PDA

View Full Version : பெண் பார்க்கும் படலம்



ரங்கராஜன்
28-03-2011, 11:33 AM
பெண் பார்க்கும் படலம்

"வந்தே மாஆஆஆஆஅஅஅஆஆஆ...த்திரம்ம்ம்ம்ம், வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம், வந்தே மாஆஆஆஆஅஅஅஆஆஆ...த்திரம்ம்ம்ம்ம்,..... வந்தே மாத்திரம் வந்தே மாத்திரம்"....... என்று லத்தா மங்கேஷ்கர் என்னுடைய செல்போன் வழியாக உரக்க சத்தத்தில் ஸ்ருதி மாறாமல் பாடினார்.....

அலுவலகத்தில் எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். அவசரமாக போனை எடுத்து ஆன் செய்வதற்குள் ஒருத்தர் வந்து என்னிடம் சொன்னார்...

"தம்பி நமக்கு சுதந்திரம் கிடைத்து 60 வருஷத்திற்கு மேல் ஆச்சு"...

நான் அசடு வழிந்தபடியே...

"ஹலோ தக்ஸ் ஸ்பீக்கிங்"

"வீ ஆர் ஸ்பீக்கிங் ப்ரம் ஈ2 போலீஸ் ஸ்டேஷன், தக்ஷ்ணாமூர்த்தி இருக்காரா"

"சொல்லுங்க"

"இருக்காரா"

"இருக்கார்.... நான் தான் சொல்லுங்க"

"கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வந்துட்டு போக முடியுமா, உங்க மேல ஒரு பொண்ணு ஈவ் டீசிங் கேஸ் கொடுத்து இருக்காங்க"

"என் மேலையா, எதுக்கு"

"ஈவ் டீசிங், அவங்களும் இங்கையே இருக்காங்க, சீக்கிரம் வாங்க"

"சான்ஸே இல்லை, நீங்க எந்த ஸ்டேஷன்னு சொன்னீங்க"

"ஏ4 போலீஸ் ஸ்டேஷன்"

"முன்னாடி ஈ2 னு சொன்னீங்க"

"தெரியிதுல்ல அப்புறம் என்ன கேள்வி"

"எந்த பிச்சைக்கார, எச்சைக்கல்ல, திருட்டு, பரதேசி......."

"டேய் டேய் நான் தாண்டா சக்தி பேசறேன்"

"தெரியுது சொல்லித் தோல"

"எப்படிடா கண்டுபிடிச்ச"

"உன் மூச்சி, எவனா ஈவ் டீசங் செய்றவன் செல் நம்பர் எல்லாம் கொடுத்துட்டு பண்ணுவானா டா, பிக்காளிப்பயலே"

"அட ஆமா இல்ல"

"சொல்லுடா என்ன மேட்டரு, எப்ப ஊர்ல இருந்து வந்த"

"எனக்கு பொண்ணு பாத்து இருக்காங்க டா"

"அய்யய்யோ பொண்ணு எதாவது குருடா, இல்லை ஊமையா"

"டேய்......"

"சும்மா தமாஸு மச்சி, கங்கா ரிலேஷன் டா... ச்சி சாரி கங்கிராஜுலேஷன் டா"

"தாங்கஸ் டா, நீ எப்ப சாப்பாடு போட போற"

"நீ சாப்பிடறதுக்காக நான் கல்யாணம் செஞ்சிக்க முடியுமா"

"சரி அத விடு (அவனும் முடிவு பண்ணிட்டான் போல எனக்கு கல்யாணமே நடக்காதுனு) மச்சி பொண்ணு போட்டோ தான் பார்த்தேன் அழகா இருக்குடா, நேர்ல பார்க்கணும்"

"சரி"

"நீயும் வாடா"

"டேய் நான் எதுக்கு இலவச இணைப்பா, போடாங்க.... நான் வரமுடியாது எனக்கு ஆபிஸ்ல வேலை இருக்கு"

"சரி உனக்கு எப்ப வீக் ஆஃப்"

"உனக்கு எப்ப பொண்ணு பார்க்க போணும்"

"வர சனி, அல்லது ஞாயிறு"

"டேய் சான்ஸே இல்ல, அன்னைக்கு எனக்கு டியூட்டி எனக்கு வியாழன், வெள்ளி தான் லீவு"

"அப்படிவா வழிக்கு வெள்ளிக்கிழமை தான் பொண்ணு பார்க்க போறோம்"

அய்யய்யோ நானே வாய் கொடுத்து மாட்டிக்கிட்டேனே....

"மச்சி அதான் உங்க வீட்டுல வருவங்களேடா அப்புறம் என்ன"

"இல்ல மச்சி அவங்கெல்லாம் பார்த்துட்டாங்க, நான் சும்மா ப்ரண்ட்ஸோட வரேன்னு சொல்லி இருக்கேன்"

"டேய் ஆம்பளைங்க மட்டும் எப்படிடா தனியா போய் பாக்குறது, எனக்கு இதுல எல்லாம் பழக்கம் இல்லடா"

"நாங்க மட்டும் என்ன தினமும் பல்லை துளக்கிட்டு, பொண்ணு பாக்குற வேலையா செஞ்சிட்டு இருக்கோம், அதுவும் இல்லாம் துணைக்கு ரஞ்சனி கூட வரா"

"நாசமா போச்சு அவ வந்தா காரியத்தையே கெடுத்துடுவாளே டா, நீங்க இரண்டு பேரும் பேசமாட்டீங்களே எப்படி ராசியானீங்க"

"டேய் அவ ரொம்ப மாறிட்டா, வேலை விஷயமா நான் வெளியூர் போனதுக்கு அப்புறம் அவ என்ன அண்ணா அண்ணானு தான்டா கூப்பிடுறா, பாவம் நான் இல்லாம தனியா வீட்டுல அவ கஷ்ட படுறாடா"

"குட், நான் எப்படி கூட வர்றது,... அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காதே"

"அவளுக்கு மட்டுமா"

" அசிங்கமா எதாவது சொல்லிடப் போறேன், அப்புறம் என்ன ஹேருக்கு எனக்கு இப்ப போன் செஞ்ச"

"சும்மா சொன்னேன் மச்சி, வெள்ளிகிழமை நீ ரெடியாயிடு"

"ஆனா......." நான் அவனிடம் பதில் சொல்வதற்குள் என்னுடைய ச்சீப் வந்தார்... நான் போனை கீழே வைத்தேன்....

"பேசுங்க பேசுங்க தக்ஷ்ணா, ஒண்ணும் பிரச்சனையில்லை.... இன்னும் ஒரு மணி நேரம் தானே இருக்கு, பேசிட்டு அப்படியே ஒரு காபி சாப்பிட்டு வந்தால்......ஷிப்டு முடிந்து விடும், வீட்டுக்கு கிளம்பலாம் இல்லையா..."

வைரங்கள், வைடூரியங்கள், பதித்த செருப்பால் அடித்து விட்டு போனார்... வைரங்கள், வைடூரியங்கள் இருந்து என்ன பயன் வாங்கியது செருப்படி தானே....

"மச்சி நான் அப்புறம் பேசறேன்" அவனின் பதிலை எதிர்பார்க்காமல் செல்லை வைத்தேன்.... வேலையில் முழுகிப் போனேன்...... விஷயத்தையும் அதோடு மறந்தேன்...

வெள்ளிக்கிழமை காலை..... 9 மணிக்கு என்னுடைய செல்போன்...... வந்தே மாத்திரம் பாடியது....... என்னைப் பொறுத்தவரை அதிகாலை அது....

நல்ல தூக்கத்தில் இருந்த நான், அலறி அடித்தபடி வெள்ளையனே வெளியேறு.. வெள்ளையனே வெளியேறு என்பதைப் போல துடித்துக் கொண்டு எழுந்தேன்......... முதலில் இந்த ரிங்டோனை மாற்றவேண்டும்..... மற்ற நேரத்தில் தேசபக்தியை ஊட்டும் இந்த குரல் அதிகாலை நேரத்தில் எரிச்சலை உண்டு செய்கிறது..... தூங்கும் போது பெத்த தாய் எழுப்பினால் அவள் குரலே நமக்கு எரிச்சலை தரும் போது..... லதா மகேஷ்கர் எந்தளவு... என்று நினைத்துக் கொண்டு......... போனை எடுத்தேன்....

