PDA

View Full Version : திருக்குறள் சிந்தனைகள்



M.Jagadeesan
25-01-2012, 04:41 AM
கடவுள் வாழ்த்து

=============


திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவராக இருந்தாலும், அவர் கடவுளைப்பற்றி அதிகம் பேசவில்லை. தன்னுடைய நூலில்,"கடவுள் " என்ற சொல்லே இடம்பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார். மேலும் கடவுளின் உருவத்தைப் பற்றியும் பேசாமல், அவரது திருவடிகளைப் பற்றியும் , குணத்தைப் பற்றியும் பேசுகிறார். திருக்குறளுக்கு முன்பாகவே தொல்காப்பியத்தில், " கடவுள் " என்ற சொல் இடம்பெற்றிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது.


ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான்,அறவாழி அந்தணன், எண்குணத்தான், உலகியற்றியான், வகுத்தான் , தாமரைக் கண்ணான் , பற்றற்றான் என்று பல பெயர்களால் இறைவனை அழைக்கின்றார். பொதுமை அறம் கூறும் நூலாதலின் தான் பிறந்த இனம்,குடி, பேசும் மொழி, சார்ந்த மதம் ,ஊர், நாடு ஆகியவற்றை வெளியிடாமல் நூலை இயற்றியுள்ளார்.

M.Jagadeesan
25-01-2012, 02:47 PM
வான் சிறப்பு
===========

முதல் அதிகாரத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் பற்றிப் பேசிய வள்ளுவர், இரண்டாம் அதிகாரத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுளாகிய மழையைப் பற்றிப் பேசுகிறார்.மழையைக் கடவுளாகக் கருதி தமிழ் மக்கள் வழிபட்டனர்.வருணனை மழைக் கடவுளாகக் குறித்தனர். மேக ராகக் குறிஞ்சி என்ற பண் இசைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

Rain rain go away
Little Johny wants to play.

என்று பாடுவது ஆங்கிலேயருடைய பண்பாடு. ஆனால் நம்முடைய தமிழ் இலக்கியங்கள் மழையைப் போற்றுகின்றன.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
என்ற சிலப்பதிகார வரிகளாலும்

மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை
என்ற நான்மணிக்கடிகை வரிகளாலும்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

என்ற ஒளவையின் வரிகளாலும் மழையின் சிறப்பை அறியலாம்.

மழை நீரை அமிழ்தம் என்றே கூறுகிறார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

என்ற வார்த்தை ஜாலம் மிகுந்த குறட்பாவைத் திருவள்ளுவர் தம்முடைய இளமைக் காலத்திலேயே இயற்றியிருக்கலாம் என்பது டாக்டர். மு.வ. அவர்களின் கருத்தாகும்.

கடல் நீரினால் உலகத்து உயிர்களின் பசியைப் போக்கமுடியாது என்னும் கருத்தை

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

என்னும் குறட்பாவினால் அறியலாம்.

ஆக்கவும், அழிக்கவும் வல்லது மழை.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

என்ற குறட்பாவிற்கு தற்போது சமீபத்தில் வீசிய "தானே" புயல் சிறந்த எடுத்துக் காட்டு.

மழை பொய்த்துப் போகுமானால் , ஓரறிவு உயிரின் கடைசியான புல் கூட தலை காட்டமுடியாது என்னும்போது, பிற உயிர்களின் வாழ்க்கை முற்றிலும் அற்றுப் போகும் என்பது சொல்லாமலேயே உணரவைத்தார்.

நாட்டில் மழை பெய்தால் நமக்கு இலாபம்
கடலில் மழை பெய்தால் யாருக்கு இலாபம்?

அதுவும் நமக்குத்தான் என்கிறார் வள்ளுவர். உப்பின் அடர்த்தியைக் குறைத்து மீன்கள் வாழ மழை நீர் தேவை. முத்து போன்ற கடல்படு வளங்கள் மழையின் காரணமாகவே உண்டாகின்றன.

ஒருவனுடைய ஒழுக்கத்திற்கும் மழை காரணமாக அமைகிறது என்னும் கருத்தைக் கடைசி குறளில் வைத்தார். மழை பெய்யாத பாலை நிலத்தில் வாழும் மக்கள் தங்கள் உணவிற்காக வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுவர். இவர்களை " ஆறலைக் கள்வர் " என அழைத்தனர் நம் முன்னோர்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.

என்பது கடைசி குறள்.

M.Jagadeesan
26-01-2012, 09:19 AM
நீத்தார் பெருமை

=============

சென்ற அதிகாரத்தின் இறுதிக் குறளின் இறுதிச் சீரை , இந்த அதிகாரத்தின் முதல் குறளின் முதல் சீராக அமைத்தார். நீத்தார் பெருமை , அதாவது அவாவினை நீக்கிய துறவிகளின் பெருமையை இந்த அதிகாரத்தில் கூறுகிறார்.துறவிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இல்லறத்தில் இருந்துகொண்டே துறவு நெறியைப் பின்பற்றுபவர்கள். பொய்யான துறவுக் கோலம் பூண்டு இல்லற இன்பத்தைத் துய்ப்பவர்கள், உண்மையான துறவறம் மேற்கொண்டு இல்லறம் விட்டு நீங்கியவர்கள்.

