PDA

View Full Version : காய்க்காத மரம்



கீதம்
02-01-2011, 08:57 AM
பால்கனியில் எட்டிப்பார்த்த தென்னங்கீற்றின் மேலேறியும் இறங்கியும் சரசரவென்று ஓடிவிளையாடிய அணில்களைப் பார்த்தவுடன் சோர்ந்திருந்த மனதுக்குள் உற்சாகம் தொற்றிக்கொண்டது. மைதிலி சத்தமின்றி சன்னலோரம் வந்து அவற்றை வேடிக்கை பார்க்கலானாள்.

தினமும் பார்க்கும் காட்சிதான் என்றாலும் இன்றும் பார்க்கத் தோன்றியது. குழந்தைகளின் குதூகலத்தைப்போல் ஒவ்வொருநாளும் சலிக்காமல் என்னமாய் விளையாடுதுகள்? காதலுடன் ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடும் அழகே அழகு. முன்னால் ஓடிய மல்லி சற்றே நின்று பின்னால் வரும் மாதுவைப் பார்த்தது. ஆமாம், மைதிலி அந்த அணிற்சோடிக்கு அப்படிதான் பெயரிட்டிருந்தாள்.

சம்பத்திடம் சொன்னபோது அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. வீடே அதிரும்படி ஓஹோவென்று சிரித்தான். அப்படியே சிரித்துவிட்டுப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை. கீழே ஓடிப்போய் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்ல... வேலைக்காரி சுப்பு உட்பட எல்லோரும் அவளைக் கேலியாகப் பார்த்து சிரித்தபோதுதான் வெட்கம் பிடுங்கித் தின்றது.

சே! என்ன மனுஷன் இவன்? பெண்டாட்டி கிசுகிசுப்பாய் சொன்னதை இப்படியா பகிரங்கப்படுத்தி கேலி செய்வது? கயிறுகளுக்குப் பெயரிட்ட பாரதியைக் கேள்விகேட்பாரில்லை. அணிற்குஞ்சுகளுக்குப் பெயரிட்ட என்னைக் கேலி பேசுகிறார்கள். ஹும்!

மனதுக்குள் மருகிக்கொண்டிருந்தபோது அத்தையின் பேச்சு வெடுக்கென்று அவள் மானத்தைப் பறித்துக் காற்றில் பறக்கவிட்டது.

"ஆமாம், ஒரு புள்ளயப் பெத்து பேருவைக்கத் துப்பில்ல... அணிப்புள்ளக்குப் பேர் வைக்கிறாளாமா?"

சுருக்கென்று தைத்தது. தைக்கட்டும் என்றுதான் பேசியிருப்பாள் என்பதும் புரிந்தது.

சம்பத்தைத் தேட அவன் யாருடனோ வாசலில் பேசும் குரல் கேட்டது. சற்று நேரத்தில் உள்ளே வந்தவன்,

"அப்பா... நாடார் வந்தாரு. மரத்தயெல்லாம் பாத்தாராம். அடுத்தவாரம் வந்து ஒரம் வச்சிட்டுப் போறேன்னாரு... எவ்வளவு ஆவும்னேன். அம்மாவுக்குத் தெரியும்னுட்டாரு... நீங்களே பாத்துப் பேசிக்கோங்க..."

"சம்பத்து... அவருகிட்ட இந்த மூணாந்தென்ன மரம் பத்திக் கேட்டியாடா?"

"இல்லயே, என்னப்பா கேக்கணும்?"

"என்னடா இப்படிக் கேக்குறே? மூணு வருஷத்துல காய்க்கும்னு வச்சது. கூடவச்ச மரமெல்லாம் காச்சிக் குலுங்குது. இதுமட்டும் இன்னமும் கன்னி கழியாத புதுப்பொண்ணாட்டம் அப்படியே நிக்கிது. சனியன் புடிச்சதை வெட்டிட்டு புதுசு நட்டிருந்தாக்கூட இந்நேரம் பாளை கட்டியிருக்கும். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாம இப்படி வெட்டியா நிக்கிது!"

