PDA

View Full Version : மழலை - சிறுகதை



otakoothan
25-06-2012, 08:53 AM
மழலை -- சிறுகதை


பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் கண்ணீர் மல்க மனமுருகி கணவனும் மனைவியும் மனதார ஆண்டவனை வேண்டினார்கள். அமைதியான சூழலில் ஆள் அரவமற்று கோவில் பளிச்சென்றிந்தது. ஒன்றாக பின்னிப் பிணைந்து வளர்ந்திருந்த ஆலமரமும் வேப்பமரமும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தன.

அந்த கணவனும் மனைவியும் மனதில் சோகமே உருவாக அந்த மரத்தடியில் போடப்பட்டிருந்த படிக்கட்டில் வந்து அமர்ந்தார்கள்.

“ஏங்க... இந்த அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் எத்தனை வருசம் வந்து சுத்தியிருப்பேன். போகாத கோயிலுண்டா? குளிக்காத குளமுண்டா? இந்த ஆண்டவனுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா? கல்லுங்கறது சரியாதான் இருக்கு.”

“தெய்வானை.. தெய்வத்தை நொந்து பயனில்லை. எல்லாம் நம்ம விதி.”

“நாம என்ன வீடு வாசல் நகை நட்டு காசு பணம் பட்டம் பதவி வேணும்னாக் கேட்டோம்...? ஒரே ஒரு குழந்தைதான கேட்டோம். கடைசி காலத்தில் நம்மை அநாதை பொணம்ன்னு ஒதுக்காம கொள்ளி வைக்க ஒரு குழந்தையைத்தானே கேட்டோம். அதைக் கொடுக்க மனசில்லாத கடவுளை கல்லுங்காங்காம வேறு எப்படி சொல்றது?”

கணவன் மாரிமுத்து கண்ணீரைத் துடைத்தபடி “எல்லாம் நம்ம விதி” என்றார்.

இவர்களுடைய பேச்சை அமைதியாக எதிர்புறம் அமர்ந்திருந்த 21 வயது மதிக்கத்தக்க வாலிபன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியாக அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான்.

“ஐயா மன்னிக்கணும். உங்களுடைய பிரச்சனையில் தலையிடுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம்..”

கணவனும் மனைவியும் வாலிபனை ஏற இறங்கப் பார்த்தார்கள். அகன்ற நெற்றியில் சிறிதளவு விபூதி... நடுவே குங்குமம். சிரித்த முகம். தெளிவான பார்வை.

மீண்டும் கணவன் மனைவியை பார்க்க, மனைவி கணவனை பார்க்க,

“ம். சொல்லு தம்பி”

“இந்த அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் கோயிலில் நம் முன்னோர் வளர்த்தது ஏன் தெரியுமா? கோயிலுக்கு ஆயிரம் பேர் வருவாங்க போவாங்க. நல்லவன் கெட்டவன் அத்தனை பேரும் விடுகின்ற மூச்சில் கிருமிகள் வெளிப்படும். இந்த வேப்பமரம் காற்றுக்கும் சரி , நிழலுக்கும் சரி கிருமியை அழிக்கின்ற ஆற்றல் உள்ளது. அதே போல்தான் இந்த அரசமரமும்! கோயிலின் இருக்கும் தேவையற்ற சப்தங்களை தன்னிடம் இழுத்து அடக்கி கொள்ளும் ஆற்றல் இந்த அரசமரத்துக்கு உண்டு.”

”ஆமாம் தம்பி. நீ சொல்றது சரிதான்.”

“ஏம்பா, புள்ளை உண்டாகணும்மின்னா புள்ளையார் இருக்கிற அரசமரம் வேப்பமரத்தை சுத்தணுமின்னு, பெரியவங்க தானே சொல்லியிருக்காங்க? எனக் கேட்டாள் தெய்வானை.

