PDA

View Full Version : ஜானு



M.Jagadeesan
26-06-2011, 01:55 AM
கதவு தட்டும் ஓசை கேட்டது.

கதவைத் திறந்தது ஜானு.பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி நின்று கொண்டிருந்தாள்.

" வாங்க மாமி! உள்ள வாங்க!"

" என்ன ஜானு! வீட்டுவேலை எல்லாம் முடிஞ்சுதா?"

" அதை ஏன் மாமி கேக்குறீங்க! இன்னும் ஒழிஞ்சபாடு இல்ல! காலங்காத்தாலே ஐஞ்சு மணிக்கே எழுந்துட்டேன். நான் குளிச்சிமுடிச்ச பிறகு, கிருஷ்ணா குளிக்கிறதுக்கு வெந்நீர் விளாவினேன். அப்புறமா குழந்தைகளக் குளிப்பாட்டி, ட்ரெஸ் பண்ணிவிட்டு,டிபன் சாப்பிடவச்சி ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடறது. அப்புறம் கிருஷ்ணாவுக்கு லஞ்ச் பாக்ஸுல சாப்பாடு எடுத்து வச்சு ஆபீஸுக்கு அனுப்பி வச்சேன். செத்த நேரம் அக்கடான்னு உக்கார முடியல மாமி! அடுத்தாப்ல அழுக்குத் துணியெல்லாம் துவைக்கணும்; பண்ட பாத்திரம் கழுவணும்;ஒரு சீரியல் கூட உக்காந்து பாக்கமுடியல மாமி!'

" இந்தாங்க மாமி! பஜ்ஜி சாப்பிடுங்கோ!" ஜானு கொண்டுவந்து வைத்த பஜ்ஜியை பங்கஜம் மாமி ருசி பார்த்தாள்.

" பஜ்ஜி டேஸ்ட் வித்தியாசமா இருக்கே! என்ன பஜ்ஜி இது? எப்படி பண்ணுனே?"

" இது பலாக்கா பஜ்ஜி மாமி! டி.வி. யில நேத்து கீதா மாமி சொல்லிக் கொடுத்தாங்க! அதன்படி செஞ்சு பாத்தேன். பிரமாதமா இருந்தது. அதான் உங்களுக்கு ரெண்டு வச்சேன்."

" ஏன் ஜானு! இவ்வளவு கஷ்டப்படுறியே! ஒரு வேலைக்காரிய வச்சுகிட்டா என்ன?"

" கிருஷ்ணா வாங்குற சம்பளத்துக்கு வேலக்காரிய வச்சுக்கிறதெல்லாம் கட்டுப்படி ஆகாது மாமி! நாலு வீட்ல வேலை செய்றவங்க; அரக்கபரக்க செய்வாங்க; வேலைல சுத்தம் இருக்காது; கிருஷ்ணாவுக்கும் அது பிடிக்காது."

" என்ன ஜானு! செயின் புதுசா இருக்கே? எப்ப எடுத்தே?"

" நேத்துதான் மாமி! ரொம்ப நாளா கிருஷ்ணா கிட்ட கேட்டுண்டு இருந்தேன்; நேத்து என்னோடபர்த்டே இல்லியோ அதான் நானும் கிருஷ்ணாவும் எடுத்துண்டு வந்தோம்."

" மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."

" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.

" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.

Ravee
26-06-2011, 02:25 AM
உங்கள் சஸ்பென்ஸ் கதைகளில் மற்றொன்று .... எத்தனை பெண்களை பெருமூச்சு விட வைக்க போகிறதோ ............ இந்த கொடுப்பினை நமக்கு இல்லையே என்று.:lachen001:

கீதம்
26-06-2011, 10:21 PM
'கதவைத் திறந்தது ஜானு' என்ற வரிகளிலேயே கதையை மெலிதாய் யூகிக்க முடிந்தது. அந்த இடத்தில் 'கதவு தட்டும் ஓசை கேட்டுத் திறந்த ஜானுவின் எதிரில் பங்கஜம் மாமி நின்றிருந்தாள்' இதுபோல் இருந்தால் சட்டென்று கண்டுபிடிக்கமுடியாது என்று நினைக்கிறேன்.

யூகிக்க முடியாவிடில் கதையின் கடைசிவரை சுவாரசியம் குறைய வாய்ப்பில்லை. அதுவும் அந்த பஜ்ஜி செய்முறையும், சங்கிலிப் பரிசும் பிரமாதம்.

குடும்பத்தில் இப்படிக் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் நடந்துகொண்டால் இல்லறம் இனிதாய் அமையுமே...

அருமையான கதை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
27-06-2011, 01:03 AM
கதையை எழுதும் விதமும், பிறர் கதையை ஊன்றிக் கவனித்து அலசும் விதமும் பாராட்டத்தக்கது.கீதம் அவர்களுக்கு நன்றி!

Nivas.T
27-06-2011, 06:41 AM
சுவாரசியமாய் இருந்தது

M.Jagadeesan
27-06-2011, 06:50 AM
நன்றி நிவாஸ்!

நாஞ்சில் த.க.ஜெய்
27-06-2011, 09:20 AM
நவநாகரீக பெண்களின் மன மகிழ்வினை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முற்போக்கான முடிவுடன் ஊகிக்க முடியா கதைகளம்..

M.Jagadeesan
27-06-2011, 09:28 AM
பாராட்டுக்கு நன்றி ரவி, த.க. ஜெய்

sarcharan
27-06-2011, 10:16 AM
ஆம்பிள்ளைய (வீட்டுக்கரான) சமையல்காரனா ஆக்கிட்டு.... இதில் சஸ்பென்ஸ் வேறா?

த.ஜார்ஜ்
27-06-2011, 04:39 PM
எங்க வீட்டு பக்கத்தில இருக்கிற ஜானுவ உங்களுக்கு எப்படி சார் தெரிஞ்சது.

MURALINITHISH
01-07-2011, 07:50 AM
வர வர நாடு இப்படிதான் ஆகுது

M.Jagadeesan
01-07-2011, 07:54 AM
சர்சரண், ஜார்ஜ், முரளிநிதீஷ் ஆகியோருக்கு நன்றி!

ஐரேனிபுரம் பால்ராசய்யா
13-07-2011, 12:30 PM
கதை அருமை, சஸ்பென்ஸ் புதுமை. பாராட்டுக்கள்

அக்னி
13-07-2011, 12:38 PM
கதையும் அது கொண்ட திருப்பமும் மிகவும் ரசிக்க வைத்தது.
இறுதியிலிருந்து மேல்நோக்கி மூன்றாவது வரியிற்தான்,
இக்கதை ஏதோ தடம் மாறி முடியப்போவதாகப் பட்டது.

:icon_b:


எங்க வீட்டு பக்கத்தில இருக்கிற ஜானுவ உங்களுக்கு எப்படி சார் தெரிஞ்சது.
அவரு உங்க வீட்டுக்கு அடுத்தபக்கமாம். :lachen001:
ஆனால் அவரு வீட்டுக்கு உங்க வீடு மட்டும்தான் பக்கத்துவீடாம். :lachen001: :lachen001: