PDA

View Full Version : புத்தகங்கள் நிரம்பிய அறை-பூட்டியாச்சி



த.ஜார்ஜ்
11-03-2011, 01:54 PM
முன் குறிப்பு: இந்த கதைக்கு 'ஒண்ணுமில்ல... கத' என்றும் தலைப்பு வைத்துக் கொள்ளலாம்.]


“மறுபடியும் அவளைப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை’ அப்பாவின் டைரி இப்படிதான் தொடங்கியது..

பாதி எரிந்தும் எரியாத நிலையிலிருந்தது டைரி.

குண்டு குண்டான அந்த எழுத்தை பார்த்ததுமே அது அப்பாவினுடையது என்று தெரிந்து போயிற்று. இதே கையெழுத்தில்தான் சின்ன வயதில் என் நோட்டு புத்தகங்களுக்கு லேபில் ஒட்டி பெயர் எழுதித் தருவார். ‘அச்சடிச்ச மாதிரி உங்கப்பா எப்படிடா எழுதறார்’ என்று வகுப்புத் தோழர்கள் பொறாமை கொள்வது ஞாபகம் இருக்கிறது. அப்பா கறுப்பு மையினால்தான் எழுதுவார். வலது பக்கம் சாய்வாக இரண்டு வரிகளுக்குள் அடங்குவது மாதிரி சீராக இருக்கும் அவர் எழுத்து.

அப்பாவை புத்தகங்களோடுதான் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது. கையில் புத்தகம் இல்லாமல் அவரை பார்த்ததாய் நினைவில்லை. சாப்பிடும் போதும் சரி.. கக்கூஸ் போனாலும் சரி ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண்டேதான் எல்லாம் நடக்கும்.

அறை முழுக்க வைக்க இடமில்லாமல் அவர் நிரப்பி வைத்திருந்த புத்தகங்களில் பாதிதான் இப்போது இருக்கிறது. சம்பாத்தியத்தில் பெரும்பகுதி இப்படி புத்தகங்கள் வாங்க கரைந்து போனதில் அம்மாவுக்கு கடுமையான சினம் உண்டு. அவள் அடிக்கடி அப்பாவோடு சண்டைபோட்டதன் காரணம் அதுவாகத்தான் இருக்கும் என்று இப்போது ஊகிக்க முடிகிறது.

அலுவலகத்திலிருந்து வரும்போதே பெரிய பெரிய புத்தகங்களாக வாங்கி வருவார். வீட்டுக்கு வந்ததும் உடை மாற்றிவிட்டு அந்த புத்தகங்களோடு உட்கார்ந்து விடுவார். புற இரைச்சல் எதுவும் அவரை பாதிக்காது. வீட்டுக்கும் அவருக்குமான உறவு பெரும்பாலும் ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ தான்.

அப்படி தனியாய் இருந்து சுகம் அனுபவிக்குமளவுக்கு என்னதான் இருக்கு என்று தெரியவில்லை. அவர் படிக்கிறதை தூரமாய் உட்கார்ந்து அவ்வப்போது வேடிக்கை பார்த்திருக்கிறேன்.. வேறோர் உலகத்திலே இருப்பது போல் இருப்பார். அவர் முக பாவங்கள் எழுத்தின் உணர்ச்சிக்கேற்ப அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும்.

சில நேரம் புத்தகத்தை எறிந்து விட்டு ‘தாம் தூம்’ என்று அதட்டுவார். அப்போதுதான் நினைவுக்கு வந்தவர் போல் ‘பாடத்தை படிக்காம ஏண்டா டிவி போட்டிருக்க’ என்று கத்துவார். ‘வீட்டில எதுவும் வச்ச இடத்தில இருக்கிறதில்ல’ என்று எதையாவது தேடுவார். ‘வீட்டை பெருக்கி சுத்தமா வச்சிக்கத் தெரியலை. எங்க போனா இவ.’ என்று ஒரு போராளி போல் ஒட்டடை அடிப்பார்.

“குடும்பம்னு ஒன்னு இருக்கது இந்த மனுசனுக்கு இப்பதான் ஞாபகம் வரும். இப்படி ஒரு குருட்டு சன்னியாசியோட கிடந்து மாரடிக்க வேண்டியிருக்கு.” அம்மாதான் கடுகடுப்பாள். “என் தலையெழுத்து.” மண்டையில் அடித்துக் கொள்வாள்.

சில நேரம் படிக்கிறபோது அப்பா லேசாக சிரிப்பார். மெல்லிய உதடு பிரியாத புன்னகை. உள்ளே ஆனந்தமாய் உணர்வார் போலிருக்கிறது.

“என்னப்பா” என்றால் “ஒண்ணுமில்ல ..கத..” என்பார்.

அன்றெல்லாம் சந்தோசமாகவே இருப்பார். எங்களோடு விளையாடுவார். கடைக்கு போய் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார்.

ஆனால் எப்போதும் அதுபோல் வாய்ப்பதில்லை. அவரை புன்னகைக்க வைக்கும் புத்தகங்கள் தினசரி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நான் பெரியவனானதும் அது போன்று எழுத வேண்டும் என்றும், நிறைய தகப்பன்களை சந்தோசமாக சிரிக்க வைக்க வேண்டும் என்றும் அப்போது எனக்கு தோன்றியிருக்கிறது.

எப்போதும் அவர் கண்ணில் ஒரு கனவோ கதையோ விரிந்து கிடக்கும்.

சில நாள் விடிய விடிய லைட்டைப் போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருப்பார். படித்ததை படுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருப்பார்.

வெளிச்சம் கண்ணை உறுத்த, விழித்துப் பார்த்தால், தான் மட்டுமே அனுபவிக்கிற சுயநலவாதி போல் ... படித்துப் படித்து அந்த சுகத்தை அனுபவிப்பதிலே ஆழ்ந்து போயிருப்பார். படித்துக் கொண்டிருக்கையிலே டைரி எடுத்து சரசரவென்று ஏதோ எழுதுவார். பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பார். பிறகு மேசை உள்ளறையில் வைத்து பூட்டிவிடுவார்.

ஒரு நாள் அம்மாவோடு எதற்கோ சண்டையெழுந்தபோது கோபத்தில், அதையெல்லாம் தூக்கி வெளியில் போட்டு மண்ணெண்னெய் ஊற்றி திகுதிகுவென எரிய விட்டார்.

காரணம் புரியவில்லை.

ஆச்சரியமாய் அவருக்கு நண்பர்கள் யாரும் இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ எப்போதும் இறுக்கமாகவே இருப்பார். யாரிடமும் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசமட்டார்.

ஒருமுறை அதிசயமாய் அம்மாவின் பிறந்த நாளுக்கு மஞ்சள் நிறத்தில் பட்டுபுடவை எடுத்துக் கொண்டு வந்தார்.

திறந்துப் பார்த்த அம்மா முகத்தை சுழித்துக் கொண்டு “மஞ்சயா? இப்படி ஒரு கலர்ல எவ உடுப்பா.. சே.... நல்லா தேடிப்பிடிச்சு எடுத்துருக்காரு. மனுசன்” ஏனோ கோபப்பட்டாள்.

அப்பா முகத்திலிருந்த ஆவல் சட்டென்று அணைந்து போயிற்று. நாற்காலியில் உட்கார்ந்து மேஜையில் தலை கவிழ்ந்து நெடுநேரம் உட்கார்ந்திருந்தார். அம்மா அரை மணி நேரத்துக்கு பேசிக் கொண்டேயிருந்தாள். ‘எனக்கு வாய்ச்சது அவ்வளவுதான்’ என்பதுதான் அதன் சாராம்சம். அம்மா இப்படிதான் எப்போதும் அப்பாவை வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பாள். எந்த நேரமும் அவள் கடுகடுப்பைப் பார்த்து எனக்கே கோபம் வரும்.

அப்பா கையாலாகதவனாய் உணர்ந்திருப்பார். பேசவேயில்லை. சாப்பிடாமல் அன்று படுத்து தூங்கினார்.

அப்புறம் சில நாட்களாய் அப்பா வீட்டுக்கு வராமல் இருந்ததாய் நினைவு. அம்மாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல்தான் அவர் போய் விட்டதாக பாட்டிவந்து சத்தம் போட்டுவிட்டு போவாள். அதைக் கேட்டு எனக்கும் அம்மாவைப் பார்க்க பிடிக்காமல் போனதுண்டு. இப்போதும் அவள் மேல் எனக்கு வெறுப்பு விலகவில்லை.