"ஹலோலோலோலோலோ"

"டி 8 ஸ்டேஷன்ல இருந்து கால் பண்றோ...."

"செருப்பால அடிப்பேன், சொல்றா சக்தி"

"எப்படிடா கண்டுபிடிச்ச"

"ஏ இருந்து இசட் வரையும் இல்லாத ஸ்டேஷனை சொல்ற உன் திறமையை வைத்து தான்"

"ரெடியா"

"எங்க"

"பொண்ணு பாக்குறதுக்கு"

"டேய் என்னடா பால்காரன், பேப்பர்காரன் மாதிரி காலையிலே போயா நிப்ப, மதியம் போலாம் டா"

"இல்ல மதியம் போனா சாப்பிட சொல்லுவாங்களாம், அம்மா பரிசம் போடற வரை கை நனைக்க வேண்டாம்னு சொன்னாங்க"

"நம்ம ஸ்பூன்ல சாப்பிடலாம்டா, ப்ளீஸ் டா, மதியம் கிளம்பலாம் டா"

"டேய் நாங்க கிளம்பி உன் பிளாட்டு கீழே தான் நிக்கிறோம், எத்தனை வாட்டி போன் செய்றது"

"என்னது பிளாட் கீழே நிக்கிறீங்களா, சரி மேல வா"

"இல்ல தங்கச்சி கார்ல இருக்கா, நீ சீக்கிரம் கிளம்பி வா"

"சரி சரி அவள மேலே கூட்டிட்டு வந்துடாதே, வீடே அலங்கோலமா இருக்கு"

வாரி சுருட்டிக் கொண்டு, குளிக்க போனேன்..... பத்து நிமிடத்தில் டிரஸ் பண்ணிக்கிட்டு, காரை நோக்கி ஓடினேன்...... வண்டியில் இருந்த சக்தியையும், ரஞ்சனியையும் பார்த்து ஹாய் சொல்லி விட்டு, கார் கதவை திறந்தேன்... அதை எதிர்பக்கமாக இழுத்து மூடிய ரஞ்சினி சொன்னாள்...

"அண்ணா நாம என்ன பாம்பு பிடிக்கவா போறோம், முதல்ல போய் அவன டிரஸ் மாத்திட்டு வர சொல்லு"

"டேய் இவ ஓவரா பேசறாடா, இதுக்கு தான் சொன்னேன் நான் வரலைனு"

"மச்சி கோச்சிக்காத போடா, உண்மையிலே எனக்கும் இந்த டிரஸ் பிடிக்கல டா"

"டேய், டார்பி பனியன், ரஃபன் டஃப் ஜீன் டா"

"டேய் ஷக்தி இதெல்லாம் நம்ம தாத்தா காலத்து பேஷன் டா"

"சக்தி அவள பேசவேண்டாம்னு சொல்லு"

"சரி போய் மாத்திட்டு வாயேன் டா, சீக்கிரம் பொண்ணு போயிடப் போவுது"

"என்னடா பஸ்ஸு போறமாதிரி சொல்ற, சரி இரு, அயன் செஞ்சி தான் போட்டு வரணும், சோ யூ கைஸ் வெயிட்"

"தொர இங்கிலீஸ் எல்லாம் பேசுது" ரஞ்சினி சிரித்தாள்....

அவளை முறைத்தபடி படிக்கெட் ஏறி........ அவர்கள் எதிர்பார்த்தது போல டெனீம் கலர் சட்டை, கருப்பு கலர் பென்ட அணிந்துக் கொண்டு வந்தேன்...

"ஓகே வா டா சக்தி"

" ஓட்டல் பேரர் மாதிரி இருக்கு....., சரி டைம் இல்ல, அவன ஏறச் சொல்லுடா ஷக்தி"

இவளையெல்லாம் பெத்தாங்களா இல்ல, ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா என்று நினைத்தபடியே காரில் ஏறி அமர்ந்தேன்.