முதல் வகைத் துறவுக்குக் காந்தியடிகளை உதாரணமாகக் கூறலாம். நம்மிடையே தற்போது வாழ்ந்து வருகின்ற பெரும்பாலான துறவிகள் இரண்டாம் வகைத் துறவை மேற்கொண்டவர்களே. புத்தர், இளங்கோ அடிகள்,பட்டினத்தார் போன்றவர்களின் துறவு மூன்றாவது வகை.

அவாவினை நீத்த துறவிகளின் பெருமையையே நூல்களும் பேசுகின்றன. இத்துறவிகளின் பெருமையை சொல்லப் புகுந்தால், அது இறந்தவர்கள் எத்தனை பேர் என்று எண்ணிக் கணக்கிடப் புகுந்தால் எப்படியோ அப்படியாகும். ( முடியாது ) ஐந்து புலன்களையும் அடக்கியவனே வீடுபேற்றைப் பெறமுடியும்.

உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், அந்தப் பதவியின் மாண்பைக் காக்கவேண்டும்.சிற்றின்ப கேளிக்கைகளில் ஈடுபட்டால் மானத்தை இழக்க நேரிடும். இக்கருத்தை

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

என்ற குறளின் மூலமாகத் தெளிவு படுத்துகிறார்.

வஞ்சனையால் கவுதம முனிவரின் மனைவியின் கற்பை இந்திரன் சூறையாடினான். இதனால் அவரது கோபத்திற்கு ஆளானான். சாபத்திற்கும் ஆளானான். தூய குணங்கொண்ட சான்றோர்தம் சினத்தை நம்மால் தாங்கிக் கொள்ள இயலாது. அதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

இக்காலத்தில் "வெகுளி "என்னும் சொல் தன் உண்மைப் பொருளை இழந்து " அப்பாவி "(Innocent ) என்னும் பொருளில் பயன்படுத்தப் படுகிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

என்னும் குறளில் பாட பேதம் காண்பார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.அவர்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குரிய செய்கலா தார்.

என்பதே அவர் கொண்ட பாடம். செய்யவேண்டிய செயல்களைக் கூட செய்யாதவர்கள்தான் சிறியவர்கள் என்பதே அவரது கருத்து.


உண்மையான அந்தணர் யார் என்னும் கேள்விக்கு இறுதிக் குறளில் விடை தருகிறார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு வாழும் வாழ்க்கையைக் கொண்ட துறவிகளே உண்மையான அந்தணர்களாவார்.

M.Jagadeesan
28-01-2012, 03:35 PM
அறன் வலியுறுத்தல்
================

அறக் கருத்துக்களை வலியுறுத்திச் சொன்னால்தான் மக்கள் கேட்பார்கள் என்ற கருத்தில் அதிகாரத் தலைப்பை "அறன் வலியுறுத்தல் " என்று அமைத்தார். " அறம் " என்ற சொல் பரந்த பொருளைக் கொண்டது. அதற்கு ஈடான ஆங்கிலச் சொல்கிடையாது என்பார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள். " தர்மம் " என்ற வடசொல்லும் அதற்கு இணையாகாது. தன்னிடமுள்ள ஒருபொருளை மற்றவர்களுக்குக் கொடுப்பதுதர்மம் எனப்படும். அன்புடைமை, விருந்தோம்பல், இனியவைகூறல், செய்நன்றிஅறிதல் ,நடுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவறிதல், ஈகை,புகழ்,அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு,மெய்யுணர்தல், அவா அறுத்தல், ஊழ் ஆகிய எல்லாமே அறம் எனப்படும்.

சிறந்த இன்பத்தையும் , செல்வத்தையும் கொடுக்கக்கூடிய அறத்தை ஒருவன் , தன்னால் முடிந்த அளவுக்கு இடைவிடாது செய்யவேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் , முதுமைப் பருவத்திலே செய்து கொள்ளலாம் என்று ஒருவன் வாளா இருந்துவிடக் கூடாது. அது ஒருவன் கடலிலே அலை ஓய்ந்தபின் குளிக்கலாம் என்பதை ஒக்கும்.

ஒருவன் தன மனதைத் தீய நினைவுகள் அண்டாவண்ணம் காத்துக் கொள்ளவேண்டும். கழிவுகள் நிறைந்த ஒரு குப்பைத் தொட்டி வீட்டிற்கு எவ்வாறு கேடு பயக்குமோ, அதுபோல தீய எண்ணங்கள் நிறைந்த மனமானது நம் உடலுக்குக் கேடு பயக்கும்.

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

என்ற குறளின் இரண்டாவது அடியில் , மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஏழு எழுத்துக்களே வந்துள்ளன. இதேபோல மற்றொரு குறள் உள்ளது.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

இவ்விரண்டு குறட்பாக்களில் மட்டுமே ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் வந்துள்ளன.

அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கினையும் மன மாசுகளாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார். புறத்தே ஏற்படும் அழுக்குகள் நீரால் கழுவிக் களையப்படுவதைப் போல், அகத்தே அழுக்குகள் உண்டாகாமல் இருக்க ஒருவன் உண்மை பேசவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.

என்பது வள்ளுவர் வாக்கு.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.
.
இக்குறள் புலவருலகில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய குறளாகும். பல குறட்பாக்கள் பல பொருள் தரும் நோக்கிலேயே வள்ளுவர் எழுதியுள்ளார்.உண்மைப் பொருளைக் கண்டறிவது நம் கடனாகும்.

