Log in

View Full Version : கனவுகளின் வயது 66..!



கலைவேந்தன்
14-08-2012, 03:43 PM
http://2.bp.blogspot.com/_eV61fOESvSE/TDTS73OEJpI/AAAAAAAAAKw/WGDOt1DC_Yc/s1600/tiranga.jpg


கனவுகளின் வயது 66..!

வருடங்கள் பல உருண்டோடிவிட்டன..
நம் தாத்தாவுக்கு எள்ளுருண்டைகளும்
அவரின் தாத்தாவுக்கு கொள்ளுருண்டைகளும்
வைத்துப் படைத்து
நம் கடமையைச் சரிவர செய்துவிட்டோம்..

கண்ணீர்விட்டு வளர்த்த இப்பயிரைக்
கருகத்தான் விடவில்லை நாம்..
வளமான உரத்திற்காக
உருகத்தான் விட்டுவிட்டோம்..

அண்ணல் காட்டிய வழிகள் நெடுகவும்
அருகம்புல் வளர்த்துவிட்டோம்..
அவர் வைத்திருந்த கைத்தடிக்கு
தங்கப்பூண் மாட்டிவிட்டோம்..

கோடித்துணிக்கு வக்கற்றிருந்த
சில குடும்பங்களை
கோடிகளில் வலம் வரவிட்டோம்..

சுதந்திரக்காரணத்தால்
சிறை நிறைந்த காலம் போய்
தந்திரக்காரர்களுக்காய்
சுகவாசஸ்தலங்களாக்கினோம்..

கல்வியில்லா கிராமங்களில் கூட
செல்விகள் சித்திகள் செல்வங்கள்
மானாட்ட மயிலாட்டஙக்ள்
நாமாட வைத்துவிட்டோம்..

இனி என்ன செய்யப்போகிறோம்..?

நாம் நன்றாய் உறங்கலாம்..
கனவுகள் நன்றாய் வளர்க்கலாம்..
வல்லரசாய் சிறக்கலாம்..
எதிர்காலத் தலைமுறைக்கு
தலை சிறந்த லாலிபாப்கள் வழங்கலாம்..

ஆம்.. நிறைய யோசிக்கலாம்..
கலாம் கலாம் கலாம்..
விறைத்து நின்று
சந்தர்ப்பக்காற்றினில் படபடக்கும்
தேசிய கொடிக்காய்
கண்கலங்க வணங்கலாம்..!

கலைவேந்தன்
14-08-2012, 04:14 PM
http://www.365greetings.com/resource/picture/Events-I/Indian_Independence_Day/India_independence-3.gif

A Thainis
14-08-2012, 07:59 PM
இன்றைய இந்திய நாட்டின் நிலை சொல்லி அழும் உங்கள் கவி வடிக்கும் கண்ணீர் கண்டேன், அது உண்மை என நானும் நம் நாட்டாரும் அறிவோம்,
இந்த இழிநிலை மாற்றும் காலம் வரும் அன்று நம் கனவுகள் அனைத்தும் நனவுகளாய் வலம் வரும். வாழ்த்துக்கள் கலை.

அமரன்
14-08-2012, 08:32 PM
மீண்டும் பல சுதந்திரன்கள் வரவேண்டும் கலை.

வெள்ளையனிடமிருந்து வாங்கிக் கொள்ளையரிடம் கொடுத்த கதையாகி விட்டது.

ஆனாலும் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று சொல்லும் போது பொங்கும் பெருமையின் அழகு தனிதான்..

M.Jagadeesan
15-08-2012, 02:11 AM
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/india-independence-day.jpg
காந்திஜி, நேதாஜி

2 ஜி யால் உயர்ந்தோம் அன்று!

2G யால் தாழ்ந்தோம் இன்று!

கீதம்
15-08-2012, 02:44 AM
சுதந்திரக்காரணத்தால்
சிறை நிறைந்த காலம் போய்
தந்திரக்காரர்களுக்காய்
சுகவாசஸ்தலங்களாக்கினோம்..

மிகவும் வேதனை தரும் உண்மை.



கல்வியில்லா கிராமங்களில் கூட
செல்விகள் சித்திகள் செல்வங்கள்
மானாட்ட மயிலாட்டஙக்ள்
நாமாட வைத்துவிட்டோம்..

வெட்கவேண்டிய உண்மையிது.




இனி என்ன செய்யப்போகிறோம்..?

விறைத்து நின்று
சந்தர்ப்பக்காற்றினில் படபடக்கும்
தேசிய கொடிக்காய்
கண்கலங்க வணங்கலாம்..!


ஆதங்கப் பெருமூச்சால் கனலும் கவிக்கங்கு,

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று!

Keelai Naadaan
15-08-2012, 03:03 AM
கோடித்துணிக்கு வக்கற்றிருந்த
சில குடும்பங்களை
கோடிகளில் வலம் வரவிட்டோம்..



ஆனாலும், கோடிக்கணக்காண குடும்பங்கள் சற்றேனும் மேம்பட்ட நிலையை அடைந்திருப்பது உண்மையே.
எதிர்காலத்தில் எல்லோருக்கும் எல்லாமும் எட்டும் என நம்புவோம்.

ஜானகி
15-08-2012, 04:06 AM
என்று தணியும் இந்த ஏக்கம்...?

ஆதவா
15-08-2012, 05:48 AM
கலை ஐயா...

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்..

கனவுகளின் வயது என்றதுமே நான் வேறுவிதமாக நினைத்துத்தான் உள்ளே வந்தேன். ஆனால் அதிர்ச்சி... சுதந்திர வருடங்களை இப்படி யாரும் குறிப்பிட்டிருக்கவே மாட்டார்கள்>... உண்மைதானே??? எனக்கென்னவோ ஆங்கிலேயர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை, சுதந்திரம் பெற்றபோது இருந்த கனவு இப்பொழுது வரையிலும் நிறைவேறாமல் வயதான கனவுக்கிழவன் போல இருக்கிறதே என்பதுதான் கவலைக்குரிய விசயம்.. அருமையான கற்பனை!

சுதந்திர உணர்வு என்பது சட்டைப்பையில் குத்தி அலையும் கொடிக்குள் சுருங்கிவிட்டது, சம்பிரதாயமான வணங்கல்களும், வீரர்களுக்கு உயிர்ப்பற்ற வீரவணக்கங்களும் பெருகிவிட்டன.

சுதந்திரம் வாங்காமலேயே இருந்திருக்கலாம்.... இது ஒவ்வொரு ஆகஸ்ட் 15 க்கும் எனக்குள் தோன்றும் கருத்து.

கவிதையின் வர்ணம் கொடியை நினைவூட்டியபடி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.
இத்தினத்தின் சிறப்பான கவிதை.
வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
15-08-2012, 06:28 AM
மனமுவந்து பாராட்டுகள் நல்கிய மன்றப்பெருமக்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

ஆதவா கூறியது போல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் எனக்குள் எழும் பகீர் உணர்வுகள் என்று மடியும் இந்த ஊழலின் தாக்கம்..? என்பது தான்.

இன்றைக்கு சுவிஸ் வங்கிகளில் கிடக்கும் இந்திய பணத்தின் மதிப்பு இருபது லட்சம் கோடிகளுக்கும் மேல் என்று ஊகம் சொல்கின்றன ஊடகங்கள். அவை அனைத்தும் நமது உழைப்பின் எச்சங்கள் தானே..? அவை சேரவேண்டியது நமக்குத் தானே..? ஆனால் நடப்பது என்ன...?

இந்திய அரசியல்வியாதிகளின் மனச்சான்று என்றைக்கு விழிக்கப்போகிறது..? என்று நமது கனவுகள் சாஸ்வதமாகப்போகின்றன..?

விடை தெரியா வினா இது..

அனைவருக்கும் எனது விடுதலை நாள் வாழ்த்துகள்..!

jayanth
15-08-2012, 07:04 PM
காந்திஜி, நேதாஜி

2 ஜி யால் உயர்ந்தோம் அன்று!

2G யால் தாழ்ந்தோம் இன்று!




ஆட்சேபணை அய்யா... அந்தக் காலத்தில் இரண்டல்லவே நிறைய ஜி க்கள் இருந்தார்களே...!!!

கலைவேந்தன்
23-08-2012, 07:27 PM
அதானே..

காந்தி ஜி
நேரு ஜி
நேதா ஜி
சாஸ்திரி ஜி
படேல் ஜி
நௌரோ ஜி..

ஜிப்படி பல ஜி க்கள்..!

jayanth
23-08-2012, 07:49 PM
அதானே..

காந்தி ஜி
நேரு ஜி
நேதா ஜி
சாஸ்திரி ஜி
படேல் ஜி
நௌரோ ஜி..

ஜிப்படி பல ஜி க்கள்..!

நம்ம சொந்த ராஜாஜி ஐ விட்டுடிங்களே...

நாஞ்சில் த.க.ஜெய்
31-08-2012, 06:31 AM
இன்றைய சுதந்திரத்தின் நிலை கூறும் கவிதை அருமை கலைவேந்தன் அவர்களே..இன்றைய நிலை சீர்கேட்டிருந்தாலும் இந்நிலைக்கு உயர்த்திய தியாகிகளின் நிலையினை மட்டுமே எண்ணிப்பார்க்க நினைக்கிறது என் சித்தம் ..ஊழல் எனும் வார்த்தையின் முன்னோடி காத்திருந்து தன பணியினை முடிக்கவியலாது குறு வழியில் சென்று முடித்திட நினைத்த நம் போன்ற ஒருவன் தான் மற்றும் அகிம்சை எனும் கருத்தை ஒத்திருக்காமல் போராடி இந்த சுதந்திரம் பெற்றிந்தால் இந்நிலை தோன்றிருக்காது என்பது என் கருத்து ..இந்த பதிவினை காணும் போது என்னுள் தோன்றும் வலி சிலகணநேரம் இருக்கிறது என்பதே உண்மை ..

கும்பகோணத்துப்பிள்ளை
01-01-2013, 12:15 AM
மெய் ஞானப்புலம்பல்!

கலைவேந்தன்
26-01-2013, 06:35 AM
மிக்க நன்ரி ஜெய் மற்றும் கும்பகோணத்துப் பிள்ளை.