அத்தை தென்னை பற்றிப் பேசுகிறாளா? தன்னைப் பற்றிப் பேசுகிறாளா? மைதிலி குழப்பத்துடன் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். அரிந்த காய்கறிகளை எடுத்துப்போகவந்த சுப்பு, மைதிலியின் கண்ணீரின் காரணம் வெங்காயமா? மனக்காயமா? என்றறிய அவள் முகத்தையே பார்த்தாள்.

வேலைக்காரியின் பரிதாபப்பார்வையைப் புறந்தள்ளி தன் வேலையைத் தொடர்ந்தாள். மைதிலி வேறென்ன செய்வாள்?

அம்மா சொன்னாள், 'நம்ம வம்சத்துக்கு எழுதிவச்ச விதி இதுதான் போல டீ.... எல்லாருக்கும் லேட்டாதான் புள்ள உண்டாவுது. ஆனா ஒருத்தருக்கும் புள்ள இல்லாமப் போவல... உன் சித்தி மவ ரேவதிக்கு ஏழு வருஷம் கழிச்சுதான் தரிச்சிது... பாண்டுவுக்கு ஆறு வருஷம்... ஏன் ... நம்ம பெரியாத்தா பேரனுக்கு........"

உடனடியாய்ப் பிள்ளை உண்டானவர்களை கவனமாய்த் தவிர்த்து அங்குமிங்குமான உதாரணங்களைத் தேடிப்பிடித்துக் காட்டி அவளுக்கு ஆறுதல் சொன்னாள் . மைதிலிக்கும் ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது? அதற்காக இல்லாததை நினைத்து ஏங்கியே இருக்கிற வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்வதா?

அத்தைதானே, பேசினால் பேசட்டும், பாவம் ஒரே மகன், அவன் வாரிசைப் பார்க்க அவர்களுக்கும் ஏக்கம் இருக்காதா? பேரப்பிள்ளையை மடியில் போட்டுக் கொஞ்சி விளையாட ஆசை இருக்காதா?

மனதைத் தேற்றிக்கொண்டிருந்தவேளையில்தான் அத்தை அந்த திடுக்கிடும் யோசனையை முன்வைத்தாள்.

"ஏன்டா சம்பத்து... இந்த சனியன்புடிச்சதை வெட்டியெறிஞ்சிட்டா என்ன?"

"எந்த சனியனைம்மா?"

"ம்? பூவும் வைக்காம காயும் வைக்காம வெட்டியா நிக்குதே ஒண்ணு. தண்ணிக்கும் ஒரத்துக்கும் புடிச்ச கேடு! அததான்!".

"ஆத்தீ.... அடுக்குமா இது?" சுப்பு அதிர்ச்சியுடன் மேவாயில் கைவைத்துக் கேட்டாள்.

"டீ... நீ சும்மா இரு! எல்லாத்துக்கும் ஏடாகூடமா எதுனாச்சும் சொல்லிகிட்டு!" அத்தை அவளை அடக்கினாள்.

"எத்தன வருசமா பாத்தாச்சி? வெட்டிடவேண்டியதுதான். அடுத்தவாரம் நாடார் வரும்போது சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன்!"அத்தை முடிவெடுத்துவிட்டாள்.

தென்னைமரத்தை வெட்டவேண்டாமென்று எத்தனைக் கெஞ்சியும் பயனில்லை. மலட்டு மரத்துக்கு சிபாரிசு என்னவென்று ஆயிரம் குத்தல்பேச்சுகளைத் தவிர வேறெந்த எதிர்வினையும் உண்டாகவில்லை


மைதிலிக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. நள்ளிரவில் சன்னலருகில் நின்று தென்னங்கீற்றிடுக்கில் கண்ணாமூச்சியாடும் நிலவினைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். மனம் தன்னிச்சையாய்ப் பிதற்றத் தொடங்கியிருந்தது.

காய்ப்பற்றத் தென்னையே!
காய் பற்றாக்காரணத்தால்
காப்பாற்ற ஆளின்றிப்போனாயோ?
காத்திருந்து காத்திருந்து
கண் பூத்தது, தென் பூக்கவில்லையென்றே
காரணம் சொல்லி வேரொடு வீழ்த்த
காலக்கெடு குறித்துவிட்டார்!

எத்தனை உரமிட்டாயிற்று,
எத்தனைக் களையெடுத்தாயிற்று,
எத்தனை வருடமாயிற்று,
எத்தன் இவனை விடுவதாவென்று
எத்தனை முஸ்தீபுகள்?

சொரணை கெட்ட மரமே!
சட்டென்று பாளை வையேன்
எரிகின்ற வயிற்றில் பாலை வாரேன் ,
என்னோடு உறவாடிய நீ
வேரற்று சாய்வதை
விழிகொண்டு காண இயலுமோ?

இரங்கும் அதேவேளையில்
இதயத்துள் ஒரு குறுகுறுப்பு!
இதைப்போலவே எனக்கும்
உறவறுக்கும் தேதியொன்று
உறுதியாகக் குறிக்கப்படுமோ?

பால்கனிக் கதவைத் திறந்து வெளியில் வந்தாள். சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. தென்னங்கீற்று சடசடப்புடன் மேல்ல அவள் தோளை உரசியகன்றது. அகன்றதை எட்டிப்பிடித்துக்கொண்டு கன்னத்துடன் உரசியபடியே கண்மூடி அதன் முரட்டு ஸ்பரிசத்தை அனுபவித்தாள்.

திருமணமாகி வந்த இந்த நான்கு வருஷமாய் தன்னுடன் உறவாடிய மரம்! தேனிலவு அனுபவித்த காலங்களில் சம்பத் தன்னிடம் செய்த குறும்புகளை அக்கம்பக்கம் அறியாமல் மறைத்து அந்தரங்கம் காப்பாற்றிய மரம். இப்போது வளர்ந்துவிட்டது, என்றாலும் இன்னமும் கீற்றுகளைத் தவழவிட்டு தன் தோள் தடவி ஆறுதல் தந்துகொண்டிருக்கும் மரம்..

வீட்டைச் சுற்றிலும் ஏழு தென்னைகள் இருந்தாலும் இந்தமரம் மட்டும்தான் இவள் தொட்டுப்பேச இடங்கொடுத்த மரம். பக்கத்துவீட்டைப் பார்த்தாற்போலிருந்த இவர்களது அறையின் பால்கனியை ஒட்டி வளர்ந்திருந்த அம்மரத்தை மூணாம் மரம் என்றுதான் குறிப்பிடுவர். கொஞ்சநாளாய் இரண்டு அணிற்சோடிகளின் வருகையும் அதிகரிக்க, மைதிலிக்கு ஒவ்வொருநாளும் ஓய்வுப்பொழுதில் தன்னறைக்குவந்து அவற்றை ரசிப்பதே வாடிக்கையாயிற்று. அந்த அணில்களைப் பார்க்கும்போது தானும் சம்பத்தும் சந்தோஷமாய்க் கழித்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

இரண்டும் இவளைக் கண்டால் முதலில் பயந்து ஓடிக்கொண்டிருந்தன. இப்போது இவளை அவ்வளவாய் லட்சியம் செய்வதே இல்லை. இரண்டும் குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டன. கூடு கட்டுவதில் இரண்டும் பிஸி. எப்போது பார்த்தாலும் பஞ்சு, தேங்காய் நார் எதையாவது வாயில் வைத்துக்கொண்டுமரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தவற்றை.....

ஐயோ..... இப்போதுதான் மைதிலிக்கு ஞாபகம் வந்தது. அடக்கடவுளே! இரண்டும் இந்த மரத்தில்தானே கூடு கட்டின? மரத்தை வெட்டிவிட்டால் அவற்றின் கதி? கூடு கட்டிமுடித்து குட்டிகள் ஈன்றிருக்குமா? என்ன செய்வது இப்போது? நினைக்கவே நெஞ்சம் பதறியது.

