PDA

View Full Version : புற்றுநோய்க்கு தடுப்பூசி



அமீனுதீன்
07-07-2012, 04:31 PM
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு என்று புற்றுநோய் தாக்குதலை அதிகம் பார்க்கிறோம். இரண்டு பேருக்கான உரையாடலில்,அந்த இருவரில் ஒருவருக்குத் தெரிந்த யாரோ ஒரு நபருக்குப் புற்றுநோய் தாக்கியிருப்பது பற்றிய பேச்சு தவிர்க்க முடியாததாகி வருகிறது. மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கர்ப்பவாய் புற்றுநோயின் தாக்குதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள், மற்ற புற்றுநோய்களைத் தவிர்க்க இன்றைய மருத்துவத்தில் வழி உண்டு என்கிற செய்தி, பெண்களின் வயிற்றில் பால் வார்க்கும்.

கர்ப்பவாய் புற்றுநோயை வர விடாமல் செய்கிற அந்த தடுப்பூசியைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமி, பெண்களோட கர்ப்பவாயைத் தாக்கறதோட விளைவு தான், கர்ப்பவாய் புற்றுநோய். இந்த
வைரஸ் சத்தமில்லாம தன் வேலையைச் செய்யறதோட சரி... வேற எந்த அறிகுறிகளையும் காட்டாது. 10-15 வருஷங்கள் கழிச்சுதான், நோய் விஸ்வரூபம் எடுக்கும். வெள்ளைப்படுதல், துர்நாற்றத்தோட வெள்ளைப்போக்கு, ரத்தப்போக்கு, அந்தரங்க உறவின்
போது வலி மற்றும் ரத்தப் போக்கு... இதெல்லாம்தான் அறிகுறிகள்.

பொதுவா இந்த வகைப் புற்றுநோய், கல்யாணமாகி, உடலுறவு கொண்ட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். இன்றைய நவீன மருத்துவத்துல, கல்யாணமாகாத இளம்பெண்களுக்கு முன்கூட்டியே போடப்படற ஒரு தடுப்பூசியின் மூலமா, கல்யாணத்துக்குப் பிறகான புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க முடியும்.

கல்யாணமாகாத பெண்களுக்கு இந்தத் தடுப்பூசியின் மூலமா 100 சதவிகித நன்மை கிடைக்கும்னா, கல்யாணமான பெண்களுக்கு 50 சதவிகித நன்மை கிடைக்கும். கல்யாணமான பெண்களுக்கு முதல்ல பாப் ஸ்மியர் சோதனை செய்து பார்த்து, அதுல நெகட்டிவ்னு தெரிஞ்சாதான் இந்த ஊசியைப் போட முடியும். இந்த ஊசியை மூன்று கட்டமா போடணும்.

முதல் டோஸ் போட்டு 2 மாதங்கள் கழிச்சு, 2வது டோஸ். 6 மாதங்கள் கழிச்சு 3வது டோஸ். ஒருவேளை முதல் ரெண்டு டோஸ் போட்டு, மூணாவது டோஸ் போடறதுக்குள்ளயே, அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமாகி, கர்ப்பம் தரிச்சிட்டா, பிரசவமாகிற வரை போடக் கூடாது. பிரசவமான பிறகு, தாய்ப்பால் கொடுக்கிற போதுகூட போடலாம். 9 வயது முதல் 45 வயதுப் பெண்கள் வரை இதனால பலனடைய முடியும். சரியான விழிப்புணர்வு வந்தா, அடுத்த தலைமுறைப் பெண்களை, கர்ப்பவாய் புற்றுநோய்லேருந்து. காப்பாத்தலாம்.

நன்றி: தினகரன், 17-6-2012 .

(மருதுவ ஆலோசனைக் கட்டுரைகள் சமுதாய விழிப்புணர்வுக்காக இங்கே மறு பதிவு செய்யபடுகின்றன)

கீதம்
09-07-2012, 12:53 PM
கர்ப்பவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை ஆஸ்திரேலியப் பள்ளிகளில் ஒன்பதாம் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பள்ளியிலேயே முகாம் அமைத்துப் போட்டுவிடுகிறார்கள். இது ஒரு நல்ல முன்னேற்பாட்டு நடவடிக்கை. இந்தியாவில் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் வேறெந்த பரிசோதனைகளும் செய்யாமல் திருமணமான கிராமப் பெண்களுக்குப் போட்டு பரிசோதித்ததாக ஒரு மருத்துவக் கட்டுரையில் படிக்க நேர்ந்து மனம் வருந்தினேன். சரியான முறையில் சரியான தருணத்தில் உபயோகித்தால் பயனை முழுவதுமாய் அடையலாம். இப்புற்றுநோய்த் தடுப்பூசி பற்றியக் கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி அமீனுதீன்.