இனிக் குறளின் பொருள் காண்போம்.

பல்லக்கு சுமப்பவனையும், அதில் அமர்ந்து செல்பவனையும் பார்த்துவிட்டு ' அறத்தின் ஆட்சி இதுதான் ' என்று முடிவு கட்டக்கூடாது. அதாவது அறம் செய்தவன் மேலே அமர்ந்து செல்கிறான்; பாவம் செய்தோர் கீழே சுமந்து செல்கிறார்கள் என்பது போல் எண்ணக்கூடாது. இது சிலரின் வளமையால், பலரின் வறுமையால் , சிலரின் அறிவால் , பலரின் அறியாமையால் சமுதாயத்தில் தோன்றும் ஓர் ஏற்றத் தாழ்வுக் காட்சி. அறத்தின் தீர்ப்பு இதுவல்ல.-இது ஒரு பொருள்.

இல்லற வழி சரியா, துறவற வழி சரியா என்று வாதிடல் வேண்டாம். இரண்டும் ,இரண்டு வேறுபட்ட ஆனால் ஒரே திசையை நோக்கிய பயணம்தான். பல்லக்கு சுமப்போரும் , அதி ஏறிச் செல்பவனையும் பார்த்தாலே புரிந்துவிடும்-இது மற்றொரு பொருள்.

நான்கு பேரைச் சுமக்கச் சொல்லி பல்லக்கில் ஏறிச் செல்லும் ஆதிக்க வெறி பிடித்தவனிடத்தும், வயிற்றுப் பாட்டுக்காக அவனைச் சுமந்து செல்லும் அடிமைப் புத்திக்காரனிடமும் அறநெறிகள் பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. - இது வேறு ஒரு பொருள்.

இதுபோல விரிக்க விரிக்க இடம்தருவது இக்குறள். இதுபோல பல குறட்பாக்கள் உள்ளன.

M.Jagadeesan
18-02-2012, 02:46 AM
இல்வாழ்க்கை

============



அடுத்த அதிகாரம் இல்வாழ்க்கை. பாயிரம் முடிந்து அறத்துப்பாலில் முதல் அதிகாரமாக வருகிறது. " குடும்பம் " என்ற சொல்லின் பொருளை உள்ளடக்கிய தூய தமிழ் வார்த்தை. இல்லில் மனையாளோடு கூடி வாழும் வாழ்க்கை " இல்வாழ்க்கை " எனப்படும். "இல்லறமல்லது நல்லறமன்று " என்பர் சான்றோர்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


நன்னெறியில் ஒழுகும் தாய்,தந்தை,தாரமாகிய மூவர்க்கும் இல்வாழ்வான் துணை.


இயல்புடைய மூவர் என்போர் பிரம்மசாரி, வானப்பிரத்தன்,சந்நியாசி என்றும் சிலர் பொருள் கொள்வர்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நிற்கும் துணை.

என்பது உரையாசிரியர் தாமத்தர் கொண்ட பாடம்.

மேற்கூறிய மூவரோடு துறந்தார், வறியவர்கள், இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணையாக நிற்கவேண்டும் எனக் கூறுகின்றார்.
முன்னோர்கள்,தெய்வம்,விருந்தினர், சுற்றத்தார்,தான் ஆகிய ஐந்து பேருக்கும் அறத்தை வழுவாது செய்வது இல்லறத்தானுடைய கடமையாகும்.

கொல்லாமை என்னும் அதிகாரத்தில் , உணவைத் துறவிகள் , பிற உயிர்களோடு பகுத்து உண்ணவேண்டும் என்று கூறுகிறார். இரந்துண்ணும் துறவிகளே , உணவைப் பகுத்து உண்ணவேண்டும் என்றால், ஒரு இல்லறத்தான் எப்படி இருக்கவேண்டும் என்று அடுத்த குறளில் கூறுகிறார்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் இல்வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

இக்குறளின் பொருள் , பகுத்துண்டு வாழ்பவனின் வம்சாவழி ,உலகில் எக்காலத்தும் நிலைத்திருக்கும் என்பதாகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

திருமணப் பத்திரிகைகளில் பெரும்பாலும் இடம்பெறுவது இக்குறள்தான்.

துறவறத்தைப் " புறத்தாறு " என்று கூறுகிறார். ஒருவன் இல்வாழ்க்கையை அறவழியில் நடத்தினாலே போதுமானது. துறவு வாழ்க்கையில் பெறுவதற்கு என்ன இருக்கிறது என்று அடுத்த குறளில் கூறுகிறார்.

கடைசி குறளாக

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

என்பதாகும்.இக்குறளிலே இல்லறத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத்திற்குச் சமமாவான் எனக் கூறுகிறார்.

மகாத்மா காந்தியடிகள் போன்ற பெரியோர்களை மக்கள் தெய்வமாகக் கொண்டாடுவதே இதற்கு தக்க சான்றாகும்.