காலையில் சம்பத்திடம் மெல்ல பேச்சைத் துவக்கினாள்.

"ஏங்க, இந்த மூணாம்மரத்தை வெட்டுறதை அத்தைகிட்ட சொல்லி கொஞ்சநாள் தள்ளிவைக்க முடியுமா?"

"ஏன்?"

"இல்ல.... அந்த மரத்திலதான் அணிப்பிள்ளைங்க கூடு கட்டுது. அதான்..."

"அதனால என்ன?"

அதனால் என்னவா? இப்படிக் கேட்பவனிடம் எப்படிச் சொல்வது?

"குட்டி போட்டிருக்கும்னு நினைக்கிறேன். அணில்கூட்டைக் கலைச்சி அதோட புள்ளைங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா அப்புறம் அந்தத் தாய் படற வேதனையைப் பாக்க என்னால் முடியாதுங்க. கொஞ்சநாளானா அதுங்க வளர்ந்து வெளியில போயிடும். அப்புறமா...."

"மைதிலி, இதை எப்படி அம்மாகிட்ட சொல்லமுடியும்? எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணி ஆளுக்கு சொல்லிவிட்டாச்சி. இப்ப போய் சொன்னா.... அம்மா கடுப்பாயிடுவாங்க, அதுவுமில்லாம அதைச் சொல்றதுக்கும் ஒரு தகுதி வேணாமா?”

"என்ன தகுதி வேணும்?"

சம்பத் மெளனமாயிருந்தான்.

"சொல்லுங்க, என்ன தகுதி வேணும்? ஒரு மனுஷியா இருக்கிறேனே, இது பத்தாதா? பிள்ளை பெத்திருந்தாதான் தாய்மை பத்தி தெரியுமா? இல்ல.. தாய்மை பத்திப் பேச அருகதை இருக்கா? என்ன சொல்லவரீங்க?"

பதில் சொல்லாமல் விடுவிடுவென்று மாடிப்படிகளில் இறங்கிப்போனவனின் பின்னாலேயே மைதிலியும் விரைந்தாள்.

“ஏய், காலையிலேயே என்ன அவன்கிட்ட நச்சரிப்பு?"

சாமியே வந்து கேட்கும்போது இடையில் பூசாரியிடம் என்ன கெஞ்சல்?

"அத்தே... தென்னமரத்தை ஒரு பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு வெட்டச் சொல்லமுடியுமா?"

"அதுக்குள்ள அந்தமரம் என்னத்தைக் கிழிக்கப்போவுது?"

"அத்தே.... அந்த மரத்தில அணில் கூடு கட்டியிருக்கு... அது..."

"ஏண்டி, ஒரு புள்ளய தக்கவைக்கத் துப்பில்ல, அணிப்புள்ளைக்கும் தென்னம்புள்ளைக்கும் வக்காலத்து வாங்குறே?"

"நல்லாக் கேளும்மா, இதைத்தான் நானும் சொன்னேன்."

கோடரி தென்னையை வீழ்த்துமுன் வார்த்தைகள் இவளை வீழ்த்தின. அத்தையிடமிருந்து அடிக்கடி வெளிப்பட்டு முனை மழுங்கியிருந்த பழிபேசும் ரம்பத்தைவிடவும் சம்பத்திடமிருந்து புதிதாகப் புறப்பட்ட நன்கு கூர்தீட்டப்பட்ட வார்த்தைக்கோடரி அவளது எதிர்கால நம்பிக்கையை ஒரே வெட்டில் துண்டாக்கியது. இத்தனைநாள் எங்கு மறைத்துவைத்திருந்தான் இவ்வாயுதத்தை? எப்போது சாணைபிடித்தான்? தக்க சமயம் பார்த்து உபயோகித்துவிட்டானே!

