஆபீசிலிருந்து போன். ஆர் எம் சார் அவசரமாக பேசணுமாம்”

“வேற வேலையில்லை இவங்களுக்கு. இந்த ஸ்டேட்மெண்ட் கொடு, அந்த ரிப்போர்ட் ஏன் இன்னும் வரலைன்னு பிடுங்குவாங்க.” அலுத்துக்கொண்டே மேலதிகாரியுடன் பேச ஆரம்பித்தேன்.

"சார்! சொல்லுங்க சார் ! இன்னிக்கு தான் சார் ஹைதராபாத்லேருந்து வந்தேன் ! உங்களுக்கு போன் பண்ணனும்னு தான் சார் நினைச்சேன் ! எப்படி சார் இருக்கீங்க ? " பணிவுடன் கேட்டேன்

“என்ன நடக்கிறது உங்கள் ஆபீஸ்ல? என்னய்யா பண்றீங்க ? ” மிரட்டினார் என்னோட பாஸ் போனில்.

"சார் ! என்ன விஷயம் சார் ?" எனக்கு புரியவில்லை

"இது வரை நாலு கம்ப்ளைன்ட் உங்க பேரில். என் மேலதிகாரி என்னை காய்ச்சறான்! ஏன் உங்க கிளைகளிலே பிசினஸ் கொரைஞ்சிகினே போவுதுன்னு கிழிக்கிறான் ! உங்களை மாதிரி முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வெச்சு நான் வேறே என்ன பண்ண முடியும் ? "

"சார், நான் இப்போவே நேரே வரேன் சார் !" நான் பதில் சொல்லுமுன் போனை வைத்து விட்டார்.

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSfHgz3mkOmcGFI3YVRKisGX6PnWKEbV2CpDe7L0MJAHbFBFm3n

“ரவி! அக்கௌண்டன்ட் எங்கே? கூப்பிடு” சத்தம் போட்டேன். யாரும் வரவில்லை. ரவியும் காணோம். எழுந்து அக்கௌன்டன்ட் மேஜைக்கு விரைந்தேன். அவரது டேபிளில் பேப்பர்கள், பைல்கள் பரப்பி இருந்தது.

அக்கௌன்டன்ட் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, டெலிபோன் காலில் யாரிடமோ வழிந்து கொண்டிருந்தார். கொஞ்சல் குரலில், நிச்சயமாக கஸ்டமர் இல்லை. டேபிளில் டீ, பகோடா வேறு ஆறிக் கொண்டிருந்தது. மற்ற சிப்பந்திகளையும் இருக்கைகளில் காணோம்.

வாசலுக்கு விரைந்தேன். கஷ்டமடா சாமி ! கார் டிரைவரை காணோம். எங்கே தொலைந்தான் இவன்? ஆட்டோ பிடித்து (டாக்ஸி பில் கிளைம் பண்ணிக்கலாம்), ஹெட் ஆபீஸ் போய் சேர்ந்தேன். உயர் அதிகாரியின் அறைக்குள் நுழைதேன்.

உள்ளே, அதிகாரியும் அவருடன் இன்னும் இரண்டு பேரும் அரட்டை. டீ, பிஸ்கட், வறுத்த முந்திரி இத்தியாதி மேஜையில் பரப்பிக்கிடந்தது.

“ என்ன உங்க ஆபீஸ்ல யாரும் சரியாய் வேலை செய்யறதில்லையாமே. எல்லா பைல்களும் முடங்கிஇருக்காமே. கம்ப்ளைன்ட்க்கு மேல கம்ப்ளைன்ட்” சாடினார் அதிகாரி.

“சாரி, சார்! என் பேரில் எந்த குறையும் இல்லே, அக்கௌன்டன்ட் தான் சரியில்லே. வேலைத்திறன் போதாது.” முனகினேன்.