அப்பேர்பட்ட அம்மாவின் பெட்டியிலிருந்துதான் இந்த டைரி கிடைத்தது. பழைய வாரப்பத்திரிகைகளும் எரிந்து போன இந்த டைரியையும் எதற்குதான் பத்திரமாய் வைத்திருக்கிறாளோ.
[கதை இன்னும் முடியவில்லை.முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்]

Nivas.T
11-03-2011, 02:27 PM
கதை நல்லாருக்கு

ஜார்ஜ் தொடருங்கள்

நாங்களும் தொடர்கிறோம்

(ஆமா உங்க பெயரை எங்கயோ கேட்டமாதிரி இருக்கே)

முரளிராஜா
11-03-2011, 03:08 PM
தொடருங்கள் ஜார்ஜ்

ஓவியா
11-03-2011, 07:28 PM
வாசிக்க வாசிக்க மனது கொஞ்சம் வலிக்கின்றதே.. அடுத்தப் பாகத்திற்க்கு ஆவலாய்... :icon_hmm:

- ஓவியா -

கீதம்
11-03-2011, 10:00 PM
தந்தை என்னும் உறவையும் மீறி ஒரு விநோதமான மனிதரின் உளம்புகுந்து
அவரின் ரகசியங்களைக் கண்டறியும் முயற்சியாகவே தோன்றுகிறது.
மனம் கனக்கவைக்கும் எழுத்து. இழப்பின் வலியுணர்த்தும் கதை. பாராட்டுகள் ஜார்ஜ்.

மதி
12-03-2011, 12:24 AM
அண்ணா.. நீண்ட நாள் கழித்து உங்கள் கதை. அப்பாவின் விவரிப்பு அவரை கண்முன்னே நிறுத்துகிறது. அடுத்து என்ன என்ற ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது. சீக்கிரம் தொடருங்கள்..

த.ஜார்ஜ்
12-03-2011, 12:30 AM
அப்பேர்பட்ட அம்மாவின் பெட்டியிலிருந்துதான் இந்த டைரி கிடைத்தது. பழைய வாரப்பத்திரிகைகளும் எரிந்து போன இந்த டைரியையும் எதற்குதான் பத்திரமாய் வைத்திருக்கிறாளோ.

குறுகுறுப்புடன் படிக்க ஆரம்பித்தேன்.

‘முதன்முதலில் அவளை எப்போது பார்த்தேன். அலுவலகத்தில் மூன்று மாத விடுப்பு பணியிடத்தில் வேலைக்கு வந்திருந்தாள்.. திடீரென அலுவலகம் நந்தவனமானது அப்போதுதான்.

அவளுக்கு பெரிய கண்கள் அதை சுழன்றி சுழன்றி அவள் பார்க்கையிலே அடிக்கடி செத்து செத்து பிழைக்கலாம். அகன்ற நெற்றியிலிருந்து தொடங்கி காற்றில் பறந்து போக தயாராயிருக்கும் முடியை பின்னால் இழுத்து ரப்பர் வளையமிட்டுருப்பாள். அது, அவள் நடக்க நடக்க குதிரை வால் மாதிரி குதித்துக் குதித்து... இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கும். கோடிட்ட மாதிரி புருவம். புசுபுசுவென்று கன்னம். நெற்றியிலிருந்து ஒரு கற்றை முடி கண்ணோரம் சரிந்து கன்னத்தை உரசிக் கொண்டிருக்கும். தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி அடிக்கடி அதை அவள் ஒதுக்கி விடுகிற அழகுக்கு சந்தோசமாய் அடிமையாகி விடலாம்.

அலுவலகம் இப்போது குளிரூட்டப்படாமலே ஜிலுஜிலுவென்றிருந்தது..

சிலரை பார்த்தவுடனே காரணமில்லாமலே நமக்கு பிடித்து விடும்தானே. அதைப்போல எனக்கும் அவளைப் பிடித்து விட்டது. எனது முதுகுக்குப் பின் வரிசையில் அவள் இருக்கை இருந்தது. திரும்பி பார்க்க முடிவதில்லை. ஆனாலும் அவளைப் பார்க்க வேண்டும்போல் ஒரு குறுகுறுப்பு எப்போதும் இருந்து கொண்டுதான் இருந்தது.

ஆபீஸில் அத்தனை பேரும் அவளிடம் வலிய வலிய போய் வழிந்தார்கள்.

வளனும்,மைக்கேலும். “மேடம்... மேடம்” என்று நிமிடத்துக்கொருமுறை கூப்பிட்டு பார்த்துக் கொண்டார்கள். “ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க” என்று அவளைச் சுற்றியே வந்தார்கள்...

சாலமன் ரொம்ப சீனியராம். அவன் வேலைகளை அவளிடம் கொடுத்து வேலை வாங்கினான். “சீக்கிரமா இத முடிச்சி குடு” என்று அதிகாரம் பண்ணுகிற சாக்கில் அவளோடு அடிக்கடி பேசினான்.

அப்படியான வாய்ப்புகளை நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. கூச்சம்.

எப்போதாவது அலுவலகத்திலிருந்து வெளியே போய்விட்டு உள்ளே நுழைகிறபோது அவளுக்கு நேராகத்தான் வரவேண்டும். அப்போது மட்டும் அவளையே பார்த்துக் கொண்டு வந்து கடைசி நிமிசத்தில் இடப்புறம் திரும்பி என் இருக்கையில் அமர்வேன்.

அப்படி ஒருமுறை திரும்பிய போது மூட்டு மேஜையில் இடித்துக் கொண்டு ‘ஐயோ.. அம்மா’ என்றேன். அவள் நிமிர்ந்து பார்த்து ‘அச்சச்சோ” என்றாள். அப்போதுதான் அவள் முகத்தை அருகில் பார்த்தேன். குழந்தையின் மேனி மாதிரி இருந்தது. அவள் உதட்டை குவித்து நெஞ்சைப் பிடித்து பதட்டமானதில் எனக்கு வலியே மறைந்து போயிற்று.

ஆபீஸ பியூன்தான் ஒரு நாள் ரகசியமா சொன்னான்.” நானும் பல நாளா கவனிக்கிறேன் சார். அந்த பொண்ணு உங்களையே வச்சக் கண் வாங்காம பார்த்துட்டு இருக்கு சார்”

எனக்கு திகிலாகிப் போனது. மேஜையில் கழற்றி வைத்த கூலிங்கிளாசில் உற்று பார்த்தேன். அவளது பெரிய விழிகள் என் முதுகையே வெறித்தபடி..

எனக்கு குளிரெடுத்தது.

நிமிர்ந்து அலுவலகத்தைச் சுற்றி நோட்டம் விட்டேன். பக்கத்து சீட்காரனெல்லாம் என்னை முறைத்து பார்த்தபடி இருந்தார்கள். சாலமன் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தான். அவன் ஆவேசமாக இருந்தால் இப்படிதான் செய்வான். உடனே தலையை குனிந்து கொண்டேன். யாரையும் பார்க்க எனக்கு தைரியமில்லை. ஆக எல்லா பயலுகளுக்கும் விசயம் தெரிந்திருக்கிறது. நான்தான் சரியான டியூப்லைட்டா இருந்திருக்கேன்.

பின்னொரு நாள் அலுவலக கோப்புகளை எடுத்துக் கொண்டு திடுதிப்பென்று என்னருகே வந்து நின்றாள். நானே எதிர்பார்க்கவில்லை. அவள் முந்தானை என் நாற்காலியை உரசியது. “இது சரியா இருக்கான்னு செக் பண்ணிருங்க சார்."என்றாள் எனக்கு மட்டுமே கேட்கும் குரலில். அது அலுவலகத்துக்கு வந்த ஒரு உத்தரவு கடிதம். அதில் சரி பார்ப்பதற்கு எதுவும் இருக்கவில்லை

எனக்கு குப்பென்று வேர்த்தது. கை நடுங்கியது. அவளிடமிருந்து நல்ல வாசனை எழுந்தது. அதை சுவாசிக்கையில் மூச்சுத் திணறியது. நாக்கு குழறியது.. என் திணறலுக்கு.. சிரித்தாள்..

பயமாய் இருந்தது. அவள் அருகாமை சந்தோசமாகவும் இருந்தது..

பெண்களிடம் பேசுவதில் எனக்கு காரணமில்லா தயக்கமிருந்தது. அதிலும் ரொம்ப பிடித்து விடுகிறவர்களிடம் அளவுக்கதிகமாய் மரியாதை. அதனால் எற்படும் பயம். ஆக தயக்கமும் தடுமாற்றமும் என்னை விட்டு விடாத நண்பன் போல் கூடவே இருந்தன.

அவளிடம் பேசிக் கொண்டே இருக்கவேண்டும் போல் உந்துதல்.. ஆசை.. தீயாய் எரிந்து கொண்டிருந்தது. அனாலும் ஒரு நடுக்கம். தவறாக நினைத்து விடுவாளோ.

எத்தனை நாள்தான் இப்படி உள்ளுக்குள் மறுகுவது. அவளிடம் பேசினால்தான் ஜென்மம் சாபல்யம் அடையும் போல் தோன்ற....

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மனசுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன்.

“ஹாய். குட்மார்னிங்”

“என்ன சார். சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது.”

“உன்னை பார்க்கிறதே சந்தோசம்தானே.” அவள் முகத்தில் பெருமிதம்.

“நீ ரொம்ப அழகு தெரியுமா..?”

“போங்க சார்..”

“இந்த ஆபீஸ்லேயே உன்னத்தவிர யாரையும் எனக்கு பிடிக்கலை தெரியுமா..?” என் உளறலுக்கு வாய் விட்டு சிரித்தாள்.

“நீங்க இப்படி கூட பேசுவீங்கன்னு நான் நினைக்கவேயில்லை.”

ஒத்திகை சுகமாய்தான் இருந்தது.

ஆனால் காலையில் போய் “குட் மார்னிங்” என்றதும் புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டாள்.

“மார்னிங் சார்.” என்றாள் அவநம்பிக்கையுடன். எல்லோரும் என்னையே பார்ப்பது போல பிரமை. பிறகு என்ன. தைரியம் மெதுவாய் நழுவிவிட்டது. மனசுக்குள் புலம்பி தவித்தேன்.

இப்படியே மூன்று மாதம் எப்படி போனதென்று தெரியவில்லை. அன்று அவளது கடைசி நாள்.. மஞ்சள் புடவையில் வந்திருந்தாள். பட்டு புடவை. அவள் நிறத்துக்கு அது பிரமாதமாயிருந்தது. ஒவ்வொருவரிடமாக சொல்லிக்கொண்டு வந்தாள்.

அவ்வளவுதானா.. இந்த உறவு இன்றோடு முடிந்து போகிறதா.. அப்படியே விட்டு விட வேண்டியதுதானா.. எனக்கு ஏன் இப்படி ஒரு தவிப்பு வருகிறது.

என்னிடமும் சொல்லிக் கொள்ள வரும்போது என்ன சொல்ல.. என்ன கேட்க.. என்று தீர்மானிப்பதற்க்குள் வந்து விட்டாள்..

“அப்ப நான் கிளம்புறேன் சார். என்னை ஞாபகத்தில வச்சிருங்க.”

“ம்..”

மனசுக்குள் ‘மறக்க முடியுமென்று தோன்றவில்ல’ என்றேன்.

“மறுபடியும் வாய்ப்பு வந்தா கொடுங்க”

“ஹேப்பி கிறிஸ்மஸ்” என்றேன் அசட்டு துணிச்சலுடன்.. அது டிசம்பரின் மூன்றாவது வாரம்.

“ஓ. தாங்க் யூ “ வாயெல்லாம் பல்லானாள். “சேம் டு யூ”

அவள் உடையை கண்களால் காட்டி “ நல்லாயிருக்கு” என்றேன். என்னை நானே தட்டிக் கொடுத்தேன். ரொம்ப ஓவரா போறடா என்று மனசாட்சி கதறியது.

அவள் முகத்தில் சில்லென்று பெருமிதம் ஒளிர்ந்தது.. குனிந்து தன் உடையை பார்த்துக் கொண்டாள். மடிப்புகளை சரி செய்து கொண்டாள். வசீகரமாய் புன்னகைத்தாள். கடந்து போனாள். வாசலை கடக்குமுன் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.

தீக்குள் விழுந்த மாதிரி உணர்ந்தேன்.’

த.ஜார்ஜ்
12-03-2011, 12:38 AM
(ஆமா உங்க பெயரை எங்கயோ கேட்டமாதிரி இருக்கே)

எங்கே என்று நீங்களே சொல்லிவிடுங்கள்.

த.ஜார்ஜ்
12-03-2011, 12:39 AM
தொடருங்கள் ஜார்ஜ்

தொடரதான் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். நன்றி முரளி.

த.ஜார்ஜ்
12-03-2011, 12:42 AM
வாசிக்க வாசிக்க மனது கொஞ்சம் வலிக்கின்றதே.. அடுத்தப் பாகத்திற்க்கு ஆவலாய்... :icon_hmm:

- ஓவியா -

உங்கள் பின்னுட்டத்திற்கு மகிழ்கிறேன். மனம் வலிக்க வேண்டாம் 'ஒண்ணுமில்ல.. கத..'

மதி
12-03-2011, 12:44 AM
கேட்டதும் கொடுத்தவரே.. ஜார்ஜ் அண்ணா. அடுத்த பாகத்தை போட்டு தீக்குள் எங்களையும் விழ வைத்துவிட்டீர்...

அடுத்து என்ன..? அடுத்து என்ன??

த.ஜார்ஜ்
12-03-2011, 12:46 AM
தந்தை என்னும் உறவையும் மீறி ஒரு விநோதமான மனிதரின் உளம்புகுந்து
அவரின் ரகசியங்களைக் கண்டறியும் முயற்சியாகவே தோன்றுகிறது.
மனம் கனக்கவைக்கும் எழுத்து. இழப்பின் வலியுணர்த்தும் கதை. பாராட்டுகள் ஜார்ஜ்.

நன்றி கீதம். பெரிய ரகசியங்கள் ஏதும் இல்லை. அது கண்டறியவும் முடிவதில்லை. [என்பது கதை முடிவில் தெரிய வரலாம்]

த.ஜார்ஜ்
12-03-2011, 12:49 AM
அண்ணா.. நீண்ட நாள் கழித்து உங்கள் கதை. அப்பாவின் விவரிப்பு அவரை கண்முன்னே நிறுத்துகிறது. அடுத்து என்ன என்ற ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது. சீக்கிரம் தொடருங்கள்..

நன்றி மதி. பின் தொடர்ந்தே வருவதற்கு நன்றி. நமக்கு இரண்டு பேருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று: திரியை தொடங்குவது.... முடிப்பதற்கு ?

மதி
12-03-2011, 12:56 AM
நன்றி மதி. பின் தொடர்ந்தே வருவதற்கு நன்றி. நமக்கு இரண்டு பேருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று: திரியை தொடங்குவது.... முடிப்பதற்கு ?
ஹாஹா..
இதைத் தவிர வேறென்ன பதிலிருக்க முடியும்..?:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

கீதம்
12-03-2011, 01:09 AM
ஹாஹா..
இதைத் தவிர வேறென்ன பதிலிருக்க முடியும்..?:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ரொம்பப் பெருமைதான்.:icon_p:

மதி
12-03-2011, 01:33 AM
ரொம்பப் பெருமைதான்.:icon_p:
:D:D:D:D

முரளிராஜா
12-03-2011, 03:57 AM
உங்களது கதையின் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் நண்பா

Nivas.T
12-03-2011, 04:36 AM
இம் கதை இன்னும் அருமையாக போகிறது

தொடருங்கள்
அடுத்த பதிப்பிற்க்கான ஆவலுடன் காத்திருக்கிறோம்

(தூக்கிருவோமா அவனை, நான் இந்த வண்டியில வரல...........இங்கதான் உங்க பெயர கேட்ட மாதிரி இருக்கு) :D:D:D

த.ஜார்ஜ்
13-03-2011, 05:08 PM
எனக்கும் அப்படிதான் இருந்தது. அப்பாவின் எழுத்தில் அலாதியான ஒரு லயிப்பை உணர முடிந்தது. எனக்குத் தெரியாத அப்பாவின் இன்னொரு பக்கம் மெல்ல மெல்ல உயிர் பெற்று என் முன்னே எழுந்து நிற்பதாய் ஒரு பிரமை. அச்சு கோர்த்த மாதிரி இருந்த அப்பாவின் ஒவ்வொரு எழுத்துகளும் அழகான அந்த பெண்ணாக எனக்குள் உருவம் கொண்டது.

என் தோள் வழியே எட்டிப் பார்த்து படித்த என் மனைவி சொன்னாள். “ உங்க அப்பா பெரிய ஆளுதான்” என்ன அர்த்தத்தில் சொன்னாளோ.

“சும்மா வாய மூடிட்டு இரு “ என்றேன்.

அவள் நமுட்டு சிரிப்பு சிரித்தாள். “பேசாம அடுத்த பக்கத்தை எடுங்க. இன்னும் என்னென்ன லீலைகள் பண்ணியிருக்கார்னு பாத்திருவோம்” அடுத்தவர் டைரியை படிக்கிற குறுகுறுப்பு அவள் கண்களில் பிரகாசித்தது.


‘மறுபடியும் அவளைப் பார்ப்பேன் என்று நினைத்திருக்கவேயில்லை

ஆனாலும் இந்த பந்தம் தொடர்வதற்கான அறிகுறி போல அந்த சந்திப்பு நடந்ததாய் எண்ணிக் கொள்கிறேன்.

அலுவலகத்தில் கணக்கு வழக்குகளில் முறைகேடு என்று சொல்லி எனக்கு மெமோ தந்திருந்தார்கள். மன உளைச்சலோடு
இராமசாமி பூங்காவுக்குள் நுழைந்திருந்தேன். பூங்காவில் முன்பை விட இப்போது பெரும் மாற்றம்.. சமூக விரோதிகளின் கேளிக்கை பகுதியாயிருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் மர நிழல்களில் தின்பண்டங்களை சுவைத்துக் கொண்டே கதைபேசிக் கொண்டிருந்தார்கள். நிறைய கூட்டம்,

நகரத்தின் பரபரப்பான மையத்தில் இப்படி ஒரு பூங்காவா.. ஆச்சரியத்துடன். அவித்த கடலை ஒரு பொட்டலம் வாங்கிக் கொண்டு கூட்டமில்லாத பகுதியில் சிமென்ட் இருக்கையில் போய் அமந்தேன். சிறுவர்களுக்கான ராட்டினங்களில் அம்மாக்கள் ஏறி சுற்றிக் கொண்டிருந்தார்கள். காதுக்குள் ரீங்காரமாய் பறவைகளின் இரைச்சல்.ஒலிபெருக்கியில் குத்துபாட்டு.

என் பின்னால் யாரோ வந்து நிற்கிற அரவம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அவள்தான். திகைத்து போனேன்.

“என்னை தெரியுதா” என்றாள்.

“ம்” மறக்கக்கூடிய முகமா அது.

எனக்கு பதற்றமாயிருந்தது. கையிலிருந்த கடலை பொட்டலத்தை அவசரமாக முதுகுக்குப் பின்னே மறைத்தேன். எப்படி பேசுவது என்று புரியவில்லை. புறப்பட்டு விடலாம் என்று தோன்றியது.

“தனியாவா வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.

“ம்..” அவள் குழந்தையோடு வந்திருந்தாள். இது யார் குழந்தை என்று கேட்க நினைத்தேன்.

“நீங்க இன்னும் மாறவேயில்ல” என்றாள்.

“ஏன்”

“ஒரு வார்த்தை பேசறதுக்கே ரொம்ப யோசிக்கிறீங்க.” குத்தி காட்டுகிறாளோ?

அந்த பெண் குழந்தை என்னை ஏற இறங்க பார்த்து விட்டு “அத்தே.. யார் இவங்க” என்று கேட்டது. நிம்மதியில் பெருமூச்சு விட்டதை கவனித்திருப்பாள்.

“மாமா” என்று சொன்ன அவள் தன் பெரிய விழிகளால் என்னை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு சந்தோசத்தில் காய்ச்சல் வந்தது. பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டு “டெய்லி வருவீங்களா” என்றேன்.

“இல்ல.. சனி,ஞாயிறு.”

“எப்படியிருக்..க....கீங்க..” என்று கேட்டபோது நாக்கு குழறியது.

“இப்பவாவது கேட்கத் தோணிச்சே.” புன்னகைத்தாள். கேலி பண்ணுகிறாளோ என்று ஐயம் தோன்றியது.

“சனியன்” என்றேன் தலையில் எச்சமிட்ட காகத்தை. அவள் முகம் கறுத்தாள்.

“அடுத்த வாரம் வருவீங்களா?” என்றேன்.

அவள் பதட்டத்துடன் பதில் சொல்லாமல் விலகி நடந்தாள்.

எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. தப்பாக ஏதாவது நினைத்து விட்டாளோ. இப்படிதான் நான் ஒன்று நினைத்துச் சொல்ல அது இசகுபிசகாகி விடுவதே வாடிக்கையாகிவிட்டது, அதனாலேயே பல நேரம் வாயே திறப்பதில்லை. இப்போது என்ன சொல்லி தொலைத்தேன்? போயே விட்டாள்.

அப்பாவுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும் என்று நான் கற்பனை கூட பண்ணியதில்லை. படிக்க படிக்க எனக்கு பல முடிச்சுகள் அவிழ்வது மாதிரி இருந்தது. அப்பாவை அம்மா ஏன் வெறுத்துக் கொண்டிருந்தாள் என்று புரிவது போல இருந்தது. அப்பாவுக்கும் அந்த பெண்ணிற்குமான தொடர்பு அம்மாவுக்கு தெரிந்திருக்குமோ? அப்பாவின் நடவடிக்கையின் உட்பொருள் மெல்ல விலகுவது மாதிரியிருந்தது. மஞ்சள் நிறத்தில் அம்மாவுக்கு பட்டு எடுத்துக் கொடுத்த அவர் செயலும் அதற்கு அம்மா சலித்துக் கொண்டதும் இதனால்தானோ..

ஆனால் இவையெல்லாம் தேதி வாரியாக எழுதப்படவில்லை. தொடர்ச்சியாக அடுத்தடுத்த பக்கங்களில் எழுதியிருக்கிறது. என்றோ ஒரு நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்து தொகுத்து எழுதியிருப்பாரோ....ஏதோ ஒரு சந்தோசமான நிமிடத்தில் இதையெல்லாம் நினைத்து அசைபோட்டிருப்பாரோ.. இரவுகளில் லைட்டை போட்டுக் கொண்டு இதைதான் எழுதிக் கொண்டிருந்தாரா.

ஒருவகையில் அப்பாவை நினைக்கவும் பாவமாக இருந்தது காதலில் அவர் தோற்று போயிருந்திருக்கக் கூடும். அந்த தோல்வி வலியுடனே அம்மாவுடனான வாழ்க்கை நடந்திருக்குமோ.. “இங்க கொண்டாங்க. நான் படிச்சி சொல்றேன்.” கையிலிருந்து டைரியை பிடுங்கினாள் என் மனைவி.

மதி
14-03-2011, 04:15 AM
படிக்கப் படிக்க சுவாரஸ்யம்.. வாங்கிவிட்டீர்களா...... அப்பாவின் டைரி..!!
அடுத்த பாகத்தைப் போடுங்கண்ணே..!!

Nivas.T
14-03-2011, 06:07 AM
ஆஹா என்ன ஒரு காதல் கதை?

அழகா இருக்குங்க?

தொடருங்கள்

sarcharan
14-03-2011, 09:08 AM
“எப்படியிருக்..க....கீங்க..” என்று கேட்டபோது நாக்கு குழறியது.

“இப்பவாவது கேட்கத் தோணிச்சே.” புன்னகைத்தாள். கேலி பண்ணுகிறாளோ என்று ஐயம் தோன்றியது.

“சனியன்” என்றேன் தலையில் எச்சமிட்ட காகத்தை. அவள் முகம் கறுத்தாள்.



காரியத்தை கெடுத்துரிச்சு

வெண்ணை தெரண்டு வரும்போது தாழி உடச்ச கதை ஆகிடிச்சு

முரளிராஜா
14-03-2011, 09:36 AM
தொடருங்கள் நண்பா அடுத்த பகுதியை

த.ஜார்ஜ்
14-03-2011, 04:30 PM
அடுத்த வாரம் நான் போனபோது அவள் வரவில்லை. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, பிறகு ஒவ்வொரு வாரமும் நான் பூங்காவுக்கு போய்விட்டு ஏமாந்து வந்ததுதான் மிச்சம். பார்க்கவே முடியவில்லை. ஏன் வராமல் போனாள். மனசு பாரமானது.. மிகப்பெரிய வரத்தை நான் தவற விட்டு விட்டது போல் உணர்ந்தேன். அவளை நான் அதிகமாக நேசித்திருக்கிறேன் என்ற உண்மை அப்பட்டமாய் உறைத்தது. மிகப் பெரிய இழப்பை சுமப்பவன் போல சோர்ந்து போனேன்.. நகர மறுத்த வாழ்க்கையை இழுத்துக் கொண்டு நெடுந்தொலைவு வந்த பின் ஒருநாள்.

அன்று மணிமேடையில் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் மறுபடியும் அவளைப் பார்த்தேன்.

அதே மஞ்சள் நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். அவள் உடுத்தியிருந்தபோது அந்த நிறம் இன்னும் பிரகாசமாய் வசீகரமாய் இருந்தது. கையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டு சாலையை கடந்து கொண்டிருந்தாள். கூடவே கை நிறைய துணிக்கடை பைகளை சுமந்தபடி செல்பவன் கணவனாயிருக்க வேண்டும்.

சட்டென்று நான் நின்ற திசையில் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். கவனித்தாளா தெரியவில்லை. சுண்டி இழுக்கிற மாதிரி அந்தப் பார்வை என்னை தடவிச் சென்றது போல் பிரமை.

என் வேலைகளை மறந்து அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் நிறுத்தியிருந்த காரில் ஏறுவது தெரிந்தது. கார் கிளம்பி நான் நின்றிருந்த திசை வழியே வந்து என்னை கடந்து போனது.

காரை தொடர்ந்து சென்ற என் கண்களுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. காரின் பின்புற கண்ணாடி வழியாக அந்த குழந்தை என்னைப் பார்த்து கையசைத்துக் கொண்டே போனாள்.

சட்டென்று எனக்கு ஜிலீரிட்டது.

பார்த்துவிட்டிருக்கிறாள். நாசூக்காய் வெளிப்படுத்திவிட்டாள். எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று விட்டு செய்வதறியாது திரும்பினேன்.

வீடு வந்தால் தூக்கம் வாவில்லை. மஞ்சள் பட்டும் அவளது பளீர் சிரிப்பும்.. மனசெல்லாம் வியாபித்தது.

மறக்கவே முடியாமல் நினைவுகளால் எழும்பி... ஆண்டவா அப்படியே நான் செத்துப் போய்விடக் கூடாதா?

அப்படியேதான் அப்பா செத்து போய் விட்டார். நான் ஆரம்ப பள்ளி முடித்திருந்த சமயத்தில் அது நடந்தது. கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். யாரோ ஒரு ஆள் பாட்டியை பார்க்க வந்திருந்தார். விளையாடிக் கொண்டிருந்த என்னை தாவி அணைத்துக் கொண்டு “ ஐயோ ராசா” என்று கதறி அழுதார். குரல் கேட்டு வெளியே வந்த பாட்டியும் அவன் சொன்னதைக் கேட்டு கதறினார். “உங்கப்பன் தலையில கல்லப் போட்டுட்டானே.. இனி என்ன மக்கா செய்யப் போற” என்று அழுதாள்.

கதவை இழுத்து பூட்டிவிட்டு மாட்டையும் கோழிகளையும் பக்கத்து வீட்டில் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு.. என்னை இழுத்துக் கொண்டு அழுதபடியே நடந்தாள்.” இந்த பாவி பய இப்படி செய்வான்னு நினைக்கலியே. அந்த சண்டாளிதான் ஏதாவது சொல்லியிருப்பா. “ என்று வழி நெடுக கோபப்பட்டுக் கொண்டே வந்தாள். பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்தே ஒப்பாரி வைத்துக் கொண்டு வந்தாள். ரோட்டில் எல்லோரும் அவளை திரும்பிப் பார்க்க எனக்கு ஒருமாதிரி இருந்தது.

“என்னாச்சி பாட்டி. சும்மா அழுதுட்ட்டே வாராத பாட்டி.”

“அட விவரம் கெட்டவனே. உங்க அப்பன் தூக்கு போட்டு செத்து போயிட்டானாம்ல. கிறுக்கு பயலே உன்ன அனாதையா விட்டுட்டு போயிட்டானாம்..”

பாட்டியின் வார்த்தைகள் ஒரு செய்தியாகத்தான் பட்டது வீட்டில் வந்து முன்னறையில் துணி மூடி கிடத்தியிருந்த அப்பாவை பார்த்ததும்தான் எனக்கு உறைத்தது. அழுது கொண்டிருந்த அம்மாவையும், அக்காவையும் பார்த்ததும் வெடித்துக் கொண்டு எனக்கும் அழுகை வந்தது. நான் அழுவதைப் பார்த்ததும் கூட்டமும் பெருங்குரலெடுத்து அழுதது.

அப்பா ஏன் செத்தார். இன்றுவரை விடை தெரியாத புதிர். ‘அம்மாவின் தொணதொணப்பால்’ என்றாள் பாட்டி. ‘உத்தியோகத்தில் பண்ணிய குழறுபடி’ என்றாள் அக்கா. அம்மா மட்டும் வாய் திறக்கவில்லை.

ஒருவேளை அதற்கெல்லாம் இதுதான் காரணமோ.?

இதனால்தான் அடிக்கடி அம்மா சண்டை போட்டுக் கொண்டிருந்தாளோ. அவர் எரித்து போன பல டைரிகளிலும் இதைதான் எழுதி வைத்திருந்தாரோ. அதனால்தான் அதையெல்லாம் எரித்தாரோ.

எனக்கு அம்மாவைப் பார்க்க சங்கடமாகத்தான் இருந்தது. அவளது சிடுசிடுப்பை வைத்து அப்பாவைப் போலவே வெறுப்புடனேதான் வைத்திருந்தேனோ. பாவம்.. அவளும் பெண்தானே..

இப்போது நினைத்துப் பார்க்கையில் நினைவு வருகிறது. அப்பா நெடு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பிறகு அம்மா முற்றிலும் மாறியிருந்தாள். சிடுசிடுப்பு இல்லை. குரலெடுத்து பேசுவதில்லை. சாந்தாமாகவே இருந்தாள். ஒருவேளை மனம் திருந்தி வந்த மைந்தனை வரவேற்று கொண்டாடிய தந்தையைப் போன்று அம்மா நடந்து கொண்டாளோ.
அப்பா இறந்த பின் புத்தகங்கள் நிரம்பிய அவர் அறையையில் அதக நேரம் செலவிட்டாள். அடிக்கடி தூசுதட்டி ஒரு கோயில் போல பேணினாள். வேறு யாரும் அந்த அறையை பயன்படுத்த முடியவில்லை.புத்தகங்கள் எல்லாம் பூச்சிகள் அரிக்கின்றன. யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றால் அம்மாவுக்கு சம்மதமில்லை. அவளுக்குத் தெரியாமல் பாதியை நான் விற்றுவிட்டதில் கோபம்கொண்டு என்னோடு பேசமாட்டாள்.

இப்போது அவளால் முடியவில்லை. படுக்கையை அங்கேயே மாற்றிக் கொண்டாள்.வெளியே எங்கும் வருவதில்லை. அவ்வப்போது ஒட்டடை அடிக்க, பெருக்கி சுத்தம் பண்ண என்று என் மனைவிதான் செய்து கொண்டிருக்கிறாள். அப்படி போகிறபோது ஏதாவது கதைபுத்தகம் எடுத்து வந்து படித்துக் கொண்டிருப்பாள். இன்று எடுத்து வந்தது இந்த டைரி.

டைரியின் அடுத்த பக்கங்கள் எரிந்து போயிருந்தன. மேற்கொண்டு விவரங்கள் தெரிய முடியவில்லை. அம்மாவே சொன்னால்தான் உண்டு. ஆனால் சொல்ல மாட்டாள்.அதுவும் என்னிடம் பேசவே மாட்டாள். மெல்ல அவள் அறையை எட்டிப் பார்த்தேன்.

அம்மா. தலை நரைத்து, உடல் மெலிந்து, முகம் வாடி....கட்டிலில் படுத்துக் கிடந்தாள். ஜெபமாலை உருட்டிக் கொண்டிருந்தாள். சலனம் கேட்டு திரும்பியவள் என் கையிலிருந்த டைரியைப் பார்த்து திகைத்தாள். தன் பெட்டி மேல் ஒரு கணம் பார்வையை ஓட்டினாள். “அதை யாரு உன்ன எடுக்கச் சொன்னா” என்றாள்.

“அப்பா இப்படியெல்லாமா இருந்தாரு. ” அவ்ள் பதில் பேசவில்லை. புருவத்தை அகல விரித்தாள். அது கேட்ட கேள்வி “எப்படியெல்லாம்..?”