மைதிலி நிலைகுலைந்துபோனாள். பித்துப்பிடித்தவள்போல் வளையவந்தவளைத் தேற்றவும் ஆளில்லை.

வீம்புக்காகவே வேலைகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமாய் நடைபெற்றன. பக்கத்துவீட்டுப் பக்கம் சாய்ந்துவிடாமல் மரம் உள்நோக்கி இழுத்துக்கட்டப்பட்டது. மல்லியும் மாதுவும் தங்கள் எதிர்ப்பையும் பயத்தையும் காட்ட உச்சஸ்தாயியில் கத்திக் கூப்பாடிட்டுக் கொண்டிருந்தன. உதவிக்கு இவளை அழைக்கின்றனவோ?

மைதிலி அறைக்குள் முடங்கிப்போயிருந்தாள். அடிவயிற்றுக்குள் ஒரு பிரளயமே உருவாகிக்கொண்டிருந்தது. ஐயோ... மல்லி! சும்மா இரேன்! என்னால் தாங்கமுடியவில்லையே.... மாது.... ஏண்டா என்னைப் படுத்தறே!

மட்டேர் மட்டேர் என்று கோடரிச் சத்தம் மரத்துடன் இவள் இதயத்தையும் சேர்த்தே பிளந்தது.

சடசடவென்ற சத்தத்துடன் முறிந்து விழுந்தது மரம்.

"எம்மா... அணிப்புள்ள கூடு கட்டியிருந்திருக்கும்மா... அடப்பாவமே... கண்ணுமுளிக்காத குஞ்சுங்க. எல்லாம் கூட்டோட நசுங்கிச் செத்தே போச்சுங்க... முன்னாடியே தெரிஞ்சிருந்தா... கூட்ட அப்புறப்படுத்தியிருக்கலாம்....த்சோ….த்சோ... "

மரத்தை வெட்டியவன் உச்சுக் கொட்டினான்.

"அது கெடக்கு, ஓரமாத் தூக்கிப் போட்டுட்டு வேலையைப் பாருப்பா..." சம்பத்தின் குரல் அதிகாரமாய் ஒலித்தது.

பால்கனிக் கதவைத் திறந்து பதைப்புடன் எட்டிப்பார்த்தாள் மைதிலி.

தென்னை தலை கொய்யப்பட்டும் உடல் துண்டுகளாக்கப்பட்டும் ஒரு போர்க்களத்து வீரனைப் போல் சிதறிய அங்கங்களுடன் ஆங்காங்கே கிடந்தது. பஞ்சுப்பொதிபோல் கிடந்த அணிற்கூட்டை காக்கைகள் முற்றுகையிட்டிருந்தன. மல்லியையும் மாதுவையும் தேடினாள் மைதிலி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றைக் காணவே இல்லை.

அவள் மனம் கொண்ட வெறுமையை பால்கனி பிரதிபலித்துக்கொண்டிருந்தது.

சிவா.ஜி
02-01-2011, 11:35 AM
காய்க்காதவளுக்குத்தான் அந்த வலியை உணரமுடியும். ரொம்ப சுலபமாக பெண்னைக் குற்றம் சொல்லிவிடுகிறார்கள். அவளுக்கு மட்டுமா குறையிருக்கும்.

காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி படும் ஆனால் இங்கே காய்க்காத மரத்துக்கு சொல்லடி. பெண்ணே பெண்ணுக்கு எதிரியானால்....துணை நிறக வேண்டியவனே இணையை இம்சித்தால்....பாவம் அந்த மனம்.

கதையும், கவிதையும் மிக அருமை. தங்கையின் எழுத்து வண்ணத்தில் இன்னுமொரு மனதைப் பிழியும் கதை.

வாழ்த்துக்கள்ம்மா.

