PDA

View Full Version : கடற்கரை...........



Nanban
23-12-2003, 03:01 AM
கடற்கரை...........
**************

எறியப்பட்ட கல்லாய்

திடுக்கிட்டு பறக்கும் பறவை.

கறி வைக்க

உயிருடன் துடிக்கும் மீன்.

தொலைத்த நலங்களை

தேடி நடக்கும் மனிதன்.

அன்றைய உணவுக்காக

சுண்டல் விற்கும் பையன்.

கைப்பிடி நழுவி காற்றில் கலந்த

பலூனிற்கு அழும் குழந்தை.

திறந்த வெளியில் துணிச்சலுடன்

ரகசியம் பேசும் ஒண்டுகுடித்தன தம்பதிகள்.

படபடப்புடன் கால் நனைத்துக் காத்திருக்கும்

காதல் வசப்பட்ட ஜீவன்கள்.

கறுப்பு வெளுப்புக் கண்களில்

வண்ணங்கள் வாங்க வந்திருக்கும் விடலைகள்.

எல்லாம் போய்விட்டது -

ஆட்சியாளரின் அழகுணர்ச்சியில்.

என் கவிதைகளில் எழுத

நான் என்ன காட்சியைக்

கண்டுவிடப் போகிறேன் -

செத்துக் கிடக்கும் கடற்கரையில்?

இக்பால்
23-12-2003, 11:02 AM
நண்பனே...கடற்கரையை உயிருள்ளதாக ஆக்கி ஒரு கவிதை
படையுங்களேன்.-அன்புடன் இக்பால்.

anbu
23-12-2003, 03:10 PM
சிறந்த கவிதை !

கடற்கரை காற்று இதமாக வருடுவதுபோல் உள்ளது நண்பனே !

இளசு
24-12-2003, 01:15 AM
உணர்வுள்ள பார்வை..
பதித்த விதம் அருமை..

பாராட்டுகள் நண்பன்..

Nanban
24-12-2003, 06:51 AM
நண்பனே...கடற்கரையை உயிருள்ளதாக ஆக்கி ஒரு கவிதை
படையுங்களேன்.-அன்புடன் இக்பால்.

வாழ்வின் அர்த்தமாய்
வளமான குப்பைகள்....
மனிதக் குப்பைகள்....
குழந்தை குப்பைகள்....

எல்லாம் கலைந்து
வெளியேறிய பின்பு
எஞ்சிய
கடலைத் துளிகளைப் பொறுக்க
கழுத்துச் சாய்த்து வரும்
கள்ளக் காக்கைகள்
பிடுங்கித் தின்னாது
நேர்மையாய் பொறுக்கும்.....

சிலபல காகிதக் குப்பைகளை
கோணிப் பை கொண்டு
வாரிச் செல்லும்
மழலைத் தொழிலாளர்கள்...

உணவுச் சக்கரத்தில்
எல்லோருக்கும் ஒரு இணைப்பு...

அலையடித்து கால்
நனைப்பதில் சுகம் தான்......

அம்மணமாய் குளித்தல்
வெட்ட வெளியில்
கலவி புரிதல்
மனம் நிறைய கசடுகள் சுமக்கும்
இரத்தம் சுண்டிய நாட்டவர்
முகம் சுழிக்கின்றனர் -
அழுக்காய் இருக்கிறது என்று.

அன்னிய நாட்டு டாலர்களுக்கு முன்
கசங்கிய கந்தலாய்
கிடக்கும் கடற்கரை தான்
வாழ்வின் துடிப்பைக் காட்டுகிறது......

அக அழுக்கில்
புற அழுக்கை விரட்டுகிறார்கள்

அன்றும்
நுகர்வோராய் வியாபாராத்திற்கு
வந்தவருக்கு அடிமையாய்.
இன்றும் அதே...........

anbu
24-12-2003, 11:05 AM
அற்ப்புதம் நண்பன் அவர்களே !

கவிதை உங்கள் மனக் கடலில் அலை அலையாய் பொங்கி வழிகிறது !

rika
24-12-2003, 12:42 PM
துடைத்து வைக்கப்பட்டு
பளீச்சென்று இருக்கும்
கடற்கரைகளில்
கொட்டி இரைக்கப்பட்ட
பணம் மட்டுமே தெரிகிறது..

அவைகளில்
மனதை மயக்கும்
உயிர்ப்பு இல்லை..

கொஞ்சம்
மீன்வாடை..
நிறைய குப்பை..
கொஞ்சம் விஷமம்..
கலவையாய்
இவைகளை சுமந்து வரும்
காற்று..

ஆவலோடு எதிர்பார்க்கும்
சுண்டல் விற்கும் பையன்..
வெட்டவெளிக் காதலர்கள்...
அழகு..
அழகு..
அழகு மட்டுமல்ல..
உயிர்ப்பும் கூட..

இக்பால்
24-12-2003, 03:28 PM
அரை உயிர் கொடுத்த நண்பனுக்கு நன்றி.

ரிகா தங்கைக்கும் நன்றி.