PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 4: I



innamburan
05-07-2011, 05:49 AM
அன்றொரு நாள்: ஜூலை 4:I

‘வந்த சுவடு தெரியாமல்’ என்றொரு சொற்றொடரொன்று உண்டு. பின் லேடனை அமெரிக்கர் ‘வந்த சுவடு தெரியாமல்’ வந்திறங்கி கொன்றனர். கந்தஹார் விமானதளத்தில் ஒரு இந்திய விமானம் சிக்கிய போது, அக்காலத்து இந்திய அரசு, ‘தொம் தொம் தொபக்ட்டீர்’ கோகுலாஷ்டமி கிருஷ்ணனைப்போல் அங்கும், இங்கும், எங்கும் சுவடு பதித்து, அபகீர்த்தி கட்டிக்கொண்டது. வல்லுனர்கள் செய்யவேண்டியதை அரசியலர் செய்தால், பிடிக்கப்பட்ட பிள்ளையாரும் வானர ரூபத்தில்! ஜூலை 4, 1976 அன்று நடந்த கதையே வேறு.

மழை ‘சோ’ என்று பொழியும். ஆனால், மின்னலும், இடியும் தோன்றி மறையும், வினாடித்துளியில். அந்த மாதிரி ஆகாசத்திலிருந்து குதித்தனர் நூறு வீரர்கள், கும்பிருட்டில். பகையிடம் சிக்கியிருந்த அப்பாவிகளில் 103 பேரை மீட்டு, அலாக்கா, தூக்கிச்சென்றனர். பகை புகையாகி விட்டிருந்தது! கூண்டோடு கைலாசம். துணைக்கு மேலுலகம் சென்றது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டு வீரர்கள் 45, அப்பாவிகள் மூன்று, 11 மிலிடரி விமானங்கள். கன கச்சிதமாக, கறாராக, உச்சகட்ட ரகசியமாக, ஒரு வார காலம் இட்ட திட்டம் 90 நிமிடங்களில் அமர்க்களமாக நிறைவேற்றப்பட்டது. ஒரு குறை. அல்ல. கறை. தளபதி போர்க்களத்தில் மாண்டு போனான். ஐவருக்கு பலத்த அடி. இது தற்கால வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வீராதி வீர, தீராதி தீர பராக்கிரமங்களில் முதலிடம் வகிக்கும்.

‘மின்னலும், இடியும்’: பிற்காலம்,ேதன்யாஹூ வின் பெயர் வைத்து, பெருமை சேர்க்கப்பட்டது.
இஸ்ரேலி கமாண்டோ படை;
தளபதி:
கர்னல் யோனாதன் நேதன்யாஹூ (பிற்கால இஸ்ரேலிய பிரதமரின் அண்ணன்: ‘மின்னலும் இடியும்’ என்று நாமகரணம் செய்யப்பட்ட இந்த அதிரடி தாக்குதலுக்கு அவருடைய பெயர் சூடப்பட்டது).
இடம்:
உகாண்டா, ஆப்பிரிக்கா

நடந்தது என்ன?:
ஒரு வாரம் முன்னால் ஜூன் 27 அன்று 248 பயணிகளுடன் ஏதென்ஸிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் ஃபிரான்ஸ் விமானத்தை பாலஸ்தீனிய & ஜெர்மானிய பயங்கரவாதிகள் நால்வர் கடத்தி லிபியாவின் பெங்காசியில் இறக்கினர். ஒரு பெண் விடுதலை. விமானம் கிளம்பி உகாண்டாவின் எண்டெப்பெ விமானதளத்தில் இறக்கப்பட்டது. மேலும் நால்வரும், உகாண்டா கொடுங்கோலன் இடி அமீனும் பகைக்குத் துணையாயினர். யூதப்பயணிகள் கொலைகளத்துக்காக தனிப்படுத்தப்பட்டனர். டிமாண்டு: 53 பயங்கரவாதிகளை விடுவிக்க
வேண்டும். ஆனால், ஃபிரன்சு விமான தளபதியும், அவரது பணியாளர்களும், ஒரு கன்யாஸ்திரீயும், மற்றும் சில பயணிகளும் விடுதலையை மறுத்து விட்டனர். என்னே பெருந்தன்மை! என்னே தியாகம்!

