PDA

View Full Version : ஏனிந்த இழப்பு.....??



சிவா.ஜி
21-09-2011, 02:43 PM
பரமக்குடி பலஉயிர் குடித்தது
எதேச்சையாகவா...எதேச்சதிகாரத்தாலா
கல்லெறிந்ததாலா கடும்
சொல்லெறிந்ததாலா....
ஏதோ ஒன்றால்
அப்பாவிகள் சிதையெரிந்தது....

இனத்தலைவனின் இறந்தநாள்,
இன்றாகியது...இன்னா செய்யாதவரின் இறந்தநாள்
இப்படியும் நடக்குமென்றோ
இனிப்பு வாங்கித்தர வந்த தந்தை
இல்லாமல் போவாரென்றோ
அதிர்ச்சியில் அழ மறந்த
அந்தக் குழந்தைக்குத் தெரியாதே


கண்ணீரஞ்சலிக்காய் கூடியவர்
கண்ணியம் மறந்து
கல்லெறிந்தது குற்றமா....
காவல் வேலை விடுத்து
காலன் வேலை செய்த
காவலரின் குற்றமா....

குற்றம் யார்மீதாகினும்
சற்றும் சம்பந்தமில்லா உயிர்கள்
சுற்றும் நடப்பதை
முற்றும் உணர்வதற்குள்
வெற்றுடலை வீதியில் விட்டு...
வற்றாத் துயரை
உற்றாரிடம் விட்டுப் பிரிந்ததே....

ஊரைக் குறை சொல்வதா
ஊருக்குள் உலவும்
சாதி வேரைக் குறை சொல்வதா....
சாதிக்கணலை ஊதிப்பெருக்கும்
தலைவனைச் சொல்வதா...
இருக்கும்போதே உதவாதவன்
இறந்தபின் உதவுவானா எனக்கூட
அறிந்துகொள்ளாத தொண்டனை சொல்வதா...

உலகில் இருப்பது இரு இன சாதி
உயிர் பிரிந்தால் வெறும் பிண சாதி
இதை அறியாதவர்கள் அழிவதில் ஆதங்கமில்லை....
ஒன்றும் அறியாதவர்கள் அழிவதைக் கண்டு
என்றும் மனிதம் சுமக்கும் மனம் அழுகிறது....!!!

seguwera
21-09-2011, 04:48 PM
உலகில் இருப்பது இரு இன சாதி
உயிர் பிரிந்தால் வெறும் பிண சாதி
இதை அறியாதவர்கள் அழிவதில் ஆதங்கமில்லை....
ஒன்றும் அறியாதவர்கள் அழிவதைக் கண்டு
என்றும் மனிதம் சுமக்கும் மனம் அழுகிறது

இன்னும் எத்தனை காலம் இதுபோல் ரத்தங்கள் தோய்க்கும் குரு பூஜைகள் தொடருமோ.
சாதீய சாத்தான்கள் எக்காளமிட்டு உயிர் பலி கேட்குமோ
அதை விட இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள்
நம் காவல்துறையின் திறமையற்ற அடக்குமுறைக்கு பழியாகுமோ தெரியவில்லை
இம்மானுவேல் சேகரன், பசும்பொன் முத்துராமலிங்கம் மறுபடி பிறந்து வந்து குரு பூஜை வேண்டாம் என்று சொன்னால் கூட கேட்கமாட்டார்கள் போல.

அருமையான பதிவு சிவா.ஜி

M.Jagadeesan
21-09-2011, 04:55 PM
மூன்று உயிர்களைத் தூக்கிலிடக்கூடாது என்ற போராட்டம் ஒருபக்கம்.மறுபக்கம் கொக்கு, குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளி 7 உயிர்களைக் கொன்று இருக்கிறார்கள். இதைத் தவிர்த்து இருக்கலாம் என்பதே அனைவரின் கருத்து.

சிவா.ஜி
22-09-2011, 12:40 PM
உண்மைதான் சேகுவேரா...காவல்துறையினரும்....இந்தளவுக்கு இருந்திருக்க தேவையில்லை. கும்பலும்...சந்தர்ப்பத்துக்கு எதிர் நோக்கி இருக்காமல்...அமைதியாய் தங்கள் அஞ்சலியை செலுத்தியிருக்கலாம்.

என்ன செய்வது...யாரோ எதையோ செய்யப்போக....அப்பாவி மக்கள்தான் பலியாகிறார்கள்.

நன்றி நண்பரே.

சிவா.ஜி
22-09-2011, 12:40 PM
நிச்சயமாய் தவிர்த்திருக்கலாம் ஜெகதீசன். தேவையற்ற உயிரிழப்பு.

மிக்க நன்றி.

Nivas.T
22-09-2011, 12:48 PM
மனிதனாய் பார்த்து திருந்தாவிடில் நாட்டை திருத்த முடியாது

சாதிவெறி சாக்கடை

சிவா.ஜி
22-09-2011, 03:14 PM
சாக்கடை எப்போதுதான் சுத்தமடையும்....ஆதங்க கேள்வி.

ரொம்ப நன்றி நிவாஸ்.

jaffer
03-10-2011, 11:25 AM
அசிங்கமான வரலாற்று பதிவு.

aren
03-10-2011, 11:34 AM
சாதியை ஓட்டாக்கி அதை காசாக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரையில் இந்த மாதிரியான நிகழ்வுகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கும். நாம் பேசலாம் ஆனால் அதனால் ஒன்றும் உருப்படியாக எதுவும் நடந்திடப்போவதில்லை.

சாதியை உபயோகித்து கட்சி நடத்துபவர்களை முதலில் அகற்றவேண்டும், பின்னர் இந்த மாதிரியான விஷயங்கள் குறையலாம்.