PDA

View Full Version : எழுவாய் தமிழா!



ரௌத்திரன்
20-07-2012, 08:44 PM
எட்டுத் திக்கும் வணங்கட்டும் - நம்
====ஆணைக் கிங்கு இணங்கட்டும்!
மக்கள் இதழ்கள் மலரட்டும் - ஒரு
====மங்கலப் பொழுது புலரட்டும்!


உறைக்குள் உறைக்குள் உறங்கிக் கிடக்கும்
====வாளை எடுத்துச் சாணையிடுவோம்!
தரைக்குள் அதர்மம் வெட்டிப் புதைத்து
====தரைமேல் தர்மம் வாழ விடுவோம்!

எந்த நாளும் எங்கள் சிங்கத்
====தமிழர் தலைகள் தாழ்ந்த தில்லை!
இந்த உண்மை உணர மறந்து
====வந்தோர் தலைகள் வாழ்ந்த தில்லை!


வானம் பரிசாய் வருவ தேனும்
====வளைந்து கொடுக்கும் சாதி இல்லை!
மானம் காக்க எதையும் இழப்போம்
====மண்டி இட்ட சேதி இல்லை!


மூங்கை களாக வீட்டுக் குள்ளே
====முடங்கிக் கிடந்தது போதும் தமிழா!
வேங்கை குலத்தின் வீரம் என்ன
====விளங்க வைப்போம் வாராய் தமிழா!


முத்தமிழ் மாதர் கண்ணீர்த் துளியில்
====மூர்ச்சை யுற்ற புத்தன் தன்னை
பித்தச் சிங்களர் ரத்தம் தெளித்து
====விழிக்க வைப்போம் வாராய் தமிழா!


பொன்னார் தமிழர் பொறுமை எடுத்துச்
=====சொன்னால் விளங்கா சழக்கர் தமக்கு
அன்னார்ப் பெண்டிர் வெள்ளைச் சேலை
=====அமைதிக் கொடியாய் வானில் உயர்த்து!


இன்னோர் இனத்தால் இந்தப் புவிமேல்
=====இனியொரு தமிழன் மாண்டான் என்றால்
மண்ணில் எந்த மனிதச் சாதியும்
=====இருக்கா தென்று இன்றே உணர்த்து!



------------ரெளத்திரன்

vasikaran.g
29-07-2012, 08:02 AM
கவிதை பொருள் பொதிந்த பொதி ..வாழ்த்தக்கள்

சுகந்தப்ரீதன்
30-07-2012, 04:10 PM
அறியாமையில் இருப்பவனை எழுப்பி விடலாம்... அரைதூக்கத்தில் இருப்பவனையும் எழுப்பி விடலாம்.. ஏன் முயற்சித்தால் முழுதூக்கத்தில் இருப்பவனையும்கூட எழுப்பிவிடலாம் இதுபோன்ற எழுச்சியூட்டும் கவிதை வரிகளால்..!! ஆனால் மதுவில் மதி மயங்கி உணர்வுமங்கி கிடக்கும் (அ)சிங்க தமிழனின் தலையை எதைக்கொண்டு உயர்த்துவதாய் உத்தேசம்..?!

சிவா.ஜி
30-07-2012, 05:36 PM
எப்படியோ எழுந்தால் சரி....

விலையில்லா பொருட்களுக்காய் வீதியிறங்கும் தமிழன்
நிலை மறந்து தலையெடுப்போரைத் தாக்க இறங்கவில்லையே...

வாழ்த்துக்கள் ரௌத்திரன்.