உலகை வியக்க வைத்த இந்த வாகை சூடிய படலத்தைக் கண்டு அமெரிக்க ராணுவமே பாடம் கற்க வந்தது. ஆனால், அவர்களுக்கு வந்த சோதனையில் தோல்வி அடைந்தனர். அது போகட்டும்.

இஸ்ரேல் சிறிய நாடு. யூதர்களுக்கு சொந்த மண் கிடையாது என்ற நிலை வரலாறு முழுதும் உண்டு. ஆயினும் தங்கள் குட்டி ராஜ்யத்தை திறம்பட நிர்வஹித்தனர். இன்னல்களை சமாளித்தனர். இந்த இன்னலை தீர்க்க, முடிந்தவரை இடி அமீனோடு சமாதானப் பேச்சு நடத்தினர். அதெல்லாம் வீண் ஆன உடன், அவர்கள் வகுத்தத் திட்டங்கள், செய்து பார்த்த சோதனைகள், வெள்ளோட்டங்கள் எல்லாம் உச்சாணிக்கிளை தரம் வாய்ந்தவை. ஆறு விமானங்கள் நள்ளிரவில், எண்டெப்பெ விமானதளத்திற்குத் தெரியாமல் வந்து இறங்கின. அப்பறம் என்ன? டமால் டுமீல்? இல்லை! ஒரு கறுப்பு பென்ஸ் கார் வந்திறங்கி, இடி அமீனை அழைத்துப்போவது போய் பாவ்லா செய்து, மாட்டிக்கொண்டது, அவன் வெள்ளைக்காருக்கு மாறிய சமாச்சாரம் தெரியாததால், எதிர்பாராமல் வந்த சிக்கல். குறுக்கே வந்த இருவரை கொன்று, கையோடு கையாக டமால் டுமீல்.
நான் இந்த சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு மூன்று காரணங்கள்:

கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை, இஸ்ரேலுக்கு. 1990ல் கூட இந்தியா இஸ்ரேல் நாட்டைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால், 1962லியே சில ரகஸ்ய தகவல் பரிமாற்றத்தின் பயனாக, அப்போதே எனக்கு அவர்களின் தீவிர தேசபக்தி, அசாத்ய துணிச்சல், பல துறைகளில் கிடு கிடு வளர்ச்சி, திட்டமிடுவதில் மேன்மை, கடமை, கட்டுப்பாடு, தியாகம் ஆகியவற்றின் மேன்மையெல்லாம் புரிந்தது. சில நாட்கள் முன்னால் ஒரு இஸ்ரேலிய நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அன்னாட்டு மக்களின் என்றும் குறையாத தேசாபிமானத்தின் ஆழம் புரிந்தது. நமக்கு ஒரு துளி ஒட்டிக்கொள்ளட்டுமே.
மின்னல், இடி எல்லாம் சரி தான். ஒரு உடும்புப்பிடி வேண்டும். வலுவான திட்டம் வேண்டும். ரகசியம் காக்கவேண்டும்.
கொடுங்கோலன் இடி அமீனுக்கு கென்யா மீது சந்தேஹம். உகாண்டா வாழும் நூற்றுக்கணக்கான கென்யர்களை கொன்றான். வெறுப்பு மிகுந்து மக்கள் அவனை ஒதுக்கினர். கழுதை கெட்டால் குட்டிச்சுவர். செளதி அரேபியாவில் சரண் புகுந்தான். அங்கு, ஆகஸ்ட் 2003ல் செத்தான்.
இன்னம்பூரான்
04 07 2011

உசாத்துணை

http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/4/newsid_2786000/2786967.stm

நாஞ்சில் த.க.ஜெய்
05-07-2011, 08:35 AM
புதியதோர் தகவல் அறியும் வகையில்...மொசார்ட் எனும் இஸ்ரேல் உளவுத்துறைதான் உலகத்தில் சிறப்புவாய்ந்தது என்று முன்னர் அறிந்திருந்தேன் ...அந்த நாட்டினரின் என்றோ நிகழ்ந்த போர்களபாதை பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி...தொடருங்கள் ஐயா..

கீதம்
06-07-2011, 10:09 PM
இஸ்ரேலின் தேசபக்தியையும், அதிரடி வீரர்களின் சாகசத்தையும் வியந்து போற்றுகிறேன். தகவல் அறியச் செய்தமைக்கு நன்றி ஐயா.