”உண்மைதானம்மா.. சும்மா மூணு சுத்து, ஒன்பது சுத்துன்னு சுத்தி பயனில்லை. ஒடம்பில் வியர்வை வெளியே வரணும். அந்த அளவுக்கு நிறைய தடவ மனது ஒன்றுபட்டு இரண்டு மரத்தையும் சுத்தணும். பின் மரத்தடியில் உட்கார்ந்து ரெண்டு மரத்தின் காற்றையும் குறைந்தது கால் மணி நேரம் சுவாசிக்கணும். கர்ப்பப்பையிலுள்ள கிருமிகள் அழியும். இதுதான் இந்த இரண்டு மரத்தோடு பெருமை. எதுக்கும் நீங்க ஒரு நல்ல மருத்துவரை கலந்து அவர் சொல்றபடி செய்வது நல்லது” என்றான் அந்த வாலிபன்.

”தம்பி, நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் எல்லாம் பார்த்தும் எந்தவித பயனுமில்லை. பணம்தான் தண்டமாச்சு” என்று சலித்தபடி சொன்னார் தெய்வானையின் கணவர்.

“அய்யா... இப்போ எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்திருச்சு. அறிவியல் முறையில் குழந்தை பெற வசதி வந்துவிட்டது. மேல் படிப்பு படித்த டாக்டரை பாருங்கள்…கட்டாயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும்”

கணவனும் மனைவியும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இருவரும் தலையை குனிந்துக் கொண்டார்கள். தெய்வானை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

வாலிபனுக்கு ஏதோ போலாகியது.

கணவன் மனைவியை அணைத்தபடி கண்களை துடைத்துவிட்டு, தாழ்ந்த குரலில் “அதற்கு வழியுமில்லை தம்பி” என்றார்.

”ஐயா…நீங்க சொல்றது…”

”ஆமா தம்பி… நாட்டு வைத்தியர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதால என் மனைவியின் கர்ப்பப்பை புண்ணாகி... கடைசியில் கர்ப்பப்பையை எடுத்துவிட்டோம்” என கண்ணீர் பொங்க சோகமானார்.

அரச மரத்திலிருந்து படபடவென இறக்கையை அடித்தபடி நிறைய பறவைகள் பறந்தன.

”ஐயா... கவலைப் படாதீங்க. எத்தனையோ அனாதை மடங்கள் இருக்குது. அதில் ஏதேனும் ஒரு குழந்தையை சட்டப்படி எடுத்து வளருங்களேன்” என்று வாலிபன் சொன்ன பின்பு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொண்டனர்.

வாலிபனின் கையைப் பிடித்தபடி ”தம்பி... இந்த யோசனையும் இருந்துச்சு. ஆனா அந்த குழந்தை ஏழையாவும் அதே சமயம் தாய் தகப்பன் இல்லாத அனாதையாவும் இருக்கணும். அப்பதான் அது எங்களை உண்மையான தாய் தகப்பனா நினைச்சு வளரும். ஆனா அந்த மாதிரி கிடைக்கலயே..” என்றார்.

”கண்டிப்பா இந்த உலகத்தில் நீங்க சொல்கிற மாதிரி ஒரு குழந்தை கிடைக்கும் ஐயா, கவலை படாதீர்கள். ஆண்டவன் நிச்சயம் உங்களுக்கு நல்ல வழி காட்டுவான்” என்று சொல்லியபடி விடை பெற்றான் அந்த வாலிபன்.

சில பறவைகள் அந்த வேப்பமரத்தில் வந்து ஒய்யாரமாக அமர்ந்தன.

ஒரு மாதம் கழித்து, கோவை வீரபாண்டி பிரிவில்… “பச்ச ஒடம்புக்காரின்னு கூட பாக்காம… நீ பண்ணுனது கடவுளுக்கே பொறுக்காதுடீ... ....” இன்னும் கெட்ட வார்த்தைகளால் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.

”சீ…ஓடுகாளி... அவுசாரி… கூடப்பிறந்தவ மாதிரி உன்னை பார்த்துக் கொண்டு, பிரசவத்துக்கெல்லாம் செலவு செஞ்சு பாத்துகிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.” இது அந்த சுப்பம்மா.

இன்றைக்கு பொதுக்கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆள் சேர்க்கிற நிலையில், காசு வாங்காமலேயே அவர்களை சுற்றி ஒரு பெரும் கூட்டம் சேர்ந்தது.

முன்னால் நாம் சந்தித்த அதே வாலிபன் போலீஸுக்கு போன் செய்தான். சற்று நேரத்தில் போலீஸ் இரு பெண்களையும் ஜீப்பில் ஏற்றிச் சென்றது.