M.Jagadeesan
19-02-2012, 03:40 PM
6 . வாழ்க்கைத் துணைநலம்
===========================


மனைவியை " வாழ்க்கைத் துணை " என்றார் வள்ளுவர். புதிய சொற்களைப் படைப்பதில் , வள்ளுவர் பெருவிருப்பம் கொண்டவர். சினத்தை " சேர்ந்தாரைக்கொல்லி " என்றும் , கடவுளை " உலகியற்றியான் "என்றும் , வேப்பமரத்தை " மருந்தாகித் தப்பா மரம் " என்றும்,மருத்துவத் தாதியரை ( Nurse ) " உழைச் செல்வான் " என்றும் புதிய பெயர்களால் அழைப்பார். மனைவியை " இல்லாள் " என்றும் " வாழ்க்கைத் துணை " என்றும் பெயரிட்டு அழைத்தார்.


மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

" மனைத்தக்க மாண்பு " என்பது இல்லறத்துக்குறிய பண்புகளும், செயல்களும்,விருந்தினரைப் பேணுதலும் ஆகும். " வளத்தக்காள் " என்பது கணவனுடைய வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்பவள் என்று பொருள்படும்.

குடும்பநலன் கருதி , கணவனுக்குத் தெரியாமல் பொருள் சேர்க்கும் பழக்கம் இக்காலப் பெண்களிடம் உண்டு. இதைக் கிராமங்களில் " சிறுவாடு சேர்த்தல் "என்பர். இப்பழக்கம் வள்ளுவர் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. பொருளைச் சேமித்து வைக்கவேண்டும் என்னும் கருத்தை சில குறட்பாக்களில் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றார்.

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

என்பன அக்குறட்பாக்கள்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

என்ற குறளில் மனைவியை " இல்லாள் " என்று குறிப்பிடுகின்றார். அதாவது இல்லத்தை ஆட்சி செய்பவள். இதற்கு நிகரான ஆங்கிலச் சொல் House Wife என்பதாகும்.

உங்கள் வீடு " சிதம்பரமா அல்லது மதுரையா ? " என்று கேட்டால் " சிதம்பரம் " என்று சொல்லிக் கொள்வதையே பலரும் விரும்புவர். ஆனால் வீட்டை மேலாண்மை செய்யும் பொறுப்பைப் பெண்களிடமே ஒப்படைத்தார் வள்ளுவர். " இல்லாள் " என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் " இல்லான் " அல்ல. இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள் படும்.

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.

வீட்டில் எதுவும் இல்லையென்றாலும் மனைவி குணவதியாக இருந்தால் எல்லாம் இருப்பதற்குச் சமம். மாறாக மனைவி, தீய குணங்கள் கொண்டவளாக இருப்பின் வீட்டில் எல்லாம் இருந்தும் என்னபயன் ? "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை " என்ற மூதுரையாலும் இதை அறியலாம்.

இக்குறளில் " ஆனால் " என்ற சொல்லாட்சியை வள்ளுவர் பயன்படுத்து கின்றார். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் " ஆனால் " என்ற சொல் மிகவும் பிற்காலத்தது என்று கூறுகின்றார். பல குறட்பாக்களில் " ஆயின் " என்ற சொல்லையே வள்ளுவர் பயன்படுத்தி இருப்பது ஈண்டு நோக்கத் தக்கது.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கற்புடைய மாதரை மனைவியாக ஒருவன் பெற்றுவிட்டால், வேறொன்றும் பெறவேண்டியதில்லை.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இக்குறள் புலவர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய குறளாகும்.
தெய்வத்தைத் தொழாமல் , கணவனை மட்டும் தொழுகின்ற பெண் "பெய் " என்று சொன்னால் மழை பெய்யும் என்பது இக்குறளின் பொருளாகும்.
தெய்வத்தைத் தொழாமல் , கணவனை மட்டும் தொழுகின்ற பெண் "பெய் " என்று சொன்னால் பெய்கின்ற மழைக்குச் சமமானவள் என்று வேறு சிலர் பொருளுரைப்பர்.

கேள்விக்குறி, வியப்புக் குறி, காற்புள்ளி, அரைப்புள்ளி, மேற்கோள் அடையாளம் ஆகிய எதுவும் திருக்குறளில் காண இயலாது. அதுவே இக்குழப்பத்திற்குக் காரணம். பெய் என்ற சொல் " பெய் " என்று இருந்திருக்கு மானால் இக்குழப்பம் ஏற்பட்டிருக்காது.

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.

நல்ல குண நலன்களை உடைய பெண்ணை , மனைவியாகப் பெற்றவர் ,தேவர் வாழும் உலகில் பெரிய சிறப்பினைப் பெறுவார்கள்.

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆண்மகனின் பின்புலத்தில் ஒரு பெண் இருப்பாள் என்ற கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

தாய்மையே ஒரு பெண்ணுக்கு முழுமையைத் தருகிறது. அப்பெண் மனை வாழ்க்கையின் மங்கலப் பொருள் ஆவாள்.

Hega
19-02-2012, 04:13 PM
திருக்குறள் குறித்ததாக ஆய்வுப்பதிவுக்காய் மிக்க நன்றி ஐயா.



மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

என்ற குறளில் மனைவியை " இல்லாள் " என்று குறிப்பிடுகின்றார். அதாவது இல்லத்தை ஆட்சி செய்பவள். இதற்கு நிகரான ஆங்கிலச் சொல் House Wife என்பதாகும்.

உங்கள் வீடு " சிதம்பரமா அல்லது மதுரையா ? " என்று கேட்டால் " சிதம்பரம் " என்று சொல்லிக் கொள்வதையே பலரும் விரும்புவர். ஆனால் வீட்டை மேலாண்மை செய்யும் பொறுப்பைப் பெண்களிடமே ஒப்படைத்தார் வள்ளுவர். " இல்லாள் " என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் " இல்லான் " அல்ல. இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள் படும்.

இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.

வீட்டில் எதுவும் இல்லையென்றாலும் மனைவி குணவதியாக இருந்தால் எல்லாம் இருப்பதற்குச் சமம். மாறாக மனைவி, தீய குணங்கள் கொண்டவளாக இருப்பின் வீட்டில் எல்லாம் இருந்தும் என்னபயன் ? "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை " என்ற மூதுரையாலும் இதை அறியலாம்.

இல்லாள் குறித்த விளக்கம் கண்டு கொண்டேன். நன்றிகள்.

தொடருங்கள்.

M.Jagadeesan
20-02-2012, 01:08 AM
ஹேகா அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
15-03-2012, 11:26 AM
7 . மக்கட்பேறு

============

இவ்வதிகாரத் தலைப்பை " புதல்வரைப் பெறுதல் " என்று மாற்றியமைத்தார் பரிமேலழகர். ஆனால் புலவருலகம் அதை ஏற்கவில்லை.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

இக்குறளில் " யாம் " என்று குறிப்பிட்ட காரணத்தால் , வள்ளுவர், மனைவி , மக்களோடு இல்லறம் நடத்தியவர் என்பது தெளிவாகிறது.மக்கட்பேற்றை "அறிவறிந்த மக்கட்பேறு " என்று குறிப்பிட்ட காரணத்தால் " அறிவறியா மக்கட்பேறு " உள்ளதை தெளிக.தவமிருந்து பெற்ற பிள்ளைகள், அறிவற்ற மூடர்களாகவும், ஊமையராய், குருடராய், செவிடராய்ப் பிறந்தால் யாருக்கு என்ன பயன்?
அப்படிப்பட்ட குழந்தைகள் பிறத்தலின், பிறவாமை நன்றல்லவா?இக்குறளில் செல்வங்கள் யாவினும் சிறந்தது மக்கட் செல்வம் என்று குறிப்பிடுகின்றார்.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

நம்முடைய குழந்தைகள் அறிவுள்ள குழந்தைகளாய் இருந்தால் மட்டும் போதாது; நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட பண்புள்ள குழந்தைகளாகவும் இருக்கவேண்டும். அவ்வாறு குழந்தைகள் அமைந்துவிட்டால் பெற்றவனை , ஏழேழு பிறவிக்கும் தீயவை தீண்டாது.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

என்னும் இக்குறள் வ.வு.சி அவர்கள் எழுதிய " திருக்குறள் அறப்பால் " என்னும் நூலில்

தம்பொருள் என்பவே தம்மக்கள் அப்பொருள்
தம்தம் வினையான் வரும்.

என்று காணப்படுகிறது.நம் குழந்தைகள்தான் நம்முடைய உண்மையான செல்வம்; அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப அக்குழந்தைகள் அமைகின்றன.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

எளிய உணவாகிய கூழ் கூட , குழந்தையின் கைபட்டால் ,தேவர்கள் உண்ணுகின்ற அமிழ்தத்தைவிட மேம்பட்ட உணவாகிவிடும்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

சட்டை அணியாத குழந்தையின் உடம்பைத் தொடுவதுதான் "மெய்தீண்டல் " அது நம் உடலுக்கு இன்பம் பயக்கும். குழந்தைக்கு முத்தம் இடுவதைப் பற்றி வள்ளுவர் எதுவும் குறிப்பிடவில்லை என்பது ஈண்டு நோக்கத்தக்கது. அவர்தம் மழலைச்சொல் செவிக்கு இன்பம் பயப்பது.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம்முடைய மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்தான், குழலிசையும், யாழிசையும் இனிமையாக இருக்கின்றன என்று சொல்வார்கள்.இக்குறளில் மேலும் ஒரு நுட்பமான கருத்து ஒளிந்துள்ளது. குழல் என்னும் இசைக்கருவி கண்ணன் கையில் உள்ளது.யாழ் என்னும் இசைக்கருவி சரஸ்வதியின் கையில் உள்ளது.எனவே ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு ஆணும் என இரு குழந்தைகள் இருந்தால் போதும் என்ற கருத்தும் பெறப்படுகிறதல்லவா ?

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

மக்களுக்குக் கல்வியும், ஒழுக்கமும் தந்தையின் தலையாய கடமையாகும். " சான்றோனாக்குதல் தந்தையின் கடனே " என்ற பொன்முடியாரின் புறநானூற்று வரிகளை நோக்குக.

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


தந்தையின் அறிவைக் காட்டிலும் , மகனுடைய அறிவு மேம்பட்டதாக இருந்தால் , அது உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் இனிதாகும் என்றே பெரும்பாலான ஆசிரியர்கள் உரை எழுதுகின்றனர்.மகனின் அறிவு , தந்தைக்குப் பயன்படுவதைவிட , உலகத்திற்கு அதிகமாகப் பயன்படும் என்று கொள்வதே பொருத்தமான உரையாகத் தெரிகிறது. இதற்கு வள்ளுவரே சிறந்த சான்றாகும். வள்ளுவருடைய அறிவு அவருடைய தந்தைக்குப் பயன்பட்டதைவிட , இன்றளவும் உலகத்திற்குத்தானே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு. "

என்று பாரதி பாடியது ஈண்டு நினைவில் கொள்ளத் தக்கது.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மகனைப் பெற்றெடுத்த காலத்தில் தான் அடைந்த இன்பத்தைவிட , தன் மகன் அறிவு நிறைந்த சான்றோன் என்று உலகத்தார் சொல்லக் கேட்டபோது , தாய் அதிக இன்பமடைகின்றாள்.

