PDA

View Full Version : இந்தியா என் தாய்த்திரு நாடு!



ரௌத்திரன்
20-07-2012, 08:51 PM
இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!


வாள்பிடித்த மரபுயென்று
-------வக்கணையாய்ப் பேசிவிட்டு
வால்பிடித்து வாழுகின்ற
--------வகையான தத்துவத்தை
நூல்வடித்து வைத்திருக்கும்
--------நாணமே சிறிதுமில்லா
சீழ்பிடித்த பிணங்களவர்
--------சூழ்ந்திருக்கும் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!



சூடு சொரணையெலாம்
---------சோற்றுக்கு விற்றுவிட்டு
கூடு தனைவளர்க்க
----------கூனிக் குறுகிநிற்பார்!
நாடு எரிகையிலும்
----------நெஞ்சில் பதற்றமின்றி
வீடு காத்திருக்கும்
----------வீரமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!



தாகம் என்றொருவாய்த்
--------தண்ணீர்க் கேட்டழுவார்
தேகம் துடிப்பதனைத்
--------தள்ளிநின்று பார்த்துவிட்டுப்
போகுமுயிர் போனபின்னே
--------பிணத்தை வலம்வந்தே
நீர்க்குடம் உடைக்கும்;ஈர
--------நெஞ்சமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!



ஈழம் இடுகாடாய்
-------இனத்தின் சுடுகாடாய்
ஓலம் மிகுத்தாலும்
--------ஒக்கக் குரலெழுப்பி
காலம் கடத்துகின்ற
---------கண்கட்டு வித்தைகளின்
ஜாலம் காட்டுகின்ற
---------அரசதனைக் கேளார்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!




தட்டிக் கேட்பதற்கும்
--------தலைபோகும் என்றிடுவார்!
எட்டி உதைப்பதற்கும்
---------எடுப்பர் காலென்பார்!
முட்டிக்கொண் டழுவதற்கும்
---------மனதில் திடமின்றிப்
பெட்டிப்பாம் பாய்க்கிடக்கும்
---------பேடிகளின் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!




தகப்பன் தலையிங்கே
---------தவிக்கும் உடலெங்கோ!
இடுப்பில் இதையறியா
---------இளம்பிள்ளை அழுகிறது!
ஒப்பாரி வைப்பாளோ
---------தாலாட்டுப் படிப்பாளோ
அப்"பாவி" மகள்கதை
---------ஐயா! நமக்கெதற்கு?
துப்புகெட்ட மக்காள்!நீர்
----------தூங்கிக் கொண்டிருங்கள்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!




---------ரௌத்திரன்

சுகந்தப்ரீதன்
30-07-2012, 04:22 PM
இதுபோல வெட்கப்பட்டு வேதனையுற்ற வெறும்பயல்களில் நானும் ஒருவன் என்பதிலேயே திருப்தியுறும் சிறுமனம் எனக்கும்... வேறென்ன நான் சொல்ல..?!

சிவா.ஜி
30-07-2012, 06:00 PM
நெஞ்சு வெந்து போவதைத் தவிர வேறென்ன செஞ்சுவிட முடியும்...???