PDA

View Full Version : உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்........!



கலாசுரன்
16-05-2011, 08:58 AM
*
எப்பொழுதும் இல்லை எனினும்
உள் சென்று வெளிவர அவைகளில் ஒன்றாய்
உருமாறிச் செல்கிறேன்
சில மௌனங்களுடன்..


ஏன் என்று உள்ளே வந்து பாருங்கள்..!


சுவரின் கீழ் மூலையோரத்து
வெடிப்புகளில் மழலைகளாய்
தூங்கிக்கொண்டிருக்கும் தூசிகள்..!


அவ்வப்போது
என் காலணிகள்
சுவருக்கு பரிசளித்த
மதிப்பற்ற ஓவியங்களாகும்
சில அழுக்குக் கறைகள்..!


கூரையில் ஆங்காங்கே
ஊசலாட்டும் காற்றுக்கு
இசையமைத்தபடி
நடனமாடும் ஒட்டடைத் தொங்கல்கள்..!


அதோ.....
தண்ணீர்ப் பானைமேல்
நான் பருகி முத்தமிட்டு வைத்தபின்
அடுத்த முத்தத்திற்கு
தலை கீழாய் தவம் புரியும்
வெள்ளிநிற கோப்பை..!


தூசிகளை செல்லமாய்
வருடிய கழைப்புடன்
இன்னொரு மூலையில்
நின்றபடி தூங்குகிறான் துடைப்பான்..!


ஒருவித வெட்கத்துடன்
முகம் மறைத்தபடி
குப்புற கிடக்கும்
என்னருமைப் பேனாக்கள்..!


தோரணங்களாய் தொங்கியபடி
ஒரு செவ்வகப் பந்தலிடும்
சற்றும் தூசி தட்டாத நினைவுகளுடன்
என் மேஜை விரிப்பு..!


என் கவிதைகளை
மௌனமாய் வாங்கிவிட்டு
அறை எங்கும் சிதறிச் சென்று
என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல்
நடித்துக்கொள்ளும் தூசிப் போர்வை அணிந்த
சில காகிதங்கள்..!


இவை அனைத்தும் சரளமாய் நாம் காண
இவைகளின் நிழல்கள் ஏன் நடுங்குகின்றன..?


பீடத்தின் மேலிருக்கும்
ஒற்றைத்திரி விளக்கின் சுடர்
காற்றில் உலைகிறது
அனைத்தின் நிழல்களையும் நடுக்கியவாறு..!


இருள் சூழக்கூடும்...!

தடுத்திட ஆவேசமாய் ஓடிச்சென்றேன்..
என் ஓட்டம் முழுமையடையும் முன்
எங்கும் இருள், ஒருவித புகை மணம்..


காண்பிக்க ஏராளம் இருக்கிறது
எங்கேயும் போய் முட்டிக்கொள்ளாது
விளக்கு விழிக்கும் வரை அங்கேயே இருங்கள்..


இப்போது
வத்திப்பெட்டி தேடிக்கொண்டிருக்கிறேன்..!
*
***
கலாசுரன்

Nivas.T
16-05-2011, 09:06 AM
கவிதை அருமை
கலாசுரன்

அக்னி
16-05-2011, 09:13 AM
அதோ.....
தண்ணீர்ப் பானைமேல்
நான் பருகி முத்தமிட்டு வைத்தபின்
அடுத்த முத்தத்திற்கு
தலை கீழாய் தவம் புரியும்
வெள்ளிநிற கோப்பை..!

மிக மிக மிக ரசித்தேன் இந்த பத்தியை...

விலைபோகாத
வறிய கவிஞனின்
வாழ்வறை...

யார் கண்டார்...???
அந்த அறைக்கு ஒளி கொடுத்தது,
வத்திப்பெட்டியின்
கடைசிப்பிள்ளையாகவும் இருக்கலாம்...

பசிக்கும் தாகத்திற்கும்
ருசியில்லா நீரருந்தும்
கவிஞர்கள் அதிகம்தான் தமிழில்...

பாராட்டுகின்றேன் கலாசுரன்.

ஜானகி
16-05-2011, 09:50 AM
ஒட்டடைகளும், தூசியும், கறைகளும்....கொடுத்துவைத்தவைதான்...ஒரு கவிஞனின் அறையில் குடியிருந்தால்...இப்படி அருமையான கவிதைக்குக் கருவாகலாமே என்றேனும்...!

கீதம்
18-05-2011, 01:53 AM
கண்முன்னே காட்சிகள் விரிய விரிய விழியும் விரிகிறது.

அழுக்கையும் தூசையும் இத்தனை அழகாய் வர்ணிக்கவும் இயலுமோ?

அடுத்த முத்தத்துக்காய் தலைகீழ் தவமிருக்கும் குவளை,

நின்றபடி தூங்கும் துடைப்பான்,

செவ்வகப்பந்தலாய் மேசை விரிப்பு,

நிழல்களின் நடுக்கம்.....

இப்படி அணு அணுவாய் சுற்றிக்காட்டிவிட்டீர்கள் உங்கள் அறையை!

இன்னும் இருக்கிறதாமே... இன்னொரு கவிதையில் அவற்றையும் கண்டுகொள்வோம்.

கவிதை வெகு அருமை. பாராட்டுகள் கலாசுரன்.

(கழைப்பு என்பதை களைப்பு என்று மாற்றினால் இன்னும் ரசிக்கும்)

நாஞ்சில் த.க.ஜெய்
18-05-2011, 03:58 AM
அருமையான வரிகளில் ஒரு கவிஞனின் மன வேதனைகள் ..

கலாசுரன்
19-05-2011, 12:59 PM
கவிதை அருமை
கலாசுரன்

மிக்க நன்றி நிவாஸ் ..:)

கலாசுரன்
19-05-2011, 01:01 PM
மிக மிக மிக ரசித்தேன் இந்த பத்தியை...

விலைபோகாத
வறிய கவிஞனின்
வாழ்வறை...

யார் கண்டார்...???
அந்த அறைக்கு ஒளி கொடுத்தது,
வத்திப்பெட்டியின்
கடைசிப்பிள்ளையாகவும் இருக்கலாம்...

பசிக்கும் தாகத்திற்கும்
ருசியில்லா நீரருந்தும்
கவிஞர்கள் அதிகம்தான் தமிழில்...

பாராட்டுகின்றேன் கலாசுரன்.

தொடர்ந்து உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்து வருகிறேன் ..!!

மிக கவனமாகவும் சுவாரசியமாகவும் அவை அமைத்துள்ளது ..:)

இந்த பின்னூட்டத்திற்கு ஒரு சிறப்பு நன்றி அக்கினி..:)

தவறுதலுக்கு மன்னிக்கவும்

கலாசுரன்
19-05-2011, 01:05 PM
ஒட்டடைகளும், தூசியும், கறைகளும்....கொடுத்துவைத்தவைதான்...ஒரு கவிஞனின் அறையில் குடியிருந்தால்...இப்படி அருமையான கவிதைக்குக் கருவாகலாமே என்றேனும்...!

இவை எல்லாம் என் அறையில் இருப்பதனால் நானும் கொடுத்து வைத்தவன் தான் ..:)

இப்படி ஒரு கவிதையை படைக்க உதவியதே அவைகள் தானே....மற்றும் உங்கள் பின்னூட்டத்தைக் கிளறியதும் ..:)

மிக்க நன்றி உங்களுக்கும் என் அறையிலுள்ள பொருட்களுக்கும் ..:)

கலாசுரன்
19-05-2011, 01:08 PM
கண்முன்னே காட்சிகள் விரிய விரிய விழியும் விரிகிறது.

அழுக்கையும் தூசையும் இத்தனை அழகாய் வர்ணிக்கவும் இயலுமோ?

அடுத்த முத்தத்துக்காய் தலைகீழ் தவமிருக்கும் குவளை,

நின்றபடி தூங்கும் துடைப்பான்,

செவ்வகப்பந்தலாய் மேசை விரிப்பு,

நிழல்களின் நடுக்கம்.....

இப்படி அணு அணுவாய் சுற்றிக்காட்டிவிட்டீர்கள் உங்கள் அறையை!

இன்னும் இருக்கிறதாமே... இன்னொரு கவிதையில் அவற்றையும் கண்டுகொள்வோம்.

கவிதை வெகு அருமை. பாராட்டுகள் கலாசுரன்.

(கழைப்பு என்பதை களைப்பு என்று மாற்றினால் இன்னும் ரசிக்கும்)

இயன்றதை செய்திருக்கிறேன் கீதம் ..:)

கவிதை நடையிலான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பல ..:)

ஆம் "களைப்பு" கவனமின்மையின் அடையாளமாகவே கவிதையில் பதிந்திருக்கிறது ...!

அந்த அவதாநிப்பிற்கும் சுட்டிக் காட்டுதலுக்கும் ஒரு சிறப்பு நன்றி..:)

கலாசுரன்
19-05-2011, 01:14 PM
அருமையான வரிகளில் ஒரு கவிஞனின் மன வேதனைகள் ..

அதை வேதனை என்றும் வேதனை நிறைந்த ரசனை என்று கூட வைத்துக்கொள்ளலாம் அல்லவா?

மிக்க நன்றி ..:)

அக்னி
19-05-2011, 01:21 PM
இந்த பின்னூட்டத்திற்கு ஒரு சிறப்பு நன்றி நிவாஸ்..:)
:sprachlos020:
என்னோட பதிவை மேற்கோளிட்டு, நிவாஸுக்கு நன்றி சொல்லுறாரே... :eek:
ஒருவேளை நிவாஸ் தாதா வெருட்டியிருப்பாரோ... :mad:

கலாசுரன்
20-05-2011, 09:29 AM
தவறுதலுக்கு மன்னிக்கவும் அக்கினி

திருத்தியிருக்கிறேன், சிறப்பு உங்களுக்குரியது ...:)

அக்னி
20-05-2011, 09:43 AM
சும்மா நிவாஸைக் குழப்பிப் பார்க்கலாம் என்றால், பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு...
:frown:

கலாசுரன்
20-05-2011, 10:30 AM
சும்மா நிவாஸைக் குழப்பிப் பார்க்கலாம் என்றால், பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு...
:frown:

இந்த பெருந்தன்மைக்கு மிக்க நன்றி அக்கினி..:)