"மச்சி வானம் பட கேசட் இருக்கா"

"ஏன்டா"

"அதுல ஒரு பாட்டு வரும் மச்சி சூப்பர் பாட்டு, எவன்டீ உன்ன பெத்தான பெத்தான் பெத்தான், கையில கிடைச்சா செத்தான் செத்தான்....... கருத்தாழமிக்க பாடல் மச்சி அது"........ சைடு மிரர் வழியா ரஞ்சினி என்னை முறைத்தாள்.... நான் உடனே

"எவன் தான் இந்த மாதிரியான பாடல்களையெல்லாம் எழுதுறானோ, பெண் சங்கம், மாதர் சங்கம், மாநில அரசு, மத்திய அரசு எல்லாம் இதை எப்படி தட்டிக் கேட்காமல் இருக்கோ" என்றேன்....

"ஷத்தி சிம்புனு ஒரு வெஸ்டு லாண்டு இருக்குடா, அதுக்கு இதே வேலை தான், பின்னாடி ஒண்ணு இருக்கே அதே போல தான்"

"டேய் சக்தி இவ ஓவரா பேசறாடா"

"இரண்டு பேரும் மூடிட்டு வரீங்களா...... பொண்ணு பாக்குற மூடையே கெடுத்துடூவீங்க போல இருக்கே"

வேளச்சேரியை போய் அடைந்தோம்... காரை நிறுத்திவிட்டு, பெண் வீட்டை நோக்கி நடந்தோம். பி8 என்றால் ரஞ்சினி, நான் படிக்கெட்டில் முதலில் ஏறினேன். பி8 வந்தது, அதன் அருகே போய் நின்றேன். சக்தியும், ரஞ்சினியும் என்னை கடந்து மேலே சென்றார்கள்.

"டேய் பி8 இங்க இருக்குடா" என்றேன்.

"இருக்கட்டும் ஷக்தி, நாம போறது பி10" என்றாள்.

"டேய் இவ ஓவரா பண்றாடா, எதுக்கு டா இந்த பிளக்கா பொண்ணுக்கூட கூட்டி வந்து அசிங்கப்படுத்துற, இன்னொரு வாட்டி அவ எதாவது என்ன சொன்னா வாயை கிழித்து விடுவேன்"

"டேய் தயவு செய்து பொண்ணு பாக்குற மூடை கெடுத்துடாத டா"

"போடாங்கோ.... நீயும் உன் மூடும், என் மானம் போகுது, இதுல நீ வேற மூடு, முட்ட கோஸுனு"

அவர்கள் இருவரும் பி10 ஐ அடைந்தார்கள், கதவு திறந்து இருந்தது... பெண் வீட்டார், அவர்கள் இருவரையும் வரவேற்றார்கள்... எனக்கு போன் வந்ததால் சில நிமிடங்கள் கழித்து உள்ளே சென்றேன். பெண் வீட்டார், என்னை அதே அன்போடு அழைத்தார்கள். உள்ளே நுழையும் போதே, ராட்ஷசி ரஞ்சினி..

"காரை ஓரமா நிறுத்தியாச்சா" என்று அதட்டல் தோரணையில் கேட்டாள்.

பெண் வீட்டாரின் சிரிப்பு அப்படியே அடங்கியது..... அட இவன் டிரைவர் போல இருக்கு, டிரஸை பார்த்தியா ப்ளூ சட்டை, கருப்பு pant.... கண்டிப்பா இவன் டிரைவர் தான்...... என்று நினைத்திருக்க கூடும்.

நான் அவமானத்துடன் ரஞ்சினியை பார்த்தேன், அவள் புருவத்தை தூக்கி என்னை பார்த்து அசட்டு தனமாக சிரித்தாள். பொண்ணை பார்க்க வாய் முழுவதும் ஜொல்லோடு அமர்ந்திருந்த, சக்தியிடம் சென்று...

"மச்சி அவ ஒரு வார்த்தை இனிமேல் பேசினால் கண்டிப்பா உன் கல்யாணம் நிக்கிறதுக்கு நானே காரணமாயிடுவேன்" என்று கதோரமாய் சொன்னேன்.

"டேய் என் லைஃப் டா"

"என் லைஃப்பையும் கொஞ்சம் பாருடா, மானமே போகுது"

வழக்கமான விசாரிப்புகள் முடிந்தது. மாப்பிள்ளையை ரஞ்சினி தான் அறிமுகம் செய்து வைத்தாள், அவள் பொண்ணுவீட்டிற்கு ஏற்கனவே அறிமுகமானதால், திடீரென எழுந்து என்னை நோக்கி வந்தாள். என் பக்கத்தில் அமர்ந்தாள், என் கையை பற்றிக் கொண்டு

"இவரு பேரு, தக்ஷ்ணாமூர்த்தி, ..... சேனல்ல நியூஸ் சப் எடிட்டரா இருக்கார்....... என் அண்ணணோட பெஸ்டு பிரண்ட்,........ ஷக்தி மாதிரி இவரும் ஒரு அண்ணன் தான் எனக்கு" என்றாள்.....

இதை நான் எதிர்பார்க்கவில்லை, சக்தியும் தான். இதற்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கணும்னு எனக்கு தெரியலை. அவ பாட்டுக்கு இவங்க, அவங்க, அவங்க இவங்க என்று அறிமுகம் செய்து வைத்தாள்...... எல்லாரும் என்னை நோக்கி கும்பிடுகிறார்கள்..... நானும் கும்பிட வேண்டும்...... ஆனால் செய்வதறியாமல் விழிக்கிறேன். நான் விழிப்பதைப் பார்த்த ரஞ்சினி..

"திருப்பி வணக்கம் சொல்லலையேனு தப்பா நினைச்சிக்காதீங்க, இவருக்கு கொஞ்சம் மூளை சரியில்லை" என்று சிரித்தாள். அனைவரும் சிரித்தார்கள். சகஜநிலைக்கு வந்த நான்.

"ஏய் சும்மா இரு ரஞ்சினி................, சாரிங்க" என்று பெண் வீட்டாரை நோக்கி வணக்கம் சொன்னேன். வழக்கமான விசாரணைகள் அவர்களுக்குள் நடைபெற்றன. அனைத்தையும் பெக்க பெக்க முழுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி, என் சுற்றளவு உள்ள எதோ திருமண ஆல்பத்தை பொண்ணு வீட்டார் திணித்தனர். அதை தூக்கவே இரண்டு லிட்டர் பால் குடிக்க வேண்டும் போல இருந்தது"

அந்த ஆல்பத்தை விளக்க பத்து வயது பையன் ஒருவனை பெண் வீட்டார் நியமித்தனர். அவன் பரீச்சைக்கு படிக்கும் பையன் போல, ஓவ்வொரு பக்கமா, இது எங்க மாமா, இது எங்க மாமி, இது எங்க பெரியப்பா, இது சித்தப்பா,........ என்று பாடம் நடத்திக் கொண்டு இருந்தான். நான் அவனை ஏமாற்றி ஐந்து ஐந்து பக்கமாக ஆல்பத்தை திரும்ப முயன்றேன்.

"அய்யய்யோ அங்கிள், நறைய பக்கத்தை உட்டுட்டீங்க" என்று பழைய படி ஆரம்பத்தில் இருந்து இது எங்க தாத்தா, இது எங்க நாயி, இது எங்க பூனை இது எங்க பாம்பு........ அய்யோ, உண்மையில் கொடுமையான விஷயம் நம்முடைய புகைப்படமோ, நமக்கு தெரிந்தவரின் புகைப்படமோ இல்லாத ஆல்பத்தை பார்ப்பது தான். வேறு வழியில்லாமல் அந்த பத்து வயது பனாதிப்பையன் விவரிக்க அனைத்து போட்டோக்களையம் பார்த்து முடித்தேன். மயக்கமே வந்து விடும் போல இருந்தது.......

"அங்கிள் நான் இன்னோரு ஆல்பம் எடுத்து வரட்டுமா"

"ஒரு மயி...... (பல்லைக்கடித்துக் கொண்டு) குட்டி நீ போய் விளையாடுடா செல்லம் மாமாக்கு இதுக்கு மேல தாங்காது" என்றேன்.

நீண்ட நேரம் கழித்து பெண் அழைத்து வரப்பட்டாள், அழகான சுடிதார், ஆளை அடிக்கும் சென்ட், சாந்தமான முகம், சாந்து பொட்டு (இந்த காலத்தில் எந்த பொண்ணு சாந்து பொட்டு வைக்கிறாங்க........ முதல்ல பொட்டு எங்க வைக்கிறாங்க)

வந்து அமர்ந்தாள். சக்தி வாயை திறந்தவன், மூடவே இல்லை. ரஞ்சினி பெண்ணின் பக்கத்தில் போய் அமர்ந்து ரகசியமாக எதோ பேசிக் கொண்டு இருந்தாள். சக்தி பொண்ணை பார்த்து

"வேலை எல்லாம் எப்படி போகுது" என்றான்.

