PDA

View Full Version : புதிதாய் பிறந்த கவிதை....



Nanban
06-06-2004, 06:43 PM
புதிதாய் பிறந்த கவிதை...



சுழன்றடித்த காற்றின் வேகம்

மனம் புகுந்து

சூன்யமாக்கிப் போனது.



இறுகிய கடல் விரட்டிய

வெளிச்சத்தில்

மீந்த இருட்டுக் கரைசல்

சூன்யம் நிறைத்தது.



விரட்டிய அலை நீரோட்டத்தில்

வெறுமை நிறைந்த

காலிப்பானையாய் மிதந்து போனது

எஞ்சிய கனவுகளும்.



கரைந்து விழுந்த மண்சுவரில்

அமுங்கிப் போனது

கனவுகள் சமைக்கும் அடுப்பும்.



அனைத்துமிழந்த அகதியாய்,

வானிலிருந்து வீழும்

உணவுப்பொட்டலம் தேடி

அலைச்சல்.



கரைமீறி பனைதொட்டு ஓடும்

வெள்ளத்தில் நீர் தேடும் தாகம்



புணர்வாழ்வு மையத்தில்

வாழ்ந்த வாழ்வின்

அடையாளம் அறியாத

அவமானங்கள்...



மீண்டும் வாழ்ந்துகாட்டும் வெறியில்

அனைத்து திசுக்களிலும் அவஸ்தையாய்

அலம்பிக் கொண்டிருக்கிறது -

சுயமாய் சமைத்து

பசியாறத் துடிக்கும் வாழ்க்கை....

thamarai
06-06-2004, 07:32 PM
மீண்டும் வாழ்ந்துகாட்டும் வெறியில்

அனைத்து திசுக்களிலும் அவஸ்தையாய்

அலம்பிக் கொண்டிருக்கிறது -

சுயமாய் சமைத்து

பசியாறத் துடிக்கும் கவிதை....



வார்த்தையாய் வெளிப்படுத்திய விதம் அருமை...

வாழ்த்துக்கள்...

Nanban
06-06-2004, 07:49 PM
நன்றி தாமரை... இந்த நள்ளிரவில் யார் இருப்பார்கள் படிக்க என்று எண்ணிக் கொண்டே, கடைசியாய் ஒரு வலம் வந்துவிடலாமே என்று பார்த்த பொழுது... உங்கள் பதிவு.... நன்றி....

kavitha
07-06-2004, 03:29 AM
புணர்வாழ்வு மையத்தில்

வாழ்ந்த வாழ்வின்

அடையாளம் அறியாத

அவமானங்கள்...

:?:

என்றால் என்ன நண்பரே?

இன்று இதே போல் நானும் ஒரு கவிதை குறித்த கவிதை எடுத்துவர.. என்னே வியப்பு! கொஞ்சம் வேலை பளு பிறகு அதை வெளியிடுகிறேன்.

பரஞ்சோதி
07-06-2004, 06:34 PM
நல்ல கவிதை நண்பரே! நீண்ட நாட்களுக்குப் பின்பு வந்து பதித்த கவிதைகள் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.



மனிதனை மனிதன் அவமானப்படுத்தும் பகுதிகள் நிறையவே, அதில் ஒன்று புணர்வாழ்வு மையம். இல்லை என்று வந்த மனிதனிடமே எதிர்பார்த்து கையேந்து கயவர்கள் நிறைந்த உலகமாற்றே, எப்படி மாற்றுவது?

இளசு
07-06-2004, 10:09 PM
சுதந்தரம்...

இல்லாதபோது மட்டுமே

உணரப்படும்...





அருகில் இருந்து பார்த்த அனுபவம்

உங்கள் வரிகளைப் படித்ததும்...



சொல்லாட்சி உங்கள் சிறப்புரிமை நண்பன்..

பாராட்டும் வாழ்த்தும்...





தொடரட்டும்...



எழுதுவது போதை என்பீர்கள்..