“அதான்... அந்த பொண்ணு.. அவ யாரு. உனக்கு தெரியாம இருக்காதே. ”

அம்மா முகத்தில் கோபம் மெல்ல எட்டிப் பார்த்தது. பிறகு என்ன நினைத்தாளோ லேசாய் புன்னகைத்தபடி கேட்டாள் “உங்க அப்பா எழுத்து பிடிச்சிருக்கா?”

“ஏம்மா. வயசாகி புத்தி கெட்டு போச்சா உனக்கு... மனுசன் இன்னொருத்திய பத்தி உருகி உருகி எழுதியிருக்கார். கோபபடாம புடிச்சிருக்கான்னு கேட்கிற.?”

அம்மா வேறெதும் சொல்லவில்லை. எதையோ நினைத்து பெருமூச்சு விட்டாள். கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். கட்டிலுக்கடியில் இருந்த அவள் பெட்டியை இழுத்து திறந்தாள். உள்ளேயிருந்து பழைய வாரப்பத்திரிகைகளில் ஒன்றை எடுத்து பக்கத்தை புரட்டி என்னிடம் நீட்டினாள். ‘போ.இதையும் போய் படி. உங்க அப்பா எழுதினதுதான்.”.

நான் நம்ப முடியாமல் எடுத்துப் புரட்ட அதில் இருந்த கதை இப்படி தொடங்கியது. ‘மறுபடியும் அவளைப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை.’

அம்மாவின் பார்வை நகர்ந்து, அடுக்கி வைத்த புத்தகங்களை வெறிக்கத் தொடங்கியது.

Nivas.T
14-03-2011, 04:50 PM
மனதை கலங்கச் செய்கிறது ஜார்ஜ்

தொடருங்கள்

மிகவும் நன்றாக இருக்கிறது
உங்கள் கதையோட்டம்

கீதம்
14-03-2011, 11:11 PM
கலங்கவைக்கும் எழுத்து. பாராட்டுகள் ஜார்ஜ். அம்மாவின் பார்வையில் அப்பா... மகனின் பார்வையில் அப்பா.... மனைவியின் பார்வையில் கணவன்... புத்தகப்பிரியன்.... கனவுக்காதலன் என்று பலவித முகங்களில் ஒரு மனிதனை அறிமுகப்படுத்தி எந்தமுகம் எவருக்கு வசப்படுகிறதோ அந்தமுகத்தில் அவனை அடையாளப்படுத்திக்கொள்ளச் சொல்லி வாசகர்களின் விருப்பத்திற்கு யூகத்தை விட்ட உங்கள் கதை யுக்தி பாராட்டுக்குரியது. எனினும் ஒரு கனத்த சோகம் கடைசியில் மனதைக் கவ்வுகிறது என்பது உண்மை. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் முத்திரைக்கதையொன்றைப் படித்த நிறைவு.

பி.கு.என் கதைகளையும் கவிதைகளையும் நோட்டுப்புத்தகம் அல்லது டைரியில் எழுதிப் பின் தட்டச்சு செய்யும் என் பழக்கத்தை மறுபரிசீலனை செய்யவைத்துவிட்டீர்கள்.

மதி
15-03-2011, 12:49 AM
முடிவை தான் முன்பே சொல்லிவிட்டீர்களே..! :D:D:D:D ‘ஒண்ணுமில்ல கத..’
இதுக்குத் தான் டைரி எழுதறதே இல்லே.. நேரா வேர்ட் டாக்குமெண்ட் தான்.... :eek::eek::eek:

வழக்கமான உங்க முத்திரை முடிவு..

மதி
15-03-2011, 12:50 AM
பி.கு.என் கதைகளையும் கவிதைகளையும் நோட்டுப்புத்தகம் அல்லது டைரியில் எழுதிப் பின் தட்டச்சு செய்யும் என் பழக்கத்தை மறுபரிசீலனை செய்யவைத்துவிட்டீர்கள்.
உண்மையில் அது நல்ல பழக்கம். தப்பை களைய உதவும். ஆங்காங்கே மாற்றம் செய்ய இயலும்.. :icon_b:

கீதம்
15-03-2011, 12:52 AM
உண்மையில் அது நல்ல பழக்கம். தப்பை களைய உதவும். ஆங்காங்கே மாற்றம் செய்ய இயலும்.. :icon_b:

நல்ல பழக்கம்தான். நாளை என் குழந்தைகள் என் டைரியைப் படித்து எதையாவது ஏடாகூடமாய்ப் புரிந்துகொண்டால்? அந்த பயம்தான்.

மதி
15-03-2011, 01:00 AM
நல்ல பழக்கம்தான். நாளை என் குழந்தைகள் என் டைரியைப் படித்து எதையாவது ஏடாகூடமாய்ப் புரிந்துகொண்டால்? அந்த பயம்தான்.
அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை... ஏடாகூடமாய் எழுதினால் தானே.. எல்லாத்தையும் அவர்கள் சம்பந்தப்படுத்திப்பார்த்தால் குழம்பித் தான் போவார்கள். :icon_b::icon_b::icon_b:

கீதம்
15-03-2011, 01:04 AM
அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை... ஏடாகூடமாய் எழுதினால் தானே.. எல்லாத்தையும் அவர்கள் சம்பந்தப்படுத்திப்பார்த்தால் குழம்பித் தான் போவார்கள். :icon_b::icon_b::icon_b:

இது நல்ல விளக்கம்.:icon_b:

முரளிராஜா
15-03-2011, 02:51 AM
நல்ல பழக்கம்தான். நாளை என் குழந்தைகள் என் டைரியைப் படித்து எதையாவது ஏடாகூடமாய்ப் புரிந்துகொண்டால்? அந்த பயம்தான்.

கீதம் மேடம் உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமைதான் உங்கள் குழந்தைகள் அதை ஏடாகூடமாய்ப் புரிந்துகொள்ளமாட்டார்கள். டைரியில்
எழுதுவதை தொடருங்கள்
(நாவிடம்-பாவிடம் டைரியில் இருக்கா:lachen001:)

த.ஜார்ஜ்
15-03-2011, 08:16 AM
மனதை கலங்கச் செய்கிறது ஜார்ஜ்

தொடருங்கள்

மிகவும் நன்றாக இருக்கிறது
உங்கள் கதையோட்டம்

அடடா..கதை முடிந்தது என்று போட மறந்து விட்டேனோ.?

Nivas.T
15-03-2011, 08:36 AM
அடடா..கதை முடிந்தது என்று போட மறந்து விட்டேனோ.?

:eek::eek::eek::eek::eek:

என்னது முடிஞ்சு போச்சா???

விடு விடு சூ னா பா னா.... யாரும் பாக்களல்ல அப்புறம் என்ன?? இம் இம் ...........

த.ஜார்ஜ்
15-03-2011, 08:51 AM
கலங்கவைக்கும் எழுத்து. பாராட்டுகள் ஜார்ஜ். அம்மாவின் பார்வையில் அப்பா... மகனின் பார்வையில் அப்பா.... மனைவியின் பார்வையில் கணவன்... புத்தகப்பிரியன்.... கனவுக்காதலன் என்று பலவித முகங்களில் ஒரு மனிதனை அறிமுகப்படுத்தி எந்தமுகம் எவருக்கு வசப்படுகிறதோ அந்தமுகத்தில் அவனை அடையாளப்படுத்திக்கொள்ளச் சொல்லி வாசகர்களின் விருப்பத்திற்கு யூகத்தை விட்ட உங்கள் கதை யுக்தி பாராட்டுக்குரியது. எனினும் ஒரு கனத்த சோகம் கடைசியில் மனதைக் கவ்வுகிறது என்பது உண்மை. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் முத்திரைக்கதையொன்றைப் படித்த நிறைவு.

பி.கு.என் கதைகளையும் கவிதைகளையும் நோட்டுப்புத்தகம் அல்லது டைரியில் எழுதிப் பின் தட்டச்சு செய்யும் என் பழக்கத்தை மறுபரிசீலனை செய்யவைத்துவிட்டீர்கள்.

பார்வைகளை சரியாக புரிந்து கொண்ட உங்கள் பார்வை அலாதியானது.
உங்களைப் போலவே கதைக்கான கருக்களை, காட்சிகளை டைரியில் குறித்து வைப்பது என் வழக்கம். அதை தற்செயலாக படித்த என் மகன் சிரித்ததின் விளைவு இப்படியொரு கதை. எனவே டைரி எழுதுவதை மறு பரிசீலனை செய்வதில் தப்பு இல்லை.

த.ஜார்ஜ்
15-03-2011, 08:57 AM
முடிவை தான் முன்பே சொல்லிவிட்டீர்களே..! :D:D:D:D ‘ஒண்ணுமில்ல கத..’
இதுக்குத் தான் டைரி எழுதறதே இல்லே.. நேரா வேர்ட் டாக்குமெண்ட் தான்.... :eek::eek::eek:

வழக்கமான உங்க முத்திரை முடிவு..

மதி...
பின் தொடர்ந்து வந்தமைக்கு மிக்க நன்றி.
அந்த இன்னொரு தலைப்பு இதற்காகத்தான் என்பதை சுலபமாக கண்டு கொண்டீர்கள்.
[எங்கே உங்கள் கதையைப் போல வாசக ரசனைக்கேற்ப முடிவை மாற்றி அந்த தலைப்பு அர்த்தமில்லாமல் போய்விடுமோ என்று பயந்தேன். நல்லவேளை...]

த.ஜார்ஜ்
15-03-2011, 09:00 AM
தொடர்ந்து வந்து உற்சாகமூட்டிய சர்சரன்,முரளிராஜா ஆகியோருக்கும் நன்றி.

sarcharan
15-03-2011, 09:15 AM
என்னோட டைரிய என் மனைவி படிச்சுட்டு நெறைய நாள் என் கூட சண்டை போட்டிருக்கா...
அன்றிலிருந்து நான் டைரி எழுதுற பழக்கத்த விட்டுட்டேன்

முரளிராஜா
15-03-2011, 09:20 AM
அப்படி அவங்க சண்டை போடுற மாதிரி டைரியில என்னதான் எழுதியிருந்திங்க நண்பா?

மதி
15-03-2011, 10:24 AM
[எங்கே உங்கள் கதையைப் போல வாசக ரசனைக்கேற்ப முடிவை மாற்றி அந்த தலைப்பு அர்த்தமில்லாமல் போய்விடுமோ என்று பயந்தேன். நல்லவேளை...]
அதெல்லாம் என் ஒருத்தனால மட்டும் தான் முடியும்...:icon_b:

இன்னும் எழுதுங்கண்ணே..!

Ravee
15-03-2011, 10:52 AM
எந்தா ஜார்ஜு சாரே நலம்தன்னே .... ஈ ஆள் எங்கனே இது போல ஒரு கதை பறையுது .... ஹா ஹா அண்ணா வணக்கம் ... கதையின் முடிவை இரண்டாம் அத்தியாயத்திலேயே மோப்பம் பிடித்து விட்டேன். எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தின் கதையா முன்பு எழுதி இருந்தேன் .... முதல் அத்தியாயம் அப்படியே எனக்குள் அந்த குடும்பத்தை பிரதிபலித்தது . உங்கள் நகைசுவை பின்னர் வந்த அத்தியாங்களில் பனித்துளியாய் பரவி கிடந்தது. கதையின் நாயகனுக்கு பாக்கியராஜ் பொருத்தமாய் இருப்பார். அல்லது நீங்கள் பொருத்தமாய் இருப்பீர்கள்..... ஹா ஹா ஹா .
வாழ்த்துக்கள்.

sarcharan
15-03-2011, 11:13 AM
பாக்யராஜை விட நிழல்கள் ரவி பொருத்தமா இருப்பார்

த.ஜார்ஜ்
15-03-2011, 01:38 PM
என்னோட டைரிய என் மனைவி படிச்சுட்டு நெறைய நாள் என் கூட சண்டை போட்டிருக்கா...
அன்றிலிருந்து நான் டைரி எழுதுற பழக்கத்த விட்டுட்டேன்

உங்களுக்கு என் அனுதாபங்கள். [முரளி உங்களிடம் ஏதோ கேள்வி கேட்டாரே]

த.ஜார்ஜ்
15-03-2011, 01:40 PM
அப்படி அவங்க சண்டை போடுற மாதிரி டைரியில என்னதான் எழுதியிருந்திங்க நண்பா?

நல்லாதான் கேட்கிறீங்க டீட்டெய்லு.

முரளிராஜா
15-03-2011, 01:42 PM
அதுக்கு பதில் சொல்ல பயந்துகிட்டுதான் ஒரு நாள் விடுப்பு எடுத்துகிட்டார்போல

ஜார்ஜ் விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு போய் பாருங்க

த.ஜார்ஜ்
15-03-2011, 01:45 PM
எந்தா ஜார்ஜு சாரே நலம்தன்னே .... ஈ ஆள் எங்கனே இது போல ஒரு கதை பறையுது .... ஹா ஹா அண்ணா வணக்கம் ... கதையின் முடிவை இரண்டாம் அத்தியாயத்திலேயே மோப்பம் பிடித்து விட்டேன். எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தின் கதையா முன்பு எழுதி இருந்தேன் .... முதல் அத்தியாயம் அப்படியே எனக்குள் அந்த குடும்பத்தை பிரதிபலித்தது . உங்கள் நகைசுவை பின்னர் வந்த அத்தியாங்களில் பனித்துளியாய் பரவி கிடந்தது. கதையின் நாயகனுக்கு பாக்கியராஜ் பொருத்தமாய் இருப்பார். அல்லது நீங்கள் பொருத்தமாய் இருப்பீர்கள்..... ஹா ஹா ஹா .
வாழ்த்துக்கள்.

சேட்டா சுகமாணோ? எப்பொழானு கேரளத்திலேர்ந்து வந்நு. ஆனாலும் என்னை ஹீரோ ஆக்க வேண்டுமென்று கொலைவெறியுடன் திரிகிறீர்கள் போல..

த.ஜார்ஜ்
15-03-2011, 01:47 PM
அதுக்கு பதில் சொல்ல பயந்துகிட்டுதான் ஒரு நாள் விடுப்பு எடுத்துகிட்டார்போல

ஜார்ஜ் விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு போய் பாருங்க

முன்பே பார்த்துவிட்டேன்.ஆனாலும் ஒரு நாள் விடுப்புக்கே இந்த சலம்பு சலம்புகிறாரே.

முரளிராஜா
15-03-2011, 01:47 PM
நல்லாதான் கேட்கிறீங்க டீட்டெய்லு.

ஒரு(G K) பொது அறிவை வளர்த்துக்கதான்:lachen001::lachen001:

ஆதவா
16-03-2011, 11:52 AM
மிக அருமையான கதைசொல்லியாக உருவாகிவிட்டீர்கள்! கதையின் மூலம் எவ்வாறு உள்ளிழுப்பது எனும் உத்தியை நன்கு பயன்படுத்துகிறீர்கள்!!
வேறென்ன சொல்ல....
மிக அருமையான முடிச்சு!!

செல்வா
16-03-2011, 02:16 PM
ரொம்ப நல்லாருக்கு அண்ணா...!

ஆதவா கூறியது போன்று ஒரு தேர்ந்த எழுத்தாளரின் லாவகம் தெரிகிறது.

தொடர்ந்து நிறைய (டைரி) எழுதுங்கள்....

சிவா.ஜி
16-03-2011, 02:57 PM
ஜார்ஜ்...கலக்கிட்டீங்க...கதையில மட்டுமில்ல...நிஜமாவே. ஏன்னா டயரி எழுதுற பழக்கமிருக்கிற எனக்கு...அதைப் படிச்சிட்டு பத்ரகாளியான என் மனைவியைப் பார்த்த எனக்கு, அதை விளக்கி பிறகு குளிர்விச்ச எனக்கு........இந்தக் கதை ரொம்ப அந்யோந்யமா ஆயிடிச்சி.....ஹி...ஹி....

என்னோட டயரி....பல கதை சொல்லும். கூடிய விரைவில் அதிலிருந்து ஒன்று தொடர்கதையாகும். இப்படிக்கூட நடக்குமான்னு....நாகர்கோயில்லருந்து நீங்க முழிக்கறத நான் கற்பனையில பாக்கப் போறேன்...ஹா...ஹா....

என் நண்பரின் தேர்ந்த எழுத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்க.

த.ஜார்ஜ்
16-03-2011, 03:48 PM
மிக அருமையான கதைசொல்லியாக உருவாகிவிட்டீர்கள்! கதையின் மூலம் எவ்வாறு உள்ளிழுப்பது எனும் உத்தியை நன்கு பயன்படுத்துகிறீர்கள்!!
வேறென்ன சொல்ல....
மிக அருமையான முடிச்சு!!

வெறெதும் சொல்லாமல் நீங்கள் ஒருவரி சொன்னதே பெருமைதான். நன்றி ஆதவா. [ நான் அப்பாவுக்கு நன்றி போடவில்லை.கண்டுகொள்ளாதீர்கள்.]