"ந ந ந ந நல்லா போகுதுங்க" என்று திக்கினாள் பெண். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. சக்தியும், ரஞ்சினியும் எந்த சலனமும் காட்டவில்லை.

"பிராஜட்டு எல்லாம் மார்ச்க்கு அப்புறம் தானே, இப்ப எதுவும் அப்ராட் பிராஜக்டு வராதுல்ல"

"இ இ இ (அவளின் வாய் துடித்தது) அதற்குள் குறுக்கிட்ட சக்தி, ஆமா ஆமா இப்ப எதுவும் இருக்காது இல்ல, எல்லாம் மார்ச் முடிந்த அப்புறம் தான்" என்று கூறினான். கொஞ்ச நேரம் பேசிட்டு நாங்கள் கிளம்பினோம். நான் வரும் போது எல்லாரிடமும் கூறிவிட்டு வந்தேன், பெண்ணிடம்

"வரண்டா தங்கச்சி, உடம்பை பார்த்துக்கோ"

"ச ச ச சரிங்கன்னா" அவள் ஒவ்வொரு முறை இப்படி திக்கும்போது என் உயிர் உள்ளே சென்று விட்டு வந்தது. மூவரும் அமைதியாக காரில் போய் அமர்ந்தோம். நான் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை.... சக்தி ஆரம்பித்தான்.

"பொண்ணு எப்படிடா பிடிச்சி இருக்கா"

"அருமையான நல்ல பொண்ணு மச்சி"

"ஆமா டா, எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு, அவளை சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கணும் டா மச்சி"

"கண்டிப்பா டா"

"சரி ரஞ்சினியை வீட்டில் டிராப் பண்ணிட்டு, அப்புறம் நாம் வெளியே போலாம் டா"

"சரி டா". அவர்கள் வீடு வந்தது. ரஞ்சினி, சீட்டில் இருந்து இறங்கினாள்...

"டேய் எரும மாடே, பன்னி மாதிரி வீங்கிட்டே போற, ஒருநாள் வெடிக்க போற பாரு... ஒழுங்கா எக்ஸைஸ் செய்டா சரியா"

"சரிம்மா" என்றேன். டாட்டா சொல்லியபடி ரஞ்சினி வீட்டிற்குள் தாங்கி தாங்கி தன் காலை இழுத்தபடி சென்றாள். அங்கிருந்து என்னுடைய வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

"ரஞ்சினிக்கும் நல்ல வரன் வந்து இருக்கு மச்சி, அவ கல்யாணம் முடிஞ்சதும், என் கல்யாணம் தான்டா, கண்டிப்பா நீ வந்து எல்லா வேலையும் செய்யணும் மச்சி" என்றான்.

"கண்டிப்பா டா" என்றேன்........

உண்மையான கதாநாயகர்கள் யாரும், திரையிலோ, நாம் படிக்கும் நாவலிலோ இருப்பதில்லை...... நம்முடன் ஒருவராய் கலந்து இருக்கிறார்கள்....... எனக்கு தெரிந்த கதாநாயகன் ஒருவனை நான் பார்த்து விட்டேன்....

நன்றி....

அக்னி
28-03-2011, 11:43 AM
தக்ஸ்...

சிரிப்பிலிருந்து மீண்டுவிட்டேன்...
ஆனால், உங்கள் பதிவு தந்த அழுத்தத்திலிருந்து மீள முடியவில்லை...

Nivas.T
28-03-2011, 12:52 PM
அருமை த்க்ஸ்,

முதலில் நகைச்சுவையாக கூறிவிட்டு

இருதியி பாரமாகி விடுவதே உமது வேலை

கதையின் நகர்வு அருமை த்க்ஸ்
நல்ல ஒரு கருத்து
ஆழமான சிந்தனை

பாராட்டுகள்

ஆளுங்க
28-03-2011, 01:35 PM
நல்ல நகைச்சுவை கதையோ என்று நினைத்தேன்..
ஆனால், இறுதியில் நெஞ்சைப் பிழிந்து விட்டீர்கள்..