இணைய நண்பன்
02-01-2011, 08:11 PM
அழகான கதை.மைதிலியின் பிரச்சினையை அணிலின் வாழ்க்கை- தென்னை மரத்தின் நிலை என்பவற்றின் மூலம் அழகிய எழுத்து நடையில் கூறிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

Hega
02-01-2011, 08:27 PM
காய்க்காத தென்னைமரத்தோடு மைதிலின் நிலையை ஒப்பிட்டு கூடவே அணில் குஞ்சுகளின் வாழ்வையும் பிணைத்து எழுதியகதையைபடிக்கும் போதே மனதின் இனம்புரியாத வலியுணர்வை தவிர்க்கவியலவில்லை

காய்க்காத மரத்தில் கூடு கட்டியதால் அணில் குஞ்சுகளின் வாழ்வுக்கு ஏற்பட்ட முடிவ்ழ் மனித மனதின் அரக்கதனத்தின் வெளிப்பாடாயானதே..

எதிர்காலத்தில் மைதிலிக்கும் இந் நிலைதானோ ...

வாழ்த்துக்கள் அக்கா

ஜனகன்
02-01-2011, 10:04 PM
கதை சூப்பர்... உங்கள் கற்பனை வளத்துக்கு ஒரு சல்யூட்.

மனதை நெகிழ வைக்கும் கதையை எழுதியிருக்கின்றீர்கள். மைதிலியின் நிலைமையை, அணிலின் வாழ்க்கை & தென்னை மரத்தின் நிலை களுடன் ஒப்பிட்டு சொல்லிய விதம் அருமை.

கதைக் கேற்ற நல்ல அருமையான கவிதை கொடுத்துள்ளீர்கள்.

அருமையான கதையை எழுதியிருக்கும் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் கீதம்.

கீதம்
03-01-2011, 01:50 AM
காய்க்காதவளுக்குத்தான் அந்த வலியை உணரமுடியும். ரொம்ப சுலபமாக பெண்னைக் குற்றம் சொல்லிவிடுகிறார்கள். அவளுக்கு மட்டுமா குறையிருக்கும்.

காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி படும் ஆனால் இங்கே காய்க்காத மரத்துக்கு சொல்லடி. பெண்ணே பெண்ணுக்கு எதிரியானால்....துணை நிறக வேண்டியவனே இணையை இம்சித்தால்....பாவம் அந்த மனம்.

கதையும், கவிதையும் மிக அருமை. தங்கையின் எழுத்து வண்ணத்தில் இன்னுமொரு மனதைப் பிழியும் கதை.

வாழ்த்துக்கள்ம்மா.

உங்கள் விமர்சனத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா. முதல் பின்னூட்டமே உங்களிடமிருந்து வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

கீதம்
03-01-2011, 01:52 AM
அழகான கதை.மைதிலியின் பிரச்சினையை அணிலின் வாழ்க்கை- தென்னை மரத்தின் நிலை என்பவற்றின் மூலம் அழகிய எழுத்து நடையில் கூறிவிட்டீர்கள்.வாழ்ந்த்துக்கள்.

கதையை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி இணையநண்பன் அவர்களே.

கீதம்
03-01-2011, 01:54 AM
காய்க்காத தென்னைமரத்தோடு மைதிலின் நிலையை ஒப்பிட்டு கூடவே அணில் குஞ்சுகளின் வாழ்வையும் பிணைத்து எழுதியகதையைபடிக்கும் போதே மனதின் இனம்புரியாத வலியுணர்வை தவிர்க்கவியலவில்லை

காய்க்காத மரத்தில் கூடு கட்டியதால் அணில் குஞ்சுகளின் வாழ்வுக்கு ஏற்பட்ட முடிவ்ழ் மனித மனதின் அரக்கதனத்தின் வெளிப்பாடாயானதே..

எதிர்காலத்தில் மைதிலிக்கும் இந் நிலைதானோ ...

வாழ்த்துக்கள் அக்கா

விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி Hega.

கீதம்
03-01-2011, 01:56 AM
கதை சூப்பர்... உங்கள் கற்பனை வளத்துக்கு ஒரு சல்யூட்.

மனதை நெகிழ வைக்கும் கதையை எழுதியிருக்கின்றீர்கள். மைதிலியின் நிலைமையை, அணிலின் வாழ்க்கை & தென்னை மரத்தின் நிலை களுடன் ஒப்பிட்டு சொல்லிய விதம் அருமை.

கதைக் கேற்ற நல்ல அருமையான கவிதை கொடுத்துள்ளீர்கள்.

அருமையான கதையை எழுதியிருக்கும் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் கீதம்.

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜனகன்.

மதி
03-01-2011, 02:52 AM
வழக்கமான பாணியில் மனத்தை கணக்கா வைக்கும் கதை.. காய்க்காத மரம் - பேரைப் பார்த்தவுடனே என்ன கரு என்பது விளங்கிற்று. மற்றபடி உள்ளக்கூக்குரல்களை வார்த்தைகளாய் வடிப்பதில் எப்போதும் போல் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்.. !

M.Jagadeesan
03-01-2011, 03:09 AM
கதையின் முடிவை
காய்க்காத தென்னைமரம் பாளை விட்டதுபோலவும் அது
மைதிலியின் வயிற்றில் பாலை விட்டதுபோலவும் அதனால்
அணிலின் கூடு காப்பாற்றப்பட்டது போலவும் காட்டியிருந்தால்
வாசகர்களின் கண்களும் காப்பாற்றப் பட்டிருக்கும்!

ஜானகி
03-01-2011, 03:47 AM
அணிலைக் காப்பற்ற மேனகா காந்தியைக் கூப்பிடலாம் !

பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகும்போது, யாரைக் கூப்பிடுவது... மன்சாட்சியிடம் தான் முறையிடவேண்டும்.

பெண்ணைப் பெண்ணே புரிந்துகொள்ளும் சமுதாயம் உருவாகட்டும்....பின்னர் பெண்ணுரிமை பற்றிப் பேசலாம்.

கீதம்
05-01-2011, 04:53 AM
வழக்கமான பாணியில் மனத்தை கணக்கா வைக்கும் கதை.. காய்க்காத மரம் - பேரைப் பார்த்தவுடனே என்ன கரு என்பது விளங்கிற்று. மற்றபடி உள்ளக்கூக்குரல்களை வார்த்தைகளாய் வடிப்பதில் எப்போதும் போல் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்..
வாழ்த்துக்கள்.. !

உங்கள் எதிர்பார்ப்புக்கு இக்கதை ஈடாகாது என்று தெரியும். அவசரக்கோலமிது. இருப்பினும் பின்னூட்டத்திற்கு நன்றி மதி.

மதி
05-01-2011, 04:56 AM
உங்கள் எதிர்பார்ப்புக்கு இக்கதை ஈடாகாது என்று தெரியும். அவசரக்கோலமிது. இருப்பினும் பின்னூட்டத்திற்கு நன்றி மதி.
அப்படியெல்லாம் ஏதுமில்லீங்க.. நல்லா இருக்குனு தானே சொல்லியிருக்கேன்.. :icon_b::icon_b:

கீதம்
05-01-2011, 04:57 AM
கதையின் முடிவை
காய்க்காத தென்னைமரம் பாளை விட்டதுபோலவும் அது
மைதிலியின் வயிற்றில் பாலை விட்டதுபோலவும் அதனால்
அணிலின் கூடு காப்பாற்றப்பட்டது போலவும் காட்டியிருந்தால்
வாசகர்களின் கண்களும் காப்பாற்றப் பட்டிருக்கும்!

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் சில சமயங்களில் யதார்த்தம், எந்தவித அதிசயத்திற்கும் இடங்கொடாமல் அதன்போக்கிலேயே இருந்துவிடுகிறது. பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா.

