PDA

View Full Version : அவன் தானா இவன்?



கௌதமன்
29-01-2011, 06:49 PM
அவன் தானா இவன்?


[வெறும் நகைச்சுவையை மட்டும் கதையாகத் தராமல் கொஞ்சம் உணர்வு சம்பந்தமான கதையைத் தரச் சொல்லி நண்பர்கள் கேட்டதற்கிணங்க, என்னுடைய பழையக் கதைகள் போலில்லாமல் புது முயற்சி. கதை பிடித்திருந்தால் பாராட்டுகளை என் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் (ரூட்ட மாத்தி விட்டதுக்கு). பிடிக்கவில்லையென்றால் வசவுகளை நான் வாங்கிக்கொள்கிறேன் (என்ன அடிச்சாலும் தாங்குமில்ல).]


எழும்பூரில் புறப்படத் தயாராக இருந்தது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். நான் ராகவன். வயது நாற்பத்தி ஐந்து. தனியார் அலுவலகத்தில் வேலை. நாகர்கோயிலில் என்னுடைய நெருங்கிய உறவினருக்கு திருமணம். அதில் கலந்து கொள்ளப் போய்க் கொண்டிருக்கிறேன். கடைசி நேரத்தில் தான் எனக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆனது. அரக்கப் பரக்க ஓடி வந்து இப்போது எஸ்-8 கோச்சில் அமர்ந்து இருக்கிறேன். எனக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. சௌகரியக் குறைவாக இருந்தாலும் பொதுவாக அப்பர் பெர்த் எனக்குப் பிடித்தமான ஒன்று. மூன்று பெர்த் உள்ள கோச்சுகளில், ஏறி படுக்கும் அளவுக்கு உடல் வலு இடம் கொடுக்கும் வரை, அப்பர் பெர்த்தில் படுத்தபடி பயணம் செய்வது பரம சுகம். காலையில் பாதி உறக்கத்தில் இருக்கும் போது யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

நான் நல்ல கலகலப்பாகப் பழகக் கூடியவன் தான். கழிந்த சில வருடங்களாக நான் அப்படி இல்லை. எனக்கு வாழ்க்கையில் நடந்த ஒரு சோக நிகழ்ச்சிக்குப் பிறகு நான் இப்படி மாறி விட்டேன். கொண்டு வந்த சிறிய பையையும் அப்பர் பெர்த்தில் போட்டுவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரே உள்ள இருக்கையில் வயதான கணவன், மனைவி இருந்தார்கள். உடன் இருப்பது மகன் போலத் தெரியவில்லை, உறவினராக இருக்கலாம். சைடில் இருக்கும் இரண்டு பேரும் கணவன், மனைவிதான். நடுத்தர வயது இருக்கும். என்னிருக்கையின் அருகில் ஒரு முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி இருந்தார். வந்ததிலிருந்து செல்போனை கீழே வைக்கவில்லை. ஒன்று அவருக்கு அழைப்பு வரும் அல்லது அவர் யாரையாவது அழைத்துக் கொண்டிருந்தார். மலையாளமும் தமிழுமாக மாறி மாறி பேசிக் கொண்டிருந்தார். இன்னொருவரின் இடம் காலியாக இருந்தது. ஒருவேளை தாம்பரத்தில் ஏறுவாரோ என்னமோ.

ரயில் புறப்பட சிக்னல் கொடுத்து விட்டார்கள். வண்டியும் நகரத் தொடங்கியது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் வியர்க்க விறுவிறுக்க வந்து அருகில் வந்து அமர்ந்தான். ஓடி வந்திருக்க வேண்டும். நல்ல உயரம். பொது நிறம். பார்த்து சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன்.
நான் கேட்காமலேயே ‘டிராஃபிக் ஜாம்’ என்றான்.

‘அங்கிள் திருவனந்தபுரமா?’ வார்த்தையில் மலையாள வாசம் வீசியது.

‘இல்லை. நாகர்கோயில். நீ….நீங்க என்ன திருவனந்தபுரமா?’

‘அதே. நீங்க என்னை நீன்னே கூப்பிடலாம் அங்கிள். என் பெயர் கோபாலகிருஷ்ணன்’

எனக்கு ஏனோ அவனுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவனுடைய ஒவ்வொரு அசைவும் ஐந்து வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்த என்னுடைய மகனின் ஞாபகம் வந்தது. அவன் சிரிப்பது, அடிக்கடி முடியைக் கோதுவது, கண்களை சுருக்குவது எல்லாமே என் மகன் செய்வது போலவே இருந்தது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. என் மகன் இறக்கும் போது அவனுக்கு வயது பதினைந்து. இப்போது இருந்திருந்தால் இவன் வயது இருக்கும்.அவன் பெயரும் கோபால்தான். என்ன ஒரு பெயர் பொருத்தம். வளர்ந்து பைலட் ஆகவேண்டும் என்பது என் மகனுக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் ஒரு சாலை விபத்து எல்லாத்தையும் முடித்து வைத்து விட்டது.

‘திருவனந்தபுரத்தில் யார் இருக்கிறார்கள் கோபால்?’

‘எனக்கு சொந்த ஊர் திருவனந்தபுரம்தான். நான் இங்கு ஏரோனாட்டிகல் இஞ்சினியரிங் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன்.’

‘நன்றாக தமிழ் பேசுகிறாயே.’

‘திருவனந்தபுரத்தில் பலரும் தமிழ்ப்படங்கள் பார்ப்பார்கள், தமிழ் பேசுவார்கள். என்னுடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் தமிழ் ஆட்கள்தான். அதனால் தமிழ் ஆரம்பத்திலேயே கொஞ்சம் தெரியும். இப்போது மூன்று வருடங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் ஓரளவு பேசுவேன்.’

‘எனக்கு நாகர்கோயில்தான் சொந்த ஊர், சிறு வயதிலேயே சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். நாகர்கோயில் ஆட்களுக்கு மலையாளம் ஓரளவு பேசத் தெரியும்.’

‘நைட் சாப்பிட என்ன வைத்திருக்கிறீர்கள் நான் பிரட் வைத்திருக்கிறேன் உங்களுக்கு வேண்டுமா? அங்கிள்’

‘இல்லை வேண்டாம். நான் சப்பாத்தி வைத்திருக்கிறேன். எனது மனைவி வெளியே எதுவும் சாப்பிட அனுமதிப்பது இல்லை.’

சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்குவதற்கு தயாரானோம். பெண்மணி இன்னும் பேசி முடித்தப் பாடில்லை. நான் குட்நைட் சொல்லிவிட்டு அப்பர் பெர்த்தில் ஏறி படுத்து விட்டேன். அந்த இளைஞனுக்கு மிடில் பெர்த். அந்த பெண்மணி எழுந்தால் தான் மிடில் பெர்த் படுக்கையைத் தயார் செய்ய முடியும். லைட்டை அணைக்கலாமா என்று எதிர் பெர்த் வயதானவர் கேட்ட பிறகு ஒரு வழியாக அந்தப் பெண்மணியும் செல்லில் பேசி முடித்து, படுக்கத் தயாரானாள்.

தூக்கத்தில் எனக்கு என் மகன் நினைப்பாகவே இருந்தது. அவன் பேசியது, ஓடியது, மிதி வண்டி ஓட்டியது எல்லாம். என் கண் முன்பாக வந்து வந்து சென்றது. கனவில் அந்த இளைஞன் ’அப்பா’ அழைக்கும் போது முழிப்பு வந்ததது. திருநெல்வேலியில் ரயில் நின்று கொண்டிருந்தது. மெதுவாக இறங்கினேன். அந்த இளைஞனைக் காணவில்லை. அந்த பெண்மணி காலையிலேயே எழுந்திருந்து செல்பேசத் தொடங்கி விட்டாள். நான் போய் முகங்கழுவி பல் தேய்த்துக் கொண்டிருக்கும் போது ரயில் நகரத் தொடங்கியது. முகத்தைத் துடைத்து விட்டு இருக்கைக்கு வந்தேன். கையில் காபியோடு அவன் சிரித்துக் கொண்டே அவன் நின்று கொண்டிருந்தான்.

‘அங்கிள் இந்தாருங்கள் காபி’

‘உனக்கு’

‘நான் சாப்பிட்டு விட்டேன்’

இன்னும் ஒரு மணி நேரத்தில் நாகர்கோயில் வந்துவிடும். மேலிருந்த பையை எடுத்து வைத்துக் கொண்டேன். அவன் தன் சென்னையில் தனது கல்லூரி வாழ்க்கையைப் பற்றி நகைச்சுவையாக ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தான். மனம் அதில் லயிக்கவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாகர்கோயில் வந்தது. பையை எடுத்துக்கொண்டு ’ஸீ யூ கோபால், உன்னை சந்தித்தில் மகிழ்ச்சி’ அவனிடம் என்று சொல்லிவிட்டு ரயிலை விட்டு இறங்கி நடந்தேன். யாரோ என் பின்னால் நெருக்கமாக வந்தார்கள். திரும்பி பார்த்தேன் கோபாலகிருஷ்ணன் என்ற கோபால்.

‘என்ன கோபால்? என்ன விஷயம் ரயில் இங்கு நிறைய நேரம் நிற்காது.’

‘இல்லை அங்கிள் ஒரு விஷயம்.’

‘என்ன?’

‘உங்களைப் பார்த்தால் ஐந்து வருடத்துக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்த என் அப்பாவைப் போலவே உள்ளது.. இதைச் சொல்ல வேண்டும் போலிருந்தது அதனால் தான் நான் உங்கள் பின்னால் வந்தேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. சரி அங்கிள் ரயில் கிளம்பப் போகிறது நான் வருகிறேன்.’

அதிர்ந்து போய் நின்றேன். உள்ளுணர்வு ஏதோ சொல்ல ‘உன் அப்பாவின் பெயர் என்ன?’ என்று போய்க்கொண்டிருந்தவனிடம் கேட்டேன்.

ரயிலில் ஏறியபடியே அவன் திரும்பிச் சொன்னான். ’ராகவன்’

ஜனகன்
29-01-2011, 08:42 PM
உங்கள் கதாபாத்திரங்களின் மன பிரதிபலிப்பு அருமை.

கொஞ்சம் கனமான கதையை ரொம்ப ஈசியா நகைச்சுவையுடன் அருமையா எழுதியிருக்கீங்க.

எல்லா வித கதைகளும் எழுத முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள் கெளதமன்.

தொடரட்டும் உங்கள் எழுத்துலகப் பணி.

கீதம்
29-01-2011, 09:52 PM
திடுக்கிடவைத்த திருப்பம். கதையைப் படித்துவிட்டு என்ன சொல்வதென்றே புரியவில்லை. பாதிக்கப்பட்டவரின் மனதில் பீறிட்டு எழும் வலியை வாசிப்பவரும் உணரமுடிகிறது. தேர்ச்சியான எழுத்துநடையில் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.

பாராட்டுகள் கெளதமன்.

Hega
29-01-2011, 09:58 PM
அருமையான கதை

பாராட்டுக்கள் கௌதமன்

பாரதி
29-01-2011, 10:23 PM
...!

கதையின் இறுதிக்காகவே பாராட்டலாம்.:aktion033:

மதி
30-01-2011, 01:06 AM
அழகான நடையில் செம்மையான கதை. கதையோட்டமும் விவரணைகளும் அருமை..!! இறுதியில் முடித்தவிதம் நன்றாக இருந்தது.

நிறைய எழுதுங்கள் சார்..!! பாராட்டுக்கள்!

ஜானகி
30-01-2011, 01:16 AM
அருமை... ! வெகுநாட்கள் பழகின ரூட்டில் போவதுபோலத்தான் இருக்கிறது சரளமான உங்கள் நடை... தொடருங்கள்.

நிஜ வாழ்விலும் இந்தமாதிரி நடக்குமா...?

கௌதமன்
30-01-2011, 04:05 AM
இது ஒரு முற்றிலும் கற்பனையான கதைதான்.

கடைசி வரியில் சாகசம் (திடீர் திருப்பம்) காட்டுவதை என் யுத்தியாக (ஒரு பாணியை உருவாக்க வெண்டுமல்லவா) வைத்திருக்கிறேன். அப்படிச் செய்வது பழகிப் போய்விட்டது. பெரும்பாலும் ’இப்படி இருந்தால்’ என்று கடைசி நிகழ்வை கற்பனையாக சிந்தித்து அல்லது ஏதாவது சமபவங்கள், பத்திரிக்கைத் துணுக்குகளிலிருந்து எடுத்துக்கொண்டு , பின் அதற்கேற்ப பொருத்தமான முன் சம்பவங்களைத் தொகுக்கிறேன். இயல்பானதாக இருக்கும் பொருட்டு நிஜ சூழ்நிலைகளை விவரணையில் கொண்டு வர முயல்கிறேன். சில சமயங்களில் விவரணைகள் நன்றாக அமைந்து விடுகிறது (எடுத்துக் காட்டாக என் மற்றொருத் திரியில் நண்பர் கீதம் சுட்டிக் காட்டிய ‘ ஓ, நல்லாப் பார்த்தேனே’ என்ற கதையில் வரும் விவரணைகள்)

இப்படி நிஜத்திலும் நடக்குமாவென்று நண்பர் ஜானகி கேட்கிறார். இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடும். நடந்திருக்கிறது.

பின்னூட்டமிட்ட ஜனகன், கீதம், ஹேகா (கொஞ்ச நாள் விடுப்புல இருந்தீங்களோ?), பாரதி, மதி, ஜானகி அனைவருக்கும் நன்றி.

dellas
30-01-2011, 09:50 AM
உண்மைதான் கெளதம். நிகழ்வுகளின் தாக்கம் நம்மை பாதித்த பின்பே நாம் கடந்து வந்ததை சரிபார்கிறோம். பாராட்டுக்கள்.

கௌதமன்
30-01-2011, 05:14 PM
உண்மைதான் கெளதம். நிகழ்வுகளின் தாக்கம் நம்மை பாதித்த பின்பே நாம் கடந்து வந்ததை சரிபார்கிறோம். பாராட்டுக்கள்.

நாம் சில மனிதர்களை வெளியிடங்களில் பார்க்கும் போது அவரது தோற்றமோ அல்லது அவரது நடவடிக்கைகளோ நமக்கு நெருங்கிய யாரையாவது நினைவு படுத்தலாம். அப்படிப்பட்ட சில மனிதர்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். இதே போன்ற கருத்தை நம்மைக் காணும் போது அந்த மனிதர்களும் கொண்டிருக்கலாம். அப்படி அமைந்த கதாபாத்திரங்கள் தான் ராகவனும் கோபால கிருஷ்ணனும்.ஆனால் இவர்கள் முற்றிலும் கற்பனையான கதாபாத்திரங்கள். சக பயணியாக வந்த ஓயாமல் செல்போன் பேசும் பெண்மணி, வயதான கணவன், மனைவி ஆகியோர் நிஜத்தில் நான் பார்த்த மனிதர்கள். நீங்களும் பாத்திருக்கலாம்.

ஆளுங்க
01-02-2011, 10:25 AM
மிக அருமை...

முடிவில் பிரமாதப்படுத்தி இருக்கிறீர்கள்!!

sarcharan
10-02-2011, 11:27 AM
மிக அருமை...

நிஜ வாழ்விலும் சில நேரங்களில் இது போன்ற கோ-இன்சிடென்ட் நிகழ்ச்சிகள் நிகழ்வதுண்டு. சொன்னால் பெரும்பாலும் நம்பமாட்டார்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
11-02-2011, 05:03 PM
முதலில் இந்த கதையினை நான் காணவில்லை இன்று அதை காண்கையில் நிஜத்தில் நிகழும் நிகழ்வாக ...வாழ்த்துகள் நண்பரே!

அமரன்
12-02-2011, 11:41 AM
கதைகளைப் பொறுத்தவரை நான் முதலில் படிப்பது விமர்சனங்களை. அந்த வகையில் இந்தக் கதையின் விமர்சனங்கள் கௌதமன் பாதை மாறியதைக் காட்டுகின்றன. கதையைக் கட்டாயம் படி என்கின்றன.

கௌதமன்
12-02-2011, 12:18 PM
கதைகளைப் பொறுத்தவரை நான் முதலில் படிப்பது விமர்சனங்களை. அந்த வகையில் இந்தக் கதையின் விமர்சனங்கள் கௌதமன் பாதை மாறியதைக் காட்டுகின்றன. கதையைக் கட்டாயம் படி என்கின்றன.

ஆனா இன்னும் படிக்கலை..? :confused:

கௌதமன்
12-02-2011, 12:20 PM
கதைகளைப் பொறுத்தவரை நான் முதலில் படிப்பது விமர்சனங்களை. அந்த வகையில் இந்தக் கதையின் விமர்சனங்கள் கௌதமன் பாதை மாறியதைக் காட்டுகின்றன. கதையைக் கட்டாயம் படி என்கின்றன.

ஆனா இன்னும் கதையைப் படிக்கலை..? :confused:

Nivas.T
12-02-2011, 03:36 PM
நல்ல கதை, எளிமையாய் தொடங்கி அழகாக முடித்துள்ளீர்கள். அழகான கற்பனை, "அன்பே சிவம்" படத்தில் வரும் "என்ன மாதிரியான டிசைன் இது?" என்னும் மாதவன் வசனத்தை கேட்கத் தோன்றும் உணர்வின் தொடர்புடையது. உள்ளுணர்வின் வலிமையை உணர்த்தும் இதுபோன்ற சம்பவங்கள் மிக அரிது, அதை கற்பனையில் படைத்து, கதையோட்டமாய் வடித்து, இறுதி வரியில் திருப்பம் கொடுத்து முடிப்பது எளிதல்ல, பாராட்டுக்கள் கௌதமன்:icon_b: