PDA

View Full Version : அன்றொருநாள்: ஆகஸ்ட் 06:II



innamburan
09-08-2011, 07:59 AM
அன்றொருநாள்: ஆகஸ்ட் 06:II

கடியாரம் அழுவதை கண்டீர்களோ?
எம்டன் இரண்டு குண்டு போட்டவுடன் மதராஸ் பட்ணம் காலியாச்சு. வீடு, மனை சல்லிசாச்சு. அப்போ தாத்தா பாட்டி வாங்கிப்போட்டிருந்தா, ஏழு தலை முறைக்கு ஆச்சு, அரசியலார் அடிச்சுக்கிணு போகாட்டி! எதுக்கு சொல்ல வரேன் என்றால், ஆகஸ்ட் 06,1945 அன்று [ 9:15:17 காலை: அணுகுண்டு வீசப்பட்டது.] ஹிரோஷிமா என்ற ஜப்பானிய நகரின் ஜனத்தொகை 340/350 மிலியனில், 90/166 மிலியன் பேர்கள் அமெரிக்கா போட்ட அணுகுண்டுக்கு பலியானார்கள்; பின்னர், பற்பல ஆண்டுகளுக்கு மக்கள் இறந்த வண்ணம், கருச்சிதைவுகள், உயிருடன் பிறந்த உருச்சிதைவுகள். ‘தெய்வம்’ (?) மாதிரி நின்று கொல்லும் புற்றுநோய். இந்த குண்டுக்கு ஈவிரக்கமில்லாமல் அமெரிக்கர் வைத்த செல்லப் பெயர், ‘குட்டிப்பயல்’ (ரூஸ்வெல்ட் துரைக்கு சமர்ப்பணமாம்!). ஆறு நாட்கள் கழித்து நாகசாகியில், ‘குண்டன்’ (சர்ச்சில் துரைக்கு சமர்ப்பணமாம்!). ஜப்பான் சரணடைந்தது. அத்தருணம் ஜப்பான் பிரதமர் டோஜோ. அவர் ஹராகிரிக்கு (தற்கொலை) முயன்றதும், ஜப்பானிய மக்களால் தெய்வாம்சம் பொருந்தியவர் என்று கருதப்பட்ட சக்ரவர்த்தி ஹீரோ ஹிட்டோ கெளரதையுடன் அறிவித்த பிரகடனமும், அமெரிக்காவின் ஜெனெரல் மக்ஆர்தர் ஜப்பானின் ஆளுமையை எடுத்துக்கொண்டதும், ஏன்? அன்றைய ஹிந்து தலைப்புகளும் மனதின் கண் முன் நிற்கின்றன, இப்போது.

அணுசக்தியை, அதாவது அணுவை பிளந்தால் உற்பத்தியாகும் அபார சக்தியை நாசவேலைக்கு முஸ்தீபு செய்வோருக்கு, இரண்டாவது உலகப்போரில் வெற்றி என்பது 1945க்கு பல வருடங்களுக்கு முன்னதாகவே ஊரறிந்த ரகசியம். ஏன்? 1934 லிலேயே நச்சு விதை விதைத்தாச்சு. அதற்கான விஞ்ஞான பின்னணிகள்/ஆராய்ச்சிகள்/ரகசியங்கள்/ விஞ்ஞானிகளை ஈர்க்கும் வித்தைகள்/ உள்குத்துக்கள் பற்றி புத்தகமே எழுதி விடலாம். பல நூல்களும் வெளிவந்தன. ஒன்று, நீங்கள் கவனிக்கவேண்டும். இதற்கு பிறகு நோ அணுகுண்டு! ஏன்? எல்லா நாடுகளும், இந்தியா உள்பட, லொட, லொட என்று, ஆண்டாண்டு தோறும் கோடிக்கணக்கான பக்கங்களில் சாந்தி பர்வம் படித்தாலும், உண்மையான காரணம், தவிர்க்கமுடியாத அச்சம். இப்போது, பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால்...! என்று கதி கலங்கிக் கிடக்கிறார்கள். இது விஷயமாக, இரு நிகழ்வுகள்:
1.ஜூலை 9, 1955 அன்று லண்டனிலிருந்து வெளியான ‘ரஸ்ஸல் - ஐன்ஸ்டீன் பிரகடனம். கையொப்பமிட்ட 11 உலக பிரபலங்களில் நோபல் பரிசு பெற்ற அணுசக்தி விஞ்ஞானிகள் அடக்கம். ஒரு வரி: ‘...நம் எல்லோருக்கும் அபாயம். அதை புரிந்து கொண்டால் தான், ஒருமித்து அதை விலக்கமுடியும்...’
83 வயதில் ராஜாஜி அவர்கள் 1962 இல் முதல்முறையாக வெளிநாட்டுப்பயணம், அணுசக்தியை எதிர்க்க, மேற்கொண்டது, இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும். அமெரிக்க அதிபர் கென்னெடியிலிருந்து, ரஷ்ய பிரிதிநிதிகள் வரை எல்லாரும் அவரை சந்தித்தனர். அவரின் வாதத்திறனையும் போற்றினர். அத்துடன் சரி. இத்தனைக்கும், 1954லிலேயே, ராஜாஜி அவர்கள் அணுசக்தியையே எதிர்த்தார். முதற்கண்ணாக, இந்த தொழிலியல் அபாயகரமானது, சமையலுக்கு இடிமின்னலையா பயன்படுத்துவது என்றார்.மக்களுக்கு புரியாத சமாச்சாரமாயிற்றே என்று கவலைப்பட்டார். சுதந்திரமான விஞ்ஞானம் வேறு. இந்த வாடகை விஞ்ஞானம் வேறு என்றார். அவரது தீர்க்கதரிசனம் நமக்கு புரிய எத்தனை இடர்ப்பாடுகளோ?
சில கொசுறு செய்திகள்:
இந்த அணுகுண்டு பரிசோதனை மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் என்று ரகஸ்யமாக நடந்தது. லீடர், 44 வயதே ஆகிய என்ரிக்கோ ஃபெர்மி. ஒரு முக்கிய நிலை (க்ரிட்டாக்காலிட்டி) எந்த நிமிடமும் ஏற்படலாம். ‘சாப்பிட போகலாம். அது காத்திருக்கும்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அது மருவாதையாய் கேட்டதே!
ராபெர்ட் ஆப்பென்ஹைமர் இந்த ஆராய்ச்சியின் பிரதானபுருஷன். அணுகுண்டுக்கு நிவாரணம் ‘சாந்தி’ என்று அவர் அமெரிக்க மேலவைக்கு சொன்னதாக, என்றோ படித்த ஞாபகம்.
ராஜாஜி அமெரிக்காவிலிருந்த போது, அந்த நாடு காந்தி மஹான் தபால்தலை வெளியிட்டது. ஒரு நிருபர் அதை பரிசாக, ராஜாஜியிடம் கொணர்ந்தார். ‘ நீங்களே இதை, அதிபர் கென்னடிக்கு, அணுகுண்டை ஒழிக்கவேண்டும் என எழுதுவதற்கு உபயோகியுங்கள்.’ என்று சொல்லி திருப்பிக்கொடுத்தார். பாயிண்ட்: என் பேச்சைக்கேட்டு, உங்கள் அதிபர் மனம் மாறவில்லை.
இன்னும் எழுத நிறைய இருக்கிறது. தருணம் கிடைத்தபோது பார்க்கலாம்.
இன்னம்பூரான்
06 08 2011
உசாத்துணை:
http://www.pugwash.org/about/manifesto.htm

http://groups.yahoo.com/group/SAAN_/message/547

http://www.3rd1000.com/nuclear/cruc18.htm

இன்றைய அப்டேட்: குசினியறையில் அணுவை பிளக்கராறாரேமே, ரிச்சர்ட் ஹாண்ட்ல்! திடுதிப்னு அவரு ஸ்வீடனுடைய அணுசக்தி மன்றத்திடம், ‘அடியேன் வீட்டில் ஒரு அணுசக்திக்கூடம் அமைக்கலாமோ?’ என்று கேட்க, அவர்கள் பதறிப்போய், போலீசிடம் சொல்ல, அவரை கைது செய்தார்கள். அவரும் ஜாலியா தகவலை ப்ளாக்லெ போட்டுட்டார். எதற்கும் திம்முகுடி மாதிரி குக்கிராமங்களுக்கு போனால் கூட சாக்கிரதை! சாக்கிரதை! அணு துளைக்கும் கும்பல் இருக்கலாம்.



http://www.thehindu.com/news/article2322883.ece

பாரதி
09-08-2011, 04:15 PM
பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. அணு உலைகளைப் பற்றிய அச்சம் இப்போது பல நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறதே.

நாஞ்சில் த.க.ஜெய்
10-08-2011, 07:06 PM
அணு சக்தியினால் விளையும் பலன் கொஞ்சம் உண்டென்றாலும் அதனால் ஏற்படும் விளைவினை காணும் போது ஏற்படும் பயம் இன்றைய அரசியல் வாதிகளிடம் இல்லாது மென் மேலும் அணு உலைகள் அமைப்பது நமக்கு நாமே தோண்டி கொள்ளும் மரண குழி ...நான் அறிந்த தகவல் ஒன்று அடிக்கடி சுனாமி தக்குதல் மற்றும் நிலநடுக்க தாக்குதல்க்குள்ளாகும் ஜப்பான் நாட்டின் புருஷிமா அணுஉலை 7.2 ரிக்டர் அளவு தாங்கும் வகையில் கட்டப்பட்டும் இன்று அந்த அணு உலையிலிருந்து வெளியேறும் கதிவீச்சு அந்த நாட்டிற்கே பெருத்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ..அதே நேரத்தில் இனிமேல் அணுஉலைகள் அமைக்கபடமாட்டாது எனவும் முடிவு செய்ய பட்டுள்ளது ..இந்நிலையில் நம் நாட்டில் கட்டப்படும் அணு உலைகள் 4 .2 ரிக்டர் வந்தாலும் தாங்குமா என்பது சந்தேகமே ...நம் நாட்டில் நீர் வளம் காற்றாலை மற்றும் சூர்ய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரம் மற்றும் ஏற்கனவே உள்ள அணு உலைகள் மூலம பெற படும் மின்சாரம் மூலம் மின் தேவைகள் நிறைவேற்ற படும் நிலையில் புதிய அணு உலைகள் நம் நாட்டிற்கு அவசியமா? ..மற்ற நாடுகள் இதன் பாதிப்பினை உணர்ந்து புதிய அணு உலைகள் அமைப்பதற்கு சிந்திக்கும் நிலையில் இந்தியாவில் மாட்டும் எதோ ஆய்வு கூடங்களில் செய்ய படும் ஆய்வுகள் போல் புதியதாக அணு உலைகள் அமைக்கபடுவது வருத்தற்குரியது ....ஒரு அரிய தகவலினை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா...