PDA

View Full Version : 100 முறை தோல்வி ஆனால்?



dhilipramki
01-02-2011, 07:20 AM
100 முறை தோல்வி ஆனால்?


பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை, பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை... போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர்.
மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர்.
குழந்தைகள் தங்களுடைய பிடிவாத குணத்தையும் விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இப்படி, பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக _ பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்.
எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில் அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.
உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.
எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில் ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.
எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்.
ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?
ஒரே நேரத்தில் நான் எந்த விசயத்தையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின் விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில் சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்-வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.
100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை.

விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்-களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலரே, குறிப்பிட்ட ஒரு பாடத்தைப் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப் பயிற்சி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு அறிவியல் என்றால் அலர்ஜி; கணக்கு என்றால் கசப்பு என்று கூறக் கூடாது.
எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு, கிராமபோன், ஒலிபெருக்கி, திரைப்படம் போன்றவற்றை-யெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, நீங்களும் திரும்பத் திரும்பப் படிப்பதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தலாமே!
வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்றால், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின் அரவணைப்பில் _ அன்பில் முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நீங்கள் எவ்வளவு சாதனைகளை நிகழ்த்த வேண்டும்? சிந்திப்பீர் !!


உங்கள் மனதை புண்படுத்தவில்லை என்று நினைக்கிறேன் ! நன்றி!!

ஆதி
01-02-2011, 07:48 AM
//**எச்சரிக்கை**முற்போக்கு சிந்தனை பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம் தோழர்களே**
//

இது தேவையற்ற வரி, நீக்கிவிடலாம், இந்த திரியில் முற்போக்கு சிந்தனை என்று எதுவுமில்லை...

பகிர்வுக்கு நன்றி...

உமாமீனா
01-02-2011, 07:57 AM
நல்ல சிந்தனை அறிவுரை (யார் கேட்பா? மில்லியன் டாலர் கேள்வி) பதிவுக்கு நன்றி




100 முறை தோல்வி ஆனால்?

**எச்சரிக்கை**முற்போக்கு சிந்தனை பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம் தோழர்களே**



இந்த சிவப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்கள் - இதுக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்??

dhilipramki
01-02-2011, 08:20 AM
சமீபத்தில் அறிவியல் என்று சொன்னாலே முர்ப்போக்க வாதியாகவும், மக்கள் குறைகளை தீர்க்கும் பக்கம் பேசினால் திரிபுவாதம் செய்பவராகவும் என்னை மன்றத் தோழர்கள் சிலர் பார்வைக்கு தெரிந்ததால் இதை வைக்கும் படி அறிவுரை வந்தது. அதனால். தேவையில்லை என்று நீங்கள் சொன்னதால் நீக்கி விடுகின்றேன் நன்றி:redface:

ஆதி
01-02-2011, 08:43 AM
திலீப் யாரும் உங்களை குற்றம் சாட்டவில்லை, நீங்கள் உங்கள் கருத்துக்களை முன்வைக்கு முறையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னோம்..

ஒரு செயலில் உள்ள தவறை பாங்காய் எடுத்து சொல்வதற்கு, பலித்து பேசுவதற்கு வித்யாசம் உண்டு, உங்களை பலித்து பேச வேண்டாம் என்றே சொன்னோம்...

முற்போற்கு கொள்கையை முற்போக்கோடு சொல்லுங்கள், முற்போக்கை பிற்போக்காய் சொல*ல் ம*ற*ங்க*ள்...

dhilipramki
01-02-2011, 01:59 PM
நன்றி, இனியவகையில் பதில் சொல்லியதற்கு மிக்க நன்றி ஆதன் அவர்களே:)

கௌதமன்
01-02-2011, 03:27 PM
நண்பர் திலீபுக்கு ஏற்கனவே சொன்னது தான். புதியதாக ஒன்றுமில்லை

சிந்தனைகள் சென்று சேர வேண்டும் அதுதானே முக்கியம்.

மற்றவர்களை உங்களின் பால் ஈர்க்காமல் நீங்கள் வெற்றி பெற முடியாது.

என் பேச்சைக் கேட்காதவன் முட்டாள் என்று சொல்லுவதால் மட்டும் எல்லாரையும் நம் பேச்சைக் கேட்க வைக்க முடியாது.

நீங்கள் சொல்ல வருவதை கொஞ்சம் நகைச்சுவையோடு, கடுஞ்சொற்கள் இல்லாது சொன்னால் (இந்தத் திரியைப் பற்றிச் சொல்லவில்லை, உங்களின் மற்றத் திரிகளின் மூலம் உங்களை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்) அது மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க முயலும். வீரியம் பெரிதல்ல காரியம் தான் பெரிது.

நன்றி!.

dhilipramki
01-02-2011, 03:45 PM
காரியம் புரியும் கலையயை அறிந்தேன் ; புரிய வைத்தற்கு நன்றி கௌதமன் அவர்களே :redface:

நாஞ்சில் த.க.ஜெய்
06-02-2011, 07:33 AM
ஒரு அருமையான படிப்பினை அறிய தந்த நண்பருக்கு என் வாழ்த்துகள் ..வெற்றிக்கு ஒரே வழி வெற்றி பெரும் வரை முயற்சிப்பது தான் என்ற எடிசனின் தத்துவம் அதற்க்கான விளக்கம் அருமை ...இதில் பதிவில் ஏதும் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை நண்பரே ..ஒரு கருத்தினை கூறும் பொது எதற்காக கூறுகிறோம் அது எவ்வாறு மற்றவர்களை சேருகிறது என்பதுதான் முக்கியம் அதனை கூறும் விதத்தினை இது போன்று அமைத்து கொண்டால் தவறுகள் நிகழாது ...இது போன்று பதிவுகளை தொடருங்கள் ....

அமரன்
06-02-2011, 06:22 PM
சிந்தனையைத் தூண்டும் பகிர்வு!

நன்றி திலீப்.

முடிவதை மட்டும் நினை என்ற இளசு அண்ணாவின் கவிதையும் ஞாபகத்துக்கு வருகிறது.