உங்களுக்குத் தெளியவேக் கூடாது என்று வேண்டும்

கூட்டத்துக்கு நான் தலைவன்...

பாரதி
08-06-2004, 01:42 AM
ஒவ்வொரு முறையும் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பதை கண்டுகொள்ள, திரும்ப திரும்ப படித்து கடைசியில் (ஓரளவுக்கு) அனுமானிக்கும் போது கொஞ்சம் மனதில் மகிழ்ச்சியும், பின் கவிதையின் கனத்தில் மனம் கொஞ்சம் சங்கடப்படவே செய்கிறது நண்பரே.

இக்பால்
08-06-2004, 04:33 AM
கவிதையைப் படித்ததும் என்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சு.

ஏனோ தெரியவில்லை. அருமையாக கொடுத்தமைக்கு நன்றியுடன்

பாராட்டுகள். -அன்புடன் இக்பால்.

Nanban
08-06-2004, 08:04 PM
பரஞ்சோதி தொகுத்து அளித்த மே மாதப் பதிவுகளை பார்த்த பொழுது, சென்ற மாதத்தில் நான் பதிந்தவை - இரண்டே இரண்டு தான். மீதி உள்ளவை எல்லாம், ஏப்ரல் மாதப் பதிவுகள். ஆனால், நிறைய எழுதியது போன்ற ஒரு உணர்வு... எப்படி... வெறும் விவாதங்கள்... ஆனால், படைப்பாக வந்தவை இரண்டே இரண்டு மாத்திரம் தான். என்ன ஆயிற்று..?



எனக்கு என்ன ஆயிற்று? என் எழுதும் திறமைகள் எல்லாம் போய்விட்டதா? அல்லது வெறும் வாசிப்பே திருப்தி தரும் அளவுக்கு வளர்ந்து விட்டதா?



மழை பெய்து முடிந்ததும், ஊரெல்லாம் துடைத்து வைத்தது போன்று ஒரு 'பளிச்' தூய்மை தெரியுமே - அது போல இருக்கிறது மனம். ஆமாம் நன்றாக துடைத்து வைத்தது போன்று... காலியாகக் கிடக்கிறது. மணற்படுகையின் அடியில் கிடக்கும் நீர் மண் விலக விலக ஊற்றெடுக்குமே அது போல, வெளியேறி வடியத் துடிக்கிறது. யாராவாது உட்கார்ந்து பொறுமையாகத் தோண்ட வேண்டுமே...?



வெடித்து ஊற்றாகக் கிளம்பத் துடிக்கும் அந்த அவஸ்தயான உணர்வுகளைத் தான் மேலே எழுதினேன்....



இள்சுவின் பார்வையில் விடுதலை அடையத் துடிக்கும் மனமாக அது தோன்றியிருக்கிறது. கவிதையை மீண்டும் வாசித்த பொழுது, அது உண்மையாகத் தான் இருக்கிறது. விடுபடத் துடிக்கும் கவிதைகள் - என் தனி உணர்வு... விடுதலை என்பது பொதுவாக உணர முடிகிறது கவிதையில்... வாசிப்பவைன் அனுபவத்தால், கவிதையின் தகுதியும் உயரும் என்பது அறிந்தது தான். இளசுவின் தகுதியால், என் கவிதையின் தரமும் உயர்ந்தது என்பதில் மகிழ்ச்சி....



மற்றபடிக்கு, கவிதையின் நோக்கம் கழிவிரக்கம் அல்ல...



கவிதை எழுதாமல், வெறுமனே மற்றவர் கவிதைகளை வாசிப்பது என்பது, சொத்தை எல்லாம் இழந்து ஒட்டாண்டியான ஒருவன், யாசித்துப் பிழைக்கும் நிலையினைப் போன்றிருக்கிறது எனக்கு... கவிதை எழுதுவது என்பது சுயமாக உழைத்துப் பிழைக்கும் திருப்தி....



கொஞ்சம் கனமாக எழுதிவிட்டேன் போலிருக்கிறது....



நண்பர்கள் பரஞ்சோதி, இளசு, பாரதி, இக்பால் அவர்களுக்கு நன்றிகள்....



கவிதா வாக்களித்த கவிதை பற்றிய கவிதை இன்னும் வரவில்லை... ஒருவேளை கொ.ப.செ. ஆக இருந்தவர்கள் யாருமே வாக்களித்தை காப்பாற்ற மாட்டார்களோ என்னவோ....?

இளசு
08-06-2004, 09:55 PM
படைப்பாக வந்தவை இரண்டே இரண்டு மாத்திரம் தான். என்ன ஆயிற்று..?



எனக்கு என்ன ஆயிற்று? என் எழுதும் திறமைகள் எல்லாம் போய்விட்டதா? அல்லது வெறும் வாசிப்பே திருப்தி தரும் அளவுக்கு வளர்ந்து விட்டதா?



மழை பெய்து முடிந்ததும், ஊரெல்லாம் துடைத்து வைத்தது போன்று ஒரு 'பளிச்' தூய்மை தெரியுமே - அது போல இருக்கிறது மனம். ஆமாம் நன்றாக துடைத்து வைத்தது போன்று... காலியாகக் கிடக்கிறது. மணற்படுகையின் அடியில் கிடக்கும் நீர் மண் விலக விலக ஊற்றெடுக்குமே அது போல, வெளியேறி வடியத் துடிக்கிறது. யாராவாது உட்கார்ந்து பொறுமையாகத் தோண்ட வேண்டுமே...?



வெடித்து ஊற்றாகக் கிளம்பத் துடிக்கும் அந்த அவஸ்தயான உணர்வுகளைத் தான் மேலே எழுதினேன்....



இள்சுவின் பார்வையில் விடுதலை அடையத் துடிக்கும் மனமாக அது தோன்றியிருக்கிறது. கவிதையை மீண்டும் வாசித்த பொழுது, அது உண்மையாகத் தான் இருக்கிறது. விடுபடத் துடிக்கும் கவிதைகள் - என் தனி உணர்வு... விடுதலை என்பது பொதுவாக உணர முடிகிறது கவிதையில்...

மற்றபடிக்கு, கவிதையின் நோக்கம் கழிவிரக்கம் அல்ல...



வெறுமனே மற்றவர்.....களை வாசிப்பது என்பது, சொத்தை எல்லாம் இழந்து ஓட்டாண்டியான ஒருவன், யாசித்துப் பிழைக்கும் நிலையினைப் போன்றிருக்கிறது எனக்கு...







ராம்பால், பூ, லாவண்யா, வந்தியத்தேவன், கண்ஸ்,இசாக், அசன்..

அற்றற்று நீர் வார்க்கும் மன்ற நதிகள் இவர்கள்..



இன்னும் மன்றம் வாராமல்...

நம் மேல் வைத்த பிரியம் மாறாமல்

கரவையாய் பாசம் கறந்துகொண்டிருக்கும் நேச உறவுகள்..





எல்லார் மனதிலும் உதித்தவைகளை

இங்கே நீங்கள் தந்துவிட்டீர்கள் நண்பன்...!





படைப்பாளியாய் இந்த சுணக்கம்....

விளக்கவியலா தற்காலிக கருத்தடைகள்.. கருச்சிதைவுகள்.. வறட்சிகள்....

இவை எல்லார்க்கும் உண்டு...





படிப்பாளியாய்.. விமர்சகனாய்...

கருத்தளிப்பவனாய்.. ஊக்குவபனாய்..

வலம் வந்து.....

மகரந்தம் தெறிக்கா வேளைகளில்

இலைகள் சொரிந்து உரமாகி....



இதிலும் ஒரு சுகமுண்டு..





மண்கீறி கிளம்புவதிலும் சுகமுண்டு...



மண்மூடி மழைக்காலம் வேண்டி

தபசு பகீரதம் காப்பதிலும் சுகமுண்டு...



அக்கால கூட்டுக்குடும்பம் நினைவிருக்கா..

தனக்குப் பிரசவம்..

ஓர்ப்படியாள் சிசுருஷை..

அப்புறம்... அவளுக்கு இவள்..

இதுவும் ஒரு வரம்..சுகம்... பதம்...இதம்...





எத்தனை Facets.. நமக்குள்...

வைரப்பட்டைகள் போல்..

ஒன்றின் ஜொலிப்பு அதீதம்தான்..

அதன் மேல் என் ஈர்ப்பும் அதிகம்தான்..

ஆனால்..

பல பட்டைகளில் ஒன்றாய்

அந்தப் பட்டையும் இருப்பதால்தான்..





ஒரு பட்டை மட்டுமே

வைரம் அல்ல...

இக்பால்
09-06-2004, 04:51 AM
அண்மைக் கால பெரு மழையில்


அழகிய தடாக வண்ண மலர்கள்


அடித்துக் கொண்டு செல்லபட்டனவோ.


இல்லை அங்கேதான் இருக்கின்றன.


-அன்புடன் இக்பால்.

kavitha
09-06-2004, 11:14 AM
கவிதா வாக்களித்த கவிதை பற்றிய கவிதை இன்னும் வரவில்லை... ஒருவேளை கொ.ப.செ. ஆக இருந்தவர்கள் யாருமே வாக்களித்தை காப்பாற்ற மாட்டார்களோ என்னவோ....?
_________________
நண்பன்

நண்பரே மன்னிக்கவும்.... ' நிழற்பட தயாரிப்பில்' இருந்ததால் எழுதி வைத்த என் கவிதைகள் எல்லாம் புத்தகமடிப்பிற்குள் ஏக்கத்துடன் புதுப்பெண்ணாக இருக்கின்றன.. நான் வாக்குத்தவற மாட்டேன்..
தாமதத்திற்கு தயவுசெய்து மன்னிக்கவும்..
உங்களின் இக்கவிதைக்கான விளக்கம் ஒருபுறம் நெஞ்சை உலுக்கினாலும் என் புரிதலில் நான் தெளிவாக இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் மனம் நிறைகிறது... எனினும் உங்களின் இக்கவிதை என் உள்ளத்தின் ஒரு சொட்டுக்கண்ணீரை வாங்கியே விட்டது...




இதோ... நான் எழுதிய கவிதை... உங்கள் விளக்கத்திற்கு பிறகு இதை வெளியிடுவதில் முன்பு இருந்த தயக்கம் போனது... ஏனெனில் அகதிகளுக்காக தாங்கள் எழுதிய கவிதையோ என்ற ஒரு சிறு ஐயம் இருந்தது! அதனால் என் கவிதையை இங்கு அளிப்பதில் பொருள் மாறுபாடு ஆகிவிடக்கூடாதே என்ற பயம்! இப்பொழுது அந்த பயம் நீங்கி விட்டது.. ஆனால் வலி மறையவேவில்லை!


[b]உனக்கு பாலூட்டி சோறூட்டி
பக்கம் அருகிருந்து
வளர்க்கும் அன்னையல்ல நான்!


என் நேர வயிற்றை கட்டிபோட்டு
உன் யானைப்பசிக்கு
வெறும் சோளப்பொறி காட்டும் பாகன் நான்!


ஆனாலும்
ஒரு நாளும் நீ
வேறுமடியில் பிறந்திருக்கலாம் என
நொந்ததில்லை!


மாய்ந்து மாய்ந்து
உனைக்கொஞ்சும்போதும்
வாயுள்ள பிள்ளை பிழைக்கட்டுமென்று
நிராதரவாய் விட்டபோதும்
என் முந்தானை பிடித்துக்கொண்டு
அழுததில்லை!


என் பரம்பரைச் சாயலை
பதித்தபோதும்
உனக்கு
புதுமை பூச்சுகள்
பூசியபோதும்
கண்ணாடி பார்த்து
வியந்ததில்லை!


உன் நிறைச்சல்லடையில்
குறை மாசு தேடினாலும்
குன்றிப்போவதில்லை!


எந்நிலையிலும்
புன்முறுவல் பூக்கும்
என் கவிதையே!
கற்றுக் கொண்டேன்! கற்றுக் கொண்டேன்!!
'அமைதி' எங்கே என்று
கற்றுக் கொண்டேன்! கற்றுக் கொண்டேன்!!

இக்பால்
09-06-2004, 11:47 AM
எங்கே அமைதிங்க தங்கச்சி?(கற்றுக் கொண்டதை எங்களுக்கும்
கற்றுக் கொடுக்க வேண்டுமல்லவா...விடமாட்டோம். )


கவிதா தங்கையின் கவிதைகளை பாலூட்டி வளர்க்கும் பொறுப்பைத்தான்
எங்களிடம் கொடுத்து விட்டீர்களே...கவிதைப் பிறக்க வைப்பது மட்டும்தான்
உங்கள் வேலை.


கவிதைக்கு நன்றி தங்கை. தொடருங்கள்.


-அன்புடன் அண்ணா.

இளசு
09-06-2004, 10:48 PM
மிக அருமை கவிதா...


இதுதான் கவிதைப்பொருள் என அறியாமல் வாசித்து
இறுதிவரிக்கு வந்திருந்தால்..... இன்னும் கீறியிருக்கும்...


மனமார்ந்த பாராட்டுகள்...

kavitha
10-06-2004, 03:35 AM
...கவிதைப் பிறக்க வைப்பது மட்டும்தான்
உங்கள் வேலை.

என்னாலும் அது மட்டும் தான் முடியும் அண்ணா!
இதுவரை என்னைச்சார்ந்த வேறு யாருக்கும் தெரியாது.






இன்னும் கீறியிருக்கும்...

ஏற்கனவே நண்பன் விளக்கத்தினால் கொட்டுகிறது அண்ணா!
நானுமா..?


வாழ்த்திய அண்ணாக்களுக்கு நன்றி!

kavitha
11-06-2004, 11:59 AM
ஒரு பட்டை மட்டுமே
வைரம் அல்ல...


அசத்தல் இளசு அண்ணா! :)

Nanban
11-06-2004, 07:53 PM
எத்தனை Facets.. நமக்குள்...
வைரப்பட்டைகள் போல்..
ஒன்றின் ஜொலிப்பு அதீதம்தான்..
அதன் மேல் என் ஈர்ப்பும் அதிகம்தான்..
ஆனால்..
பல பட்டைகளில் ஒன்றாய்
அந்தப் பட்டையும் இருப்பதால்தான்..




ஒரு பட்டை மட்டுமே
வைரம் அல்ல...
_________________



ஆம்...


வைரத்திற்கு பல முகங்களும் தேவைப்படுகிறது...


பல முகங்கள் தேடி,
தன் முகம் இழந்து விடுவேனோ
பயம் தான் விரட்டுகிறது....


தன் முகம் தேடி
அவ்வப்போது அலைச்சல்...


வைத்த இடத்தில் கண்ட
பழைய முகத்தில்
வைரத்தின் ஜொலிப்பு
கொஞ்சம் குறைந்ததாய்
அடிக்கடி ஒரு குடைச்சல்...


சொந்த முகத்திற்கு பட்டை தீட்ட
பல பழைய முகங்களும்
பல பக்க முகங்களும்
தேவைதான்....


சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்....

kavitha
12-06-2004, 04:44 AM
சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்....
_________________
நண்பன்

நிச்சயம் நீங்கள் நீங்கள் தான்! ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கும். யாரும் யாராகவும் மாறமுடியாது!
விரிவான விளக்கங்கள் மனதினை இன்னும் விரிவு படுத்துகிறது!
நண்பருக்கும், இளசு அண்ணாவிற்கும் மிக்க நன்றி!

Nanban
12-06-2004, 07:25 PM
நன்றி கவிதா...


இளசுவின் ஆழ்ந்த வாசிப்பு, அழகிய மொழி நடை - இவை எல்லோரையும் மென்மேலும் தூக்கி விடும் அற்புத சக்தி கொண்டது. மேலும் சிந்திக்கச் செய்யும் வளமை கொண்டது....


அதனால் தானோ என்னவோ, எல்லோருமே இளசுவின் கருத்து பதிப்பிற்கு தவமிருக்கின்றனர்....

இளசு
12-06-2004, 07:34 PM
என்ன இன்று வந்து திறக்கும் முதல் பதிவு..


என்னை மயக்கம் வரவைக்கும் மகிழ்ச்சிப்பதிவாய்...


நாம் மதிப்பவர் நம்மை மதிப்பதை அறிந்து..
மதிப்பு இன்னும் வளர்ந்து...


நெகிழ்ந்து நிற்கின்றேன் நண்பன்...


நன்றி...

Nanban
14-06-2004, 07:41 PM
நாம் மதிப்பவர் நம்மை மதிப்பதை அறிந்து..
மதிப்பு இன்னும் வளர்ந்து...


:D :D :D

Nanban
20-01-2005, 06:50 PM
ஆறு மாதங்களுக்கு முன்பு தற்செயலாக, கற்பனையாக புனைந்து எழுதிய கவிதை.....


இன்று அந்த அவலம் நிக்ழ்ததையும், எங்கள் தன்மானத்தைப் பறிக்காதீர்கள் என்ற மக்களின் மனக்குமுறலையும் அறிந்து மனம் நொந்தே போய்விட்டது....


சுனாமியில் இறந்தவர்களுக்கும், பிழைத்தவர்களுக்கும் அஞ்சலியாக ...

lavanya
23-02-2005, 10:17 PM
நல்ல கவிதை...சுனாமியைப் பற்றி எல்லோரும் சொன்ன விதத்திலிருந்து விலகி பின்னால்(ள்)
நிகழ்வுகள் குறித்து சொன்ன விதம் ரசிக்கும்படி இருந்தது...பாராட்டுக்கள் நண்பரே....


பின் வந்த உங்கள் கருத்திலும்,இளசுவின் பதிவும் கண்டு திக்கித்து நான்...

kavitha
24-02-2005, 08:25 PM
ஹாய், லாவ் எப்படி இருக்கீங்க?

lavanya
24-02-2005, 10:19 PM
நல்லா இருக்கேன் கவிதா..நீங்க நலம்தானே...?


நண்பன் கவிதை தொடர்ந்து உங்களின் வரிகளும் வாசித்தேன்...அருமை குறிப்பாக


என் பரம்பரைச் சாயலை
பதித்தபோதும்
உனக்கு
புதுமை பூச்சுகள்
பூசியபோதும்
கண்ணாடி பார்த்து
வியந்ததில்லை!


என்ற வரிகளில் அழுத்தமான முத்திரை..பாராட்டுக்கள்...

kavitha
25-02-2005, 01:40 PM
நலம் லாவ்.. அதிகமாக உங்களைப்பார்க்கமுடிவதில்லையே ஏன்?


கவிதை விமர்சனத்திற்கு நன்றிகள்.

Nanban
22-09-2005, 05:44 PM
என் பரம்பரைச் சாயலை
பதித்தபோதும்
உனக்கு
புதுமை பூச்சுகள்
பூசியபோதும்
கண்ணாடி பார்த்து
வியந்ததில்லை!

இதெப்போ எழுதியது...?

படித்த ஞாபகம் இல்லையே....

என்றாலும் லாவண்யா சொன்னது போல அழுத்தமான வரிகள்...