கீதம்
05-01-2011, 05:08 AM
அப்படியெல்லாம் ஏதுமில்லீங்க.. நல்லா இருக்குனு தானே சொல்லியிருக்கேன்.. :icon_b::icon_b:

அட, யாருடைய ரசனை எப்படி என்று தெரியாதா? அதுவுமில்லாமல் நான் சொன்னதுபோல் தோன்றியவுடனேயே எழுதிப் பதிவிட்ட கதை இது. அதனால் எனக்கே முழு திருப்தி இல்லை. :icon_p:

கீதம்
05-01-2011, 05:10 AM
அணிலைக் காப்பற்ற மேனகா காந்தியைக் கூப்பிடலாம் !

பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகும்போது, யாரைக் கூப்பிடுவது... மன்சாட்சியிடம் தான் முறையிடவேண்டும்.

பெண்ணைப் பெண்ணே புரிந்துகொள்ளும் சமுதாயம் உருவாகட்டும்....பின்னர் பெண்ணுரிமை பற்றிப் பேசலாம்.

சரியாகச் சொன்னீர்கள். பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.

அமரன்
05-01-2011, 05:44 AM
பால்+கனியில் தேனிலவு.. ..

பால்+கனியில் அணில் பிள்ளைகள் விளையாட்டு..

பால்கனியில் குடிவந்த வெறுமை.

அருமை..

பால்கனியை பாத்திரமாக்கி உணர்ச்சிகளை வடித்தமைக்குப் பாராட்டு..

மதி சொன்னதைப் போல தலை்ப்பு ஆரூடம் சொல்லி விட்டது கதை என்ன என்று. உள்ளக்குரல்களை துல்லியமாகப் பதிவு செய்வதில் வெற்றி.

ஜானகிம்மா சொன்னாற்போல் பெண்ணே பெண்ணை...

இளகிய மனசு மங்கையர்க்கு. வாடியபயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் வள்ளலார்கள் அவர்கள்..

வலியைக் கனதியாக்க நாயகியை பலர் நாவுகளுக்கு இரையாக்கினீங்களோ.. நாயகி வேறு மாதிரி இருந்திருந்தால் கொஞ்சம் அடிக்கும் பழைய வாசனையும் இல்லாமல் போயிருக்குமோ..

அவள் அப்படி இல்லாவிட்டாலும் அப்படித்தான் நடந்திருப்பாள்.

கதையில் குடும்பம் இருக்கு. ஆண் இல்லை.

நல்ல படிவு.

கீதம்
05-01-2011, 10:52 PM
பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்.

பால்கனி என்பதன் நேரடித் தமிழ்வார்த்தை தெரியவில்லை. ஆனால் நீங்கள் அதைக்கொண்டே ரசனை கொட்டிவிட்டீர்கள்.

கதையின் நாயகி போன்ற பெண்கள் இன்னமும் இதுபோன்ற மனவேதனைகளை அனுபவித்துதானே வருகிறார்கள்? வார்த்தைகளால் காயப்படுத்தும் சமுதாயம் இன்றும் இருக்கிறதே! எதிலும் தனக்குப் பலன் இருக்கிறதா என்ற பார்வைதானே மேலோங்கியிருக்கிறது? காய்க்காத மரத்தின் நிலைதான் அவளுடையதும். சொந்தக்காலில் நிற்குமளவு சிறிதேனும் வேரோடியிருந்தால் மட்டுமே இதுபோன்ற கோடரிகளிடமிருந்து தப்பி வாழ இயலும்.

dellas
06-01-2011, 08:54 AM
அருமை கீதம் அவர்களே. மரம் கனி கொடுப்பது என்பது ஒரு அம்சமே.. அது நிழலும் தரும் என்பது பலருக்கு புரிவதில்லை. மருமகளும் அவ்வாறே...

கீதம்
25-01-2011, 12:04 AM
அருமை கீதம் அவர்களே. மரம் கனி கொடுப்பது என்பது ஒரு அம்சமே.. அது நிழலும் தரும் என்பது பலருக்கு புரிவதில்லை. மருமகளும் அவ்வாறே...

பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி டெல்லாஸ் அவர்களே.