“இங்கே பாருங்க! நீங்கதான் உங்க கீழே வேலை செய்யறவங்களிடம் திறமையாக வேலை வாங்கணும். கண்ட்ரோல் வேணும் சார் ஆபீசில். பார்த்து பண்ணுங்க, கம்ப்ளைன்ட் வராமல் பார்த்துக்கோங்க! நேரே கம்பளைன்ட் செக்ஷனுக்கு போய் என்னன்னு பாருங்க. வெறுமே வாயிலே வடை சுட்டாமட்டும் போதாது !" – சொல்லிவிட்டு , அவர் தன் வாயில் கொஞ்சம் முந்திரியை போட்டுக்கொண்டார்.

கூழைக்கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்தேன்.

கோபம் கோபமாக வந்தது . “சே! என்ன புழைப்புடா இது ! என் திறமையை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே ! யாருமே கடமையில் கருத்தாக இல்லையே! இந்த ஆபீஸ் விளங்கினால்போலத்தான். நான் மட்டும்தான் இங்கே உழைக்கணுமா என்ன ? ” நொந்து கொண்டே ஆட்டோ பிடிக்க நடந்தேன்.



****
முற்றும்.


http://blog.envisialearning.com/wp-content/uploads/2012/02/7116.gif


** பகவத் கீதை- கர்ம யோகா – ஒரு ஸ்லோகம்- சாரம்

எவனொருவன் ஒரு யோகியைப் போல் ( கர்ம யோகி போல்) நடிக்கிறானோ ஆனால் உன்மையில் தனது தேவைகளைத் தேடிக் கொண்டிருக்கிறானோ, அவன் ஒரு பெரிய ஏமாற்றுப் பேர்வழி”

“One who restrains the senses of of action but whose mind dwells on sense objects certainly deludes himself and is called a pretender

veruppuvijay
18-10-2012, 05:45 AM
உங்களது இந்த முதல் குறுங்கதைக்கு வாழ்த்துக்கள் முரளி.

மேலதிகாரி எப்படியிருப்பாரோ அப்படியிருக்கும் அலுவலகம். கர்மயோக ஸ்லோகம் போல தனது தேவைகளைத் தேடிக்கொண்டிருந்தால் அலுவலகமும் முடங்கிப்போய்த்தான் இருக்கும். இன்றைய அரசியல் இயந்திரம் அப்ப்டித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது..

சிறிய கதையாக இருந்தாலும் சரியாக இருக்கிறது. நிறைவாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள் முரளி. நீங்கள் ஒரு நல்ல கதை சொல்லி என்று இக்கதையின் வாயிலாகவே தெரிந்து கொள்கிறேன்...

- விஜய்

aren
18-10-2012, 05:52 AM
உங்கள் முதல் பதிவு, அதுவே ஒரு சிறுகதை. என் பாராட்டுக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள். கதை நன்றாக வந்திருக்கிறது. அனைவருமே எப்படி ஒட்டு மொத்தமாக நமக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் நன்றாக வேலை செய்வதில்லை என்றே சொல்கிறார்கள். அப்படியென்றால் யார்தான் வேலை செய்கிறார்கள். யோசிக்கவேண்டிய விஷயம்.

உங்களைப் பற்றி அறிமுகப்பகுதியில் எழுதுங்களேன்.

மதி
18-10-2012, 06:03 AM
நல்ல சிறுகதை முரளி. மேலாண்மை பற்றி நச்சென்று உரைக்கிற மாதிரி. மேலும் நிறைய கதைகளை எழுதுங்கள்.

M.Jagadeesan
18-10-2012, 06:26 AM
பல கதைகளை எழுதிய அனுபவம் , இந்தக் கதையில் தெரிகிறது. எழுத்துப் பிழையில்லாத சீரான நடை. எல்லா அலுவலங்களிலும் நடக்கின்ற கூத்துகளை அழகாகக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

முரளி
18-10-2012, 06:31 AM
மிக்க நன்றி.. ஊக்கமளிக்கிறது..முரளி

நாஞ்சில் த.க.ஜெய்
18-10-2012, 07:44 AM
சிறுகதை நடை சிறப்பாக உள்ளது..தான் சிறந்த வேலையாள் தன்னை மற்றவர்கள் சிக்கலில் மாட்டிவிடுகிறார்கள் என்று தன் தவறை உணராது இருக்கும் பலர் உள்ளனர் எனும் கருத்தௌ ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்..

jayanth
18-10-2012, 02:37 PM
நல்ல கதை...

பி.கு :- என்னுடைய அலுவலகத்திலும் இதுபோல கூத்துக்கள் நிறையவே நடக்கும்...!!!

சுகந்தப்ரீதன்
20-10-2012, 02:10 PM
மாற்றத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் மேலாண்மை மனோபாவத்தை அழகாக படம்போட்டு காட்டி கர்மயோகியை மர்மயோகியாக்கி கலக்கிட்டீங்க..!!:icon_b:

முரளி
25-10-2012, 04:21 PM
அன்புள்ள veruppuvijay உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

முரளி
25-10-2012, 04:23 PM
அன்புள்ள aren, உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

முரளி
25-10-2012, 04:24 PM
அன்புள்ள மதி உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. கட்டாயம் எழுதுகிறேன்.

முரளி
25-10-2012, 04:25 PM
அன்புள்ள ஜெகதீசன் அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

முரளி
25-10-2012, 04:30 PM
அன்புள்ள ஜெயந்த் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

முரளி
25-10-2012, 04:31 PM
அன்புள்ள சுகந்தப்ரீதன் அவர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

arun
26-10-2012, 09:16 PM
கீதை தங்களது கதைக்கு முத்தாய்ப்பாய் இருந்தது பாராட்டுக்கள்

கீதம்
26-10-2012, 10:53 PM
அழகாய் புனையப்பட்ட யதார்த்தம். கீதையின் வாசகங்களோடு கதையை முடித்தவிதம் சிறப்பு. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

முரளி
15-11-2012, 05:47 AM
நன்றி கீதம், மேலாண்மை பற்றி குரளை விடவா வேறெங்கும் போகவேண்டும்?எத்துனை பாக்கள்.. "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை,நயவற்க நன்றி பயவா வினை", ஒன்று போதுமே, "கர்ம யோகி" கதைக்கு மேற்கோள் காட்ட. அன்று கீதை சொன்னதிற்கு ஓர் காரணம் உண்டு, இந்த குரளை அன்று தமிழில் பதிய தெரிய வில்லை. தமிழ் தட்டு அச்சுக்கு எனக்கு தட்டுப்பாடு அன்று.

ந.க
15-11-2012, 10:07 AM
பகவத் கீதைக/கர்மயோகம் ஒரு வாக்கியத்திற்கு-'ஏமாற்றுப் பேர்வழியை' - ஒரு விளக்கம் தரும் நிகழ்வை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பார்வை ஆழமாய் ஆளுமையோடு இருக்கிறது. மிக்க நன்றி.

முரளி
29-11-2012, 11:50 AM
கண்ணப்பு அவர்களே, தங்கள் பாராட்டிற்கு நன்றி

Keelai Naadaan
01-12-2012, 01:48 PM
நல்ல, அவசியமான கதை.

தலைமை சரி இல்லாத அலுவலகங்களில் இது போல் நடப்பதில் வியப்பில்லை.

மும்பை நாதன்
17-09-2013, 05:06 PM
கொஞ்ச நேரம் ஒரு அலுவலகத்துக்குள் சென்று நேரில் பார்ப்பது போல் இருந்தது.

நல்ல நடையில் ஒரு அற்புதமான கதையைப் படைததற்கு பாரட்டுக்கள்.

மும்பை நாதன்

முரளி
09-04-2014, 02:08 PM
நன்றி மும்பை நாதன்..

ஜான்
09-04-2014, 04:38 PM
நன்று

முரளி
08-03-2015, 05:41 AM
நன்றி ஜான் ! காலம் தாழ்த்திவிட்டேன் !