காவல் நிலையத்தில் ஆய்வாளர் மாலதி விசாரணையை துவக்கினார்.

“அம்மா நான் கூலி வேலை செய்த போது மேஸ்திரியை காதலித்து கல்யானம் பண்ணிட்டேன். புருசன் குடிகாரன். தினம் தினம் அடி உதைதான். பொறுக்க முடியாமல் சித்தி வீட்டுக்கு ஓடி போனேன். அவர்கள் என்னை ஏற்கவில்லை. எங்க போறதுன்னு தெரியலே..அப்பதான் இந்த சண்டாளி எனக்கு அறிமுகமானா…”

அதற்குள் அந்த பெண்… “அம்மா... இவ என்னை சந்திச்சப்ப இவ நாலு மாசம் உண்டாயிருக்கறதாவும், கருவை கலைக்கணுமின்னும் சொன்னா. நான்தான் வேண்டாம்... உனக்கு நல்லபடி பிரசவம் பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்ன்னு சொல்லி 7 மாசத்திற்கு அப்புறம் நான்தாம்மா அவளுக்கு வேண்டியதை நானே செஞ்சு அவ பிரசவத்தையும் பாத்துக்கிட்டேன்.”

ஆவேசமா பேசிக் கொண்டிருந்த சுப்பம்மாவை கோபத்துடன் இடைமறித்தாள் அந்த பெண்.

“புள்ளை பிறந்தது. அதை நல்ல விலைக்கு வித்துடலாம். ஆஸ்ப்பிட்டல் செலவு போக ஆளுக்கு பாதின்னு சொல்லி நான் பெத்த ரெண்டு குழந்தைகளையும் எனக்கு தெரியாமல் பெத்த நாளே வித்துட்டாம்மா… எனக்கு பணமும் தரல. வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாம்மா..”

”இல்லைம்மா…அவ… “என்று சுப்பம்மாள் சொல்ல வருவதற்குள்…

மாலதி தன் கையில் லத்தியை எடுத்து நாலு போடு போட்டார்.

“உண்மையை சொல்லுடி… குழந்தைகள் எங்கே? யார் கிட்ட வித்த?”

“அய்யோ.. அடிக்காதீங்க.. உண்மையை சொல்லிடறேன்.”

“ரைட்டர் இந்த மூதேவி சொல்றதை வாக்குமூலமா எழுதுங்க…”

அடுத்த 1 மணி நேரத்தில் ஆய்வாளர் 7 பேர் கொண்ட கும்பலை அள்ளிக் கொண்டு வந்தது.

அதில் நாம் முதலில் சந்தித்த அந்த கணவன் மனைவியும் இருந்தார்கள்.

“ஏய்..இங்க வா… உன் பேரு என்ன?”

“தெய்வானை..ங்கம்மா”

”என்ன நடந்ததுன்னு உண்மையைச் சொல்லு. பொய் கிய்யுன்னு சொன்ன... மவளே தெரியுமில்லை என்ன நடக்குமின்னு?”

“அம்மா எனக்கு ஒரு அனாதை கொழந்த வேணும்ன்னு கேட்டிருந்தேன்.. அதோ அந்த பொம்பளதான் என் தங்கச்சி பிரசவத்துல குழந்தையை பெத்துப் போட்டுட்டு அனாதையா எங்களையும் இந்த குழந்தைகளையும் விட்டுட்டு போயிட்டா… இதுகளை வேணும்ன்னா நீங்க எடுத்துக்கோங்க…ன்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு குழந்தையை ஒரு மாசததிற்கு முன்னாடி எங்கிட்ட கொடுத்தாம்மா…வேற எதுவும் எனக்கு தெரியாதும்மா..”என்று ஆய்வாளர் காலில் விழுந்த தெய்வானை “அம்மா தயவுசெஞ்சு இந்த குழந்தையை என்னிடமிருந்து பிரிச்சிராதிங்கம்மா..” என்று கதறினாள்.

