PDA

View Full Version : எண்ணத்திறவுகோல்



கீதம்
07-03-2011, 06:27 AM
எத்தனை எடுத்துச் சொல்லியும்
கட்டுப்படுத்த முடியவில்லை
என் எழுதுகோலை!

வாடிவாசல் திறக்கக் காத்திருக்கும் காளையென
மூவிரல்களுக்குக் கட்டுப்படாது
திமிறி வெளியேற்றுகிறது
உஷ்ணப்பெருமூச்சுகளென எழுத்துக்களை!

என்னுள் ஊடுருவிச் சென்று
எப்படியோ வழிகளை ஆராய்ந்து
என் மனவறைகளைக் கண்டுபிடித்துவிடுகிறது.

எழுதுகோல் திறவுகோலான விந்தைகண்டு
வியந்துநிற்கும் வேளையில் சட்டெனவெளியேறி
கக்கத்தொடங்குகிறது தன் கண்டுபிடிப்புகளை!

பகிர்வதா பதுக்குவதாவென
பலகாலமாய் சிந்தையுள் வளர்ந்திருக்கும்
தயக்கப்புற்று உடைத்து
என் தவங்கலைக்கிறது.

வளைந்தும் நெளிந்தும், சுழன்றும்,
நீண்டும், சரிந்தும், கிடந்தும்
பலவாறாய் தன் ஒற்றைக்காலைக்கொண்டு
வெற்றுத்தாளில் நர்த்தனமாடிப்
பதிக்கிறது தன் நீலச்சுவடுகளை!

சிலசமயங்களில் என் கரமறியாமலேயே
ஏராளக் கதைபேசத் துவங்கிவிடுகிறது,
என்னுதவியின்றி தனித்தியங்கவும்
தயாராகிவிடுமோவென்ற தவிப்போடு நான்...

இப்போதெல்லாம் எப்படி எங்கிருந்து
அதற்குத் தீனி கிடைக்கிறதென்றே தெரியவில்லை,
போதும் போதும் என்று கெஞ்சிடும்
விரல்களின் நோவறியாது
இன்னுங்கொஞ்சம் இன்னுங்கொஞ்சம் என்று
அடம்பிடித்தபடியே தொடர்கிறது
அதன் அட்டகாசத்தை
என் முரட்டுப் பேனாக்குழந்தை.

Nivas.T
07-03-2011, 06:51 AM
என்னுள் ஊடுருவிச் சென்று
எப்படியோ வழிகளை ஆராய்ந்து
என் மனவறைகளைக் கண்டுபிடித்துவிடுகிறது.


கவிங்கராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருந்துவிட்டால் நாம் தேடி பிடிக்க வேண்டிய அவசியமில்லை. சிந்தனை அதுவாக சிறகு விரித்து தன் இரையை தானே தேடிக்கொள்ளும்



பகிர்வதா பதுக்குவதாவென
பலகாலமாய் சிந்தையுள் வளர்ந்திருக்கும்
தயக்கப்புற்று உடைத்து
என் தவங்கலைக்கிறது.


இது அனைவர்க்கும் நிகழும் ஒன்று, கொடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் எழும்பி நிற்கும் போதெல்லம் சிந்தனை ஊற்று சிதைபடும். எதுவாக இருந்தாலென்ன சொல்லவந்ததை சொல். அப்பொழுதான் நீ படைப்பாளியாவை, படைப்புகள் முழுமைபடும்.



சிலசமயங்களில் என் கரமறியாமலேயே
ஏராளக் கதைபேசத் துவங்கிவிடுகிறது,
என்னுதவியின்றி தனித்தியங்கவும்
தயாராகிவிடுமோவென்ற தவிப்போடு நான்...


சிந்தனைகள் ஊற்றெடுக்க தொடங்கி விட்டால், பேனா முனை கதை பேசித்தான் ஆகும் கட்டுப்பாடுகளை களைந்து.

எண்ணத்திறவுகோல் ஏற்றிவைப்பது எழுதுகோலை

அழகு கவிதைங்க

மிக்க நன்றி

தாமரை
07-03-2011, 08:10 AM
வாய்-இலை திறந்தே வச்சிருக்கறதாலோ என்னவோ பேனா என்கிறத் திறவு கோல் அவசியமில்லாமலேயே போயிடுச்சு..