இக்குறளுக்குப் பரிமேழலகர், செய்த உரையால் பலரது பழிச்சொல்லுக்கு ஆளானார்.பெண்ணுக்கே உள்ள இயல்பான குணத்தால், தான் பெற்ற மகனின் அறிவைக்கூட பிறர்சொல்லித்தான் ஒரு தாய் தெரிந்து கொள்கிறாள். எனவே, " கேட்ட தாய் " என்றுரைத்தார் வள்ளுவர் என்பது பரிமேழலகர் கருத்து.இதில் அவரைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஏனெனில் அவர் வாழ்ந்த காலம் அப்படி. ஆணுக்கு ஏற்றம் கொடுத்த காலத்திலே அவர் வாழ்ந்தார். மக்கட்பேறு என்ற அதிகாரத் தலைப்பையே " புதல்வரைப் பெறுதல் "என்று அவர் மாற்றி அமைத்ததே இதற்குத் தக்க சான்றாகும்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

என்னதவம் செய்து இக்குழந்தையைப் பெற்றானோ என்ற புகழைத் தந்தைக்கு வாங்கிக் கொடுப்பது தான் மகன் தந்தைக்கு செய்யும் உதவியாகும்.


என்னதவம் செய்தனை ? யசோதா!
எங்கும் நிறைப் பரப்பிரம்மம் அம்மா
என்றழைக்க என்னதவம் செய்தனை ?

என்ற அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் பாடல் ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-03-2012, 01:33 PM
மிக நல்ல ஆய்வு ஐயா :)

M.Jagadeesan
15-03-2012, 02:32 PM
டாக்டர். தயாளன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

சிவா.ஜி
15-03-2012, 03:17 PM
மிக அருமையான விளக்கம். தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா.

M.Jagadeesan
18-03-2012, 03:13 PM
சிவா.ஜி அவர்களின் பாராட்டுக்கு நன்றி

M.Jagadeesan
18-03-2012, 05:25 PM
8 . அன்புடைமை
=================


அன்புடைமையாவது, நம்முடன் தொடர்புடையார் மாட்டு ஏற்படும் உள்ள நெகிழ்ச்சியாகும்.ஒரு சலனமற்ற குளத்திலே எறிகின்ற கல்லினால் உண்டாகின்ற நீர் வளையங்கள் படிப்படியாக விரிந்து செல்வதைப் போல , இந்த அன்பின் வளையமானது விரிந்துகொண்டே செல்லவேண்டும். தன் குடும்பம், உற்றார், உறவினர் மாட்டு தொடங்கிய அன்பானது, ஊர், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து , உலகளவில் விரிந்து ," யாதும் ஊரே! யாவரும் கேளிர் "என்ற நிலையை அடைய வேண்டும்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

காணாமல் போய்விட்ட உறவுகளைப் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது , உள்ள நெகிழ்ச்சியால்,வரும் அழுகையைக் கட்டுப் படுத்த இயலாது.

"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி "


என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ஈண்டு குறிப்பிடத் தக்கது.

கீதம்
20-03-2012, 01:45 AM
தேர்ந்த ஆய்வுத்திறனால் வெளிப்படும் அருமையானக் கருத்துகள் கண்டு மகிழ்கிறேன். நன்றி ஐயா.

M.Jagadeesan
20-03-2012, 04:34 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
08-04-2012, 06:51 AM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

இக்குறளில் சிலர் தவறு காண்பர்.

" என்பும் " என்ற அக்ரினைச் சொல் ," உரியர் " என்ற சொல்லில் வந்துள்ள " அர் "என்ற உயர்திணை விகுதியை ஏற்காது என்பர். எனவே

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்பிலார்
என்பும் உரிய பிறர்க்கு.

என்பதே சரியான பாடம். உரையாசியர் பதின்மருள் நச்சர் கொண்ட பாடமும் இதுவேயாகும்.

" என்பும் " என்ற சொல்லில் உள்ள "உம் " இழிவு சிறப்பு உம்மை.அன்புடையார் எழும்பினால் மட்டுமின்றி பிற உறுப்புகளைத் தானம் செய்தும் மற்றவர்களுக்கு உதவுவார்கள். இறைவரிடம் கொண்ட அன்பு , கண்ணப்பனைக் கண்ணைத் தானம் செய்யச் செய்தது. புறாவின் உயிரைக் காக்க , சிபி தன்னுடைய சதையை அறுத்துக் கொடுத்தான்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
08-04-2012, 07:00 AM
என்பும் உரிய பிறர்க்கு என்ற தங்களின் விளக்கமே சரி எனத்தோன்றுகிறது. பதிவுக்கு நன்றி ஐயா :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
08-04-2012, 07:12 AM
என்பும் உரிய பிறர்க்கு என்ற தங்களின் விளக்கமே சரி எனத்தோன்றுகிறது. பதிவுக்கு நன்றி ஐயா :)

M.Jagadeesan
17-05-2012, 11:35 AM
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

உயிரையும், உடலையும் இணைக்கின்ற கருவியாக அன்பு இருக்கின்றது. உடலுக்கு வரும் இன்ப துன்பங்களை உயிர் அனுபவிப்பதும், உயிருக்கு ஒரு துன்பம் வரும்போது, அதைக்கண்டு உடல் துடிப்பதும் அன்பினால் ஏற்பட்ட பிணைப்பாகும்.