போலீஸ் குழு கவனித்த கவனிப்பில், அந்த கும்பல் ஒரு சமூக விரோத செயல்களை நீண்ட காலமாக செய்து வந்தது தெரிய வந்தது.
தடுமாறி வந்தவர்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததும், குழந்தை பிறந்தால் அதை விற்று விடுவதுமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அங்கு வந்த அந்த வாலிபன், ஆய்வாளர் மாலதியை பார்த்து, ”அம்மா நான்தான்மா உங்களுக்கு போன் பண்ணினேன். இந்த பிரச்சனைக்கும் நான்தான்மா காரணம்.”

”என்ன சொல்ற...?”

“ஆமாம்மா... இந்த பெண்தான் என்னோட பொஞ்சாதி. ஒரு காலத்தில் மனசு சரியில்லாம குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். நான் ஒரு மேஸ்த்திரியாய் இருந்ததனாலே, கிடைத்த பணத்தையெல்லாம் தண்ணியடிக்கவே செலவு செஞ்சேன். பொண்டாட்டி என்னய விட்டுட்டு ஓடீட்டா.. அப்புறம் கொஞ்ச நாளுக்கு பிறகு மனம் திரும்பி வந்து பார்த்தால்... மனைவியைக் காணோம்.”

சொல்லி முடிப்பதற்குள்... அவன் மனைவி ஓடி வந்து அவனைக் கட்டி பிடித்தாள் ”என்னைய மன்னிச்சிருங்க…”

“இந்தாப்பா உன் மனைவிய சந்தோசமா கூட்டிட்டு போ. ஆனா கோர்ட் கேசுன்னு விசாரணைக்கு கூப்பிட்டா வரணும் தெரிஞ்சதா? இந்தா உன் குழந்தைகள்.”

“அம்மா… இதுல ஒரு குழந்தைய அந்த தம்பதிகளிடமே கொடுக்க விருப்பப்படறேன். எனக்கு அவங்களை முன்னமே தெரியும். பாவம்... கோயிலில் அவர்கள் அழுத அழுகை இன்னமும் என் கண்ணில் நிற்கிறது. அவர்களே என்னுடைய இந்த ஒரு குழந்தையை வளர்க்கட்டும். இந்த குழந்தை அவர்களுக்கே சொந்தம். நாங்க எக்காலத்திலேயும் சொந்தம் கொண்டாட மாட்டோம்ன்னு எழுதி தர்றோம்மா.”

கண்கள் குளமாக அந்த வாலிபனையே பார்த்துக் கொண்டிருந்தாள் தெய்வானை.

- கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
9952827529

jayanth
25-06-2012, 11:01 AM
திருப்பங்களுடன் கூடிய நல்ல கதை. எழுத்துப்பிழை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பக அமைந்திருக்கும்.பாராட்டுக்கள் நண்பரே...

கீதம்
26-06-2012, 10:32 PM
குழந்தையில்லாதவர்களின் நிலை மிகவும் வேதனையானது. தம்மளவில் அவர்கள் மன வேதனையை மறந்திருந்தாலும், சுற்றியுள்ளவர்களால் அடிக்கடி நினைவூட்டப்பட்டு துயரங்கொள்வர். பணம் படைத்தவர்கள் சிலரும், அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுக்க மனம் ஒன்றி முன்வருவதில்லை. சாதி, முன்வினைப்பயன், மரபணுவியல் என்று என்னென்னவோ காரணம் சொல்லிப் புறக்கணிக்கின்றனர். இக்கதையில் சொல்லப்படும் காரணம் வியப்பளிக்கிறது. ஏழையாகவும், தாய் தகப்பனற்றும் ஏராளக் குழந்தைகள் ஆதரவற்று அநாதை இல்லங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. எனவே அப்படியொரு குழந்தையை சட்டப்படி தத்தெடுப்பதால் எந்த சிக்கலும் வரப்போவதில்லை.

நல்ல,சுவாரசியமான கதைக்குப் பாராட்டுகள்.

சிவா.ஜி
27-06-2012, 08:35 AM
நல்ல கதை. தயவுசெய்து யாரேனும் பொறுப்பாளர்கள் இதனை படித்தது பிடித்தது பகுத்திக்கு நகர்த்த வேண்டுகிறேன். இப்பகுதி சொந்த படைப்புகளுக்கு மட்டுமே என்பதால் என் இந்த வேண்டுகோள்.