ஷீ-நிசி
07-03-2011, 04:33 PM
இது வரமல்லவா.... போதும் போதும்னு சொல்லும் வரைக்கும் வார்த்தைகளை பிரசவிப்பது...

கவிதைகளை வடிக்கும் தருணங்களையே கவிதையாய் வடித்திருப்பது அழகாகவே உள்ளது...

கீதம்
07-03-2011, 09:43 PM
கவிங்கராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருந்துவிட்டால் நாம் தேடி பிடிக்க வேண்டிய அவசியமில்லை. சிந்தனை அதுவாக சிறகு விரித்து தன் இரையை தானே தேடிக்கொள்ளும்

இது அனைவர்க்கும் நிகழும் ஒன்று, கொடுக்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் எழும்பி நிற்கும் போதெல்லம் சிந்தனை ஊற்று சிதைபடும். எதுவாக இருந்தாலென்ன சொல்லவந்ததை சொல். அப்பொழுதான் நீ படைப்பாளியாவை, படைப்புகள் முழுமைபடும்.

சிந்தனைகள் ஊற்றெடுக்க தொடங்கி விட்டால், பேனா முனை கதை பேசித்தான் ஆகும் கட்டுப்பாடுகளை களைந்து.

எண்ணத்திறவுகோல் ஏற்றிவைப்பது எழுதுகோலை

அழகு கவிதைங்க

மிக்க நன்றி

உங்களையும் நிறைய பேசவைத்துவிட்டதே என் பேனா. விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நிவாஸ்.

கீதம்
07-03-2011, 09:47 PM
வாய்-இலை திறந்தே வச்சிருக்கறதாலோ என்னவோ பேனா என்கிறத் திறவு கோல் அவசியமில்லாமலேயே போயிடுச்சு..

எனக்கு எண்ணத்திறவுகோலாய் வாய் இல்.
என் எழுதுகோலே எண்ணத்தின் வாயில்.

கீதம்
07-03-2011, 09:50 PM
இது வரமல்லவா.... போதும் போதும்னு சொல்லும் வரைக்கும் வார்த்தைகளை பிரசவிப்பது...

கவிதைகளை வடிக்கும் தருணங்களையே கவிதையாய் வடித்திருப்பது அழகாகவே உள்ளது...

மிக்க நன்றி ஷீ-நிசி. உங்கள் பின்னூட்டம் கண்டு என்னைப் பார்த்து கெக்கலி கொட்டி உற்சாகத்துடன் துள்ளுகிறது என் பேனா.

ஜானகி
08-03-2011, 02:15 AM
உண்மைதான்... சில சமயம், நாம் சொல்லவருவதை வார்த்தைகளாக வடிக்கும் போது, எங்கிருந்தோ ஒரு உத்வேகம் கிளம்புகிறது... நாம் தான் எழுதினோமா...என்றே கூட எண்ணத் தோன்றும் ! ஆழ்மன எண்ணங்கள் என்பது இவைகள் தானோ...? நமது வேறொரு முகத்தை நாமே காண்பது போல இருக்கும்...!

அக்னி
14-03-2011, 03:54 PM
எண்ணங்கள்
எழுதுகோல்களுக்குள்
பாய்ச்சப்படுகையில்
எழுத்தாளன் வெளிப்படுத்துகின்றான்...

எண்ணங்களை
எழுதுகோல்கள்
உறிஞ்சிக்கொள்கையில்
எழுத்தாளன் வெளிப்படுத்தப்படுகின்றான்...

அடங்காமலே திமிறட்டும் எழுதுகோல்...
கிளம்பும் புழுதிகள் புரட்சி செய்து, அடங்கிப் போகையில் புதுமை சொல்லும்...

கீதம்
14-03-2011, 11:39 PM
உண்மைதான்... சில சமயம், நாம் சொல்லவருவதை வார்த்தைகளாக வடிக்கும் போது, எங்கிருந்தோ ஒரு உத்வேகம் கிளம்புகிறது... நாம் தான் எழுதினோமா...என்றே கூட எண்ணத் தோன்றும் ! ஆழ்மன எண்ணங்கள் என்பது இவைகள் தானோ...? நமது வேறொரு முகத்தை நாமே காண்பது போல இருக்கும்...!