பழைய திரைப்படம் ஒன்றில் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நடிகர் சந்திரபாபு தன் காதலியின் புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு

" இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக " என்று பாடுவார்.

M.Jagadeesan
08-06-2012, 12:47 PM
அன்பீனும் ஆர்வ முடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.


அன்பின் அடியாக ஆர்வம் பிறக்கும்.அந்த ஆர்வத்தின் பயனாக நட்பு அல்லது தொடர்பு உண்டாகும்.

ஒருவன் ஒரு பெண்ணிடம் காதல் ( அன்பு ) கொள்வதாக வைத்துக் கொள்வோம். அந்தக் காதலானது அவளை அடையவேண்டும் என்ற ஆர்வத்தை அவனுள்ளே தூண்டுகிறது. பல வழிகளைக் கையாண்டு முடிவில் அப்பெண்ணோடு ஒரு தொடர்பை அவன் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாமே அன்பின் செயல்!

M.Jagadeesan
09-06-2012, 04:01 AM
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இந்த உலகத்தில் பிறர்மீது அன்பு செலுத்தியவர்கள் மட்டுமே, இன்பமடைந்துள்ளனர். இந்த உலகமும் அவரையே கொண்டாடுகிறது.

உலகத்து உயிர்கள் மீது அன்பு செலுத்திய காரணத்தால்தான் , புத்தன், இயேசு, காந்தி ஆகிய பெரியோரை ,உலகை உய்விக்க வந்த உத்தமர்களாகக் கருதி இவ்வுலகம் அவர்களை மறவாது கொண்டாடுகிறது.

ராஜாராம்
09-06-2012, 04:19 AM
அருமையான படைப்பு....

M.Jagadeesan
09-06-2012, 05:31 AM
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி ராஜாராம்!

கீதம்
09-06-2012, 06:21 AM
எளிமையாகவும் தெளிவாகவும் அனைவரும் அறியும் வகையில் குறள் விளக்கம் தருவதற்குப் பாராட்டுகள்.

திருக்குறள் சிந்தனைகளைத் தொடர்வதில் மிகவும் மகிழ்கிறேன். நன்றி ஐயா.

M.Jagadeesan
09-06-2012, 07:20 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

M.Jagadeesan
10-06-2012, 04:31 AM
அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

தெரியாதவர்கள் அறம் செய்வதற்கு மட்டும்தான் அன்பு துணையாக நிற்கும் என்று கூறுவார்கள். ஆனால் வீரத்திற்கும் அது துணையாக நிற்கிறது.

" மறம் " என்ற சொல்லுக்கு " பாவம் " , " வீரம் " என்ற இரு பொருள் உண்டு. இக்குறளுக்கு " வீரம் " என்ற சொல்லே பொருந்தி வருகிறது. வீரனுக்கும் கருணை தேவை. அது " மறக்கருணை " எனப்படும்.கலிங்கப்போரில் ஆயிரக் கணக்கான உயிர்களைக் கொன்று குவித்த மாமன்னன் அசோகனின் உள்ளத்தில் கருணை இருந்தது. அந்தக் கருணையே போரைத் தவிர்த்து புத்த மதத்தைத் தழுவும்படி செய்தது. போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற இராவணனைக் கொல்ல இராமனுக்கு மனம் வரவில்லை. அவனிடம் கொண்ட கருணையே ," இன்றுபோய் போருக்கு நாளை வா " என்று கூறும்படி செய்தது. எனவே விளக்குக்கு எண்ணெய் போல , வீரத்திற்குக் கருணை வேண்டும்.

M.Jagadeesan
11-06-2012, 01:33 AM
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

எலும்பு இல்லாத புழு மற்றும் பூச்சிகளை வெயில் அழித்துவிடுவதைப் போல , அன்பில்லாத உயிர்களை அறம் கொல்லும்.

" என்பு " என்ற சொல்வழக்கு தற்போது " எலும்பு " என்று மாறி வழங்குகிறது. காசநோயை " என்புருக்கி நோய் " என்றும் அழைப்பர்.

M.Jagadeesan
12-06-2012, 01:32 AM
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

கொடிய பாலைவனத்தில் , காய்ந்துபோன மரம் , துளிர் விடுவது அரிது; அதுபோல நெஞ்சிலே அன்பில்லாதவனுடைய வாழ்க்கையும் இன்பமாக அமையாது.மரம் வளர்வதற்கு மண்ணிலே ஈரம் வேண்டும்; வாழ்க்கை இன்பமாக அமைவதற்கு நெஞ்சிலே ஈரம் வேண்டும்.

M.Jagadeesan
13-06-2012, 03:56 AM
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

அகத்திலே அன்பில்லாதவர்கள் , பெற்றிருக்கின்ற புறத்து உறுப்புகளால் எந்த பயனும் இல்லை என்பதாகும்.