த.ஜார்ஜ்
16-03-2011, 03:51 PM
ரொம்ப நல்லாருக்கு அண்ணா...!

ஆதவா கூறியது போன்று ஒரு தேர்ந்த எழுத்தாளரின் லாவகம் தெரிகிறது.

தொடர்ந்து நிறைய (டைரி) எழுதுங்கள்....

ஓசியாக [அப்படி என்றால் என்ன?] நிறைய டைரி கிடைத்தால் இப்படிதால் எதையாவது எழுத தோன்றி விடுகிறது. வாசனை நிரம்பிய அந்த பக்கங்களை சும்மாவிட மனசே வருவதில்லை. ஆகவே டைரி எழுதுவது தொடரதான் செய்யும்.[ நன்றி ஏற்கெனவே தொலைபேசியில் சொல்லியாகிவிட்டது]

த.ஜார்ஜ்
16-03-2011, 03:56 PM
ஜார்ஜ்...கலக்கிட்டீங்க...கதையில மட்டுமில்ல...நிஜமாவே. ஏன்னா டயரி எழுதுற பழக்கமிருக்கிற எனக்கு...அதைப் படிச்சிட்டு பத்ரகாளியான என் மனைவியைப் பார்த்த எனக்கு, அதை விளக்கி பிறகு குளிர்விச்ச எனக்கு........இந்தக் கதை ரொம்ப அந்யோந்யமா ஆயிடிச்சி.....ஹி...ஹி....

என்னோட டயரி....பல கதை சொல்லும். கூடிய விரைவில் அதிலிருந்து ஒன்று தொடர்கதையாகும். இப்படிக்கூட நடக்குமான்னு....நாகர்கோயில்லருந்து நீங்க முழிக்கறத நான் கற்பனையில பாக்கப் போறேன்...ஹா...ஹா....

என் நண்பரின் தேர்ந்த எழுத்துக்கு என் மன்மார்ந்த பாராட்டுக்கள். இன்னும் எழுதுங்க.

நிஜமாக இப்ப நான் எதுவும் கலக்கவே இல்லீங்க. நம்புங்க.
உங்க வீட்டு அனுபவத்தை.... மன்னிக்கவும்.. உங்க கதை அனுபவத்தை தொடரா படிக்க தயாராயிருக்கோம். அசத்துங்க.
நண்பரின் பாராட்டு எனக்கு பெருமையளிக்கிறது. நன்றி சிவா.ஜி

சிவா.ஜி
16-03-2011, 04:22 PM
தெரியுங்க நீங்க எதையும் கல்க்கலன்னு....அதனாலத்தான் கதை....கலக்கிடிச்சி. ஜார்ஜ்ஜோட எழுத்துக்கள்ன்னா சும்மாவா....

என் அனுபவத்த சீக்கிரமா எழுதறேன்.....கதையைத்தான்....ஹா...ஹா.....ஹா....!!!

ஓவியா
21-03-2011, 12:08 AM
ஜார்ஜ் அண்ணா, என்ன ரசனையா இருக்கு!!! அடடா. அழகான எழுத்துநடை. பாராட்டுக்கள்.

கதை ரொம்ப சுவாரிஸ்யமாக இருந்தது.. இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப வாசித்தேன், ஏனோ கதை சரியாகவே பிடிப்படவில்லை. இதுவரை நான் படித்து சரியாக புரிந்துக்கொள்ள முடியாமல் போன கதையில் இதுவே முதலிடம்.

சுருக்கமாக சொன்னால், அப்பாவிற்க்கு கதை வாசிக்க பிடிக்கும், கதையும் எழுதுவார். அப்படி அவர் எழுதிய கதைதான் இந்த (ஒன்னுமில்ல கத) சரியா?

அப்பாவின் எழுத்து ரசனைகள் அம்மாவிடம் இல்லை, அதும் புரியும் பொழுது காலம் கடந்து விட்டது சரியா?

இல்லை உண்மையிலே அப்படி ஒரு மஞ்சள் புடவை அப்பாவில் உறவில் இருந்ததா? (உண்மையாக செத்து போனாரே!! இல்லை கதையின் கதாநாயகன் போல் அந்த உணர்வை உணர்ந்து அப்படியே செத்து போனாரா?)

ஏலே காப்பாத்துங்களே.. கதையை பல முறை வாசித்து நான் குழம்பிப்போய் விட்டேன்? கதைய இன்னமும் வாசிக்க வாசிக்க ... ஐய்யா காப்பாத்துங்க... குழம்பி குழம்பி.. :mini023:

உதவி ப்லீஸ். என்னதான் கதையில் நடக்குது :traurig001:

sarcharan
21-03-2011, 07:18 AM
ஒரு(G K) பொது அறிவை வளர்த்துக்கதான்:lachen001::lachen001:

ஜி கே என்றா ஜென்டில் கழுதையா?

த.ஜார்ஜ்
21-03-2011, 02:41 PM
ஜார்ஜ் அண்ணா, என்ன ரசனையா இருக்கு!!! அடடா. அழகான எழுத்துநடை. பாராட்டுக்கள்.

கதை ரொம்ப சுவாரிஸ்யமாக இருந்தது.. இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப வாசித்தேன், ஏனோ கதை சரியாகவே பிடிப்படவில்லை. இதுவரை நான் படித்து சரியாக புரிந்துக்கொள்ள முடியாமல் போன கதையில் இதுவே முதலிடம்.

சுருக்கமாக சொன்னால், அப்பாவிற்க்கு கதை வாசிக்க பிடிக்கும், கதையும் எழுதுவார். அப்படி அவர் எழுதிய கதைதான் இந்த (ஒன்னுமில்ல கத) சரியா?

அப்பாவின் எழுத்து ரசனைகள் அம்மாவிடம் இல்லை, அதும் புரியும் பொழுது காலம் கடந்து விட்டது சரியா?

இல்லை உண்மையிலே அப்படி ஒரு மஞ்சள் புடவை அப்பாவில் உறவில் இருந்ததா? (உண்மையாக செத்து போனாரே!! இல்லை கதையின் கதாநாயகன் போல் அந்த உணர்வை உணர்ந்து அப்படியே செத்து போனாரா?)

ஏலே காப்பாத்துங்களே.. கதையை பல முறை வாசித்து நான் குழம்பிப்போய் விட்டேன்? கதைய இன்னமும் வாசிக்க வாசிக்க ... ஐய்யா காப்பாத்துங்க... குழம்பி குழம்பி.. :mini023:

உதவி ப்லீஸ். என்னதான் கதையில் நடக்குது :traurig001:

குழம்பி போனதற்கு,பாராட்டு சொன்ன முதல் ஆள் நீங்கதான்.
இருப்பினும் மறுபடியும் மறுபடியும் கதையை படித்ததற்கு மிக்க நன்றி.
நீங்கள் பெரும்பாலும் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
அவர் கதைதான் எழுதியிருந்தார். கலையோ, இலக்கியமோ அறிய முன்வராத ஒரு வாரிசின் பார்வை அது.
அவர் மரணித்ததின் காரணம் மஞ்சள் புடவையில்ல. அலுவலக நெருக்கடி என்பது கோடிகாட்டப்பட்டிருக்கிறது. என்று நான் சொன்னாலும் உங்கள் பார்வை படியே புரிந்துகொள்ளலாம். ஆட்சேபனையில்லை.

மேற்கொண்டு நானே உதவினால் இன்னும் குழப்பிவிடுவேன்.ஆகவே நன்றி.வணக்கம்.

ஆளுங்க
21-03-2011, 03:13 PM
கதையல்ல நிஜம் என்று நம்பி படித்த எனக்கு "நிஜமாலுமே இது ஒண்ணுமில்ல.. கத" என்று புரிய வைத்து விட்டீர்கள்...

நன்றி!!!:)

சுகந்தப்ரீதன்
31-03-2011, 09:48 AM
ஜார்ஜ் அண்ணா, இது கதையா? இல்ல கதையா..?! அது ஒன்னுமில்ல.. உங்க எழுத்துநடை இது நிசமா கதை-ன்னு நம்ப விடமாட்டேங்குது.. அதான் அப்பிடி கேட்கிறேன்..!!

எழுத்து மூலமாக எங்களுக்கெல்லாம் ஒரு படத்தை திரையிட்டு காட்டியிருக்கீங்க...?!:D நீங்க ஒரு நல்ல இயக்குனர்... வாழ்த்துக்கள்...!!:)