உண்மைதான், உங்களது பல பின்னூட்டங்கள் உங்கள் திறமையைச் சொல்லாமல் சொல்கின்றன. எழுத்தை வசப்படுத்தும் உங்கள் முயற்சியில் விரைவில் வெற்றி கிட்டட்டும்.

பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
14-03-2011, 11:49 PM
எண்ணங்கள்
எழுதுகோல்களுக்குள்
பாய்ச்சப்படுகையில்
எழுத்தாளன் வெளிப்படுத்துகின்றான்...

எண்ணங்களை
எழுதுகோல்கள்
உறிஞ்சிக்கொள்கையில்
எழுத்தாளன் வெளிப்படுத்தப்படுகின்றான்...

அடங்காமலே திமிறட்டும் எழுதுகோல்...
கிளம்பும் புழுதிகள் புரட்சி செய்து, அடங்கிப் போகையில் புதுமை சொல்லும்...

அநாயாசமான வரிகளோடு ஒரு அற்புதப் பின்னூட்டம். நன்றி அக்னி...
எழுதத் தூண்டும் பின்னூட்டத்துக்கு....

கௌதமன்
16-03-2011, 04:24 PM
அடிமைத்தளையை
அகற்றத் தேவையில்லை.

வினோதமாய் எண்ண வேண்டாம் தோழி!

திமிறிச் சிந்திய எழுத்துக்களுக்கு
எழுதுகோல் அடிமை
தயங்கி வெளிப்படாத எழுத்துக்கள்
எழுதுகோலுக்கு அடிமை


ஆதலினால்
அடிமைத்தளையை
அகற்றத் தேவையில்லை.

----------------------------------------------------

முதல்வரியை எண்ணம் தீர்மானித்தாலும்
இரண்டாம் வரிமுதல் எழுதுகோலே தீர்மானிக்கிறது
அதிசயம்
சாவியைத் திறக்கும் பூட்டாய் எழுத்து.

இனியும் தொடரலாம் என மனம் எண்ணும்போது
இத்துடன் முடிக்கிறேன் என்று
தீர்மானிக்கிறது எழுதுகோல்.

----------------------------------------------------

கீதத்தால் பாடப்படாத பாடுபொருள்
கண்டறிந்து பாடுவது சிரமம்தான் போலிருக்கிறது!

கீதம்
16-03-2011, 09:52 PM
அடிமைத்தளையை
அகற்றத் தேவையில்லை.

வினோதமாய் எண்ண வேண்டாம் தோழி!

திமிறிச் சிந்திய எழுத்துக்களுக்கு
எழுதுகோல் அடிமை
தயங்கி வெளிப்படாத எழுத்துக்கள்
எழுதுகோலுக்கு அடிமை


ஆதலினால்
அடிமைத்தளையை
அகற்றத் தேவையில்லை.

உத்வேகம் அளிக்கும் வார்த்தைகள்
உருவாயின கவிவரிகளென...
மனம் நிறைந்த நன்றி கெளதமன்.


முதல்வரியை எண்ணம் தீர்மானித்தாலும்
இரண்டாம் வரிமுதல் எழுதுகோலே தீர்மானிக்கிறது
அதிசயம்
சாவியைத் திறக்கும் பூட்டாய் எழுத்து.

இனியும் தொடரலாம் என மனம் எண்ணும்போது
இத்துடன் முடிக்கிறேன் என்று
தீர்மானிக்கிறது எழுதுகோல்.

பூட்டு ஒன்றே...
திறவுகோல்கள் மட்டுமே வேறுபடுகின்றன,
ஒவ்வொருமனதுக்கும்.


கீதத்தால் பாடப்படாத பாடுபொருள்
கண்டறிந்து பாடுவது சிரமம்தான் போலிருக்கிறது!

இது அதீதம் என்றாலும்
உங்கள் அன்பின் வெளிப்பாடென
அடையாளப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன்.:)