அன்பு கொண்டவரின் கண்கள் பிறர்படும் துன்பங்களைக் கண்டு இரக்கம் கொள்ளும்; அன்பு கொண்டவரின் கால்கள் அவ்விடத்தே விரைந்து செல்லும்; அன்பு கொண்டவரின் கைகள் அவர்க்கு உதவி செய்யும். அகத்திலே அன்பு இல்லாதவர்க்கு இவ்வுறுப்புகளால், பிறர்க்கு எந்தப் பயனும் இல்லை. அவர்க்கு மட்டுமே பயன்படும்.

செல்வா
13-06-2012, 02:56 PM
நல்ல திரி எனக்கிருக்கும் சந்தேகங்களையும் கேட்கலாமா ஐயா?

M.Jagadeesan
13-06-2012, 03:21 PM
கேளுங்கள் ! எனக்குத் தெரிந்த அளவில் பதில் சொல்கிறேன். நன்றி!

M.Jagadeesan
13-06-2012, 04:00 PM
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழியாகத்தான் உயிர் உடம்பில் நிலைத்திருக்கிறது. அந்த அன்பில்லா வாழ்க்கை , எலும்பும் தோலும் போர்த்திய வெறும் பிண வாழ்க்கையே அன்றி உயிர் நின்ற வாழ்க்கையாகாது.

எப்படிப்பட்ட கொலைகாரனாக இருந்தாலும் , ஏதாவது ஓர் உயிரிடத்தில் அன்பு செலுத்துவான். அன்பில்லாத மனிதன் வெறும் மின்சாரத்தினால் இயங்குகின்ற ஓர் இயந்திரத்திற்குச் சமமாவான். இயந்திரத்திற்கு உறுப்புகள் உண்டு; ஆனால் உணர்ச்சி கிடையாது. அன்பில்லாதவனை மனிதன் என்று சொல்வதைக் காட்டிலும் எலும்பைத் தோல்போர்த்திய உடம்பு என்று சொல்வதே சிறந்தது என்கிறார் வள்ளுவர்.

M.Jagadeesan
15-06-2012, 02:50 AM
விருந்தோம்பல்

" விருந்து " என்ற சொல்லுக்குப் " புதியது " என்று பொருள். " விருந்தே புதுமை " என்று கூறும் தொல்காப்பியம்.தற்போது ," விருந்து " என்ற சொல் தன் உண்மைப் பொருளை இழந்து " சுவையான உணவு " என்று மக்களால் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. " விருந்தினர் " என்ற சொல்லுக்குப், "புதியவர் " என்று பொருள். விருந்தினர்களை உபசரிப்பதில் , ஆண்களைவிட பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சிலப்பதிகாரத்தில், கண்ணகி , கோவலனைப் பிரிந்திருந்த காலத்தில் , தான் இழந்த கடமைகளாக


அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை....

என்று குறிப்பிட்டு வருந்துகிறாள்.

இராமனைப் பிரிந்து , அசோகவனத்தில் , சீதை இருந்தபோது , விருந்தினர் வந்தால் இராமன் என்ன செய்வானோ என்று எண்ணி வருந்துவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்.

" விருந்து வந்தபோது எண்ணுறுமோ என விம்மும்...."

என்று சீதை எண்ணிக் கலங்குகிறாள்.

81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இல்லறத்தில் இருந்து மனைவி மக்களோடு வாழ்கின்ற எல்லா வாழ்வும், தம்மிடம் வந்த விருந்தினரைப் போற்றி உதவி செய்வதற்குத்தான் என்பதாகும்.

முற்காலத்தில் வீடுகளின் முன்னே பெரிய திண்ணைகளை வைத்து வீட்டைக் கட்டினார்கள். வருகின்ற விருந்தாளிகள் தங்கி, இளைப்பாறிச் செல்வதற்கு அவை பயன் பட்டன. தற்போது வீடுகளின் முன்னே திண்ணைகள் காண்பது அரிது.விருந்தோம்பல் பண்பு தற்போது அருகிவிட்டதே இதற்குக் காரணம்.

M.Jagadeesan
16-06-2012, 11:28 AM
82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

தானுண்ணும் உணவு , இறவாத பெருமை தரும் அரிய மருந்தே ஆயினும் , வந்த விருந்தினர் வீட்டிற்கு வெளியே உணவின்றிக் காத்திருக்கத் தனித்துண்பது, இல்லறத்தானுக்குத் தகாத செயலாகும்.

வீட்டிற்கு வந்த விருந்தினரோடு அமர்ந்து உண்பதே நாகரிகமான செயலாகும்.சுவையான உணவைத் தான் மட்டும் உண்டு, சுவையற்ற உணவை விருந்தினருக்கு ஈதல் , தகாத செயலாகும் . சாவாமைக்குக் காரணமான மருந்தாக இருந்தாலும், விருந்தினரோடு பகிர்ந்து உண்ணுதல் வேண்டும்.

M.Jagadeesan
19-06-2012, 01:45 AM
83 . வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.


தம்மிடம் வருகின்ற விருந்தினரை நாள்தோறும் பாதுகாத்து உபசரிப்பவனது இல்லற வாழ்வானது , வறுமையால் துன்பமடைந்து பாழடைவது என்பது ஒருகாலும் இல்லை.