உங்கள் கதைகளைப் படித்தால் இறுதியில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு இதயத்தில் அமர்ந்து சிறிது நேரத்திற்கு நீங்க மறுக்கிறது..
தொடருங்கள்!!

ஜானகி
28-03-2011, 02:58 PM
எல்லோரையும் அழவைப்பது என்று ஏதாவது கங்கணம் கட்டியிருக்கிறீர்களா...? சிரிப்பில் கண்ணீரை மறைத்துக் கொள்ளவேண்டியதுதான்.....

ரங்கராஜன்
28-03-2011, 04:40 PM
உணர்வுபூர்வமாய் இந்த பதிவை பார்த்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி....


எல்லோரையும் அழவைப்பது என்று ஏதாவது கங்கணம் கட்டியிருக்கிறீர்களா...? சிரிப்பில் கண்ணீரை மறைத்துக் கொள்ளவேண்டியதுதான்.....

அதானே வாழ்க்கை ஜானகியம்மா..... உங்களுக்கு தெரியாததா.....

கீதம்
29-03-2011, 01:42 AM
உண்மையான கதாநாயகர்கள் யாரும், திரையிலோ, நாம் படிக்கும் நாவலிலோ இருப்பதில்லை...... நம்முடன் ஒருவராய் கலந்து இருக்கிறார்கள்....... எனக்கு தெரிந்த கதாநாயகன் ஒருவனை நான் பார்த்து விட்டேன்....



நூறு சதம் உண்மை, ரங்கராஜன். அவர்கள் என்றுமே தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொள்வதே இல்லை. நாமாய்க் கண்டறிந்தால்தான் உண்டு. நீங்கள் அறிந்தவரை எங்களுக்கும் அறிமுகப்படுத்தி நெகிழ்த்திவிட்டீர்கள். அவர்களது மனம் போலவே நிறைவான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.

Mano.G.
29-03-2011, 06:25 AM
பெண் பார்க்கும் படலம்

"சரி டா". அவர்கள் வீடு வந்தது. ரஞ்சினி, சீட்டில் இருந்து இறங்கினாள்...

"டேய் எரும மாடே, பன்னி மாதிரி வீங்கிட்டே போற, ஒருநாள் வெடிக்க போற பாரு... ஒழுங்கா எக்ஸைஸ் செய்டா சரியா"

"சரிம்மா" என்றேன். டாட்டா சொல்லியபடி ரஞ்சினி வீட்டிற்குள் தாங்கி தாங்கி தன் காலை இழுத்தபடி சென்றாள். அங்கிருந்து என்னுடைய வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

.

தம்பி என்னையும் சேர்த்து சொல்ர மாதிரி இருக்கு.
நான் கண்டிப்பா எக்ஸைஸ் செஞ்ஜே ஆகனும் டாக்டரும்
சொல்லிட்டாருபா

samuthraselvam
29-03-2011, 08:26 AM
பெண் பார்க்கும் படலம்

"டேய் எரும மாடே, பன்னி மாதிரி வீங்கிட்டே போற, ஒருநாள் வெடிக்க போற பாரு... ஒழுங்கா எக்ஸைஸ் செய்டா சரியா"



ஹா ஹா.... நான் சொன்னதையே தான் ரஞ்சனியும் சொல்லி இருக்காங்க...

நிஜமாவே நீ அப்படி தான் இருக்கே..

உன் எழுத்துத் திறமையை அடிச்சுக்க ஆளே இல்லை..:icon_b:

பூமகள்
29-03-2011, 09:28 AM
நெஞ்சை நெகிழ வைத்த பதிவு..

மிக அருமை.. அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.. இப்படி ஒரு நட்பு உமக்கு இருப்பது எனக்கு பெருமை..

ஆமா.. எப்படி எழுத்தில் இத்தனை நகைச்சுவையை கொண்டு வர முடிகிறது.. அதுவும் வரிக்கு வரி.. வார்த்தைக்கு வார்த்தை..

பாராட்டுகள் ரங்கராஜன்..

எனக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பீங்களா??

செல்லப் பொறாமையுடன்,

முரளிராஜா
29-03-2011, 09:44 AM
நெஞ்சை நெகிழவைத்த பகிர்வு

பகிர்ந்தமைக்கு நன்றி தக்ஸ்

நாஞ்சில் த.க.ஜெய்
29-03-2011, 09:57 AM
உணர்ச்சிகரமான ஒரு நிகழ்வினை நகைசுவையில் ஆரம்பித்து முடிவில் உன்னதமான ஒரு நாயகனை காட்டி முடித்தவிதம் மிகவும் அருமை....தொடருங்கள் நண்பரே...

அக்னி
29-03-2011, 10:24 AM
இப்பதிவில் என்னை வியக்கவைத்தமை:
ரஞ்சனியின் கலாட்டா நிறைந்த, தாழ்வு மனப்பான்மை இல்லாத, தன்னம்பிக்கை.
சக்தியின் அனுபவ அனுதாபம் எனச் சொல்லமுடியாத, புரிதல்.

இப்புரிதல்தான், சக்தியின் மனைவி ஆகப்போகின்ற பெண், மனைவி ஆக முதலே அவளுக்காகக் குரல் கொடுக்க வைத்திருக்கும்.

""பிராஜட்டு எல்லாம் மார்ச்க்கு அப்புறம் தானே, இப்ப எதுவும் அப்ராட் பிராஜக்டு வராதுல்ல"

"இ இ இ (அவளின் வாய் துடித்தது) அதற்குள் குறுக்கிட்ட சக்தி, ஆமா ஆமா இப்ப எதுவும் இருக்காது இல்ல, எல்லாம் மார்ச் முடிந்த அப்புறம் தான்" என்று கூறினான்.

அத்தோடு,


"அய்யய்யோ பொண்ணு எதாவது குருடா, இல்லை ஊமையா"

"டேய்......"

இங்கு இப்படித் தக்ஸ் கேட்டபோதும் அவர் தொடர்ந்து சகஜமாகப் பேச வைத்திருக்கும்.


அனைவரினதும் பாசாங்கில்லாத உரையாடல்கள்.
நேரடியாக அவர்களது இயலாமையைச் சொல்லாது, வார்த்தைகளால் உணர்ச்சியை ஏற்படுத்தாது,
முழுமையான உணர்ச்சியை நமக்குட் செலுத்திய தக்ஸின் எழுத்துவன்மை.
சிலவேளை சில தக்ஸின் சுவையூட்டலாக இருந்தாலும்,
அவை கூட அவர்களின் இயல்பாகத்தான் இருக்கும்.

மன்னிக்க தக்ஸ்...
எனக்கு ஒரு கதாநாயகன் தெரியவில்லை.
பல உண்மையான, மனிதவுள்ளமிக்க மனிதர்கள் தெரிகின்றார்கள்.

lolluvathiyar
29-03-2011, 01:20 PM
நன்பர்களுடன் நேச்சுரலாக பழுகும் சிறிது நேர சம்பவம் உரையாடலை அழகான கதையாக வடித்து இருக்கீங்க. பென் பார்க்கும் படலம் சிறீய சம்பவம் அல்ல ஆனால் முடிக்கும் போது கால் ஊனம் என்ற கனத்த உன்மையை சொல்லி அடுத்த வரியில் யார் கதா நாயகர்கள் என்று விளக்கி பெருமையடைய செஞ்சுட்டீங்க. சபாஷ்.

kavitha
25-06-2011, 07:01 AM
கதை படிக்கும் அலுப்பே தெரியவில்லை. இப்படி கதை எழுதினா, தொடர் கதை யாகவும் படிக்கலாம். அருமை. :)

Ravee
25-06-2011, 08:37 AM
தக்ஸ்க்கு ஒரு ஒ போட்டா .... அவர் நண்பருக்கு ஓஓஹோ போடணும் நல்ல நண்பர் ........ மதி இந்த கதை படிச்சாச்சா ....... அடுத்து நீங்க பொண்ணு பார்த்த படலம்தான் தகஸ் எழுதணும் சொல்லிட்டேன்.... :)

கருணை
25-06-2011, 02:33 PM
அந்த பொண்ணு ரஞ்சினி ரொம்ப அருமையானவள் ... இவங்க நிஜம்தானா ... இங்கே அழைத்து வாருங்க அண்ணா. :)

arun
25-06-2011, 05:52 PM
உணர்ச்சிகரமான ஒரு பதிவு அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள்