PDA

View Full Version : மூவர்ணக் கொடி



ரௌத்திரன்
08-10-2012, 04:59 AM
(அன்று ஆகஸ்டு 15 . 2012
காலை நேரம்.
தேநீர்க் கடையில் உட்கார்ந்திருக்கிறேன்.
ஒரு கையில் டீ கிளாஸ். மறுகையில் சிகரெட்

ஒரு முஸ்லிம் நபர் என்னை நெருங்கி தேசியக்கொடியை என் சட்டையில் குத்திவிட்டுப் புன்னகையோடு விடைபெறுகிறார்.

அன்று மட்டும் அதுவரை எந்த ஆண்டும் இல்லாத ஒரு நெகிழ்ச்சி என் நெஞ்சமெங்கும் பரவியது. அது சுதந்திரநாட்டின் குடிமகன் என்ற சந்தோஷமல்ல. மதநல்லிணக்கம் குறித்த மகிழ்ச்சியே!

ஆனால் அந்த மகிழ்ச்சியையும் முறித்துப் போட்டது "புதிய ஜனநாயகம்" புரட்சி மாத இதழ் கொண்டுவந்த செய்தி.

அது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒன்று. எது என்பது இப்போது என் நினைவில் இல்லை.

அந்தப் பெண்மணி ஊராட்சி மன்றத் தலைவி. ஆயினும் அவர் தேசியக்கொடியை ஏற்றுவதில் உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு உடன்பாடில்லை.

தடுத்து நிறுத்தினார்கள். தாக்கித் துரத்தினார்கள். தாமே ஏற்றினார்கள். இவை அனைத்தும் காவல் துறையின் உதவியோடு நடந்தேறியவை என்பது வேட்கக்கேட்டின் விளிம்பு)


சொல்லுங்கள்!

ஆகஸ்டு 15
சுதந்திர தினமா?
அல்லது
ஆதிக்க வர்க்கம் கொண்டாடும்
ஆண்டுவிழாவா?

அங்கே
ஏற்றி முடித்தது
தேசியக் கொடியா?
அல்லது
ஜாதிக்கொடியா?

அது சரி
தேசியக்கொடியிலேயே
வர்ணபேதங்கள் இருக்கும்போது
தேசத்தில் இருக்கக் கூடாதா என்ன?

சொல்லுங்கள்!

பிராமணக் காற்று
அரிஜனக் காற்று
அகிலத்தில் உண்டா?

"உயர்ந்த ஜாதி"
"உயர்ந்த ஜாதி" என்று
உயிரதிர
உறுமுகிறவர்களே!

உம்மைப் பார்த்துக் கேட்கிறேன்.

கீழ்சாதிக் காரனைத்
தீண்டியதால்
தீட்டுப்பட்டுவிட்டது காற்றென்று
சுவாசத்தை நிறுத்திச்
செத்துவிடச்
சம்மதமா?

எத்தனைச் சூரியன்கள்
உதித்தென்ன?
குருடர்களுக்கு விடியவா போகிறது?

எத்தனை கங்கைகள்
கலந்தென்ன?
கடலின் உப்பு போய்விடுமா?

அறிவிலிகாள்!
அறிவீரா?

அன்று
அந்தத் தேசியக் கொடியை
ஏற்றுவதற்காக
எத்தனைத் தாய்மார்களின்
தாலிக்கொடிகள் இறக்கப்பட்டன
என்பதை அறிவீரா?

தேசியக்கொடியின் வெண்மை
எத்தனைப் பெண்களின்
வெள்ளைப் புடவைகள் என்று
விளங்குவீரா?

அசோகச் சக்கரம்
எத்தனைச் சுமங்கலிகளின்
நெற்றிகளில் இருந்து
துடைக்கப்பட்ட பொட்டென்று
தெரியுமா?

அட
ஜாதிக்குப் பிறந்த
ஜடங்களே!

அதென்ன
பூணூல் என்று நினைத்தீரோ
உயர்ந்த ஜாதிக்காரன் மட்டும்
உரிமையோடு தொட்டுப்பார்க்க?

எப்போது
ஜாதியின் கரங்கள் தீண்டினவோ
அப்போதே
தேசியக்கொடி
தீட்டுப்பட்டுவிட்டது......

எப்போது
ஜாதியின் கரங்கள் ஏற்றினவோ
அப்போதே
தேசியக்கொடி
கோவணத் துண்டாய்க்
கேவலப்பட்டுவிட்டது.....

சந்தேகமென்ன?

நீங்கள் பறக்கவிட்டது
நம் நாட்டின்
தேசியக் கொடியை மாத்திரமல்ல
மானத்தையும் சேர்த்துத்தான்.


--------------ரௌத்திரன்

அமரன்
08-10-2012, 08:44 PM
ரௌத்திரம் தெறிக்கிறது..

சத்தம் போடாதே என்பதைக் கூட சத்தமாகத்தான் சொல்ல வேண்டிக் கிடக்கு.

சாதிபேதம் வேண்டாம் என்று சொல்ல சாதியைத்தான் பயன்படுத்த வேண்டிக்க் கிடக்கு.

இந்தியப் பெண்டிர் தம் தாலிக் கொடி அறுத்து செய்த தாயின் மணிக்கொடி..
குங்குமத் திலகம் வழித்து வைக்கப்பட்ட பொட்டு அசோகச்சக்கரம்..


உருக்கும் கருத்தாடல்.. உருக்கென உள்ளங்களை துளைக்கட்டும்

இந்தக் கவிதைகளின் கருமுட்டைகள் மலட்டுத் தன்மையுடன் உருவாகட்டும்.

ஆதவா
09-10-2012, 04:55 AM
கங்கை கலந்து உப்பு போய்விடுமா?
தேசியக்கொடி ஏற்றி தாலிக்கொடி இறக்கம்
கொடி வெண்மை வெள்ளைப் புடவை
அசோகச் சக்கரம் துடைக்கப்பட்ட பொட்டு

அருமை அருமை.. கவிதை இந்த இடங்களில் நின்று பேசுகிறது! தேசியம் என்றால் அதில் எல்லோரும் அடக்கம்தானே. அதனை புரிந்துகொள்ளாது கொடியேற்றுபவர்கள் வெறும் பெருமைக்காகத்தானே ஏற்றுகிறார்கள். அதிலென்ன தேசியப்பற்று இருக்கப் போகிறது.. சொல்லப்போனால் ஆகஸ்ட் 15ல் தான் எல்லாருக்கும் தேசிய உணர்வு வருகிறதா என்ன??

யாரொருவர் இன்னொருவரை ஏமாற்றாமல் நேர்மையாக உழைத்து பொருளீட்டுகிறாரோ அவரே தேசியப்பற்றுள்ளவராகிறார்... கொடி ஏற்றுதல் எல்லாம் ஒரு நாடகத்தனம். சுதந்திர கலாச்சார பழக்கத்தின் கட்டாய திணிபு. இந்தியாவில்...

உங்கள் “ரெளத்திரம்” புரிகிறது!! தொடரட்டும் கவிக்கோபங்கள்.

jayanth
09-10-2012, 09:33 AM
நியாயமான கோபம்தான் ரௌத்திரன்...

இந்தச் சமுதாய ஏற்ற இறக்கங்களை என்னாலோ உங்களாலோ சீர் செய்ய முடியுமா...???

ரௌத்திரன்
09-10-2012, 10:10 AM
ரொம்ப சரியான கேள்வி!

அப்படின்னா இனிமே நாம எல்லாரும் நம்ம பேனாவ மூக்கு,காது குடையவும், முதுகு சொரியவும் மட்டும் பயன்படுத்தலாமா?

கொறஞ்ச பட்சம் தமிழாவது பொழைக்குமே!

என்ன சொல்றீங்க?-----------ரௌத்திரன்

jayanth
09-10-2012, 10:32 AM
ரொம்ப சரியான கேள்வி!

அப்படின்னா இனிமே நாம எல்லாரும் நம்ம பேனாவ மூக்கு,காது குடையவும், முதுகு சொரியவும் மட்டும் பயன்படுத்தலாமா?

கொறஞ்ச பட்சம் தமிழாவது பொழைக்குமே!

என்ன சொல்றீங்க?-----------ரௌத்திரன்

"நியாயமான கோபம்தான் ரௌத்திரன்..."

என் பின்னுட்டத்தின் முதல் வரியிது...
எனக்கும் கோபம் உண்டு...
உங்கள் எழுத்தை விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு அருகதையிருக்கின்றதோ இல்லையோ... உங்களின் ஆதங்கம் எனக்குள்ளும் இருக்கின்றது...
எழுத்தால் இச் சமுதாயம் சீர் பெறும் நாளை எதிர்பார்த்திருப்போம்...!!!

ரௌத்திரன்
09-10-2012, 10:47 AM
என் கோபத்தை புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி!

அதே நேரம்,
"உங்கள் எழுத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா......" என்பது தேவையற்றது.

என் வரை எவனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல. அது ஆண்டவாக இருந்தாலும்.

ஆனால் என் ஆதங்கம் எல்லாம் இதுதான்.
நம்மால் முடிகிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் முயலுவோமே என்பதுதான்.

அப்படியில்லாமல்,

"கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா, இப்படியெல்லாம் எழுதி உன்னால என்னத்த மாத்திட முடியும்னு நினைக்குற?"

இப்படி எவர் கேட்டாலும் எனக்கு எரிச்சல் வருகிறது.

எத்தனையோ பேர் கேட்டும் இருக்கிறார்கள்.

என் எழுத்து சூரியனாய் இருந்து மானுட உலகுக்கு விடியல் தரமுடிந்தாலும் சரி, ஒரு சின்னஞ்சிறு தீக்குச்சியாய் இருந்து சிறிதளவு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் சரி, எனக்குச் சந்தோஷமே!

என் எழுத்தின் பிறவிப் பயனும் அதுவே!

நன்றி---------ரௌத்திரன்